disalbe Right click

Showing posts with label உணவு. Show all posts
Showing posts with label உணவு. Show all posts

Thursday, May 18, 2017

தண்ணீர் ஏன், எவ்வளவு குடிக்க வேண்டும்?

தண்ணீர் ஏன், எவ்வளவு குடிக்க வேண்டும்?

மருத்துவம் விவரிக்கும் உண்மைகள்!
'நீரின்றி அமையாது உலகு' என்பது வள்ளுவன் கூற்று. நம் உடலுக்கும் தண்ணீரே அடிப்படை. ஆரோக்கியத்துக்கு தண்ணீர் எவ்வளவு அடிப்படையானது, நம் உடல் இயக்கங்களில் அதன் பங்கு எவ்வளவு அத்தியாவசியமானது என்பது பற்றி அறிந்தால், ஆச்சர்யம் மேலோங்கும்!
சரி... ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்? அந்தத் தண்ணீர் வியர்வையும் சிறுநீருமாய் எப்படி வெளியேற்றப்படுகிறது? அதற்கானத் தேவையும் முக்கியத்துவமும் என்ன? சிந்தித்துப் பார்க்கிறோமா? தவிக்கும் நேரம் மட்டும் தண்ணீர் அருந்திவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கத் துவங்குகிறோம்.
தண்ணீரை அப்படி சர்வ அலட்சியமாக நிராகரிக்க முடியாது. ஏனென்றால், உடம்பின் எடையில் 50 முதல் 75 சதவிகிதம் நீர் நிரம்பியிருக்கிறது. நம்பமுடிகிறதா? அறிவியல் பூர்வமாக அதுதான் உண்மை. அதுபற்றிய தகவல்களை விரிவாகத் தருகிறார், தஞ்சாவூரைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர் பி. கிருஷ்ணமூர்த்தி.
ஆண்களுக்கு 60 சதவிகிதம்... பெண்களுக்கு 55 சதவிகிதம்!
''திசுக்களின் செயல்பாடுகளுக்கு உந்து சக்தியாக இருப்பது தண்ணீர் மற்றும் எலெக்ட்ரோலைட்ஸ் (Electrolytes). இவை உற்பத்தி ஆவதும் உட்கிரகிப்பதும் முழுவதுமாக குடல்பகுதியில்தான். செல்களின் வெளிப்பகுதியில் உள்ள இறுக்கமான இணைப்புகளுக்கு இடையே சவ்வூடு பரவல் (Osmosis) மூலம் நின்று நிதானிக்கிறது தண்ணீர். அதேசமயம், உடலின் மொத்த நீரின் அளவில் 3-ல் 2 பங்கு செல்களுக்கு உள்ளேயே காணப்படுகிறது. அதனால்தான், செல்கள் மற்றும் உடல் உறுப்புகளுக்கு தண்ணீர் பிரதானமாக விளங்குகிறது. கொழுப்பு திசுக்களாக இருக்கிறபட்சத்தில், அதற்குள் நீரின் அளவு குறையும்.
ஆண்களுக்கு உடல் எடையில் 60 சதவிகிதம் தண்ணீர் இருந்தால் பெண்களுக்கு 52 சதவிகிதம் முதல் 55 சதவிகிதம் மட்டுமே இருக்கும். உடல் பருமன் மற்றும் முதுமையடைந்த பெண்களுக்கும் ஆண்களுக்கும் நீரின் அளவு கணிசமாகக் குறையலாம் என்கிறது மருத்துவ ஆய்வு.
சராசரியாக 68 கிலோ எடை இருப்பவரின் உடலில் 41 லிட்டர் தண்ணீர் இருக்கக் கூடும். அதில் 23 முதல் 27 லிட்டர் திசுக்களின் உள்ளேயும், 7 லிட்டர் திசுக்களின் வெளியேயும் அதைச் சுற்றியும் இருக்கிறது. 4 லிட்டர் தண்ணீர் ரத்தப் பிளாஸ்மாவில் இருப்பதாக மருத்துவக் கருத்தரங்க ஆய்வுகள் முன்வைக்கின்றன.
ஒரு குழந்தை பிறக்கும் தருணத்தில் ஏறக்குறைய 85 சதவிகிதம் தண்ணீர் அதன் உடலில் மிகுந்திருக்கும். குழந்தைப் பருவம் எய்துகிறபோது 75 சதவிகிதம் ஆக அது குறையும். ''உடலில் தண்ணீர்ச் சத்து குறைந்தால் மயக்கம், நினைவிழத்தல், ஏன் மரணம் கூட உண்டாகும்'' என தஞ்சையைச் சேர்ந்த சிறுநீரகச் சிறப்பு மருத்துவர் மோகன்தாஸ், தன் 'உணவும் நலவாழ்வும்' எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர்!
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீரை எவ்வளவு குடிக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. ஒரு நாளில் குறைந்தபட்சம் இரண்டரை லிட்டர் தண்ணீர் நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. கோடை காலம், கடுமையான உடற்பயிற்சி, வாந்தி, பேதி போன்றவற்றால் உடலில் உண்டாகும் நீர்ச்சத்து இழப்பினால் நீரின் தேவை இன்னும் அதிகரிக்கலாம்.
பொதுவாக நாம் தாகத்தின்போது மட்டுமே தண்ணீர் அருந்துகிறோம். அதுவே போதுமானது எனக் கூறமுடியாது. பிற நேரங்களில் உட்கொள்ளக்கூடிய திரவ ஆகாரங்களினாலும் உணவுப்பொருட்களின் வளர்ச்சிதை மாற்றங்களினாலும் உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்கப்பெறுகிறோம். சொல்லப்போனால், செல்களால் ஆன நம் உடலில், செல்களுக்கு வெளியில், கொள்கலன்போல் தண்ணீர் பாதுகாக்கப்படுகிறது. அதுதான் அதிகப்படியான நீர் இழப்பு (Dehydration) ஏற்படும்போது ஈடு செய்து நம்மைக் காப்பாற்றுகிறது. எப்போதுமே உடலில் உள்ள நீருக்கும், வெளியேற்றப்படும் நீருக்கும் இடையே இருக்கும் சமநிலையில்தான் பற்றாக்குறையில் இருந்து தற்காத்துக்கொள்ள இயலும். அதில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம்.
குறிப்பாகச் சொல்ல வேண்டிய தகவல் என்னவெனில், தோராயமாக 1500 மி.லி தண்ணீர் ஒருநாளைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்றால், அதுமட்டுமே உடலின் இயக்கச் சீர்பாடுகளை கட்டமைத்து சிறுநீராக வெளியேறுகிறது எனக் கணக்கில்கொள்ள முடியாது. இயல்பிலேயே உடலில் சுரக்கப்படும் நீர், தன் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கும்.
உதாரணமாக, உமிழ்நீரில் 1,500 மி.லி, இரைப்பையில் 2000 மி.லி, பித்தநீரில் 500 மி.லி, கணையத்தில் 1,500 மி.லி, சிறுகுடலில் 1,500 மி.லி எனத் தண்ணீர் உடலின் அத்தனை பாகங்களிலும் சுற்றிச் சுழல்கிறது. குடல் பகுதியில் 1,400 மி.லி, (Colonic reabsorption), போர்டல் வெயின் பகுதியில் (Portal vein reabsorption) 6,700 மி.லி தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. நம் உணவு மண்டலத்தில் 8,200 மி.லி நீரானது விரவிக்கிடக்கிறது என்றால், அதில் 8,100 மி.லி செரிமானப் பகுதியில் உட்கிரகிக்கப்படுகிறது. எஞ்சிய 100 மி.லி தண்ணீர்தான் மலத்துடன் வெளியேற்றப்படுகிறது என்பதை ‘டேவிட்சன்’ எனும் ஆங்கில மருத்துவ நூல் வாயிலாக அறியலாம்.
சுரப்பு நீர், செரிமானம், கடத்துதல், கரைத்தல், சுத்திகரிப்பு!
தண்ணீர் டூ சிறுநீர் என்பது வெறும் உள்ளே வெளியே ஆட்டம் அல்ல. தண்ணீரின் பயன்பாடு அளப்பரியது. உடலுக்குத் தேவையான சுரப்பு நீர், உணவுச் செரிமானம், அதற்குப் பிறகான சத்துப் பொருட்களை கடத்துதல், கரைத்தல் என முக்கிய பங்கு வகிக்கிறது. மூட்டுகளுக்கு இடையே ஏற்படும் உராய்வைத் தடுக்கும் திரவமாகவும் செயல்படுகிறது. ஒவ்வாத, தேவையற்ற நச்சுப் பொருட்களை தண்ணீர் அப்புறப்படுத்திவிடுகிறது. வயிற்றுப் புண் மற்றும் சிறுநீரகக் கல் அடைப்பு வராமல் காப்பாற்றுகிறது.
பொதுவாக இழப்பு என்பதைவிட, கழிவாக வெளியேறும் நீரின் அளவை அறிய வேண்டும். சிறுநீரின் வழியாக 1500 மி.லி மலத்துடன் 100 மி.லி வியர்வையில் 200 மி.லி நீர் வெளியேறுகிறது. சுவாசம் என்றால் ஆக்சிஜனை உள்ளிழுத்து கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுவது மட்டுமல்ல... காற்றுடன் 700 மிலி நீரும் வெளியேற்றப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தின் அறிவியல் வளர்ச்சியில், மனிதனின் ஆக்கப்பூர்வச் சிந்தனையில், உடல் உழைப்பில் எதை வேண்டுமானாலும் செயற்கையாக உருவாக்கிவிட முடியும். ஆனால், இயற்கையின் கொடையான தண்ணீரை ஒருபோதும் செயற்கையாக உருவாக்க இயலாது. மண், மரம், விலங்குகள் உட்பட மனிதனும் நீரை நம்பி வாழவேண்டும் என்பது இயற்கையின் கட்டாயம். எந்த மென்பொருட்களாலும் இதை மாற்றியமைக்க முடியாது. அதனால்தான் 'தண்ணீரைச் சேமியுங்கள்' எனச் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் அரசும் கவனப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. ஆனால், நீர் அரசியல்தான் நம் சாபக்கேடு. இல்லாமையும் கலப்படமும் இதில்தான் வியாபார நோக்கில் கையாளப்படுகின்றன. இயற்கைக்குப் புறம்பாக போகிறபோதெல்லாம் உயிர் வாழ ஏதோ ஒரு வகையில் தண்ணீர் நம்மை கைகோத்துக் கொண்டே இருக்கிறது.
ஆகவே, யார் தடுத்தாலும் விலைமதிப்பற்ற நீரின் இயக்கம், நம் உடலுக்குள் தன்னியல்பாக நடந்துகொண்டே இருக்கும். இதில் ஏதேனும் குளறுபடி ஏற்பட்டால் உடற்கூறுகள் பாதிப்படையும் அல்லது உடல் பாதிப்பால் நீர் இயக்கத்தில் சிக்கல் ஏற்படலாம். உடல் எடை, வயது, பருவகால மாற்றங்கள், உடற்பயிற்சி, மருத்துவக் காரணங்கள் இவற்றை மனத்தில் கொண்டு, காய்ச்சிய நீரை தேவைக்கேற்ப அருந்த வேண்டும்.
அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பதும் வேண்டாம்!
இன்னொரு புறம், தண்ணீர் நல்லது எனக் குடம் குடமாகக் குடிப்பது ஆபத்தில் முடியும். சிறுநீரகம் தன் வேலையில் திணற ஆரம்பிக்கலாம். உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உடனே மூளை நரம்பு மண்டலம் தூண்டப்படும். தாகம் ஏற்பட ஆரம்பிக்கும். தண்ணீர் குடித்தாகும் நிலைக்கு தள்ளப்படுவோம். பெரும்பாலும் தன்னைத் தானே சரி செய்யக் கூடிய வகையிலேயே உடல் அமைப்பு உள்ளது. உடலில் தேவையான அளவு நீர்ச்சத்து இருந்தால் தாகம் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.
உணவு இல்லாமல் 50 நாட்கள் கூட வாழலாம். ஆனால், தண்ணீர் இல்லாமல் ஒருசில நாட்கள் கூட வாழமுடியாது என்கிறார்கள். நீருக்கும் சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சோடியம் அதிகமானால் தாகம் அதிகரிக்கும். சோடியம் குறைந்தால் சிறுநீரகம் அதிகமான சிறுநீரை வெளியேற்றும். அதிகப்படியான நீர் இழப்பு (Dehydration) ஏற்படுகிற காலகட்டத்தில் மூளையில் சுரக்கும் வேஸோபிரஸ்சின் (Vasopressin) என்ற ஹார்மோன் சிறுநீரகத்தில் நீர் வெளியேறுவதைக் குறைத்து விடுகிறது. இருதயம் மற்றும் சிறுநீரகம் அவைகளுக்கான வேலைகளைச் சரிவர செய்ய இயலாத நிலையில், நுரையீரல் மற்றும் திசுக்களில் தண்ணீர் கோத்து நிற்கிறது. இதனால் கை,கால், முகம், வயிற்றுப் பகுதியில் வீக்கம் ஏற்படுவதோடு மூச்சுத் திணறலும் உண்டாகிறது. இந்த நேரங்களில் மருத்துவரை அணுகி முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
எந்த மருத்துவ முறையாக இருந்தாலும், வறட்சியால் வாய் உலர்ந்து, கண்கள் உள்ளே போய் பலமிழக்கும் நிலை வந்தால் உப்பு, சர்க்கரை கலந்த நீர் (ORS), நீர் மோர், இளநீர், பழச்சாறு போன்றவை அருந்தி ஈடு செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இயற்கை மருத்துவத்தில் நீர்சிகிச்சை என்று கூட உண்டு. இவையெல்லாம் கடந்து, நீர்ச்சத்து குறைவினால் ஏற்படும் உயிர்ச்சேதத்தைத் தடுக்க, மருத்துவமனைகளில் உடனடியாக சிரைத்திரவம் (Intra venious fluids) செலுத்திக்கொள்வது சாலச் சிறந்தது.
பெண்கள் தண்ணீர் தவிர்க்கக் கூடாது!
உடல் எடையில் 5 சதவிகிதம் நீர்ச்சத்து குறைந்தால் நம் வேலைத்திறன் 30 சதவிகிதம் குறைவதாகச் சொல்கிறார்கள். அப்படியென்றால், நாம் உயிர்வாழத் தண்ணீரின் பங்கு எத்தகையது என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும். முக்கியமாகப் பெண்கள் இதை மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டும். வெளிப் பிரயாணங்களில் சிறுநீர் கழிக்க வேண்டுமே என்கிற அச்சத்தால் தண்ணீர் குடிப்பதை பெண்கள் முற்றிலுமாகத் தவிர்க்கின்றனர். இது எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மேற்கூறிய காரணங்கள் தெளிவுபடுத்தும்.
போதிய கழிப்பறை வசதி இன்மை மற்றும் சமூக அச்சுறுத்தல்களுக்குப் பயந்து மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். மணிக்கணக்கில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் வறட்சி ஏற்பட்டு நீர்ச்சத்து குறைகிறது. இதனால் அடர் மஞ்சள் நிறத்துடன்கூடிய சிறுநீரோடு நீர்க்குத்தலும் ஏற்படும். இயற்கை உபாதைகளை அடக்குவதால், ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மாதவிலக்கு நேரங்களில் உதிரத்தோடு தண்ணீரும் அதிகம் வெளியேறுமோ என்று பெண்கள் பயப்படத் தேவையில்லை. சாதாரணமாக மாதவிடாயில் 40 மி.லி முதல் 50 மி.லி ரத்தம் மட்டுமே வெளியேறும். அதேநேரம், மட்டுப்படாத உதிரப்போக்கு மற்றும் மாதவிலக்கு நிற்கும் காலங்களில் (Menopause) ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்களால் உண்டாகும் கட்டுக்கடங்காத வியர்வை இவற்றால் நிச்சயம் நீர்ச்சத்து இழப்பு அதிகரிக்கும். பதட்டமின்றி விழிப்பு உணர்வோடு பெண்கள் தங்கள் மருத்துவ நெருக்கடிகளைச் சமாளிக்க வேண்டும்.
வயதான காலங்களில் செல்களின் செயல்களில் தேக்கம் ஏற்படலாம். உடலுக்குள் நீர் தேவைப்படும். ஆனால், தாகம் எடுக்காமல் இருக்கும். வாழ்க்கையின் மீதான விரக்தி, உளச் சோர்வு, உடல் நலம் குறித்த ஆர்வமின்மை போன்ற மனக் காரணங்களால் தண்ணீர் அருந்துவதில் முதியோர் கவனக்குறைவாக இருக்கின்றனர். உடலுக்குத் தேவையான தண்ணீரைப் பருகப் பழக வேண்டும்.
தரமற்ற பாட்டில்கள், பாக்கெட்டுகள், கேன்களில் விற்கப்படும் நீர், நச்சு ஊட்டப்பட்ட குளிர்பானங்கள் இவற்றை அறவே தவிர்ப்பது நல்லது. இதனால், வயிற்றுப்போக்கு, காலரா, டைஃபாய்டு போன்ற அசுத்த நீரால் வரக்கூடிய தொற்று நோய் வராமல் தற்காத்துக்கொள்ளலாம். காய்ச்சி வடிகட்டிய சுத்தமான நீரும் மண்பானை நீருமே ஏற்புடையது.
வந்தபின் காப்பது அனுபவம். வருமுன் காப்பது புத்திசாலித்தனம். நிறைவாகத் தண்ணீர் அருந்தி, நோய்கள் தவிர்த்து, நலமோடு வாழ முயற்சிக்கலாமே!
- அகிலா கிருஷ்ணமூர்த்தி
நன்றி : விகடன் செய்திகள் - 16.05.2017

Monday, March 6, 2017

பரோட்டா பிரியர்களே… சிறுநீரகம், கல்லீரல் கவனம்!

பரோட்டா பிரியர்களே… சிறுநீரகம், கல்லீரல் கவனம்!

கொத்து, வீச்சு, சில்லி… பரோட்டா பிரியர்களே… 
சிறுநீரகம், கல்லீரல் கவனம்!

பரோட்டா’, `புரோட்டா’, வட இந்தியாவில் `பராத்தா’, மொரீஷியஸில் `ஃபராட்டா’, மியான்மரில் `பலாட்டா’… எப்படி அழைக்கப்பட்டாலும், இது இந்தியர்களை வசீகரிக்கும் ஓர் உணவு. முக்கியமாக தெற்காசியா முழுக்கப் பிரபலமான ஒன்று. இதன் அலாதியான சுவை காரணமாகவே அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர், மலேஷியா, மொரீஷியஸ், மாலத்தீவுகள், பங்களாதேஷ்… எனப் பல நாடுகளில் பிரபலமாகியிருக்கிறது. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மிக எளிமையாகத் தயாரிக்கப்படுகிற, அதே நேரத்தில் பிரபலமான உணவு. பரோட்டா குறித்த சர்ச்சை அவ்வப்போது எழுவதும், ஆறிப்போவதும் இங்கே வழக்கம். 
பரோட்டா அப்படி என்னதான் நம் உடலுக்குத் தீங்கு விளைத்துவிடும்…

தெரிந்துகொள்வோமா?

`இலங்கையில் இருந்து வந்தது’ என்று சிலர் அடித்துச் சொன்னாலுமேகூட, பரோட்டா பிறந்த வீடு இந்தியா என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. `பராத்தா’ என்கிற வார்த்தை சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. வேத காலத்தில், `புரோதாஷா’ என்கிற உணவை, யாகம் செய்யும்போது அக்னி பகவானுக்குப் படைப்பார்களாம். அதில் பருப்பையும் நறுக்கிய காய்களையும் ஸ்டஃப் செய்திருப்பார்களாம். அந்த `பு-ரோ-தா-ஷம்’தான் `பராத்தா’ ஆனது என்கிறார்கள். ஆரம்பத்தில் பரோட்டா செய்யப் பயன்பட்டது நெய்தான். வெகு நாட்களுக்குப் பிறகுதான் எண்ணெயைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
வட இந்திய பராத்தா முதன்முதலில் பாகிஸ்தானின் பெஷாவரில்தான் உருவானது என்கிறார்கள். அங்கிருந்து மெள்ள மெள்ள வட இந்தியா முழுமைக்கும் பரவியதாம். ஆரம்பத்தில் குட்டி டிபனாக காலை உணவுக்கு மட்டும் இதைச் சாப்பிட்டிருக்கிறார்கள் பஞ்சாபிகள்.

தென் தமிழகத்தில் பரோட்டாவுக்கு புகழ்பெற்ற சைடுடிஷ் சால்னாவும் குருமாவும். கூடவே, சிக்கன் குருமா, மட்டன் குருமா என்று இருந்தால் கேட்கவே வேண்டாம். இவற்றைத் துணைக்கு வைத்துக்கொண்டு நடிகர் சூரி மாதிரி, `நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்… நீ போர்டை அழி’ என்று சவால்விடச் செய்யும் சக்தி பரோட்டாவுக்கு உண்டு. 

வட இந்தியாவில் உருளைக்கிழங்கையும் மசாலாவையும் உள்ளே வைத்து பராத்தாவாகச் செய்கிறார்கள். ஆலு பராத்தா, சென்னா பராத்தா… என விதவிதமான வகைகள் உள்ளன. இன்னும் பனீர், காய்கறிகள், காலிஃப்ளவர், முள்ளங்கி இவற்றால் ஆன பரோட்டாக்களும் உண்டு. தொட்டுக்கொள்ள ரெய்த்தா, தால் என அமர்க்களப்படுகிறது. சில வட இந்தியர்களுக்கு பராத்தாவுக்கு வெறும் ஊறுகாயும் யோகர்ட்டுமே போதுமானது.

வீச்சு பரோட்டா, கைமா பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, சிக்கன் பரோட்டா, மட்டன் பரோட்டா, சிலோன் பரோட்டா, கேரளா பரோட்டா… எனப் பல வகைகளில் பட்டையைக் கிளப்பும் இதன் சுவைக்கு ஈடில்லை. அதனால்தான் பரோட்டா ரசிகர்கள் உலகமெங்கும் வியாபித்திருக்கிறார்கள். இன்றைக்கு, பெரும்பாலான தமிழர்களின் இரவு உணவாகிவிட்டது பரோட்டா. 

ஆரம்பத்தில் இது கோதுமையில் தயாரிக்கப்பட்ட வரை நம் ஆரோக்கியத்துக்குப் பிரச்னை எதுவும் இல்லை. மைதாவுக்கு மாறிய பிறகுதான் சிக்கல். இது குறித்து விரிவாகப் பேசுகிறார் அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்…

“இன்றைக்கு பரோட்டாக்கள் தயாரிக்கப்படுவது பெரும்பாலும் மைதாவில்தான். கோதுமைக் கழிவுகள்தான் மைதா உற்பத்தியின் மூலப்பொருட்கள். தெற்கு ஆசியாவில் உள்ள சில நாடுகளில் மரவள்ளிக்கிழங்கில் இருந்தும் உற்பத்தி செய்கிறார்கள். 

மைதா வந்த புதிதில் பசை காய்ச்சுவதற்குத்தான் பயன்பட்டது. அமெரிக்காவில் இதற்குப் பெயரே `பேஸ்ட்ரி பவுடர்’ (Pastry Powder) என்பதுதான். 

இரண்டாம் உலகப் போர்… அதன் விளைவாக எழுந்த பஞ்சம் காரணமாக மைதாவை சமையலுக்குள் கொண்டு வந்தார்கள். சமையலுக்குப் பயன்படும் விதத்தில் மைதாவை அறிமுகப்படுத்திய பெருமை அமெரிக்காவையே சாரும்.

கோதுமைக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் மைதாவின் நிறம் மஞ்சளாகத்தான் இருக்கும். ஆனால், பல ரசாயனக் கலவைகளால் சுத்தம் செய்யப்பட்ட பிறகு வெள்ளை வெளேர் நிறத்துக்கு வந்துவிடுகிறது. இதற்குப் பயன்படுவது பிளீச்சிங் கெமிக்கல். 

தெளிவாக, புரிகிற மாதிரி சொல்ல வேண்டும் என்றால், பினாயிலைப் பயன்படுத்தித்தான் மைதாவை அந்த வெள்ளை நிறத்துக்குக்கொண்டு வருகிறார்கள். அதாவது, பென்சாயில் பெராக்ஸைடு (Benzoyl Peroxide) என்ற தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம்தான் பயன்படுகிறது. 

இந்த ரசாயனத்தால் சுத்திகரிக்கப்படும் மைதாவை சில ஐரோப்பிய நாடுகளும், சீனாவும், இங்கிலாந்தும் தடை செய்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

மைதாவையும், அதிலிருந்து தயாரிக்கப்படும் நாண், ஃபுல்கா போன்றவற்றையும் பலரும் விரும்புவதற்குக் காரணம், அதன் மென்மைத்தன்மை. கோதுமை மாவு கொஞ்சம் கடினத்தன்மையோடு இருக்கும். கோதுமைக் கழிவில் இருந்து தயாரிக்கப்படும் மைதா எப்படி மென்மையாக இருக்கிறது?

 இதற்கும் காரணம் ரசாயனம்தான். அதன் பெயர் `அல்லோக்ஸான்’ (Alloxan). இதுதான் மைதாவின் மென்மைத் தன்மைக்கு உறுதுணையாக இருக்கிறது. 

இது ஒரு நச்சுப்பொருள். நம் கல்லீரலையும், சிறுநீரகங்களையும் மிக மோசமாகப் பாதிக்கக்கூடியது. அல்லோக்ஸான் ரசாயனம் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இடம் பரிசோதனைக் கூடங்கள். 

ஒரு நோய்க்கு பொருத்தமான மருந்து கண்டுபிடிக்க பரிசோதனை நடக்கும் அல்லவா… அந்த இடம். சர்க்கரைநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க, முதலில் எலிகளுக்கு சர்க்கரைநோயை வரவழைப்பார்கள். அதற்கு அல்லோக்ஸான் ரசாயனம் கலந்த கலவையை அதன் உடலில் செலுத்துவார்கள். பிறகு, எலிகளுக்கு இன்சுலின் சுரப்பு நின்றுவிடும்.

ஆக, அல்லோக்ஸான், சர்க்கரைநோயை வரவழைக்கும் ரசாயனம். மைதாவில் இருக்கும் அல்லோக்ஸான், பென்சாயில் பெராக்ஸைடோடு இணைந்து நம் உடலுக்குக் கேடு விளைவிக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் உயர்ந்துகொண்டே போகும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கைக்கு துணையாக நின்றதில் மைதாவுக்கும் பெரும் பங்கு உண்டு; பரோட்டாவுக்கும்!” என்கிறார் உமர் பாரூக்.

ஏற்கெனவே ரசாயனம் தெளிக்கப்பட்ட, பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கத்தோடு உற்பத்தி செய்யப்பட்ட தானியங்கள்தான் நம் அன்றாட உணவுக்கானவை என்கிற சூழல். இதில், மைதாவிலும் உடலுக்கு ஒவ்வாத ஏதோ ஓர் எண்ணெயிலும் தயாரிக்கப்பட்ட பரோட்டா நமக்குத் தேவைதானா என யோசிக்கவேண்டிய தருணம் இது.

பரோட்டா பிரியர்கள் ஒன்று செய்யலாம்… வீட்டிலேயே கோதுமையில் தயாரிக்கப்பட்ட பரோட்டாவை சாப்பிடலாம். அது ஆரோக்கியத்துக்கும் நம் எதிர்காலத்துக்கும் நல்லது.

- பாலு சத்யா

நன்றி : விகடன் செய்திகள் -02.03.2017

Monday, February 20, 2017

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள்


நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள்
சுத்தம் சுகம் தரும்! தினமும் இருமுறை குளிக்கிறோம். தேவைப்படும் போது எல்லாம் முகம், கை, கால் கழுவிக்கொள்கிறோம். சுத்தம் என்பது வெளிப்புறத்தில் மட்டுமில்லை. உள்ளேயும் கூடதான். உள் உறுப்புக்களை எப்படிச் சுத்தம்செய்வது? உள்ளுறுப்புகளில் கழிவுகள் சேராதவகையில் இருந்தால், நோயின்றி உறுப்புகள் சீராகச் செயல்படும். மாசு நிறைந்த காற்றும், வாகனப் புகை, சிகரெட் புகையும் நுரையீரலில் அழுக்காகப் படியும். இந்தக் கழிவுகளை சுலபமாக எப்படி அகற்றுவது?
குருசிஃபெரஸ் காய்கறிகள் (Cruciferous vegetables)
முட்டைகோஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்தக் காய்கறிகளின் இதழ்கள், சிலுவை போன்ற அமைப்பில், ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கடுக்காக வளர்வதால் இந்தப் பெயர். உதாரணம் முட்டைகோஸ், புரோகோலி, காலிஃபிளவர். இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்துள்ளன. இது நுரையீரலில் உள்ள நச்சுக்களை அகற்றும். குளுகொசினேட்ஸ் (Glucosinolates) என்ற சத்து, புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜன் என்ற காரணியை அழித்து, செல்களுக்குப் பாதுகாப்பைத் தரும். பூச்சிகொல்லி தெளிக்கப்படாத ஆர்கானிக் காய்கறிகளாக வாங்கிச் சாப்பிடுவது நல்லது.
கார்டீனாய்ட்ஸ் (Cartenoids)
இது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் ஓர் சத்து. இதுவும் ஆன்டிஆக்ஸிடன்ட்தான். நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. இந்த சத்து ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் நிறப் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும். சக்கரவள்ளிக் கிழங்கு, கேரட், பரங்கிக்காய், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்ரிகாட் ஆகியவற்றில் அதிக அளவில் கார்டீனாய்ட் சத்து உள்ளது. பீட்டாகரோட்டினும், வைட்டமின் ஏ-வும் சேர்ந்து இருப்பதால், நுரையீரலின் நண்பன் கேரட்.
ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்

நுரையீரலுக்கு மட்டும் அல்ல. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நன்மைகளைச் செய்யக்கூடிய சத்து இது. நுரையீரல் செயல்பாட்டைச் சீராக்க உதவும். நுரையீரலில் ஏற்படும் வீக்கங்கள் போன்றவற்றைக் குறைப்பதற்கு உதவும். அனைத்துவகை மீன்கள், பாதாம், வால்நட் போன்ற நட்ஸ், பிளாக்ஸ் மற்றும் வெள்ளரி விதைகள் போன்றவற்றில் ஒமேகா 3 சத்து நிறைந்துள்ளது.
பூண்டு


இது ஒரு மூலிகைப் பொக்கிஷம். உடலில் இயற்கையாக எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். கெட்ட கொழுப்பைக் கரைத்து, ஆரோக்கியமாக வைக்கும். உணவில் அவ்வப்போது சிறிது பூண்டைச் சேர்த்துவர, நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். இதில் உள்ள அலிசின் (Allicin) சத்து, ஒரு நேச்சுரல் ஆன்டிபயாடிக். பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகளிலிருந்து நுரையீரலைக் காக்கும்.
இஞ்சி

பூமிக்கு அடியில் விளையும் இந்தக் கிழங்கு, ஒர் பவுர்ஃபுல் ஆன்டிஆக்ஸிடன்ட். நுரையீரலில் படிந்திருக்கும் கழிவுகளை அகற்றும். நுரையீரல் வீக்கத்தைக் குறைக்கும். நுரையீரலில் இருக்கும் மியூகஸ் எனும் திரவத்தைக் குறைக்கும் தன்மை இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் சத்தில் உள்ளது. ஆஸ்துமா நோயாளிகள் சுலபமாக சுவாசிக்க இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சுவாசப் பாதையைச் சீராக்கும். டீ, ஜூஸ் போன்றவற்றில் சிறிதளவு இஞ்சியை சேர்த்துக்கொள்ளலாம்.
வைட்டமின் சி

உடலில் ஆக்சிஜனை முழுமையாகக் கடத்திச் செல்ல வைட்டமின் சி உதவும். நுரையீரலின் சீரான இயக்கத்துக்கு உதவும். ஆஸ்துமா, பிரான்சிடிஸ் போன்ற பிரச்னைகளின் தீவிரத்தைக் குறைக்கும். நெஞ்சக நோய் தொடர்பான பிரச்னைகளின் வீரியம் குறையும். கொய்யா, ஆரஞ்சு, கிவி, எலுமிச்சை, சாத்துகுடி, மாதுளை, பைன் ஆப்பிள் போன்றவை நுரையீரலின் பாடிகாட்ஸ்.
நன்றி : ப்ரீத்தி (விகடன் செய்திகள் - 17.02.2016)

Tuesday, January 17, 2017

காலையில் சாப்பிடாவிட்டால் என்னாகும்?


காலையில்  சாப்பிடாவிட்டால் என்னாகும்?

காலையில் சாப்பிடாவிட்டால்...

மனித இனத்தை வாழ வைப்பது உணவு. மனித இனம் உணவுக்காகவே, அடிப்படையில் உழைக்கிறது. ஆனால் தற்போதைய அவசர உலகில், நம்மில் பலருக்கு உணவு உண்பதுகூட அவசரமாகிவிட்டது அல்லது காலம் தவறிச் சாப்பிடும் பழக்கத்தைப் பெரும்பாலோர் வழக்கமாகவே வைத்திருக்கிறோம். ஒரு வேளை உணவைத் தவிர்ப்பதற்குப் பலரும் கூறும் காரணம், உடல் எடை குறைப்பு.

ஆனால், அப்படிச் செய்வதால் எந்த நோக்கத்துக்காக உணவை ஒதுக்குகிறோமோ, அதுவே எடையை அதிகரித்துவிடும் ஆபத்து இருக்கிறது.

எப்படியென்றால் ஒரு பொழுது உணவை ஒதுக்கி வைத்துவிட்டு, மறுபொழுது சாப்பிடும்போது அதிகப் பசி வேட்கையால் நம்மை அறியாமலேயே சற்று அதிகமாகவே சாப்பிடுகிறோம். இதனால் உடல் எடை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது.

அதேபோல், ஒரு வேளை உணவை ஒதுக்கும் பழக்கத்தை நீண்டகாலம் கடைப்பிடித்துவந்தால், வயிற்றுப்புண் வரும் சாத்தியம் அதிகம். சத்துக் குறைபாடு உண்டாகும் சாத்தியமும் உள்ளது.

பிரச்சினை என்ன?

உடலில் உணவு செரிமானத்துக்கு பெரிதும் துணைபுரியக்கூடிய ‘மெட்டபாலிஸம்' எனப்படும் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்படும். காலை உணவை நாட்படத் தவிர்க்கும்போது, உணவிலிருந்து உடலுக்குத் தேவையான குளுக்கோஸை கிரகிக்க உதவும், கணையத்திலிருந்து சுரக்கக்கூடிய இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படும்.

அறியாமையால் இதைச் சில காலம் தொடர்ந்து செய்தோமானால், நம்முடைய சர்க்கரையைப் பயன்படுத்தக்கூடிய திறன் இன்சுலினுக்கு இல்லாமல் போகும். இதன் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அதிகரித்து, நீரிழிவு நோய் வர 20 சதவீதம் அதிகச் சாத்தியம் உள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன
.
தற்போதைய ஆராய்ச்சிகள் காலை உணவைக் கண்டிப்பாக ஒதுக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகின்றன. பெரும்பாலும் இரவு உணவை உண்ட பிறகு உறங்கி விடுகிறோம். காலை எழுந்து வேலைக்குச் செல்லும் அவசரத்தில் பெரும்பாலோர் காலை உணவைத் தவிர்க்கும் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் இடையே உள்ள இடைவெளிதான், ஒரு நாளில் உடலில் உணவு உண்ணாமலிருப்பதில் மிக அதிகம். அதன் காரணமாகவே ஆங்கிலத்தில் காலை உணவை ‘பிரேக்ஃபாஸ்ட்' என்கிறார்கள். அதாவது ‘பிரேக் தி ஃபாஸ்ட்டிங்' என்பதே இதன் அர்த்தம். விரதத்தை முறிப்பது. எனவே, இந்த நிலையில் உணவைக் கண்டிப்பாகத் தவிர்க்கக் கூடாது.

உணவுத் திணிப்பு

இன்னும் சிலரோ காலை உணவைக் கட்டாயமாகச் சாப்பிட வேண்டுமே என்கிற கடமைக்காக அவசர அவசரமாக வாயில் திணித்துக்கொண்டு, விழுங்க முடியாத குறைக்குத் தண்ணீரையும் சேர்த்துக் குடித்துச் செல்கின்றனர். இப்படிச் செய்வதும் தவறே… நன்றாக மென்று சாப்பிடும்போதுதான், நம் வாயிலிருந்து சுரக்கும் உமிழ்நீரிலிருந்தே செரிமானம் ஆரம்பிக்கத் தொடங்கும். இதனால் உண்ட உணவு நன்கு செரிமானம் அடைந்து உடலில் சேரும்.

நன்கு மென்று, மெதுவாகச் சாப்பிடும்போது பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் நம் மூளைக்கு ‘போதும்' என்னும் கட்டளையைப் பிறப்பிப்பதாகவும், இதனால் அதிகம் சாப்பிடாமல் இருக்க முடியும் எனவும் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது? (Journal of Clinical Endocrinology & Metabolism, July 2, 2013). உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதைக் கவனிக்க வேண்டும்.

மேலும் தொப்பையைக் குறைக்க விரும்புபவர்கள் சரியான நேரத்துக்கு, சரியான உணவை - முக்கியமாகக் காலை உணவைத் தவிர்க்காமல் குறிப்பிட்ட அளவில் மட்டும் சாப்பிட்டுவந்தால் தொப்பை மேலும் அதிகரிக்காது, குறையவும் வாய்ப்பு உண்டு.

எப்படிச் சாப்பிட வேண்டும்?

ஆங்கிலத்தில் உணவு உண்பது பற்றி பிரபலப் பழமொழி ஒன்று உண்டு:

“அரசனைப் போலக் காலை உணவை உண்ணுங்கள்,

இளவரசனைப் போல மதிய உணவை உண்ணுங்கள்,

இரவு பரம ஏழையைப்போல உண்ணுங்கள்”

என்பதே அது.

அதாவது, காலையில் சரியான நேரத்துக்கு நன்கு உணவு உண்டால், அன்றைய வேலைகளைச் சிறப்பாகச் செய்யக்கூடிய ஆற்றல் நம் உடலுக்குக் கிடைக்கும். மதிய உணவைக் காலை உணவின் அளவைவிடவும் குறைவாக உண்டால் ‘உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு' என்னும் பழமொழியில் சிக்காமல், வேலைகளில் கவனம் செலுத்தலாம்.

இரவு மிதமாக உணவு உட்கொண்ட பின் உறங்கச் செல்லும்போது, எந்தவித செரிமானத் தொந்தரவும் இல்லாமல் நல்ல உறக்கம் வரும்.

ஆனால், இந்தப் பழமொழியை அப்படியே தலைகீழாக நாம் கடைப்பிடிக்கிறோம். பெரும்பாலோர் இரவுதான் அதிக அளவு சாப்பிடுகிறார்கள். இது ‘நைட் ஈட்டிங் சிண்ட்ரோம்' எனப்படுகிறது. விழித்திருப்பதைவிட உறக்கத்தில் உடல் அசைவுகள் குறைவாக இருப்பதால், இரவு அதிகம் உண்டால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும். ஆழ்ந்த தூக்கமும் வராது. இதைத் தவிர்க்க உண்ட உடனேயே தூங்கச் செல்லாமல், சிறு நடை போட்ட பிறகு உறங்கலாம்.

சாப்பிடும் முறை: 

சித்த மருத்துவம் காட்டும் வழி

சித்த மருத்துவத்தில் காலை, மதியம், இரவு எந்த வகையான உணவுப் பண்டங்களைச் சாப்பிட வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

காலை:

 பயறு வகைகள், கடலை, உளுந்து, எள்ளு, மொச்சை உணவு வகைகளை, கடுகு, மிளகு, சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றுடன் இணைத்து உட்கொள்ளலாம். மேற்கூறியவை செரிப்பதற்குச் சற்றுக் கடினமாக உள்ள உணவுகள். சுக்கு, மிளகு போன்றவை இந்த உணவுகளில் உள்ள கடினத் தன்மையைக் குறைக்கத் தேவையான செரிமானச் சுரப்புகளைத் தூண்டும் பண்பு கொண்டவை. காலையில் இவற்றைச் சாப்பிட்டுவிட்டு உழைத்தால் உடலில் சத்தும் நிறைந்து தங்கும். உணவு செரிமானம் அடைவதும் எளிதாக இருக்கும்.

மதியம்: 

கிழங்கு வகைகள், பழ வகைகள், கீரைகள், தயிர், மோர் போன்ற உணவு வகைகளை உட்கொள்ளலாம். இந்த உணவு வகைகள் அனைத்தும் மந்தப் பதார்த்தங்கள். இவற்றிலும் பெருங்காயம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்துச் சமைக்கும்போது, மந்தத் தன்மை மட்டுப்படும். மேலும் சூரிய வெப்பத்தாலும், உடல் உழைப்பாலும் செரிமானம் எளிதில் நடைபெறும்.

இரவு: 

அவரைப் பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, வேகவைத்த உணவு வகைகள் போன்ற எளிதில் செரிக்கக்கூடிய உணவை உண்ண வேண்டும்.

தமிழர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே எந்த உணவை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என வகுத்துள்ளதை நவீன அறிவியல் ஆராய்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும் சிறப்பாகப் பொருந்தும். நம் நாட்டு உணவை நேரம் தவறாமல் சாப்பிடப் பழகுவோம், நோய்களில் இருந்து விலகி நிற்போம்.

கட்டுரையாளர், 
டாக்டர் திருவருட்செல்வா சித்த மருத்துவர்
தொடர்புக்கு: siddhathiru@gmail.com

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 14.01.20147