disalbe Right click

Friday, May 27, 2016

உங்க எடை கூடிக்கொண்டே இருக்கா!


உங்க எடை கூடிக்கொண்டே இருக்கா!
என்ன செய்ய வேண்டும்?
காரணங்கள் என்ன... கரை சேர்வது எப்படி?
'ஒபிஸிட்டி’ எனப்படும் உடற்பருமன், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று அதிகரித்துள்ளதாக மருத்துவத் தகவல்கள் அலறுகின்றன. உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை உள்ளிட்ட ஒபிஸிட்டிக்கான காரணங்கள், இதன் விளைவுகள், குறிப்பாக பிசிஓடி (Polycystic Ovary Disease)  எனப்படும் நோய் முதல் குழந்தைப்பேறின்மை வரை பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், ஒபிஸிட்டிக்கான தீர்வுகள் என்று நிபுணர்களின் வழிகாட்டலை விரிவாகப் பார்ப்போம்!

பிழையாகிப் போன உணவுப் பழக்கம்!
இந்த விபரீத நோய் பற்றி பேசும் பெண்கள் சிறப்பு மருத்துவர் பிரேமலதா, ''ஒபிஸிட்டி இன்று இந்தளவுக்கு அதிகரித்து வருவதற்குக் காரணம், மாறிவரும் வாழ்க்கை முறைதான் (Modified Lifestyle). ஒவ்வொரு வேளை, ஒவ்வொரு வகை உணவிலும் பலவித நன்மைகள் அடங்கியபடி வகுத்து வைத்த நம் முன்னோர்களின் உணவுப் பழக்கங்கள், இன்றைக்கு அடியோடு மாறிவிட்டன. 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் துரித உணவு என்று சொல்லப்படும் ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளிடம் அடிமையாகிவிட்டனர். இதனால் பர்கர், கோலா பானங்கள், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற ஜங்க் ஃபுட் வகைகள், உடலின் கொழுப்பை அதிகரிக்கச் செய்து, பலவிதமான நோய்களை இலவசமாகக் கொடுக்கின்றன.

தாண்டவமாடும் தைராய்டு!
வளரிளம் பருவத்தினர் உடல் எடை அதிகரிப்புக்கு முக்கியக் காரணம், தைராய்டு குறைபாடு. இது முழுக்க முழுக்க அயோடின் குறைபாட்டால் வரக்கூடியது. இது ஆண்களைவிட, பெண்களை 7 மடங்கு அதிகமாகத் தாக்குகிறது என்கிறது புள்ளி விவரம். உடல் சோர்வு, முறையற்ற மாதவிலக்கு, மலச்சிக்கல், மனஅழுத்தம் போன்றவை இதற்கான அறிகுறிகள். தவிர, எந்நேரமும் தூக்கம், கொஞ்சம் உணவு அருந்தினாலே உடல் எடை அதிகரிப்பது, சோர்வு, டென்ஷன், எரிச்சல், படபடப்பு போன்ற அறிகுறி இருப்பவர்கள் தைராய்டு சோதனை செய்துகொள்வது நல்லது. 

உலகம் முழுவதும் 200 மில்லியன் பேர் தைராய்டு காரணமாக தற்போது பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், ஒருவருக்கு உடல் எடை அதிகரிக்கிறது என்று தெரிந்தவுடனே டெஸ்ட் எடுத்துப் பார்ப்பது அவசியம். தைராய்டு பிரச்னை இல்லை என்றால், எடை குறைப்பதற்கான மற்ற முயற்சிகள், சிகிச்சைகளை தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் மேற்கொள்ளலாம். தவிர, மரபியல் ரீதியிலான பிரச்னைகளும் உடல் பருமனுக்குக் காரணமாகலாம்.

என்ன செய்ய வேண்டும்?
தைராய்டு பிரச்னை உள்ளவர்கள்.. தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். வறுத்த, பொரித்த, இனிப்பு உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக இனிப்பை குறைத்தல் இதயத்துக்கு மிக நல்லது. தைராய்டு குறைவாக சுரப்பவர்கள் முள்ளங்கி, முட்டைகோஸ், சோயாபீன் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. கடல் மீன் வகைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்வது, அயோடின் உப்பை பீங்கான் பாத்திரத்தில் போட்டு நன்றாக மூடி வைத்து பயன்படுத்துவது மிக நல்லது. 

எக்காரணம் கொண்டும் உப்பை திறந்து வைக்க வேண்டாம். அதனால், உப்பில் உள்ள அயோடின் காற்றில் கரைந்துவிடும். முக்கியமாக, முளைகட்டிய பயறு, பழச்சாறு, பழங்கள், கீரை வகைகள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது'' என்றார் டாக்டர் பிரேமலதா.

அம்மா... குண்டம்மா!
பெண்கள் கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்குப் பிறகும் உடல் எடை அதிகரிக்க என்ன காரணம்?

இதற்கு பதில் சொல்கிறார், மகப்பேறு சிறப்பு மருத்துவர் பிரபா. 

''கர்ப்ப காலத்தில் பெண்கள் பொதுவாக 8 முதல் 12 கிலோ வரை எடை அதிகரிக்கலாம். குழந்தையின் வளர்ச்சி வேண்டி இந்நேரத்தில் பெண்கள் எடுத்துக்கொள்ளும் அதிகப்படியான உணவால் அதிகரிக்கும் எடை குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. என்றாலும், முடிந்தவரை மாதத்துக்கு 1 முதல் 2 கிலோவுக்கு மேல் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. 

குழந்தை பிறந்த பிறகும், பாலூட்டும் காரணத்தால் எடுத்துக்கொள்ளும் அதிக உணவு, உடல் எடையைக் கூட்டுவது இயல்பு. ஆனால், இதை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.

கர்ப்ப காலத்திலும் சரி, பிரசவத்துக்குப் பிறகும் சரி, மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. சுகப்பிரசவம் எனில், குழந்தை பிறந்த இரண்டாவது நாளில் இருந்தும்... சிசேரியன் எனில் குழந்தை பிறந்து ஒரு மாதம் முடிந்த பிறகும் உடற்பயிற்சியைத் தொடங்கலாம். 

ஆனால், பெண்கள் பலரும் பிரசவத்துக்குப் பிறகு கவனம் அனைத்தையும் குழந்தைக்குக் கொடுத்து, தங்கள் உடம்பை கவனிக்க மறக்கிறார்கள். பால் கொடுக்கும் தாய்க்கு வீட்டில் உள்ளவர்கள், 'பச்ச உடம்பு... நல்லா சாப்பிடணும்...’ என்று கூறி, தேவையான காய்கறி, பழங்களைவிட, தேவையற்ற நெய், வெண்ணெய் உள்ளிட்டவற்றை அதிகம் கொடுப்பார்கள். வீட்டு வேலைகளையும் செய்யவிட மாட்டார்கள். 

ஊட்டச்சத்தும் ஆரோக்கியமும் சரிவிகித உணவிலும், தகுந்த உடற்பயிற்சியிலும்தான் இருக்கிறதே தவிர, தேவையற்ற உணவிலும், தேவைக்கு அதிகமான ஓய்விலும் இல்லை. இப்படி உணவுக் கட்டுப்பாடு அறுந்து போவதுடன், உடற்பயிற்சியும் இல்லாமல் போவதுதான் பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் உடல் எடை அதிகரிக்கக் காரணம். ஆனால், இது கை மீறிய செயல் இல்லை, கட்டுக்குள் கொண்டு வரக்கூடியதே. 

தேவை...முயற்சியும், உடற்பயிற்சியுமே. இதை பின்பற்றாவிட்டால், உடல் எடை தொடர்ந்து அதிகரித்து, ஒபிஸிட்டி எனும் நோயில் கொண்டுபோய் நிறுத்தும்'' என்று எச்சரிக்கிறார் டாக்டர் பிரபா.

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ன்னு சும்மாவா சொன்னாங்க?!

அன்று...
1. அம்மி, ஆட்டுரல், தண்ணீர் குடம் சுமப்பது என்று வீட்டு வேலைகளே பெண்களுக்கான உடற்பயிற்சியாக இருந்தன. அதிலும், கோலம் போடுவது சிறந்ததொரு யோகாசனம். கவிழ்ந்து கிடக்கும் கருப்பையை நேராக்கவும், இடுப்பு எலும்பு விரிவடையவும் வழிவகுக்கும். இதேபோல் ஆண்கள் சுமை தூக்குவது, ஏர் உழுவது என உடலுக்கு ஆரோக்கிய மான வேலைகளை விரும்பிச் செய்தார்கள்.  

2. குழந்தைகள் ஓடியாடி விளையாடிய தால் உடலின் அத்தனை பாகங் களுக்கும் இயக்கம் கிடைத்தது. இதனால் ஒபிஸிட்டி அவர்களை நெருங்க பயந்தது.

3. பிரசவத்துக்குப் பின்னரே பெண்கள் உடல் எடை அதிகரித்தார்கள்.

4. உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்த காலம்.

5. உடலுக்கு பயிற்சி தரக்கூடிய விளையாட்டுகளும், வேலைகளுமே பொழுதுபோக்கு விஷயம். அதனால் சாப்பிடும் உணவின் கொழுப் புகள் உடனுக்குடன் கரைந்து ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

இன்று...
1. அனைத்து வேலைகளும் ஒரு ஸ்விட்சை ஆன் செய்து முடித்துவிடும் அளவுக்கு எந்திரமயமாக்கப்பட்டு விட்டது. அநேகம் பேர் ஒரு நாளின் பாதி தினத்துக்கு மேல் கணினி முன் அமர்ந்து வாழ்க்கையை நடத்த வேண்டிய சூழல். இதனால், 'மென்டல் ஸ்ட்ரெய்ன்’ அதிகரிக்கிறதே தவிர, எந்தவித 'ஃபிஸிகல் எக்சர்சைஸும்’ கிடைப்பதில்லை.

2. பெரும்பாலான பெற்றோர், குழந்தைகளை வீட்டைவிட்டு வெளியில் சென்று விளையாட அனுமதிப்பதில்லை. அதனால், வீடியோ கேம் அடிமைகளாகவும், நோய் சங்க உறுப்பினர்களாகவும் இளைய சமூகம் மாறிவருகிறது.

3. ஜங்க் ஃபுட் மோகத்தால் வளரிளம் வயதுப் பெண்களில் பலர் இரண்டு மடங்கு எடையுடன் இருப்பதை கண்கூடாகப் பார்க்கலாம்.

4. வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி, இளைஞர்கள் பலரையும் இன்றைக்கு சோம்பேறிகளாக மாற்றி வர, பக்கத்து கடைக்கு சென்று வரக்கூட பைக் எடுப்பதும்... ஆன்லைனில் வீட்டுக்கே பொருட்களை வரவழைத்து பயன்படுத்தும் அவலமும் அதிகரித்துள்ளது.  

5. டி.வி. முன்பாக உருளைக்கிழங்கு சிப்ஸ், சிக்கன், சாக்லேட், ஸ்வீட் போன்றவற்றுடன் ஆஜராகி சேனல்களை மாற்றிக்கொண்டே இருப்பதும், ஏ.சி அறையில் உட்கார்ந்தபடியே சாட்டிங் செய்வதும் இன்றைய பொழுதுபோக்கு. இதனால் உடல் இயக்கம் முற்றிலும் குறைந்து... உணவின் மூலமாக உடலில் சேரும் கொழுப்புகளைக் கரைக்க வழியின்றி சேமித்து, ஒபிஸிட்டியை பரிசளிக்கிறது.
உணவைத் தவிர்த்தாலும் ஒபிஸிட்டி!
அதிக உணவு எடுத்துக்கொள்வதால் மட்டுமல்ல, அந்தந்த வேளை உணவை 'ஸ்கிப்’ செய்தாலும்கூட.. ரத்த சோகை, ஒபிஸிட்டி வரக்கூடும்.

 இளம் பெண்களில் அதிகமானோர் காலை உணவைத் தவிர்ப்பதால் எளிதில் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால், சாதரண நோய் தொடங்கி... குழந்தை பாக்கியம் இல்லாமை வரை பலவித பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.  

 பூப்பெய்திய பெண் குழந்தைகளுக்குத் தரப்படும் உளுத்தங்களி போன்ற பாரம்பர்ய உணவுகள், ரத்த விருத்திக்கு தேவையான ஊட்டச்சத்தை தரவல்லவை. ஆனால், இன்றைய டீன் ஏஜினரோ... காலை எழுந்தவுடனே பீட்சா, பர்கர் போன்றவற்றை சாப்பிடவே விரும்புகின்றனர்.

உயரத்துக்கேற்ற எடை அவசியம்..!
ஒருவரின் சரியான எடையைக் கண்டறிய ஓர் எளிய வழி. உயரம் (செ.மீ)  100  = சராசரி எடை (கிலோவில்). அதேபோல், ஒருவரின் பி.எம்.ஐ (BMI-Body mass Index) 24-க்கு மேல் இருந்தால், அவர் 'உடல் பருமன்’ வகையில் சேருவார். அதாவது, ஒருவரின் எடை (கிலோ) / உயரம் (மீ)2 = பி.எம்.ஐ. உதாரணமாக, உங்கள் மகளின் எடை 45 கிலோ, உயரம் 155 செ.மீ என்றால், 45 / (1.55ஜ்1.55) = 18.7. உங்களது மகள் ஆரோக்கியமான எடையில் இருக்கிறார் என்று அர்த்தம்.
குறிப்பு
சென்ற தலைமுறையில் செப்பு மற்றும் மண்பானையில் வைத்து தண்ணீர் குடித்தார்கள். அதனால், அதில் உள்ள தாதுப்பொருட்கள் உடலில் சேர்ந்து கருமுட்டை மற்றும் கருப்பை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. இன்றோ, பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் வைத்து அருந்துவதால்... அதில் உள்ள ஸினோ ஈஸ்ட்ரோஜென்' (Xeno Estrogen) எனும் வேதிப்பொருள், ரத்தத்தில் உள்ள இயற்கையான ஈஸ்ட்ரோஜென்னை வேலை செய்ய விடாமல் தடுத்து, கருமுட்டை வளர்ச்சியின்றி சினை உறுப்பில் நீர்க்கட்டிகள் ஏற்பட வாய்ப்பாகிறது. இதை, பாலிசிஸ்டிக் ஓவரி டிசீஸ்' (Polycystic Ovary Disease) என்று சொல்லுவார்கள். இந்த பிசிஓடி, அதிகமான உடல் எடை அதிகரிப்பு, மாதவிடாய்க் குளறுபடிகள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

தீர்வுகள் என்ன?

 போதிய உணவுக் கட்டுப்பாடு.
 ஆரோக்கியமான உணவுப் பழக்கமும், சீரான உடற்பயிற்சியும்.

இளம் பருவத்தில் எடுத்துக்கொள்ளும் உணவு களும், கட்டமைக்கும் ஆரோக்கியமுமே வாழ்க்கை முழுவதற்குமான அடிப்படை என்பதால்.. ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் ஜங்க் ஃபுட்களை முற்றிலும் தவிர்த்தல்.

கேழ்வரகு, கம்பு, வரகு, தினை போன்ற தானியங்கள். காய்கறிகள், பழங்கள் என உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது.

பீன்ஸ், நாட்டு அவரை, காலிஃப்ளவர், கேரட், பீட்ரூட், புரோக்கோலி உள்ளிட்ட அதிக நார்ச்சத்து உணவுகளை சாப்பிடுவது.


பூச்சிக்கொல்லி தெளிப்பில்லாத ஆர்கானிக் உணவுகளைத் தேர்வுசெய்து பயன்படுத்துவது.

வறுத்த, பொரித்த, எண்ணெய் சார்ந்த உணவுப் பொருட்கள் தவிர்த்து, ஆவியில் வேகவைத்த உணவுப்பொருட்களை சாப்பிடுவது.

வாழ்க்கை முறையில் உடல் உழைப்பு இருக்குமாறு அன்றாட பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்துக்கொள்வது.

விளையாட்டைவிட சிறந்த மருந்தில்லை என்பதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை, தினமும் விளையாட அனுமதித்தல்... இதுபோன்றவற்றால் உடல் பருமன் பிரச்னையை முற்றிலும்

மூன்றாம் இடத்தில் இந்தியா!
கடந்த ஆண்டு ‘University of Washington Institute for Health Metrics’  வெளியிட்ட புள்ளிவிவரம், உலகளவில் 2.1 பில்லியன் மக்கள் உடல்பருமனால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்.. இது 1980-ம் ஆண்டு வெளிவந்த புள்ளிவிவரத்தைக் காட்டிலும் கற்பனை செய்துகொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

அதாவது, 80-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி உலகளவில் 857 மில்லியன் (85 கோடியே 70 லட்சம்) மக்கள் உடல்பருமனால் பாதிக்கப்பட்டிருந்தனர். இது கடந்த ஆண்டு நிலவரப்படி 2.1 பில்லியன் (210 கோடி) என்று உயர்ந்துள்ளது. இது வருங்காலத்தில் இன்னும் அதிகமானோரை தாக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இது உலக அளவில் அமெரிக்கா (86.9 மில்லியன்), சீனா (62.0 மில்லியன்) 

இந்த வரிசையில் 40.4 மில்லியன் என்ற எண்ணிக்கையுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா. அதாவது, 4 கோடியே 4 லட்சம் இந்தியர்கள், உடல்பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒல்லி பெல்லி, சரியா... தவறா?
உடல் பருமன் பிரச்னையை மையமாக வைத்து உலகெங்கிலும் கோடிகளில் தொழில் நடக்கிறது. அதிலும், 'உடல் எடையை குறைக்க’ என்று சொல்லி வெளிவந்து கொண்டிருக்கும் பொருட்கள் முன்னிலை வகிக்கின்றன. இதில் நல்லது எது... கெட்டது எது என்பதை வெறும் விளம்பரங்களைப் பார்த்து மட்டுமே வாங்குவது தவறு. குறிப்பாக, மருத்துவரின் ஆலோசனை இன்றி இதுபோன்ற பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவது மிக தவறானது. 
அது நிச்சயம் தேவையற்ற பிரச்னைகளை உண்டாக்க வாய்ப்புள்ளது. உதாரணமாக, இன்றைக்கு விற்கப்படும் பொருட்களில் சிலவற்றை பயன்படுத்துவதால் சத்துக்குறைபாடு, விட்டமின் பிரச்னை தொடங்கி, கிட்னி பாதிப்பு வரை பலவித பிரச்னைகள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மிகமுக்கியமாக, மாதத்துக்கு 1 முதல் 2 கிலோ வரை உடல் எடை குறையலாம். அதைவிட அதிகமாகக் குறைந்தால், அது உடலை நம் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு செல்வதோடு, தேவையில்லாத பிரச்னைகளை கொண்டுவந்து சேர்க்கவும் செய்யும்.

தைராய்டு சோதனை!
தைராய்டு டெஸ்ட்டின் அளவு 4ஐ விட அதிகமாக இருந்தால், தைராய்டு குறைவாக சுரக்கிறது, தைராய்டின் அளவு 0.5ஐ விட குறைவாக இருந்தால் தைராய்டு அதிகமாக சுரக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். உடல் எடை அதீதமாக அதிகரிப்பவர்கள் ஆறு மாதத்துக்கு ஒருமுறை தைராய்டு பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். 

மிகமுக்கியமாக... கர்ப்பிணி பெண்களுக்கு தைராய்டு அதிகமாக சுரந்தால், குழந்தையின் மூளை வளர்ச்சி, பல் வளர்ச்சி, உடல் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் என அனைத்துமே பாதிக்கப்படும்.

சா.வடிவரசு

நன்றி : அவள் விகடன் - 13.01.2015

No comments:

Post a Comment