disalbe Right click

Tuesday, March 28, 2017

வழக்குப்பதிவு செய்யாத காவலர் மீது நடவடிக்கை!



வழக்குப்பதிவு செய்யாத காவலர் மீது நடவடிக்கை!
மதுரை: புகார்கள் குறித்து வழக்குப் பதிவு செய்யாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி.,க்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை திருமுருகன் உட்பட 69 பேர் தங்கள் புகார்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி ஐகோர்ட் கிளையில் மனு செய்தனர். 

நீதிபதி சி.டி.செல்வம் உத்தரவு: 

போலீசில் யார் புகார் கொடுத்தாலும், குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு அடிப்படையில் இக்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

புகார் வந்தால் பதிவு செய்யாமல் போலீசார் தவிர்ப்பது கவலையளிக்கிறது. போலீசார் விருப்பம் போல் செயல்படுகின்றனர். தேசிய ஆய்வில் புகார்களில் பெரும்பாலானவற்றிற்கு வழக்கு பதிவு செய்வதில்லை என தெரியவந்துள்ளது. 

ஒரு புகார் பதிவு செய்யப்படாதபோது காலதாமதத்தால் புகாரர்தாரர் பாதிக்கப்படுகிறார். இது கோர்ட் விசாரணையை பாதிக்கும். சில நேரங்களில் போலீசார் உண்மைகளை திரித்து வழக்குப் பதிவு செய்கின்றனர். 

இந்தியாவில் 2012 ல் 60 லட்சம் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதிலிருந்து 60 லட்சம் வழக்குகள் பதிவு செய்யவில்லை என தெரிகிறது. இக்கோர்ட் கீழ்கண்ட வழிகாட்டுதல்களை டி.ஜி.பி.,க்கு பரிந்துரைக்கிறது.
  •  புகார் அடிப்படையில் குற்றம் புலனாகும் பட்சத்தில் கண்டிப்பாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆரம்பகட்ட விசாரணை தேவையில்லை.
  • குற்றம் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இல்லையெனில் விசாரிக்க வேண்டும். சம்பவம் நடந்துள்ளதா? இல்லையா? என கண்டறிய வேண்டும். முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
  • புகாரில் உண்மையில்லை என விசாரணையை முடிப்பதாக இருந்தால், மனுதாரருக்கு ஒருவாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும். மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.
  • முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் வழக்குப் பதிவு செய்வது போலீசாரின் கடமை. கடமை தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • முதற்கட்ட விசாரணையில் புகார் உண்மையா? இல்லையா? என பார்க்கக்கூடாது. முகாந்திரம் இருக்கிறதா? என பார்க்க வேண்டும்.
  • குடும்பத் தகராறு, வணிக ரீதியான குற்றங்கள், மருத்துவ சிகிச்சையில் கவனக்குறைவு, ஊழல், காலதாமதமாக வரும் புகார்களின் மீது முதற்கட்ட விசாரணை தேவை.
  •  முதற்கட்ட விசாரணையை ஏழு நாட்களில் முடிக்க வேண்டும். காலதாமதம் ஏற்படின் காவல்நிலைய டைரியில் பதிவு செய்ய வேண்டும். தினசரி வரும் அனைத்து புகார்களையும் டைரியில் பதிவு செய்ய வேண்டும். 
டி.ஜி.பி., எங்கள் கவலையில் பங்குபெற இக்கோர்ட் விரும்புகிறது. கண்காணிப்பு குழு அமைத்து, தவறு செய்யும் அதிகாரிகள் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குகள் பைசல் செய்யப்படுகின்றன என்றார்.

தினமலர் நாளிதழ் செய்தி - 27.03.2015

No comments:

Post a Comment