disalbe Right click

Saturday, November 4, 2017

ஒரு பெண்ணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்


ஒரு பெண்ணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில்  அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்டப்படி  யாருக்குப் போய்ச் சேரும்?
கோமதி என்பவர் திடீரென்று இறந்துவிடுகிறார்! என்று வைத்துக் கொள்வோம். அவரது சுயசம்பாத்தியமாக அவரது வங்கிக் கணக்கில் 12 லட்ச ரூபாய் இருக்கிறது.  இந்த பணத்திற்கு கோமதியின் கணவன் , மகன், மகள் ஆகியோர்கள் முதல் நிலை வாரிசுதாரர்கள் ஆவார்கள். வங்கியில் உள்ள 12 லட்ச ரூபாயை மூன்று சமபங்காக பிரித்து ஒவ்வொருவருக்கும் 4 லட்ச ரூபாய் வீதம் கொடுக்க வேண்டும். 
கோமதியின்  மகன்  இறந்து போயிருந்தால்?
கோமதியின் மகன் கோமதி  இறப்பதற்கு முன்னாலேயே இறந்துவிட்டால், அந்த மகனின் பிள்ளைகளுக்கு அவரது பங்கான ரூபாய் 4 லட்சம் மட்டும் சரிசமமாக பிரித்துக் கொடுக்கப்படும். 
கோமதியின் மகள்  இறந்து போயிருந்தால்?
கோமதியின் மகள் கோமதி இறப்பதற்கு முன்னாலேயே இறந்துவிட்டால், அந்த மகளின் பிள்ளைகளுக்கு ரூபாய் 4 லட்சம் சரிசமமாக பிரித்துக் கொடுக்கப்படும். 
கோமதியின் கணவன் இறந்து போயிருந்து, குழந்தைகளும் இல்லாமல் இருந்தால்?
கோமதி இறப்பதற்கு முன்னாலேயே கோமதியின் கணவனும் இறந்து போயிருந்து, குழந்தைகளும் இல்லை என்றால், (இரண்டாம் நிலை வாரிசுதாரர்களான) கோமதியின் கணவனது வாரிசுதாரர்களுக்கு ரூ.12 லட்ச ரூபாய் சரிசமமாக பங்கிட்டு கொடுக்கப்படும்.
கணவனது வாரிசுதாரர்களும் இல்லையென்றால்?
கோமதியின் கணவனது வாரிசுதாரர்களும் இல்லையென்றால், (மூன்றாம் நிலை வாரிசுதாரர்களான)  கோமதியின் பெற்றோர்களுக்கு ரூ.12 லட்சம் போய்ச் சேரும்.
கோமதியின் பெற்றோர்களும் இல்லை என்றால்?
கோமதியின் பெற்றோர்களும் உயிருடன் இல்லை என்றால், அந்த பெற்றோர்களுடைய வாரிசுகளுக்கு ரூ.12 லட்சம் போய்ச் சேரும்.
கோமதியின் தந்தைக்கு இரண்டு மனைவிகள் என்றால்?
கோமதியின் தந்தைக்கு இரண்டு மணைவிகள் என்றும், கோமதியின் தாயார் , கோமதியின் தந்தைக்கு மூத்த தாரம் என்றும் வைத்துக் கொள்வோம். கோமதியின் சித்தி (Stepmother) கோமதியின் தந்தைக்கு  முறைப்படி மனைவியாக ஆகியிருந்தாலும், அவரும், அவரது குழந்தைகளும் (Half blood sister & brothers)  கோமதியின் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாட முடியாது. கோமதியின் தாய் வயிற்றில் பிறந்த சகோதர, சகோதரிகளே (Full blood sister & brothers)   கோமதியின் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாட முடியும்.
கோமதியின் சொத்துக்களுக்கு முதல் கணவர் உரிமை கொண்டாட முடியுமா?
கோமதி தனது முதல் கணவரை விட்டு முறைப்படி விவாகரத்து செய்து விலகி வேறு திருமணம் செய்திருந்தாலும்,  தனது சொத்துக்கள் பற்றி எதுவும் எழுதி வைக்காத நிலையில் அவர் இறந்துவிட்டால், கோமதியின் முதல் கணவரும், அவரது வாரிசுகளும் அந்த சொத்தில் உரிமை கொண்டாடலாம். இரண்டாவது கணவருக்கு உரிமை கிடையாது. ஆனால், இரண்டாவது கணவர் மூலமாக பிறந்த குழந்தைகளுக்கு அந்த சொத்தில் உரிமை உண்டு.
****************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

No comments:

Post a Comment