disalbe Right click

Thursday, June 18, 2015

தேர்தல் விதிமீறலை தடுக்க'இ-நேத்ரா' திட்டம்


தேர்தல் விதிமீறலை தடுக்க'இ-நேத்ரா' திட்டம் அறிமுகம்
தேர்தல் விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக புகார் அளிக்கவும் அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் 'இ - நேத்ரா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து (18.06.2015) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:
இந்தியாவில் முதன்முறையாக ஆர்.கே.நகர் தொகுதியின் முக்கிய இடங்களில் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.மேலும் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் புகார் அளிப்பதற்கு வசதியாகவும், அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கவும் 'இ - நேத்ரா' திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
புகார் தெரிவிக்க ஆறு வழிகளை பின்பற்றலாம்.

* 'பிளே ஸ்டோரில்' இருந்து பதிவிறக்கம் செய்யப்படக் கூடிய ஸ்மார்ட் போன் அப்ளிகேஷனை https:/play.google.com/store/apps/details?id=com.uniphore.ecpublic&hl=enல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
* enetra@chennaicorporation.gov.in என்ற முகவரிக்கு இ - மெயில் அனுப்பலாம்.
* 94441 23456 என்ற மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம்.
* '1950' என்ற டெலிபோன் எண்ணை அழைக்கலாம்.
* மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு எழுத்து மூலம் புகார் அனுப்பலாம்.
* தேர்தல் உதவி மையங்களில் நேரடியாக சென்று புகார் அளிக்கலாம்; இம்மையம் 24 மணி நேரமும் செயல்படும்.

புகார் விவரம், பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவிற்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் 45 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை எடுப்பர்.புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் 2 முதல் 24 மணி நேரத்திற்குள், புகார்தாரருக்கு தெரிவிக்கப் படும்.

'இ - நேத்ரா' திட்டம் முதன்முறையாக ஆர்.கே.நகர் தொகுதி யில் அறிமுகப்படுத்தப்படுகிறது, என்றார்.

Wednesday, June 17, 2015

ஸ்கேன் ரிப்போர்ட்


ஸ்கேன் ரிப்போர்ட் பற்றி தெரிந்து கொள்வோமா?
ஸ்கேன் ரிப்போர்ட்

“கழுத்து வலிக்குதேனு டாக்டர்கிட்ட போனேன்… உடனே, ஸ்கேன் எடுக்கச் சொல்லிட்டார். சாதாரண கழுத்து வலி, தலைவலிக்குக்கூட இப்ப ஸ்கேன் எடுக்க வேண்டியிருக்கு” என்று  புலம்புவார்கள் பலர்.  உண்மையில் ஸ்கேன் என்பதன் மருத்துவப் பயன்பாடு என்ன? சின்னச்சின்ன உபாதைகளுக்குக்கூட ஸ்கேன் தேவையா என்ன?
“நாடி பிடித்து நோய்களைக் கண்டறிந்த காலத்தில், மனிதனைத் தாக்கிய நோய்களுக்கும் ஒரு வரைமுறை இருந்தது. இதனால், ‘இந்த நோய்… இப்படித்தான் வெளிப்படும்…’ என்று அப்போது வரையறுக்க முடிந்தது. ஆனால், இன்றோ காய்ச்சல் வந்தால், பாராசிட்டமால் மாத்திரைக்கு கட்டுப்படா விட்டால், அது பன்றிக் காய்ச்சலா? பறவைக் காய்ச்சலா? டைபாய்டா? மலேரியாவா? என்று ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதைத் தாண்டி, உடலுக்குள் இருக்கும் உறுப்புகளுக்குள் என்ன நடக்கிறது என்பதையும் தாண்டி, உறுப்புகளின் ஒவ்வொரு செல்லிலும் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.
தேவை
உடலுக்குள் இருக்கும் உறுப்புகளையும் அந்த உறுப்புகளுக்குள் நடைபெறும் இயக்கத்தையும், 3-டி வடிவத்தில் வீடியோவாகவும், படங்களாகவும் ‘ஸ்கேன்’ காட்டிவிடும். அதன் பிறகுதான், அதற்கான சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் முடிவுசெய்கின்றனர். விபத்து, மயக்கம், கட்டிகள், வயிற்றுக்கோளாறு என்ற அடிப்படையில் அவை பற்றி அறிய அல்ட்ராஸ்கேன், சி.டி, எம்.ஆர்.ஐ ஸ்கேன், ஆஞ்சியோகிராம், மேமோகிராம், பெட் ஸ்கேன் என பிரத்யேகக் கருவிகள் வந்துவிட்டன.
ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம், துல்லியமாக நோயின் தன்மை, எந்த இடத்தில் உருவாகி உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும். அந்தக் காலத்தில் ஒருவருக்கு வயிற்றுவலி வந்தால், வயிற்றுக்குள் என்ன நடக்கிறது? ஏன் அவருக்கு வயிற்று வலி வந்தது என்பதைப் பார்க்க முடியாது. அவர் சொல்லும் ஒரு சில தகவல்களை வைத்து, ஒரு கணிப்பில் மருத்துவம் பார்க்கப்பட்டது. தற்போது ஸ்கேன்செய்து பார்ப்பதன் மூலம் அனைத்தையும் கண்டறிய முடியும்.
கட்டாயமா?
டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். ‘தேவை’ என்ற நிலையில் ஸ்கேன் செய்து பார்த்துவிட வேண்டும். இல்லை எனில், ‘கட்டாயம்’ என்ற ஒரு நிலை வரும். அப்போது பார்க்கும்போது, நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் நோய் முற்றிவிடக்கூடும். மேலும், நோயின் வீரியமும் அளவும் குணப்படுத்த முடியாத நிலையை எட்டியிருக்கும்.
ஒரு சில ஆயிரங்களுக்காக, நமக்கெல்லாம் அந்த நோய் வராது என்று அசட்டுத்தனமாக இருந்துவிட்டால், அதன் பிறகு பல லட்சங்களையும் மிகப் பெரிய அவஸ்தைகளையும் அனுபவிக்க வேண்டி வரும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஸ்கேன்
கர்ப்பிணிகளுக்குச் செய்யும் ஸ்கேன், இரண்டு உயிர்களுக்கானது. எனவே, கூடுதல் கவனம் தேவை. கர்ப்பிணிகளுக்கு கதிர்வீச்சுப் பாதிப்பு இல்லாத அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மட்டுமே செய்யப்படும். கருத்தரித்த காலத்தில் இருந்து முதல் நான்கு வாரங்களுக்குச் செய்யப்படும் ஸ்கேன் மூலம்,  கரு சரியாகக் கருப்பையில்தான் உருவாகி உள்ளதா, அல்லது கருக்குழாயில் தங்கி இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அதன் பிறகு, குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறியவும், பாதிப்பு ஏதேனும் உள்ளதா  என அறியவும் ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது. இத்தனை ஸ்கேன்தான் எடுக்க வேண்டும் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. அது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்தது.
11 வாரம் 14வது வாரத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சியை அறியவும், 21 முதல் 24 வாரங்களுக்குள் குழந்தையின் முழு வளர்ச்சியை அறியவும், இறுதியாக 36 முதல் 38 வாரங்களுக்குள் தொப்புள் கொடி சுற்றியுள்ளதா, பனிக்குடத்தில் உள்ள நீரின் அளவு போதுமானதாக உள்ளதா என்பதை அறியவும் ஸ்கேன் அவசியம்.

ஸ்கேன் வகைகள்
மேமோகிராம்:  40 வயதைத் தாண்டிய பெண்கள் கண்டிப்பாக, மேமோகிராம் சோதனை செய்துகொள்ள வேண்டும். பெண்களின் மார்புப் பகுதியில் சாதரணமாகத் தோன்றும் சிறிய கட்டிகளை, 1 எம்.எம் ஸ்லைஸ் வடிவத்தில் துல்லியமாகக் காட்டும் ஸ்கேன் இது. இதன் மூலம், அவை சாதாரணக் கட்டிகளா? புற்றுநோய்க் கட்டிகளா என்பதை அறிய முடியும்.
சி.டி ஸ்கேன்: மூளைக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க சி.டி ஸ்கேன் உதவுகிறது. மூளைக்குள் செல்லும் ரத்தக்குழாய்கள், அதற்குள் நிகழும் மாற்றம் போன்றவற்றை அறிய, இந்த ஸ்கேன் உதவுகிறது. விபத்துகளில் தலையில் அடிபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, சி.டி ஸ்கேன் மிகப் பெரிய பங்களிப்பை வழங்குகிறது.
ஆஞ்சியோகிராம்: மூளை மற்றும் இதய ரத்தக் குழாயில் என்ன நடந்துள்ளது, என்ன நடக்கிறது என்பதை அறிய உதவுகிறது. வயதானவர்கள், உடல் பலவீனமானவர்களுக்கு இதயம் தொடர்பான சில சோதனைகளைச் செய்ய முடியாது. அவர்களுக்கு, ஆபத்பாந்தவன் இந்த ஆஞ்சியோகிராம்தான். இவற்றின் மூலம்தான், இதயம் மற்றும் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்க்குள் ஏற்பட்டுள்ள அடைப்பு (ஸ்டினோஸிஸ்) மற்றும் விரிவு (அனியூரிசம்) ஆகியவற்றைக் கண்டறிய முடிகிறது.
எம்.ஆர்.ஐ ஸ்கேன்: கதிர்வீச்சு இல்லாமல், காந்தப் புலத்தை வைத்து செய்யப்படும் பரிசோதனை. இதன்மூலம் மூளையின் செய்திறனைக்கூட துல்லியமாக அறிய இந்த ஸ்கேன் பயன்படுகிறது. கர்ப்பிணிகளுக்குக்கூட பாதிப்பு இல்லாத ஸ்கேன் இது. ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த ஸ்கேன் எடுத்துக்கொள்ளலாம்.
பெட் ஸ்கேன்:  இன்றைய தேதியில் பெட் ஸ்கேன்தான் இந்த உலகத்தை ஆண்டுகொண்டு இருக்கிறது. புற்றுநோய் மருத்துவத்தில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. சி.டி., எம்.ஆர்.ஐ போன்றவற்றின் உதவியால், ஓர் இடத்தில் கேன்சர் தாக்குதல் இருப்பதை அறிந்துகொள்ளலாம். ஆனால், அது உடலின் எந்தெந்த இடத்தில் பரவி உள்ளது என்பதைக் கண்டறிய உதவுகிறது பெட் ஸ்கேன். எலும்பு, மூளை, நுரையீரல் போன்றவற்றில் பரவி உள்ள கேன்சர் செல்களைத் துல்லியமாக வெளிச்சம் போட்டுக்காட்டும். இதற்காக ‘ரேடியோ நியூக்ளியெட்’ என்ற மருந்து ஊசி மூலம் செலுத்தப்படும். அந்த மருந்து கேன்சர் செல்கள் எங்கெங்கு உள்ளதோ, அங்கெல்லாம் போய் படிந்துவிடும். அதன் பிறகு, ‘பெட் ஸ்கேன்’ செய்து பார்க்கும்போது, கேன்சர் செல்களில் படிந்துள்ள ‘ரேடியோ நியூக்ளியெட்’ பிரகாசமாக ஒளிர்ந்து, கேன்சர் பரவி உள்ள அனைத்து இடங்களையும் காட்டிக்கொடுத்துவிடும். அதுபோல், கேன்சருக்குக் கொடுக்கப்படும் மருந்துகளை, ஒருவரின் உடல் எந்த அளவுக்கு ஏற்றுக்கொண்டது என்பதை அறிய இன்டர்வெல் ஸ்கேன் பார்ப்பதற்கும் பெட் ஸ்கேன்தான் உதவுகிறது.

Monday, June 15, 2015

12 ரூபாய்க்கு விபத்து பாலிசி!


12 ரூபாய்க்கு விபத்து பாலிசி!
***************************************
அந்த இரண்டு இன்ஷூரன்ஸ் ஏன், எதற்கு, எப்படி ?பாரதி தம்பி
'வெறும் 12 ரூபாய்க்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்ஷூரன்ஸ்!’ என்பதுதான் இன்று தீயாகப் பரவும் செய்தி. அரசின் விளம்பரங்களும் அமோகமாக இருப்பதால், ஆளாளுக்கு இதைப் பற்றி விசாரிக்கிறார்கள். '12 ரூபாய்க்கு ரெண்டு லட்ச ரூபாய் பாலிசியா? அப்படின்னா எனக்கு 10 பாலிசி போடுங்க’ என்கிறார் ஒருவர். 'ஏற்கெனவே நாம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறோமே... அதுவும் இதுவும் வேறு வேறா..?’ என்பது பலரின் குழப்பம். சந்தேகங்களுக்கு விடை தேடுவோமா? 
இப்போது மத்திய அரசு இரண்டுவிதமான காப்பீட்டுத் திட்டங்களை அறிவித்திருக்கிறது. ஒன்று,விபத்துக் காப்பீட்டுப் பாலிசி. இதில், 18 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் சேரலாம். ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியம். குறிப்பிட்ட ஆண்டில் ஏதேனும் விபத்து ஏற்பட்டு, கை, கால், கண் ஆகிய உறுப்புகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதற்கான இழப்பீடாக அதிகபட்சமாக 1 முதல் 2 லட்சம் ரூபாய் வரை க்ளெய்ம் செய்ய முடியும். விபத்தில் மரணம் அடைந்தால் இரண்டு லட்சம் வரையிலும் க்ளெய்ம் செய்யலாம். '12 ரூபாய்தானே’ என்பதற்காக 10, 20 பாலிசிகள் எடுக்க முடியாது. ஓர் ஆளுக்கு ஒரு பாலிசிதான். அதற்கும் வங்கியில் சேமிப்புக் கணக்கு அவசியம். பிரீமியம் தொகை, ஒவ்வோர் ஆண்டும் வங்கிக் கணக்கில் இருந்துதான் எடுக்கப்படும். இந்தத் தொகைத் திருப்பித் தரப்பட மாட்டாது.
'பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ என்பது இரண்டாவது திட்டம். அதாவது, 'பிரதம மந்திரி வாழ்க்கை ஒளி காப்பீடுத் திட்டம்’. இதன்படி ஆண்டுக்கு 330 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டும். பாலிசிதாரர் எந்தக் காரணத்தினால் மரணம் அடைந்திருந்தாலும் அவரது நாமினிக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். வருடாவருடம் பாலிசியை புதுப்பிக்க வேண்டும். இதில் கட்டப்படும் பிரீமியமும் திரும்பத் தரப்பட மாட்டாது.
'இந்த இரண்டு பாலிசிகளுக்கும் என்ன வித்தியாசம்? ஏன், ஒன்றில் அவ்வளவு குறைந்த தொகை..?’ என்றெல்லாம் பலப்பல குழப்பங்கள் நிலவுகின்றன. காப்பீடு தொடர்பான அடிப்படை விவரங்களை இன்ஷூரன்ஸ் நிபுணர் ஸ்ரீதரன் விளக்குகிறார்.
''இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் எடுப்பது எண்டோமென்ட் பாலிசி (Endowment policy). இதில் நாம் கட்டும் தொகையின் ஒரு பகுதி இன்ஷூரன்ஸாகவும், இன்னொரு பகுதி முதலீடாகவும் செல்கிறது. ஆனால், முழுக்க முழுக்க இன்ஷூரன்ஸ் என்றாலே ஒரு முதலீடு என்பதைப்போல நம் ஊரில் புரிந்துவைத்திருக்கிறார்கள்.
முதலீடு செய்ய லாபகரமான வேறு வழிமுறைகள் இருக்கின்றன. ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் 20 ஆண்டுகளுக்கு ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி கட்டுகிறீர்கள் என்றால், ஒட்டுமொத்தமாக நான்கு லட்சம் ரூபாய் கட்டியிருப்பீர்கள்.          20 ஆண்டுகள் கழித்து, கட்டிய தொகை இரு மடங்காகக் கிடைக்கும் எனச் சொல்வார்கள். இது 4 முதல் 6 சதவிகித லாபம்தான். ஆனால், பாதுகாப்பான பி.பி.எஃப் திட்டத்தில் 8.5 சதவிகிதம் உறுதியான லாபம் கிடைக்கிறது. அதனால் இன்ஷூரன்ஸ் என்பதை முதலீடாகப் பார்க்கும் மனநிலையில் இருந்து மக்கள் விடுபட வேண்டும்.
உண்மையில் டேர்ம் பாலிசிதான் இன்ஷூரன்ஸின் முழுமையான அர்த்தத்தை வழங்குகிறது. குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் ஒருவேளை இறந்துவிட்டால், அடுத்த 10-15 ஆண்டுகளுக்கு அவர் எவ்வளவு சம்பாதித்துத் தருவாரோ, அந்தப் பணத்தைப் பெற்றுத் தருவதற்கான காப்பீடு இது. ஒருவரது ஆண்டு வருமானத்தைப்போல 10-ல் இருந்து         15 மடங்கு தொகைக்கு டேர்ம் பாலிசி எடுக்கலாம். உங்கள் ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாய் என்றால், 30 முதல் 45 லட்சம் வரையிலும் டேர்ம் பாலிசி எடுத்துக்கொள்ளலாம்.
விபத்துக் காப்பீடுத் திட்டம் என்பது, முழுக்க முழுக்க விபத்து நேர்ந்தால் மட்டுமே க்ளெய்ம் செய்யக்கூடியது. இதற்கான பிரீமியம் குறைவுதான். உதாரணத்துக்கு, இரண்டு லட்சம் ரூபாய்க்கு தோராயமாக 200 ரூபாய் பிரீமியம் வரும். உங்களின் வருமான வரம்பைப் பொறுத்து, விபத்துக் காப்பீடு தொகையும் முடிவு செய்யப்படும். இதில் பிரீமியம் எனக் கட்டும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது. விபத்து ஏற்பட்டால் இழப்பீடு பெறலாம். இல்லையெனில், சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்துக்கு பணம் சென்றுவிடும். டேர்ம் பாலிசி எடுக்கும்போதே, விபத்துக் காப்பீடையும் அதனுடன் இணைத்துக்கொள்ளலாம். இதற்கு 'ரைடர்’ எனப் பெயர்.
மெடிக்கல் இன்ஷூரன்ஸ் அல்லது மெடிக்ளெய்ம் என்பது மற்றொரு முக்கியமான பாலிசி. நோய்கள் பெருகிவிட்ட இந்த நாட்களில், நம் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய பாலிசி. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், மொத்தக் குடும்பத்துக்கும் சேர்த்து 3 முதல்           5 லட்சம் ரூபாய்க்காவது மெடிக்ளெய்ம் எடுத்துக்கொள்வது நல்லது.
இன்றைய சூழலில் ஒருவர் விபத்துக் காப்பீடு பாலிசி, டேர்ம் பாலிசி, மெடிக்ளெய்ம் பாலிசி ஆகிய மூன்று பாலிசிகளை வைத்திருப்பது அவசியம். விபத்துக் காப்பீடுப் பாலிசியை தனியாக எடுக்காமல், டேர்ம் இன்ஷூரன்ஸுடன் ஒரு ரைடராகச் சேர்த்துக்கொள்ளலாம். மற்றபடி ஒருவரிடம் எத்தனை எண்டோமென்ட் பாலிசி இருந்தாலும், அத்தனையையும் அவர் க்ளெய்ம் செய்ய முடியும்!''
ஏன்... எதற்கு... எப்படி?
தற்போது அரசு அறிவித்துள்ள விபத்துக் காப்பீடு பாலிசிக்கான ஆண்டு பிரீமியம் 12 ரூபாய், ஆயுள் காப்பீடு பாலிசிக்கான ஆண்டு பிரீமியம் 330 ரூபாய். இரண்டிலும் பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் ஏற்படுகின்றன. அடிப்படை சந்தேகங்களுக்கான விளக்கங்கள் இங்கே...
''யாரெல்லாம் இந்த பாலிசிகளை எடுக்க முடியும்?''
''தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் இந்தியர் எவரும் இதில் சேரலாம்!''  
''சேர என்ன செய்ய வேண்டும்?''
''நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் சென்று விசாரித்தால் விண்ணப்பம் தருவார்கள். அதை நிரப்பிக்கொடுத்தால் போதுமானது!''
''வயது வரம்பு என்ன?''
''12 ரூபாய் பிரீமியம் கட்டும் விபத்துக் காப்பீடு பாலிசியில் சேர, 18-70 வயது உடையவராக இருக்க வேண்டும். 330 ரூபாய் பிரீமியம் கட்டும் ஆயுள் காப்பீடு பாலிசியில் சேர்வதற்கு 18-50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்!''
''ஒருவர், எத்தனை பாலிசிகள் எடுக்கலாம்?''
''ஒரு நபர் ஒரு விபத்துக் காப்பீடு பாலிசியும்,
ஒரு டேர்ம் பாலிசியும் மட்டுமே எடுக்க முடியும்!''
''ஒருவேளை ஒருவர் மூன்று வங்கிக் கணக்குகள் வைத்திருந்தால், ஒவ்வொன்றின் மூலமாகவும் ஒரு பாலிசி எடுக்கலாமா?''
''முடியாது. அப்படியே எடுத்தாலும் ஏதேனும்
ஒரு பாலிசிதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்!''
''இந்த பாலிசி எனக்கு மட்டும்தானா... குடும்ப உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ளலாமா?''
''குடும்பத்தினருக்குக் காப்பீடு அளிக்காது. விபத்துக் காப்பீடு பாலிசியின்படி விபத்து ஏற்பட்டால் அவரோ, வாரிசுதாரரோ இழப்பீட்டைப் பெறலாம். ஆயுள் காப்பீடு பாலிசியின்படி, மரணம் ஏற்பட்டால் அவர் குறிப்பிட்டுள்ள வாரிசுக்கு, அந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்!''
''இப்போது பாலிசியில் சேர்ந்துவிட்டு, வேண்டாம் என்றால் இடையில் விலக முடியுமா?''
''இது தொடர்பான அறிவிப்புகளில், பாலிசியை இடையில் நிறுத்திக்கொள்வது குறித்த விவரங்கள் இதுவரை குறிப்பிடப்படவில்லை!''
''பாலிசி அமைந்த வங்கிக் கணக்கை மாற்ற வேண்டியிருந்தால் என்னவாகும்?''
''நீங்கள் கட்டும் பிரீமியம் தொகை, அந்த         ஓர் ஆண்டுக்கானது மட்டுமே. எனவே அடுத்த ஆண்டு வங்கிக் கணக்கு செயல்பாட்டில் இல்லை என்றாலோ, நீங்கள் அந்த பாலிசியைப் புதுப்பிக்கவில்லை என்றாலோ,  உங்கள் பாலிசி காலாவதியாகிவிடும். வேறொரு வங்கிக் கணக்கின்மூலம் புதிதாக விண்ணப்பித்து திட்டத்தில் இணைந்துகொள்ளலாம்!''
''க்ளெய்ம் செய்ய, என்ன செய்ய வேண்டும்?''
''விபத்துக் காப்பீடு பாலிசியின் மூலம் க்ளெய்ம் செய்ய, விபத்து ஏற்பட்டதற்கான எஃப்.ஐ.ஆர்., காப்பீடுத் தொகை செலுத்தியதற்கான ரசீது, விபத்து மூலம் மரணம் நேர்ந்திருந்தால் மரணச் சான்றிதழ்... ஆகியவற்றை எந்த வங்கிக் கணக்கின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைந்தீர்களோ, அந்த வங்கிக் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். 330 ரூபாய் கட்டும் ஆயுள் காப்பீடு பாலிசிக்கும் இதே நடைமுறைதான்!''
நன்றி : ஆனந்த விகடன் - 14.06.2015 

Thursday, June 11, 2015

இனி ஈஸி ஆகுமா இன்கம்டாக்ஸ் ஃபைலிங்?


எளிதாகும் நடைமுறைகள்…இனி ஈஸி ஆகுமா இன்கம்டாக்ஸ் ஃபைலிங்?

By vayal on 
ருமான வரி கணக்குத் தாக்கல் செய்வது என்றாலே பெரும் சவாலான விஷயம் என்கிற நிலைதான் நேற்று வரை இருந்து வந்தது. ஏறக்குறைய 15 பக்கங்களை நிரப்பி, வரி கணக்குத் தாக்கலை சரியாக பின்பற்றி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. இதற்கு பேசாமல் வரியே கட்டிவிடலாம் போலிருக்கிறது என்று புலம்பித் தீர்த்தவர்கள்தான் அதிகம்.
இனி இந்த கஷ்டம் இல்லை. கடினமான வருமான வரி கணக்குத் தாக்கலை எளிமையாக்கி மூன்று பக்கத்துக்குள் வரி கணக்குத் தாக்கலை முடித்துவிடலாம் என அண்மையில் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மேலும், வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான வழக்கமான கெடு தேதியை ஜூலை 31-லிருந்து ஆகஸ்ட் 31-க்கு நீடித்து இருக்கிறது. மே 31, ஞாயிற்றுக்கிழமை அன்று நிதி அமைச்சகம், வரி கணக்குத் தாக்கல் படிவத்தில் மாற்றம் செய்திருப்பதாக அறிவித்தது. இதுபோல, வரி கணக்குத் தாக்கல் தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் புதிய மாற்றங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
 வெளிநாட்டு பயண விவரங்களைத் தெரிவிக்க வேண்டுமா? 
வரி கணக்குத் தாக்கல் செய்யும் வரிதாரர் வெளிநாடுகளுக்குச் சென்ற விவரங்கள், வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்புத் தொகை போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும் என  ஒரு மாதத்துக்குமுன் மத்திய அரசு சொன்னது. இதற்கு வரிதாரர்கள் மற்றும் அனைத்துத் தரப்பில் இருந்தும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், வெளிநாட்டு பயண விவரங்களை ரிட்டர்ன் படிவத்தில் குறிப்பிடத் தேவை இல்லை என மத்திய அரசு தற்போது தெளிவுப்படுத்தி இருக்கிறது. இதற்குப் பதிலாக பாஸ்போர்ட் எண்ணை குறிப்பிட்டால் போதும் என்று அறிவித்துள்ளது.
வெளிநாட்டில் சொத்து விவரம்!
இதற்குமுன் (2011-12-ம் ஆண்டு முதல்) வெளிநாட்டில் சொத்து இருந்தால், அதன் விவரத்தை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐகள்) வரி கணக்குத் தாக்கல் படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்று இருந்தது. தற்போது அந்த வெளிநாட்டு சொத்து மூலம் ஏதாவது வருமானம் வந்தால் மட்டுமே அதுபற்றி வரி கணக்குப் படிவத்தில் குறிப்பிட்டால் போதும் என்று மாற்றப் பட்டிருக்கிறது. ஆனால், இந்தியர்களுக்கு வெளிநாட்டில் சொத்து இருக்கும்பட்சத்தில் அதன்மூலம் வருமானம் வரவில்லை என்றாலும்கூட ரிட்டர்ன் படிவத்தில் குறிப்பிடுவது அவசியம்.
வரிக் கணக்குப் படிவங்களில் மாற்றங்கள்!
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் இருப்பவர்களுக்கு வரி கணக்குத் தாக்கல் செய்வதில் அதிக நிவாரணம் அளிக்கப் பட்டிருக்கிறது. இவர்களுக்கு பிசினஸ் அல்லது நிபுணத்துவ வருமானம் அல்லது மூலதன ஆதாயம் எதுவும் இல்லை என்றால் அவர்களுக்கு என புதிய படிவம் ஐடிஆர்2ஏ (ITR2A ) கொண்டு வரப்படுகிறது. இதில், மூலதன ஆதாயங்கள் குறித்துக் கேள்விகள் எதுவும் கேட்கப்பட்டிருக்காது.
இது தவிர, ஐடிஆர்2 (ITR2), ஐடிஆர்2ஏ(ITR2A) படிவங்கள் மொத்தமே மூன்று பக்கங்களை மட்டுமே கொண்டிருக்கும். இதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களும் வரிதாரர் தாமாகவே எளிதாக நிரப்பக்கூடியதாக இருக்கும் என மத்திய அரசு சொல்லி இருக்கிறது. இதற்குமுன் இந்தப் படிவங்கள் 14 பக்கங்களைக் கொண்டிருந்தது.
ஐடிஆர்2 படிவத்தில் இதற்குமுன் எந்தெந்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளப்பட்டது, எத்தனை முறை பயணம் மேற்கொள்ளப்பட்டது, வெளிநாட்டில் சொந்தப் பணம் எவ்வளவு செலவிடப்பட்டது என்கிற விவரத்தை குறிப்பிட வேண்டியிருந்தது. இப்போது ஐடிஆர்2 மற்றும் ஐடிஆர்2 ஏ-ல் பாஸ்போர்ட் எண்ணை மட்டும் கொடுத்தால் போதும்.
 வெளிநாட்டில் உள்ள சொத்து மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்பு செய்தால் 3 முதல் 7 ஆண்டுக் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என நிதி அமைச்சகம் அறிவித்திருக்கிறது. மேலும், வெளிநாட்டிலுள்ள சொத்து மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை வரி கணக்கு விவரத்தில் தெரிவிக்கவில்லை என்றால் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரையில் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும்.
பாஸ்போர்ட் எண் மூலம் ஒருவர் எந்தெந்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார், எத்தனை முறை குறிப்பிட்ட நாட்டுக்குச் சென்றிருக்கிறார் என்கிற விவரத்தை மத்திய அரசு எளிதில் அறிந்துகொள்ள முடியும். அந்த வகையில், உண்மையில் வரி ஏய்ப்பு செய்பவரை அடையாளம் கண்டுகொள்ள முடியும். எனவேதான், அது வெளிநாட்டு பயண விவரங்களை விரிவாகத் தெரிவிக்க வேண்டாம். பாஸ்போர்ட் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும் என்று சொல்லி உள்ளது. இதில், வரி தாரருக்கும் ஒரு லாபம் இருக்கிறது. அவர் அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொள்பவராக இருந்தால், பயண விவரங்கள் மற்றும் செலவு விவரங்களை முழுமையாக நினைவில் வைத்து, அதனை வருமான வரி கணக்குப் படிவத்தில் குறிப்பிடத் தேவையில்லை. எனவே, இந்த மாற்றம் வரவேற்கக் கூடியதாக இருக்கிறது.
 வங்கிக் கணக்கு விவரம்!
ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட வருமான வரிப் படிவத்தில் நிதி ஆண்டு இறுதியில் வங்கிக் கணக்கில் இருக்கும் தொகையைக் குறிப்பிட வேண்டும் எனச் சொல்லப் பட்டிருந்தது. அதற்குப் பதில், வங்கிக் கணக்கு எண் (சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்கு எண்), ஐஎஃப்எஸ் கோடு எண்ணை படிவத்தில் குறிப்பிட்டால் போதும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. செயல்பாட்டில் இல்லாத (dormant) கணக்குகள் பற்றிய விவரங்களையும் வரி கணக்குப் படிவத்தில் குறிப்பிட வேண்டும் என இதற்குமுன் சொல்லப்பட்டிருந்தது.
இப்போது இந்த விவரத்தை குறிப்பிடத் தேவையில்லை. வங்கிக் கணக்கு பற்றிய விவரத்தை   மட்டும் குறிப்பிட்டால்  போதும்.
மாத சம்பளம் மட்டுமே இருக்கிறவர்கள் 4 பக்கங்களைக் கொண்ட ஐடிஆர்1 (சஹாஜ்) படிவத்தில் வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். வணிக வருமானம் கொண்டவர்களுக்கு ஐடிஆர்4எஸ் (சுகம்) கொண்டு வரப்பட்டிருக்கிறது.
கால அவகாசம் அதிகரிக்க வேண்டும்!
வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மாற்றங்கள், சாதகமா அல்லது பாதகமா என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் சதீஷ்குமார் விளக்கிச் சொன்னார்.
‘‘வரி கணக்குப் படிவம் மூன்று பக்கங்களாகக் குறைக்கப் பட்டிருக்கிறது. ஆனால், அதில் அதிக விவரங்கள் கேட்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ஒருவருக்கு ஐந்து வங்கிகளில் கணக்கு இருந்தால், அவை அனைத்தின் விவரமும் ரிட்டர்ன் படிவத்தில் கணக்கு எண், கிளையின் விவரம், ஐஎஃப்எஸ்சி கோட் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. மேலும், ஜாயின்ட் அக்கவுன்ட் இருந்தாலும் அந்த விவரத்தையும் குறிப்பிட வேண்டும். அது வரிதாரருக்கு அதிக வேலை வைக்கும்.
ஐடிஆர் படிவத்தை எப்படி நிரப்ப வேண்டும் என்கிற ஸ்கிமா (schema) இன்னும் தயாரிப்பு நிலையில்தான் இருக்கிறது. இந்த நிலையில் எப்படி ஐடிஆர் படிவத்தை ஆன்லைனில் நிரப்ப முடியும்? பொதுவாக, ஜூலை 31, வரி கணக்குத் தாக்கல் செய்யக் கடைசித் தேதி. அந்த வகையில் ஏப்ரல் 1 தொடங்கி, ஜூலை 31 வரைக்கும் நான்கு மாதங்கள் வரி கணக்குத் தாக்கல் செய்ய வரிதாரருக்கு அவகாசம் கொடுக்கப்படும். ஆனால், இப்போது ஏறக்குறைய இரண்டரை மாதத்தை மத்திய அரசு ஐடிஆர் படிவம் தயாரிப்புக்கே எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், வரி கணக்குத் தாக்கலுக்கான காலம் ஒரு மாதம் மட்டுமே நீடிக்கப்பட்டிருப்பது நிச்சயம் வரிதாரர்களுக்கு கஷ்டத்தையே தரும். எனவே, என்றைக்கு வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்கிறதோ, அதிலிருந்து நான்கு மாதங்கள் வரி கணக்குத் தாக்கல் செய்ய அனுமதிப்பது சரியாக இருக்கும்.
இப்போது செய்யப் பட்டிருக்கும் ஆகஸ்ட் 31 வரைக்குமான நீடிப்பு மாதச் சம்பளக்காரர்கள் மற்றும் ரூ.1 கோடிக்கு கீழே டேர்னோவர் கொண்ட நிறுவனங்களுக்குதான். ரூ.1 கோடிக்கு மேல் டேர்னோவர் கொண்ட நிறுவனங்களுக்கு வரி கணக்குத் தாக்கல் செய்ய செப்டம்பர் 30-ம் தேதி கடைசி நாள். இப்போது இரண்டரை மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அவர்களை அரசு மறந்துபோனது ஏன் என்று தெரியவில்லை.
அரசு ஒவ்வொரு ஆண்டும் இப்படி நிதி ஆண்டு முடிந்தபிறகு வரி கணக்குத் தாக்கல் செய்யப் போகிற நிலையில்தான் வரி கணக்குப் படிவங்களில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது அல்லது கூடுதல் விவரங்களைப் படிவத்தில் நிரப்ப வேண்டும் என்று சொல்கிறது. இது வரிதாரர்களுக்கு சிரமத்தையே தரும். முன்னரே குறிப்பிட்டிருந்தால், அந்த விஷயங்கள் தொடர்பான விவரங்களை முன்பே குறித்து வைத்துக்கொள்வார்கள்.
இது ரிட்டர்ன் தாக்கல் செய்யும்போது உதவியாக இருக்கிறது. இனிவரும் ஆண்டுகளிலாவது இப்படி வரிதாரர்களை வதைப்பதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.
எது எப்படியோ ஐடிஆர் படிவங்கள், வரி கணக்குத் தாக்கல் சாஃப்ட்வேர் வெளியானால்தான் வருமான வரி கணக்கு தாக்கல் சுகமாக அமையுமா அல்லது சோகமாக இருக்குமா என்பது தெரியும்!
ரியல் எஸ்டேட்டை பாதிக்கும் அரசு நடவடிக்கை!
 மனை, சொத்து வாங்கும்போது ரூ.20,000-க்கு மேல் ரொக்கமாகத் தரக்கூடாது. அப்படித் தந்தால் 100% அபராதம் விதிக்கப்படும். ரூ.20,000-க்கு மேல் தொகை செல்லும்போது, காசோலை அல்லது கேட்பு காசோலையாகதான் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் விவசாயிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் நிபந்தனை இருக்கிறது. விவசாயிகளுக்கு விவசாயம் தவிர வட்டி, வாடகை, சம்பளம் என எந்த வருமானமும் இருக்கக்கூடாது. இவை ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஏற்கெனவே மந்தநிலையில் இருக்கும் ரியல் எஸ்டேட் துறையை மத்திய அரசின் இந்த நடவடிக்கை மேலும் மந்தமாக்கிவிடும் என ஆடிட்டர் சதீஷ்குமார் தெரிவித்தார். ‘‘ஒருவர் அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்க, புரமோட்டருக்கு ரூ.1 லட்சம் ரொக்கமாக முன்பணம் கொடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்போது புதிய சட்டப்படி புரமோட்டர் ரூ.1 லட்சம் அபராதம் கட்ட வேண்டும். வீடு பிடிக்காமல் பணமாக இந்த ஒரு லட்சத்தைத் திரும்ப வாங்கினால், அதற்கும் ரூ.1 லட்சம் அபராதம் கட்ட வேண்டும். ரியல் எஸ்டேட்டில் வழக்கமாக ரூ.5 லட்சம் வரைக்கும் ரொக்கமாகக் கையாளப்படும். இந்த நிலையில் இது ரூ.20,000-ஆகக் குறைக்கப்படும்போது, ரியல் எஸ்டேட் தொழில் இன்னும் மந்தமாக வாய்ப்புள்ளது” என்றார்.

அடல் பென்ஷன் திட்டம்


அடல் பென்ஷன் திட்டம்… ஏன்? எதற்கு? எப்படி?

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்திய சமூக பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றுதான் அடல் பென்ஷன் யோஜனா. இந்தத் திட்டம் ஜூன் 1, 2015-ல் இருந்து செயல்பட ஆரம்பித்திருக்கிறது.
இந்தத் திட்டத்தில் இணைய என்ன செய்ய வேண்டும், எப்படி பணம் வசூலிக்கப்படும், யார் இதை நிர்வகிப்பார்கள், எவ்வளவு தொகை பென்ஷனாக கிடைக்கும் என்று பல கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் தந்தார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வங்கிப் பரிமாற்றம் மற்றும் அரசுக் கணக்குகள் பிரிவின் இணைப் பொது மேலாளர் வி.வி.கணேசன்.
‘‘இந்தத் திட்டத்தின் நோக்கமே அமைப்பு சாராத (Unorganised) துறையில் வேலை செய்பவர்கள், ஓய்வுக்காலத்துக்குப் பின், அதாவது 60 வயதுக்குப்பின் மாதம் ரூ.1,000 – 5,000 வரை ஓய்வூதியம் பெற வேண்டும் என்பதுதான். அதற்காக அரசு தன் சார்பாக ஒரு சிறு தொகையைச் செலுத்தும்.
யார் இணையலாம்?
18  வயது முதல் 40 வயதுடைய, இந்தியாவில் வங்கி சேமிப்புக் கணக்கு வைத்துள்ள இந்தியர் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் இணையலாம். ஒரே குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்டு 40 வயதுக்குள் உள்ள அனைவரும் இந்தத் திட்டத்தில் இணையலாம்.
இந்தத் திட்டத்தில் டிசம்பர் 31, 2015-க்குள் இணைபவர்களுக்கு அரசு தன் சார்பாக வருடத்துக்கு ரூ.1,000 அல்லது நாம் செலுத்தும் தொகையில் 50 சதவிகிதம், இவற்றில் எது குறைவோ அந்த தொகையைச் செலுத்தும். 
பென்ஷன் தொகை தரக்கூடிய திட்டங்களில் ஏற்கெனவே இணைந்திருப்பவர்கள், சமூக பாதுகாப்புத் திட்டங்களில் இணைந்திருப்பதாக கருதப்படு வார்கள். அப்படிப்பட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களில் இருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் இணைய முடியும் என்றாலும் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை இவர்களுக்கு வழங்காது. அதேபோல், வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களும் இந்தத் திட்டத்தில் சேரலாம் என்றாலும் அவர்களுக்கும் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகை கிடைக்காது.
ஒருவேளை இப்போது அமைப்புசாரா துறையில் பணியாற்றிக் கொண்டிருந்து, பிற்காலத்தில் அமைப்பு சார்ந்த துறையில் பணியில் சேர்ந்தால், எந்த வங்கிக் கிளையின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைந்தார் களோ, அந்த வங்கிக் கிளைக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். அரசுக்கு தெரியப் படுத்தியவுடன் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை நிறுத்திக்கொள்ளும்.
எப்படி இணைவது?
எந்த வங்கிக் கிளையில் உங்களுக்கு சேமிப்புக் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கிக் கிளையில் இந்த பென்ஷன் திட்டத்துக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, முகவரி சான்று, புகைப்பட அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றைத் தரவேண்டும். வங்கி உங்களுக்கு ஒரு ‘ப்ரான் எண்’ணை (PRAN NO) வழங்கும். அந்த ‘ப்ரான் எண்’ணுக்கு நம் கணக்கிலிருந்து பணம் கிரெடிட் செய்யப்படும். இந்த ‘ப்ரான் எண்’ நாம் அடல் திட்டத்தில் இணைந்ததற்கு ஆதாரமாக இருக்கும்.
யார், எவ்வளவு தொகை செலுத்தலாம்?
நாம் விண்ணப்பம் பூர்த்தி செய்து தரும்போதே 60 வருடங்களுக்குப் பிறகு எவ்வளவு தொகை பென்ஷனாக கிடைக்க வேண்டும் என்பதைக் கேட்பார்கள். குறைந்தபட்சம் ரூ.1,000 தொடங்கி அதிகபட்சமாக ரூ.5,000 வரை ஒருவர் பென்ஷனாக பெற நினைக்கும் தொகையைக் குறிப்பிடலாம். பென்ஷனாக பெற நினைக்கும் தொகைக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் பணம் கட்ட வேண்டியிருக்கும். (பார்க்க அடுத்த பக்கத்தில் உள்ள அட்டவணை!)
முதல்முறையாக இந்தத் திட்டத்தில் இணைந்தவுடன், இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கு சாட்சியாக ஒரு சான்றிதழ் வழங்கப்படும். அதுதான் ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம். அதேபோல் ஒவ்வொரு தவணை செலுத்தும்போதும் உங்களுக்கு ரசீதோ அல்லது குறுஞ்செய்தியோ அனுப்பப்படும்.
எப்படி பணம் செலுத்துவது?
ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்தபின் மாதாமாதம் செலுத்த வேண்டிய தொகையை ஆட்டோடெபிட் மூலம் செலுத்தலாம்.  நம் வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து வரவு வைக்கப்படும். நம் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, அது நம் ‘ப்ரான்’ கணக்கில்   வரவு வைக்கப் பட்டதும் நமக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
எப்போது பணம் எடுக்கப்படும்?
நாம் முதல் முறையாக அடல் திட்டத்தில் இணையும்போது எந்த தேதியில் பணம் செலுத்து கிறோமோ, அந்த தேதிதான் நம் அடுத்தடுத்த  மாதத்தின் கெடு தேதி. உதாரணமாக, ஜூன் மாதம் 8-ம் தேதி முதல் தவணை செலுத்தி இருந்தால், அடுத்தடுத்த மாதம் 8-ம் தேதி அன்று தவணைக்கான பணம் எடுக்கப்படும்.
தொகையை அதிகரிக்கலாமா?
வருடத்துக்கு ஒருமுறை நாம் செலுத்தும் தொகையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். ஒவ்வொரு ஆண்டின் ஏப்ரல் மாதம் மட்டும் இந்த வசதி மூலம் நாம் மாதாமாதம் செலுத்தும் பென்ஷன் தொகையை அதிகரித்துக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடியும்.
பணம் கட்டாவிட்டால்..?
இந்தத் திட்டத்தில் சேர்ந்தபின் சரியாக பணம் கட்டவில்லை என்றால் அபராதம் விதிக்கப் படும். ரூ.1 முதல் 100-க்கு ஒரு மாதத்துக்கு 1 ரூபாயும், ரூ.101 முதல் 500 வரை ஒரு மாதத்துக்கு 2 ரூபாயும், ரூ.501 முதல் 1,000 வரை ஒரு மாதத்துக்கு 5 ரூபாயும், ரூ.1001-க்கு மேல் ஒரு மாதத்துக்கு 10 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு பணம் செலுத்தவில்லை என்றால், நம் சேமிப்புக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும். தொடர்ந்து 24 மாதங்கள் பணம் செலுத்தவில்லை என்றால் சேமிப்புக் கணக்கு நிரந்தரமாக மூடப்பட்டு, திட்டத்திலிருந்து நீக்கப்  படுவார்கள்.
யார் நிர்வகிக்கிறார்கள்?
இந்தத் திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) என்கிற அரசு அமைப்பு நிர்வகிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதியில் 85%  அரசுப் பத்திரங்கள் மற்றும் பாண்டுகளில் முதலீடு செய்யப் படும். மீதமுள்ள 15% பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.
என்ன உறுதி?
நாம் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு  கூடுதல் தொகை கிடைத்தால், அந்த தொகை திட்டத்தில் முதலீடு செய்தவருக்கே  வழங்கப்படும். ஒருவேளை உறுதி செய்யப்பட்ட தொகையைவிட குறைந்த அளவே வருமானம் ஈட்டி இருந்தால், அதை அரசாங்கம் சரிகட்டும்.
எப்போது க்ளெய்ம் கிடைக்கும்?
இந்தத் திட்டத்தில் இணைந்தவர் 60 வயதுக்குப் பிறகு இறந்துவிட்டால், அவரது இறப்புச் சான்று, இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கான சான்றிதழ், ஆதார்  அட்டை விவரங்கள், நாமினியின் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை திட்டத்தை நிர்வகிக்கும் வங்கிக் கிளையில் சமர்பித்தால், வங்கி அந்த ஆவணங்களின் நகலை பிஎஃப்ஆர்டிஏவுக்கு அனுப்பும். பிஎஃப்ஆர்டிஏ  சான்றிதழ்களை சரிபார்த்து பென்ஷன் தொகையை நாமினிக்கு வழங்கும். ஒருவேளை 60 வயதுக்குமுன் இறந்தால் அல்லது உயிர் போகக்கூடிய நோய் காரணமாக பணத்தைத் திட்டத்திலிருந்து எடுக்க வேண்டும் என்றால், திட்டத்தில் இணைந்தவர் எவ்வளவு தொகை செலுத்தினாரோ அந்த தொகையும், அரசு தன் சார்பாக வழங்கிய தொகை மட்டும்தான் வழங்கும்.
60 வயதுக்குப் பின் இறந்தால்…?
இந்த திட்டத்தின் சிறப்பம்சமே, ஒருவர் 60 வயது முடித்து எத்தனை ஆண்டுகள் வாழ்கிறாரோ, அத்தனை ஆண்டுகளுக்கும் அவர் கோரி இருந்தபடி பென்ஷன் தொகை கிடைக்கும்.
அவருக்குப்பின் அவர் சொல்லும் நாமினி, அதாவது முதல் நாமினி, இறக்கும் வரை அதே அளவு தொகை ஒவ்வொரு மாதமும் பென்ஷனாக கிடைக்கும். முதல் நாமினியும் இறந்துவிட்டால், அவர் நாமினியாக நியமித்தவருக்கு, அதாவது இரண்டாவது நாமினிக்கு உறுதி செய்திருந்த மொத்த தொகையும்  (Lumpsum) வழங்கப்படும்.
உதாரணமாக, சேகர் என்பவர் தன் 30-வது வயதில் இந்தத் திட்டத்தில் இணைந்து மாதம் ரூ.577 செலுத்தி வருகிறார். அரசு தன் சார்பாக வருடத்துக்கு ரூ.1,000 செலுத்தி வருகிறது. இவருக்கு 61-ஆவது வயதிலிருந்து மாதம் ரூ.5,000 கிடைக்கும். சேகர் தன் 71-வது வயதில் இறந்துவிடுகிறார். ஆக சேகருக்கு  61 – 71 வயது வரை 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5,000 கிடைத்திருக்கும்.
சேகர் இந்தத் திட்டத்தில் இணையும்போது நாமினியாக தனது மனைவி கமலாவைக் குறிப்பிட்டிருக்கிறார்.  (நாமினி கணவன் /மனைவி யாகத்தான் இருக்க வேண்டும்) எனவே, சேகர் இறந்தபின், கமலா உயிரோடு இருக்கும் வரை மாதம் ரூ. 5,000 கிடைக்கும். கமலா தனது நாமினியாக தன் மகன் ரமேஷை நியமித்திருப்பார். கமலா இறந்த பிறகு, ரமேஷுக்கு மொத்தத் தொகையான 8.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
நாமினியை மாற்றிக் கொள்ளலாமா?
இந்தத் திட்டத்தில் இணைபவர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது கட்டாயம் நாமினியை குறிப்பிட வேண்டும். ஒருவேளை, நாமினி இறந்துவிட்டால், எந்த வங்கிக் கிளையில் இந்தத் திட்டம் நிர்வகிக்கப்பட்டு வருகிறதோ, அந்த வங்கியில் சென்று புதிதாக வேறு ஒரு நாமினியை நியமித்துக் கொள்ளலாம்.
வேறு வங்கிக் கிளைக்கு மாற்றலாமா?
இந்தத் திட்டத்தில் சேர்ந்தபின், ஒருவர் எந்த வங்கிக் கிளைக்கு வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், க்ளெய்ம் சமயத்தில் ஒருவரின் ‘ப்ரான் கணக்கு’ எங்கு நிர்வகிக்கப்படுகிறதோ, அங்குதான் க்ளெய்ம் கிடைக்கும்.
தரப்பட்ட தகவல்கள் தவறாக இருக்கும்பட்சத்தில், திட்டத்தில் இணைந்தவர் செலுத்திய தொகை மட்டும் திரும்ப வழங்கப்பட்டு திட்டத்திலிருந்து நீக்கப்படுவார். அரசு தன் சார்பாக வழங்கிய தொகை கிடைக்காது” என்றார் கணேசன்.

Wednesday, June 10, 2015

ஹெல்த் இன்சூரன்ஸ், முழுமையாக “க்ளெய்ம்” செய்ய


ஹெல்த் இன்சூரன்ஸ்,  முழுமையாக “க்ளெய்ம்” செய்வது எப்படி?
ஹெல்த் இன்ஷூரன்ஸில் முழுமையான க்ளெய்ம் கிடைக்க...
கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
ஹெல்த் இன்ஷூரன்ஸில் முழுமையான க்ளெய்ம் கிடைக்க கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் குறித்து விளக்குகிறார் ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம் நிறுவனத்தின் தலைமை இன்ஷூரன்ஸ் ஆலோசகர் ஸ்ரீதரன்.
மறைக்கக்கூடாத தகவல்கள்!
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது இன்ஷூரன்ஸ் நிறுவனம் கேட்கும் விவரங்களில் எந்த மாதிரியான விவரங்களை முழுமையாகத் தரவேண்டும் என்பது இன்னும் பலருக்குத் தெளிவில்லாமல் இருக்கிறது. உதாரணமாக, ஏதாவது நோயினால் நீங்கள் அவதிப்பட்டு பாலிசி எடுப்பதற்குமுன் குணமடைந்திருந்தால் அது குறித்த மருத்துவச் சான்றிதழ் மற்றும் மருத்துவரின் பரிந்துரைக் கடிதங்களை விண்ணப்பத்தோடு சமர்பிக்க வேண்டும். உங்களுக்கு ஏற்கெனவே இருக்கும் நோய்கள் பற்றிய விவரங்களையும் விரிவாக, தெளிவாகக் குறிப்பிடுவதால் உங்கள் பிரீமியத்தை அதிகமாக்கும் என்றாலும், க்ளெய்ம் என்று வரும்போது பிரச்னை எழாமல் இருக்கும். பாலிசி எடுக்கும்போது பிரீமியத்தைக் குறைக்க உங்கள் நோய் பற்றிய விவரங்களை மறைத்தால் அது நீங்கள் எடுத்த இன்ஷூரன்ஸ் பாலிசியின் அடிப்படை நோக்கத்தையே நேரடியாகப் பாதிக்கும்.
நீங்கள் தனிநபர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்காமல் ஃப்ளோட்டர் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது மேற்கூறிய அனைத்தையும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்கெனவே உள்ள நோய்களை (ப்ரீ எக்ஸிஸ்டிங் டிஸீஸ்) பற்றிய விரிவான குறிப்புகள் மற்றும் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டு குணமான நோய்கள் போன்றவைகளையும் குறிப்பிடுவதால் க்ளெய்ம் தொகை கிடைப்பதில் சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
பாடி மாஸ் இண்டெக்ஸ்!
ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது பாடி மாஸ் இண்டெக்ஸ் கணக்கிடப்படும். இந்த இண்டெக்ஸ்படி, ஒருவர் எவ்வளவு உயரம் இருக்கிறாரோ, அந்த உயரத்துக்கு தகுந்தாற் போல் அவரின் உடல் எடையும் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் கூடுதல் உடல் எடை இருந்தால், அது இன்ஷூரன்ஸ் பிரீமியம் அதிகரிக்க காரணமாகும். ஏன் இதைக் கணக்கிடுகிறார்கள் என்றால், அதிகப்படியான உடல் எடை சர்க்கரை நோய்க்கு அடித்தளம். சர்க்கரை நோய் வந்துவிட்டால், படிப்படியாக ரத்த அழுத்தம், இதய நோய்களும் கூடவே வர வாய்ப்பு அதிகம். இதனால் கம்பெனி அதிக பிரீமியம் வசூலிக்க வேண்டியிருக்கும். பிரீமியத்தைக் குறைக்க நம் எடையைக் குறைத்து சொல்லி, பிறகு ஏதாவது க்ளெய்முக்குச்  சென்று, பின்னாளில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரிய வந்தால் மொத்த பாலிசியும் ரத்து செய்யப்படும்.
ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் பாலிசி!
ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பாலிசிகளுக்கு இணையாக அதிக க்ளெய்ம்களை தருவதில்லை. உதாரணமாக, ஒரு சில ஜெனரல் இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் ஆம்புலன்ஸ், மருத்துவர் கட்டணம், சிறப்பு மருத்துவர் கட்டணம், நோயாளிகள் தங்கும் அறை வாடகை போன்றவை களுக்கு க்ளெய்ம்  கிடையாது.
மேலும், ஹெல்த் இன்ஷுரன்ஸ் நிறுவனங்களின் முதல் கடமையே இதுவாக இருப்பதால், பாலிசிதாரரின் தேவையை அறிந்து பல புதிய பாலிசிகளை அறிமுகமும் செய்து வருகின்றன. ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பாலிசிகளில் மேற்கூறிய அனைத்துக்கும் பாலிசியின் மொத்த க்ளெய்ம் தொகையில் குறிப்பிட்டுள்ள அளவு க்ளெய்ம் தொகை வழங்கப்படுகிறது. உதாரணமாக, பொது மருத்துவரை அணுகினால் மொத்த கவரேஜ் தொகைக்கு 1%, சிறப்பு மருத்துவர்களை அணுகினால் ஒரு நாளுக்கு இவ்வளவு தொகை என்று வழங்கப்படும். மருத்துவ அறையின் வாடகை கவரேஜ் தொகையில் 1% என்று வழங்கப் படுகிறது. இது ஒவ்வொரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் மாறுபடும்.
இரண்டாவது ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி!
ஒருவர் இரண்டாவது ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால் அவர் தன் முதல் பாலிசி பற்றிய விவரங்களை இரண்டாவது பாலிசி எடுக்க இருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். இரண்டு இன்ஷூரன்ஸ் நிறுவனமும் ஐஆர்டிஏவின் பரிந்துரையின் படி, அதிக கவரேஜ் வழங்கிய நிறுவனம் அதன் கவரேஜ் தொகைக்குத் தகுந்த பங்கு தொகையையும், குறைந்த கவரேஜ் வழங்கிய நிறுவனம் அதற்குத் தகுந்த பங்கு தொகையையும் வழங்கும். உதாரணத்துக்கு, ஒருவர், முதல் பாலிசியில் 2 லட்சம் கவரேஜும், இரண்டாவது பாலிசியில் 1 லட்சம் கவரேஜும் எடுத்திருந்தால், முதல் பாலிசியிலிருந்து மூன்றில் இரண்டு பங்கும் இரண்டாவது பாலிசியில் இருந்து மூன்றில் ஒரு பங்கும் க்ளெய்ம் பெற முடியும். ஆனால், ஒருவர் இரண்டுக்கும் மேற்பட்ட ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்கும்போது க்ளெய்ம் நேரத்தில் எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் எவ்வளவு க்ளெய்ம் வழங்க வேண்டும் என்று இன்ஷூரன்ஸ் நிறுவனங்க ளுக்குள் சிக்கல்கள் ஏற்படும். எனவே, ஒரு தனிநபர் பாலிசியும், ஒரு ஃப்ளோட்டர் பாலிசியும் எடுத்தால் போதுமானது.
கோ-பேமென்ட்!
பாலிசி எடுக்கும்போது கோ - பேமென்ட் என்று ஏதாவது செலுத்த வேண்டுமா என்பதைத் தெரிந்துகொண்டு  எடுங்கள். பல நிறுவனங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் தொகையில் 10 - 20% தொகையைக் கோ-பேமென்ட்டாகச் செலுத்த வேண்டும் என்று சொல்கிறது. சில நிறுவனங்கள் இந்தக் கோ-பேமென்ட் இல்லாமலும் க்ளெய்ம் வழங்குகிறது. எனவே, இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பாலிசி எடுங்கள். அதேபோல் வயதானவர்களுக்கு எப்படி கோ-பேமென்ட் கணக்கிடுகிறார்கள் என்று விசாரித்து பாலிசி எடுங்கள்.
க்ளெய்ம் விவரங்கள்!
எந்த மாதிரியான சிகிச்சைகளுக்கு க்ளெய்ம் கிடைக்கும்; எந்த மாதிரியான சிகிச்சைகளுக்கு க்ளெய்ம் கிடைக்காது என்பதையும் தெரிந்துகொண்டு எடுங்கள். உதாரணமாக, நாம் செய்து கொள்ளும் சிகிச்சைகளில் நம் அழகை அதிகப்படுத்தச் செய்யப்படும் கிசிக்கைகளுக்கு க்ளெய்ம் கிடைக்காது. அதோடு ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு எத்தனை ஆண்டுகள் காத்திருப்புக் காலம்  என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு பாலிசி எடுப்பது நல்லது. சில நிறுவனங்கள் பாலிசி எடுத்து 30 நாட்களுக்குப் பின் க்ளெய்ம் செய்துகொள்ளலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது. அதேபோல் ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு எத்தனை நாட்களுக்கு காத்திருப்புக் காலம் என்பதை எல்லாம் கவனித்துப் பாலிசி எடுங்கள். இது உங்கள் க்ளெய்ம் தொகையில் பிரச்னை இல்லாமல் இருக்க வழி வகுக்கும். இந்தக் காத்திருப்புக் காலம் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும்.
சர்க்கரை நோய்..! 
பொதுவாக சர்க்கரை வியாதிக்கு எந்த பாலிசியிலும் க்ளெய்ம் கிடைக்காது. அப்படி க்ளெய்ம் கொடுப்பதாகக் குறிப்பிட்டிருந்தால் எதற்கு எல்லாம் க்ளெய்ம் உண்டு என்று தீர விசாரித்துத் தெரிந்துகொண்டு பாலிசி எடுங்கள். எனவே, சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பிரத்தியேகமான டயாபெட்டீஸ் பாலிசி எடுத்தால் சர்க்கரை வியாதியால் வரும் அனைத்து நோய்களுக்கும் க்ளெய்ம் கிடைக்கும். சர்க்கரை வியாதிதான் இன்றைய தேதியில் பெரும்பாலான நோய்களுக்கான அறிமுக நோயாக இருக்கிறது. எனவே, அதற்கு தனி பாலிசியை எடுத்துக்கொள்வது நலம்.
எங்கு சிகிச்சை?
பாலிசி எடுத்தவர்கள் சிகிச்சை எடுக்க வேண்டும் எனில், பாலிசி எடுத்த நிறுவனத்தின் நெட்வொர்க் மருத்துவ மனைகளில் இணைவது நல்லது. பணத்தை நாம் செலுத்திவிட்டுப் பின் க்ளெய்முக்கு காத்திருப்பதை விட கேஷ்லெஸ் முறையில் நெட்வொர்க் மருத்துவ       மனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்வது பெஸ்ட்.
தெரியப்படுத்துதல்!
முன்கூட்டித் திட்டமிட்டு எடுக்கவுள்ள சிகிச்சைகளை 72 மணி நேரத்துக்குமுன் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தெரியப்படுத்த வேண்டும். இல்லை என்றால் உங்கள் க்ளெய்மை நிராகரிக்க இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு உரிமை உண்டு.
அதுபோல அவ்வப்போது ஏதாவது புதிய விதிமுறைகள் வந்திருக்கிறதா அல்லது இருக்கும் விதிமுறைகள் மாற்றப்பட்டிருக்கிறதா என்பதை இணையம், நாளிதழ்கள் மற்றும் உங்கள் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகள் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.
சிறப்பு பாலிசிகள்!
இன்றைய காலத்தில் க்ரிட்டிக்கல் இல்னஸ் பாலிசிகள், மகளிர் பாலிசிகள் என்று பல தரப்பட்ட பாலிசிகளை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கத் தொடங்கி இருக்கின்றன. மேலும், மூத்த குடிமக்களுக்கும் சிறப்பு பாலிசிகளை ஒரு சில நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. ஆகவே, மூத்த குடிமக்களும், இத்தகைய சிறப்பு பாலிசிகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
உதாரணமாக, ஒரு குடும்பத்தில் பலருக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய் பாதிப்பு உள்ளது என்றால் வெறும் கார்டியாக் பாலிசியை எடுத்தால் போதும். அதேபோல் தற்போது பெண்களுக்கு என்று சிறப்பு மகளிர் பாலிசிகள் வந்திருக்கின்றன. இந்த பாலிசி மூலம் பெண்களை அதிகம் தாக்கக்கூடிய மார்பகப் புற்றுநோய், கர்பப்பை புற்றுநோய் பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளின் நோய்களான ப்ரீ மெச்சூர் ஒவேரியன் ஃபெய்லியர், பாலிசிஸ்டிக் ஓவரி போன்ற பிரச்னைகளுக்குக்கூட இந்த பாலிசிகளில் க்ளெய்ம் கிடைக்கும்.
மு.சா.கெளதமன்
நன்றி : நாணயம் விகடன், 07.06.2015  

Tuesday, June 9, 2015

ஃபேஸ்புக்கில் பறிபோகும் பிரைவஸி! பாதுகாப்பது எப்படி?


ஃபேஸ்புக்கில் பறிபோகும் பிரைவஸி! பாதுகாப்பது எப்படி?
***************************************************************

இன்று காலை பல நண்பர்களது ஃபேஸ்புக் கணக்குகளில் இருந்து ஒரு ஆபாச வீடியோ ஒன்று இன்பாக்ஸில் வந்தது. என்ன என்று பார்ப்பதற்குள் என் கணக்கிலிருந்து பலருக்கு அந்த செய்தி பரவிவிட்டது. பின்னர்தான் தெரிந்தது அது வைரஸ் செய்தி எனும் ஸ்பாம். இதேபோல் பலருக்கும் உண்டான அனுபவம் ஸ்டேட்டஸில் வெளிப்பட்டது. 
இதற்கெல்லாம் காரணம் நமது ப்ரைவஸி அமைப்பு சரியாக இல்லாதது தான்.முன்பு எப்போதோ ஒரு ஆப்ஸுக்கு நம் தகவல்களை பயன்படுத்தி கொள்ளலாம் என நாம் வழங்கிய அனுமதிகூட இந்த நிகழ்வுக்கு காரணமாக இருக்கலாம்.இன்றைய சமூக வலைதள உலகில் ப்ரைவஸி என்பது கிட்டத்தட்ட இல்லை என்ற நிலையிலேயே இருக்கிறது. குறிப்பாக நமது தகவல்களை பிறர் தெரிந்து கொள்வது துவங்கி ஒருவரது புகைப்படத்தை முகம் தெரியாத நபர் எடுத்து கொள்வது வரை அனைத்துமே இன்றைய சமூக வலைதளங்களில் எளிதாக இருக்கிறது.
இன்றைய நிலையில் அனைவரும் தகவல்களை ப்ரைவஸியாக வைத்திருப்பது அவசியமாகிறது. குறிப்பாக பெண்கள் தங்கள் தகவல் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தாமலோ அல்லது பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதும் இன்றைய நிலையில் அவசியமாகிறது. ஃபேஸ்புக்கும் இதற்கேற்ப ப்ரைவஸி தகவல்களை பாதுகாக்கும் அமைப்பை உருவாக்கியுள்ளது. இதனை எப்படி சரியாக பயன்படுத்துவது என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. ஃபேஸ்புக்கில் நமது ப்ரைவஸியான விஷயங்களை எப்படி பாதுகாப்பது என்பதை பற்றி பார்ப்போம்.
பாதுகாப்பது எப்படி?
1.பலருக்கு ஃபேஸ்புக் அமைப்பில் தங்களது புகைப்படத்தை மாற்றுவது மற்றும் தங்களை பற்றிய விவரங்களை மாற்றுவது மட்டுமே தெரிந்திருக்கிறது. ஆனால் அதனை தாண்டி ஃபேஸ்புக்கில் ப்ரைவஸி செட்டிங் என்றை அமைப்பு உள்ளது அதில் இருக்கும் விஷயங்களை நாம் பெரும்பாலும் கவனிப்பதே இல்லை. அதில்...
1.நம் தகவல்களை யார் பார்க்க வேண்டும்?

2.நம்மை யார் தொடர்பு கொள்ள வேண்டும்?

3.நம்மை தொந்தரவு செய்பவரை எப்படி தவிர்ப்பது?
இந்த மூன்று கேள்விகளும் இடம் பெற்றிருக்கும். இதனை ஒவ்வொன்றாக பார்த்தால் நம் தகவல்களை நமது நண்பர்கள் பார்க்கலாம்,நண்பர்களது நண்பர்கள் பார்க்கலாம்? அனைவரும் பார்க்கலாம் என்பது போன்ற அமைப்புகள் தரப்பட்டிருக்கும். இதனை சரியாக அமைத்தாலே பாதி பிரச்னைகளை தவிர்க்கலாம். அதற்கு முன்பு சமூக வலை தளங்களில் முகம் தெரியாதவர்களோடு அதிகம் நெருங்கி பழகாமல் இருப்பதும் அவசியம் என்பதை உணர வேண்டும்.
நம்மை யாராவது தொடர்பு கொள்ள வேண்டும் எனில் நம்மிடம் அனுமதி கேட்க வேண்டும் என்ற அமைப்பையும் ஃபேஸ்புக் வைத்துள்ளது அதற்கு நாம் செய்ய வேண்டியது நமது விவரங்களை நமக்கு மட்டும் தெரியும் 'ஒன்லி மீ' அல்லது ''ஃப்ரெண்ட்ஸ் ஒன்லி' அமைப்பாக வைத்திருப்பதன் மூலம் நம் தகவல்கள் தேவையில்லாத நபர்களுக்கு பகிரப்படுவதை தவிர்க்கலாம்.
சமூக வலைதளங்களில் சிலர் அடிக்கடி தொந்தரவு தரும் செய்திகளையோ அல்லது தனிப்பட்ட முறையில் நமக்கு தொந்தரவுகளையும் தர முடியும். அவர்களை ப்ளக் செய்யும் வசதியையும், அவர்களுக்கு நம் கணக்கு கண்களுக்கு தெரியாமல் செய்யவும் செய்ய முடியும்
இது ஒரு புறம் என்றால் தன்னை பிரபலபடுத்தி கொள்ளவும், அதிக லைக்ஸ்கள் வாங்கவும் ஒரு கூட்டம் அனைவரையும் டேக்(TAG) செய்து பதிவுகளை பதிவு செய்து வரும். அதனை தவிர்க்க முடியாமல் பலரும் அவதிபடுவார்கள். அதனை தவிர்க்கவும் ஃபேஸ்புக்கில் வழி உள்ளது. ஃபேஸ்புக் ரிவியூ அமைப்பின் மூலம் உங்களை டேக் செய்யும் பதிவுகளை நீங்கள் பார்த்து சரி என்று சொன்னால் மட்டுமே அது உங்கள் டைம் லைனுக்கு வரும் இல்லையெனில் அவை உங்கள் டைம்லைனில் நிற்காது. 
புகைப்படங்கள் மூலமாக தான் அதிகமாக பிரச்னைகள் வருகின்றன. அப்படி புகைப்படங்களால் பிரச்னை வரும் போது நமது புகைப்படத்தை பதிவு செய்வதை தவிர்க்கலாம். அப்படியே பதிவு செய்தாலும் உங்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கு மட்டும் தெரியுமாறு அமைப்பை அமைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிரச்னை தரக்கூடியவர்களுக்கு உங்கள் கணக்கு தெரியாதபடி அமைப்பை மாற்றி கொள்ளுங்கள்.
இவையெல்லாம் நாமாக பாதுகாத்து கொள்ளும் ப்ரைவஸி விஷயங்கள் என்றாலும், நம்மை அறியாமல் சில விஷயங்கள் நம் தகவல்களை திருடும். சில வைரஸ்கள் உருவாக்கப்பட்டு உங்களது புகைப்படம் உள்ள வீடியோவை உங்கள் நண்பர் அனுப்பியுள்ளார். என்ற செய்தி உங்கள் இன்பாக்ஸிற்கு வரும் அப்படி வரும் போது அதனை அவசரபட்டு நம் நண்பர் அனுப்பிய வீடியோ தானே என்று க்ளிக் செய்தால் அதே செய்தி உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள அனைவருக்கும் நீங்கள் அனுப்பியது போன்று அனுப்பப்படும். இதில் சில சமயம் ஆபாச செய்திகளும் வருகின்றன. இது உங்கள் தகவல்களை திருடும் நோக்கில் உருவாக்கப்படுபவை தான். சில ஆப்ஸ்களை ரன் செய்யும் போது உங்கள் கணக்கு தகவல்களை எடுத்து கொள்கிறேன் என கேட்கும் அதனை நாம் படிக்க முடியாத அளவுக்கு சிறிய எழுத்தில் கொடுத்திருப்பார்கள். அதனை நாம் படிக்காமல் ஆம் என கூறுவதாலும் நம் ஃபேஸ்புக் பிரைவஸி பறிபோகிறது.
அனைவரும் ஃபேஸ்புக்கில் இனி லாக் இன் செய்து நம் நண்பர்களோடு அரட்டை அடிப்பதற்கு முன் அதில் உள்ள அமைப்புகளை கொஞ்சம் கூர்ந்து கவனித்து பாதுகாப்பாக இருக்க முயற்சி செய்வோம். குறிப்பாக பல பெண்கள் ஃபேஸ்புக் பிரச்னையால் தவறான முடிவை எடுக்கும் நிலையிலிருந்து மீட்க ஃபேஸ்புக்கை கொஞ்சம் கூர்ந்தும், எச்சரிக்கையுடனும் கவனிப்போம்.
ச.ஸ்ரீராம்
நன்றி : விகடன் செய்திகள், 10.06.2015

Monday, June 8, 2015

பி.எஃப்-ல் பணம் எடுத்தால் என்ன நடக்கும்?


பி.எஃப் பணம் எடுத்தால் எப்பொழுதெல்லாம் பணம் செலுத்த வேண்டும்?
******************************************************************************
பிஎஃப் பணம் எடுத்தால் டிடிஎஸ் செலுத்த வேண்டுமா?பதற வைக்கும் புதிய உத்தரவு!
புதிய நிதிச் சட்டம் 2015-ல் 192ஏ என்ற பிரிவை மத்திய அரசு இப்போது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், ஐந்து வருடத்துக்குக் குறைவாக பிஎஃப் உறுப்பினராக இருந்து அவருடையை கணக்கிலிருந்து ரூ.30 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமாகப் பணத்தை எடுக்கும்போது டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இதில் பான் எண் கொடுத்தவர்களுக்கு 10 சதவிகிதம் டிடிஎஸ் (Tax Deducted at Source) பிடித்தம் செய்யப்படும். அதுவே படிவம் 15ஜி, 15ஹெச் சமர்பித்தவர்களுக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படமாட்டாது. அதிகபட்சமாக டிடிஎஸ் 34.608 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும். இந்த விதிமுறை யாருக்கு பொருந்தும், யாருக்குப் பொருந்தாது என்பது குறித்து பிஎஃப் அமைப்பின் சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி.பிரசாத்திடம் கேட்டோம். விளக்கமான பதிலைத் தந்தார் அவர்.
எப்போது டிடிஎஸ் பிடிக்கப்படாது?
"ஒரு பிஎஃப் கணக்கிலிருந்து இன்னொரு பிஎஃப் கணக்குக்குப் பணத்தை மாற்றும்போது டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது. அதாவது, ஒரே ஊழியருக்கு இரண்டு, மூன்று கணக்கு இருந்தால் அல்லது ஒரு நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்துக்கு வேலை மாறிச் செல்லும்போது பழைய பிஎஃப் கணக்கிலிருந்து புதிய பிஎஃப் கணக்குக்குப் பணத்தை மாற்றும்போது டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது. மேலும், உடல்நலக் குறைவினால் வேலையை விட்டுப் போகும்போது, நிறுவனத்தை மூடும்போது, புராஜெக்ட் முடிவடைதல் போன்ற காரணங்களினால் பிஎஃப் கணக்கை முடித்துப் பணத்தை எடுக்கும்போது டிடிஎஸ் பிடிக்கப்படாது. தவிர, ஐந்து ஆண்டு சர்வீஸுக்கு பிறகு, பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கும்போது டிடிஎஸ் இருக்காது. அதுவும் அந்த பிஎஃப் கணக்கு, ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்குக்கு மாற்றியி ருந்தாலும் இது பொருந்தும். ஐந்து வருடத்துக்கும் குறைவாக சர்வீஸ் வைத்திருந்து, அதே நேரத்தில் 30 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகப் பணம் எடுக்கும் போது டிடிஎஸ் பிடிக்கப்படாது.
எப்போது டிடிஎஸ் பிடிக்கப்படும்?
ஐந்து வருடத்துக்குக் குறைவாக பிஎஃப் உறுப்பினராக இருந்து அவருடையை கணக்கிலிருந்து ரூ.30 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமாகப் பணத்தை எடுக்கும்போது மட்டுமே டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்'' என்றார்.
15ஜி மற்றும் 15ஹெச் எப்போது ஏற்றுக் கொள்ளப்படும்?
மூத்த குடிமக்களுக்கு (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) படிவம் 15ஹெச், மற்றவர்கள் 15ஜி படிவமும் சமர்பிக்க வேண்டும். வருமான வரி வரம்புக்குள் வராதவர்கள் இந்தப் படிவம் கொடுக்க வேண்டும்.
படிவம் 15ஜி மற்றும் 15ஹெச் படிவத்தில் சுயகையொப்பமிட்டு சமர்பிக்கும்போது சிலசமயங்களில் மட்டும் இந்தப் படிவம் ஏற்றுக்கொள்ளப்படும்.
பொதுப் பிரிவினர் ரூ.2.5 லட்சத்துக்கும், மூத்த குடிமக்கள் ரூ.3 லட்சத்துக்கும் மேல் பிஎஃப் தொகை எடுக்கும்போது, 15ஜி மற்றும் 15ஹெச் ஏற்றுக் கொள்ளப்படாது.
பிஎஃப் தொகையை எடுக்க 15ஜி மற்றும் 15ஹெச் படிவத்தைப் பூர்த்திச் செய்யும்போது அதில் பான் எண்ணை குறிப்பிடுவது அவசியம்.
வரிக்கு உட்பட்ட வருமானம் ஏதும் இல்லையெனில் 15ஜி மற்றும் 15ஹெச் படிவத்தைச் சமர்பிக்கலாம்.
பிஎஃப் உறுப்பினர் ஒரு நிறுவனத்தில் தொடர்ச்சியாக 5 வருடமோ அல்லது அதற்கு அதிகமாகவோ வேலை பார்த்த பிறகு பணத்தை எடுத்தால் 15ஜி மற்றும் 15ஹெச் படிவம் கொடுக்கத் தேவையில்லை.
குறிப்பிட்ட சில காரணங்களினால் வேலை இழக்கும்போது பான் கார்டு, 15ஜி மற்றும் 15ஹெச் படிவம் கொடுக்கத் தேவையில்லை.
இந்த டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுவதால் அதிகமாகப் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்கள்தான். அதாவது, சின்னச் சின்ன வேலைகள் செய்வதற்காக சென்னை போன்ற நகரங்களுக்கு வந்து வேலை பார்ப்பவர்களிடம் பான் கார்டு இருப்பதற்கான வாய்ப்புக் குறைவு.
இவர்கள் பிஎஃப் தொகையை க்ளெய்ம் செய்யும்போது அதில் டிடிஎஸ் 34.608 சதவிகிதம் பிடித்தால் ரூ.30 ஆயிரத்துக்கு ரூ.10,382 பிடித்தம் செய்யப்படும்.
இந்தத் தொகையை வரி தாக்கல் செய்துதான் திரும்பப் பெற முடியும். இதுவும் அவர்களுக்குச் சாத்தியம் இல்லை. எனவே, டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் வரம்புக்குட்பட்ட தொகையை அதிகப்படுத்துவது அல்லது குறிப்பிட்ட சில துறையில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் டிடிஎஸ் என வைத்தால் நன்றாக இருக்கும் என்பதே பலரது கருத்து!
வரி செலுத்த வேண்டுமா?
5 வருடத்துக்குக் குறைவாக பிஎஃப் உறுப்பினராக இருந்து பணத்தை எடுக்கும்போது, அந்தப் பணத்துக்கு வரி செலுத்த வேண்டும். அவரவர் வருமான வரி வரம்புக்கு ஏற்றாற்போல்் வரி செலுத்த வேண்டியிருக்கும். இதேபோல பிஎஃப் தொகையில் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால்  அதை வருமான வரி கணக்குத் தாக்கலில் காண்பிக்க வேண்டும். வருமான வரிக்கு உட்படாமல் மொத்த வருமானம் இருந்தால் இந்த டிடிஎஸ் தொகையை திரும்பப் பெற முடியும். 
இரா.ரூபாவதி
நன்றி : விகடன் செய்திகள், 07.06.2015