disalbe Right click

Tuesday, November 15, 2016

தங்கம் வாங்குபவர்கள் கவனிக்க


இந்த சூழ்நிலையில் தங்கம் வாங்குபவர்கள் என்ன செய்ய வேண்டும்?
500,1000  ரூபாய்  நோட்டுகள்  செல்லாது என்று அறிவித்த இரவு மக்கள்  முதலில் தேடி  ஓடிய  இடம் தங்க நகை கடைகள் தான். இதுபோன்ற அவசர காலத்தில் தங்கம் வாங்கும் போது மிகவும்  கவனமாக இருக்க  வேண்டும். அன்று இரவு 12 மணி வரை நகை கடைகளில் கூட்டம்  அலைமோதியது. வழக்கமாக தங்கத்தை பலமுறை  சோதிப்பவர்கள் கூட எதுவும் பார்க்காமல் நகைகளை வாங்கி வந்துள்ளனர். கிராம் ஒன்று 4000 ரூபாய் வரை விற்கபட்டிருக்கிறது.

உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஆண்டுக்கு 880 டன் தங்கம்  இறக்குமதி செய்யப்படுகிறது. தங்கம் என்பது இங்கு வெறும் ஆபரணமாக மட்டும் பார்க்க படுவது இல்லை. சேமிப்பாகவும் இருக்கிறது. அதனால் எந்த ஒரு இக்கட்டான நிலையிலும் நகை வாங்குவது இந்தியர்களின்  வாடிக்கை. தற்போது உள்ள நிலைமையில் நகைக்களை வாங்குவது எப்படி ?

ஹால்மார்க்
தென்இந்தியாவில்தான் அதிகமானோர் தங்கம் வாங்குகிறார்கள். மக்கள் நகைக்கடைகளால் அதிகம் ஏமாற்றப்படுவதும் இங்குதான். ‘ஹால்மார்க்’ முத்திரை என்பது தங்கத்தின் தரத்தை உறுதிபடுத்தும் முத்திரை. இந்த முத்திரையுள்ள தங்கத்தை வாங்கும்போதும்கூட பல கடைகளில ஏமாற்று வேலை நடப்பதுதான் வேதனை! 

ஹால்மார்க் முத்திரை கொண்ட தங்கம் அல்லது வெள்ளி நகைகள் தரமானவை என்று கூறப்படுகிறது.  வாடிக்கையாளர்கள், தரமற்றவற்றை வாங்காமல் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட முத்திரை (BIS) என்பதால், ஹால்மார்க் முத்திரை நம்பகமாகக் கருதப்படுகிறது. 

ஆனால், இந்த முத்திரையானது நாம் வாங்கும் ஒவ்வொரு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணத்துக்கும்  சரிவர வாங்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது அத்தனை சுலபமான காரியமல்ல. 

இந்தியாவில் ஹால்மார்க் முத்திரை வழங்கக்கூடிய சென்டர்கள் 324 இருக்கின்றன. ஒரு நாளைக்கு ஒரு சென்டரில் 500 ஆபரணங்களை மட்டுமே பரிசோதிக்க முடியும். ஆக, 324 சென்டர்களிலும் ஒரு நாளில் 1,62,000 ஆபரணங்களை மட்டுமே பரிசோதிக்க முடியும். 

ஒரு நகையின் எடை சராசரியாக 10 கிராம் என்று வைத்துக்கொண்டால், ஒரு நாளைக்கு 1.62 டன் நகைகள் வரை மட்டுமே ஹால்மார்க் முத்திரை கொடுக்கமுடியும். ஓர் ஆண்டுக்கு 591 டன் அளவு நகைகளுக்கு மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும். 

ஆனால், இந்தியாவின் தங்க நகை இறக்குமதி அளவு ஆண்டுக்கு, 880 டன். இந்நிலையில், ஹால் மார்க் முத்திரை என்பது நூறு சதவிகிதம் எப்படி சாத்தியம் ?

ஹால்மார்க் நகைகளை எப்படிக் கண்டுபிடிப்பது?
நகைகளில் BIS என்ற குறியீடு முக்கோண வடிவில் இருக்க வேண்டும். எவ்வளவு சுத்தமான தங்கம் என்ற அளவு இருக்க வேண்டும். 
உதாரணமாக.. 958 என்று இருந்தால் அது 23 காரட் தங்கம் என அர்த்தம். 
916 - 22 காரட் தங்கம், 
875 - 21 காரட் தங்கம், 
750 - 18 காரட் தங்கம், 
708 - 17 காரட் தங்கம், 
585 - 14  காரட் தங்கம், 
375 - 9 காரட் தங்கம்.

தங்கத்தின் மதிப்பீடும், ஹால்மார்க் சென்டரின் அடையாள குறியீடும் இருக்க வேண்டும். எந்த வருடத்தில் தயாரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிட்டிருக்க வேண்டும். 
உதாரணமாக.. ‘A’ என இருந்தால், அந்த தங்கம் 2000-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது என அர்த்தம்.
 ‘B’ - 2001,
 ‘C’ - 2002, 
‘D’ - 2003, 
‘E’ - 2004,
‘F’ - 2005, 
‘G’  - 2006,
‘H’ - 2007, 
‘J’ - 2008. 
இது போல் தொடர்ந்து கணக்கிட்டுக்கொள்ளவும்.
‘Q’ - 2015,
'R'-2016 

தங்கத்தில் தொடரும் கலப்படம்!
22 காரட் (916) தங்கமாக இருந்தாலும், 8 கிராம் (8,000 மில்லி கிராம்) ஆபரணத்தில், 7,328 மில்லி கிராம்தான் தூய்மையான தங்கம் இருக்கிறது. மீதம் 672 மில்லி கிராம் செப்பு அல்லது வேறு உலோகங்கள் கலக்கப்படுகின்றன. இது தங்கத்தை ஆபரணங்களாக மாற்றுவதற்காக செய்யப்படுவது. ஹால்மார்க் முத்திரை பெறாத மற்றும் மக்களை ஏமாற்றுவதற்கென்றே இருக்கும் கடைகளில் விற்கப்படும் நகைகளில் இந்தக் கலப்படத்தின் அளவு இன்னும் அதிகரிக்கும். இத்தகைய கலப்பட தங்கத்தை வாங்கும் வாடிக்கையாளர்களும், `916 தங்கம்’ எனப்படும் தங்கத்துக்கு தரும் பணத்தையே கொடுக்கிறார்கள். ஆண்டுதோறும் இப்படி சுமார் 480 டன் தங்கம் வரை இங்கே ஏமாற்றி விற்கப் படுகிறது.

 தங்க நகை சேதாரம்
இந்தியாவில் தங்கத்தை, ஆபரணங்களாக மாற்றும்போது நகைக்கடைக்காரர், தரகர், இடைத்தரகர் என ஒவ்வொரு கட்டத்திலும் தங்கம் சுரண்டப்படுகிறது. தங்க நகை சேதாரம் மூலமாகவும் பெரும் கொள்ளை நடக்கிறது. இறக்குமதியாகும் 880 டன் தங்கம், ஆபரணங்களாக மாற்றப்படும்போது மொத்தம் 2.6 டன் வரை சேதாரம் இருக்கலாம். ஆனால், மக்களிடம் விற்கும்போது, ஒவ்வொரு நகைக்கும் அதிகமான தங்கம் சேதாரமாகக் கணக்கிடப்படுகிறது. 

இதுதவிர, நகைகள் வாங்கும்போது 6.78 கிராம் எடை இருந்தால், ரவுண்டாக 7 கிராம் என்று சொல்வார்கள். நகை எடை பார்க்கும் மெஷினில் ஸ்பெஷல் கீ எனப்படும் சாம்பிள் பட்டனை அழுத்தியவுடன் எடையை ரவுண்டாக மாற்றிவிடும். இப்படி பெரும்பாலான கடைகளில் மில்லி கிராம் தங்க அளவில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட, சிறுதுளி பெருவெள்ளமாக கடையின் முதலாளிகளுக்கு தங்க மழை பொழிகிறது! 

தங்கத்தில் என்னவெல்லாம் கலக்கப்படுகிறது?
ஹால்மார்க் முத்திரை இல்லாத நகைகளில் 31 பர்சன்ட் அளவுக்கு அலாய் எனப்படும் வொயிட் மெட்டல் கலக்கப்பட்டிருக்கும். நீங்கள் 8 கிராம் நகை வாங்குகிறீர்கள் என்றால், அதில் கிட்டத்தட்ட 2.5 கிராம் அளவுக்கு இந்த வொயிட் மெட்டல் கலந்திருக்கும். மீதி 5.5 கிராம் மட்டுமே தங்கம். 

உதாரணத்துக்கு, நீங்கள் 8 கிராம் நகையை 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்குகிறீர்கள். ஆனால், இதிலிருக்கும் 5.5 கிராம் தங்கத்தின் உண்மையான மதிப்பு 13,750 ரூபாய். மீதி 6,250 ரூபாய் உங்களிடம் சுரண்டப்பட்டு, அதற்குப் பதிலாக, 2.5 கிராமுக்கு 250 ரூபாய் மதிப்புள்ள வொயிட் மெட்டல் கலக்கப்படுகிறது. கடைக்காரர்கள் பெறும் லாபத்தையும், உங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தையும் நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்'

கல் நகை... உஷார்!
மிக முக்கியமாக.. நகைக்கு பில் போடும்போது ஆபரணத்தில் எவ்வளவு தங்கம் இருக்கிறது, பிற உலோகங்கள் எவ்வளவு சேர்க்கப்பட்டுள்ளன போன்றவற்றை பதிவிடவேண்டும். கல் ஒட்டுவது போன்றவற்றுக்கு தனியாகவும், தங்கத்துக்கு தனியாகவும் கட்டணம் வாங்க வேண்டும். 

பெரும்பாலும் இன்றைக்கு அப்படி செய்வது கிடையாது. மாறாக, கல்லுடன் சேர்த்து 20 கிராம் எடை என்றால், 20 கிராம் தங்கம் என்று சொல்லி மொத்தமாக கட்டணம் வசூலிக்கிறார்கள். உண்மையில் அதில் 15 கிராம்தான் தங்கம் இருக்கும். மீதமுள்ள 5 கிராம் கல் (வெகு சொற்ப மதிப்புள்ளது) இருக்கும்.

இது குறித்து பேசிய நகை கடை உரிமையாளர் சங்க பொது செயலாளர் சாந்தகுமார்  கேட்டோம்

இது போன்ற நேரங்களில்  மக்கள் விழிப்புணர்வுடன் நகைகளை வாங்கவேண்டும். எங்களுக்கு இது குறித்து எந்த புகாரும் இது வரை வரவில்லை.பொதுவாக நகை வாங்குபவர்கள் முதலீடு, தேவை இரண்டு காரணங்களுக்காக வாங்குகின்றனர். முதலீடு செய்ய நினைப்பவர்கள் தங்க ட்டிகளாகவும்,நாணயங்களாகவும் வாங்குவார்கள் .தேவைக்கு வாங்குபவர்கள் நகைகளாக வாங்குகின்றனர்.

இப்போது  உள்ள சூழலில் பான் கார்டு கொடுத்து  நகைகளை  வாங்குவது தான்' சிறந்தது.அதுவே  100 சதவிகித  பலனை தரும் நீங்கள் பான் கார்டு  மூலம் வாங்குவதால் அரசு நிர்ணயித்த விலையில் நகைகளை வாங்கலாம். இல்லை என்றால் முதலில்  நகைக்கடைக்கு சென்று தேர்வு  செய்துவிட்டு பின்னர் காசோலைகள்  மூலம் நகைகளை வாங்குவதே  சிறந்தது. 

சிலர் செல்லாத பணத்தை வாங்கி கொண்டு நகையின் விலையை இரட்டிப்பு ஆக்கி விற்பதாக கூறுகின்றனர்.அது போன்றவர்களிடம் ஏமாற வேண்டாம்.அதில்  நீங்கள் எந்த கேள்வியும் அவர்களிடம் கேட்க  முடியாமல் அவர்கள் கொடுக்கும்  நகையை வாங்கி வரவேண்டி  இருக்கும் 

எங்கு புகார் செய்வது?
தங்க நகை வாங்கும்போதோ, வாங்கிய பின்னரோ தரத்திலோ, எடையிலோ, வேறு எந்தக் குறைபாடோ வாடிக்கையாளருக்கு ஏற்பட்டால், 

இந்தியத் தர நிர்ணய ஆணையம், 
சி.ஐ.டி வளாகம், 4-வது குறுக்குத் தெரு, 
தரமணி, சென்னை-113 
என்ற முகவரி அல்லது 

044-22541988, 
044-22541216, 
9380082849 என்ற தொலைபேசி எண் 
மற்றும் 
meenu@bis.org.inஎன்ற இ-மெயில் முகவரியில் புகார் செய்யலாம். 

நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், அருகில் உள்ள நுகர்வோர் சேவை மையங்கள், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகலாம்.

தங்கத்தின் தன்மையை ஆராய பல்வேறு வழிமுறைகள் பின்பற்றுகின்றனர். 

அதில் ஒன்று எக்ஸ்ஆர்எஃப் (XRF: x-ray-fluorescence). இதன் மூலமாக ஆபரணத்தில் எவ்வளவு சதவிகிதம் தங்கம், காப்பர், சில்வர் உள்ளது என்பது போன்ற அனைத்து தகவல்களும் துல்லியமாகக் கிடைக்கும். 

இதற்கான கருவியின் விலை 10 முதல் 29 லட்ச ரூபாய். பெரிய கடைகளில் இந்த மெஷின் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது மக்களுக்குத் தெரிவதில்லை, சொல்லப்படுவதுமில்லை.

நன்றி : விகடன் செய்திகள் – 16.11.2016


No comments:

Post a Comment