disalbe Right click

Showing posts with label PARTY IN PERSON. Show all posts
Showing posts with label PARTY IN PERSON. Show all posts

Wednesday, April 19, 2017

தானாகவே வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு - 1

தானாகவே வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு - 1

நாமாகவே வழக்கு தாக்கல் செய்ய வேண்டும், நீதிமன்றத்தில் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் நாமே வாதாட வேண்டும்! என்ற உங்களது தைரியத்திற்கு முதலில் எனது பாராட்டுக்கள். நம்மைவிட நமது வழக்கைப் பற்றி யாருக்கு நன்றாகத் தெரியும்? இப்படிச் செய்வதனால், எந்த ஒரு வழக்கும் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வரும். வாய்தாக்கள் வாங்க வேண்டியதில்லை. வழக்குகளும் நீதிமன்றத்தில் தேங்க வேண்டியதில்லை. நமது நோக்கத்தை  வேறு எவரும் சிதைக்க முடியாது.  

இது போன்று நான் முயற்சி செய்யும் போது சில தவறுகள் செய்திருந்தேன். நீதிபதியால் தவறுகள் குறிப்பிடப்பட்டு எனது மனு என்னிடமே திருப்பி அளிக்கப்பட்டது. தவறுகளை திருத்தி மீண்டும், மீண்டும் நீதிமன்றத்தில் நாம் சமர்ப்பிக்கலாம் என்று, வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும், நமது நேரம் அதனால் வீணாவதை யாராலும் தடுக்கமுடியாது. மேலும், நமது வழக்கின் போக்கு, திசை மாறவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, தவறு எதுவும் இல்லாமல் தாக்கல் செய்ய வேண்டும். 

நேரடியாக தன்னிடம் வருபவர்களை (சில வழக்குகள் தவிர) நீதிமன்றம் விரும்புவதில்லை. துறை ரீதியாக கீழிருந்து மேல் வரைக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளதா? என்பதை முதலில் அது கவனத்தில் எடுத்துக் கொள்கிறது.  அவ்வாறு புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நீங்கள் தாராளமாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.  

காவல்துறை சம்பந்தப்பட்ட புகாராக இருந்தால், முதலில் நீங்கள் வசிக்கும் பகுதிக்குரிய காவல்நிலையத்தில் கண்டிப்பாக புகார் அளிக்க வேண்டும். நேரடியாக எஸ்.பி. (மாவட்ட காவல் கண்காணிப்பாளர்) அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்காதீர்கள். புகார் அளிப்பதோடு மட்டுமல்லாமல் அதற்குரிய “புகார் மனு ஏற்புச் சான்றிதழ்” கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு வேளை காவல்நிலையத்தில் அதனை தர மறுத்தால், ஒப்புதல் அட்டை இணைத்த பதிவுத்தபாலில் உங்கள் புகாரை அவர்களுக்கு அனுப்பி அதற்குரிய  ஆதாரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். 

நீதிமன்றத்தில் இது மிகவும் முக்கியமானதாகும். இது இல்லை என்றால் தங்கள் மனு திருப்பி அளிக்கப்படும்.  

உள்ளூர் காவல்நிலையத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதன்பிறகு நீங்கள் எஸ்.பி. (மாவட்ட காவல் கண்காணிப்பாளர்) அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்கலாம். அல்லது ஒப்புதல் அட்டை இணைத்த பதிவுத்தபாலில் உங்கள் புகாரை அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.  

அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலோ அல்லது எடுத்த நடவடிக்கை உரியதாக இல்லை என்றாலோ நீங்கள்  காவல் துறை துணைத்தலைவர் (DIG) அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்கலாம். அல்லது ஒப்புதல் அட்டை இணைத்த பதிவுத்தபாலில் உங்கள் புகாரை அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம். 

மேற்கண்டவாறு செய்தும் நடவடிக்கை இல்லை என்றாலோ அல்லது எடுத்த நடவடிக்கை உரியதாக இல்லை என்றாலோ நீங்கள் அதற்குரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தை அணுகலாம். ஆதாரங்கள் மிகமிக அவசியம்.

நாம் அதிகமாக அணுகுகின்ற துறை என்பதால் மேலே காவல்துறையைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.  மற்ற துறைகளுக்கும் இந்த நடைமுறையையே பின்பற்றி அந்தந்த துறை அதிகாரி மற்றும் மேலதிகாரிகளை அணுகுங்கள்.  

தொடரும்.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Saturday, February 25, 2017

தானே ஆஜராகி வாதாடுபவர்கள் கவனத்திற்கு.....


தானே ஆஜராகி வாதாடுபவர்கள் கவனத்திற்கு.....
நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிடும் மனுதாரருக்கு சட்ட அறிவு தேவை: 
உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை:
'வழக்குகள் தொடர்பான நீதிமன்றத்தில் மனுதாரர்களே ஆஜராகி வாதிடும்போது சட்டத்திற்குட்பட்டு எதை பேச வேண்டுமோ அதை வாதிட வேண்டும். சட்டம் பற்றி அறிந்திருக்க வேண்டும்; தெரியாது எனக்கூறி தப்பித்துக் கொள்ளக்கூடாது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்துார் கணபதிராஜ். இவர், மாசிலாமணி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வசித்து வந்தார். வீட்டை காலி செய்ய, வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் கணபதிராஜ் மனு செய்தார். 
அம்மனு பரிசீலனைக்கான ஆரம்ப கட்ட (எஸ்.ஆர்.,) எண் வழங்கப்பட்டது. பிரதான எண் வழங்கப்படவில்லை. இம்மனு நிலை நிற்கத்தக்கதா? என்ற தலைப்பின் கீழ் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. 
நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு விசாரித்தார். 
மனுதாரர் ஆஜராகி,“கீழமை நீதிமன்றம் சரியாக விசாரிக்கவில்லை. சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை சரியாக நடத்தவில்லை,” என்றார்.
நீதிபதி: 
ஏற்கனவே கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தபோது, அதை எதிர்த்து மனுதாரர் தாக்கல் செய்த மனுவை இந்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் பின் கீழமை நீதிமன்றம் வீட்டை காலி செய்யுமாறு உத்தரவிட்டது. 
ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கை மறைத்து, மனுதாரர் இங்கு மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் உரிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டும்.
பலமுறை மனுதாரர் ஆஜராகியும், இம்மனு நிலைத்து நிற்கத்தக்கதல்ல என இந்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
சட்டம் பற்றி தெரியாமல் இருப்பது தவறில்லை. ஆனால், மனுதாரரே ஆஜராகி வாதிடும்போது, சட்டம் பற்றி அறிந்திருக்க வேண்டும். சட்ட உதவி மையத்தை அணுகி, அதன் சேவையை பயன்படுத்தியிருக்கலாம். 
மனுதாரரைப் போல் வழக்குகள் தொடர்பாக மனுதாரர்களே ஆஜராகி வாதிடும்போது எதை வேண்டுமானாலும் பேசலாம் என கருதுகின்றனர். 
சட்டத்திற்குட்பட்டு எதை பேச வேண்டுமோ அதையே வாதிட வேண்டும். சட்டம் தெரியாது எனக்கூறி தப்பித்துக் கொள்ளக்கூடாது.
மனுதாரரின் பொருளாதார நிலையை கருதி, கருணை அடிப்படையில் அவருக்கு அபராதம் விதிப்பதை தவிர்க்கிறேன். 
இனியாவது சரியான சட்ட வழிமுறைகளை மனுதாரர் பின்பற்றுவார் என இந்நீதிமன்றம் நம்புகிறது. 
மனு விசாரணைக்கு உகந்ததல்ல. மனுவை நிராகரிக்கிறேன், என்றார். 
நன்றி : தினமலர் நாளிதழ் - 25.02.2017

Wednesday, February 8, 2017

அரசுக்கு மனு அனுப்பி விட்டு மறுநாளே வழக்கு தொடுப்பதா?


அரசுக்கு மனு அனுப்பி விட்டு மறுநாளே வழக்கு தொடுப்பதா?

சென்னை: பொது இடங்களில் புகை பிடிப்பதை தடுக்கவும், கல்வி நிலையங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்கும் கடைகளை மூடவும் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை, பள்ளிக்கரணையைச் சேர்ந்த நடராஜன் தாக்கல் செய்த மனுவில், 'பொது இடங்களில் புகை பிடிக்கவும், கல்வி நிலையங்கள் அருகே சிகரெட் விற்கவும் விதிக்கப்பட்ட தடையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்; புகை பிடிப்பவர்களுக்கு என, தனியாக ஒரு பகுதியை ஒதுக்க வேண்டும். விதிமுறை, சட்டத்தை மீறுபவர்களை தண்டிக்க வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அரசு பிளீடர் எம்.கே.சுப்ரமணியன் ஆஜரானார். 

முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
சட்ட விதிகள் மீறப்பட்டதற்கான ஆவணங்கள் எதுவும், தாக்கல் செய்யப்படவில்லை. சட்டம் அமலில் இருப்பதாகவும், மீறல் நடப்பதாகவும் மனுதாரர் கூறியுள்ளார். 

ஜன., 30ல், 'இ - மெயில்' மூலம் அரசுக்கு மனு அனுப்பியிருப்பதாக கூறியுள்ளார். மறுநாளே, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

அதற்கு முன், அரசுக்கு எந்த மனுவும் அனுப்பவில்லை. இத்தகைய வழக்குகளில் வேறு என்ன கூற முடியும்; மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 07.02.2017