disalbe Right click

Tuesday, August 8, 2017

வழக்கறிஞர்களுக்குப் பதிலாக கட்சிக்காரர் வாதாடலாம்!

வழக்கறிஞர்களுக்குப் பதிலாக கட்சிக்காரர் வாதாடலாம்!
வழக்குரைஞர்கள் இல்லாவிட்டாலும் தொடர்புடையவர்களையே வாதாட அனுமதிக்கலாம்! கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை
வழக்குரைஞர்களுக்குப் பதிலாக கட்சிக்காரர்களை வாதாட அனுமதிக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
வழக்குரைஞர்கள் சட்டத்தில் உயர் நீதிமன்றம் கொண்டு வந்த புதிய திருத்தங்களை எதிர்த்து, ஜூன் 1-ஆம் தேதி முதல் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, அனைத்து நீதிபதிகள் கூட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வழக்குரைஞர்கள் ஆஜராகவில்லை என்றால், வழக்கில் தொடர்புடைய கட்சிக்காரர்களை ஆஜராகி வாதாடவும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதிக்க வேண்டும். அப்போது, வழக்குரைஞர்களுக்கு வழங்கப்பட்ட வக்காலத்து மனுவை ரத்து செய்ய வேண்டும்.
இதை வழக்குரைஞர்கள் யாராவது தடுத்தால், மாவட்ட முதன்மை நீதிபதிக்கு நீதிபதிகள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்டோர் மீது போலீஸார் வழக்கும் பதிவு செய்யவேண்டும்.
மாவட்ட அளவில் போலீஸ் படையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். எந்த நீதிமன்றத்துக்கும், நீதிபதிக்கும் பாதுகாப்பு தேவை என்றால், அந்த படையை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.
கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்படுவோர் சார்பில் ஜாமீன் கேட்டு, அவரது நெருங்கிய உறவினர்கள் நேரடியாக மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்.
சிறையில் இருக்கும் நபர்கள் ஜாமீன் கேட்டு சிறையில் இருந்தபடியே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும், அந்த மனு கையால் எழுதப்பட்டதாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டால், சிறையில் இருந்து அழைத்து வர உத்தரவிட வேண்டும்.
கைதிகளிடம் ஜாமீன் மனு மீது காணொலி காட்சி (விடியோ கான்பரன்சிங்) வசதி உள்ள நீதிமன்றங்கள் விசாரணை நடத்தலாம். தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக் குழு நீதிபதிகள், வாரத்துக்கு இருமுறை சிறைகளுக்குச் சென்று, கைதிகளிடம் ஜாமீன் மனுவை பெற்று, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த மனு குறித்து போலீஸ் தரப்பின் வாதத்தை கேட்டறிந்து, தகுந்த உத்தரவை சம்பந்தப்பட்ட நீதிபதிகள் பிறப்பிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமணி நாளிதழ் 05.08.2016

No comments:

Post a Comment