disalbe Right click

Showing posts with label குடும்பம். Show all posts
Showing posts with label குடும்பம். Show all posts

Saturday, October 8, 2016

விவாகரத்தை தவிர்க்க


விவாகரத்தை  தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மணமுறிவு செய்து கொள்வதற்காக யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை. 

ஒன்று சிறப்பாக அமைய நாம் நேரத்தை ஒதுக்கி நிறைய முயற்சி செய்கிறோம். அவ்வாறுதான் திருமண வாழ்கையும். மண வாழ்க்கை பந்தம் தொடர்ந்திருக்க தம்பதிகள் பரஸ்பரம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக நேரத்தை ஒதுக்கி கொள்ள வேண்டும். 

திருமண வாழ்க்கை எல்லாவற்றிலும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கவே செய்கின்றன. வெளியிலிருந்து பார்த்தால், இருவரும் இணை பிரியா தம்பதிகளாக தெரிவர். 

ஆனால் அவர்களுக்குள் எத்தனையோ கசப்புகள் இருக்கலாம். இவற்றை களைந்து உள்ளும் புறமும் இணை பிரியாமல் இருப்பதற்கு அத்தம்பதிகள் சேர்ந்து செயலாற்ற வேண்டும்.

எனவே புதிதாக திருமணம் செய்து கொண்டவர்களே அல்லது இன்றோ நாளையோ மணமுறிவு கோரி நீதிமன்றத்தில் வழக்கிட சிந்தித்து கொண்டிருக்கும் தம்பதிகளே, உங்கள் இல்வாழ்க்கை இனிதாக எந்த இடர்படும் இன்றி தொடர இங்கு சில ஆலோசனைகளை உங்களுக்கு சொல்ல ஆசைபடுகிறோம். 

கடைபிடித்துப் பாருங்கள்.... உங்கள் துணை உங்கள் அன்புக்கு அடிமை ஆவது உறுதி.

1. ஆணும் பெண்ணும் வேறுபட்டவர்கள், மாறுபட்ட உணர்ச்சி கொண்டவர்கள் என்பதை முதலில் ஏற்று கொண்டு அதன்பின் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மண வாழ்க்கை இறுதி வரை சிறக்கும்.

2. சின்ன விஷயமோ பெரிய விஷயமோ, உங்கள் துணையை கலந்தாலோசித்தே எதையும் செய்யுங்கள். அவர் கூறும் கருத்தை கூர்ந்து கேளுங்கள். 

3. இருவரும் தவறுகளை செய்யக் கூடியவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அத்தவறுகளில் இருந்து சரியானதை அறிந்து கொள்ளுங்கள். ஒருமுறை செய்த தவறை அடுத்த முறை செய்யாதீர்கள்.

4. உங்கள் துணையிடம் மன‌ம் விட்டு பேசுங்கள், அவரின் பிரச்சனையை காது கொடுத்துக் கேளுங்கள்.

5. திருமணத்துக்கு முன்போ அல்லது அதன் பின்னரோ, மண வாழ்க்கைக்கு புறம்பான தொடர்புகளை கை விடுங்கள்.

6. எத்தகைய பிரச்சனை இருந்தாலும் அது இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தாலும் கூட, இரவில் தனித்தனி படுக்கைகளில் படுக்காதீர்கள். உறங்குவதற்கு முன் அப்பிரச்சனையை தீர்க்க ஏதேனும் வழிகளை கண்டுபிடிக்க முயலுங்கள். பிரச்சனையை சுமுகமாக முடிக்கவே முயல வேண்டும்.

7. உங்களை பற்றியே பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அது உங்கள் துணையை சலிப்படைய செய்து விடும்.இருவரும் ஒருவரைப் பற்றி மற்றவர் அதிக அக்கறையுடன் இருப்பது நல்லது.

8. சிறு சிறு கேலியும் கிண்டலும் இருக்கலாம். ஆனால் அது வன்மமாக மாறி விடக்கூடாது. அந்தந்த கோப தாபத்தை அப்படியே விட்டுவிட வேண்டும். 

9. ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்களாகவும், அன்பான காதலர்களாகவும் இருங்கள்.

10. உங்கள் துணையின் நண்பர்களை உங்கள் துணையை அருகில் வைத்து கொண்டு குறை கூறாதீர்கள். குறிப்பாக உங்கள் நண்பர்களின் முன்னிலையில் உங்கள் துணையை குறை கூறாதீர்கள்.

11. உங்கள் துணையின் பெற்றோர்களை இழிவு படுத்தாதீர்கள் அல்லது குறை கூறாதீர்கள்.

12. கொடுத்து பெற்று கொள்ளுங்கள்.

13. உடலுறவு கொள்வதை ஏதோ ஒரு வழக்கமாக மேற்கொள்ளாதீர்கள். ஆசையும், காதலும் கொண்டு அணுகுங்கள்.

14. என்ன சொல்லி விடப் போகிறாள்/றார் என்ற எண்ணத்தில் செயல்படுவதை தவிர்க்கவும். அதாவது உரிமை என்ற பெயரில் அத்து மீறாதீர்கள்.

15. உங்கள் துணையர் சோர்ந்திருக்கும் போது அவரை உற்சாகப்படுத்துங்கள், ஊக்கப்படுத்துங்கள், நம்பிக்கை கொடுங்கள். மாறாக அவரது சோர்வை அதிகப்படுத்தி விட வேண்டாம்.

16. உங்கள் தோற்றத்தை பொலிவாக வைத்திருங்கள். ஆரோக்கியம் பேணுங்கள்.  அழகு படுத்திக் கொள்ளுங்கள். 

17. ஒருவருக்கொருவர் நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள்.

18. சமாதானம்தான் தீர்வு என்பதை உணருங்கள்.

19. மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

20. எதையாவது கடனாக பெற விரும்பினால், அது பற்றி உங்கள் துணையிடம் கேளுங்கள்.

21. உங்களது எல்லா தகவல்களையும் உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

22. நீங்கள் உங்கள் துணையரை அதிகம் நேசிப்பதாக அவரிடம் அடிக்கடி கூறிக்கொண்டே இருங்கள்.

23. ஒருவருக்கொருவர் பாராட்ட பழகுங்கள். உள்ளன்போடு வாழ்த்துகளை சொல்லி மகிழுங்கள்.

24. சுகத்திலும், துக்கத்திலும் பங்கு கொள்ளுங்கள். குறிப்பாக துக்கத்தின் போது ஆறுதல் கூறி ஆதரவாக இருங்கள்.

25. பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

26. ஒருவருக்கொருவர் நன்றி மறவாதீர்.. உங்கள் துணையை ஒருபோதும் ஏமாற்ற முயலாதீர்கள்.

28. "என்னை மன்னித்துவிடு" என்று சொல்ல தயங்காதீர்கள்.

29. இயன்ற அளவு உங்கள் துணையை திருப்திபடுத்துங்கள். இயலாத நிலைக்கு வருத்தம் தெரிவியுங்கள்.

30. சகிப்புத்தன்மையை இருவரும் வளர்த்துக் கொள்ளுங்கள். சச்சரவுகளை கலந்து பேசி தீருங்கள். குறிப்பாக கணவன் எச்சமயத்திலும் மனைவியிடம் வன்முறையை கையாளக் கூடாது.

சேர்ந்து வாழ்ந்து இன்பம் காண்பதே இல்வாழ்க்கை என்பதை அடிக்கடி நினைவில் நிறுத்தி சந்தோஷங்களை இரட்டிப்பாக்குங்கள்.

நன்றி : தினமணி நாளிதழ் - 07.10.2016

Thursday, June 2, 2016

சொந்தக் கார் நல்லதா? வாடகைக் கார் நல்லதா?


சொந்தக் கார் நல்லதா? வாடகைக் கார் நல்லதா?
என்ன செய்ய வேண்டும்?
வ்வொரு குடும்பத்தின் எதிர்கால ஆசைப் பட்டியலிலும் கார் நிச்சயம் இருக்கும். கார் தேவையாக இருக்கிறதோ இல்லையோ, பயன்படுத்துகிறோமோ இல்லையோ, வீட்டு வாசலில் ஒரு அழகான காரை நிறுத்தி வைக்கவே எல்லோரும் விருப்பப்படுவது உண்டு.
இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் கார்களில் மாருதி ஆல்டோ, இயான், நானோ போன்ற சிறிய கார்கள்தான் முதலிடங்களில் உள்ளன. இந்தச் சிறிய கார்கள் நடுத்தர மக்களின் கார் வாங்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி வருகின்றன. இந்திய கார் மார்க்கெட்டின் ஆணிவேர் இந்தச் சிறிய கார்கள்தான்.
ஆனால், நகரங்களில் கார்களை நிர்வகிப்பது என்பது பெரும் பிரச்னையாக உருவெடுத்திருப்பதால் இப்போதெல்லாம் மொபைலை எடுத்தோமா, ஆப் மூலம் டாக்ஸியை புக் செய்தோமா, வேண்டிய இடத்துக்கு போய் வந்தோமா என்பதுதான் ட்ரெண்ட்-ஆக இருக்கிறது.
நகரங்களில் உபர், ஓலா போன்ற பல டாக்ஸி சேவை நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. அதுவும் ஆட்டோவில் செல்வதைவிடவும் டாக்ஸிகளில் செல்வது மலிவாக இருப்பதாகச் சொல்லப்படு கின்றன. இதனால் சொந்தமாக ஒரு காரை வாங்கி பயன்படுத்து வதைவிட வாடகை கார் பயன்படுத்திக் கொள்ளவே பலரும் நினைக்கிறார்கள். இந்த நிலையில், ஒருவர் சொந்தமாக காரை வாங்கி பயன்படுத்துவது லாபமா அல்லது வாடகை காரைப் பயன்படுத்துவது லாபமா என்கிற கேள்வி முக்கியமானது. இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.
சொந்தக் கார் என்னும் கனவு!
காரில் பயணிக் கிறோம் என்பதைக் காட்டிலும் நம்மிடம் சொந்த கார் இருப்பது ஒரு ஸ்டேடஸ் கெளவரமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், சொந்தமாக கார் வாங்கும்முன் நம் வருமானம், தேவை, எத்தனை பேர் பயணிப்போம் என்கிற விஷயங்கள் முக்கியமானவை. ஏனெனில், பெரும்பாலான நகரங்களில் இருப்போரின் வருமானம் ரூ.30,000-க்கும் அதிகமாக இருப்பதால் எளிதில் கார் வாங்கும் முடிவை எடுத்து விடு கிறார்கள். அதற்கேற்ப கார் நிறுவனங்களும், கார் கடன் விளம்பரங்களும் அவர்களை கவர்ந்து இழுக்கின்றன.
ஆனால், சென்னை போன்ற பெரு நகரங்களில் கார் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால், பெரும் போக்குவரத்து நெருக்கடி உருவாகி இருக்கிறது. இதனால் சொகுசாக அலுவலகம் போகலாம் என்று நினைத்து, கார் வாங்கியவர்கள் அதனை வீட்டில் வைத்து விட்டு, இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோ, டாக்ஸி போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
போக்குவரத்து நெருக்கடி என்பதுடன், பார்க்கிங் பிரச்னையும் முக்கிய காரணம். நம் ஊரில், அதுவும் சென்னையில் கார் பாக்கிங் செய்வதற்கு பாதுகாப்பான இடம் இல்லாத தால், காவல் துறை எப்போது வேண்டுமானாலும் காரை   ‘டோ’ செய்து, எடுத்துக் கொண்டு போகலாம். அல்லது யாராவது வந்து இடித்து சேதப்படுத்தி விடவும் வாய்ப்புண்டு. 
அதுமட்டுமல்லாமல் கார் வாங்கிய ஒரு ஆண்டில் உங்கள் காரின் மதிப்பு ஒரிஜினல் விலையில் இருந்து கிட்டத்தட்ட 20% வரை குறைய வாய்ப்புண்டு.  இரண்டாவது ஆண்டு, காரின் மதிப்பில் கிட்டத்தட்ட 35 சதவிகிதமும், மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டால், 45% குறையும்.  ஐந்து ஆண்டுகளுக்குப்பின்  காரின் மதிப்பு அதிகளவில் குறையும்.
இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? கார் வாங்கும் ஆசையே இருக்கக் கூடாதா என்று கேட்கிறீர்களா?

சொந்த கார்தான் வாங்குவேன்!
சொந்த கார் வாங்குவது தவறே இல்லை. ஆனால், அது ஒரு செலவுதானே தவிர, முதலீடு அல்ல என்பதை முதலில் உணர வேண்டும்.
கார்களின் விலை குறைந்த பட்சமாக ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சத்துக்கு மேல் விற்பனை ஆகிறது. ஆனால், உங்களுடைய வருமானம் எவ்வளவு, ஒரு வருடத்துக்கு மொத்தமாக எரிபொருள், பராமரிப்பு, சர்வீஸ் மற்றும் சாலைக் கட்டணம் (toll), பார்க்கிங் உட்பட பல்வேறு செலவுகளையும் பட்டியலிட்டு உங்களுடைய காருக்கான பட்ஜெட்டைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக, அவசியமான வசதிகள் கொண்ட ஒரு காரின் விலை ரூ.5 லட்சம் எனில், முழுத் தொகையையும் அப்படியே கட்டி வாங்க முடியாத நிலையே பெரும்பாலானோருக்கு இருக்கிறது.   முன்பணமாக ரூ. 1  லட்சம் செலுத்தி, பாக்கியை கடனுதவி மூலம் கட்டி காரை வாங்குகிறார்கள் பலர். கடன் வாங்கிய தொகைக்கான தவணைக் காலம் ஐந்து ஆண்டுகள் எனில், மாதம் சுமார் ரூ.8,400 மாதத் தவணை (9.5% வட்டியில்) செலுத்த வேண்டும். மாதத் தவணை மட்டுமல்லாமல் மற்ற செலவுகளையும் கணக்கிடுங்கள்.
சராசரியாக லிட்டருக்கு 13 கிமீ மைலேஜ் தரும் காரில் மாதம் 1000 கிமீ பயணிப்பீர்கள் எனில், பெட்ரோலுக்கு மட்டுமே மாதம் சுமார் 5000 ரூபாய் செலவாகும். சர்வீஸ், இன்ஷூரன்ஸ், பார்க்கிங், டோல் போன்றவற்றுக்கு மொத்தமாக மாதம் ரூ.3,500 வரை செலவாகும். மொத்தமாக மாதத்துக்கு சொந்த காருக்கு ஆகும் செலவு ரூ.16,900 ஆகும். டிரைவிங் தெரியாதவர்கள் டிரைவர்களை வேலைக்கு எடுக்க வேண்டும். டிரைவர்களுக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.12,000 ஆகும்.
உங்கள் ஆண்டு வருமானத்தில் இந்தத் தொகையை மைனஸ் செய்யுங்கள். மீதமுள்ள தொகையிலிருந்து வீட்டுக் கடன் அல்லது வாடகை, வீட்டு இதர செலவுகள், பள்ளி/கல்லூரிக் கட்டணம் என அனைத்தையும் கழித்தால், மீதி என்ன இருக்கிறது என்று பாருங்கள். உங்களுடைய செலவுகளுக்கு மீறி 20% தொகை கையில் சேமிப்புக்காக நின்றால் மட்டுமே நீங்கள் கார் வாங்குவது சரியான முடிவாக இருக்கும்.
மேலும், சிலர் கார் வாங்கியே ஆகவேண்டும் என்ற ஆசையில் பட்ஜெட் சரியாக இல்லா விட்டாலும்கூட கடனை வாங்கி கார் வாங்குவார்கள். அது தவறு. கிட்டத்தட்ட 80% பேர் கடனுதவி மூலம்தான் கார் வாங்குகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. இதில் எத்தனை பேர் தங்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்ப வாங்கி இருப்பார்கள் என்பது சந்தேகமே.  பட்ஜெட்டை முடிவு செய்யாமல், காரின் அழகைப் பார்த்து வாங்கிவிட்டு, பிறகு பராமரிப்பு, மைலேஜ் என பட்ஜெட்டில் பஞ்சர் ஆனவர்கள் அதிகம். அதே போல், அவசரப்பட்டு பழைய கார்களை வாங்காமல், எத்தனை வருடம் ஓடியது, என்ன காரணத்துக்கு விற்றார்கள் என்று தெரியாமல் வாங்குவதும் தவறு. பழைய கார்களுக்கு பராமரிப்பு செலவு அதிகம்.
சொந்த காரா, டாக்ஸியா? 
சொந்த காரைப் பொறுத்த வரை, முதலில் அதற்கு ஆகும் செலவை சமாளிக்கும் வகையில் பணம் இருக்க வேண்டும். இரண்டாவது, காரைப்  பாதுகாப்பாக நிறுத்தி வைக்கத் தேவையான இடவசதி இருக்க வேண்டும். இது பெரும்பாலும் நகரத்தில் உள்ள நடுத்தர மக்களுக்கு சாத்தியமே இல்லை. அப்படிப்பட்டவர்கள் சொந்த காருக்கு பதிலாக வாடகை கார்களைப் பயன்படுத்துவதே சிறந்தது.
ஏனெனில் சொந்த கார் வைத்திருக்கும் பலரும் மாதச் சம்பளக்காரர்கள் என்பதால், அவர்களால் குடும்பத்தை அழைத்துக் கொண்டு அடிக்கடி சுற்றுலாவோ, ஊர் சுற்றவோ போக முடியாது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சுற்றுலா செல்வதே அதிசயம்தான். மேலும், தினசரி அலுவலகம் காரில் செல்பவர்கள் சொந்தமாக கார் வாங்கலாம். மற்றவர்கள் மாதாமாதம் செலவு வைக்கும் காரை ஏன் வாங்கி வீணாக்க வேண்டும்; அழகாக டாக்ஸியை புக் செய்துவிட்டு போய் வரலாம். 
முன்பு ஃபாஸ்ட் ட்ராக், என்டிஎல் என்று டாக்ஸிகள் இயங்கின. இப்போது ஓலா, உபர் என்று நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உயர் ரக கார்கள்கூட டாக்ஸி சேவையில் இயக்கப்பட்டு வருகின்றன. சொந்த கார் வாங்கி அதிகம் பயணிக்காதவர்கள் டாக்ஸியைப் பயன்படுத்துவது லாபகரமானதா கவே இருக்கும். டாக்ஸியில் பயணிக்கும்போது, நாம் செலுத்தும் கட்டணம் எரிபொருள் செலவு, டிரைவர் ஊதியம், காரின் இன்ஷூரன்ஸ் மற்றும் கம்பெனியின் லாபம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
கால் டாக்ஸி நிறுவனங்களின் கட்டண அடிப்படையில் பார்க்கும்போது, மாதம் 1000 கிமீ பயணிக்கும் ஒரு நபர் டாக்ஸிக்கு செய்யும் செலவு குறைந்தபட்சமாக ரூ.8000 மட்டுமே. அதிகபட்சமாக சொகுசு கார்களுக்கு ரூ.20,000 வரை ஆகலாம். அதேபோல், நகரங்களுக்குள் பயணிப்பவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 15 – 20 கிமீ மட்டுமே பயணிக்கிறார் கள். மாதத்துக்கு 600 கிமீ பயணம் செய்தால், ஆகும் செலவு மேலும் குறையும்.
இது மட்டுமல்லாமல் டாக்ஸி நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுவதால் தரப்படும் ஏராளமான சலுகைகள், ரைட் ஷேரிங் வசதிகள் ஆகியவை மேலும் லாபகரமானதாகவே இருக்கும். டாக்ஸி நிறுவனங்கள் தற்போது வாடிக்கையாளர்களுக் கான பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றன. ஜிபிஎஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்களும் டாக்ஸிகளில் புகுத்தப் பட்டுள்ளன.
எனவே, அதிகம் காரைப் பயன்படுத்தாததவர்கள்,  தனியாக மட்டுமே காரில் பயணம் செய்பவர்கள் சொந்தக் காரை வாங்குவதைக் காட்டிலும் டாக்ஸியைப் பயன் படுத்தி பணத்தை மிச்சப்படுத்தலாம்.

சொந்த கார் Vs டாக்ஸி செலவு விவரம்:
சொந்த கார்

மாதம் 1000 கிமீ பயணம்
(காரின் விலை – ரூ. 5 லட்சம்
கடன் – ரூ. 4 லட்சம்)
மாதத் தவணை: ரூ.8,400 (9.5 % வட்டியில்)
பெட்ரோல்: ரூ.5000
சர்வீஸ், இன்ஸ்பெக்‌ஷன், டோல், பார்க்கிங், கார் வாஷ்: ரூ.2,000
இன்ஷூரன்ஸ்: ரூ.1500
மொத்தம் (தோராயமாக): ரூ.16,900 (டீசன்டான வசதி கொண்ட குறைந்தபட்ச விலை கார். சற்று விலை அதிகமான கார் என்றால் இந்த செலவு மேலும் அதிகம். டிரைவர் வைத்துக் கொண்டால் மாதம் ரூ.12,000 கூடுதல் செலவு ஆகும்)
வாடகை கார்:
அடிப்படைக் கட்டணம்: ரூ.30 – ரூ.50
கிமீ கட்டணம்: ரூ.6 -ரூ.8
காத்திருப்புக் கட்டணம்: ரூ.1 -ரூ. 5
மொத்தம் (தோராயமாக): ரூ.8,000
(1000 கிமீ பயணம், எடுத்துக்கொள்ளும் காரைப் பொறுத்து கட்டணம்)
வாடகை கார்களை ஆப் மூலம் இப்போது எளிதில் புக் செய்ய முடியும். அலுங்காமல் குலுங்காமல் பயணத்தை ஓய்வெடுத்துக்கொண்டே செல்ல முடியும். நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு பயணம் செய்தால் செலவு இன்னும் குறையும்.

கார் வாங்குபவர்கள் என்ன செய்யவேண்டும்?
* உங்கள் தேவையைப் பொறுத்து என்ன கார் என்பதை முதலில் முடிவு செய்யுங்கள். ஐந்து பேர் வசதியாக அமர்ந்து செல்லக்கூடிய பெரிய செடான் காரா அல்லது அதிக மைலேஜ் தரக்கூடிய காரா?
* ஒரு காரை வாங்கும்முன் அந்த காரின் நிறை, குறைகள் குறித்த ரிவ்யூக்களைப் படித்து விட்டுச் செல்லுங்கள். அந்த காரின் பவர் என்ன, அது எந்த ஆண்டு மாடல், அதில் இருக்கும் வசதிகள் என்னென்ன என்று ஒரு புரிதலுடன் செல்வது பயன்தரும்.
*  பயன்படுத்தப்பட்ட பழைய  கார்கள் எனில், சிங்கிள் ஓனர் கார்களை வாங்குவதே நல்லது. இரண்டு மூன்று பேர்களிடம் கை மாறிய கார் என்றால், அந்த கார்களின் பராமரிப்பு சரியாக இருக்காது!
ஜெ.சரவணன்
நன்றி : நாணயம் விகடன் - 29.05.2016

Friday, May 13, 2016

பெண்ணுக்கு 2வது திருமணமா?


பெண்ணுக்கு 2வது திருமணமா? என்ன செய்ய வேண்டும்?

என்னதான் நேரம், காலம் பார்த்து திருமணம் செய்தாலும், சில திருமணங்கள் தோல்வியில் முடிவதுதான் சோகம். முதல் திருமணத்தில் ஏதாவது பிரச்னை அல்லது தோல்வி அடையும் போது அதிலிருந்து விலகிவிடுவது வழக்கம். முதல் திருமண வாழ்க்கையிலிருந்து விலகிய பிறகு, பல்வேறு காரணங்களினால் மீண்டும் திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகி வருகிறது. இது ஒரு ஆரோக்கியமான சமூக மாற்றம்தான் என்றால், இரண்டாவது திருமணத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.
அப்படி என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற  வழக்கறிஞர் சுதா இங்கே பகிர்கிறார்...
1. இரண்டாவது திருமணம் செய்யும் பெண்கள் தேர்ந்தெடுக்கும் ஆணுக்கு இது முதல் திருமணம் எனில், அதை நன்கு விசாரித்துக்கு கொள்வது நலம். அதாவது அவர் ஏன் ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணை  திருமணம் செய்கிறார். அதற்கான காரணம் என்ன? அவர் கூறும் காரணம் ஏற்றுக் கொள்ளும்படி இருந்தால், அந்த ஆணை திருமணம் செய்வது குறித்து யோசிக்கலாம்.  

2. திருமணம் செய்துக் கொள்ளும் நபர் விவாகரத்து பெற்றுள்ளார் எனில், அதற்கான சான்றிதழ்களை சரிபார்ப்பது மிக முக்கியம். அந்த விவாகரத்து சான்றிதழில் என்னென்ன விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை பார்க்கவும். அதாவது, முதல் மனைவிக்கு குழந்தை இருந்தால் அந்த குழந்தைக்கு என்ன உரிமை உள்ளது. முதல் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டுமா? என்பதையும் கவனிக்க வேண்டும். ஒருவேளை முதல் மனைவி இறந்துவிட்டார் எனில், அதை உறுதி செய்வதோடு, எந்த காரணத்தினால் அவர் இறந்தார் என்பதையும் கவனிக்க வேண்டும்.
3. இணையதளங்களில் வரன் தேடும்போது, அதிலுள்ள விவரங்களை அப்படியே நம்பிவிடக்கூடாது. அதனுடைய உண்மை தன்மையை மணமகனின் உறவினர்கள், தெரிந்தவர்களிடம் விசாரிப்பது அவசியம். ஏனெனில், இணையதளங்களில் பொய்யான தகவல்கள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, அவர்களின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்கள் ஆகியவற்றில் அவருடைய நடவடிக்கைகளை எப்படி இருக்கிறது என்பதை கவனிப்பது முக்கியம். மேலும் அவரின் முகவரி, எத்தனை வருடங்களாக அந்த முகவரியில் வசித்து வருகிறார் என்பதையும் விசாரிப்பது அவசியம்.
4. மாறிவரும் வாழ்க்கை முறையின் காரணமாக உடல் ரீதியான பிரச்னை சற்று அதிகமாகி வருகிறது. இது போன்ற பிரச்னை உள்ள ஆண்கள், இரண்டாவது திருமணம் செய்யும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு குழந்தை பிறக்கவில்லை எனில் அந்த பிரச்னையை உங்களின் மீது குறையாக கூற வாய்ப்புள்ளது. எனவே இது குறித்து விசாரித்து, மருத்துவ ரீதியாக விசாரித்துக் கொள்வது அவசியம். அதே சமயத்தில் இது சற்று கடினமான வேலைதான்.

5. இரண்டாவதாக, திருமணத்துக்காக தேர்வு செய்து வைத்திருக்கும் நபரின் மீது ஏதாவது கிரிமினல் வழக்கு உள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும். அப்படி ஏதாவது சிக்கல் இருந்தால் அவர்களை தவிர்ப்பது நல்லது.


6.  அடுத்தது இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு குழந்தை இருந்தால், அந்த குழந்தையை ஏற்றுக் கொள்ளும் மனநிலை அவருக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். இதில் ஏதாவது பிரச்னை இருந்தால், அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைதான். எனவே இதில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுப்பதில் தெளிவாக இருங்கள்.
7. முதல் திருமண வாழ்க்கையில், பிரச்னையில் சிக்கி விவாகரத்து பெற்று இருக்கும் பெண்கள் அல்லது எதிர்பாரத விதமாக கணவர் மரணம் அடைந்ததது போன்ற பிரச்னையில் இருக்கும் பெண்கள், இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு முன் மனநல ஆலோசகரை கலந்து ஆலோசித்து, மன ரீதியாக தயார் ஆவது முக்கியம். இதில் ஏதாவது சிக்கல் இருந்தால் திருமணத்தை சில மாதங்களுக்கு ஒத்தி வைப்பது நல்லது.
8. 2009-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 'தமிழ்நாடு கட்டாய திருமணப் பதிவு சட்டத்தின்' படி  இரண்டாவது திருமணத்தை பதிவு செய்வது அவசியம். இதை திருமணமான 3 மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் நீங்கள் திருமணம் செய்யும் நபர், ஏற்கனவே  திருமணம் செய்து, அதை பதிவு செய்து வைத்துள்ளாரா என்பதையும் கவனிக்க வேண்டும்.
மேற்கூறிய, விஷயங்கள் அனைத்தும், முதல் திருமணம் செய்பவர்களுக்கும் பொருந்தும். இரண்டாம் திருமணம் செய்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. இது, பெண்களுக்கு மட்டும் அல்ல...ஆண்களுக்கும் பொருந்தும்!
-வே. கிருஷ்ணவேணி
நன்றி : விகடன் செய்திகள் - 12.05.2016