disalbe Right click

Showing posts with label பெண்கள் - மருத்துவம். Show all posts
Showing posts with label பெண்கள் - மருத்துவம். Show all posts

Thursday, December 1, 2016

பிரசவ கால சிக்கல்கள்

பிரசவகால சிக்கல்கள் - என்ன செய்ய வேண்டும்?
பெரும்பாலான பிரசவங்கள் சுகப் பிரசவமாகவே நிகழ்கின்றன. ஆனால், சிலருக்குச் சிக்கலானதாக மாறிவிடுகின்றன. இதற்கு, தாயின் உடல்நிலையும் சிசுவின் உடல்நிலையும் காரணமாக இருக்கின்றன. 
சில நேரங்களில், கர்ப்பம் தரிப்பதற்கு முன்னர் பெண்ணுக்கு இருந்த சில பிரச்னைகள்கூட கர்ப்ப காலத்தையும் பிரசவத்தையும் சிக்கலானதாக மாற்றிவிடுகின்றன. இதை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து, சிகிச்சை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தாய், சேய் இருவரின் உயிரையும் காப்பாற்ற முடியும். 
போதுமான மருத்துவ வசதியின்மை, மருத்துவ வசதி பெற நெடுந்தூரம் பயணம் செய்யவேண்டிய நிலை, வறுமை, போதுமான விழிப்புணர்வு இன்மை உள்ளிட்ட காரணங்களால் பல கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு வருவது இல்லை.
கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்கள்…
❤  கருச்சிதைவு, இறந்தே பிறப்பது.
❤  உயர் ரத்த அழுத்தம்.
❤  கர்ப்ப கால சர்க்கரைநோய்.
`ப்ரீஎக்ளாம்சியா’ (Preeclampsia) எனப்படும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்படும் நிலை.
❤ குறை பிரசவம்.
பிரசவ காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்கள்:
❤ பிரசவ வலி ஏற்படும். ஆனால் குழந்தையின் தலை கீழே இறங்காது. இதற்கு பெண்ணின் இடுப்புப் பகுதி, குழந்தை வெளிவரும் பாதையின் அளவில் குறைபாடு இருக்கலாம். இதை அப்ஸ்ட்ரக்டட் லேபர் (Obstructed labour) என்று சொல்வோம். இந்தச் சூழலில் சிசேரியன் செய்வதுதான் நல்லது.
பிரசவத்துக்குப் பிறகு, கர்ப்பப்பை சுருங்க வேண்டும். சில பெண்களுக்கு, சுருங்காமல் ரத்தப்போக்கு ஏற்படும். அதிக ரத்தப்போக்கு உயிரிழப்பை ஏற்படுத்தலாம்.
சிலருக்கு குழந்தையின் தலை வெளியே வருவதற்குப் பதிலாக கால் முதலில் வெளியே வரும். ஆனால், சிலருக்கு குழந்தையின் அதிக உடல் எடை காரணமாக தோள்பட்டை வெளியே வராது. இதனால், குழந்தைக்கு காயமோ உயிரிழப்போ ஏற்படலாம்.
தாய்சேயை காக்கும் வழிகள் என்னென்ன?
❤ கர்ப்பிணிகளுக்கு, பிரசவத்துக்கு முன், பிரசவத்தின்போது, பிரசவத்துக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்த விழிப்புஉணர்வை அளிக்க வேண்டும்.
❤ கர்ப்பம் தரிக்க திட்டமிடுவதற்கு முன்பிருந்தே ஃபோலிக் அமிலம்  சாப்பிடுவது, கர்ப்பம் தரித்த பிறகு டாக்டர் பரிந்துரைப்படி கால்சியம், இரும்புச்சத்து மாத்திரையை எடு்த்துக்கொள்ள வேண்டும்.
❤ கர்ப்பம் தரித்த பிறகு, மாதத்துக்கு ஒருமுறை கட்டாயம் மகப்பேறு மருத்துவரை சந்தித்து, எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்டவற்றைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.
❤ ப்ரீஎக்ளாம்சியா பிரச்னை இருப்பதைக் கண்டறிந்தால், உரிய சிகிச்சை பெறுவதன் மூலம் எக்ளாம்சியா என்ற உயிருக்கு ஆபத்தான நிலைக்கு செல்வதைத் தடுக்கலாம்.
❤ மூன்று மற்றும் 5-வது மாதத்தில் ஸ்கேன் செய்து குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் அல்லது ஏதேனும் உடல் குறைபாடு உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும்.
❤ கை தேர்ந்த மருத்துவர்கள் இருக்கும் இடத்தில் பிரசவம் நிகழ வேண்டும். அப்போதுதான், பிரசவச் சிக்கல் இருந்தால், விரைவான நடவடிக்கைகள் எடுக்க முடியும்.
❤ பிரசவ கால பாதிப்புகளில் அடுத்த முக்கியக் காரணியாக இருப்பது, நோய்த்தொற்றுக்கள். சரியான நேரத்தில் நோய்த்தொற்றைத் தவிர்த்து, தடுப்பூசி எடுத்துக்கொள்வது போன்ற பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதால் தாய் சேயை நலனைப் பாதுகாக்கலாம்.
டாக்டர்கள் இலவச சேவை!
`உலக அளவில் ஒவ்வொரு நாளும் 830 கர்ப்பிணிகள் பிரசவச் சிக்கல் காரணமாக உயிரிழக்கின்றனர்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். இதில் 99 சதவிகித உயிரிழப்புகள், வளரும் நாடுகளில் நடக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு லட்சம் பிரசவங்களில், 178 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
 இந்த அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட, சில கர்ப்பிணிகள், கர்ப்ப காலத்தில் ஒரு முறைகூட மகப்பேறு மருத்துவரை சந்திக்காததுதான் காரணம். இந்தக் குறையைப் போக்க, ‘ஒவ்வொரு மாதமும் 9-ம் தேதி ஒருநாள் மட்டும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர்கள், ரேடியாலஜி நிபுணர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து கர்ப்பிணிகளுக்கு இலவசப் பரிசோதனை, ஆலோசனை வழங்க வேண்டும்’ என்று பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கான புதிய திட்டம் ஒன்றை யுனிசெஃப் துணையுடன் மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தில் சேர்ந்து சேவை செய்ய விரும்பும் மருத்துவர்கள் http://pmsma.nhp.gov.in என்ற இணை தளத்தில் நேரடியாக தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம். 5616115 என்ற எண்ணுக்கு PMSMA (பெயர்) டைப் செய்து அனுப்புவது அல்லது 1800 180 1104 என்ற டோல் ஃப்ரீ எண்ணை அழைப்பதன் மூலம் தங்களை இணைத்துக்கொள்ளலாம்.
நன்றி : டாக்டர் விகடன் – 01.12.2016

Tuesday, November 15, 2016

சிசேரியன் பிரசவம்


சிசேரியன் பிரசவம் - என்ன செய்ய வேண்டும்?

சிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்!
மருத்துவத் துறை வளர்ச்சியடையாத காலத்தில், நம் முன்தலைமுறைப் பெண்கள் சுகப்பிரசவமாகவே குழந்தைகளை நலமுடன் பெற்றெடுத்தனர். ஆனால், தொழில்நுட்பங்கள் பெருகியுள்ள இந்த நூற்றாண்டிலோ, அந்த அளவுக்கு சுகப்பிரசவங்களை சாத்தியமாக்க முடியவில்லை என்பது விசித்திரம்.

சில சந்தர்ப்பங்களில் மருத்துவக் காரணங்களால் சிசேரியன் பிரசவமே பாதுகாப்பானது என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அதே சமயம், அவசியமே இல்லை என்றாலும், இப்போது சிசேரியன் பிரசவத்தை நாடிச்செல்வோர் அதிகரித்து வருவதும் உண்மை.

“பொதுவாக இவர்களின் மனநிலை, ‘சிசேரியன் பிரசவம்னா எந்த ரிஸ்க்கும் இல்லை’ என்பதாக இருக்கிறது. அது அறியாமைதான்’’ என்கிற மகப்பேறு மருத்துவர் டாக்டர் நித்யா தேவி, சிசேரியன் சூழல்கள் பற்றியும் கூறுகிறார்.

எப்போது சிசேரியன் அவசியம்?

“பொதுவாக கருவின் வளர்ச்சி 39 வாரங்கள் முழுமையடைந்த பிறகு, 40-வது வாரத்துக்கு இடைப்பட்ட நாட்களில் பிரசவமாவதே ஆரோக்கியம். சிலருக்கு 37 – 40 வாரங்களில் பிரசவமாகலாம். 

இந்த வாரங்களில் வலி வந்து, சுகப்பிரசவத்துக்கு வழியில்லாமல், தாய்க்கோ பிறக்கப்போகும் குழந்தைக்கோ ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டு, விரைவாக குழந்தையை வெளியில் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே சிசேரியன் செய்வோம்.

 பின்வரும் சூழல்கள் அதற்கு உதாரணங்கள்…

* முந்தைய பிரசவம் சிசேரியனாக இருக்கும்பட்சத்தில்…

* தாய்க்கு இதய நோய், நுரையீரல் பிரச்னை, அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு, கர்ப்பப்பை வாய் பலவீனமாக இருப்பது போன்ற பிரச்னைகள் இருந்தால்…

* கர்ப்பப்பை சுவரோடு நஞ்சு ஒட்டியிருப்பது, கர்ப்பப்பை வாயில் நஞ்சு இருக்கும்போது…

* பிரசவ நேரத்தில் குழந்தையின் இதயத் துடிப்பு, ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருந்தால்…

* கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தையின் பொசிஷன் மாறுபட்டு இருந்தால்…

* குழந்தையின் எடை நான்கு கிலோவுக்கு அதிகமாக இருந்தால்…

* கர்ப்பப்பையில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால்…

* தாய்க்கு HIV பாதிப்பு இருந்தால்…

* கர்ப்பப்பையில் ஏதாவது பெரிய கட்டி இருந்து அகற்றப்பட்டிருந்தால்…

* இரட்டைக் குழந்தைகள் எனில்…

 * வலி வந்து கர்ப்ப வாய் திறக்காதபோது…

* கர்ப்பப்பையில் நீர்ச்சத்துக் குறையும்போது…

* 30 வயது தாண்டி முதல் குழந்தையைப் பெற்றுக்கொள்ளும்போது…

தாயின் வேண்டுகோளுக்கு இணங்க செய்யப்படும் சிசேரியன் (CDMR – Cesarean Delivery on Maternal Request)

ஜோதிடர் குறித்துக் கொடுத்த தேதியில் குழந்தையை வெளியே எடுக்க விரும்புவது, பிறந்தநாள், திருமணநாள், பண்டிகை நாட்கள், ஃபேன்ஸி தினங்களில் குழந்தை பிறக்க விரும்புவது, ஆடி, சித்திரை மாதங்களில் குழந்தை பிறந்தால் ஆகாது என்ற மூடநம்பிக்கை, இவற்றுடன் பிரசவ வலிக்குப் பயந்து கர்ப்பிணியும் அவருடைய குடும்பத்தினரும் சிசேரியன் செய்ய மருத்துவர்களிடம் கோருவது… இந்தக் காரணங்களுக்காகக் கூட, சுகப்பிரசவத்துக்கான வாய்ப் பிருக்கும் சூழலிலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

1970 – 2010 வரை 5% ஆக இருந்த சிசேரியன் பிரசவங்கள், 2010-க்குப் பிறகு 15% ஆக அதிகரித்தன. இப்போது அவை 30% ஆக அதிகரித்துவிட்டதாக உலக அளவிலான ஓர் ஆய்வு கூறுகிறது.

சிசேரியன் பிரசவத்தால் வரும் பிரச்னைகள்!
* சிசேரியன் பிரசவமான பெண்களுக்கு உடல்வலி, வயிற்று வலி, தலைவலி, முதுகுவலி, அதிக  உதிரப்போக்கு ஏற்படலாம்.

* தாயிடம் இருந்து சிசுவுக்கு உணவு மற்றும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லக்கூடிய நஞ்சுக் கொடி (placenta), தாய் மற்றும் குழந்தைக்கு இணைப்புப் பாலமாக இருக்கும். அந்த நஞ்சுக்கொடி பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பையில் இருந்து தானாகவே பிரித்துவந்துவிட வேண்டும். ஆனால், சிசேரியன் பிரசவத்தில் நஞ்சுக்கொடி கர்ப்பப்பையிலேயே ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் அடுத்த பிரசவத்தின்போது, தாய்க்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகலாம்.

* சிசேரியன் பிரசவம் செய்வதால், தாயின் கர்ப்பப்பையும் நீர்ப்பையும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளக்கூடும். இதனால் அடுத்த குழந்தையும் சிசேரியனாக இருக்கும்பட்சத்தில், அப்போது தாய்க்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகும்.

  * சிசேரியன் பிரசவத்தில் பிறந்த குறை மாத குழந்தைகளுக்குப் பிரசவ நேரத்திலும், பிறந்து சிறிது நேரம் கழித்தும் மூச்சுத்திணறல் ஏற்படுவது, பச்சிளம் குழந்தையின் வயிற்றுக்குள் ரத்த ஓட்டம் சுருங்கி அதனால் மலக்குடல் அழுகி ரத்தப்போக்கு ஏற்படுவது (Necrotising enterocolitis), தொற்றுநோய்கள் என பிறந்த முதல் மூன்று நாட்களில் பல பிரச்னைகள் ஏற்படலாம்.

* நிறைமாதமான 37 – 40 வாரங்களுக்கு முன்பாக கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் ஆபரேஷன் செய்வது தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
சுகப்பிரசவத்தில் சிரமங்களை எதிர்கொண்டு வெளிவரும் குழந்தைகள்  எதிர்காலத்தில் உடல்  மற்றும் மனதளவில் தைரியமானவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருப்பார்கள் என்கிறது ஓர் ஆய்வு முடிவு. 

இதற்காகவும் சிசேரியன் பிரசவங்கள் தவிர்ப்போம், சுகப்பிரசவத்துக்கு தயாராவோம்” என்கிறார்  டாக்டர் நித்யா தேவி.
_________________________________________________________________________________

சிசேரியன் பிரசவம் தவிர்க்கலாம்!
* இடுப்பு எலும்புப் பகுதிக்கு பயிற்சி கொடுப்பது சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும். குழந்தையின் தலை மற்றும் உடல் வெளியேறும் வகையில் பெண்ணின் பிறப்புறுப்பு விரிந்து கொடுக்க, இடுப்பு எலும்பைச் சுற்றியுள்ள தசைகளும் உறுப்புகளும் நன்றாக ஒத்துழைக்க வேண்டும். நடைப்பயிற்சி, மருத்துவர் ஆலோசனையுடன் யோகா, கால்களை மடக்கி நீட்டுவது போன்ற எளிய உடற்பயிற்சிகள்  இதற்கு கைகொடுக்கும்.

* கர்ப்பகாலத்தில் உறங்குவது, அமர்வது என ஒரே நிலையில் நிலைகொள்ளும் ஓய்வு தேவையில்லை. அன்றாட வேலைகளை, குனிந்து, நிமிர்ந்து செய்யும் வீட்டுவேலைகளைச் செய்யலாம்.

* துரித உணவு மற்றும் அதிக உப்பு, இனிப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, சத்தான உணவுகளை உட்கொண்டு மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

நன்றி : அவள்விகடன் - 29.11.2016

Sunday, October 23, 2016

கர்ப்பப்பையை பாதிக்கும் பீகாஸ் சிண்ட்ரோம்


கர்ப்பப்பையை பாதிக்கும் பீகாஸ் சிண்ட்ரோம் - என்ன செய்ய வேண்டும்?

பெண்களின் பருவ வயதுக்குப் பின் அவர்களின் கர்ப்பப்பையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்களுக்குத் துணைபுரிவது, பூப்படைந்தவுடன் அவர்களது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள்தான். 

ஆனால், இந்த ஹார்மோன்கள் சரியான அளவில் சுரக்க வேண்டும். அளவு மாறுபட்டால், பல பிரச்னைகள் ஏற்படும். இதுபோன்ற ஹார்மோன் கோளாறுகளால் இளம் பெண்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

ஹார்மோன் கோளாறால் பெண்களுக்கு ஏற்படும் ஒரு முக்கியக் குறைபாடு, பி.சி.ஓ.எஸ் சிண்ட்ரோம். மார்பகப் புற்று, கர்ப்பப்பைவாய்ப் புற்று, தைராய்டு பிரச்னைகள், இரும்புச்சத்துக் குறைபாடு எனப் பெண்களைப் பாதிக்கும் பிரச்னைகளின் வரிசையில், அடுத்த சவாலாக வந்து நிற்பதுதான் இந்த பி.சி.ஓ.எஸ் சிண்ட்ரோம். 

இது எந்த இளம்பெண்ணுக்கு வேண்டுமானாலும் வரலாம். வளர்ந்துவரும் நாடுகளில் பத்தில் ஒரு பெண்ணுக்கு இந்த பி.சி.ஓ.எஸ் பாதிப்பு உள்ளது.    

பெண்களின் கர்பப்பையில் உருவாகும் சிறு சிறு கட்டிகளே பி.சி.ஓ.எஸ் சிண்ட்ரோம் என்னும் குறைபாடு. (Poly Cystic Ovary Syndrome - PCOS).

என்னென்ன பாதிப்புகள்?

பூப்படைந்த பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கும். ஆண்களுக்குச் சுரக்கும் ஆன்ட்ரஜன் ஹார்மோன்கள் மிகக் குறைந்த அளவிலேயே பெண்களுக்குச் சுரக்கும். ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றத்தினால் பெண்களுக்கு ஆன்ட்ரஜன் சுரப்பு சற்று அதிகமாகிவிடும். 

இதனால் ஆண்களைப்போல கை, கால்,  முகத்தில் முடி முளைக்கும். கன்னங்களின் ஓரம், மூக்கின் கீழ் மீசைபோல மெலிதான 'பூனை முடி' ஆகியவை முளைத்தால், ஹார்மோன் குறைபாடு உள்ளது என அர்த்தம்.

இன்சுலின் ஹார்மோன் கணையத்தில் சுரக்கும். பி.சி.ஓ.எஸ் குறைபாட்டால், இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படுகிறது. இதனால், வழக்கத்தைவிட இன்சுலின் சுரப்பு அதிகமாகிவிடும். இதனால் பி.சி.ஓ.எஸ் குறைபாடுடைய பெண்களுக்குச் சர்க்கரை மற்றும் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

திடீரென உடல் எடை கூடும். மனஅழுத்தம், முகத்தில் எண்ணெய்ப் பிசுக்குள்ள சிறுசிறு கட்டிகள் ஆகியவை ஏற்படும். திடீரென ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

சீரற்ற மாதவிலக்கு, அதீத ரத்தப் போக்கு ஏற்படலாம்

என்ன காரணம்?

பி.சி.ஓ.எஸ் குறைபாடு ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் இன்னும் அலோபதி மருத்துவத்தில் கண்டறியப்படவில்லை. இது பரம்பரை நோயாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது.

என்ன சிகிச்சை?

இதனை முற்றிலுமாகக் குணமாக்க மருந்துகள், சிகிச்சைகள் இல்லை. இந்தக் குறைபாடு உள்ளதா, கர்பப்பையில் கட்டிகள் உள்ளனவா என அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் பரிசோதனை மூலமாக மருத்துவர்களால் கண்டறியப்படும். பின்னர், அதற்குண்டான சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்படும்.

புகை / மதுப் பழக்கங்களைக் கைவிடுதல், முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்றுதல், உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல் ஆகிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

சாப்பிட வேண்டிய உணவுகள்!

வைட்டமின் ஏ, டி, ஈ, சி, பி ஆகியவை பி.சி.ஓ.எஸ் குறைபாடுடைய பெண்களுக்கு மிகவும் அவசியம். அன்றாட உணவில் இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வைட்டமின் ஏ- 

கேரட், பசலைக் கீரை, முலாம்பழம், முட்டை, அவகேடோ, சால்மன் மீன்.

வைட்டமின் டி- 

புரோகோலி, காளான், சூரிய ஒளியில் நிற்பது.

வைட்டமின் சி- 

பேரீச்சை, உலர் திராட்சை, தக்காளி, கொய்யா, ஆரஞ்சுப் பழம்.

வைட்டமின் பி - 

அவகேடோ, மீன், இறைச்சி, முட்டை, ஆஸ்பராகஸ், பருப்பு வகைகள்.

வைட்டமின் ஈ - 

குடமிளகாய், நட்ஸ், வேர்க்கடலை, கீரைகள்

தவிர்க்க வேண்டிய உணவுகள்!

பால்

பெண்களின் உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் செயல்பாட்டை கால்சியம் தூண்டிவிடும். இதனால் முகத்திலும் உடலிலும் முடி வளர்ச்சி அதிகரிக்கும். இந்தக் குறைபாடு உள்ள பெண்கள் முடிந்தவரை பால் மற்றும் பால் பொருட்களை குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது.

சோயா

சோயாவில் அதிகப் புரதம் உள்ளது. கருமுட்டை உருவாகுவதின் வேகத்தைக் குறைக்கும். எனவே, கர்ப்பக்காலத்தில் சோயா பாலைத் தவிர்க்க வேண்டும்.
அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ள உணவுகள்
நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையின் அளவைக் கணக்கிடுவது 'கிளைசெமிக் இண்டெக்ஸ்' என்னும் அளவுகோல். 

அரிசி சாதம், தோசை, இட்லி, கிழங்கு வகைகள் ஆகியவற்றில் உள்ள மாவுச்சத்து காரணமாக, கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகரிக்கும். இதனால் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சாச்சுரேட்டட் கொழுப்பு

இறைச்சி மற்றும் பாலில் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. இது பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவை அதிகரிக்கும். இதனால் உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள், உடலில் சேர்வது தடைப்படும்.

டரான்ஸ் ஃபேட்

நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பாக மாறுவதே டிரான்ஸ் ஃபேட். சமையலில், ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை, மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது, உடல் பருமன், இதய நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

பி.சி.ஓ.எஸ் குறைபாடு உள்ள பெண்களுக்கு, இந்த நோய்கள் வர இரு மடங்கு அதிகம் என்பதால் ஹோட்டல் உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். வீட்டிலும், எண்ணெய் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

நன்றி : விகடன் செய்திகள் – 21.10.2016

Saturday, May 14, 2016

வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிப் பெண்கள்


வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிப் பெண்கள்

''கர்ப்பக் காலத்தில் பெண்கள், ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ரசித்து, மகிழ்ந்து, மனதையும், உடலையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். இந்தக் காலக்கட்டத்தில் நம் உடல், நம்முடைய கட்டுக்குள் இருக்காது. நாள் முழுக்க வேலை செய்ததுபோன்ற உணர்வு இருக்கும். அலுவலகத்துக்குச் சென்று வரும் பெண்களுக்கு, அதனால் ஏற்படும் பயணக் களைப்பு, வேலையை முடிக்க வேண்டுமே என்ற பரபரப்பால் ஏற்படும் மன அழுத்தம் எனப் பல்வேறு காரணங்களால், உடல் நலம் பாதிக்கப்படும். தாயைவிட, வயிற்றில் உள்ள குழந்தை அதிகப் பாதிப்புக்கு உள்ளாகலாம். வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் என்பதும் சற்றுப் பிரச்னைதான். வேலைப் பளுவால் ஏற்படும் மன அழுத்தத்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்குப் போதிய ஆக்ஸிஜன், ரத்தம், சத்துக்கள் கிடைக்காமல் போகும். ஆனால், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்'' என்கிறார் ராஜபாளையத்தைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் பிரேமலதா.

உணவு
கர்ப்பக் காலத்தில் செரிமான மண்டலம் மெதுவாகத்தான் இயங்கும். குழந்தையின் வளர்ச்சியால் வயிறும் பெரிதாகிக்கொண்டே போகும். இதனால், ஒரே நேரத்தில் நன்றாகச் சாப்பிட முடியாது. ஆனால், இந்தத் தருணத்தில்தான் உடலுக்கு அதிக அளவு சத்துக்கள் தேவைப்படும். எனவே, மூன்று வேளை என்பதை, சிறிது சிறிதாகப் பிரித்து ஆறு வேளைகளாகச் சாப்பிடுங்கள். சரியான நேரத்தில், போதிய இடைவெளியில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது, வயிற்றில் வளரும் குழந்தைக்கும் என்பதை மனதில்கொள்ள வேண்டும்.
வீட்டை விட்டுக் கிளம்பும்போது ஆப்பிள், கொய்யா, வாழைப் பழம், பேரிக்காய் போன்ற சத்துள்ள பழங்களை நறுக்காமல், எடுத்துச்செல்ல வேண்டும். பழங்களைக் கடித்துச் சாப்பிடுவது நல்லது. முடியாதபட்சத்தில் ஜூஸாகச் செய்து சாப்பிடலாம். உடல் வறட்சி நீங்குவதுடன் வயிறும் நிறையும்.  
எப்போதும் காய்ச்சி ஆறவைத்த நீரை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என 12 டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது.  
உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய உலர் பழங்களைக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதிக வேலைச் சுமையின்போது, வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.  
நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைய ஆரம்பித்துவிடும். இதனால், சிசுவின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். எனவே, எப்போதும் கையில் ஒரு பிஸ்கட் பாக்கெட்டைவைத்துக் கொண்டு, வயிற்றைக் காயப்போடாமல், பசிக்கும்போது சாப்பிடுவது அவசியம்.
இரவில் ஆவியில் வேகவைத்த அல்லது எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
நெஞ்செரிச்சல், எதுக்களிப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால், வறுத்த, பொரித்த, அதிகம் காரம், எண்ணெய் உணவுகளைச் சாப்பிடக் கூடாது.  
உடற்பயிற்சி
அலுவலகத்தைச் சுற்றி நடைப்பயிற்சி செய்யுங்கள். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் காலில் ரத்தம் தங்குதல், வெரிகோசிஸ் வெய்ன், ரத்தம் கட்டிப்போதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதற்கான வாய்ப்பை நடைப்பயிற்சி தடுக்கிறது. கடினமான உடற்பயிற்சிகள், அதிக எடைகொண்ட பொருள்களைத் தூக்குவது போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.
அலுவலகம் முடிந்து வீடு வந்ததும், நல்ல வெளிச்சமான பகுதியில் காலாற சிறிது நேரம் நடக்கலாம். கடின வேலைகளைத் தவிர்த்து, முடிந்தவரை கர்ப்பக் காலத்தில் எடையையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.  
அலுவலகத்தில் போதிய இடைவெளியில் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். அந்த நேரத்தில் ஓய்வாக அமர்ந்து மனதை அமைதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இது, வேலையால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைப் போக்க உதவும்.
பயணம்
வேலைக்குச் செல்லும்போது, பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம், இறுக்கத்தைத் தவிர்க்கலாம்.
பஸ்ஸில் அலுவலகம் செல்லும்போது குமட்டல், வாந்தி, சோர்வு ஏற்படலாம்.  தானாகவே மருந்துகளை வாங்கிச் சாப்பிடக் கூடாது.    
பேருந்து, அலுவலகம் என எந்த இடத்திலும் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து நிற்பது நல்லதல்ல. கால் நரம்புகள் சுருண்டுகொள்ளும். கெண்டைக்கால் வலி வரலாம். Deep Vein Thrombosis பிரச்னை ஏற்படும். உட்கார்ந்து பயணிப்பது நல்லது. வீடு திரும்பியதும் மிதமான வெந்நீரில் கால்களைவைத்து எடுக்கவும். இரண்டு வேளைகள் குளிப்பது நல்லது.
இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை, அவசியம் சிறுநீர் கழிக்க வேண்டும். சிறுநீரை அடக்கிவைப்பதால், நீர்க்கடுப்பு, கல் அடைப்பு வரலாம்.  
கணவருடன் டூவீலரில் பயணிக்கும்போதும், வண்டியை ஓட்டிக்கொண்டு செல்லும்போதும் மேடு பள்ளம் பார்த்துச் செல்ல வேண்டும். இதனால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு அதிர்வு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
ஹீல்ஸ் அணியவே கூடாது. தடுக்கி விழ நேரலாம். இதுவும் குழந்தைக்கு அதிர்வை ஏற்படுத்தும்.
 நிம்மதியான தூக்கம்
பேறு காலத்தில் மசக்கையால் வாந்தி, மயக்கம், அஜீரணம், சோர்வு காரணமாக சாப்பாட்டில் நாட்டமின்மை ஏர்படலாம். தூக்கமின்றித் தவிக்கலாம். அல்லது அதீதத் தூக்கம் வரலாம். அலுவலகத்தில் நடந்த சில கசப்பான விஷயங்களால் தூக்கம் இல்லாமல் போகலாம். தூக்கம் தொலைந்தால், மறுநாள் அன்றாடக் கடமைகளைக்கூடச் செய்ய முடியாமல் அவதிப்பட வேண்டியிருக்கும். மேலும், இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்காக எழுவதும், கால் நரம்புகள் முறுக்கேறிக்கொள்வதும் சகஜம்.
குறிப்பிட்ட நேரத்தில் தூங்கிவிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். குறைந்தது ஆறு முதல் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். இது, வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நல்லது.  
படுக்கச் செல்வதற்கு முன்பு, அகலமான வாளியில் வெந்நீரை நிரப்பி, அதில் எலுமிச்சைச் சாறுவிட்டு 10 நிமிடங்கள் கால்களை அதில்வைத்து, எடுத்துத் துடைத்த பின் தூங்கச் செல்லலாம்.
கர்ப்பிணிகளுக்கென்று விற்கப்படும் சற்றே உயர்ந்த தலையணைகளை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.  
- ரேவதி
நன்றி : டாக்டர்விகடன் - 16.02.2014

Monday, April 4, 2016

சிசேரியன்


சிசேரியன் - என்ன செய்ய வேண்டும்?

பிரசவம், ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறப்பு; ஒரு புதிய உயிரைப் பூமிக்கு அழைத்துவரும் 10 மாதத் தவத்தின் பரபரப்பு. எல்லா பெண்களுக்கும் `சுகப் பிரசவம்சாத்தியமாவது இல்லை. பல்வேறு காரணங்களால் சில பிரசவங்களில் சிசேரியன் அவசியமாகிறது. உலகம் முழுதும் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சிசேரியன் அறுவைசிகிச்சை முறை இருக்கிறது. ரோமானியப் பேரரசர் சீசர் அப்படியான அறுவைசிகிச்சையில் பிறந்தவர்தான் என்கிறது வரலாறு.
நெருக்கிய உறவினருக்கு சமீபத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. நார்மல் டெலிவரி ஆகிவிடும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், எப்படி சிசேரியன் என்று கேட்டேன், “டாக்டர் குறிப்பிட்ட நாளில் நான் மருத்துவமனையில் சேர்ந்தேன். அங்கே, எனக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி வந்து அலறினார். அந்த பயத்தில், எனக்கு சிசேரியன் செய்திடுங்க பிளீஸ் என்று நான் அலற ஆரம்பித்துவிட்டேன். கடைசியில், எனக்கும் சிசேரியன்என்றார்.
இன்று பல பெண்கள், `சிசேரியனே வலி இல்லாத பிரசவத்துக்குச் சிறந்த வழிஎன, சுகப் பிரசவ வாய்ப்பு இருந்தும் தாங்களாக முன்வந்து சிசேரியன் செய்துகொள்கின்றனர். சிலர், ஜோதிடத்தை நம்பி சிசேரியன் செய்கின்றனர். பொதுவாக, சுகப் பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டு தாய் அல்லது சேயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையிலேயே சிசேரியன் பரிந்துரைக்கப்படும்.
சிசேரியன் ஏன் பரிந்துரைக்கப்படுகிறது?
முன்பே தீர்மானிக்கப்பட்ட சிசேரியன், சுகப் பிரசவம் சாத்தியப்படாத நேரத்தில் செய்யப்படும் அவசர சிசேரியன் என இரண்டு வகைப்படும்.
கருவுற்று 38-வது வாரத்தில் பனிக்குடம் உடைந்து, பெண்ணின் பிறப்புறுப்பு வழியாகக் குழந்தையை வெளியே எடுப்பது சுகப் பிரசவம். இதற்கு, பெல்விஸ், பேசேஜ், பவர், பாசஞ்சர் எனும் நான்கு ‘P’ முக்கியம்.
பெல்விஸ்என்பது இடுப்புக் குருத்தெலும்புப் பகுதி. `பாசேஜ்என்பது கர்ப்பப்பையில் இருந்து செர்விக்ஸ், வெஜைனா வழியாகக் குழந்தை பயணிக்கும் பாதை. `பவர்என்பது பிரசவத்தின்போது கர்ப்பப்பையில் இயற்கையாக உருவாகும் அழுத்தம். குழந்தையை `பாசஞ்சர்’ (பயணி) என்கிறோம்.
உயரம் குறைந்த பெண்களின் இடுப்பு எலும்பின் சுற்றளவு சிறிதாக இருக்கும். இது, செபலோபெல்விக் டிஸ்புரோபோர்ஷன் (Cephalopelvic disproportion (CPD) எனப்படும்.
உடலுறவின்போது விந்து கர்ப்பப்பைக்குள் செல்ல அனுமதிக்கும் பாதை, செர்விக்ஸ். விரிந்து சுருங்கும் தன்மை உடைய இதன் சராசரி குறுக்கு அளவு இரண்டு முதல் மூன்று செ.மீ. கரு உருவான உடன் இது இறுக மூடிக்கொள்ளும். பிறகு, பிரசவத்தின்போது குழந்தை இதன் மூலமாகவே வெளியே வரும். முதல் சுகப்பிரசவத்துக்குப் பிறகு இதன் சுருங்கி விரியும் தன்மை சற்றுக் குறைய வாய்ப்பு உள்ளது.
நான்கு கிலோவுக்கு அதிகமான எடை உள்ள குழந்தையால், வெளியேற முடிவது இல்லை. குழந்தையின் மிருதுவான மண்டைஓடு வெளியே வரும் முயற்சியில் ஒன்றன் மேல் ஒன்று நகர்ந்து அழுத்தப்பட்டு தலையின் அளவு குறையும். இதனால் 37 வாரங்கள் முடிவதற்குள் குழந்தைக்கு மூளை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது . இதைத் தவிர்க்க, சிசேரியன் செய்யப்படுகிறது.
பனிக்குடம் உடைந்து, குழந்தை வெளியே வர முற்சிக்கும்போது, தாயின் சிறுநீர்ப்பையை குழந்தையின் தலை அழுத்த நேரிடும். திரும்பத் திரும்ப அழுத்தும்போது, சிறுநீர்ப்பை அழுகிவிட வாய்ப்பு உள்ளது. இது, `பிஸ்டுலாஎனப்படுகிறது. இதைத் தவிர்க்க சிசேரியன் பயன்படும்.
கர்ப்பப்பையில் உள்ள நீரில் மிதக்கும் சிசுவானது கை, கால்களைக் குறுக்கிக்கொண்டு மடங்கி இருக்கும். இந்த நிலையில் இல்லாமல் குழந்தையின் எலும்பு, உடல் தசை வளர்ச்சி அதிகமாக இருந்தால் குழந்தை செர்விக்ஸ் வழியாக வெளியேறுவது கடினம்.
பிரீச் பொசிஷன் (Breech position)
பிரசவ வலி வந்ததும் குழந்தை, தானாகத் தலைகீழாகத் திரும்ப வேண்டும். அப்படித் திரும்பாமல் போனால், `பிரீச் பொசிஷன்எனப்படும். இந்த நிலையில், முதலில் குழந்தையின் தலை வெளிவருவதற்குப் பதிலாக, கால் மற்றும் புட்டம் வெளியே வரும். இந்த பொசிஷனில் பல குழந்தைகள் வெற்றிகரமாகப் பிறந்துள்ளன. ஆனால், தலை கடைசியாக வெளிவருவதால், மூளைக் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆகவே, இந்த நிலை இருந்தால், சிசேரியன் பரிந்துரைக்கப்படும்.
ட்ரான்ஸ்வெர்ஸ் லெய்டு (Transverse laid)
37 வாரங்கள் முடிந்தும் குழந்தை மேலிருந்து தலைகீழாகத் திரும்புகையில், இடையே அகப்பட்டு திரும்ப முடியாமல் மாட்டிக் கொள்ளும். இந்த நிலையிலும் சிசேரியன் செய்யப்படும்.
பிளசன்டா ப்ரேவியா (Placenta praevia)
கரு உருவானதும் பிளசன்ட்டா எனப்படும் நஞ்சுக்கொடி கர்ப்பப்பையின் மேல் அல்லது கீழ் சுவரில் உருவாகும். இது வட்டு வடிவில் கருஞ்சிவப்பாக இருக்கும். இது சராசரியாக 23 செ.மீ நீளமும், மூன்று செ.மீ உயரமும் இருக்கும். இது, தாயின் உடலுடன் குழந்தைக்கு தொப்புள்கொடி மூலம் தொடர்பு ஏற்படுத்தும். தாயின் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை குழந்தைக்குக் கொடுத்தல், கழிவுகளை வெளியேற்றுதல் ஆகிய முக்கியப் பணிகளைச் செய்யும். ஒன்பது மாதங்களாகக் கரு முழு வளர்ச்சி பெற உறுதுணையாக இருக்கும். இது, கர்ப்பப்பையின் மேல் சுவரில் உருவாகி இருந்தால் பிரச்னை இல்லை. கீழ் சுவரில் (லோயர் யூட்ரின் செக்மென்ட்) உருவானால், அதுவே குழந்தை வெளியேறத் தடையாக இருக்கும். பிரசவத்தின் போது பிளசன்டா இவ்வாறு பாதையை அடைத்துக்கொண்டால், தாய்க்கு அதிகமான ரத்தப்போக்கு உண்டாகும். ஆனால், வலி இருக்காது. இந்த நிலையே பிளசன்டா ப்ரேவியா எனப்படும். இந்த நிலையில் சிசேரியன்தான் குழந்தையைக் காப்பாற்ற ஒரே வழி. இந்தக் கோளாறு நிறைய முறை கருக்கலைப்பு செய்பவர்கள், ஏற்கெனவே சிசேரியன் ஆனவர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது.
ஜெனிடல் ஹெர்பீஸ் (Genital Herpies)
பிறப்புறுப்புப் பாதையில் வரும் தொற்றுதான், ஜெனிடல் ஹெர்பீஸ். குறிப்பாக, ஹெச்.ஐ.வி உள்ளிட்ட பாலியல் நோய்கள் தாக்கப்பட்ட தாய்க்கு இந்தப் பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம். சுகப்பிரசவத்தின்போது குழந்தைக்கும் இந்தத் தொற்று பரவும். எனவே, இவர்களுக்கும் சிசேரியன் அவசியம்.
ஃபீட்டல் டிஸ்ட்ரெஸ் (Fetal distress)
இது தொப்புள்கொடி, குழந்தையின் கழுத்தில் மாலையாகச் சுற்றிக்கொண்ட நிலை. சில குழந்தைகளின் தொப்புள்கொடி மிக நீளமாக இருக்கும். கர்ப்பப்பையில் சிசு மிதக்கும்போது, கழுத்தில் சுற்றிக்கொள்ளும். ஒரு சுற்று சுற்றி இருந்தால், சுகப் பிரசவம் செய்ய முடியும். ஐந்தாறு சுற்று சுற்றி இருந்தால், குழந்தையின் சுவாசம் தடைப்படும். இதயத் துடிப்பு சிக்கலாகும்.
மல்ட்டிபிள் பர்த் (Multiple birth)
இரட்டைக்குழந்தைகளில், முதலில் வெளியே வர வேண்டிய குழந்தையின் தலை வெளியே வராமல் புட்டம் வந்தால், கண்டிப்பாக இரண்டு குழந்தைகளையும் சிசேரியன் மூலமாகவே வெளியே எடுக்க வேண்டும். பொதுவாகவே, இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் தாய்க்கு பிளசன்ட்டா ப்ரேவியா இருக்க வாய்ப்புகள் அதிகம். ஓட்டிப் பிறந்த இரட்டைக்குழந்தைகளை வெளியே எடுக்க சிசேரியன்தான் ஒரே வழி.
சிசேரியனுக்குப் பிறகு சுகப்பிரசவம் சாத்தியமா?
பலருக்கும் உள்ள பொதுவான சந்தேகம், முதல் சிசேரியன் ஆன பிறகு, அடுத்து சுகப் பிரசவம் சாத்தியமா என்பதுதான். சிலருக்குச் செங்குத்தாகத் தோலைக் கிழித்து சிசேரியன் செய்தால், அடுத்து சுகப் பிரசவம் நடக்க வாய்ப்பு இல்லை என முடிவுக்கு வந்துவிடுகின்றனர். சிசேரியனின்போது தோல் எவ்வாறு கிழிக்கப்படுகிறது என்பது முக்கியம் அல்ல. உள்ளே இருக்கும் கர்ப்பப்பை எவ்வாறு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்பதுதான் முக்கியம். முதல் பிரசவத்தில் கர்ப்பப்பை குறுக்கே வெட்டி தையல் போடப்பட்டிருந்தால், அடுத்த சுகப் பிரசவம் செய்வது சுலபம். செங்குத்தாக வெட்டப்பட்டுத் தையல் போட்டிருந்தால், அடுத்த பிரசவத்தில், தையல் பிரிய வாய்ப்பு உள்ளது. சிசேரியனில் கர்ப்பப்பையை எவ்வாறு கிழிப்பது என்பது, குழந்தையின் தலை இருக்கும் திசை மற்றும் நிலையை ஸ்கேனில் பரிசோதித்த பிறகுதான் சொல்ல முடியும். எனவே, சிசேரியன் என்றாலே தவறான விஷயம் என்று எண்ண வேண்டாம். யாருக்கு சிசேரியன் தேவை என்று மருத்துவர் முடிவு செய்வார். மருத்துவர் வழங்கிய ஆலோசனையைப் பின்பற்றி, டயட், உடற்பயிற்சி பின்பற்றினால், சுகப்பிரசவத்துக்கான வாய்ப்பு அதிகரிக்கும். அதையும் மீறி, குழந்தையின் பொசிஷன் மாறும்போது, சிசேரியன் செய்யத் தயங்க வேண்டாம். இதன் மூலம், தாய் - சேய் இருவரது உயிரையும் பாதுகாக்க முடியும்.
                                                                                                                                                   -
வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்
கர்ப்பிணிகள் கவனத்துக்கு!
ஒவ்வொரு கர்ப்பிணியும் கட்டாயம் ஃபோலிக் அமில மாத்திரையை, கர்ப்பமான நாளிலிருந்து 12 வாரங்களுக்குத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இது குழந்தைக்கு ஏற்படும் பிறவித் தண்டுவடக் குறைபாடுகளைத் தவிர்க்கும். இந்த மாத்திரை எல்லா ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும்.
சிசேரியனுக்கு பிறகு எவ்வளவு நாள் கழித்து உறவு வைத்துக்கொள்ளலாம்?
சிசேரியனுக்குப் பிறகு குறைந்தது 6 வாரங்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. எல்லா தம்பதியரும் காண்டம் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.ஆனால், இதைச் செய்யாததால், சிசேரியன் ஆன நான்கே மாதங்களுக்குள் மீண்டும் கர்ப்பமாகிவிடுகின்றனர். பொதுவாக, கர்ப்பிணிகள் தீர்மானிக்கப்பட்ட சிசேரியனுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது. பிளசன்டா ப்ரெவியா போன்ற அதீத ரத்தப்போக்கு கோளாறு உள்ளவர்கள், இரண்டு மாதங்களுக்கு முன்பே நிறுத்திக்கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
கர்ப்பிணிகளுக்கு அதிகப் புரதம், வைட்டமின், நார்ச்சத்து தேவை. பிரெட் உள்ளிட்ட மைதா பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இது மலச்சிக்கல் உண்டாவதைத் தவிர்க்கும்.
நிறைய பழங்கள் சாப்பிட வேண்டும். பழத்தைச் சாறாக்கும்போது அதில் உள்ள நார்ச்சத்து இல்லாமல்போகிறது. எனவே, பழங்களை அப்படியே சாப்பிட வேண்டும்.
சுகப் பிரசவத்துக்கு 8 மாதம் வரை வீட்டில் இருந்தபடியே சிறு உடற்பயிற்சிகள் செய்யலாம்.
தினமும் காலை, மாலை நடைப்பயிற்சி செய்வது நல்லது.
கர்ப்ப காலத்தில் கடினமான வேலைகள், அதிக எடை தூக்காமல் இருப்பது நல்லது.
சிசேரியன் ஆன பிறகு, குறைந்தது இரண்டு மாதங்கள் ஓய்வு எடுப்பது நல்லது.
கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, வலிப்பு போன்ற கோளாறுகள் இருந்தால், அவசியம் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
பொதுவாக, கர்ப்பிணிகளுக்குப் பிரசவத்தின்போது வயிற்றைச் சுத்தம் செய்ய எனீமா கொடுத்தால், மலக்குடல் கழிவுகள் மட்டுமே வெளியேற்றப்படும். வயிற்றில் உள்ள ஜீரணமாகாத உணவு வெளியேற்றப்படாது. பிரசவ நேரத்தில் வீட்டில் உள்ளவர்கள் கட்டாயத்தின் பேரில் அதிகமாகச் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகின்றனர். இது தவறு. மருத்துவர்களின் அறிவுரையின் பேரிலேயே உணவு உட்கொள்ள வேண்டும்.