disalbe Right click

Friday, April 29, 2016

கார் லோன் கட்டி முடித்த பிறகு


கார் லோன் கட்டி முடித்த பிறகு ...... என்ன செய்ய வேண்டும்?

கார் கடனை முடித்த பிறகு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்..!

கார் லோன் வாங்கும்போது, எந்த வங்கி குறைவான வட்டி விகிதத்தில் கடன் தருகிறது  என்பதைத் தேடித் தெரிந்து கொள்வதில் காட்டும் முயற்சியை, அந்த கடனைத் திருப்பிச் செலுத்துவதில் பலர் காட்டுவதில்லை. மேலும் கார் கடனைக் காலக் கெடுவுக்குள் விரைந்து முடிப்பதோடு தங்கள் கடமை முடிந்து விடுவதாக பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
No Due Certificate :
ஆனால் கடனை கட்டி முடித்ததன் வெளிப்பாடாக, வங்கி தர வேண்டிய  பாக்கி இல்லை என்கிற (No Due Certificate -NDC) சான்றிதழை  கேட்டுப் பெற்றால் மட்டுமே, நாம் அடுத்த முறை அதே வங்கி அல்லது வேறு வங்கியில்  கடன் பெற முடியும். 

ஒருவர் கடனைச் செலுத்தி முடித்துவிட்டார் என்றால், சம்பந்தப்பட்ட வங்கி அவருக்கு கடன் பாக்கி இல்லை என்கிற சான்றிதழ் வாடிக்கையான நிகழ்வுதான். இதனுடன் கடனை கட்டிதற்கான ஆதாரமாக ஸ்டேட்மென்ட் ஆஃப் அக்கவுன்ட் (Statement of Account -SOA) எனும் சான்றிதழையும் வங்கிகள் வழங்குகின்றன. இந்தச் சான்றிதழ்களை கார் கடனை கட்டி முடித்தவர் கேட்டால்தான் தருவார்கள். கடைசி கடன் தவணையை கட்டி முடித்துவிட்டோம் என கண்டுக் கொள்ளாமல் விட்டால், இந்தச் சான்றிதழ்கள் கிடைக்காது. 
RC-Bookல் பெயர்மாற்றம் செய்ய வேண்டும்
காரின் பதிவு சான்றிதழில் (Registration Certificate - RC) இருக்கும் வங்கியின் பெயருக்குப் பதிலாக, கடனைச் செலுத்தியவரின் பெயருக்கு ஆர்சி-ஐ மாற்றுவது அவசியம். இதற்கு 
என மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் (Regional Transport Office (RTO) தனி படிவம் உள்ளது. இதனை பெற்று வங்கியில் கொடுத்தால், வங்கி அதிகாரிகள் கடன் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது என உறுதிபடுத்துவார்கள். இதனை ஆர்டிஓ அலுவலகத்தில் கொடுத்தால், கார் பதிவு அதன் உரிமையாளர் பெயருக்கு மாற்றி தரப்படும். 

கார் இன்ஷூரன்ஸ் செய்யப்பட்ட நிறுவனத்திற்கும் சென்று, கடனை முடித்துவிட்டதாக மாற்றித் தர வேண்டும். இதற்காகக் கடன் முடிக்கப்பட்டதை உறுதி செய்யும் கடன் பாக்கி இல்லை சான்றிதழின் நகலுடன் மேற்கூறிய அலுவலகங்களுக்கு கார் கடன் பெற்றவர் முழு விபரங்களுடன் கைப்பட எழுதிய கடிதத்தையும் இணைத்து கொடுக்க வேண்டும். எந்த வகையான கடனைக் கட்டி முடித்த பிறகு, அடுத்த இரண்டு வருடங்களுக்குள்ளாக புதிதாக கடன் பெறப் போகிறீர்கள் என்றால், ஒரு மாதத்திற்குள்ளாக சிபில் (CIBIL) ஸ்கோரைத் தெரிந்து கொள்வது நல்லது. ஏனெனில் அப்போதுதான் வாங்கிய கடன்கள் அனைத்தும் முடிக்கப்பட்டு, அவை சரியாக ஆவணப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.  

கார் கடனை முடிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பஞ்சாப் நேஷனல் பேங்க், போரூர் கிளை மேலாளர் அழகப்பன் கிருஷ்ணன் விளக்கி சொன்னார்.
''கார் கடனை கட்டி முடித்த பிறகு, வங்கியில் கடன் பாக்கி இல்லை சான்றிதழ் மிக முக்கியம். காரணம், இந்த சான்றிதழ் வாங்கும்பட்சத்தில்தான் கடன் முழுமையாக கட்டப்பட்டுவிட்டது என்பது உறுதிப்படும். உதாரணத்துக்கு, ஒருவர் ஏப்ரல் 18 ம் தேதி கார் கடன் கடைசி தவணை ரூ. 10,000 கட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த மாதத்தில் ஏற்கெனவே கடந்த 17 நாளுக்கான வட்டி கணக்கிடப்படாமல் இருக்கும். இந்த பாக்கி சிபில் அறிக்கை வர இல்லை வாய்ப்பு இருக்கிறது. கடன் பாக்கி இல்லை சான்றிதழை வங்கியில் கேட்கும் போது அவர்கள் விடுபட்ட, நாள்களுக்கான வட்டியை கட்டச் சொல்வார்கள். அப்படி செய்யும் போது கார் கடன் முழுமையையகா கட்டப்பட்டுவிடும். கார் பதிவு சான்றிதழில் கடன் முடிக்கப்பட்ட விவரம் குறிப்பிட்டால்தான் பிறகு காரை விற்கும் போது பிரச்னை வராது. இல்லை என்றால் அந்த நேரத்தில், வங்கிக்கும், ஆர்டிஓ அலுவலகத்துக்கும் அலைய வேண்டி இருக்கும்.இவற்றை தவிர்க்க, முறையாக கார் கடனை முடிப்பது நல்லது" என்றார்.

கடன் பாக்கி இல்லை சான்றிதழின் முக்கியத்துவம்..!

1. லோனைத் திருப்பிச் செலுத்தியதற்காக, சட்ட ரீதியில் செல்லுபடியாகக்கூடிய ஆவணம்.
2. கடன் தொடர்பாக வங்கியுடன் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், இந்த சான்றிதழைப் பயன்படுத்தி வாதாடலாம்.

3. சிபில் ஸ்கோரில் ஏதேனும் தவறுகள் இருந்தால், இதனைக் கொடுத்து சரி செய்யலாம்.

4. கடனில் வாங்கப்பட்ட வீடு அல்லது காரை விற்க நேர்ந்தால், அதனை வாங்குபவரிடம் கடன் பாக்கி இல்லை என்பதை உறுதிபடுத்த இந்த ஆவணம் உதவியாக இருக்கும்.

5. இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் பெறுவதற்கு இந்தச் சான்றிதழ் பயன்படும்.
ராகுல் சிவகுரு
நன்றி : விகடன் (பைனான்ஸ்) செய்திகள் - 16.04.2016

No comments:

Post a Comment