disalbe Right click

Wednesday, February 19, 2020

அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால்

அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
அரசாணை 540 என்ன சொல்கிறது?
முதலில் தாசில்தாருக்கு புகார்மனு
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தின் புல எண் உள்ளிட்ட விவரங்களுடன் அரசாணை எண்-540 மூலம் அகற்றவேண்டும் எனக் குறிப்பிட்டு... அந்தப் பகுதியின் தாசிதார் அவர்களுக்கு பதிவுத் தபாலில் மனு ஒன்றை அனுப்ப வேண்டும்.
உடனே, தாசில்தார் ஆக்கிரமிப்புப் பகுதியைப் பார்வையிட்டு அதனை உறுதி செய்த பிறகு, ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளுங்கள் என்று ஆக்கிரமிப்பாளரின் முகவரிக்கு நோட்டீஸ் மூலம் உத்தரவிட வேண்டும்.
ஆக்கிரமிப்பாளர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்றால்...
வட்டாட்சியர், நில அளவையாளர் உள்ளிட்ட துறை அலுவலர்கள் நேரடியாக சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, அகற்றியது தொடர்பான நடவடிக்கை அறிக்கை நகலை மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகளைப் பார்வையிடுதல், அகற்றுதல், மனுதாரருக்கு அறிக்கை அளித்தல் ஆகிய அனைத்து செயல்களையும் 60 நாட்களுக்குள் அதிகாரிகள் முடிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..
முதல் மேல்முறையீடு
ஆக்கிரமிப்பை தாசில்தார் அகற்றவில்லை என்றாலோ, அகற்றியதில் புகார்தாரருக்கு திருப்தி இல்லை என்றாலோ, வருவாய் கோட்டாட்சியருக்கு முதல் மேல்முறையீடு செய்யலாம். ஏற்கெனவே தாசில்தாரிடம் அளித்த மனுவின் நகலையும் இணைத்து மேல்முறையீடு செய்ய வேண்டும்.
முதல் மேல்முறையீடு மனுவை பெற்ற ஒரு மாதத்துக்குள் வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்து, மனுதாரருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் அது சம்பந்தமான தகவலைத் தெரிவிக்க வேண்டும்.
இரண்டாம் மேல்முறையீடு
மனுதாரருக்கு வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் நடவடிக்கையும் திருப்தி இல்லையென்றால், அந்த மாவட்டத்தின் வருவாய் அலுவலருக்கு இரண்டாம் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
மூன்றாம் மேல்முறையீடு
மாவட்டத்தின் வருவாய் அலுவலரது நடவடிக்கையிலும் மனுதாரருக்கு திருப்தி இல்லையென்றால், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், நில அளவைத் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகள் தலைமையில் செயல்படும் வழிகாட்டும் நெறிப்படுத்தும் குழுவிடம் மூன்றாம் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
கடைசியில் நீதிமன்றம்தான்!
அவர்களின் நடவடிக்கையிலும் மனுதாரருக்கு திருப்தி இல்லையென்றால், அனைத்து மனுக்களின் நகல்களையும் இணைத்து உயர்நீதிமன்றத்தில் பொது நல ரிட் மனு தாக்கல் செய்யலாம்.
எவ்வளவு பழமையான ஆக்கிரமிப்புகள் இருந்தாலும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு, உயர் நீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிடும்.
முகநூலில் கடந்த 01.11.2019ல் நான் பதிவிட்டது.
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 19.02.2020

No comments:

Post a Comment