disalbe Right click

Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Sunday, April 19, 2015

சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம்


சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம்

வாடிக்கையாளர்கள் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) மூலம் அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
நாடு முழுவதும் சுமார் 15 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. இதில் ஏப்ரல் 17-ஆம் தேதி நிலவரப்படி 12.40 கோடி வாடிக்கையாளர்கள் நேரடி மானியத் திட்டத்தில் இணைந்துள்ளனர்.
3 நாள்களில் மானியம்: வாடிக்கையாளர்கள் நேரடி மானியத் திட்டத்தில் இணைந்தவுடன், அவர்களது வங்கிக் கணக்கில் முன்வைப்புத் தொகையாக ரூ.568 செலுத்தப்படுகிறது.
அதன் பின்னர் அந்தந்த மாதங்களுக்கான மானியத் தொகை, வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து எரிவாயு உருளைகளைப் பெற்றுக்கொண்ட தேதியிலிருந்து 3 வங்கி வேலை நாள்களில் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
ஆனால், வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் மானியத்தொகை செலுத்தப்பட்ட பின்னரும் அதற்கான தகவல்கள் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படுவதில்லை என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.
இதனால் இணையதள வங்கிச் சேவை வசதி உள்ளவர்கள் அதன் மூலமாகவும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையங்களுக்குச் சென்றும் தெரிந்து கொள்ளும் நிலை ஏற்படுவதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்தத் திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்கள் அல்லது இணைய விரும்பி விண்ணப்பித்தவர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலை குறித்து இணையதளத்தின் மூலமோ அல்லது எரிவாயு முகவரின் அலுவலகத்துக்கு நேரில் சென்றோதான் அறிய முடிந்தது.
எஸ்.எம்.எஸ். வசதி: இதனைப் போக்கும் வகையில், இணையதளத்தைப் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களும், எளிய முறையில் நேரடி மானியத் திட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ளும் வகையில் எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தகவல்களைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் தாங்கள், சமையல் எரிவாயு உருளை பெறுவதற்காக பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணிலிருந்து எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
இதன்படி, "இண்டேன்' வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவைப்படும் தகவல்களுக்கு ஏற்ற குறியீடுகளை "டைப்' செய்து 81307 92899 என்ற எண்ணுக்கும், "பாரத் கேஸ்' வாடிக்கையாளர்கள் 77382 99899 என்ற எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.
பின்னர் உடனடியாக வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
நன்றி : தினமணி நாளிதழ் 18.04.2015

Friday, April 10, 2015

காய்கறிகளை வாங்குவது எப்படி?


காய்கறிகளை  வாங்குவது எப்படி?
*********************************************
சமையலுக்கு புதுசா நீங்க....அப்போ சரி காய்கறியை எப்படி பார்த்து வாங்கனும்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பு குறைவு தான்.. எந்தெந்த காய்களை எப்படி பார்த்து வாங்கலாம்னு தெரிஞ்சிகோங்க.....

பீன்ஸ்: பீன்ஸில் இரண்டு வகைகள் உள்ளன. பிரெஞ்ச் பீன்ஸில் நார் அதிகமாக இருக்கும். புஷ் பீன்ஸில் நார் இருக்காது. அதிகம் பேர் விரும்புவது புஷ் பீன்ஸ்தான். இதில் தோல் சாஃப்ட்டாக இருப்பதே சுவை அதிகம் தரும்.

கோவைக்காய்: பொரியல் செய்யப் பயன்படுத்தும் கோவைக்காய்களை முழுக்க பச்சை நிறத்தில் இருந்தால் மட்டும் வாங்குங்கள். கோவைக்காயில் ஆங்காங்கே லேசாக சிவப்பு இருந்தால் அது உடனே பழுத்துவிடும். ருசியும் குறைவாகத்தான் இருக்கும்.

காலிஃப்ளவர்: காலிஃப்ளவர் வாங்கும்போது பூக்களுக்கு இடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக இருப்பதாகப் பார்த்து வாங்க வேண்டும். இதில்தான் காம்புகளும் தடிமனாக இருக்காது.

முருங்கைக்காய்: முருங்கைக்காயை சற்றே முறுக்கிப் பார்த்து வாங்க வேண்டும். முறுக்கும்போது நன்றாக வளைந்து கொடுத்தால் காய் முற்றவில்லை என்று தெரிந்து கொள்ளலாம்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு: சர்க்கரை வள்ளிக் கிழங்கு வாங்கும்போது ஆங்காங்கே அடிபட்டு கறுப்பாகி இருப்பதை தவிர்த்து வாங்குங்கள். இது கசக்கும். உருண்டையான கிழங்குகள்தான் அதிகம் இனிக்கும்.

பூண்டு: பூண்டை வாங்கும்போது பல் பல்லாக வெளியே தெரிவதையே வாங்க வேண்டும்.

மாங்காய்: மாங்காயை காதருகே வைத்து தட்டிப் பாருங்கள். தேங்காயில் வருவது போலப் பெரிதாகச் சத்தம் வர வேண்டும். அதில்தான் கொட்டை சிறிதாக இருக்கும்.

உருளைக் கிழங்கு: இந்தக் கிழங்கு முளை விடாமல் பச்சை, பச்சையாக நரம்பு ஓடாமல் இருக்க வேண்டும். லேசாகக் கீறினாலே தோல் உடனே கையோடு பெயர்ந்து வர வேண்டும்.

அவரை: நாட்டு அவரையைத் தொட்டுப் பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்களைத் தவிர்க்கவும். இளசாகப் பார்த்து வாங்கினால்தான் நார் அதிகமாக இருக்காது.

சேப்பங்கிழங்கு: முளைவிட்டதுபோல் ஒரு முனை நீண்டிருக்கும் சேப்பங்கிழங்கு சமையலில் சுவை சேர்க்காது. சேப்பங்கிழங்கு வாங்கும்போது உருண்டையாக இருப்பனவற்றைப் பார்த்து வாங்குங்கள்.

பெரிய வெங்காயம்: பெரிய வெங்காயம் வாங்கும்போது அதன் மேல் பகுதியில் இருக்கும் தண்டுப்பகுதி பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும்.

கருணைக் கிழங்கு: கருணைக் கிழங்கை முழுசாக வாங்கும்போது பெரிய சைஸில் வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை வாங்கும்போது அதன் உள்பகுதி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

கத்தரிக்காய்: பெரிய கத்தரிக்காய் வாங்கும்போது தோல் சாஃப்ட்டாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். முற்றல் கத்தரிக்காயின் தோல் ரஃப்பாக இருக்கும்.

பீர்க்கங்காய்: பீர்க்கங்காயை அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுவதும் ஒரே சைஸில் இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும்.

புடலங்காய்: புடலங்காயைக் கெட்டியாக இருப்பதாகத்தான் வாங்க வேண்டும். அதில்தான் விதைப்பகுதிகுறைவாகவும் சதைப் பகுதி அதிகமாகவும் இருக்கும்.

பரங்கிக்காய்: பரங்கிக்காயைப் பொறுத்தவரை உள்ளே இருக்கும் விதைகள் முற்றியதாகப் பார்த்து வாங்குவதுதான் நல்லது.

தக்காளி: நன்றாக சிவந்த தக்காளிகளாகப் பார்த்து வாங்க வேண்டும். ஒரு வாரம் வரை இந்த பெங்களூரு தக்காளி கெடாது என்பதால் நன்கு பழுத்த பழமாகவே பார்த்து வாங்கலாம்.

வாழைத்தண்டு: பொரியலுக்கும் சூப்புக்கும் பயன்படும் வாழைத் தண்டின் அடிப்பகுதியில் நார் அதிகமாக இருக்கும் என்பதால் மேல் பகுதியாகப் பார்த்து வாங்குங்கள். உள்ளிருக்கும் தண்டுப் பகுதி சிறுத்து இருப்பதாக பார்த்து வாங்கினாலே போதும்.

முள்ளங்கி: முள்ளங்கியை லேசாகக் கீறிப்பார்த்தால் தோல் மென்மையாக இருக்க வேண்டும். அதுவே இளசு.

வெள்ளரி: வெள்ளரிக்காயின் மேல் நகத்தால் குத்திப் பார்த்தால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்படிப்பட்ட காய்களில்தான் விதைகள் குறைவாக இருக்கும்.

பாகற்காய்: பெரிய பாகற்காயைப் பொறுத்தவரை உருண்டையான ஷேப் காய்களை வாங்குவதைவிட தட்டையான நீண்ட காய்களாகப்ப் பார்த்து வாங்க வேண்டும்.

வாழைப்பூ: வாழைப்பூவின் மேல் இதழைப் பிரித்தால் பூக்கள் கறுப்படிக்காமல் வெள்ளை நிறத்தில் இருந்தால்தான் அது புத்தம் புதுசாக இருக்கிறது என்று அர்த்தம்.

சௌசௌ: சௌசௌ வாங்கும்போது அதன் வாய் போன்ற பகுதியில் இருக்கும் விரிசல்கள் பெரிதாக இருக்காதபடி பார்த்து வாங்க வேண்டும். விரிசல்கள் அதிகமாக இருந்தால் காய் முற்றலாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இஞ்சி: லேசாகக் கீறிப்பார்த்தால் தோல் பெயர்ந்து வருவது மாதிரியே இருக்க வேண்டும். அப்போதுதான் நார்ப்பகுதி குறைவாக இருக்கும். இஞ்சி சமையலில் சேர்க்க நன்றாகவும் இருக்கும்.

பச்சை மிளகாய்: நீளமான பச்சை மிளகாயில் சற்றே காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டான பச்சை மிளகாயில் காரம் தூக்கலாக இருக்கும். இதை சமையலில் சேர்க்கும்போது வாசனையும் பிரமாதமாக இருக்கும்.


Monday, April 6, 2015

பிராய்லர் கோழி நல்லதா? நாட்டுக்கோழி நல்லதா?


பிராய்லர் கோழி நல்லதா? நாட்டுக்கோழி நல்லதா?
************************************************************
நாட்டுக்கோழி Vs பிராய்லர் – கவனம் எந்தக் கோழி நல்ல கோழி?
By vayal on 19/03/2015


முறுக்கில்லாத வாலிபர்கள், உடல் வலு இல்லாத பூப்பெய்திய பெண்கள், புது மணத்தம்பதிகள், நீடித்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என சகலருக்கும் உணவாக மட்டுமில்லாமல் மருந்தாகவும் கொடுக்கப்படுவது கோழிக்கறி. மேற்கூறிய நன்மைகளுக்கெல்லாம் உரித்தானது நாட்டுக்கோழி. விவசாய நிலங்களில் புழு, பூச்சிகளைக் கொத்தித் தின்று விட்டு நாட்டுக்கோழி இடும் கழிவு நிலத்துக்கு உரமாகவும் பயன்பட்டது. இப்படியாக ஒரு சூழலியல் தொடர் சங்கிலியைக் கொண்டிருந்தது நாட்டுக் கோழி வளர்ப்பு.

ஜெர்மனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வொய்ட் லெகான் எனப்படும் பிராய்லர் கோழி வளர்ப்பு எப்படி இருக்கிறது, தெரியுமா? குடோனுக்குள் சூரிய ஒளியே படாமல், ஒரு கூண்டுக்குள் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. குறுகிய காலத்துக்குள் அதிவேகமாக வளர வேண்டும் என்பதற்காக ஹார்மோன் ஊசிகள் போடப்படுகின்றன. அப்படியாக வளரும் கோழிகளைத்தான் இன்றைக்கு நாம் விரும்பி உண்கிறோம். இக்கோழிகளுக்கு மேற்கூறிய மருத்துவத் தன்மையெல்லாம் அறவே இல்லை. மாறாக அவை நோய்களை நமக்குத் தரவல்லவை.

இது குறித்து முதலில் அக்கு ஹீலர் உமர்ஃபாருக்கிடம் பேசினோம்… ‘‘நம் நாட்டில் பிராய்லர் சிக்கன் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், அதனுள் புரதம் மற்றும் சில சத்துகள் அதிக அளவில் இருப்பதாக சிக்கன் கம்பெனிகளும் மருத்துவர்களும் இணைந்து அறிவித்தனர். 90களில் பிராய்லர் சிக்கனை எதிர்த்துப் பேசுவது என்பது அறிவியலையே எதிர்த்துப் பேசுவதாக பார்க்கப்பட்டது. இப்படியாக உருவகப்படுத்தப்பட்டு நம்முள் சந்தைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பிராய்லர் சிக்கன் பற்றிய ஆய்வுகள் நம்மை புருவம் உயர்த்தச் செய்கின்றன.

அமெரிக்காவின் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள Duquesne பல்கலைக்கழக ஆய்வுகள் பிராய்லர் கோழியின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் ரோக்ஸார்ஜோன் என்ற ஹார்மோன் ஊசிகள் மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கும் தன்மை வாய்ந்தவை என்று கூறுகின்றன. பிராய்லர் கோழியை உணவாக தொடர்ந்து உட்கொள்ளும் இந்தியர்களில் நூற்றில் 65 பேருக்கு கல்லீரல் வீக்க நோய் இருப்பதாக சென்னையில் இயங்கும் மருத்துவ ஆய்வுக்குழு சார்ந்த குடல் நோய் சிறப்பு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிராய்லர் சிக்கன் நல்லதல்ல என்கிற அடிப்படை புரிதல் எல்லோரிடமும் இருக்கிறது. அப்படியிருந்தும் அதிக அளவில் நாம் உண்ணும் பிரதான உணவாக இன்று திகழ்வது பிராய்லர் சிக்கன்தான்.

நல்ல உணவே செரிக்காத இன்றைய வாழ்க்கைமுறையில் பிராய்லர் சிக்கன் போன்ற ரசாயன உணவுகளைச் சாப்பிட்டால் என்ன ஆகும்? அது மட்டுமல்ல… ஒவ்வொருவரும் தங்களது தேவைக்கேற்ப சாப்பிடுவதுதான் சரியான முறை. பசி என்பதைத் தாண்டி ருசிக்காகச் சாப்பிடத் தொடங்கிய பிறகோ கணக்கு வழக்கில்லாமல் சாப்பிடுகிறோம்.

முன்பெல்லாம் ஒரு குடும்பத்துக்கே ஒரு கிலோ அல்லது அரை கிலோ கறி எடுத்து சமைத்துச் சாப்பிடுவார்கள். இன்றைக்கு ஒரு தனிநபர் வேறு உணவுகள் எதையும் சாப்பிடாமல், சிக்கனை மட்டுமே அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை சாப்பிடும் கலாசாரம் வந்து விட்டது. சாப்பிடும் உணவுகள் செரிப்பதற்கான உடல் உழைப்பும் நம்மிடம் இல்லாத காரணத்தால், அவை கொழுப்பாக மாறி பருமனுக்கு வழி வகை செய்கின்றன.

பிராய்லர் சிக்கனை நாம் எதிர்ப்பதற்கான காரணங்களை அலசுவோம். பிராய்லர் கோழிகள் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே உயிர்வாழும் தன்மை கொண்டவை. அதற்குள்ளாகவே அவற்றை சதைப்பிடிப்போடு, எடை கூடுதலாக்கி வளர்த்து, விற்பனை செய்து விட வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் பண்ணை உரிமையாளர்களுக்கு இருக்கிறது. அதனால் கோழிகளின் வேகமான வளர்ச்சிக்காக இரவு நேரங்களிலும் பல்புகளை எரிய விட்டு சாப்பிட வைத்துக்கொண்டே இருப்பார்கள். அப்படி வளர்க்கப்பட்ட எடையும் போதாமல் பிராய்லர் கோழிகளுக்காகவே தனியான சத்து மருந்துகளையும் ஊசிகளையும் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

இந்தப் பயன்பாட்டின் உச்சம்தான் இன்றைக்கு அதிவேக வளர்ச்சிக்குப் போடப்படும் ஹார்மோன் ஊசிகள். மனிதர்களுக்கு ஹார்மோன் ஊசிகளைப் பயன்படுத்தினாலே பல்வேறு விளைவுகள் தோன்றுவதை தவிர்க்க முடியாது. இந்த நிலையில் குறுகிய ஆயுள் கொண்ட சிறிய கோழிகளுக்கு ஹார்மோன்களை செலுத்துவதன் மூலம், அதன் உடல் முழுவதும் பாதிப்புகள் பரவி விடுகின்றன. இந்தக் கோழியை சாப்பிடும் நம் உடலிலும் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

நம் நாட்டில் நடத்தப்பட்ட பிராய்லர் கோழி பற்றிய சமீபத்திய ஆய்வு அதிர்ச்சி அளிக்கிறது. டெல்லியில் இயங்கும் ‘சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரோன்மன்ட்’ அமைப்பின் பொல்யூஷன் மானிட்டரிங் லேபரட்டரி மூலமாக பிராய்லர் சிக்கன் பற்றி ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வுக்காக பிராய்லர் கோழியின் கறி, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

அதற்காக டெல்லியில் இருந்து 36 வகை மாதிரிகளும், நொய்டாவிலிருந்து 12 வகை மாதிரிகளும், குர்கானில் 8 மாதிரிகளும், ஃபரிதாபாத் மற்றும் காஸியாபாத்தில் 7 வகை மாதிரிகளும் சோதனை செய்யப்பட்டன. கோழியின் வளர்ச்சிக்காக செலுத்தப்பட்ட ஆன்டிபயாடிக் ரசாயனங்கள் கோழியின் கல்லீரலிலும் சிறுநீரகங்களிலும் தேங்கியிருந்ததை ஆய்வில் கண்டறிந்தனர். ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாதிரிகளில் 40 சதவிகித கோழிகளில் பலவகை ஆன்டிபயாடிக் கலப்பும், 22.9 சதவிகித கோழிகளில் இரு ஆன்டிபயாடிக்குகளும், 17.1 சதவிகித கோழிகளில் ஒரு ஆன்டிபயாடிக் ரசாயனமும் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒன்றுக்கொன்று எதிரானதாகச் செயல்படும் ஆன்டிபயாடிக் ரசாயனங்களை கலந்து கொடுப்பது கோழிகளுக்கு வேண்டுமானால் வளர்ச்சியைத் தரலாம். மனிதர்களுக்கு கணக்கற்ற நோய்களைத்தான் தரும்.

கோழிகளின் கறியில் கலந்திருக்கும் ஆன்டிபயாடிக்குகளை போல, ஹார்மோன்களும் பல்வேறு உடல்நலச் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.கோழி உருவாக்கப்பட்டு கறியாக்கப்படும் வரையிலான செயல்பாடுகளே நம்மை மலைக்க வைக்கின்றன.

அதன் பிற்பாடு அக்கறியை ருசியாக சமைத்து நம் நாக்குக்கு விருந்தளிக்க என்னென்ன செயல்பாடுகளுக்கெல்லாம் கோழிக்கறி உட்படுத்தப்படுகிறது என்பதையும் பார்க்க வேண்டும். சிக்கன் 65, சில்லி சிக்கன் என்று அடர் சிவப்பு நிறத்தில் பொரித்தெடுக்கப்பட்ட சிக்கனை வாங்கி ருசிக்கிறோம். அதன் அடர் சிவப்பு நிறத்துக்காக செயற்கை பவுடர்கள் பயன்படுத்தப்படுகின்றன. புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை இது போன்று நிறத்துக்காகச் சேர்க்கப்படும் ரசாயனப் பொருளில் இருப்பதாக எச்சரிக்கிறார்கள் உலக அளவில் உள்ள ஆய்வாளர்கள்.

பொன்சியூ, எரித்ரோசின் என்கிற இரு ரசாயன நிறமிகளைப் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியன்ட் ப்ளூ, இண்டிகோ கார்மைன் நிறமிகள் மூலம் ஊதா நிறம் கிடைக்கும். இதுபோன்ற 8 வகை நிறங்களை ஐஸ்க்ரீம், ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கெட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என 7 வகை உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி உண்டு.

அதுவும் 10 கிலோ உணவுக்கு ஒரு கிராம் மட்டுமே சேர்க்க வேண்டும் என்பது வரைமுறை. அளவு கூடினால் நிறங்களின் நச்சுத்தன்மை உணவைப் பாதித்துவிடும் என்பதால்தான் அரசு இந்த வரைமுறைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சிக்கனுடன் எந்த நிறமிகளையும் சேர்க்கக்கூடாது என்கிறது உணவுச்சட்டம். நடைமுறையில் இதற்கு நேர் எதிரான செயல்பாடு கள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. நல்ல சிவப்பு நிறத்தில் பளிச்சென தெரிய வேண்டும் என்பதற்காக செயற்கை நிறத்தை அள்ளிக் கொட்டுகின்றனர். சூடான் டை, மெட்டானில் மற்றும் எரித்ரோசின் ஆகிய ரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அந்த பவுடர் நம் உடலில் ஏற்படுத்தும் விளைவுகள் பல.

எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோயும், ஹார்மோன் தொடர்பான பல்வேறு சிக்கல்களும் ஏற்படும் என்பது ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்கிற காரணத்தால் சூடான் டையை உணவில் பயன்படுத்துவதற்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கோ இப்பொருட்கள் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றன. கண்ட கண்ட குப்பைகளையெல்லாம் கொட்டுவதற்கு நமது உடல் குப்பைத் தொட்டியல்ல… நாம் சாப்பிடுகிற உணவு தரமானதா என்பதை அலசுவதில் கவனம் வேண்டும்’’ என்கிறார் உமர்ஃபாருக்.

‘தேவையற்ற கொழுப்பைத் தவிர பிராய்லர் கோழியில் எதுவுமில்லை’ என்கிறார் உணவியல் நிபுணர் வர்ஷா‘‘நாட்டுக்கோழி சிறந்தது என்று சொல்வதற்கு காரணம் அது இயற்கையானது. அதோடு இயற்கையான சூழலில் வளர்வது. கிராமப்புறங்களிலும் விவசாய நிலங்களிலும்தான் நாட்டுக்கோழி வளர்ப்பை மேற்கொள்கின்றனர். ஒரு கோழி முட்டையிலிருந்து குஞ்சாகி வெளியே வந்து 200 நாட்கள் ஆன பிற்பாடுதான் இறைச்சிக்காகக் கொல்லப்படுகிறது.

அந்த 200 நாட்கள் கோழி வாழும்போது அது பல்வேறான சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது. விளைநிலங்களில் இருக்கும் புழு, பூச்சிகளைக் கொத்தித் தின்று வளர்கிறது. ஓடியாடி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதால், அதன் தசைகள் கடினமாகினாலும் சுவை கூடுகிறது. நாட்டுக்கோழியில் கொழுப்பை விட புரதச்சத்து அதிக அளவில் இருக்கிறது.

பிராய்லர் கோழியோ, முட்டையில் குஞ்சாகி வெளியே வந்த 45 நாட்களுக்குள் இறைச்சிக்காக அழிக்கப்படுகிறது. நாட்டுக்கோழி 200 நாட்கள் சேர்ந்து வளர வேண்டியதை பிராய்லர் 45 நாட்களில் வளர்கிறதென்றால் சும்மாவா? உண்மையில் அது வளரவில்லை… ஹார்மோன் ஊசிகள் மூலம் வளர்க்கிறார்கள். பிராய்லர் கோழிகள் சூரிய ஒளியே படாத கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் கால்சியம் கிடைக்கப் பெறுவதில்லை. ஓடியாடாமல் ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பதால் புரதத்தை விட பிராய்லரில் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது.

100 கிராம் நாட்டுக்கோழியில் 4 கிராம் கொழுப்புதான் இருக்கிறது. அதுவே 100 கிராம் பிராய்லரில் 23 கிராம் கொழுப்பு இருக்கிறது. 100 கிராம் பிராய்லரில் 16 கிராம் புரதம்தான் இருக்கிறது. அதுவே நாட்டுக்கோழியில் 21 கிராம் புரதம் இருக்கிறது. கொழுப்பு குறைவாகவும் புரதம் அதிகமாகவும் இருக்கும் உணவே சிறந்தது. அந்த அடிப்படையிலும் நாட்டுக்கோழிதான் சிறந்தது.

பிராய்லர் கோழிகளுக்கு உடல் மற்றும் மன நலப் பிரச்னைகள் அதிக அளவில் ஏற்படுகின்றன. Sudden Death Syndrome எனப்படும் திடீர்ச்சாவு பிராய்லர் கோழிகளுக்கு ஏற்படுகிறது. நாட்டுக்கோழிகளுக்கு Dexa Hexanoic Acid எனப்படும் ரசாயனம் அதிகளவில் சுரப்பதால் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். பிராய்லர் கோழிகளில் இந்த ரசாயனத்தின் அளவு குறைவாக இருப்பதால் மூளை வளர்ச்சி இருக்காது.

மூளை வளர்ச்சியில்லாத, உடல் வலுவில்லாத பிராய்லர் கோழிகளை சாப்பிடுவதன் மூலம் கொழுப்பைத் தவிர்த்து நமக்கு வேறேதும் கிடைக்கப்போவதில்லை’’ என்கிறார் வர்ஷா. கண்ட கண்ட குப்பைகளையெல்லாம் கொட்டுவதற்கு நமது உடல் குப்பைத் தொட்டியல்ல… நாம் சாப்பிடுகிற உணவு தரமானதா என்பதை அலசுவதில் கவனம் வேண்டும்! மூளை வளர்ச்சியில்லாத, உடல் வலுவில்லாத பிராய்லர் கோழிகளை சாப்பிடுவதன் மூலம் கொழுப்பைத் தவிர்த்து நமக்கு வேறேதும் கிடைக்கப்போவதில்லை!