disalbe Right click

Sunday, January 24, 2016

அம்மா மகப்பேறு சஞ்சீவி மருத்துவத்திட்டம்





அம்மா மகப்பேறு சஞ்சீவி மருத்துவத்திட்டம் பற்றித்தெரியுமா?
மகப்பேறு காலத்தில் தாய், சேய் ஆரோக்கியத்தைக் காக்கவும், இறப்பு விகிதங்களை குறைக்கவும், சுகப்பிரசவத்தை அதிகமாக்கவும் எனப் பல காரணங்களுக்காக கொண்டுவரப்பட்டு இருக்கிறது அம்மா மகப்பேறு சஞ்சீவி மருத்துவத் திட்டம். கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டம் இது.
இதன் பயனாளிகள் யார்? பலன்கள் என்ன?
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு, குழந்தை பெற்ற பிறகு, தாய் மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்புக்காக சோப், துண்டு உள்ளீட்ட 16 வகைப் பொருட்கள் அடங்கிய குழந்தைநலப் பரிசு கொடுக்கப்பட்டு வருகிறது. இனிமேல் இதனுடன் கர்ப்பமானது முதல் பயன்படுத்தக் கூடிய மகப்பேறு கால 11 வகை சித்த மருத்துவ மூலிகை மருந்துகளும் கொடுக்கப்பட உள்ளன. இந்த மருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் தாய், சேய் இருவர் நலமும் பாதுகாக்கப்படும். இதுதான் அம்மா மகப்பேறு சஞ்சீவி மருத்துவத் திட்டத்தின் நோக்கம்.
என்னென்னெ மூலிகைகள்? அவற்றின் பலன்கள் என்ன?
1) மாதுளை மணப்பாகு :
மாதுளை பழச்சாற்றிலிருந்து உருவாக்கப்படுகிறது மாதுளை மணப்பாகு. இது பெண்களின் கருவளர் காலத்தில் ஏற்படும் மசக்கை மற்றும் வாந்தியை குணப்படுத்தும். உடல் சூட்டினைத் தடுத்து கருப்பைக்கு வலுவூட்டி ரத்த விருத்தி செய்து கருவை நலமுடன் வளர்க்கும். கர்ப்பமானது முதல் ஐந்தாவது மாதம் வரை இதனை சாப்பிடலாம்.
2) கறிவேப்பிலைப்பொடி :
நூறு கிராம் கறிவேப்பிலையிலேயே எண்ணற்ற பலன்கள் இருப்பதை நிறைய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. செரிமானத்துக்கு பெரிதும் உதவக்கூடியது இது. எனவே நன்கு பசி எடுக்கும். இயற்கையான இரும்புச்சத்து இதில் அதிகளவு உள்ளது.
கறிவேப்பிலை இட்லிப்பொடி பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.இது சங்க இலக்கியங்களில் “கஞ்ச முக நறி” என்று குறிப்பிடப்படுகிறது. கர்ப்பமானது முதல் மூன்று மாதங்கள் இதனை சாப்பிடலாம்.
அதிகமான குடிப்பழக்கத்தால் கணையம் கெட்டுப் போனவர்களும்
கறிவேப்பிலைப் பொடியை மோரில் கலந்து உண்டால் குணம் பெறலாம்.
3) அன்னபேதி மாத்திரை :
அன்னபேதியும் எலுமிச்சைச் சாறும் கொண்டு தயாரிக்கப்படும் இது அன்னபேதி செந்தூரம் என்றும் அழைக்கப்படுகிறது. மூன்றுமாத முடிவில் இதனை எடுத்துக் கொள்ளலாம். எலுமிச்சைச் சாறு இருப்பதால் மலச்சிக்கல், வாதி வருவதை இது தடுக்கும்.
இதன் வேதியல் பெயர் பெரஸ் சல்பேட் ஆகும். கலங்கலான தண்ணீரில் இந்த அன்னபேதி மாத்திரையைப் போட்டால் தண்ணீர் தெளிவடையும்.
4) நெல்லிக்காய் லேகியம்:
ஜாதிபத்ரி, ஜாதிக்காய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு இது தயார் செய்யப்படுகிறது. ஐந்து கிராம் அல்லது ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டால் போதும். அதிகமான வைப்பமின் “சி” உள்ளது என்பதால் வைட்டமின் குறைபாட்டை நீக்கும். அன்னபேதி மாத்திரையுடன் சேர்ந்து சாப்பிடுவதால் இரும்புச் சத்தை உட்கிரகிக்க்கும் தன்மை அதிகமாகும்.
5) ஏலாதி சூரண மாத்திரை :
ஏலக்காயை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கும் இம்மாத்திரை செரிமானத்தை அதிகப்படுத்தக் கூடியது. மூன்றாவது மாதம் முதல் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
6) உளுந்து தைலம் :
ஏழாவது மாதத்தில் இருந்தே வயிறு முன் தள்ளப்படுவதால் கர்ப்பிணிகளுக்கு முதுகுவலி ஏற்படும். முதுகுவலியை குறைக்கவும், இடுப்பு எலும்பை அதிகப்படுத்தவும் இந்தத் தைலம் உதவும். உளுந்தை வேகவைத்து, தண்ணீரை வடிகட்டி அதனுடன் எண்ணையை கலந்து இது தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணையை பூசுவதால் வயிற்று தசைகள் இலகுவாகி பிரசவத்தை எளிதாக்கும்.
7) குந்திரிகத் தைலம்:
குழந்தைப்பேற்றை எளிதாக்க, கர்ப்பப்பை வாயைத் திறக்கச் செய்வதற்கு இது பயன்படுகிறது. ஒன்பதாம் மாதம் மருத்துவர் ஆலோசனைப்படி பிறப்புறுப்பில் இதனை பயன்படுத்த வேண்டும்.
8) பாவன பஞ்சங்குலத் தைலம் :
மிளகு, சீரகம், வெள்ளாட்டுப்பால் இவையெல்லாம் சேர்த்து செய்யப்பட்டது இந்தத் தைலம். இதனை இரவு மட்டும் ஒரு சொட்டுப் பாலில் கலந்து சாப்பிடவேண்டும். இதுவும் பிரசவத்தை எளிதாக்க உதவக்கூடியது.
9) சதாவேரி லேகியம் :
தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தக்கூடியது சதாவேரி லேகியம். இதற்கு தண்ணீர்விட்டான் கிழங்கு என்ற வேறொரு பெயரும் உண்டு. தாய்ப்பால் நிறுத்தப்படும் வரை அதாவது ஒருவருடம் வரைக்கும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
10) பிண்ட தலம்:
ஒரு பூரண மகப்பேறு மருத்துவம் என்பது குழந்தைப்பிறப்புடன் முடிந்துவிடுவது இல்லை. குழந்தைப் பிறப்பிற்குப் பிறகும் தாய், சேய் நலம் காக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், பிரசவத்திற்குப்பின் தாயின் உடலில் ஏற்படும் வலிகளைக் குறைக்க இந்தத் தைலம் பயன்படுத்தப்படுகிறது.
11) உரை மாத்திரை :
ஆரம்ன கால நோய்களை சமாளிக்க குழந்தைக்குக் கொடுக்கப் படுவது உரை மாத்திரை ஆகும். கடுக்காய், மாசிக்காய், வசம்பு, சுட்டகரி, சுக்கு, திப்பிலி, அக்கரகாரம், வெள்ளைப்பூண்டு, அதிமதுரம் சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது. தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்காத காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு இன்றளவும் பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்து இது. குழந்தைக்கு ஏழாம் மாதத்தில் இருந்து பதினெட்டாவது மாதம் (ஒன்றரை வயது) வரை உரை மாத்திரை கொடுக்கலாம். இதனை தாய்ப்பாலில் அல்லது வெந்நீரில் கலந்து கொடுக்கவேண்டும்.
எப்போது, எவ்வளவு சாப்பிடவேண்டும்?
கர்ப்பகால பிரச்சனைகளுக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமையும் ஒவ்வொரு மருந்தையும் இருவேளை எடுத்துக் கொள்ள வேண்டும். எப்படி பயன்படுத்துவது? எவ்வளவு சாப்பிடுவது? எப்போது சாப்பிடுவது? எனபது பற்றி ஒவ்வொன்றிலும் குறிப்புகள் கொடுக்கப் பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் அந்தந்த மாதங்களில் பயன்படுத்தினால் போது. லேகிய வகையறாக்களை சில நாட்கள் பயன்படுத்திவிட்டு, மீண்டும் சில நாட்கள் கழித்து பயன்படுத்தக்கூடாது. அந்தந்தப் பொருட்களுக்கான காலவரம்பு குறிப்பிடப் பட்டிருக்கும்.அதை கவனித்து பயன்படுத்த வேண்டும். இதனால், பிரசவகால தாய், சேய் இறப்பு விகிதம் பெருமளவு குறையும் என்பது உறுதி.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன்முதலில் இந்தத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்கிறார் சித்த மருத்துவக் கல்லூரி உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் ஸ்ரீராம் அவர்கள்.
நன்றி : புதியதலைமுறை இதழ் - 28.01.2016

No comments:

Post a Comment