disalbe Right click

Thursday, November 14, 2019

அரசு ஊழியர் - நீதிமன்றம் அளித்த தண்டணை

அரசு ஊழியர் - தண்டணை - துறைரீதியான நடவடிக்கை - மேல்முறையீடு

வழக்கின் விபரம்:
  • சகாதேவன் என்பவர் ஆயுதப்படை பிரிவில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
  • அவரும் அவரது மனைவியும் சேர்ந்து சட்ட விரோதமாக சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணம் பெற்று பின்னர் ஏமாற்றி விட்டதாக கூறி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 420 மற்றும் 34 ன் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று சகாதேவனுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.
  • அந்த தண்டனையை எதிர்த்து சகாதேவன் ஒரு மேல்முறையீட்டை தாக்கல் செய்தார்.
  • கூடவே தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.
  • அதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
  • மேல்முறையீடு நிலுவையில் உள்ளது.
துறை ரீதியான நடவடிக்கை:
  • இந்நிலையில் காவல்துறை இணை ஆணையர் சகாதேவனை பணியிலிருந்து நீக்கி 31.10.2010 ஆம் தேதி உத்தரவிட்டார்.
துறை ரீதியான நடவடிக்கையை எதிர்த்து ரிட் மனு:
  • அதனை எதிர்த்து சகாதேவன் ஒரு ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
  • அதில் தனது மனைவிதான் சீட்டு நடத்தியதாகவும், தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சட்ட விரோதமாக தன்னை வழக்கில் சேர்த்துள்ளதாகவும், மேல்முறையீடு நிலுவையில் இருப்பதால் இணை ஆணையர் தன்னை நீக்கி உத்தரவு பிறப்பித்திருப்பது தவறு என்றும் கூறியிருந்தார்.
வழக்கை நீதிபதி S. N. சுப்பிரமணியன் அவர்கள் விசாரித்தார்.
  • அரசு ஊழியர் ஒருவருக்கு குற்ற வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டிருந்தால், விதிகளின்படி அவரிடம் விளக்கம் கேட்டு ஓர் அறிவிப்பினை அனுப்பி அவரை பணியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும்.
  • ஆனால் இந்த வழக்கில் சகாதேவனுக்கு குற்றவியல் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
  • அதனடிப்படையில் அவர்மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஓர் அரசு ஊழியரை பணி நீக்கம் செய்யும் முன்.........
  • ஓர் அரசு ஊழியரை பணி நீக்கம் செய்யும் அதிகாரம் கொண்ட நபர் ஒரு குற்ற வழக்கில் தண்டனை பெற்றுள்ள அரசு ஊழியருக்கு விளக்கம் கேட்டு ஓர் அறிவிப்பினை அனுப்பி, அந்த அரசு ஊழியரால் அளிக்கப்படும் விளக்கத்தை பெற வேண்டும்.
  • அந்த விளக்கம் மனநிறைவு அளிக்கக்கூடிய வகையில் இருந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • இல்லாவிட்டால் விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உரிமை இல்லை!
  • சகாதேவனுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
  • அதன் காரணமாக இணை ஆணையர் துறை ரீதியிலான நடவடிக்கையை எடுத்துள்ளார்.
  • சகாதேவனை நீக்கும் முன் அவருக்கு அறிவிப்பு அனுப்பியுள்ளார்.
  • இணை ஆணையர் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்.
  • மேல்முறையீடு நிலுவையில் உள்ளதால், துறை ரீதியிலான நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோர சகாதேவனுக்கு எந்த உரிமையும் இல்லை.
  • துறை ரீதியிலான நடவடிக்கையை மறுஆய்வு செய்யுமாறு சகாதேவன் கோரலாம்.
  • ஆனாலும் அதில்கூட விதிகளுக்குட்பட்டே இணை ஆணையர் செயல்பட முடியும்.
  • ஒரு குற்ற வழக்கிலிருந்து அரசு ஊழியர் விடுவிக்கப்பட்டார் என்ற காரணத்திற்காக, துறை ரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்ளகூடாது என்று அர்த்தமில்லை.
  • துறை ரீதியிலான நடவடிக்கைக்கும், குற்றவியல் நடவடிக்கைக்கும் வேறுபாடுகள் உள்ளது.
  • தண்டணை பெற்ற அரசு ஊழியரை பணியாற்ற அனுமதிக்கக் கூடாது.
  • எந்தவொரு அரசு ஊழியரும் தண்டனை பெற்றால் அவரை தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்ககூடாது.
  • ஒருவேளை மேல்முறையீட்டில் தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை ஆனால் சம்மந்தப்பட்ட அரசு ஊழியர் துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை மறுஆய்வு செய்யுமாறு கோரலாம்.
இந்த வழக்கில் சகாதேவன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சட்டத்திற்குட்பட்டே உள்ளது. அதனால் இந்த மனுவை ஏற்க முடியாது என்று கூறி ரிட் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
W. P. NO - 33189/2018, Date : 02.04.2019
P. சகாதேவன் Vs இணை ஆணையர், போக்குவரத்து காவல்துறை, தெற்கு, சென்னை
2019-1-TLNJ-CRL-363

https://www.mhc.tn.gov.in/judis/index.php/casestatus/viewpdf/455787

நன்றி: எனது முகநூல் நண்பரும், வழக்கறிஞருமான திரு ‎Dhanesh Balamurugan



No comments:

Post a Comment