disalbe Right click

Showing posts with label சர்க்கரை நோய். Show all posts
Showing posts with label சர்க்கரை நோய். Show all posts

Wednesday, June 14, 2017

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும், எலும்புகளுக்கு பலம் தரும்... நாவல் பழம்!

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும், எலும்புகளுக்கு பலம் தரும்... நாவல் பழம்!

நாவல்... ஆற்றங்கரை, குளக்கரை மற்றும் சாலையோரங்களில் தானாக வளரும் ஒரு மரம். இதற்கு ஆருகதம், நேரேடு, சுரபிபத்தினர் என்ற வேறு பெயர்கள் உண்டு. ஆங்கிலத்தில் ஜம்பலம், பிளாக்பிளம் என்பார்கள். இதன் முழுத்தாவரமும் துவர்ப்புச்சுவை, குளிர்ச்சித்தன்மை கொண்டது.

நாவல் மரத்தின் இலை, மரப்பட்டை, பழம், வேர், விதை என அனைத்தும் மருத்துவக்குணம் கொண்டவை. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரம், சோடியம், வைட்டமின் பி போன்ற சத்துகள் இதில் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு பலம் தருவதுடன் உடலை உறுதியாக்கும். இதன் இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும்.
நாவல் மரத்தில் அதன் பழம் நிறைந்த சக்தி கொண்டது. இதில் வெள்ளை நாவல் என்ற ஒருவகை மரம் சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் படைத்தது. மேலும் ரத்த சிவப்பு அணுக்களை பெருகச்செய்வதுடன் உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும், ஆண்மைத்தன்மையை அதிகரிக்கச் செய்யும். இன்னொரு வகையான ஜம்பு நாவல் வாத நோய் மற்றும் தாகத்தைக் கட்டுப்படுத்தக்கூடியது.
பழங்கள் ரத்த சர்க்கரையைக் குறைக்க உதவும். இதில் உள்ள ஜம்போலினின் என்ற குளுக்கோசைடு உடலில் ஸ்டார்ச் சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டைத் தடுக்கக் கூடியது. இதனால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். மேலும், இதில் உள்ள குயுமின் என்ற ஆல்கலாய்டு தோலில் சுருக்கம் விழுவதைத் தடுக்கும். இதன்மூலம் வயதாவதைத் தள்ளிப்போடும். உடலில் புதிய செல்களைப் புதுப்பிக்கும் திறன் கொண்ட ஆன்டிஆக்ஸிடென்ட் இதில் அதிகமாக இருப்பதால் வெண்புள்ளி, அரிப்பு போன்ற தோல் நோய்களைக் குணப்படுத்தும்.
கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தும். குறிப்பாக மஞ்சள்காமாலையைக் குணப்படுத்தும். கர்ப்பப்பை தொடர்பான சிக்கல்கள், வெள்ளைப்படுதல், மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு போன்றவற்றைக் குணப்படுத்தும். நாவல் பழத்தைக் கஷாயம் வைத்துக் குடித்தால் வாய்வுத்தொல்லை விலகும்.
நாவல் பழங்களைப் பிழிந்து வடிகட்டிய சாறு 3 டீஸ்பூன், சர்க்கரை 3 டீஸ்பூன் சேர்த்து இரண்டு நாள்கள் காலை, மாலை இரண்டு வேளை குடித்து வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், நீர்க்கட்டு போன்றவை சரியாகும்.
நாவல் பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை, இதயத்தின் தசைகள் வலுவாகும். அத்துடன் பசியைத் தூண்டுவதோடு நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யக்கூடியது.
பழம் மட்டுமல்லாமல் விதைகளும் மருந்தாகப் பயன்படுகிறது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இதன் விதைகளை நிழலில் உலர்த்தி சுமார் ஒரு கிராம் அளவு காலை - மாலை என சாப்பிட்டு வந்தால் படிப்படியாக சர்க்கரை நோய் குறையும். வேப்பம்பூ, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவல்கொட்டை பொடி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரை தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். நெல்லிக்காய் பொடியுடன் நாவல் விதை சம அளவு சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும் சர்க்கரை நோய் குறையும். விதைச்சூரணம் கணையத்தை பலப்படுத்தி அதன் சுரப்பை சீராக்குகிறது.
இலைக்கொழுந்தை நசுக்கிச் சாறு எடுத்து ஒரு டீஸ்பூன் அளவு காலை, மாலை என இரண்டுவேளைச் சாப்பிட்டு வந்தால் பேதி கட்டுக்குள் வரும். இதன் பட்டையை அரை லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அது கால் லிட்டராக ஆனதும் பொறுக்கும் சூட்டில் வாய் கொப்புளித்து வந்தால் தொண்டைப்புண் ஆறுவதோடு தொண்டை அழற்சி சரியாகும்.
மரிய பெல்சின்,
நன்றி : விகடன் செய்திகள் - 08.06.2017

Friday, February 10, 2017

சர்க்கரை நோயை வெல்லலாம்

சர்க்கரை நோயை வெல்லலாம்
இதயம், கல்லீரல், மூளையின் முக்கியத் துவம், செயல்பாடு பற்றி தெரிந்துவைத்துள்ள நமக்கு, கணையம் பற்றி அந்த அளவுக்குத் தெரியாது.
கணையத்தில் என்ன நடக்கிறது?
எப்படி இன்சுலின் செயல்திறன் பாதிப்பு ஏற்படுகிறது ?
செரிமான மண்டலத்தில், வயிற்றின் மையப் பகுதியில், இலைபோன்ற தோற்றத்தில் கணையம் அமைந்திருக்கிறது. கணையத்துக்கு இரண்டு முக்கியப் பணிகள் உள்ளன.
முதலாவது, ஹார்மோன்களைச் சுரந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைக்கிறது.
இரண்டாவது, உணவு செரிமானம் ஆக சரியான நேரத்தில், என்சைம்களைச் சுரக்கிறது.
கணையத்தின் 95 சதவிகித திசுக்கள், உணவு செரிமானத்துக்கான நொதிகளைச் சுரக்கும் நாளமுள்ள சுரப்பியின் வேலையைச் செய்கின்றன. மீதம் உள்ள செல்கள் நாளமில்லா சுரப்பியின் பணியைச் செய்கின்றன. இந்த செல்களை `லாங்கர்ஹான்ஸ் திட்டுக்கள்என்போம்.
இங்கிருந்துதான், இன்சுலின் மற்றும் குளுக்ககான் எனும் இரண்டு ஹார்மோன்கள் சுரக்கின்றன. இன்சுலின் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் பணியையும், குளுக்ககான் சர்க்கரை அளவை அதிகரிக்கும் பணியையும் செய்கின்றன. ரத்தத்தில் சரியான அளவு சர்க்கரை இருக்க, இந்த இரண்டு ஹார்மோன்களும் முக்கியம்.
சாப்பிட்டதும் என்ன நடக்கிறது?
பைக், கார் என எந்த ஒரு வண்டியும் ஓட எரிபொருள் தேவை. அது பெட்ரோலாக இருக்கலாம், டீசலாக இருக்கலாம். அதுபோல, நம் உடல் என்ற வண்டி ஓட எனர்ஜி தேவை. இது, நாம் சாப்பிடும் உணவில் இருந்து கிடைக்கிறது.
நாம் உட்கொள்ளும் உணவு கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு என மூன்று வகையான பொருட்களால் ஆனது.
கார்போஹைட்ரேட் என்பது குளுக்கோஸ். இது உடனடியாக உடலுக்கு ஆற்றலைத் தருகிறது.
புரதச்சத்து மினோஅமிலத்தால் ஆனது. இது உடல் கட்டமைக்கப்பட அவசியம்.
கொழுப்பு அமிலங்களால் ஆனது. இவை செல்களின் உருவாக்கத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் மிகவும் அவசியம்.
கொழுப்பு எதிர்கால ஆற்றல் தேவைக்காக சேகரித்து வைக்கப்படுகிறது. நாம் சாப்பிடாமல் விரதம் இருந்தோம் என்றால், அந்த நேரத்தில் இந்தக் கொழுப்பு பயன்படுத்தப்படும்.
நாம் உணவு உட்கொண்டதுமே கணையம் தன்னுடைய வேலையைத் தொடங்கிவிடும். சாப்பிட்ட உணவு செரிமானம் செய்யப்பட்டு, குளுக்கோஸாக மாற்றப்பட்டு, ரத்தத்தில் கலந்ததுமே, கணையத்தில் இருந்து இன்சுலின் சுரந்து, ரத்தத்தில் கலக்கிறது.
இன்சுலினை சுமைதாங்கி என்று சொல்லலாம். இது, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸைசெல்களுக்குள் கொண்டுபோய் சேர்க்கும் வேலையைச் செய்கிறது.
இப்படிச் சரியாகச் செயல்பட்டால் மட்டுமே, ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இன்சுலின் செல்களை அடைந்ததும், பூட்டு-சாவி போன்ற நுட்பத்தில் செல்கள் திறந்து, குளுக்கோஸை உள்ளே அனுமதிக்கின்றன. இந்த குளுக்கோஸ்தான் செல்களுக்கான உணவு.
இந்த பூட்டு-சாவி நுட்பம் வேலை செய்யாதபோதுதான் சர்க்கரை நோய் ஏற்படுவதற்குக் காரணமான இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் எனப்படும் இன்சுலின் செயல்திறன் குறைவு நிலை உருவாகிறது. இதற்கு, மிக முக்கியக் காரணமாக இருப்பது, நம்முடைய ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை.
அடிக்கடி சிறுநீர் கழித்தல், தாகம், பசி, உடல் எடை குறைதல் போன்றவற்றைச் சர்க்கரை நோயின் அறிகுறிகள்.
இந்த அறிகுறிகள் எப்படித் தோன்றுகின்றன?
ரத்தத்தில் சர்க்கரை இயல்பு நிலை என்பது 80 முதல் 140 மி.கி/டெசி லிட்டர். சர்க்கரை நோய் ஏற்பட இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் முக்கியக் காரணம். இதற்கு, உடல்பருமன், மனஅழுத்தம், புகைப்பழக்கம், உடல் உழைப்பு குறைவு போன்றவை காரணங்கள். இவை ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கக் காரணமாகின்றன.
சிறுநீரகம் 180 மி.கி/டெசி லிட்டர் வரையில் சர்க்கரையை ரத்தத்தில் இருக்க அனுமதிக்கும். 180-க்கும் மேல் செல்லும்போது, அதைச் சிறுநீர் வழியாக வெளியேற்றும். இதனால், சர்க்கரை நோய் வந்தால் முதலில் அதிகமாகச் சிறுநீர் கழிக்கத் தூண்டும். அதிகப்படியான சிறுநீர் வெளியேறுவதால், உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது. இதை ஈடுகட்ட தாகம் எடுக்கிறது.
இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் காரணமாக குளுக்கோஸ் செல்களுக்குள் சென்று சேராமல் சிறுநீரகம் வழியாக வெளியேறிவிடுவதால், உடல் இயங்க ஆற்றல் போதாமல் அடிக்கடி பசி எடுக்கிறது. என்னதான் சாப்பிட்டாலும், குளுக்கோஸ் ரத்தத்தில் கலந்தாலும் செல்களுக்கு ஆற்றல் கிடைக்கவில்லை என்பதால், உடல் எடை குறைகிறது.
ஸ்வீட்டர்:
காலையில் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டால், சர்க்கரை நோயைத் தவிர்க்கலாம்.
டயாபடீஸ் டவுட்
சர்க்கரை நோய்க்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளால் சிறுநீரகம் பாதிக்கப்படுமா?
இல்லை. சர்க்கரை நோய்க்கான மருந்துகள் மிகவும் பாதுகாப்பானவை. நீண்ட காலம் எடுத்தாலும் பிரச்னை ஏற்படுத்தாதது. பொதுவாக, ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாமல் போனால், சிறுநீரகப் பிரச்னை வரும். இந்தச் சூழ்நிலையில் உள்ளவருக்கு சர்க்கரை நோய்க்கான மருந்துகளைக் கொடுப்பதில் கவனம் தேவை. இவர்களுக்குத் தரப்படும் சர்க்கரை நோய்க்கான மருந்து, நிலைமையை இன்னும் மோசமாக்கலாம். எனவே, சர்க்கரை நோய் நிபுணரை அணுகி,ஆலோசனை பெற்றுவந்தால், இந்தப் பிரச்னையைத் தவிர்க்க முடியும்.
நன்றி : டாக்டர் விகடன் - (01/02/2016

Saturday, December 10, 2016

கால் புண் - நீரிழிவு நோய்

கால் புண்ணிலிருந்து நீரிழிவு நோயாளி தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
முற்றிய நிலையில் சர்க்கரை நோய் உள்ளவர்கள், மருத்துவமனையில் சேரும்படி ஆவதற்கு கால் புண்களும் ஒரு காரணம். 
டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு, கால்கள் வீக்கமடைவதுண்டு. சர்க்கரை நோயாளிகளின் கால்களில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து கவனிக்க வேண்டும். ஆனால் வீடு, அலுவலக சூழலில் இது முடியாமல் போய்விடுகிறது.
இந்த தேவையை நிறைவு செய்ய, 'சைரன் கேர்' என்ற நிறுவனம், கால்களில் அணியும் 'ஸ்மார்ட் சாக்ஸ்' ஒன்றை வடிவமைத்துள்ளது. இந்த 'புத்திசாலி' காலுறைகளில் உணர்வான்களும், சிறு மின்கலனும், ஒரு மொபைல் செயலிக்கு தகவல் அனுப்பும் சாதனமும் இருக்கும். இதை அணிந்த சர்க்கரை நோயாளியின் கால்களில் ஏற்படும் மாற்றங்களை காலுறைகள் மொபைல் செயலிக்கு, 'புளூ டூத்' மூலம் செய்தி அனுப்பும். 
கால்களின் வெப்பநிலை அதிகரித்தால் உடனே சிகிச்சை பெற்று கால்களின் வீக்கத்தை தணிக்கலாம்.
ஒரு ஜோடி ஸ்மார்ட் சாக்சை ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம். அதுவரை, அழுக்கானால் துவைக்கும் இயந்திரத்தில் கூடப் போட்டு துவைக்க முடியும். 
காலுறைகளை கழற்றினால் மின்கலனில் உள்ள மின்சாரம் மிச்சப்படுத்தப்படும். ஏழு ஜோடி காலுறைகளை ஒரே பெட்டியாக விற்க திட்டமிட்டிருக்கிறது சைரன் நிறுவனம். 
ஒரு பெட்டியின் விலை 8,130 ரூபாய். டென்மார்க் மற்றும் அமெரிக்காவிலிருந்து இயங்கும் சைரன் நிறுவனத்தின் காலுறைகள், 2017ல் விற்பனைக்கு வரும். இது இந்தியாவிலும் கிடைத்தால், பல நீரிழிவு நோயாளிகள் கால் புண்களில் இருந்து தப்பிக்க உதவும். 
நன்றி ; தினமலர் நாளிதழ் – 08.12.2016