disalbe Right click

Friday, July 22, 2016

உறுத்துக்கட்டளை

உறுத்துக்கட்டளை - என்ன செய்ய வேண்டும்?
Injunction Order என்பதை உறுத்துக் கட்டளை என்று அழைக்கிறோம். உறுத்துக்கட்டளை என்றால் ஒருசில செயல்களை ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு தரப்பினர் செய்யக் கூடாது என்றும், செய்ய வேண்டும் என்றும் அந்த நபர் அல்லது அந்த தரப்பினர்க்கு எதிராக வழங்கப் படுவதாகும்.
உறுத்துக்கட்டளையின் வகைகள் 
1) இடைக்கால (தற்காலிக) உறுத்துக் கட்டளை  (Interim Injunction  or  Temporary Injunction)
ஒரு வழக்கில் மறு உத்தரவு வரும்வரை நீதிமன்றம் இடும் கட்டளைக்கு இடைக்கால உறுத்துக்கட்டளை என்று பெயர்.
2) செயலுறுத்து கட்டளை  (Mandatory Injunction)
ஒரு செயலை ஒருவர் செய்ய வேண்டும் என்று  நீதிமன்றம் இடும் கட்டளைக்கு செயலுறுத்துக் கட்டளை என்று பெயர்.
3) நிலைக்கால உறுத்துக்கட்டளை    (Perpetual Injunction)
நிலைக் கால உறுத்துக் கட்டளை என்பது நிரந்தர உறுத்துக்கட்டளை ஆகும்.. சொத்து சம்பந்தமான பிரச்சனையில் இந்தக் கட்டளைக்கான தீர்ப்பாணையை சம்பந்தப்பட்ட நீதிமன்றம் வழங்கினால்தான், அதில் குறிக்கப்பட்ட சொத்து அதில் குறிப்பிடப்பட்டவருக்குச் சொந்தமானது என்று அர்த்தம்.
4) தடை உறுத்துக்கட்டளை     (Prohibitory Injunction) 
ஒரு செயலை ஒருவர் செய்யக்கூடாது என்று  நீதிமன்றம் இடும் கட்டளைக்கு தடையுறுத்துக் கட்டளை என்று பெயர்.
யாரெல்லாம் உறுத்துக் கட்டளை பெற முடியும்?
உறுத்துக் கட்டளையினை ஒருவர் நீதிமன்றத்தில் பெறுவதற்கு அவர் தொடுத்த அல்லது அவர்மீது வேறு எவராவது தொடுத்த  வழக்கு ஒன்று நிலுவையில் இருக்க வேண்டும். 
எந்த சூ்ழ்நிலையில் உறுத்துக்கட்டளை பெறமுடியாது?
⧭ வழக்கு தாக்கல் செய்யப்படாமல் இருந்தாலோ, அல்லது அந்த வழக்கு முடிவடைந்து விட்டாலோ உறுத்துக் கட்டளை பெறமுடியாது.
⧭ உறுத்துக்கட்டளையினை வழங்குவதற்கு நீதிமன்றம் ஒன்றுக்கு அதிகாரம் இல்லாத போது அந்த வழக்கில் உறுத்துக்கட்டளை வழங்கக்கூடாது.
⧭ பாகப்பிரிவினை சம்பந்தமான வழக்கில் உறுத்துக் கட்டளை பெற முடியாது.
⧭ ஒரு நிர்வாகமானது தன்னுடைய வேலையாளுக்கு எதிராக எடுக்கின்ற நடவடிக்கைக்கு எதிராக உறுத்துக் கட்டளை பெறமுடியாது.
⧭ வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் சரியான முறையில் தாக்கல்  செய்யாமல் இருக்கும்போது உறுத்துக்கட்டளை பெறமுடியாது.
நடைமுறைக்கு எப்போது வரும்?
எப்போது எதிர்தரப்பினருக்கு தெரியப்படுத்தப்பட்டதோ அப்போது முதலே உறுத்துக்கட்டளை நடைமுறைக்கு வரும்.
எப்போது முடிவுக்கு வரும்?
ஒரு வழக்கில் உறுத்துக்கட்டளை வழங்கப்பட்டு இருந்தால் அந்த வழக்கு முடிந்தவுடன் உறுத்துக்கட்டளையும் முடிவுக்கு வந்துவிடும்.
இதில் உள்ள சிக்கல்கள் 
வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அந்த வழக்கில் உறுத்துக்கட்டளை பெற்றவர் முன்னிலை ஆக தவறிய காரணத்தால் வழக்கு தள்ளுபடி ஆகியிருந்தால், பெறப்பட்டிருந்த உறுத்துக் கட்டளையும் தள்ளுபடி ஆகிவிடும். அந்த வழக்கு மீண்டும் கோப்பில் எடுக்கப்பட்டால் உறுத்துக்கட்டளையையும் தானாக கோப்பில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
உறுத்துக்கட்டளையை ஒருவர் மீறுவது தண்டணைக்குரிய குற்றமாகும்.
எதிர்தரப்பினர் உறுத்துக்கட்டளையை மீறுகிறார்கள் என்பதை, தக்க ஆதாரத்துடன் உறுத்துக் கட்டளையை பெற்றவர்தான் நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்.
----------------------புலமை வெங்கடாச்சலம் அவர்கள் எழுதிய நூலில் இருந்து----------

No comments:

Post a Comment