disalbe Right click

Friday, February 23, 2018

கல்விக்கடன் வழங்க மறுத்த வங்கிக்கு அபராதம்

தமிழ்நாட்டில் கல்விக்கடன் வழங்க மறுத்த வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆர்.முத்தழகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த 2011 ஆம் ஆண்டு பொறியியல் படிப்புக்காக போளூர் தாலுகாவைச் சேர்ந்த கேளூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் ரூ. 3 லட்சத்து 45 ஆயிரம் கல்விக்கடன் கோரி நான் விண்ணப்பித்தேன். வங்கி நிர்வாகம்  எனக்கு  கல்விக்கடன் வழங்கவில்லை. ஆகவே கனம் நீதிபதி அவர்கள் எனக்கு கல்விக்கடன் வழங்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்
தனி நீதிபதி அளித்த தீர்ப்பு
இதனை விசாரித்த தனிநீதிபதி அவர்கள், மாணவியின் கோரிக்கையை பரிசீலித்து, அவருக்குக் கல்விக்கடன் வழங்க வங்கி நிர்வாகத்துக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு உத்தரவிட்டார்
மேல்முறையீடு செய்த வங்கி
இந்த உத்தரவை எதிர்த்து வங்கி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் பி.வேல்முருகன் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை (23.02.2018) விசாரணைக்கு வந்தது
வங்கியின் வாதம்
ஷை வங்கியின் சார்பாக ஆஜரான  வழக்கறிஞர், கடன் கோரிய மானவியின் படிப்பு கடந்த 2015ம் ஆண்டிலேயே முடிந்துவிட்டதால், வழக்கு காலாவதி ஆகிவிட்டது. ஆகவே இந்த வழக்கில் தனி நீதிபதி அவர்கள் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார்.
முடிவில் நீதிபதிகள், எந்தவித நிபந்தனையும் இன்றி, உத்தரவாதமும் இன்றி கோடீஸ்வர தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கில் வாரிக் கொடுக்கின்ற வங்கிகள், ஏழை மாணவர்கள் கல்விக்கடன் கோரி விண்ணப்பித்தால் அவர்களை அலைகழித்து வருகின்றனர். அது போல  ஏழைகளுக்கு கல்விக்கடன் வழங்காமல் மறுக்கப்படுவதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
பணக்காரர்களுக்கு ஒரு மாதிரியான போக்கையும், ஏழைகளுக்கு வேறு மாதிரியான போக்கையும் வங்கி நிர்வாகம் கடைபிடிப்பது கண்டனத்துக்குறியது. வழக்கைத் தொடர்ந்த மாணவி ஆர்.முத்தழகி-க்கு படிப்பை முடிக்கும் வரை கடன் வழங்காமல் இழுத்தடித்து இந்த வழக்கை வங்கி செல்லாததாக ஆக்கிவிட்டது
ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ரூ. 48 ஆயிரம் கோடி வரை வாங்கிய கடனை முறையாக வங்கியில் திருப்பிச் செலுத்தாத நிலையில், கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என இதுவரை எந்த புகாரும் நீதிமன்றத்திற்கு வந்தது இல்லை
இதுபோல உரிய நேரத்தில் கல்விக்கடன் மாணவ, மாணவியர்களுக்கு மறுக்கப்படுவதால், நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய மிகச்சிறந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் கிடைக்காமல் போய் விடுகின்றனர். இதனால் அவர்களுடைய சேவை நாட்டுக்கு கிடைக்காமல் போகிறது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
 வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
ஆகவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி கல்விக்கடன் வழங்க மறுத்த வங்கி நிர்வாகத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படுகிறது
இந்த தொகையை மனுதாரருக்கு இரண்டு வாரத்துக்குள் வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 24.02.2018. 

No comments:

Post a Comment