disalbe Right click

Thursday, December 1, 2016

காய்கறிகள் நல்லதாக வாங்க


காய்கறிகள் நல்லதாக வாங்க என்ன செய்ய வேண்டும்?

மைத்த உணவு சுவையாக இருக்கவேண்டும் என்றால், வாங்கும் காய்கறிகள் நல்லதாக இருக்கவேண்டும். சிலருக்கு காய்கறிகளை எப்படிப் பார்த்து வாங்க வேண்டும் என்பது பிடிபடுவதில்லை. ஒவ்வொரு காய்கறியையும் எப்படி தரம் பார்த்து வாங்கவேண்டும். அப்படி, நீங்கள் வாங்கும் காய்கறிகளில் அவசியம் கவனிக்க வேண்டியவை இதோ:
1. உருளைக்கிழங்கு: தழும்புகள், ஓட்டைகள் இல்லாமல் இருக்க வேண்டும். பச்சையாகவோ அல்லது பச்சை நிறத்தழும்புகள் இருந்தாலோ தவிர்க்கவும். தோல் சுருங்கியவற்றையும் வாங்கக்கூடாது. விரல் நகத்தினால் கீறினால் தோல் வரவேண்டும். இதுதான் நல்ல உருளைக்கிழங்குக்கு அடையாளம். சுவையாகவும் இருக்கும்.
2. முருங்கைக்காய்: கரும்பச்சை நிறத்திலும் சற்று உருண்டையாகவும் இருக்கும் முருங்கைக்காயாகப் பார்த்து வாங்க வேண்டும். பட்டையாக இருந்தால் உள்ளே சதை இருக்காது என்பதால் தவிர்க்கவும். இரு முனைகளைப் பிடித்து லேசாக முறுக்கினால் வளைத்துகொடுக்கவேண்டும். அதுவே இளசான காய். அதுவே முறுக்கும்போது மளமளவென்று சத்தம் கேட்டால், அது முற்றல். தவிர்க்கவும்.
3. முள்ளங்கி: காய் நீண்டு, தலைப்பகுதி காம்பு நிறம் மாறி வாடிவிடாமல் பச்சையாக இருக்க வேண்டும். நகத்தால் லேசாகக் கீறிப் பார்க்கும்போது தோல் மென்மையாக இருந்தால் அது இளசு, சமைக்க உகந்தது.
4. பீன்ஸ்: ஃப்ரெஷ் பீன்ஸ் நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். உடைத்தால் பட்டென்று உடையும். அதுதான் சமையலுக்குச் சுவையாக இருக்கும். வெளிர்பச்சை நிறத்தில் இருந்தால் அது முற்றிய பீன்ஸ். நாள்பட்ட பீன்ஸும்  வதங்கி வெளிர்பச்சையாகக் காட்சிகளிக்கும்; தவிர்க்கவும்.
5. கத்தரிக்காய்: ஓட்டை இருந்தால் உள்ளே புழு இருக்கும் என்பதால், சிறு ஓட்டைகூட இல்லாமல் நன்றாகப் பார்த்து வாங்கவேண்டும். காம்பு நீண்டிருந்தால் காய் இளசாக இருக்கும். காம்பு குச்சி போன்று இருந்தால் காய் முற்றல் என்று அர்த்தம். காய் முழுக்க ஒரே நிறத்தில் பளபளவென்று இருப்பது நல்ல காய். பச்சை நிறத்தில் உள்ள கத்தரிக்காய் மீது வெள்ளை வரிகள் இருந்தால் அது கசக்கும்.
6. வாழைக்காய்: காம்பு ஒடிந்த இடத்தில் வெள்ளையாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குவது நல்லது. வாங்கி வந்தபிறகு சுத்தமாகக் கழுவிவிட்டு தண்ணீரில் போட்டு வைத்தால், வாடாமலும் பழுக்காமலும் இருக்கும்.
7. வெண்டைக்காய்: பச்சை நிறத்தில் இருக்கவேண்டும். நுனியை உடைத்தால் படக்கென்று உடையவேண்டும், அதுதான் பிஞ்சு. உடையாமல் வளைந்தாலோ, இரண்டாகப் பிளந்தாலோ அல்லது காம்பு சுருங்கியிருந்தாலோ அது முற்றல்.
8. முட்டைக்கோஸ்: இலைகள் வெள்ளையாக இருக்கக்கூடாது; பச்சை உள்ளவையாகப் பார்த்து வாங்கவேண்டும். அதுதான் இளசு. முட்டைக்கோஸ் அளவில் சிறியதாகவும் கனமாகவும் இருந்தால் சுவையாக இருக்கும். நடுக்காம்பு வெள்ளையாகவும், நாற்றமில்லாமலும் இருக்கவேண்டும். தவறினால் அது பழையது என்று அர்த்தம்.
9. சேப்பங்கிழங்கு: நீண்டிருக்கும் கிழங்கு சுவை தராது. உருண்டையாக இருக்கும் சேப்பங்கிழங்காகப் பார்த்து வாங்கவும். மேலே கீறிப் பார்த்தால் உள்ளே வெள்ளையாக இருந்தால் நல்ல கிழங்கு.
10. பீர்க்கங்காய்: பார்ப்பதற்கு பச்சைப் பசேல் என்று இருப்பதை வாங்கவேண்டும். மேலும் அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுவதும் ஒரே சைசில் இருக்குமாறு பார்த்து வாங்கவேண்டும். காயின் மேல் நரம்புகள் எடுப்பாகவும் வெள்ளைப் புள்ளிகளும் இருந்து காம்பு வறண்டு இருந்தால் முற்றல் என்று அர்த்தம்.
11. மாங்காய்: தேங்காயைக் காதருகே வைத்து தட்டிப் பார்ப்பது போல மாங்காயையும் தட்டிப் பார்க்கலாம். அப்படிப் பார்க்கும்போது சத்தம் வந்தால் அந்த மாங்காயில் கொட்டை சிறியதாக இருக்கும், சதைப்பகுதி நிறைந்திருக்கும்.
12. பச்சை மிளகாய்: காயும் காம்பும் பச்சையாக இருந்தால் ஃப்ரெஷாக இருக்கும். காம்புகள் சுருங்கி, கறுத்தப் போயிருந்தால் பழையது என்று அர்த்தம். மிளகாய் நீளமாக இருந்தால் காரம் குறைவாக இருக்கும். அதுவே குண்டாக இருந்தால் காரம் அதிகமாக இருக்கும்.
13. சௌசௌ: காயின் மேல் பகுதியில் விரிசல்கள் பெரியதாக இல்லாதபடி பார்த்து வாங்கவும். விரிசல்கள் பெரியதாக இருந்தால் அது முற்றிய காய்.
14. அவரைக்காய்: ஒவ்வொரு காயையும் தொட்டுப் பார்க்கவும். அதில் விதைகள் பெரியதாக இருக்கும் காய்களைத் தவிர்க்கவும். இளசாக இருக்கும் காய்களில் விதைகள் சிறியதாக இருக்கும், நார் அதிகம் இருக்காது.
15. கோவைக்காய்: முழுவதும் பச்சையாக இருக்கவேண்டும். இளம் சிவப்பு, மஞ்சள் இருக்கும் காய்களை வாங்க வேண்டாம். அது பழுக்கும் நிலையில் இருப்பதால் ருசி இல்லாமல் இருக்கும்.
-என்.மல்லிகார்ஜுனா
நன்றி : விகடன் செய்திகள் – 02.12.2016

No comments:

Post a Comment