disalbe Right click

Showing posts with label சொத்து. Show all posts
Showing posts with label சொத்து. Show all posts

Saturday, February 15, 2020

எதிரிடை அனுபோகம் என்றால் என்ன?


எதிரிடை அனுபோகம் என்றால் என்ன?
ஒரு அசையா சொத்தின் மீது எந்தவித உரிமையும் இல்லாத ஒரு நபர் அந்த சொத்தை உரிமையாளர் உட்பட எவருடைய குறுக்கீடும் இல்லாமல், ஊரறிய தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுபவித்து வந்தால் அந்த சொத்து அவ்வாறு அனுபவித்து வருபவருக்கே சொந்தம் என்ற கருத்தின் அடிப்படையில்தான் எதிரிடை அனுபோகம் உள்ளது.
அவ்வாறு சொத்துக்கு உரிமையே இல்லாத ஒருவருக்கு அந்த உரிமை கிடைப்பது அந்த சொத்தின் உண்மையான உரிமையாளருக்கு எதிராக இருப்பதால்தான், இது எதிரிடை அனுபவம் என்று அழைக்கப்படுகிறது.
பல நாடுகளில் உள்ளது!
எதிரிடை அனுபவம் மூலமாக சொத்துக்கு உரிமையில்லாத ஒருவர், அதன் உரிமையை பெறுவது என்பது பல்வேறு நாடுகளிலும் உள்ளது. எத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக அனுபவித்து வர வேண்டும் என்ற காலவரையறை நாட்டுக்கு நாடு வேறுபடும். நம் நாட்டை பொறுத்தவரை அது 12 ஆண்டுகள் ஆகும்.
காலவரையறைச் சட்டத்தின்படி
எதிரிடை அனுபவம் குறித்து காலவரையறை சட்டம் 1963 ல் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் பிரிவுகள் 64 மற்றும் 65 ன்படி, சர்ச்சைக்குரிய அசையா சொத்தின் அனுபவத்திற்கு வழக்கு தொடர நிர்ணயிக்கப்பட்ட காலம் 12 ஆண்டுகள் ஆகும். அதாவது பாதிக்கப்பட்ட நபர் 12 ஆண்டுகளுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிரிடை அனுபோகம் கோருபவர் வழக்கு தொடர வேண்டுமென்றால்....
1. எதிரிடை அனுபவம் கோருபவர் அந்த சொத்தின் உரிமையாளர் அல்லது வேறு எவருடைய குறுக்கீடும் இல்லாமல் சொத்தை அனுபவித்து வந்திருக்க வேண்டும்.
2. அவ்வாறு அனுபவித்து வருபவர் சொத்தை எல்லோரும் அறியும் வகையில் வெளிப்படையாக அனுபவித்து வந்திருக்க வேண்டும்.
3. இடைவெளியே இல்லாமல் தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் அனுபவித்து வந்திருக்க வேண்டும்.
4. சொத்தின் உண்மையான உரிமையாளரின் உரிமையை மறுத்து, தான்தான் சொத்தின் உரிமையாளர் என்று கூறும் வகையில் சொத்தை அனுபவித்து வந்திருக்க வேண்டும்.
இதனால் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு சொத்தின் உரிமையாளர், தெரிந்தோ, தெரியாமலோ தனது சொத்தை வேறு ஒருவர் அனுபவிக்க வழி வகுத்துவிட்டு, 12 ஆண்டுகள் வரை அதனை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால்தான், அவ்வாறு உரிமை இல்லாத ஒருவர் எதிரிடை அனுபவ உரிமை கோர முடியும். 12 ஆண்டுகள் சொத்தின் உரிமையாளர் வேறு ஒருவரை அனுபவிக்க விட்டுவிட்டால் உரிமையாளருக்கு சொத்து கிடையாது.
உச்சநீதிமன்றம் பரிந்துரை:
ஆனால் உச்சநீதிமன்றம் இந்த எதிரிடை அனுபோகம் உரிமை என்பது ஆங்கிலேய நாட்டு சட்டம். எதிரிடை அனுபோகம் என்பது சொத்தின் உண்மையான உரிமையாளருக்கு எதிரானது. அதனால் எதிரிடை அனுபோகம் என்ற உரிமையை அடியோடு நீக்க வேண்டும். அதற்கு தேவையான சட்டத் திருத்தத்தை அரசு கொண்டு வர வேண்டும் என்று ஒரு வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : எனது முகநூல் நண்பரும் வழக்கறிஞருமான Dhanesh Balamurugan

Friday, November 29, 2019

கணவருடைய சொத்தில் மனைவிக்கு பங்கு - வழக்கு

கணவருடைய சொத்தில் மனைவிக்கு பங்கு - வழக்கு
வழக்கின் சுருக்கம்:
வள்ளியம்மாள் என்பவரின் கணவர் தங்கவேலு. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 45 வருடங்கள் ஆகிவிட்டது. இவர்களுக்கென்று இருந்த ஒரு குழந்தையும் தனது 2 வயதுக்குள் இறந்துவிட்டது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். கணவரின் மூதாதையர் சொத்தில் பங்கு கேட்டு கணவர் தங்கவேலு உயிருடன் இருக்கும்போதே மனைவி வள்ளியம்மாள் அவர் மீதும், அவரது அண்ணன் மீதும் வழக்கு தொடர்கிறார். வள்ளியம்மாள் வழக்கில் வெற்றி பெற்றாரா?  பங்கு கிடைத்ததா?  வாருங்கள் பார்க்கலாம்.
*********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி

  • வள்ளியம்மாள் என்பவர் பாகப்பிரிவினை கேட்டு தன் கணவர் மீதும், அவரது சகோதரர் மீதும் ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தார்
  • தனக்கும், தனது கணவரான தங்கவேலுவுக்கும் 45 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாகவும், தங்களுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகள் இல்லாமலிருந்து, அதன்பிறகு சிவசுப்பிரமணியன் என்கிற மகன் பிறந்ததாகவும், அந்த குழந்தை 1 1/2 வயதான நிலையில் இறந்து போனதாகவும், அதுமுதல் தனக்கும், கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும், பாகப்பிரிவினை கேட்டுள்ள சொத்துக்கள் மூதாதையர் வழி சொத்துக்கள் என்றும், அந்த சொத்துக்களை கணவரும், அவருடைய சகோதரரும் வாய்மொழியாக பாகப்பிரிவினை செய்து கொண்டதில் வழக்கு சொத்துகள் கணவருக்கு ஒதுக்கப்பட்டதாகவும், கணவருக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்துள்ளதால் அந்த சொத்துக்களில் தனக்கும், காலம் சென்ற தன் மகனுக்கும் பங்குரிமை உள்ளதாக குறிப்பிட்டு பாகம் கோரினார்.
  • கணவர் மனைவியின் வழக்கை எதிர்த்து நடத்தினார். வழக்கு சொத்துகளில் சில மட்டுமே கூட்டு குடும்ப சொத்துக்கள் என்றும், சில சொத்துக்கள் சகோதரனின் தனிப்பட்ட சொத்துக்கள் என்றும், சில சொத்துக்கள் தனது சுய சம்பாத்திய சொத்துக்கள் என்றும் கூறி மனைவி பங்குரிமை கோர முடியாது என்றார்
  • வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், வள்ளியம்மாளின் வழக்கை ஏற்றுக் கொண்டு பாகப்பிரிவினை வழங்கி தீர்ப்பு வழங்கியது.
  • அதனை எதிர்த்து கணவர் மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்தார். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் கணவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இரண்டாம் மேல்முறையீடு தாக்கல் செய்தார்.
வழக்கை நீதிபதி திரு. RMT. டீக்காராமன் விசாரித்தார்.
  • வள்ளியம்மாளுக்கும் அவள் கணவருக்கும் திருமணம் நடைபெற்ற நாளை அடிப்படையாக கொண்டு இரண்டு கீழமை நீதிமன்றங்களும் தீர்ப்பு வழங்கியுள்ளது
  • அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நாளில் தங்கவேல் உயிருடன் இருந்துள்ளார். அப்போது அவருக்கு உயிருடன் குழந்தைகள் ஏதும் இல்லை
  • இந்த நிலையில், இயற்றப்பட்ட இந்து வாரிசுரிமை சட்டம் மட்டுமே இந்த வழக்குக்கு பொருந்தும். அந்த சட்டத்தின்படி, வாரிசுரிமை அடிப்படையில், மூதாதையர் வழி வந்த சொத்தினை கணவர் பெற்றிருந்தால், அந்த சொத்தில் மனைவி பங்குரிமை கோர முடியாது
  • இது குறித்து பம்பாய் உயர்நீதிமன்றம் " உதய் நரேந்திரஷா Vs நரேந்திர அமிர்தலால் ஷா (AIR-2014-BOM-119)" என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது. அந்த வழக்கில், இந்து கூட்டுக் குடும்ப சொத்தில் கூட்டு பங்குரிமையாளராக இருந்து கணவரால் பெறப்பட்டுள்ள சொத்தில் கணவர் உயிரோடிருக்கும் போது மனைவி தனக்கு பங்குரிமை உள்ளதாக கோர முடியாது என்று கூறியுள்ளது
  • வள்ளியம்மாள் வழக்கில் கண்ட சொத்துக்கள் அனைத்தும் அவரது கணவரான தங்கவேலுவின் தந்தைக்கு பாத்தியப்பட்டு, அவர் இறந்ததற்கு பின்னர், கணவருக்கும், அவரது சகோதரருக்கும் வந்துள்ளது
  • அதனால் தங்கவேல் உயிரோடு இருக்கும் போது வள்ளியம்மாள் அதில் பங்குரிமை கேட்க முடியாது. எனவே இரண்டு கீழமை நீதிமன்றங்களும் வழங்கிய தீர்ப்புகள் தவறானது என்று கூறி வள்ளியம்மாளின் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

S. A. NO - 510/2001DT - 2.11.2017
முத்துக்குமாரசாமி மற்றும் பலர் Vs வள்ளியம்மாள்
2018-1-MLJ-476

நன்றி: வழக்கறிஞரும் எனது முகநூல் நண்பருமான Dhanesh Balamurugan