disalbe Right click

Wednesday, October 21, 2015

மாயன்கள் மாயமான வரலாறு - 1


மாயன்கள் - மாயமான வரலாறு
பாகம் : 1
 உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீட்டில் வசித்த அனைவரும், ஒருநாள் திடீரென அந்த வீட்டிலிருந்து, அவர்கள் இருந்த சுவடே இல்லாமல் மறைந்தால் என்ன முடிவுக்கு வருவீர்கள்? திகைத்துப் போய்விட மாட்டீர்களா? ஆச்சரியத்துக்கும், மர்மத்துக்கும் உள்ளாகுவீர்கள் அல்லவா? சரி, அதுவே ஒரு வீடாக இல்லாமல், உங்கள் வீடு இருக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவே திடீரென ஒரே இரவில் மறைந்தால்….? ஒரு தெருவுக்கே இப்படி என்றால், ஒரு ஊர் மக்கள் மறைந்தால்….? ஒரு நாட்டு மக்கள் மறைந்தால்….? ஆம்….! வரலாற்றில் இது நடந்தது. 


மாயன்கள் வாழ்ந்த பகுதி

ஒரு நாட்டில் வாழ்ந்த, மிக மிக மிகச் சிறிய அளவினரை விட, மற்ற அனைத்து மக்களும், திடீரென அந்த நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக மறைந்துவிட்டார்கள். சரித்திரத்தில் எந்த ஒரு அடையாளங்களையும், மறைந்ததற்குச் சாட்சிகளாக வைக்காமல் மறைந்து போனார்கள்.


ஏன் மறைந்தார்கள்? எப்படி மறைந்தார்கள்? என்னும் கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களை மட்டுமே மிச்சம் வைத்துவிட்டு, மாயமாய் மறைந்து போனார்கள். எங்கே போனார்கள்? எப்படிப் போனார்கள்? யாருக்கும் தெரியவில்லை. எதுவும் புரியவில்லை. இந்த மறைவின் மர்மத்தை ஆராய, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்தது எல்லாமே ஒரு மாபெரும் அதிர்ச்சிகள். 



மாயாக்கள் விட்டுச் சென்ற சுவடுகளை ஆராய்ந்த அவர்கள் பிரமிப்பின் உச்சிக்கே போனார்கள். அறிவியல் வளரத் தொடங்கிய காலகட்டங்களில், இவை உண்மையாக இருக்கவே முடியாது, என்னும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றும்படியான பல ஆச்சரியங்களுக்கான ஆதாரங்கள் கிடைத்தன. அவை அவர்களை மீண்டும் மீண்டும் திக்குமுக்காடச் செய்தது. இது சாத்தியமே இல்லாத ஒன்று. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என அறிஞர்கள் சிலர் பிரமிக்க, பலர் பின்வாங்கத் தொடங்கினார்கள். மாயா என்றாலே 
மர்மம்தானா? என நினைக்க வைத்தது அவர்கள் கண்டுபிடித்தவை.


சரி, அப்படி என்னதான் நடந்தது? ஆராய்ச்சியாளர்கள் அப்படி எதைத்தான் கண்டு கொண்டார்கள்? ஆராய்ந்த சுவடுகளில் அப்படி என்னதான் இருந்தது? இவற்றையெல்லாம் படிப்படியாக நாம் பார்க்கலாம். ஒன்று விடாமல் பார்க்கலாம். அவற்றை நீங்கள் அறிந்து கொண்டால், இதுவரை பார்த்திராத, கேட்டிராத, ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போய்விடுவீர்கள்…. 

கடந்த பகுதியில் , சுவடே இல்லாமல் ஒரு இனம் எப்படி அழிந்திருக்கலாம் என மாயாக்கள் வாழ்ந்த இடங்களை ஆராயச் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைத்தது ஒரு மாபெரும் அதிர்ச்சி. மாயாக்கள் விட்டுச் சென்ற கல்வெட்டுகளை ஆராய்ந்த அவர்களை பிரமிப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது அது. சரி, அப்படி என்னதான் நடந்தது? அங்கு என்னதான் இருந்தது? அதை உங்களுக்கு விளக்குவதற்கு முன்னர், வேறு ஒரு தளத்தில் நடந்த, வேறு ஒரு சம்பவத்துடன் இதனை தொடர்கிறேன். 



தஞ்சை பெரிய கோவில்

இப்போது சொல்லப் போகும் இந்தச் சம்பவத்துக்கும், மாயாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனாலும் வேறு வகையில் சம்பந்தம் உண்டு. இராஜராஜ சோழன் என்னும் மாபெரும் தமிழ் மன்னனை யாரும் மறந்திருக்க மாட்டோம். தமிழ்நாட்டில் கி.பி. 985ம் ஆண்டு முதல் கி.பி. 1012 ஆண்டு வரை தஞ்சையை தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னன்தான் இராஜராஜன். இன்றும் உலகம் தமிழனைத் திரும்பிப் பார்க்கும் வண்ணம், அவன் உலக அதிசயங்களுக்கு நிகரான ஒரு அழியாச் சின்னத்தைக் கட்டினான். அதுதான் தஞ்சையில் அமைந்துள்ள, ‘தஞ்சைப் பெரிய கோவில்’ என்றழைக்கப்படும் பிரமாண்டமான கோவில். அதன் மிகப் பிரமாண்டமான இராஜகோபுரம் மிகவும் அழகான கலை நயத்துடன் கட்டப்பட்டது. 

இங்கு நான் ராஜராஜ சோழனை இழுப்பதற்குக் காரணம், அதில் யாருமே எதிர்பார்க்காத விசேஷம் ஒன்று இருந்ததுதான்,  ஆம்! அந்தக் கோபுரத்தில் காணப்பட்ட ஒரு உருவச் சிலை எல்லாரையும் புருவத்தை உயர்த்த வைத்தது. ஒரு இந்துக் கோவில் கோபுரத்தில் இது சாத்தியமா? என்னும் கேள்விகள் ஒலிக்கும் வகையில் இருந்தது அந்த உருவச் சிலை. கோபுரங்களில் இந்துக்களின் நாகரீகங்களையும், கலைகளையும், தெய்வங்களையும் சிலைகளாக வடிப்பதுதான் நாம் இதுவரை பார்த்தது. ஆனால் இது……..! அப்படி அந்தக் கோபுரத்தில் இருந்த உருவச் சிலை என்ன தெரியுமா….? ஒரு மேலை நாட்டவன், தலையில் தொப்பியுடன் காணப்படுகிறான். தஞ்சை மன்னனுக்கும் இந்துக்களின் ஆச்சாரத்துக்கும் ஏற்பே இல்லாத் தன்மையுடன் அந்தச் சிலை பெரிதாகக் காட்சியளிக்கிறது. அந்தப் படம் இதுதான்……..!




கோபுரத்தில் மேலைநாட்டவன் தோற்றம்




“முழங்காலுக்கும் மொட்டைதலைக்கும் முடிச்சுப் போடுவது போல” என்று சொல்வார்களே, அது போல இந்த மேலை நாட்டு மனிதனின் சிலை, பாரம்பரியமிக்க இந்துக்களின் கோபுரத்தில் அமைந்திருக்கிறது என்றால், அதற்கென ஒரு காரணம் நிச்சயமாக இருந்தே தீருமல்லவா…? இராஜராஜ சோழனின் காலத்தில் யவனர்களாக வந்து, நமது கோவிலிலேயே உருவமாக அமைவதற்கு, அந்த மேலை நாட்டவனுக்கு வரலாற்றில் பதிவாகாத வலுவான காரணம் ஒன்று இருந்திருக்கும் அல்லவா…? ஆனால், அதை ஆராய்வதல்ல இப்போது எங்கள் வேலை. 

சம்பந்தமே இல்லாத இடத்தில், சம்பந்தமே இல்லாதவர்கள் தொடர்புபட்டிருப்பார்கள் என்பதற்கு நம் நாட்டிலேயே இருக்கும் சாட்சிதான் இது. இந்தச் சம்பவம் போலத்தான் மாயா சமூகத்தை ஆராய்ந்த ஆய்வாளர்களுக்கும் சம்பந்தமே இல்லாத வடிவங்களில் ஆச்சரியம் காத்திருந்தது. அந்த ஆச்சரியமும் முடிச்சுப் போட முடியாத மூச்சை அடைக்கும் ஆச்சரியம்தான். தஞ்சையில் யவனன் இருந்தது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. 

ஆனால் மாயா இனத்தில் இருந்தவை திகைக்க வைத்தது. அவை என்ன தெரியுமா……..? மாயாக்களின் கல்வெட்டுகளை ஆராய்ந்தபோது அங்கு கிடைத்த சித்திரங்களிலும், சிலைகளிலும் வித விதமாக அயல்கிரக வாசிகளின் உருவங்கள்தான் காணப்பட்டன. அட….! இதுவரை இந்த மனிதன் நல்லாத்தான் பேசிக் கொண்டிருந்தார். இப்ப என்ன ஆச்சு இவருக்கு என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் அது உண்மை என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகவும் இருந்தது. என்ன இது புதுக்கதையாக இருக்கிறதே என்பீர்கள். உண்மைதான். புதுக்கதைதான். புதுக்கதை மட்டும் அல்ல, புதிர்க்கதையும் கூட. எனவே அவை பற்றி நிறைய எழுத வேண்டும். அதனால் முதலில் முன்னோட்டமாக மாயாக்களிடம் கண்டெடுத்த ஒரு படத்தைப் போடுகிறேன். அதனை  நீங்களே பாருங்கள்.




மாயன்கள் கட்டிய பிரமிடில் கண்டெடுத்த ராக்கெட் அமைப்பு

இந்த படத்தை ஒரு இரண்டு நிமிஷம் பாருங்க. ஏதாவது புரியுதா ? இந்த படத்தில் உள்ளது ராக்கெட் , அந்த படத்தில் இருக்கும் மனிதன் விண்வெளிக்கு செல்லும் மனிதன் என்று சொன்னால் நம்புவீர்களா ? காட்டுவாசி காலத்துல ராக்கெட்டா?, விண்வெளிக்கா?ன்னு புருவத்தை  உயர்த்தி மறுபடியும் படத்த பார்க்க போறீங்களா ? இன்னும் சில படங்கள் போடுறேன்.  நம்ப முடியுதானு பாருங்க.


இது இப்படியும் இருந்திருக்கலாம்!  என்று கற்பனையாக வரைந்த படம் கீழே.



மாயன் வாழ்ந்த இடங்களில் அமைந்த பிரமிடுகளுக்கள் ஒன்றில் அமைந்திருந்த சுரங்கத்தில் அவர்களின் அரசன் ஒருவன் புதைக்கப்படிருக்கிறான். அந்த அரசனின் உடலை வைத்து மூடிய இடத்தில் இந்தச் சித்திரம் கண்டெடுக்கப்பட்டள்ளது. இந்தச் சித்திரத்தில் இருப்பது மாயன்களின் அரசனாக இருப்பதற்கும் சான்றுகள் உண்டு என்றாலும், அந்தச் சித்திரம் ஏன் அப்படி வரையப்பட்டிருக்கிறது என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. இல்லப்பா ,இது வேற ஏதோ சித்திரம் நீதான் ராக்கெட்!, அது இதுன்னு குழப்புறே!ன்னு உங்க மனசு சொல்லுதா? உங்களப்போலவே இது தற்செயலாக நடந்த ஒன்றாக இருக்கலாம் அல்லது இந்தச் சித்திரம் வேறு எதையோ குறிக்கலாம் என்று ஒதுங்கப் போனவர்களுக்கு, அவற்றுடன் கிடைத்த வேறு பல பொருட்கள் சந்தேகங்களை மேலும் வலுவடையச் செய்தது. இது ராக்கெட் ஆக இருக்க முடியாது என்கிற அவர்களின் நம்பிக்கையை அது தகர்த்தது .

 அப்படி என்னதான் கிடைத்தது..?


கீழே காணும்படத்தை நன்றாக உற்றுப் பாருங்கள்.


அதில் ஒரு ஒழுங்கு முறையையும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இல்லாத அமைப்பையும், காட்சியையும் அது கொண்டிருப்பது, நிச்சயம் நமக்குத் தெரிகிறது. எதுவுமே இல்லாத ஒரு காலத்தில், எதையும் பார்க்காத ஒன்றை வைத்து இப்படி ஒரு கலை வடிவைப் படைக்கும் சாத்தியம் அக்காலங்களில் இருந்ததாகத் தெரியவில்லை. அத்துடன் இந்தச் சித்திரம் மாயன்களால் கட்டப்பட்ட ‘பிரமிட்’ (Pyramid) வடிவக் கட்டடங்களுக்குக் கீழே இருந்த ஒரு சுரங்கத்தில், பாதுகாப்பாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது இந்தப் பிரமிடுகள்தான் நமக்கு மாயன்கள் பற்றிய ஆச்சரியங்களைப் பின்னர் கொடுக்கப் போகின்றது.



மாயன்கள் கட்டிய பிரமிடு

அந்தச் சித்திரம் கண்டெடுக்கப்பட்ட பிரமிடு படத்தை மேலேயும், அதனுள் செல்லும் சுரங்க வழி மற்றும் அந்தச் சித்திரம் இருக்கும் கல்லறையின்  படத்தைக் கீழேயும் தந்திருக்கிறேன். இதைப் பார்க்கும்போது, மாயாக்கள் இந்தச் சித்திரத்துக்குக் கொடுத்த முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும்.


பிரமிடுக்குள் இருக்கும் குகை


குகைக்குள் இருக்கும் கல்லறை

அதெல்லாம் சரிதான். இது ஒன்றை வைத்துக் கொண்டு மாயன்களுக்கும், ராக்கெட்டுக்கும் சம்பந்தம் உண்டு என்று, எப்படி முடிவெடிக்க முடியும்” என்னும் கேள்வி சுலபமாக நமக்குத் தோன்றுவது இயல்புதான். ராக்கெட்டுடன் சம்பந்தம் என்றால், அப்புறம் விண்வெளிதானே! இதற்கெல்லாம் சாத்தியம் என்பதே கிடையாது என்று அடித்துச் சொல்லும் உங்கள் மனது. அதனால் மாயன்கள் வாழ்ந்த இடங்களில் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த இவற்றை முதலில் பாருங்கள். நவீன வின்வெளிப் பிரயாணியின் படத்துக்கும், மாயாக்களின் மற்ற இரண்டு படங்களுக்கும் உள்ள தொடர்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.


இப்போதுள்ள விண்வெளிவீரரின் தோற்றம்


மாயன்கள் காலத்தில் இருந்த தோற்றம் 


இத்துடன் இவை முடிந்து விடவில்லை. மாயன்களின் ஆச்சரியங்கள் நம்மைத் தொடர்ந்து தாக்குகின்றன. அந்த ஆச்சரியங்களை நான் சொற்களால் வடிப்பதை விடப் படங்களாகவே உங்களுக்குத் தந்தால்தான், அதிகமான விளக்கங்கள் உருவாகும் ‘ஆயிரம் வார்த்தைகள் சொல்லும் கருத்தை ஒரு காட்சி சொல்லிவிடும்’ என்பார்கள். அதனால் உங்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக, நான் படங்களைத்தான் இனி அதிகமாகத் தரலாம் என நினைக்கிறேன். மாயன் கட்டடங்களை மேலும் ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் மாயன் பிரதேசமான மத்திய அமெரிக்காவில், அடுத்ததாக ஒன்றைக் கண்டதும் வெலவெலத்தே போய்விட்டனர். அவர்கள் ஏன் வெலவெலத்தனர்?   என்று  நீங்கள்  நினைக்கலாம்.  அவர்கள்  எதைக்  கண்டெடுத்தார்கள் ?
என்பதை நீங்களே பாருங்க!



மாயன்கள் காலத்தில் இருந்த ராக்கெட்டின் கீழ் பாகம்

மேலே கண்ட படத்தைத் தனியாகப் பார்த்தால் உங்களுக்குப் புரிவதற்கு சற்றுக் கடினமாக இருக்கலாம். எனவே, ஒரு நவீன விண்கலத்தில் நெருப்பைக் கக்கும் கீழ்ப்பகுதியையும், இந்தப் பொருளையும் சற்று ஒப்பிட்டுப்  பாருங்கள்.


இவற்றையும் தற்செயலென்றே நாம் வைத்துக் கொள்வோம். மாயன் சமூகத்தினர் எதையோ செய்து வைத்திருக்க, நான் அதை ராக்கட்டுடன் (Rocket) ஒப்பிட்டு சும்மா தேவையில்லாமல் பீதியைக் கிளப்புகின்றேன், அறிவியல் பற்றிப் பேசுவதாகச் சொல்லிவிட்டு ஒட்டுமொத்தமாக மூட நம்பிக்கையை வளர்க்கிறேன் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் அடுத்து அகப்பட்டவை, எல்லாவற்றையும் அடியோடு தூக்கிச் சாப்பிட்டது. அதைப் பார்ததும் நான் சொல்வதில் ஏதும் உண்மை இருக்கலாமோ என்றும் நீங்கள் நினைப்பீர்கள். ராக்கெட்டைப் படமாக வரைந்திருப்பவர்கள் அதில் பயணம் செய்தவர்களையும் படமாக வரைந்துதானே இருக்க வேண்டும். இப்போது இந்த இரண்டுவிதமான படங்களையும் பாருங்கள். இது ஒரு தற்கால, விண்வெளிக்குச் செல்லும் நவீன மனிதனின் படம்.



நவீன காலத்து விண்வெளிவீரரின் தலைக்கவசம்


கீழே காணும்  இவை மாயன்களிடம் இருந்து பெறப்பட்ட வடிவங்கள்…………!

விண்வெளி வீரர்கள் அணியும் தலைக்கவசத்துடன் கூடிய  மூன்று சிலைகளை கீழே காணலாம்.



மாயன்கள் வாழ்ந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சிலை-1


மாயன்கள் வாழ்ந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சிலை-2

மாயன்கள் வாழ்ந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சிலை-3

விண்வெளி வீரர்கள் அணியும் கவச உடையுடன் கூடிய  மூன்று சிலைகளை கீழே காணலாம்.






இதற்கு மேலும் நான் இந்த விண்வெளி உடை போன்ற தோற்றத்துடன் படம் போடத் தேவையே இல்லை என்றே நினைக்கிறேன். இந்தப் படங்களே உங்களுக்குப் பல செய்திகளை விளக்கியிருக்கும். மாயா சமூகத்தினரின் கலாச்சாரத்தை ஆராயும்போது கிடைத்த ஓவியங்கள், சிலைகள் போன்றவற்றில், நவீன விண்வெளி ஆராய்ச்சி சம்பந்தமான பலவற்றைக் காணக் கூடியதாக இருந்தது என்னவோ உண்மை. அவை உண்மையிலேயே விண்வெளி சம்பந்தமானவைதானா? அல்லது வேறு அர்த்தங்கள் உள்ளனவா என்னும் கேள்வி தொடர்ந்து நமக்குத் தோன்றுவதில் ஆச்சரியமில்லை. ஆனாலும் இது விண்வெளி சம்பந்தமானதுதான் 

என்றாலும், அதற்கு இதுவரை நான் கொடுத்த சாட்சியங்கள் போதுமானவைதானா?  


அட, எப்பவும் விண்வெளி உடையிலேயே இருக்கிறீர்களே, வேறு எதுவுமேயில்லையா? என்கிறீர்களா! சரி, இப்பொழுது இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, இது எப்படிச் சாத்தியம் என்று சொல்லுங்கள். இவை எதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்ல 
உங்களால் முடிகிறதா…?




பறவைகளா? பூச்சிகளா? இல்லை மீன்களா? 
அல்லது…………….! ஆகாய விமானங்களா….? 
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்……..! 

பூச்சிகள், பறவைகள், மீன்கள் என்றால், முதல் படத்தில் அந்த நடுவே இருக்கும் உருவத்தில், எப்படிக் காற்றாடி போன்ற அமைப்பு வந்தது? என்ன தலை சுற்றுகிறதா…..? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட, தங்கத்தினால் செய்யப்பட்ட இந்த உருவங்கள் சொல்லும் உண்மைகளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், மேலும் பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். அந்த உண்மைகள் இவற்றை விடக் கனமானவை. இந்த படத்துல இருக்கிறது விமானமாங்கிற சந்தேகம் எனக்கும் இந்த 
கட்டுரையை  படிக்கும் போது இருந்தது , அதுக்காக இதைப்பற்றி இணையத்துல தகவல் தேட ஆரம்பிச்சேன்.

 அப்போ எனக்கு கிடைத்த தகவல்கள் ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது.




இந்த படத்துல அந்த விமானம் வது இடத்துல இருக்கிறது , இதுல என்ன ஆச்சர்யம்னா 
1.இந்த விமான உருவம் கிடச்சது மாயன்கள் கிட்டருந்து ஆனா மேல நான் குடுத்திருக்கிற படம் நம்ம புராணங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்ட விமானங்கள் 
2.இந்த விமானத்த பயன்படுத்துனது தேவர்களின் தலைவன் இந்திரன் 
3.இந்த படத்துல 8வது இருக்குற விமானம் புஷ்பக விமானம்.
 புஷ்பக விமானம் எங்கயோ படிச்ச மாதிரி இருக்கேன்னு தோணுதா?
ராமாயணத்துல ராவணன் சீதைய கடத்தி கூட்டிட்டு போனது இந்த புஷ்பக விமானம்தான் உண்மையாகவே இந்த விமானங்களெல்லாம் இருந்ததான்னு ஆச்சர்யமா இருக்கா, 
இந்த ஆச்சர்யத்த அப்படியே pause பண்ணி வச்சிகோங்க, 

இந்த விமானத்தோட பெயர்கள் என்ன? ,எப்படி இயங்கும்? ,புராண காலத்துல என்ன எரிபொருள் பயன்படுத்துனாங்க? ,யாரெல்லாம் பயன்படுத்துனாங்க? அப்படீங்கிற எல்லா தகவல்களயும் கட்டுரையோட இன்னொரு பகுதியில் சொல்கிறேன் , இப்போது கட்டுரையின் ஆச்சர்யத்துக்குள்ளே நுழைவோம்.


மேலே உள்ள படத்தில் இருக்கும் இந்த மாயா இன மனிதன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? இந்தப் படத்தைப் பார்க்கும் போது, ஏதோ வித்தியாசமாகவும், ஆச்சரியமாகவும் உங்களுக்கு இருக்கும். அது என்னவாக இருக்கும் என்னும் பிரச்சினையை உங்களிடமே விட்டுவிட்டு நான் தொடர்கிறேன்…….! 

கடந்த தொடரில் கொடுத்திருந்த படங்களில் இருப்பவை பறவைகளா? பூச்சிகளா? மீன்களா? இல்லை விமானங்களா? . அந்த உருவங்கள் ஏற்படுத்திய பாதிப்பு உங்களை விட்டு அகலச் சிறிது காலமாகும், அந்த அளவுக்கு உருவங்கள் இருந்தது என்னவோ நிஜம்தான். இல்லையா? 

இதுவரை, ‘ரைட் சகோதரர்கள்’ விமானத்தைக் கண்டுபிடித்தார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், அவற்றைப் புறம் தள்ளும் பல இரகசியங்கள் எங்கோ ஒரு மூலையில், மத்திய அமெரிக்காவில், எப்போதோ மறைந்திருக்கின்றது என்பது ஆச்சரியம்தானே! 

அதைவிட ஆச்சரியம், இந்தச் சிறிய விமானங்கள் போலுள்ளவற்றை விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது, அவை விமானப் பறப்புச் சக்திக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டு ஆச்சர்யம் கொண்டார்கள்.  ரைட் சகோதரர்கள் கண்டு பிடித்த விமானம் கூட மிகப் பழமை வாய்ந்தது. 

ஆனால், இந்த உருவங்கள் நவீன விமானங்கள் போல வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. இதுவெல்லாம் எப்படிச் சாத்தியம்? விஞ்ஞான அறிவையும், விண்வெளி அறிவையும் மாயா 
இனத்தவர்  பெற்றது  எப்படி? ஆயிரம்  ஆண்டுகளுக்கு  முன்  காட்டுவாசிகள்  போல  வாழ்ந்த  
மக்கள்,  எப்படி  இவ்வளவு  அறிவைக்  கொண்டிருக்க  முடியும்? 

இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதிலாக, நாம் உடன் புரிந்துகொள்ளக் கூடியது, விண்ணிலிருந்து மாயன் இனத்தவரை நோக்கி யாராவது வந்திருக்க வேண்டும் என்பதும், அவர்கள் மூலமாக மாயா இனத்தவர்களுக்கு இந்தளவுக்கு அறிவு கிடைத்திருக்க வேண்டும் என்பதும்தான். அப்படி இல்லையெனில், ஒன்றுமே இல்லாத ஒன்றுக்கு இவ்வளவு ‘பில்டப்‘பை நான் கொடுப்பதாகவும் இருக்கலாம். ஒருவேளை விண்வெளியில் இருந்து அயல்கிரகவாசிகள் வந்திருந்தால், அவர்களை மாயாக்கள் பதிவு செய்திருப்பார்கள் அல்லவா? அப்படியானால் அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள்? ‘ஏலியன்’ என்று அழைக்கப்படும் அயல்கிரகவாசியின் வினோத தலையுடன் உள்ள உருவங்களை எத்தனை படங்களில்தான் நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்ட உருவங்களை மாயன்களும் பார்த்திருப்பார்களோ? ஆம்! அதற்கு சாத்தியங்கள் அதிகமாகவே காணப்படுவது போல மாயன் உருவாக்கிய வடிவங்கள் சில உள்ளன. அவற்றை நீங்களே பாருங்கள்…….!



இந்த உருவங்களைப் பார்த்தீர்கள் அல்லவா? இவை அயல்கிரகவாசிகளின் உருவம்தான் என்றால், அவர்கள் மாயன்களிடம் மட்டும்தான் வந்திருக்க வேண்டுமா…? இப்படிப்பட்ட ஆச்சரியங்கள் மாயன் இனத்தவருக்கு மட்டும்தான் ஏற்பட்டதா அல்லது வேறு யாருக்காவது ஏற்பட்டதா? அப்படி வேறு இனத்தவருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டதா எனப் பார்க்கும் போது, அங்கும் நமக்கு ஆச்சரியங்களே காத்திருந்ததன. 

பிரபலமான எகிப்திய பிரமிட்களை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். பல மர்மங்களைத் தன்னுள்ளே அடக்கிய உலக அதிசயமாகப் பார்க்கப்படுவது இந்தப் பிரமிட்கள். இந்தப் பிரமிடுகள் என்றாலே எமக்குத் தோன்றுவது பிரமிப்புத்தான். எகிப்தியப் பிரமிடுகளில் இருந்த சித்திர வடிவ எழுத்துகளை ஆராய்ந்த போது அங்கு கிடைத்ததும் அதிர்ச்சிதான். 

அப்படி என்னதான் இருந்தது? 



என்ன உங்களால் நம்பமுடியவில்லையல்லவா? சினிமாப் படங்களில் வருவது போன்று, அதே வடிவிலான உருவம். ஆச்சரியமாக இல்லை அல்லது சினிமாப் படங்களில் இவற்றைப் பார்த்துதான் ஏலியன் உருவங்களை உருவாக்கினார்களா? சரி, இதுக்கே அசந்தால் எப்படி? 
இன்னும் இருக்கிறது பாருங்கள்.



மேலே காட்டப்படிருக்கும் இரண்டு படங்களிலும் உள்ள வித்தியாசமான தலைகளுடன் கூடிய மனிதர்களைக் கவனியுங்கள். அப்படி உருவத்துடன் ஒப்பிடக்கூடிய எந்த ஒரு எகிப்தியரும் இருந்திருக்கவில்லை என்பதுதான் இங்கு ஆச்சரியம். மனித இனத்தின் தலையானது அன்று முதல் இன்று வரை சில குறிப்பிட்ட பரிமாணங்களைக் கொண்டதாகவே வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. அது தாண்டிய எதையும் மனிதனாக நம்மால் பார்க்க முடிவதில்லை. ஆனால் பின்னால் நீண்டதாகக் காணப்படும் இத்தலையுள்ள உருவங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. இப்போது கீழ்காணும் இந்த உருவத்தைப் பாருங்கள்………!


எகிப்திய மன்னன் பாரோ அகெனாட்டன் (Pharaoh Akhenaten) என்பவனின் மனைவி இவள். மகாராணி. இவள் வாழ்ந்த காலம் கி.மு.1370 இலிருந்து கி.மு.1330. இவள் பெயர் ‘நெபர்டிடி‘ (Nefertiti). இவளைப் பற்றி இங்கு ஏன் நான் சொல்கிறேன் என்று யோசிப்பீர்கள். காரணம் உண்டு. 

இவளது தலைக் கவசம் இல்லாத சிலை ஒன்று கண்காட்சிச் சாலையில் இருக்கிறது. அது இதுதான்.



இவளது தலை ஏன் இவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும்? எகிப்திய வரலாற்றில் நெபர்டிடியின் சரித்திரம் மர்மம் வாய்ந்ததாகவே இருக்கிறது. இவள் அயல்கிரகத்தில் இருந்து வந்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா…? சரி, நெபர்டிடியின் தலை கொஞ்சம் பெரிதென்றே நாம் வைத்துக் கொள்ளலாம். இவளுக்கும் ஏலியனுக்கும் சம்பந்தம் இல்லையென்றே எடுத்துக் கொள்வோம். 

ஆனால் நெபர்டிடியும் அவளது கணவனும் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் இந்தச் சித்திரத்தைப் பார்த்ததும் அந்த நம்பிக்கையும் அடியோடு தகர்ந்து விடுகிறதல்லவா?



இவை எல்லாவற்றையும் விட்டுவிடலாம். எதுவுமே இல்லாததை நாங்கள் என்னென்னவோ சொல்லி மாற்றிவிடுகிறோம் என்றே வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் இந்தப் படம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா..?


இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள். சரி, கொஞ்சம் பெரிதாக்கிப் பார்க்கலாம்.



விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட் படத்தில் தெரிகிறதா…? அதன் அளவு எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பதை அதன் அருகே இருக்கும் மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அடப் போப்பா ….! சும்மா கூராக இருப்பதெல்லாம் உங்களுக்கு ராக்கெட்டா என்று கேட்கத் தோன்றுகிறதா? 

சரி, அப்போ, இதையும் பாருங்கள்…….

.

இந்தக் காலத்தில் இருக்கும் அனைத்து விதமான விமானங்களும் அடங்கிய ஓவியம் இது,
என்ன சொல்றதுன்னே தெரியாம வாயாடச்சு போச்சா ?

                                                                                                                                                     -தொடரும்-

****************************************************************************************************














                                                                                                                                                         

Thursday, October 15, 2015

குழந்தைகளை தத்து எடுக்க


குழந்தைகளை தத்து எடுக்க என்ன செய்ய வேண்டும்?
************************************************************
இந்தியாவில் ஆதரவற்ற குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கசப்பான உண்மை. பெரும்பாலும் தவறான உறவு முறையின் மூலம் பிறந்து, ஆதரவற்று விடப்படுவது, ஏழ்மை நிலையினால் வளர்க்க இயலாத சூழல், சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால் குடும்பத்தைப் பிரிய நேரிடுவது, வீட்டை விட்டு ஓடி வருவது அல்லது திருவிழா, கூட்டங்களில் தவற விடப்படும் குழந்தைகள் என்று அந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது.
மீண்டும் பெற்றோரைச் சேர இயலாத பெரும்பாலான குழந்தைகள் அரசாங்கம் நடத்தும் ஜுவனைல் ஹோம்ஸ் மற்றும் தனியார் நடத்தும் காப்பகங்கள் போன்றவற்றில் தஞ்சம் அடைகிறார்கள். அது முடியாத குழந்தைகள் பலர் பிச்சை எடுக்கப் பயன்படுத்தப்படுவதும், கடுமையான கொத்தடிமை வேலைகளான கண்ணாடி வளையல் தொழிற்சாலை, பட்டாசுத் தொழிற்சாலை, தோல் பதனிடும் தொழிற்கூடம் போன்றவற்றில் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுவதும் நடக்கிறது. பெண் குழந்தைகள் பெரும்பாலும் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு. குழந்தைப் பாலியல் தொழிலாளிகளாக்கப்படும் அவலமும், வீட்டு வேலைக்கு அனுப்பப்படுவதும் நடக்கிறது.
பெற்றோரின் அன்பையும் அரவணைப்பையும் உணராமல், குழந்தைப் பருவமே சாபமான அந்தக் குழந்தைகளுக்கு ஆதரவளிக்க தொண்டுள்ளம் கொண்டவர்களுக்கு சட்டம் காட்டும் வழிதான் தத்து. நம்முடைய நாட்டில் தத்து என்பதற்கு தனிப்பட்ட ஒரு சட்டம் இதுவரை இயற்றப்படவில்லை. மேலும், நம் நாட்டில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் தத்து எடுக்க அவர்களின் மதக் கோட்பாடுகள் ஒரே மாதிரி அங்கீகரிப்பதில்லை. அதோடு, இந்திய அரசியல் சாசனம் தன்னுடைய 44வது ஷரத்துப்படி ‘காமன் சிவில் கோடு’ அமைக்க வலியுறுத்தியும், சில உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் மூலம் வலியுறுத்தப்பட்டிருப்பினும் இன்றுவரை அது கானல் நீராகவே இருக்கிறது.
இந்துக்கள் தத்து எடுப்பதையும் கொடுப்பதையும் அவர்கள் மதம் காலங்காலமாக அனுமதித்திருப்பதற்கான சான்றுகள் ஏராளம். மேலும், 1956ம் ஆண்டு இயற்றப்பட்ட ஹிந்து அடாப்ஷன்ஸ் மற்றும் மெயின்டனன்ஸ் ஆக்ட் 1956 இயற்றப்பட்டுள்ளது. இந்து மதத்தைப் பொறுத்த வரை தத்து கொடுப்பதையும் எடுப்பதையும் அங்கீகரிக்க முக்கிய காரணம், ஒரு இந்துவுக்கு மரணம் சம்பவிக்கும் போது, ஈமக் காரியங்கள் செய்வதற்கு ஆண் வாரிசு அவசியமாகக் கருதப்பட்டது. அதனால் குழந்தைப் பேறு இல்லாத இந்துக்களும், ஆண் வாரிசு இல்லாத இந்துக்களும் ஒரு ஆண் குழந்தையை தத்து எடுப்பது என்பது நடைமுறையில் இந்துக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விஷயம்.
மேற்சொன்ன சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னர் ஒரு இந்து ஆண் குழந்தையை மட்டுமே தத்து எடுப்பது அங்கீகரிக்கப்பட்டது. மேலும் தத்து எடுப்பது, கொடுப்பது ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட ஒரு உரிமையாக இருந்தது. இந்த சட்டம் இயற்றப்பட்ட பிறகு இந்துக்களின் தத்து முறையில் பெரிய மாற்றம் உண்டானது. இந்துக்கள் என்ற சொல், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயின் இனத்தவர் என அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சொல்லாக சட்டம் சொல்கிறது.

யார் தத்தெடுக்கலாம்?

18 வயது பூர்த்தியான இந்து ஆண், பெண். தன்னிச்சையாக எல்லா விஷயங்களிலும் முடிவெடுக்கக்கூடிய மனநிலையில் உள்ளவராக இருக்க வேண்டும். இந்து மதத்திலிருந்து வேறு ஒரு மதத்துக்கு மாறியிருக்கக் கூடாது. ஏனென்றால் ஒரு இந்து, இந்து மதத்தைச் சார்ந்தவரையே தத்து கொடுக்கவும் எடுக்கவும் முடியும். திருமணமான ஆண், தன் மனைவியின் ஒப்புதல் இல்லாமல் தத்தெடுக்க இயலாது. ஒருவேளை மனைவி உலக வாழ்க்கையைத் துறந்திருந்தாலோ, மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்தாலோ ஒப்புதல் பெற அவசியமில்லை.
திருமணம் முடித்த இந்து பெண் தன்னிச்சையாக தத்து கொடுப்பதும் எடுப்பதும் சட்டத்தால் அங்கீகரிக்கப்படுவதில்லை. அந்தத் திருமணம் கணவரின் மரணத்தாலோ, கணவர் மதம் மாறியதாலோ, உலக வாழ்வை முற்றிலும் துறந்ததனாலோ, நீதிமன்றத்தால் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலோ தவிர, அந்தப் பெண்ணுக்கு உரிமை இல்லை. அப்படி அந்தப் பெண் விரும்பும் பட்சத்தில் கணவர் மூலம் அதை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். திருமணமாகாத பெண் தத்து எடுத்துக் கொள்ள தடை ஏதுமில்லை.

யாருக்கு தத்து கொடுக்கும் உரிமை உள்ளது?

பெற்றோர் அல்லது காப்பாளர்... ஒரு வேளை தத்துக் கொடுக்கப்படும் குழந்தை ஆதரவில்லாத குழந்தையாக இருந்தால் அல்லது பெற்றோர் இருந்து அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருப்பின் அல்லது உலக வாழ்க்கையை துறந்தவராக இருப்பின், காப்பாளராக இருப்பவர் தத்து கொடுக்கலாம். எனினும் நீதிமன்றத்தின் ஒப்புதல் அவசியம். ஒரு இந்து ஆண், பெண் தத்து எடுப்பதற்கான அதே விதிமுறைகள், தத்துக் கொடுப்பவருக்கும் பொருந்தும்.

யாரை வேண்டுமானாலும் தத்து கொடுக்க, எடுக்க முடியுமா?

ஒரு இந்து, தன் மதத்தைச் சார்ந்த குழந்தையை மட்டுமே தத்துக் கொடுக்க, எடுக்க இயலும். இப்போது 1956 சட்டத்தின் பின் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தையை சமமாக தத்து கொடுக்க, எடுக்க இயலும். 15 வயதுக்கு உட்பட்ட குழந்தையை மட்டுமே தத்து எடுக்க முடியும். ஒருவேளை அந்தச் சமூகம் அந்த வயதைத் தாண்டி தத்தை அனுமதிக்குமானால், சட்டமும் நீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளும். அது போல திருமணமான நபர், தத்துக்கு ஏற்றவர் அல்லர். சமூக வழக்கம் இருந்தால், சட்டம் அனுமதிக்கும்.
ஏற்கனவே தத்து எடுக்கப்பட்ட குழந்தையை மீண்டும் தத்துக் கொடுக்கப்படுவதை சட்டம் அனுமதிப்பதில்லை. இந்த சட்ட விதி, குழந்தையின் நலன் கருதியே சேர்க்கப்பட்டுள்ளது. 
ஒரு ஆண், பெண் குழந்தையை தத்தெடுத்தால் 21 வயது மூத்தவராக இருக்க வேண்டும். 
ஒரு ஆண் குழந்தையை ஒரு பெண் தத்தெடுக்கும் போது, 21 வயது மூத்தவராக இருக்க வேண்டியது அவசியம்.
இந்து முறைப்படி தத்த ஹோமம் மூலம் தத்து நடைபெறும். தற்காலத்தில் அந்த முறை தவிர, சட்டப்படி தத்து ஒப்பந்தப் பத்திரம் பதிவு செய்தும், நீதிமன்றத்தின் மூலம் தீர்ப்பு பெற்றும் தத்து நடைபெறுகிறது.

யாரின் நலன் முக்கியம்?

தத்து எடுக்கப்படும் குழந்தை உடல் நலம், மனநலம், எதிர்காலம் ஆகியவற்றை முக்கியமாகக் கருதியே தத்து நடைபெறும். அப்படியில்லாத தத்து சட்டத்துக்குப் புறம்பான ஒன்று. இஸ்லாமியரை பொறுத்த வரை அவர்கள் மதமோ, அவர்கள் பின்பற்றும் ஷரியத் சட்டமோ தத்து என்ற கோட்பாட்டினை ஏற்றுக் கொள்வதில்லை.
கிறிஸ்தவர்களை பொறுத்த வரை அவர்கள் மதக்கோட்பாடு தத்து என்ற விஷயத்தைத் தடை என வெளிப்படையாக ஏதும் செய்யவில்லை. எனினும் அவர்களுக்குத் தனியே தத்துச் சட்டம் எதுவும் இல்லாத காரணத்தால் இந்திய கிறிஸ்தவர்கள் பெரும் பாலும் கார்டியன்ஸ் அண்ட் வார்ட்ஸ் ஆக்ட் 1890ஐ பின்பற்றுகிறார்கள்.
இந்தச் சட்டத்தின் பிரிவு 7ன் படி, நீதிமன்றம் குழந்தைக்கும், அதன் சொத்துக்கும், அதன் நலன் கருதி, தகுதி உடைய ஒருவரைக் காப்பாளராக நியமிக்க வழி வகை செய்துள்ளது. மேலும், உயில் அல்லது வேறு ஒப்பந்தம் மூலம் அமர்த்தப்பட்ட காப்பாளரை மாற்றவும் நீதிமன்றத்துக்கு உரிமை உண்டு. இந்தச் சட்டத்தின் படி ஒரு குழந்தையின் முழு உரிமையும் தத்தில் நடைபெறுவது போல காப்பாளருக்குச் செல்லாது. தத்து என்று எடுத்துக் கொண்டால் ஒரு குழந்தையைப் போல அனைத்து உரிமைகளையும் பெறுகிறது. ஒரு சொந்தக் குழந்தையின் கடமையும் இந்தக் குழந்தைக்கு உண்டு. ஆனால், காப்பாளர் என்பவர் குழந்தையின் உடல் மற்றும் மனத்தின் நலன் குழந்தையின் எதிர்காலம் ஆகியவற்றினை மனத்தில் இருத்தி ஒரு பாதுகாவலராக இருப்பவரே. குழந்தை அவரிடம் இதனைத் தாண்டி எந்த உரிமையையும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. எப்போதுமே நீதிமன்றம் காப்பாளராக ஒருவரை நியமிக்கும்போது, குழந்தையின் நலனே முக்கியமாகக் கருதப் படுகிறது.

விதிமுறைகள்

தத்தெடுக்கும் பெற்றோர் பொருளாதார ரீதியாக ஓரளவுக்கு இயன்றவராக இருத்தல் வேண்டும். குழந்தை வளர்ப்பில் இடையூறு தரக்கூடிய உடல் உபாதைகள், நோய்கள் இருக்கக் கூடாது. குழந்தை தத்தெடுக்கும் பெற்றோரின் திருமண வாழ்வு குறைந்தது 2 வருடங்கள் நல்ல முறையில் சச்சரவுகள் இன்றி இருத்தல் வேண்டும்.
அவர்கள் எந்த குற்ற வழக்கிலும் சம்பந்தப்பட்டவராக இருக்கக் கூடாது. மேலும், சட்டப்படி திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் தம்பதியருக்கு தத்து மறுக்கப்படுகிறது. குறைந்தது தத்தெடுக்கும் எதிர்பாலின குழந்தையை விட 21 வயது மூத்தவராக இருப்பது அவசியம்
.
நம் நாட்டில் குழந்தை தத்தெடுப்பில் ஓரளவு முன்னேற்றம் வந்தது என்றால் அதற்கு இயற்றப்பட்டு, அதன் 2006 ஆண்டின் முக்கிய சட்டத் திருத்தம் தத்தினை அனைத்து மதங்களுக்கும் சமமாக ஆக்கியது. இந்தச் சட்டத்தின் 41/வது பிரிவின் படி, - ஒரு குழந்தையின் அரவணைப்புக்கும், வளர்ச்சிக்கும் அந்தக் குழந்தையின் குடும்பமே முழுப் பொறுப்பாளர்கள் ஆகிறார்கள். 2006ம் ஆண்டு மேற்கூறிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததின் மூலம் ஆதரவற்ற, கைவிடப்பட்ட, ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் இந்தச் சட்டத்தின் கீழ் உரிய நபருக்கு தத்து கொடுக்க, எடுக்க வழிவகை செய்துள்ளது.
அதோடு அவ்வப்போது மத்திய, மாநில அரசாங்கம் கொண்டு வரும் வழிகாட்டுதலின் படி, குழந்தைகள் தத்து கொடுக்கப்படும். மேலும், தத்து கொடுப்பதற்கும், எடுப்பதற்கும் தேவையான விதிமுறைகளைப் பின்பற்றியதை ஊர்ஜிதம் செய்த பின்னர், நீதிமன்றம் உறுதி செய்துவிட்டுதான் தத்து நடைமுறைப்படுத்தப்படும். ஆதரவற்று விடப்படும் குழந்தை சைல்ட் வெல்பேர் கமிட்டி முன் சமர்ப்பிக்கப்பட்டு எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தில் புகார் சமர்ப்பித்து மேலும், நாளிதழ், ஊடகம் மூலம் விளம்பரப்படுத்தி உரியவர் வரவில்லை என்றால் தத்து ஏற்ற குழந்தை என்று சைல்ட் வெல்பேர் கமிட்டியின் 2 உறுப்பினர்கள் சான்று செய்த பின்னர் தத்து கொடுக்கலாம்.
பராமரிக்க இயலாமல் விடும் பெற்றோருக்கு 2 மாதங்கள் கால அவகாசம் கொடுத்து ஆலோசனை கொடுத்து மனம் மாறவில்லை என்றால் தத்துக்கு வழி செய்யலாம். நன்கு புரிந்து கொள்ளக்கூடிய மனநிலையில் இருக்கும் குழந்தைக்கு (பொதுவாக சுமார் 7 வயது) தத்து போவது பற்றி முடிவு எடுக்க உரிமை உண்டு. தத்தெடுப்பவரின் திருமண நிலையினை கருத்தில் கொள்ளாமல் தகுந்த நபர் என்றால் தத்து கொடுக்கலாம் என்றாலும் பொதுவாக திருமணம் ஆகாத ஆணுக்கு பெண் குழந்தை தத்து கொடுப்பது இல்லை.
திருமணமாகாத பெண், ஆண் குழந்தையை தத்து எடுக்க தடையில்லை. தனக்கு இருக்கும் அதே பாலின குழந்தையையே தத்தெடுக்க எந்தவிதத் தடையும் இல்லை. இந்த சட்டத்தின் கீழ் தகுதி படைத்த வெளிநாட்டவருக்கும் தத்து கொடுக்க எந்தத் தடையும் இல்லை.
நன்றி : தினகரன் நாளிதழ் 26.07.2013
**********************************************************************************************************************
நாடு முழுவதிலும் ஆதரவற்ற குழந்தைகள் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. அதேசமயம், அவர்களை தத்து எடுக்க தம்பதியர் பலர் தயாராக இருந்தாலும் அதன் நடைமுறைகளால் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இதை தவிர்க்க மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் சார்பில் புதிய விதி முறைகள் சமீபத்தில் வெளியிடப் பட்டது. இதில் முக்கியமாக, பழைய முறையில் இருந்த காவல் துறை சரிபார்த்தல் முறை இனி இந்திய தம்பதியருக்கு தேவை யில்லை என மாற்றப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாட்டு தம்பதியர் சம்பந்தப்பட்ட நாடுகளின் காவல் துறையிடம் சரிபார்த்தல் சான்றிதழ் பெறுவது தொடர்கிறது.
புதிய முறையின்படி, குழந்தைகள் மற்றும் அவர்களை தத்தெடுக்க விரும்பும் தம்பதியர் மீது மேலும் சில குடும்ப ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளும் முறையும் அறிமுகம் செய்யப்பட் டுள்ளது. இதனால் கால தாமதம் ஏற்படாமல் இருப்பதற்காக, அதிக பட்சம் ஒரு மாதம் என கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்க, மத்திய குழந்தைகள் தத்தெடுக்கும் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு நாடு முழுவதி லும் உள்ள சுமார் 400 குழந்தை கள் காப்பகங்களை தம்பதியர் இதுவரை அணுக வேண்டி இருந்தது. இதில் சில காப்பகங்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு தமக்கு வேண்டிய தம்பதியருக்கு மட்டும் அவர்கள் விரும்பும் குழந்தை களை தத்தெடுக்க உதவுவதாக புகார் எழுந்தது.
இதை தவிர்க்க புதிய முறைப் படி, தத்தெடுக்க விரும்பும் தம்பதியர் நேரடியாக மத்திய குழந்தைகள் தத்தெடுக்கும் ஆணையத்தின் இணையதளத் தில் பதிவு செய்யலாம். இதற்கு தேவையான ஆதார் அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்கள் தத்து வழங்குவதற்காக உள்ள குழந்தைகளின் படங்களை வீட்டில் இருந்தபடியே இணைய தளங்களில் பார்க்கும் வசதி ஏற் பட்டுள்ளது. இத்துடன் ஏற் கெனவே அந்தக் குழந்தைகளை கேட்டு விண்ணப்பித்துள்ள தம்பதியர் பற்றிய விவரங் களையும் அதில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

நன்றி : தி இந்து நாளிதழ் 16.10.2015
**********************************************************************************************************************
தத்து எடுப்பதற்கு முதலில், தம்பதியர்களின் மனப்பூர்வ சம்மதம் அவசியம். இரண்டு பேர் சேர்ந்தேதான் தொண்டு நிறுவனத்தை அணுக வேண்டும். அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் தத்தெடுப்பது குறித்து தெரிவித்திருக்க வேண்டும். அதிலும், கூட்டுக் குடும்பத்திலிருந்தால் வீட்டிலுள்ள அனைவருக்கும் தத்தெடுப்பதைப் பற்றி தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.
தத்தெடுக்க விரும்பும் தம்பதியிரிடம் திருமணமாகி எத்தனை ஆண்டுகளாகின்றன?? குழந்தைகள் உள்ளனரா, இல்லையெனில் என்ன காரணம்?? இனி குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதா?? தத்தெடுப்பதற்கு என்ன காரணம்?? தத்தெடுத்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்வீர்களா? என்பன போன்ற கேள்விகளைக் கேட்பார்கள். அதற்கு அவர்கள் தருகிற பதிலைக் கொண்டுதான் தத்து கொடுப்பது பற்றிய முதற்கட்ட முடிவை எடுப்பார்கள்.
தத்து கொடுப்பது என முடிவானதும், சம்பந்த்தப்பட்ட தம்பதியரின் பெயர்களை பதிவு செய்வார்கள். இதற்கான பதிவுக் கட்டணம் நூறு ரூபாயிலிருந்து இருநூற்றைம்பது ரூபாய் வரை இருக்கும். இதையடுத்து அவர்கள் தத்து வேண்டி ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கூடவே சில சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது தம்பதியின் திருமண அழைப்பிதழ், திருமணப் புகைப்படம், வயது சான்றிதழ், சொத்து வருமானம், மற்றும் கடன் விவரங்கள், குழந்தையை வளர்க்கும் அளவிற்கு பொருளாதார சூழல் இருப்பதற்கான சான்றிதழ், குடும்பத்தாரது ஒப்புதல் கடிதம், மற்றும் நெருங்கிய நண்பர்கள் இருவரது ஒப்புதல் கடிதங்கள் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் சேர்த்து வழங்க வேண்டும். இவை சரிபார்க்கப்பட்ட பிறகு, தத்து எடுக்க விரும்புபவருடைய வீட்டுக்கு சமூக சேவகர் ஒருவர் செல்வார்.
அந்த குடும்ப சூழல், அவர்கள் கொடுத்த சான்றிதழ் எல்லாம் சரிதானா என்பதையெல்லாம் அந்த சமூக சேவகர் கண்டறிந்து ஒரு ஒப்புதல் அறிக்கை தருவார். அதனடிப்படையில்தான் தத்து கொடுப்பது குறித்த இரண்டாம் கட்ட முடிவு எடுக்கப்படும்.
தம்பதியின் உருவம், நிறம் முதலியவற்றை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றபடி உள்ள குழந்தையைதான் தம்பதியிடம் காட்டுவார்கள் (மற்றபடி குழந்தை இருக்குமிடத்திற்கு தத்து எடுப்பவர்களை அனுமதிக்கமாட்டார்கள்).
பின்னர் இருபது ரூபாய் பத்திரத்தில் நோட்டரி பப்ளிக் மூலம் தம்பதியிடம் எழுதி வாங்கிக் கொண்டு தற்காலிகமாக குழந்தையை ஒப்படைப்பார்கள். மூன்று முதல் ஆறு மாதம் வரை பலமுறை தம்பதியையும், குழந்தையையும் சந்தித்து குழந்தைக்கும் அவர்களுக்குமிடையே அந்யோன்யம் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவார்கள்.
இதில் அவர்களுக்கு முழு சம்மதம் ஏற்பட்ட பிறகுதான், தம்பதி அளித்த விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களை கோர்ட்டில் ஒப்படைப்பார்கள். இதன் பிறகு குழந்தையை தத்து கொடுக்கும் நிறுவன அலுவலர் ஆகியோரிடம் கோர்ட் விசாரித்து, சட்ட ரீதியாக அனுமதியை வழங்கும். இவையனைத்துமே குழந்தையின் நலன் கருதி எடுக்கப்படும் நடவடிக்கைகளே!!
குழந்தையை தத்து எடுத்ததும், பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் இது குறித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் அது அவர்களின் சொந்தக் குழந்தையாகிவிடும். பிறப்பு சான்றிதழைப் பெறுவதும் மிக அவசியம். பிறகு தத்தெடுத்தவர் மற்றும் அவர்களின் உறவினர்கள் தவிர வேறு எவரும் குழந்தையை சொந்தம் கொண்டாட முடியாது.
பெற்றோர்கள் குழந்தையை தத்து கொடுத்த நிறுவனத்திற்கு பராமரிப்புக் கட்டணமாக அதிகபட்சம் பதினைந்தாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கு மேல் வசூலிக்கக் கூடாது என்பது அரசு விதி. அதே போல் மருத்துவ செலவுத் தொகையாக ரூபாய் ஒன்பதாயிரம் செலுத்த வேண்டும். தவிர வக்கீல் கட்டணம், சான்றிதழ் கட்டணம் ஆகியவையும் உண்டு.
*** 

குழந்தையை தத்து எடுக்க விரும்புகிற கணவன் மனைவி இருவருடைய வயதின் கூட்டுத் தொகை 90க்குள் வந்தால் அவர்கள் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தையைத் தத்தெடுக்கலாம். வயதின் கூட்டுத்தொகை 91 என்றால் ஒரு வயது குழந்தையையும், 92 எனில் இரண்டு வயது குழந்தையையும் தத்து எடுக்கலாம். கூட்டுத் தொகை 100 ஐத் தாண்டினால் தத்து எடுக்க அனுமதி இல்லை.
*** 
குழந்தையின் வயது, ஐந்திற்கு மேல் எனில் அந்த குழந்தையுன் சம்மதம் மிக மிக முக்கியம்.
*** 
கணவன் இல்லாத நிலையில் கூட ஒரு பெண் தத்தெடுக்க முடியும். இப்படி தத்தெடுக்கும் போது குழந்தைக்கும் அவருக்கும் இடையே 21 வயது வித்யாசம் இருக்க வேண்டும்.
*** 
பெண் துணை இல்லாத ஆணுக்கு தத்து கொடுக்க முடியாது.

Saturday, September 19, 2015

அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும்போது


அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும்போது என்ன செய்ய வேண்டும்?

சென்னை போன்ற பெருநகரங்களில் தனியாக மனை வாங்கி, வீடு கட்டுவது என்பதெல்லாம் கொஞ்சம் கஷ்டம்தான். இவர்களின் விருப்பத் தேர்வு, அடுக்குமாடி வீடுகள் எனப்படும் ஃப்ளாட்தான். அடுக்குமாடி வீடுதான் என முடிவுசெய்துவிட்டால், பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பல ஆவணங்களை ஆராய வேண்டும். அடுக்குமாடி வீடு வாங்கும்போது என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?
l மனை மூலப் பத்திரத்தின் ஒரிஜினல் யார் பெயரில் இருந்தது, ஒரிஜினல் பெயரிலிருந்து யார் பெயருக்குச் சொத்து மாறியது, கட்டிடம் யார் கட்டிக் கொடுத்தது, லே-அவுட் மற்றும் பிளான் அப்ரூவல் வாங்கியிருக்கிறார்களா, ஆகிய கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளைத் தேடி அடைய வேண்டும்.
l மின் கட்டண இணைப்பு, குடிநீர் இணைப்பு யார் பெயரில் இருக்கிறது, நீங்கள் வீடு வாங்கும்போது கட்டணங்கள் எதுவும் நிலுவையில் உள்ளனவா என்பதைக் கவனியுங்கள். அதை உங்கள் பெயரில் மாற்றிக்கொள்ளவும் வீடு வாங்கும்போதே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டால் பிறகு பில்டர் அவர் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்விடுவார். பின்னர் அலைச்சல்தான் மிச்சமாகும்.
அடுக்கு மாடி கட்டிடத்தில் UDS என்பது பிரிக்கப்படாத மனை என்பதைக் குறிக்கும்.
2,400சதுர அடி மனை பரப்பில் 500 சதுர அடியில் 2 வீடுகள் (500*2=1000), 750 சதுர அடியில் 4 (750*4=3000) வீடுகள் என மொத்தம் 4,000 சதுர அடியில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதாவது, , 2,400 சதுர அடி பரப்பில் உள்ள மனையில், 4,000 சதுர அடியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதன் விகிதம் என்ன தெரியுமா? 2400/ 4000 = 0.6. இதனைக் கொண்டு நீங்கள் வாங்கும் வீட்டின் சதுர அடியால் பெருக்கினால் அதற்கான பிரிக்கப்படாத மனை.

அதாவது 500 சதுர அடி வீட்டுக்குப் பிரிக்கப்படாத மனையின் அளவு (யூ.டி.எஸ்.) 300 சதுர அடி. 750 சதுர அடி வீட்டுக்குப் பிரிக்கப்படாத மனையின் அளவு 450 சதுர அடி.

பிரிக்கப்படாத மனையின் அளவு சரியா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? மொத்தம் உள்ள ஃபிளாட்டுகளுக்கான பிரிக்கப்படாத மனையின் அளவைக் கூட்டினால் மொத்த மனையின் பரப்பு வர வேண்டும்.

இப்போது நாம் பார்த்த கணக்குப்படி 500 சதுர அடி உள்ள 2 வீடுகளின் பிரிக்கப்படாத மனையின் பரப்பு 600 (300*2) சதுர அடி. 750 சதுர அடி உள்ள 4 வீடுகளின் மொத்த பிரிக்கப்படாத மனையின் பரப்பு 1,800 (450*4) சதுர அடி. இரண்டையும் கூட்டினால் மொத்தம் பிரிக்கப்படாத மனையின் பரப்பு 2,400 சதுர அடி வந்துவிட்டதா? ஒரு வேளை கணக்குச் சரியாக வராவிட்டால், குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.
l அடுக்குமாடி வீட்டில் பிரிக்கப்படாத மனை என்றழைக்கப்படும் யு.டி.எஸ். மனை சரியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறதா, என்பதைப் பொறியாளர்களைக் கொண்டு மதிப்பீடு செய்வதே நல்லது. பில்டர் சொல்வதைக் கேட்டு அப்படியே விட்டுவிட்டால், 20, 25 ஆண்டுகள் கழித்து அடுக்குமாடியை வேறொருவரிடம் விற்க எல்லா ப்ளாட் உரிமையாளர்கள் முடிவு செய்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது உங்கள் யு.டி.எஸ். வித்தியாசம் இருந்தால் அது உங்களுக்குத்தான் இழப்பை ஏற்படுத்திவிடும். பில்டர் சொல்வதை அப்படியே கேட்காமல் அதை அளந்து பார்ப்பதையும் மனதில் போட்டுக்கொள்வது நல்லது.
l அடுக்குமாடி வீட்டில் அனைத்துத் தளங்களுக்கும் கட்டிட அனுமதி பெறப்பட்டி ருக்கிறதா என்று ஆவணங்களைச் சரிபார்த்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சில சமயங்கள் 2 அல்லது 3 மாடி வீடு கட்ட அனுமதி வாங்கியிருப்பார்கள். ஆனால், கூடுதலாக ஒரு மாடியைக் கட்டிவிடுவார்கள். வரைபடங்களில் அது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். எத்தனை வீடுகள் ஃப்ளாட்டில் உள்ளன என்று பாருங்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் நிச்சயம் ஒரு சமையலறைதான் இருக்கும். அதை எண்ணிப் பார்ப்பது போன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
l மனை அல்லது அடுக்கு மாடிக் குடியிருப்பு எதுவாக இருந்தாலும் அந்தச் சொத்தை வாங்குவதற்கு முன்பாக அந்தச் சொத்து சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களின் அசல் பத்திரங்கள், விற்பவரிடம் இருக்கின்றனவா எனப் பார்க்க வேண்டும். சிலர் அசல் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்துக் கடன் வாங்கி இருப்பார்கள். ஆனால், பத்திரப்பதிவு அலுவலகத்தில் டூப்ளிகேட் பத்திரம் வாங்கி விற்பனை செய்வார்கள். எனவே அசல் பத்திரத்தைக் கண்ணால் பார்த்த பிறகு முடிவு எடுங்கள். அசல் பத்திரம் தொலைந்துவிட்டது என்று கூறினால் அதுதொடர்பாக போலீசில் கொடுத்த புகார், அந்தப் புகார் எண் ஆகியவற்றைக் கேட்டு பாருங்கள். பத்திரப்பதிவு அலுவலகத்தில் என்ன காரணம் சொல்லி டூப்ளிகேட் பத்திரம் வாங்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆராயுங்கள்.
l ஒருவர் தனது பெயரில் உள்ள சொத்தை விற்பனை செய்ய இன்னொருவருக்கு அதிகாரம் கொடுப்பதே ‘பவர் ஆஃப் அட்டர்னி’. அதிகாரம் வைத்திருக்கும் நபரிடமிருந்து ஒரு சொத்தை வாங்கும்போது, அந்த அதிகாரம் இன்னும் செயல்பாட்டில் இருக்கிறதா? அதிகாரம் கொடுத்தவர் உயிருடன் இருக்கிறரா? இல்லையா என்பதைக் கவனிக்கத் தவறாதீர்கள். சில நேரங்களில் அதிகாரம் கொடுத்தவர் அதை ரத்து செய்திருக்கலாம். அதை மறைத்து சொத்தை விற்க முயல்வார்கள். அந்தச் சொத்தில் கட்டப்பட்டு வாங்கப்படும் அடுக்குமாடி வீடுகளுக்கு பின்னர் சிக்கல்கள் வர வாய்ப்பு உண்டு. இதுபோன்ற பித்தலாட்டத்தைத் தவிர்க்க, தற்போது அதிகாரம் ரத்தானால் அந்த விவரம் அசல் அதிகாரப் பத்திரத்தின் பின்புறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதை ஆராய்வது அவசியம்.
l அடுக்குமாடி கட்டி முடிக்கப்பட்டதற்குக் கட்டுமான நிறைவுச் சான்றிதழை பில்டர் வாங்கி வைத்திருக்கிறாரா என்பதையும் கேட்டு வாங்க வேண்டும். சில இடங்களில் பில்டர்கள் கட்டுமானச் சான்றிதழ் வாங்கித்தராமல் விட்டுவிடுவார்கள். வீடு வாங்குபவர்களும் கேட்காமல் விட்டுவிடுவார்கள். ஒரு பில்டர் கட்டுமான நிறைவுச் சான்றிதழ் வாங்கித் தரவில்லை என்றால், கட்டிய வீட்டில் விதிமுறை மீறல் இருக்கலாம் என்று அர்த்தம் கொள்வது கட்டுமானத் துறையில் வழக்கம். எனவே கட்டுமான நிறைவுச் சான்றிதழ் மட்டுமல்ல, ஒவ்வொரு நிலையில் கட்டிடம் கட்டி முடித்ததற்கும் நிறைவுச் சான்றிதழ் வாங்கப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்கத் தவற வேண்டாம்.
நன்றி : தி இந்து நாளிதழ் - 05.09.2015 & 19.09.2015


Thursday, August 27, 2015

பி.ஃஎப் - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்


பி.ஃஎப் - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்
மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் எவை என்பதை சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி. பிரசாத் ( ஆகஸ்ட், 2015) விளக்குகிறார்.
நாமினி!
"முதலீடு செய்யும்போது நாமினி என்பது முக்கியமான விஷயம். பிஎஃப் முதலீட்டுக்கும் நாமினி என்பது மிகவும் முக்கியம். வேலைக்குச் சேரும்போது பலரும் திருமணம் ஆகாமல் இருப்பார்கள். அப்போது பெற்றோரின் பெயரை நாமினி யாகக் காட்டியிருப்பார்கள். ஆனால், திருமணத்துக்குப் பிறகு நாமினியின் பெயரை மாற்றுவது முக்கியம். அதேபோல, நாமினியாக நாம் காட்டியவர் திடீரென இறந்துவிட்டால் புதிதாக வேறு ஒரு நாமினியை உடனடியாக நியமிப்பது அவசியம். வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது நேரடியாக பிஎஃப் அலுவலகத்துக்கோ சென்று புதிய நாமினியை நியமிக்கலாம்.
பென்ஷன்!
பத்து வருடத்துக்கு மேல் ஒருவர் பிஎஃப் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தி யிருந்்தால் அவருக்கு பிஎஃப் பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் தொகையை 50 முதல் 58 வயதுக்குள் எப்போது வேண்டு மானாலும் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். 10 வருடத்துக்கு முன்பு வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது பென்ஷன் தொகை அட்டவணை D-யின்படி கிடைக்கும். இந்தத் தொகைக்கு வட்டி கிடையாது.
மேலும், 1.9.2014-க்கு பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்கள், மாதச் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர் களுக்கு பென்ஷன் கிடையாது. பிஎஃப் செலுத்தும் தொகையில் அதிகபட்சமாக பென்ஷனுக்காக ரூ.1,249 பிடிக்கப்படும். இந்தப் பென்ஷன் தொகை பிஎஃப் உறுப்பினரின் ஆயுட்காலம் முழுவதும் வழங்கப்படும். பென்ஷன் காலத்தில் உறுப்பினர் இறந்துவிட்டால் அவரது வாரிசு தாரருக்கு இந்த பென்ஷன் தொகை கிடைக்கும்.
இடையில் பணம் எடுத்தல்!
பிஎஃப் தொகையை சில காரணங்களுக்கு மட்டும் இடையில் எடுக்க முடியும். இதற்கு குறைந்தபட்சம் 5 வருடம் பிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அதாவது, பிஎஃப் உறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின் திருமணத்துக்கு, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்குப் பணம் எடுக்கலாம்.
மேலும் வீடு வாங்கவும், வீட்டைப் புதுப்பிக்கவும் கடன் வாங்க முடியும். எந்தெந்த செலவு களுக்கு எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதைhttp://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணைய தளத்தில் பார்க்கலாம்.
பிஎஃப் கணக்கை முடிப்பது!
பிஎஃப் கணக்கில் செலுத்தும் தொகை முழுவதும் இடையில் எடுக்க முடியாது. அதாவது, நிரந்தரமாக வேலையை விட்டுச் செல்லும்போதுதான் பணத்தை எடுக்க முடியும். 58 வயதுக்குமுன் சொந்த தொழில் செய்வதற்காக அல்லது மருத்துவ ரீதியான பிரச்னையினால் பணியிலிருந்து விலகும்போது, நிரந்தர ஊனம் ஏற்படும்போது, நிறுவனத்தை மூடும்போது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுக்க முடியும்.
இன்ஷூரன்ஸ்! (Employees’Deposit-Linked Insurance Scheme)
பிஎஃப் உறுப்பினராக இருப்பவர்களுக்கு தொழிலாளர் வைப்பு சார் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டத்தில் கவரேஜ் கிடைக்கும். இதில் பணிக் காலத்தில் இறப்பு ஏற்பட்டால் இன்ஷூரன்ஸ் பாலிசியிலிருந்து க்ளெய்ம் பெற முடியும். இந்த பாலிசிக்கான பிரீமியத்தை நிறுவனம் செலுத்தி விடும். இந்த பாலிசியில் அதிகபட்சம் ரூ. 3.6 லட்சம் வரை கவரேஜ் கிடைக்கும். அனைத்து நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் பாலிசி பிரீமியத்தைக் கட்டாயம் செலுத்த வேண்டும்.
அனைத்தும் ஆன்லைன்!
பிஎஃப் அமைப்பில் உள்ள பெரும்பாலான சேவைகளுக்கு ஆன்லைன் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இ-பாஸ்புக், பிஎஃப் பேலன்ஸ் செக் செய்து கொள்வது, பிஎஃப் ஸ்டேட்மென்ட் எடுப்பது என அனைத்தும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். மேலும், உங்களுடைய செல்போன் எண்ணைப் பதிவு செய்து வைத்தால், ஒவ்வொரு மாதமும் உங்களின் கணக்கில் பிஎஃப் தொகை வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரும். http://www.epfindia.com/site_en/ என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.
எதற்கு எந்தப் படிவம்?
பிஎஃப் தொகையை வெளியே எடுப்பதற்கு, கடன் வாங்குவதற்கு என ஒவ்வொரு நடைமுறைக்கும் ஒரு படிவம் உள்ளது. அதாவது, பிஎஃப் வழங்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் தொகையைப் பெறுவதற்குப் படிவம் 5 சமர்பிக்க வேண்டும். பிஎஃப் கடன் வாங்குவதற்குப் படிவம் 31 உள்ளது. எதற்கு எந்தப் படிவம் என்பதைhttp://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணையதளத்தில் பார்க்க முடியும். அதற்கான படிவத்தைhttp://www.epfindia.com/site_en/Downloads.php?id=sm8_index டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.
புகார் தெரிவிக்க!
பிஎஃப் தொடர்பான பிரச்னைக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை அல்லது வேலை பார்க்கும் நிறுவனத்தில் பிஎஃப் தொடர்பான பிரச்னை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க முடியும். இந்தப் புகாரை கடிதம் மூலமாகவும் தெரிவிக்கலாம். அல்லது ஆன்லைனிலும் தெரிவிக்க முடியும்.http://epfigms.gov.in/grievanceRegnFrm.aspx…& என்ற இணையதளத்தில் பிஎஃப் சம்பந்தமான புகார்களைத் தெரிவிக்க முடியும். ஆன்லைனில் புகார் தெரிவிக்கும்போது அந்தப் புகார் மீதான நடவடிக்கை அடுத்த 15 நாட்களுக்குள் எடுக்கப்படும். அப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனில் அடுத்தடுத்த அதிகாரிகளுக்கு அந்தப் புகார் செல்லும்.
டிடிஎஸ்!
பிஎஃப் கணக்கி லிருந்து பணத்தை வெளியே எடுக்கும்போது டிடிஎஸ் (TDS)செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, ஐந்து வருடத்துக்கு குறைவாகப் பணியாற்றி, வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது வெளியே எடுக்கும் பிஎஃப் தொகை 30 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால், அந்தத் தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இது 1.6.2015-லிருந்து நடைமுறையில் உள்ளது. டிடிஎஸ் குறித்த விரிவான கட்டுரையை படிக்க இங்கே செல்லவும்.
http://www.vikatan.com/personalfinance/article.php?aid=10541
நிரந்தரக் கணக்கு எண்!
பிஎஃப் அமைப்பு UAN(Universal Account Number) என்ற 14 இலக்க எண்ணை நிரந்தரக் கணக்கு எண்ணை வழங்கி உள்ளது. பணிக்காலத்தில் எத்தனை முறை வேலை மாறினாலும் இந்த எண்தான் பிஎஃப் நிரந்தர எண்ணாக இருக்கும். இந்த எண் ஒருவருக்கு ஒருமுறைதான் வழங்கப்படும். கேஒய்சி விதிமுறைகளைப் பூர்த்திச் செய்து தந்து இந்த எண்ணைப் பெற முடியும்.
இந்த எண்ணை நேரடியாக வாங்க முடியாது. பணிபுரியும் அலுவலகத்தின் மூலமாகவே வாங்க முடியும். இந்த எண்ணைhttp://uanmembers.epfoservices.in/uan_reg_form.php என்ற இணைய தளத்தில் கேட்கும் தகவல்களைத் தந்து ஆக்டிவேட் செய்து கொள்வது அவசியம்.
இதை ஆக்டிவேட் செய்யும் போது தரும் செல்போன் எண்ணை மாற்ற பிஎஃப் அலுவலகத்தின் உதவி தேவைப்படும். எனவே, உங்களின் நிரந்தரச் செல்போன் எண் கொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்வது நல்லது.”
*****************************************************************************************************************************************
மாதச் சம்பளம் வாங்கும் பலருக் கும் தங்களது சம்பளம் எவ்வளவு என்று துல்லியமாகத் தெரியாது. சம்பளத்தில் பிடித்தம் போக இவ்வளவு கையில் கிடைக்கும் என்று சொல்வார்களே தவிர, மொத்த சம்பளம் எவ்வளவு?  அதில் என்ன என்ன பிடித்தம் செய்கிறார்கள்? எதற்கு பிடிக்கிறார்கள்? என்பது தெரியாது.

வருமான வரிக்காக பிடிக்கிறார்களா? அல்லது  வருங்கால வைப்பு நிதிக்காக (பிஎப்) பிடிக்கிறார்களா? என்பதைகூட அறிந்து கொள்ள மாட்டார்கள். பிஎப் பணம் பிடிக்கிறார்கள் என்று தெரிந்தாலும் எவ்வளவு பிடிக்கிறார்கள்? என்பது தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். தவிர தங்களது பிஎஃப் கணக்கில் இதுவரை எவ்வளவு தொகை இருக்கிறது? அதன் பலன் என்ன? என்பது குறித்து விவரங்களும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கின்றனர். 

இந்த சந்தேகங்களை நீக்கும் சிறு முயற்சி இந்த கட்டுரை.

எவ்வளவு பிடிக்கிறார்கள்?


பணியாளர்களின் வருங்கால பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது தான் வருங்கால வைப்பு நிதி. வாங்கும் சம்பளத்தில் பணியாளர்களிடம் இருந்து 12 சதவீத தொகை பிடித்தம் செய் யப்படும். பணியாற்றும் நிறுவனத்தின் பங்களிப்பாக அதற்கு இணையான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் நிறுவனம் முதலீடு செய்யும். பணியாளர்கள் வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும் தொகையில் 8.33 சதவீதம் பென்ஷன் திட்டத்துக்கும் 3.67 சதவீத தொகை வருங்கால வைப்பு நிதியாகவும், 0.50 சதவீத தொகை காப்பீட்டுக்கும் செலுத்தப்படும். ஆனால் சமீப காலமாக சிடிசி (cost to company) முறையில், நிறுவனங்கள் முதலீடு செய்யப்போகும் தொகையையும் சம்பளத்தில் சேர்த்து விடுகிறார்கள்.

சம்பளத்தில் 12 சதவீதம் என்பது விதிமுறையாக இருந்தாலும் கூட, எவ்வளவு அதிகமாக சம்பளம் இருந் தாலும், புதிய விதிமுறைகளில் குறைந்தபட்சம் 1,800 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் பல நிறுவனங்கள் இதை பின்பற்றுகின்றன. இந்த தொகையையும் நிறுவனங்கள் பென்ஷன், காப்பீடு என்று பிரித்து முதலீடு செய்கின்றன.

நிரந்தர கணக்கு எண்

புதிதாக பொறுப்பேற்ற மத்திய அரசு ஆரம்ப காலங்களில் செய்த முக்கியமான பணி நிரந்தர வைப்பு நிதி எண் ( யுஏஎன் - Universal Account Number) கொண்டுவந்ததுதான். இதன் மூலம் பி.எஃப். தொகையை கையாளுவது எளிதாகிவிட்டது. பலர் அடிக்கடி வேலை மாறுகிறார்கள். ஆனால் புதிய நிறுவனத்துக்கு சென்றவுடன் பழைய பிஎஃப் குறித்து கவலைப்படுவதில்லை. இதனால் பல கோடி ரூபாய் தொகை யாரும் கோரப்படாமலேயே இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக யுஏஎன் கொண்டுவரப்பட்டது. இதனால் புதிய நிறுவனத்துக்கு செல்லும் போது யுஏஎன் எண்ணை கொடுக்கும் பட்சத்தில் ஏற்கெனவே இருக்கும் தொகையில் புதிய பி.எஃப் தொகையும் சேர்ந்துவிடும். பயனாளிகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் பிஎஃப் தொகையை கையாளலாம்.

தெரிந்துகொள்வது எப்படி?

சில வருடங்களுக்கு முன்பு பி.எஃப். கணக்கில் இருக்கும் தொகையை தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இப்போது இணையம் வந்த பிறகு அனைத்தும் எளிதாகிவிட்டது. யுஏஎன்-யை அடிப்படையாக வைத்து பி.எஃப் இணையத்தில் நம்மிடம் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு மாதமும் நம்முடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறதா, வட்டி எப்போது வரவு ஆனது. பழைய நிறுவனத்தில் இருக்கும் தொகை என்ன என்பது உள்ளிட்ட அனைத்து தகவல் களையும பார்த்துக்கொள்ள முடியும்.

இணையதளம் தவிர பி.எஃப் கணக்கை நிர்வகிக்க செயலி இருக் கிறது. அரசின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் நம்மு டைய கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். தவிர அந்த இணையதளத்தில் இருக்கும் எண்ணுக்கு மிஸ்டு கால் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் கணக்கில் இருக்கும் தொகையை அறிந்துகொள்ளலாம்.

பணம் எடுப்பது எப்படி?

பி.எஃப். பணத்தை எடுக்க முடியும் என்றாலும் முடிந்த வரைக்கும் எடுக் காமல் இருப்பது நல்லது. தற்போதைய சூழலில் ஓய்வு காலத்துக்காக யாரும் தனியாக சேமிப்பது இல்லை, சேமிக்க முடியவில்லை. அதனால் ஓய்வு காலத்துக்கு கைகொடுப்பது இந்த பிஎஃப் தொகை என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.

பணியில் சேர்ந்து ஐந்து வருடத் துக்குள் பி.எஃப். தொகையை எடுக்க வேண்டும் என்றால் 10 சதவீத வரி (டிடீஎஸ்) பிடித்தம் செய்யப்படும். 5 வருடங்களுக்கு மேல் என்றால் வரிபிடித்தம் செய்யப்படமாட்டது. அதேபோல இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக வேலையில் இல்லை என்றாலும் பி.எஃப். தொகையை எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் உள்ளன. அதனை பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம். பணம் எடுப் பதை தவிர சில தேவைகளுக்கு முன் பணம் கூட பெற்றுக்கொள்ளலாம். திருமணம், குழந்தைகளில் கல்விச் செலவுகள், மருத்துவ சிகிச்சை, வீடு கட்டுதல் ஆகிய தேவைகளுக்கு எடுத்து கொள்ளலாம்.

ஆன்லைன் பரிவர்த்தனை

வரும் மார்ச் மாதம் முதல் ஆன் லைனிலேயே பணம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை செலுத்தலாம். மூன்று மணி நேரத்தில் பரிசீலனை செய்யப்பட்டு பி.எஃப். தொகை அவர்களது வங்கி கணக்கில் வைக்கப்படும். இந்த வசதியை பிஎஃப் ஆணையர் கே.கே.ஜலான் தெரிவித்திருக்கிறார். தற்போது ஆதார் எண் இருப்பவர்கள் 3 நாட்களில் தங்களது தொகையினை பெற்றுக் கொள்ள முடியும்.

பங்குச் சந்தையில் பி.எஃப்.

ஓய்வு காலத்துக்காக சேமிக்கப்படும் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்களே என்று அச்சப்பட தேவையில்லை. இப்போது பி.எஃப். ஆணையத்தில் 8.5 லட்சம் கோடி ரூபாய் தொகை இருக்கிறது. இவை அரசாங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் 5,000 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்போவதாக பி.எஃப். அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த தொகையில் முக்கியமான குறியீடுகளாக பிஎஸ்இ இடிஎப் மற்றும் என்எஸ்இ இடிஎப்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கூடுதலாக கிடைக்கும் தொகையில் அதிகபட்சம் 15 சதவீதம் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதம்

நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர் ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.

ஓய்வுகாலத்துக்கு இன்னும் கூடுதலாக முதலீடு செய்ய விரும்பினால் அதற்கும் வாய்ப்பு உண்டு. சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 12 சதவீதம் தவிர இன்னும் அதிகமாக பிடிக்கலாம் என்று நினைக்கும் பட்சத்தில் பணி யாற்றும் நிறுவனத்திலேயே எழுதி கொடுத்து பிடித்தம் செய்யலாம். இந்த விருப்ப தொகை விபிஎப் ஆக முதலீடு செய்யப்படும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், சேமிக்கும் பழக்கம் இல்லாத மாத வருமானம் கொண்டவர்கள் தங்களது ஓய்வு காலத்தை பொருளாதார சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் பிஎஃப் திட்டம் உண்மையிலேயே ஓய்வு காலத்தை வசந்தமாக்கும் திட்டம்தான்.

நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.

நன்றி : தி இந்து நாளிதழ் - 26.10.2015

குறிப்பு: பி.எஃப். அலுவலகத்தில் தாங்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண் மூலமாக, 

                  01122901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், தங்களது பி.எஃப். இருப்புத்                          தொகையை தெரிந்து கொள்ளலாம்.