disalbe Right click

Monday, May 25, 2015

கிரடிட் கார்டு வாங்கும் முன்


கிரடிட் கார்டு வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை
கிரெடிட் கார்டு வாங்கும்முன்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
கிரெடிட் கார்டு என்பது நம் உடனடி பணத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள உதவும். ஆனால், அதில் கடன் வாங்கி அதைச் சரியாகத் திரும்பச் செலுத்த முடியாமல் போனால், அந்தக் கடன் தலைவலியாக மாறிவிடும். எனவே, கிரெடிட் கார்டு வாங்குவதற்குமுன் சில விஷயங்களைக் கவனித்தாலே இந்தப் பிரச்னைகளிலிருந்து விடுபட முடியும். அந்த விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
ஒன்றுக்கு மேற்பட்ட கார்டு!
புதிதாக ஒரு கிரெடிட் கார்டு கிடைக்கும்போது அதை வேண்டாம் என்று சொல்வதற்கு பலருக்கும் மனம் வருவதே இல்லை. அதிலும் அந்த கிரெடிட் கார்டு இலவசமாக, அதாவது சேர்ப்புக் கட்டணமோ அல்லது ஆண்டு பராமரிப்புக் கட்டணமோ இல்லாமல் கிடைக்கும்போது பலரும் வேண்டாம் என்று சொல்வதே இல்லை. இப்படி சேரும் பல கிரெடிட் கார்டுகளினால் நமக்கு பிரச்னைகளே உருவாகும். உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் இருக்கும்போது நீங்கள் வைத்திருக்கும் சில கார்டுகளுக்கான மாதாந்திர கட்டணத்தைக் கட்டாமலே போவதற்கு வாய்ப்புண்டு. இப்படிக் கட்டாமல் விடப்படும் கடன் தொகைக்கு நீங்கள் மிக அதிகமான வட்டியைச் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் உங்கள் கடனை திரும்பச் செலுத்தும் மதிப்பெண் குறையும். எனவே, கார்டு வாங்குவதற்குமுன் புது கிரெடிட் கார்டு தேவையா என்பதை யோசித்து முடிவெடுப்பது நல்லது.
புதிய கார்டில் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்!
புதிதாக கிரெடிட் கார்டு வாங்க நீங்கள் முடிவெடுக்கும் பட்சத்தில், பழைய கார்டில் உள்ள நிலுவைத் தொகையை டிரான்ஸ்ஃபர் செய்ய முடியுமா என்பதைப் பாருங்கள். இப்படி டிரான்ஸ்ஃபர் செய்துகொள்ளும் வசதிக்கு கூடுதலாகக் கட்டணம் உள்ளதா என்பதைக் கவனிப்பது முக்கியம். சில வங்கிகள் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் செய்து கொள்வதற்கு 30-90 நாட்களுக்கு வட்டி வசூலிப்பதில்லை. ஆனால் சில வங்கிகள் 1.5% - 2.5% வரை வட்டி வசூலிக்கின்றன. இது வங்கிக்கு வங்கி வித்தியாசப்படும். எனவே, புதிதாக கிரெடிட் கார்டு வாங்கும்முன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு வட்டி கிடையாதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
ஆண்டுக் கட்டணம் இல்லை என்னும் உத்தரவாதம்!
புதிதாக கிரெடிட் கார்டு வாங்கும்போது ஆண்டுக் கட்டணம் உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் கிரெடிட் கார்டினைப் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் அதற்குரிய ஆண்டுக் கட்டணத்தை சில வங்கிகள் வசூலித்துவிடும். சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள் ஆண்டுக் கட்டணம் இல்லை என்று கூறும். ஆனால், அந்த வசதி குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு மட்டும்தான் பொருந்தும். ஆயுள் முழுக்க எந்த கட்டணமும் இல்லை என்று நீங்கள் நினைத்தால், அது உங்கள் தவறுதான். எனவே, கட்டணம் தொடர்பான நிபந்தனைகளை உன்னிப்பாகப் படியுங்கள். பொதுவாக, குறிப்பிட்ட காலம் வரையில்தான் அல்லது குறிப்பிட்ட தொகை அளவுக்கு கார்டினை உபயோகப்படுத்து பவர்களுக்கு மட்டுமே இந்தக் கட்டணங்கள் இல்லாமல் இருக்கும். புதிய கார்டு ஒன்றை வாங்குவதற்குமுன் இந்த ஆண்டு கட்டண விவகாரத்தை முழுமையாக அறிந்துகொள்வது நல்லது.
நிதி சார்ந்த கட்டணங்கள்!
கடன் தொகை முழுவதையும் செலுத்த முடியாத நேரங்களில் குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்துவது வழக்கம். மீதமுள்ள தொகைக்கு கிரெடிட் கார்டு நிறுவனம் வட்டி போட்டு வசூலிக்கும். இந்த வட்டி விகிதமானது மாதத்துக்கு 2-3 சதவிகிதமும், அதுவே வருடத்துக்கு 24-36 சதவிகிதமாகவும் இருக்கும். சில வங்கிகள் பில் செய்யப்பட்ட மொத்த தொகைக்கும் கட்டணம் விதிக்க வாய்ப்புள்ளது. எனவே, புதிய கார்டு வாங்கும்போது கடனுக்கான வட்டி எந்த நிறுவனத்தில் குறைவாக இருக்கிறது என்பதைப் பார்ப்பது மிகமிக அவசியமாகும்.
வட்டி இல்லாத காலகட்டம்!
பெரும்பாலான கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் வட்டி இல்லாத காலத்தை 45-55 நாட்களாக வைத்திருக்கும். இந்தக் காலத்தில் செலுத்தப்படாத தொகைக்கு எந்தவிதமான கூடுதல் கட்டணமும் விதிக்கப்படாது. கிரேஸ் பிரீயட் என்பது பொதுவாக பில்லிங் தேதியிலிருந்து ஆரம்பித்து, பில்லிங் தேதி முடிவடைந்தபிறகும் 15-25 நாட்களுக்கு இருக்கும். பில்லிங் காலகட்டம் ஆரம்பிக்கும் தேதிக்கு அருகாமையில் செய்யப்படும் செலவுகளுக்கு அதிக நாட்கள் கிரெடிட் இருக்கும். அதுவே பில்லிங் முடியும் தருவாய்க்கான தேதிக்கு அருகில் இருக்கும்போது கிரெடிட் காலம் குறைவாக இருக்கும். எனவே, புதிய கிரெடிட் கார்டை தேர்வு செய்யும்போது வட்டி இல்லாத காலகட்டம் அதிகமாக உள்ள கார்டை தேர்வு செய்வது நல்லது.
கோ பிராண்டட் கார்டு!
ஒரே பிராண்டட் கார்டினை வாங்குவதைவிட, நீங்கள் வாங்கும் புதிய கார்டு இன்னொரு பிராண்டினாலும் (Co-branded) அங்கீகரிக்கப் பட்டதாக இருப்பது நல்லது. இதன் மூலம் அதிகம் சுற்றுலா செல்பவர்கள், ஷாப்பிங் செய்கிறவர்களுக்கு பல்வேறு நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் வட்டி இல்லாத காலத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும். தவிர, ரிவார்ட் பாயின்ட் மற்றும் கேஷ் பேக் ஆஃபர் போன்றவற்றைக் கொண்டு இனிமேல் செய்யவிருக்கும் செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் வாழ்க்கை முறைக்கேற்ப உங்கள் கிரெடிட் கார்டு கோ பிராண்டட் கார்டாக இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள்.
கான்டக்ட்லெஸ் கார்டு!
வழக்கமாக ஸ்வைப் செய்யும் கார்டுகளைவிட கான்டக்ட்லெஸ் கார்டுகளை (Contactless) தேர்ந்தெடுப்பது நல்லது. இந்த கார்டினை பயன்படுத்த ஸ்வைப் மெஷினில் தேய்க்க தேவையில்லை. இந்த கார்டினை டர்மினலுக்கு அருகே கொண்டு வந்தாலே போதும், கார்டில் உள்ள சிப் மற்றும் ஆர்எஃப் ஆன்டனா மூலம் கார்டின் தகவல்கள் பெறப்பட்டு பணம் எடுக்கப்படும். இந்த கார்டினை பயன்படுத்தும் போது அதிக பாதுகாப்பு கிடைக்கும். அதாவது, உங்களின் கார்டை மூன்றாவது நபரிடம் கொடுக்க வேண்டிய தேவை இருக்காது. ஷாப்பிங் செய்யும்போது கார்டு உங்களின் கையிலேயே இருக்கும்.
டெபிட் கார்டுடன் சேர்ந்த கிரெடிட் கார்டு!
இதுவும் ஒருவகையான கிரெடிட் கார்டுதான். அதாவது, உங்களின் டெபிட் கார்டில் ஓவர்டிராஃப்ட் எடுத்துக் கொள்ளும் வசதியுடன் கூடிய கார்டு ஆகும். இந்த கார்டு உங்களின் சேமிப்பு கணக்குடன் சேர்க்கப்பட்டிருக்கும்.
உங்களுடைய கிரெடிட் லிமிட் எவ்வளவு என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப் பட்டிருக்கும். இதனால் தேவை இல்லாமல் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைத் தனித்தனியாக வாங்க வேண்டிய தேவை இருக்காது.
ஆட் ஆன் கார்டு!
கிரெடிட் கார்டு வாங்கும்போது சில நிறுவனங்கள் ஆட் ஆன் கார்டை (Add-on Card) கணவன்/மனைவிக்கு இலவசமாக வழங்கும்.
சில நேரங்களில் ஆட் ஆன் கார்டு கேட்காமலேயே அனுப்பப்பட்டு விடும். ஆட் ஆன் கார்டில் வாங்கப்படும் கடன், முதல் கார்டு வாங்குபவரின் பெயரில் பதிவாகும். இதில் உள்ள ஒரே கூடுதல் வசதி அதிக கிரெடிட் லிமிட். எனவே, கிரெடிட் கார்டு வாங்கும்போதே ஆட் ஆன் கார்டு வேண்டுமா என்பதை முடிவு செய்வது நல்லது.
சிறப்பாகச் செயல்படும் வாடிக்கையாளர் சேவை மையம்!
அனைத்து கிரெடிட் கார்டு நிறுவனங்களும் வாடிக்கையா ளர்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதற்காக சேவை மையம் வைத்துள்ளது. ஆனால், எல்லா வாடிக்கையாளர் மையமும் அவ்வளவு சிறப்பாகச் செயல்படுவதில்லை.
எனவே, கார்டு வாங்குவதற்கு முன் வாடிக்கையாளர் சேவை மையம் குறித்த தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.
வாடிக்கையாளர் சேவை மையம் சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களின் கார்டுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. தேவையான நேரத்தில் பிரச்னைகளுக்கு சரியான தீர்வு சொல்லும் நிறுவனத்தில் கார்டை வாங்கினாலே பாதிப் பிரச்னை தீரும்.
தொகுப்பு: இரா.ரூபாவதி.
நன்றி : விகடன் செய்திகள் - 24.05.2015

No comments:

Post a Comment