disalbe Right click

Wednesday, June 6, 2018

நீதிமன்ற அவமதிப்பு - (Contempt of court)

நீதிமன்ற அவமதிப்பு - (Contempt of court) 
ஒரு நாட்டிலுள்ள மக்களின் வாழ்க்கை அமைதியாகவும், நியாயமாகவும் நடக்க சட்டம் பயன்படுத்தப்படுகிறது. அதனை செயல்படுத்துவதில் நீதிமன்றம் பெரும் பங்காற்றுகிறது. குற்றம் செய்தால் நாம் தண்டிக்கப்பட நேரிடும் என்பதாலேயே பலர் குற்றம் தவிர்த்து வாழுகின்றனர். ஒருவருடைய உரிமையோ அல்லது சொத்தோ பறிக்கப்படுகின்றபோது அவர் அதனை பெறுவதற்கு நீதிமன்றத்தையே நாடுகிறார். நியாயமான தீர்ப்பு நீதிமன்றத்தால் வழங்கப்படும் என்று மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையே இதற்குக் காரணமாகும். நாட்டு மக்கள் அமைதியாக வாழ்வதற்கும், நீதிமன்றத்தின் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பதற்கும் நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் இயற்றியுள்ளார்கள்.
ஒருவர் நீதிமன்றத்தில் வேண்டுமென்றே நீதியரசர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதும், நீதிமன்றத்தின் அல்லது நீதிபதியின் செயல்பாட்டில் இடையூறு செய்வதும், அல்லது ஒருவர் வேண்டுமென்றே நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு கீழ்படியாமல் இருப்பதும், நீதிமன்ற அவமதிப்பிற்குரிய செயல்களாகக் கருதப்படுகின்றது.
நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1952 (Contempt of court)
இந்த சட்டத்தின்படி நீதிமன்றம் மற்றும் நீதித்துறையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற வகையில் செயல்படுகின்ற தனிநபர்கள், நிறுவனங்கள், அரசாங்கம் மட்டுமல்லாமல் வழக்கறிஞர்களும், நடுவர்களும், நீதிபதிகளும் தண்டிக்கப்படுவார்கள்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக நடவடிக்கை எடுப்பது, நீதிபதிகளை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக்குவது, சட்ட ஒழுங்கை பராமரிப்பது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சமநீதியை நிலைநாட்டுவது போன்ற காரணங்களுக்காக இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 
இச்சட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கு மட்டுமே நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரித்து தண்டணை வழங்கும் அதிகாரம் இந்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
நீதித்துறையின் பணியாளர்கள், நீதித்துறை நடுவர்கள் மட்டுமல்லாமல் நீதிபதிகளையும்  கூட இச்சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியும்
சமீபத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ் கர்ணன் அவர்கள் 2017ம் ஆண்டில் இச்சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு  ஆறு மாத கால சிறைத் தண்டணை அனுபவித்தார்

Image result for சி.எஸ்.கர்ணன்
C.S.KARNAN
பதவியிலிருக்கும்போதே, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனை பெற்ற முதல் உயர்நீதிமன்ற  நீதிபதி சி.எஸ். கர்ணன் அவர்கள்தான்! என்பது குறிப்பிடத்தக்கது. 
நீதிமன்ற அவமதிப்பு பற்றிய வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் நடைமுறைகள்
  • இந்த வழக்குகள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டணை வழங்கப்படுகிறது. 
  • குற்றம் சாட்டப்படுபவர்க்கு அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த விபரங்களை தெரியப்படுத்த வேண்டும்.  அந்த வழக்கில் அவர் எதிர்வாதம் செய்வதற்கு போதுமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
  • குற்றம் செய்த நபரை தண்டணைக்கு உள்ளாக்குவதற்கு முன்னர் அவர் மீதுள்ள குற்றச்சாட்டை முழுமையாக நிரூபிக்க வேண்டும்.
  • இந்திய சாட்சிய சட்டம் இந்த வழக்கில் பொருந்தாது.
  • குற்றம் சுமத்தப்பட்ட நபர் விருப்பத்தின் பேரில், அவர்மீது சுமத்தப்பட்ட குற்றமானது எந்த நீதிபதியின் முன் நடந்ததோ, அவரைத் தவிர்த்து வேறு நீதிபதி முன் வழக்கை நடத்திக் கொள்ளலாம்.
  • வழக்கானது முடியும் வரை குற்றம் சாட்டப்பட்டவரை காவல்துறையினர் காவலில் வைக்கலாம். அது போன்ற சமயங்களில் அவர் தகுந்த Bail Bond தாக்கல் செய்து, அதன் பேரில் பெயில் அப்ளை செய்தால் அவரை விடுவிக்கலாம்.
  •  குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாகி விடாமல் இருக்க, அவரது சொத்துக்களை தற்காலிகமாக நீதிமன்றம் ஜப்தி செய்யலாம்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்ன தண்டணை வழங்கப்படும்?
  • நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் செய்தவருக்கு பொதுவாக ஆறு மாத காலம் சாதாரண சிறைத் தண்டணை அல்லது ரூ.2000/- அபராதம் விதிக்கப்படலாம்.
  • குற்றமானது கடுமையாக இருந்தால், சிறைத் தண்டணையுடன் அபராதமும் சேர்த்து விதிக்கப்படலாம்.
  • குற்றம் செய்தவர் தனது தவறை உணர்ந்து, நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டால், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டணையை குறைப்பதற்கோ அல்லது விடுதலை செய்வதற்கோ நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.
தண்டணையை எதிர்த்து மேல்முறையீடு
  • தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, இரு நீதிபதிகளுக்குக் குறையாத அமர்வு நீதிமன்றத்திற்கு, உத்தரவு வழங்கப்பட்ட நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள் அப்பீல் செய்யலாம்.
  • அமர்வு நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்ட நாளிலிருந்து அறுபது நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்திற்கு  அப்பீல் செய்யலாம்.
  • அப்பீல் செய்யப்பட்டு அதன் பேரில் விசாரணை செய்து தீர்ப்பு வரும் வரையில் ஏற்கனவே வழங்கப்பட்ட தண்டணையை நிறுத்தி வைக்கலாம். 
  • குற்றவாளி அப்பீல் செய்யும் முன்னர், தண்டணை வழங்கிய நீதிமன்றத்திற்கு,  அப்பீல் காலம் முடியும் வரை அந்த தண்டணை உத்தரவை நிறுத்தி வைக்கவும், அவரை பெயிலில் விடுவிக்கவும் அதிகாரம் உண்டு.
என்ன காரியங்கள் செய்தால் அவை உரிமையியல் அவமதிப்பு ஆகும்?
  • நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, தீர்ப்பாணை, வழிகாட்டுதல் உத்தரவு, நீதிப் பேராணை, மற்றும் வேறு வகையான கட்டளைகளுக்கு கீழ்படியாமல் இருத்தல்.
  • நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறுதல்.
  • வேண்டும் என்றே நீதிமன்ற உத்தரவுகளுக்கு கீழ்படியாமை மற்றும் நீதிமன்றத்தில்  கொடுத்த வாக்குறுதியை மீறுதல்.
    என்ன காரியங்கள் செய்தால் அவை குற்றவியல் அவமதிப்பு ஆகும்?
    • எந்த ஒரு நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் அவதூறாக பேசுதல், எழுதுதல் அல்லது மதிப்பிழக்கச் செய்தல்.
    • நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுதல்.
    • நீதிபதியின் பணியில் குறுக்கிடுதல், நீதி நிர்வாகத்தில் நீதிபதிக்கு மிரட்டக் கடிதம் அல்லது தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதுதல், பேச்சு, எழுத்து, குறியீடு அல்லது சைகை ஆகிய ஏதாவது ஒரு வகையில் நீதி நிர்வாகத்தில் தலையிடுதல்.
    வழக்கறிஞர்கள் செய்யும் நீதிமன்ற அவமதிப்பு
    • நீதிமன்றத்தில் வாதாடும்போது நடுவர்களை,  நீதிபதிகளை அவமதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்துவது.
    • தனது கட்சிக்காரருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைப்பதற்காக, தெரிந்த உண்மையான தகவல்களை மறைத்தல்.
    • நீதித்துறையை விமர்சனம் செய்தல்.
    • நீதிபதிக்கு எதிராக நீதிமன்ற வளாகத்துக்குள் கோஷம் எழுப்புதல், ஏதாவது ஒரு காரணத்திற்காக நீதிமன்றத்தை புறக்கணித்தல், நீதிமன்ற நிர்வாகத்தில் தலையுடுதல்.
    நீதிபதிகள் செய்யும் நீதிமன்ற அவமதிப்பு
    • பிற நீதிமன்ற உத்தரவை மதிக்கத் தவறுதல்.
    • காரணமில்லாமல் வழக்கறிஞரை நீதிமன்றத்தை விட்டு வெளியேற்றுதல்.
    அரசாங்கங்கள் செய்யும் நீதிமன்ற அவமதிப்பு
    • அரசாங்கத்திற்கு எதிராக வழங்கப்பட்ட உத்தரவுகளை அரசாங்கமோ, அதிகாரிகளோ மீறுவது.
    ******************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 06.06.2018 

    No comments:

    Post a Comment