disalbe Right click

Showing posts with label தொழில் தொடங்கலாம் வாங்க. Show all posts
Showing posts with label தொழில் தொடங்கலாம் வாங்க. Show all posts

Friday, June 23, 2017

04: ஏதாவது செய்ய முடியுமா?

04: ஏதாவது செய்ய முடியுமா?

தொழில் தொடங்கும் புள்ளி என்று எதைச் சொல்லலாம்? தொழில் எண்ணம் கொண்டவர்களுக்குச் சந்தையில் நிறைய வாய்ப்புகள் கண்ணில் தென்படும். ‘இதைச் செய்தால் காசு வரும்’ என்று தோன்றக்கூடிய பத்து ஐடியாக்களையாவது நீங்கள் தாண்டி வந்திருப்பீர்கள். தொழில் முனைவோரின் ஆதாரத் தகுதி சந்தை வாய்ப்புகளைக் கண்டு கொள்வதுதான்.
ஆரம்பிக்கலாம், பண்ணலாம், தரலாம்!
பிறர் கண்களுக்குத் தெரியாத தொழில் வாய்ப்புகளை நீங்கள் உணர்வீர்கள். மனம் ஒட்டுமொத்த வியாபாரச் சுழற்சியையும் ஒரு முறை நடத்தி ஒத்திகை பார்க்கும். பிறரிடம் சொல்லி சிலாகித்துக்கொள்வீர்கள்.
“சுத்து வட்டாரத்துல ஓட்டலே கிடையாது. இவ்வளவு கவர்மெண்ட் ஆஃபீஸ்கள் இருக்கு. ஒரு டிஃபன் சென்டர் போடலாம்!”
“நாங்க குடியிருக்குற ஃப்ளாட்ல மட்டும் 250 குடும்பங்கள் இருக்கு. நிறைய வயசானவங்க தனியா இருக்காங்க. அவங்களுக்கு தேவையான எல்லா வெளி வேலைகளையும் பாக்க ஒரு சர்வீஸ் ஏஜென்சீஸ் ஆரம்பிக்கலாம்!”
“ஃபைனல் இயர் படிக்கிற பசங்களுக்கு இண்டெர்ன்ஷிப் கிடைக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒரு ஆப் (App) செஞ்சு காலேஜ் பசங்களையும் இண்டஸ்ட்ரி ஹெச். ஆர். எல்லாம் கனெக்ட் பண்ணலாம்!”
“எல்லாருக்கும் இயற்கை உணவு மேலதான் இப்ப கவனம் வந்திருக்கு. ஆனா போய் வாங்கத்தான் சிரமப்படறாங்க. அதனால் ஹோம் டெலிவரி செய்யலாம். ஆர்டரின் பேரில் வாங்கித் தரலாம்!”
இதில் எதுவும் பூமியைப் புரட்டிப் போடும் புதிய சிந்தனை இல்லை. இந்தத் தேவைகள் எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதை ஒரு வியாபாரமாக உருவாக்குவதுதான் தொழில் முனைவோரின் திறமை.
விரக்தி உருவாக்கியத் துறை
கண்ணில் படும் தேவையை வைத்துப் பிஸினஸ் மாடல் பிடிக்கலாம். ரெட் பஸ் போல. தீபாவளிக்கு முன் இரவு நாலைந்து மணி நேரங்கள் அலைந்தும் பஸ் கிடைக்காமல் விரக்தியோடு திரும்பியவர் மனதில் உதித்தது இதுதான். பல பிரயாணிகளுக்கு எந்தப் பஸ்ஸில் இடம் உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் பண்டிகை நாளில்கூடச் சில பஸ்கள் முழுக்க நிரப்பப்படாமல் புறப்படுகின்றன. காரணம் இந்தத் தகவல் இரண்டு பக்கமும் இல்லை. இதைப் பூர்த்தி செய்ய ஒரு தகவல் தொடர்பு சேவை இருந்தால்? இந்த எண்ணம் ஒரு கம்பெனியை மட்டும் உருவாக்கவில்லை. ஒரு துறையையே உருவாக்கியுள்ளது.
நடந்தபடியே பாட்டுக் கேட்போமா?
எல்லாத் தேவைகளும் கண்ணில் படுமா? வாடிக்கையாளர்களுக்கே தெரியாத தேவைகள் நிறைய உள்ளன. அவர்கள் அதைக் கேட்க மாட்டார்கள். கொடுத்தால் ஆர்வமாக வாங்கிக் கொள்வார்கள். உதாரணம் வாக் மேன்.
மியூசிக் சிஸ்டம் என்றால் வரவேற்பு அறையில் உட்கார்ந்து அமைதியாகக் கேட்பது என்பதுதான் உலகம் முழுதும் நடைமுறை. சாலையில் நடந்து போகும்போது இசை கேட்க முடிந்தால் எப்படி இருக்கும்? சோனி நிறுவனர் அகியோ மொரீடோவுக்கு இப்படி ஒரு எண்ணம். ஆனால் இப்படி ஒரு தேவை இருப்பதாக எந்த சந்தை ஆய்வும் சொல்லவில்லை. யாரும் கடை தேடி வந்து கேட்கவும் இல்லை. ஒரு அனுமானம்தான் இருந்தது முதலாளிக்கு. போர்ட் உறுப்பினர்களிடம் சொன்ன போது யாரும் இதைப் பெரிதாக வரவேற்கவில்லை. மனம் தளராத மொரீடா இதைத் தன் ஆர் & டி பணியாக எடுத்துச் செய்ய ஆரம்பித்தார்.
ஒரு நாள் அதைச் சிறிய அளவில் வெளியிட்டார். வாக் மேன் என்று பெயரிட்டார். “என்ன பெயர் இது? நடக்கவும் உதவவில்லை. ஆண்களுக்கானதுமில்லை. ப்ராடெக்டும் புதுசு” என்று எல்லோரும் புருவம் உயர்த்தப் பெயரை மட்டுமாவது மாற்றலாமா என்று யோசித்தார். ஆனால் அதற்குள் இது பரபரப்பாக விற்பனை ஆனது, வாடிக்கையாளர்களிடம் பதிந்துவிட்ட பெயரை மாற்ற வேண்டாம் என்று அப்படியே விட்டு விட்டார் அகியோ மொரீடா. வாக் மேன் ஒரு தலைமுறையையே தன் கட்டுக்குள் வைத்திருந்தது.
யாருக்கும் தெரியாத தொழில் தேவையை எப்படிக் கண்டு பிடித்தார்? அதனால்தான் அவர் தொழில் மேதை. சோனி நிறுவனம் நுழையாத துறை இல்லை எனும் அளவுக்கு வளர, இந்தக் குணம்தான் காரணமாக இருந்தது.
முதலீட்டுக்கும் முன்னால்
உங்களைச் சுற்றி, உங்களுக்குத் தெரிந்து, உங்களால் செய்ய முடியும் என்று நீங்கள் நம்பக்கூடிய தொழில் தேவைகளைப் பட்டியல் இடுங்கள். கண்ணில் படும் எல்லாத் தேவைகளையும் நம்மால் பூர்த்தி செய்ய முடியாது. நூற்றுக்கணக்கான ஐடியாக்களில் சரியானதைத் தேர்வுசெய்வதில்தான் பாதி வெற்றி உள்ளது.
என்னிடம் தொழில் ஆலோசனை கேட்டு வரும் பலர் இந்த முதல் படியையே தாண்டுவதில்லை.
ஏதாவது தொழில் செய்யணும் சார். கொஞ்சம் பணம் இருக்கு. என்ன செஞ்சா நல்லா பெரிய லெவலுக்கு வரலாம்னு சொல்லுங்க!” என்று யாராவது கேட்டால் அவர்கள் பிஸினஸுக்கு இன்னமும் தயாராகவில்லை என்றுதான் பொருள்.
நூறு தொழில் யோசித்து, பத்துத் தொழில் ஆராய்ந்து, ஓரிரு தொழிலுக்கு மாதிரி தயாரித்து, ஆலோசனை கேட்டுவிட்டுப் பணம் முதலீடு செய்வது நல்லது. பணத்தைப் போட்டு ஆரம்பித்த பின் யோசித்தால் அதைக் காப்பாற்ற நிறைய செலவு செய்ய வேண்டிவரும்.
மறைந்த திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ராம நாராயணன் ஒரு கருத்தைச் சொன்னார், “ பேப்பரில் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதி எழுதிக் கிழித்துப் போடலாம்; ஆனால் ஃபிலிமில் எடுத்து வெட்டி வெட்டி எறியக் கூடாது!”
ஒரு இயக்குநர் என்பதை விடப் படத்தயாரிப்பாளர் என்ற முறையில் அவர் மீது அளப்பரிய மரியாதை உண்டு எனக்கு. பெரும்பாலும் நஷ்டத்தில் இயங்கும் திரைப்படத் துறையிலேயே பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் லாபகரமாகப் படங்கள் எடுத்தவர் அவர். அவர் சொன்னது சினிமாவிற்கு மட்டுமல்ல. எல்லாத் தொழிலுக்கும் பொருந்தும்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 28.02.2017

03.காதலும் தொழிலும் எப்படி ஒன்றாகும்?

03.காதலும் தொழிலும் எப்படி ஒன்றாகும்?
தொழில் செய்ய என்னதான் தகுதி வேண்டும்? ஆசை வேண்டும். ஒரு தொழிலை உருவாக்கி, பின் ஸ்திரப்படுத்தி அதைத் தொடர்ந்து லாபகரமாக நடத்தும் ஆசை வேண்டும். நம்மில் பலருக்குத் தொழிலில் வரும் பணம் மீது ஆசை இருக்கிறது. ஆனால் அதைத் தொழிலாக நடத்தும் முனைப்பு இல்லை.
பிறர் சொல்லிக் காதல் வருமா?
பெட்டி கடை போட்டவரெல்லாம் மாடி வீடு கட்டிட்டார் என்று பொறாமைப்படாமல் மட்டும் போதாது. காலை 6 முதல் இரவு 10 வரை கடையில் உட்கார்ந்து பொருள் வாங்குவது முதல் விற்பது வரை செய்யும் அந்த முனைப்பு இருக்க வேண்டும். தீபாவளி, கிறிஸ்துமஸ், பக்ரீத் பாராமல், தொழிலே உலகம் என வாழும் அளவு முனைப்பு உள்ளதா!
தானாகத் தன்னை இயக்கிக் கொள்ளும் உந்துசக்தி தொழில் முனைவோருக்கு அத்தியாவசியம். தொழில் முனைவோர் என்றாலே சொந்தமாக ஆசைப்பட்டுத் தனியாகத் தொழில் செய்போர் என்று பொருள் கொள்ளலாம். பிறர் சொல்லிக் காதல் வருமா? அது போலத்தான் சொந்தத் தொழிலும்.
பலருக்கு ஏராளமான தொழில் வாய்ப்புகள் கண்ணில் படும். அற்புதமாக ஐடியாக்களை அள்ளிக் கொட்டுவார்கள். ஆனால் முதல் அடி எடுத்து வைக்காதவரை இவர்கள் எல்லாம் நாற்காலி ஆலோசகர்கள்தான். காலம் கடந்த பின்பு இவர்கள் சொல்வார்கள், “நிறைய ஐடியாக்கள் இருந்துச்சு. ஆனால் கை தூக்கி விட ஆளில்லை!”. தூக்கி விட ஆள் தேடுபவர்கள் சொந்தமாகத் தொழில் ஆரம்பிப்பது கடினம். ஆரம்பித்தாலும் அதைத் தக்க வைப்பது மிகக் கடினம்.
முனைப்பு வேண்டும்
நம் கல்வி அமைப்பு பணியாளர்களுக்கான மன நிலையை உருவாக்குவதிலும், ஒரு அமைப்பு சார்ந்து இயங்குவதை ஆதரிப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறது. கம்பெனிக்கு ஆள் எடுக்கக் கொண்டு வந்ததுதானே மெக்காலே திட்டம்! இதனால்தான் சுயச் சிந்தனை, கேள்வி கேட்கும் சுதந்திரம், ஆய்வு மனப்பான்மையைத் தேட வேண்டியுள்ளது.
தொழில் நிர்வாகத்துக்குப் படிக்கும் எம்.பி.ஏ. மாணவர்களில் 5 சதவீதத்துக்கும் குறைவானோர் மட்டுமே தனியாகத் தொழில் செய்ய விரும்புவதாகச் சமீபத்திய நிர்வாகக் கல்வி ஆய்வு தெரிவிக்கிறது. இதனால்தான் தீவிரத் தொழில் முனைவு எண்ணம் கொண்டவர்கள் பாரம்பரியக் கல்வி முறையை விரைவில் துறந்துவிடுகின்றனர். படித்து விட்டு ஸ்திரமான வேலையில் உட்கார்ந்து சொன்ன வேலையைச் செய்யும் மனோபாவம் சொந்தத் தொழில் ஆரம்பிக்க உதவாது.
ரிஸ்கை சமாளி!
முதல் தேவை முனைப்பு என்றால் இரண்டாம் தேவை ரிஸ்க் எடுக்கும் மனோபாவம். “எனக்கு ரிஸ்க் எடுக்குறது ரஸ்க் சாப்பிடற மாதிரி” என்று உங்களால் சொல்ல முடியுமா? ஏனென்றால், ரிஸ்க் என்பது பணயம் வைப்பது போல. ஒரு ஸ்பெகுலேஷன் தன்மை உண்டு. வந்தால் வரும். வராமலும் போகும். பாதுகாப்பின்மையை எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதுதான் risk taking-ன் அடி நாதம். முதலீடு போடுகிறோம். எவ்வளவு திரும்ப வரும் என்று தெரியாது. துணிந்து முதலீடு செய்ய முடியுமா? இதுதான் ரிஸ்க்.
“40 வயசு வரை சம்பாதிச்சிட்டு, ஈ.எம்.ஐ. இல்லாம இருந்து, வீட்டில் இன்னொரு வருமானம் இருந்து, குடும்பத்தை எதுவும் பாதிக்காதுன்னா நானும் தொழில் செய்வேன்” என்று நீங்கள் சொன்னால் உங்களுக்குப் பாதுகாப்பு உணர்வு மிக அதிகம். ரிஸ்க் எடுக்க மாட்டீர்கள் என்று பொருள். சொந்தத் தொழில் என்று நினைப்பவர்கள் இந்தப் பாதுகாப்பின்மையை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதில்தான் தொழில் பற்றிய முடிவு இருக்கும். தங்கள் பாதுகாப்பு, வசதி, சவுகரியம், கவுரவம் என்று எதையும் விடத் தயாராகாதவர்கள் சொந்தத் தொழில் செய்வது கடினம்.
எல்லாவற்றையும் இழக்கும் அபாயத்தில், அகலக் கால் வைத்து ஆரம்பிக்க வேண்டுமா என்று கேட்டால், “அவசியம் இல்லை”தான். கணக்கிட முடியாத ரிஸ்க் அவசியமில்லை. ஆனால் calculated risk இல்லாமல் பிஸினஸ் இல்லை.
ஒரு பாட்டில் ஆவதல்ல!
தொழில் செய்ய மற்றொரு ஆதாரக் குணம் கடின உழைப்பு. ஆரம்பக் காலத்தில் மட்டுமல்ல. வெற்றி பெற்ற பின்னும் இந்த உழைப்பு அவசியம், தொழிலைத் தக்க வைக்க. உழைப்பின் வடிவமும் வீச்சும் மாறலாம். ஆனால் என்றும் உழைப்பு தேவை. நினைத்துப் பார்க்காத வேலையை, நினைத்துப் பார்க்காத சமயத்தில் தீவிரமாகச் செய்ய நேரிடலாம். அந்தத் தயார் நிலை அவசியம்.
முக்கியமாக ஈகோ பார்க்காமல் வேலை செய்வது, சமரசங்களுடன் வாழப் பழகுவது, எதிர்பாராத சூழலைச் சமாளிப்பது, என்றும் ஒரு மாணவனைப் போலக் கற்றுக் கொள்ளும் மன நிலையோடு தொடர்ந்து உழைப்பது என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆக, ஒரு பாட்டில் கோடீஸ்வரர் ஆக முடியாது.
இத்தனைக்குப் பிறகும் ‘சொந்தத் தொழில்’ என்று உறுதியுடன் நிற்பவர்களுக்கு நான் சொல்லும் முல்லா கதை இதோ: சூஃபியான முல்லா பேச்சைக் கேட்கப் பெரும் கூட்டம் வந்திருந்தது. அவர் வர ஒரு மணி நேரம் தாமதமாகச் சிலர் வெளியேறினர். வந்தவர் குடித்து விட்டு வந்ததால் வேறு சிலரும் புறப்பட்டனர். பேசத் தொடங்கியதும் தகாத சொற்களால் திட்டியதால் பெரும்பாலானோர் மனம் வெறுத்துக் கிளம்பினர். அதற்குப் பிறகும் வெகு சிலர் உட்கார்ந்திருந்தனர். அவர்களைப் பார்த்த முல்லா, “நீங்கள்தான் என் பேச்சைக் கேட்க வந்தவர்கள்” என்று சொல்லி அற்புதமான உரையை நிகழ்த்தினாராம்.
முல்லா உரை போலதான் சொந்தத் தொழிலும். எல்லாச் சோதனைகளையும் தாண்டி முனைப்புடன் உள்ளவர்களுக்குத் தேடி வந்தது கை கூடும்!
“எல்லாம் எனக்குப் பொருந்துகிறது. எல்லாவற்றுக்கும் நான் தயார். என்ன தொழில் என்று முடிவு எடுப்பதில்தான் சிக்கல் உள்ளது!” என்று கூறுகிறீர்களா?
உங்களுக்கு ஏற்றத் தொழில் எது என்று எப்படிக் கண்டு பிடிப்பது?
கண்டு பிடிப்போம். நாம் சேர்ந்து கண்டு பிடிப்போம்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 21.02.2017

02: வெற்றிக்கு என்ன தேவை?

02: வெற்றிக்கு என்ன தேவை?

எடிசன் முதல் எல்லா விஞ்ஞானிகளும் கேட்ட கேள்வியைத்தான் முதலில் கேட்கணும். “தொழில் தொடங்க நினைப்பது ஏன்?” நோக்கம் தெரிந்தால் உங்களின் உந்துசக்தி புரியும். அதனால்தான் சொந்தத்தொழில் என்று ஆலோசனை கேட்டு வந்தால் இதை அவசியம் கேட்பேன்.
அதிகம் சொல்லப்படும் காரணங்களைப் பார்க்கலாம். அப்படியே என் ஆலோசனைகளையும் தருகிறேன். என்ன சார் இவ்வளவு வேகம் என்கிறீர்களா? நேரத்தை வீணடிக்க வேண்டாம். நேரடியாக வேலையை ஆரம்பிக்கலாம்!
தொழில் தெரிந்தால் போதுமா?
“எனக்கு இந்தத் தொழில் தெரியும் சார். பத்து வருஷம் வேலை பாத்திருக்கேன். அத்தனையும் அத்துப்படி. அதனால நாமே இதை செஞ்சா நல்ல லாபம்னு பாக்கறேன்!”
ஆதாரத் தொழில் அறிவு அவசியம். ஆனால் அது மட்டுமே வியாபாரத்துக்குப் போதாது. நல்ல சமையல் தெரியும் என்று ஓட்டல் ஆரம்பிப்பது போலத்தான் இதுவும். சமையல், ஓட்டல் தொழிலின் ஒரு பகுதி. முக்கியப் பகுதி. அவ்வளவுதான். சமையல் தெரியும் என்பதைவிட ஓட்டல் நிர்வாகம் தெரியணும். அதிலும் தொழிலாளியாய் இருப்பது வேறு. முதலாளியாய் இருப்பது வேறு. இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்வது நல்லது.
ஒரு தொழிலில் அடிநாதமாய் உள்ள ஒரு செயல்திறன் உங்களுக்கு இருப்பதாலேயே நீங்கள் அந்தத் தொழிலில் வெற்றி பெறுவீர்கள் எனச் சொல்ல முடியாது. எத்தனையோ பிரம்மாண்ட படங்கள் கொடுத்த டைரக்டர்கள் சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தை அந்த அளவு வெற்றிகரமாக நடத்த முடியாமல் போனதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். காரணம் என்ன? வெற்றிகரமான சினிமா இயக்குநரால் ஒரு படக் கம்பெனியை வெற்றிகரமாய் நிர்வாகம் செய்ய முடியும் என்று சொல்ல முடியாது.
இது ஏன் என்று போக போகச் சொல்கிறேன். இப்போதைக்குத் தெரிய வேண்டியது இதுதான்: ஆதாரத் தொழில் அறிவு இருப்பது நல்லது. அது மட்டும் போதாது!
நிஜமான முதலாளி
“யார் கிட்டேயும் கை கட்டி நிக்கக் கூடாது. நாமே ராஜா. நாமே மந்திரி. ஒரு பய கேள்வி கேக்கக் கூடாது. அதுக்குத்தான் சார் சொந்தமா பண்லாம்னு நினைக்கிறேன்.”
வேலையில் இருந்தால் ஒரு முதலாளிதான் கேள்வி கேட்பார். சொந்தத் தொழில் என்றால் ஒவ்வொரு வாடிக்கையாளரும் கேள்வி கேட்பார். ஏனென்றால் வாடிக்கையாளர்தான் தொழிலின் நிஜமான முதலாளி. தவிர பங்குதாரர், பணியாளர், அரசு என எல்லோரையும் அணைத்துச் செல்ல வேண்டிய கூடுதல் பொறுப்பும் இங்கு உண்டு. அதனால் தொழில் தொடங்கணும் என்றால் எல்லார் பேச்சையும் கேட்கத் தயாராக இருங்கள். பழைய காலத்துப் பண்ணையார் போல செயல்பட நினைத்தால், இந்தக் காலத்துத் தொழில் சூழல் இடம் அளிக்காது.
லாபம் அவசியம்
“இந்தத் தொழில் மேலுள்ள ஆசைதான் தூண்டுதல் எனக்கு. பணம் முக்கியமில்லை சார். நாம ஏதாவது பண்ணி பேர் வாங்கணும். அதுக்குதான் இந்த தொழிலை முயற்சி பண்றேன்.” இப்படி ஆசையின் தூண்டல் உங்களைத் தொழில் தொடங்க வைக்கும். ஆனால் தொழிலில் நீடிக்க பணத்தின் மேல் ஆசை கட்டாயம் வேண்டும். பல படைப்பாளிகள் தொழிலில் தோற்க காரணம் என்ன தெரியுமா? உணர்வு ரீதியான ஈடுபாடு சிறப்பான பணியைச் செய்ய வைக்கும். தொழிலைத் தக்க வைக்கவும் வளர்க்கவும் லாபத்தை நோக்கிச் செல்லும் எண்ணங்கள் தேவை. பணம் வராத செயலை செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அது சேவை. அந்தத் தொழிலை நீண்ட நாட்கள் தக்கவைப்பதும் வளர்ப்பதும் பெருங்கடினம்.
சில சமயங்களில் வேலை கிடைக்காமல் சொந்தத் தொழில் ஆரம்பிப்பவர்கள் உண்டு. ஒரு விசிட்டிங்க் கார்ட்போலச் சொந்த கம்பெனியைப் பயன்படுத்தி வேலையைப் பெறுவர். முதல் புத்தகம் போடும் எழுத்தாளர்களைப் போல. ஆனால் உங்கள் தொழிலை லாபகரமாக நடத்தும் நீண்ட நாள் திட்டம் உண்டு என்றால் லாப நோக்கம் அவசியம். பணத்தை நேசிக்காமல் பணம் பண்ண முடியாது!
பணம் மட்டும் போதாது!
“என் நண்பர்தான் பார்ட்னர். அவருக்கு இந்தத் தொழில் தெரியும். அவர் ஃபுல்லா பாத்துப்பார், நான் பணம் மட்டும் போட்டா போதும். அதனாலதான் இதை சூஸ் பண்ணேன்!”
பணமுள்ள பங்குதாரர் கிடைப்பது நல்லதுதான். ஆனால் பிறரின் அனுபவத்தையும் அனுமானத்தையும் மட்டும் வைத்துத் தொழில் தொடங்குவது ஆபத்தானது. அனுபவஸ்தர் முதலீடு செய்தால் தேவலாம். அதே போல முன் பின் தெரியாதவர் பிஸினஸ் ஐடியா என்று பணம் கேட்டால் என்னென்ன கேள்விகள் கேட்பீர்களோ அவை அனைத்தையும் நண்பரிடம் கேட்பது அவசியம். பணத்தை மட்டும் போட்டுவிட்டால் போதும், அது தொழிலோடு வளர்ந்து மீண்டும் பெருகி திரும்ப வரும் என்று எண்ணுவது மடமை. தொழிலில் உங்கள் பங்கு என்ன என்று தெரிய வேண்டும்.
பணம் இல்லை என்பதால் தொழில் ஆரம்பிக்க முடியவில்லை என்று யார் சொன்னாலும் நம்பாதீர்கள். சரியான தொழில் எண்ணத்திற்குக் கடனும் முதலீடும் நிச்சயம் கிட்டும். அதையெல்லாம் நாடினாரா உங்கள் நண்பர்? விசாரியுங்கள். முயற்சித்தும் பலன் இல்லை என்றால் செயல் திட்டம் தெளிவில்லை என்று பொருள்.
முயற்சி செய்யாமல் உங்களிடம் வந்திருந்தால், வேறு என்ன சொல்ல? “நீங்க ரொம்ப நல்லவரு!” இப்படி ஒரு புன்னகை மன்னன் கிடைக்க உங்கள் நண்பர் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!
“சரி, எந்தக் காரணம் சொன்னாலும் இப்படித் தட்டி விட்டால் எப்படித்தான் தொழில் தொடங்குவது?” என்று உங்கள் மைண்ட் வாய்ஸ் சொல்வது கேட்கிறது.
பொறுமை முக்கியம். அடுத்த வாரத்துக்குக் காத்திருங்கள்.
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 17.02.2017

01: எண்ணமும் உழைப்பும் மட்டும் போதுமா?

01: எண்ணமும் உழைப்பும் மட்டும் போதுமா?
“சொந்தமா நாமே ஒரு தொழில் ஆரம்பிக்கலாம்னு ஒரு எண்ணம்.”
இதைச் சொல்லும் போது அந்த இளைஞனின் கண்களில் கனவு தெரிகிறது. “சொந்தமா... சார்...”
“பெரிசா வரணும் சார். எவ்வளவு கடின உழைப்பு தேவைப்பட்டாலும் கொடுக்கத் தயார். ஆனா ஜெயிக்கணும் சார்.”
இளைஞனின் குரல் காதல் வயப்பட்டது போலப் பரவசமாய் இருந்தது. கவுதம் மேனனின் கதாநாயகன் மாதிரி அவனைப் புரட்டிப் போட்டிருக்கு, இந்தப் பிஸினஸ் ஐடியா. “அப்பா கிட்ட அஞ்சு ரூபாவரை அரேஞ்ச் பண்ணக் கேட்டிருக்கேன். அவரும் நிலத்தை ஒத்தி வெச்சு தரேன்னுருக்கார். பத்தலேன்னா பாங்குல கேட்கலாம். இரண்டு வருஷத்துல போட்டதுக்கு மேலே நிச்சயமா மூணு மடங்கு வரும். ஏன்னா இந்தப் பிஸினஸ ஆறு மாசமா ஸ்டடி பண்ணியிருக்கேன். கண் கூடா எவ்வளவு காசு வரும்னு தெரியும். அதோட உங்க ஆலோசனையும் வேணும்!”
எல்லாத்தையும் அவன் பாத்துப்பான்!
தொழிலை அவர் விளக்கினார். விளங்கியது. பிஸினஸ் பிளான் உண்டா என்றதற்கு உதட்டைப் பிதுக்கினார். தன் உற்ற நண்பன் தான் பிஸினஸ் பார்ட்னர் என்றார். அவர் என்ன செய்வார் என்றதற்கு ‘எங்கூட இருந்து எல்லாத்தையும் பாத்துப்பான்’ எனப் பதில் வந்தது.
நெடுந்தூரம் பயணித்து ஆவலுடன் வந்த இளைஞரிடம் மிகச் சில ஆதாரக் கேள்விகளைக் கேட்டேன். எதற்கும் சத்தான பதில் இல்லை. ஒரு சின்ன ஹோம் வொர்க் போல ஒன்றைக் கொடுத்து “இதைச் செய்துவிட்டு ஒரு மாதம் கழித்து வாங்க. அது வரை அவசரப்பட்டு பணம் போடாதீங்க” என்று சொல்லி அனுப்பினேன். சுருங்கிய பலூனாய் திரும்பிப் போனார். (பிறகு என்ன ஆனது அந்த வியாபாரம் என்பதைப் பிறகு சொல்கிறேன்!)
தொழில் தொடங்கி வெற்றி பெறுதல் என்பது உயிர் பெறுதல் போலத்தான். ஆயிரக்கணக்கான விந்துகள் முந்தியும் ஒன்றுதான் இலக்கை அடைகிறது. மற்றவை அழிந்து போகின்றன. அந்த உயிர் நிலை கொண்டு சீரான சூழலில் வளர்ந்து உலகின் ஒளியைக் காண நேரம் பிடிக்கிறது. அதற்குப் பின்தான் புற வாழ்க்கை தொடங்குகிறது.
இந்த அத்தனை விதிகளும் தொழில் தொடங்குவதற்கும் பொருந்தும். ஆயிரம் பேர் தொழில் தொடங்கினாலும் வெற்றி ஒருவருக்குத் தான். அதுதான் நிதர்சனம். ஆனால், அந்த ஒன்று நாமாக இருப்போமே என்ற நம்பிக்கையில் ஒவ்வொருவரும் முதலீடு செய்கின்றனர்.
நாமளே ‘கிங்’ ஆகிடலாம்
சினிமா எடுப்பவர்கள் யாராவது படம் ஓடாது என்று நினைத்தா பூஜை போடுகிறார்கள்? எந்தப் படம் ஓடும் எது ஓடாது என்ற தங்க விதி தெரிந்தால் மற்றவர்கள் ஏன் காசைக் கரியாக்கப் போகிறார்கள்? உண்மை என்னவென்றால் அப்படி ஒரு தங்க விதி இல்லை!
ஆனாலும் தனியாகத் தொழில் தொடங்கும் எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு. காரணங்கள்தான் வேறுபடும். “ஒருத்தருக்கு கீழே வேலை செய்யப்படாது”, “நம்ம தகுதிக்கு வேலைக்குப் போகலாமா?”, “பெருசா பணம் சேக்கணும்னா பிஸினஸ்தான்”, “யாருக்கோ பண்ற உழைப்பை நமக்கே போட்டா நாமளே கிங் ஆயிடலாம்”, “நமக்குத் தெரிஞ்ச தொழில். கண்டிப்பா தப்பு பண்ணாது” இப்படி ஆயிரம் சொல்லலாம்.
சொந்தத் தொழில் ஆபத்தா?
தொழிலில் ஜெயித்தவர்களுக்கு மட்டுமே ஊடக வெளிச்சம் உண்டு. “ரெட் பஸ் ஆரம்பிச்ச பசங்க அஞ்சு வருஷத்துல ஆயிரக்கணக்கான கோடி டர்ன் ஓவர் பண்ணாங்க!”, “அம்பானிகூடப் பெட்ரோல் பங்குல வேலை பாத்துதான் பெரிய ஆளானார்!”.
எங்கோ ஆழ்மனதில் இந்தச் செய்திகள் எல்லாம் நல்ல வியாபார எண்ணமும் கடின உழைப்பும் மட்டும் இருந்தால் போதும்; அவை வெற்றியைத் தந்துவிடும் என்ற தவறான படிப்பினையை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் தொழில் தொடங்கித் தோற்றவர்கள்தான் அதிகம். ஏன் தோற்றோம் என்று அறிய முடியாதவரை வெற்றிக்குப் போடும் மூலதனங்கள் வீணே!
உங்களுடைய சுற்றத்திலேயே பாருங்கள். தொழில் செய்து முன்னேறியவர்கள் எத்தனை பேர்? தொழில் செய்து இழந்தவர்கள் எத்தனை பேர்? குறிப்பாக முதல் தலைமுறையினருக்குத் தொழில் செய்தல் பெரும் சவாலே. இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால் சிறு தொழில் முனைவோர் இழக்கும் செல்வம் அவர்கள் குடும்பம் சம்பாதித்தவை. அல்லது வாங்கிய கடனுக்கு வாழ்வெல்லாம் வட்டி கட்டுவர். அவர்கள் என்ன விஜய் மல்லையாவா என்ன, கடன் வாங்கிக் கட்டாமல் வாழ!
சொந்தத் தொழில் அவ்வளவு ஆபத்தா? இந்தியாவில் சாலையில் வண்டி ஓட்டுவதே பெரிய ரிஸ்க் தான். இந்தியர்களை அதிகம் கொல்வது மாரடைப்பைவிடச் சாலை மரணங்கள்தான். அதற்காக வண்டியில் போகாமல் / ஓட்டாமல் இருக்கிறோமா என்ன? நன்கு ஓட்டத் தெரிந்து கொண்டு சாலைக்கு வருவதுதான் பாதுகாப்பு. அதேபோலத்தான் தொழில் முயற்சியும். கற்றுத் தேர்ந்து வருபவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என வணிக நிர்வாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வழிகாட்டுதல் இங்கே
இன்று incubation center என்று ஐ.ஐ.டி/ ஐ.ஐ.எம். நிறுவனங்களில் தொழில் முனைவோரை முதல் ஆறு மாதம் அடை காத்துத் தொழில் ஓட்டத்தைச் சீராக்கி வெளியே அனுப்புகின்றனர். ஆனால் இவை படித்தவர்களுக்கும், நகரவாசிகளுக்கும், ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கும்தான் பயன்படுகின்றன.
ஆனால், நம் கிராமங்களில், சின்ன டவுன்களில், பெரு நகரங்களில் பல இளைஞர்கள் தொழில் செய்யத் தயாராக இருக்கிறார்கள். எண்ணம், உழைப்பு, கடன் வாங்கும் தகுதி எல்லாம் உள்ளன. ஆனால், வழிகாட்டுதல் இல்லை. பாடத்திட்டத்தில் இது இல்லை. வாழ்க்கையில் பட்டுத்தெளிந்து மீண்டும் முயற்சிக்கும் வசதிகள் பலருக்கு இல்லை.
எளிய தமிழில் தொழில் முனைவின் சகலக் கூறுகளையும், வியாபார உதாரணங்களுடன், நடைமுறைப்படுத்தக்கூடிய ஆலோசனைகளை இவர்களுக்கு வழங்கினால் எப்படி இருக்கும். அதைத்தான் செய்யப் போகிறோம்.
யாருக்கு வியாபாரம் ஒத்து வரும், என்ன பிஸினஸ் மாடல், யார் பார்ட்னர், எப்படிப் பதிவு செய்வது, எப்படிக் கடன் வாங்குவது, எப்படிச் சந்தைப்படுத்துவது, எப்படி முதலீட்டாளர்களைப் பெறுவது, பணத்தை-பணியாளர்களை கையாள்வது எப்படி, போட்டியைச் சமாளிப்பது எப்படி, தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது எப்படி, வியாபாரத்தை மாற்றுவது எப்படி எனப் பல ‘எப்படி’களைப் பார்க்கப் போகிறோம்!
இந்தக் கேள்விகள் எல்லா வளர்ந்த நிறுவனங்களுக்கும் உண்டு.
நீங்கள் பண முதலீடு செய்வதற்கு முன் இதைப் படிப்பது தற்காப்பு மட்டுமல்ல இதுவும் ஒரு முதலீடுதான்!
கலக்கலாம் பாஸ்! வாங்க தொழில் தொடங்கலாம்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 07.02.2017