disalbe Right click

Saturday, March 14, 2020

ப்ளாட் போட்டு நிலத்தை விற்க வேண்டுமா?

ப்ளாட் போட்டு நிலத்தை விற்க வேண்டுமா?
உங்களுக்கென்று சொந்தமாக ஊரில் நிலம் இருக்கலாம். அதனை மொத்தமாக ஒரே நபருக்கு விற்பதற்கு பதிலாக பிளாட் போட்டு பல பேர்களுக்கு விற்றால் அதிக லாபம் சம்பாதிக்கலாமே என்று நீங்கள் நிலைக்கலாம். முன்பு மாதிரி நீங்கள் நினைத்தவுடன் உங்களது நிலத்தை பிளாட் போட முடியாது. அப்படியே உங்களது விருப்பப்படி பிளாட்டுகளை போட்டாலும் அதனை விற்கமுடியாது. அதற்கான அரசாங்க அப்ரூவல் இருந்தால்தான் அவற்றை விற்க முடியும். பத்திர அலுவலகத்திலும் அதனை பதிவு செய்ய முடியும். அதனை வாங்குபவர்கள் அந்த இடத்தில்  வீடோ, தொழிற்சாலையோ கட்ட முடியும். 
வீட்டுமனை திட்டங்களுக்கு அங்கீகாரம்
தமிழ்நாட்டில் நகர் ஊரமைப்பு துறைக்கு  (Directorate of Town and Country Planning)  உட்பட்ட பகுதிகளில் வீட்டு மனைப்பிரிவுகளுக்கு (layout) அங்கீகாரம் அளிப்பதற்கு பின்பற்றப்படுகின்ற வழிமுறைகள் என்ன?
  1. எந்த இடத்தில் வீட்டு மனைத்திட்டம் அமைய உள்ளதோ அந்த இடத்திற்கு   சம்பந்தப்பட்ட நிலப்பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள், நில சீர்திருத்த சட்டம் மற்றும் நகர்ப்புற நில உச்ச வரம்பு சட்டம் ஆகியவையின் கீழ் கையகப்படுத்தும் நடவடிக்கைகளோ, மழை வெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கான நிலைகளோ இல்லை என்ற சான்றிதழை, அந்தப்பகுதிக்கு உட்பட்ட வட்டாட்சியர்  அலுவலகத்தில்   இருந்து,  Land developer பெற வேண்டும்.
  2. ஆனால், சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே இந்த சான்று அவர்களால் அளிக்கப்படும்.
  3. அதன் பிறகு Land developer ஊராட்சி, பேரூராட்சி போன்றவை மூலம் நகர் ஊரமைப்பு துறைக்கு முதலில் விண்ணப்பிக்க வேண்டும்
  4. அதற்கு அந்த நிலத்தின் கிரையப் பத்திரம், மூலப்பத்திரம், பட்டா, சிட்டா, அடங்கல், வில்லங்கச் சான்று, வட்டாட்சியர் அலுவலக சான்றிதழ், உள்ளிட்ட அவசியமான ஆவணங்களுடன் உள்ளாட்சி அமைப்பின் வினா விடைப்படிவம் ஒன்றையும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்
  5. அந்த விண்ணப்பமானது உள்ளாட்சி அமைப்பின் மூலம் நகர் ஊரமைப்புத்துறை மண்டல அலுவலகம் அல்லது உள்ளூர் திட்ட குழும அலுவலகத்துக்கு அனுப்பப்படும்
  6. பின்னர், மனை அமைந்துள்ள இடம் அந்த அலுவலக அதிகாரி மூலம் நேரில் ஆய்வு செய்யப்படும்.
  7. மனைப்பிரிவு செய்யப்படுகின்ற இடத்துக்கு அருகில் நீர்நிலைகள், இடுகாடு, ரயில் தண்டவாளம் போன்றவை இருக்கக்கூடாது என்ற நிபந்தனைகளின்படி மனுவுடன் இணைத்துள்ள அனைத்து ஆவணங்களும் பரிசீலனை செய்யப்படும். ஆவணங்களை சரிபார்த்த பின்னர், வீட்டு மனை திட்டத்திற்கான ஒரு வரைபடத்தை அளித்து, Technical approval மற்றும் Authorization Number அவர்களால் தரப்படும்.

அந்த வரைபடத்தில் என்னென்ன அமைந்திருக்கும்
  1. விதிகளுக்கு உட்பட்டு நூலகம்பூங்கா போன்ற பொது இட உபயோகம்சாலைகள், கடைகள், மொத்த மனைகளின் எண்ணிக்கை, அவற்றின் ஒவ்வொன்றின் அளவுகள் அமைந்திருக்கும். நூலகம், பூங்கா போன்ற பொது இடங்கள், சாலைகள், கடைகள் ஆகியவற்றின் அளவுகள் சதுர அடிகளில் அதில் குறிக்கப்பட்டு இருக்கும்.
உங்களது நிலமானது ஐந்து ஏக்கருக்கு குறைவாக இருந்தால்....

மனைப்பிரிவு அமைய உள்ள இடமானது ஐந்து ஏக்கருக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் மண்டல அலுவலகம் அல்லது உள்ளூர் திட்ட குழுமத்தில் Technical approval வழங்கப்பட்டுஅவர்களால் உள்ளாட்சி அமைப்பிற்கு இறுதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.


உங்களது நிலமானது ஐந்து ஏக்கருக்கு அதிகமாக இருந்தால்....
மனைப்பிரிவு அமைய உள்ள இடமானது ஐந்து ஏக்கருக்கும் அதிகமாக இருப்பின், அதை நேரில் ஆய்வு செய்து மண்டல அலுவலகம் அல்லது உள்ளூர் திட்டக் குழுமம் மூலமாக, சென்னை நகர் ஊரமைப்பு இயக்குனர் அலுவலகத்துக்கு அந்த அறிக்கை அனுப்பப்படும்.
அங்கு, Technical approval வழங்கப்பட்டு, அது உள்ளாட்சி அமைப்பின் இறுதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
Technical approval அளிக்கப்பட்ட வீட்டு மனைத்திட்டம், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் இறுதி ஒப்புதலுக்கு, சில நிபந்தனைகளுடன் அனுப்பப்படும்.
உள்ளாட்சி அமைப்பானது அந்த நிபந்தனைகளை மனுதாரருக்கு தெரிவிக்கும்,
அவை நிறைவேற்றப்பட்ட நிலையில் இறுதி ஒப்புதல் வழங்கப்படும்.
மனைத் திட்ட வரைபடத்தில் குறிப்பிட்டுள்ள சாலைகள் மற்றும் நூலகம்பூங்கா போன்ற  பகுதிகளை ஒரு தானப்பத்திரத்தின் (Gift Deed) மூலமாக மனுதாரர் உள்ளாட்சி அமைப்பிடம் முதலிலேயே ஒப்படைக்க வேண்டும்.
Technical approval அளிக்கப்பட்ட இடம், அன்றைய நாள் வரை அரசாங்கத்தால் நில ஆர்ஜித நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை என்று உள்ளாட்சி அமைப்பு உறுதி செய்து கொள்ளும்.
தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்ட பின் உள்ளாட்சி அமைப்பு ஒரு தீர்மானம் நிறைவேற்றி வீட்டுமனை திட்டத்திற்கு இறுதி ஒப்புதல் அளிக்கும். அதன் பின்னரே, வீட்டு மனைத்திட்டத்தில் உள்ள பிளாட்டுகளை அதன் உரிமையாளர் விற்பனை செய்ய இயலும்
************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 14.03.2020

No comments:

Post a Comment