disalbe Right click

Friday, September 30, 2016

பெண்குழந்தை - அரசு நிதியுதவி பெற


பெண்குழந்தை - அரசு நிதியுதவி பெற என்ன செய்ய வேண்டும்?

பெண் குழந்தைக்கு அரசு நிதியுதவி - A- Z தகவல்கள்!

பெண் குழந்தை பிறந்தால் அதை சுணக்கத்தோடு வரவேற்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். படிப்பு, கல்யாண செலவு என்று உடனே மனதில் பெரிய லிஸ்ட் போட ஆரம்பித்துவிடுவார்கள்.  

இரண்டாவது குழந்தையும் பெண்ணாக பிறந்துவிட்டால், பெற்றோர் கலங்கித்தான் போய்விடுகிறார்கள். 

பெண் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. 

அதில் முக்கியமானது சிவகாமி அம்மையார் நினைவுப் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம். இதன் மூலம் அரசு வழங்கும் நிதியான 50 ஆயிரம் ரூபாயைப்  பெற எப்படி விண்ணப்பிப்பது, யாரை அணுக வேண்டும்?

விண்ணப்பம்

சிவகாமி அம்மையார் நினைவு பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்துக்கான, விண்ணப்பம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெறலாம். 

அல்லது

http://cms.tn.gov.in/sites/default/files/forms/socialwelfareschemes.pdf 

என்ற இணையதள முகவரியில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். அப்படிவத்தை பூர்த்தி செய்து, மாவட்ட சமூக நல அலுவலருக்கு அனுப்ப வேண்டும். 

நிதி விவரம்

ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின், அந்தக் குழந்தையின் பெயரில் நிரந்தர வைப்பீடாக 50 ஆயிரமும், இரண்டு பெண் குழந்தைகள் எனில் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் தலா ரூபாய் 25 ஆயிரமும் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் 18 ஆண்டு காலத்துக்கு முதலீடு செய்யப்படும்

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பெண் குழந்தைகள், 1.8.2011 க்கு பிறகு பிறந்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். 

குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். 

ஆண் குழந்தை இருக்கக் கூடாது. 

பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளவும் கூடாது. 

பெண் குழந்தை பிறந்த 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிப்பது அவசியம்.

இணைக்க வேண்டியவை

குடும்ப அட்டை, 

வருமானச் சான்று, 

சாதி சான்று, 

பெற்றோரின் வயதுச்சான்று, 

கருத்தடை அறுவை சிகிச்சை சான்று, 

குழந்தைகளின் பிறப்புச்சான்று (பெயர்களுடன்), 

குடும்பப் புகைப்படம்- 1, 

ஆண் வாரிசு இல்லை என, வட்டாட்சியர் வழங்கும் உறுதிச்சான்று, 

இருப்பிடச் சான்று 
(விண்ணப்பத்தாரர் 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டில் வசிப்பவர் என்று, வட்டாட்சியர் குறிப்பிட்டு வழங்குவது)

குறிப்பு

எந்தக் குழந்தையின் பெயரில் அரசு, தொகையை முதலீடு செய்ததோ அந்தக் குழந்தை 10-ஆம் வகுப்புத் தேர்வு எழுதியிருந்தால் மட்டுமே இறுதி முதிர்வுத் தொகை அப்பெண் குழந்தைக்கு வழங்கப்படும். 

அவ்வாறு இல்லையெனில் வட்டியுடன் வைப்புத் தொகை அரசுக் கணக்கில் செலுத்தப்படும்.

தகுதி

விண்ணப்பிக்கும் பெற்றோரின் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.

மேலும் அதிக தகவலுக்கு

மேலதிக தகவல்களுக்கு உங்கள் மாவட்ட சமூகநலத் துறையை அணுகவும்.

- -----------------------------------------------------------------------------------------சு.சூர்யா கோமதி.

நன்றி : விகடன் செய்திகள் - 29.09.2016

No comments:

Post a Comment