disalbe Right click

Tuesday, January 19, 2016

எந்தக் காய்கறியில் என்னென்ன சத்துக்கள்


எந்தக் காய்கறியில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது?


இயற்கை டாக்டர் காய்கறி கைடு!


நாக்குக்கு அடிமையாகிப்போன தலைமுறை நாம். பெரியவர்களேகூட குழந்தைகளைப் போல ‘எனக்கு பீட்ரூட் பிடிக்காது’, ‘பாகற்காய் பிடிக்காது’ என்கிறார்கள். பிடிக்கும், பிடிக்காது என்பதைவிட, காய்கறி உடலுக்கு மிகவும் நல்லது, அவசியமானது என்ற எளிய புரிதல் இருந்தால் போதும், ஆரோக்கியத்துக்கு நம்மைப் பிடித்துவிடும். `தினசரி உணவில் அதிக அளவில் பச்சைக் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும்’ என்கின்றனர் மருத்துவர்கள். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் நிறைந்த காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வதன் மூலம், உடல்பருமன், சர்க்கரைநோய், இதய நோய்கள் உள்ளிட்டவற்றைத் தடுக்க முடியும்.

இன்றைக்குக் கிடைக்கும் காய்கறிகள், பூச்சிமருந்து, ரசாயன உரங்கள் கொண்டவையாக இருக்கின்றன. காய்கறிகளை உப்பு, மஞ்சள், புளி கலந்த நீரில் 10 நிமிடங்கள் ஊறவிட்ட பின் அலசி, பாதுகாப்பான முறையில் சமைத்துச் சாப்பிட்டால், அதில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளின் வீரியம் குறையும். 

இன்சுலின் ஊசி, கசப்பு மிகுந்த மாத்திரை, மருந்துகளைவிட பாகற்காயும் வாழைப்பூவும் எவ்வளவோ சிறந்தவை. 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின் பலன் அறிந்து சாப்பிட்டாலே, நோய்கள் நம்மை நெருங்காது. நீர்க் காய்கள், நார்க் காய்கள், மாவாக இருக்கும் கிழங்கு என ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. அதுபோலவே அதன் பலன்களும் ஒவ்வொரு விதம். எந்தக் காயில், என்னென்ன சத்துக்கள் உள்ளன, அவற்றின் பலன்கள் என்னென்ன என விளக்குகிறார் சித்த மருத்துவர் ஜெய வெங்கடேஷ்.

தக்காளி

 

வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன.

ஆல்பா-டொமாட்டின் (Alpha-tomatine) என்ற சத்து, ப்ராஸ்டேட், வயிறு, நுரையீரல், மார்பகப் புற்றுநோய்களைத் தடுக்கும்.

லைகோபீன், இதய நோய்களைத் தடுக்கும்.

ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

பார்வைத்திறனை மேம்படுத்தும்.

உடல் எடை குறைய உதவும்.

ரத்தக்கசிவு ஏற்படாமல் தடுக்கும்.

பித்தப்பை கற்கள் உருவாவதைத் தடுக்கும்.

ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

இயற்கையான ஆன்டிசெப்ட்டிக் இது.

சருமம் பொலிவு பெறும்.

வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

பாகற்காய்

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

கல்லீரலைப் பலப்படுத்தும்.

இளநரை வராமல் தடுக்கும்.

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

சரும நோய்களைக் குணமாக்கும்.

மாரடைப்பைத் தடுக்கும்.

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

சுவாசப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

கொழுப்பைப் படியவிடாது.

தொற்றுநோய்களைப் போக்கும்.

பீட்டாகரோட்டின் இருப்பதால், பார்வைத்திறன் அதிகரிக்கும்.

உடலில் தேங்கும் யூரிக் அமிலம் உள்ளிட்ட கழிவுகளை வெளியேற்றும். கவுட் பிரச்னை சரியாகும்.

மூலநோய் பிரச்னை இருப்போர், வாரம் இருமுறை சாப்பிடலாம்.

ரத்தத்தைச் சுத்திகரித்து, நச்சுக்களை வெளியேற்றும். வயிற்றுப்புழுக்களை நீக்கும்.

காளான்



சிறுநீரகத்துக்கு நல்லது.

எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அசைவத்தில் இருக்கும் சத்துக்கள் இதில் உள்ளன.

உடல் எடையைக் குறைக்க உதவும்.

ரத்தசோகையைப் போக்கும்.

இதய நோய்களைத் தடுக்கும்.

நரம்பு மண்டலத்தை ஆரோக்கியப்படுத்தும்.

மூட்டு தொடர்பான பிரச்னைகளைத் தடுக்கும்.

மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய்கள் வராமல் தடுக்கும்.

ஈஸ்ட்ரோஜன் சுரப்பைச் சீராக்கும்.

டைப் 2 சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டுவர, இன்சுலின் சுரப்பு சீராகும்.

பீட்டாகுளுகன், நார்ச்சத்து இருப்பதால், சிறந்த மலமிளக்கியாகச் செயல்படும்.

ஆண்களுக்கு ஏற்படும் ஆண்ட்ரோபாஸைத் தாமதப்படுத்தும்.

கேரட்



வைட்டமின் ஏ, சி, கே, பி8, ஃபோலேட், இரும்புச்சத்து, தாமிரம், பீட்டாகரோட்டின் நிறைந்துள்ளன.

பார்வைத்திறனை அதிகரிக்கும்.

கொழுப்பைக் கரைக்கும்.

சிறுநீரகத்தின் செயல்பாடு மேம்படும்.

எலும்பு, பற்களுக்கு நல்லது.

கல்லீரலைப் பலப்படுத்தும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சருமப் பொலிவு மேம்படும்.

வயிற்றுப்புண்கள் குணமாகும்.

செரிமான சக்தியை அதிகப்படுத்தும்.

நுரையீரல், ப்ராஸ்டேட், பெருங்குடல், வயிறு தொடர்பான புற்றுநோய்களைத் தடுக்கும்.

இதில் உள்ள தாதுஉப்புக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள், உமிழ்நீரை சீராகச் சுரக்கச்செய்து, பற்சொத்தை வராமல் தடுக்கும். ரத்த சிவப்பணுக்களை மேம்படுத்தும்.

முள்ளங்கி



சிறுநீரகத்தொற்றைச் சரிசெய்யும்.

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

உடலில் உள்ள கழிவுகளை நீக்கும்.

மூல நோய் இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.

புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும்.

கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.

நீர்ச்சத்துக்களை உடலில் சேர்க்கும்.

மூட்டு வலி, வீக்கத்தைக் குறைக்கும். பற்களுக்கு நல்லது.

ரத்தத்தில் உள்ள பிலுருபினை சீர்செய்வதால், மஞ்சள்காமாலையைக் குணமாக்க உதவும்.

மலக்குடலில் உள்ள கழிவை வெளியேற்றி, குடலைச் சுத்தம்செய்யும்.

ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகள், தொண்டை எரிச்சல், தொற்று, அலர்ஜி சரியாகும்.

சிகரெட்டால் பாதித்த நுரையீரலைச் சரிசெய்ய உதவும்.

உடல் எடையைக் குறைக்க உதவும்.

வைட்டமின் சி, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வெங்காயம்

பற்சிதைவைப் போக்கும்.

சிறுநீரகக் கோளாறுகள் வராமல் தடுக்கும்.

கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

வறண்ட தொண்டை, இருமலைச் சரிசெய்யும்.

எலும்பு மெலிதலைத் தடுக்கும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

ரத்தசோகையைக் குணமாக்கும்.

தசைகளுக்குப் புத்துணர்வு அளிக்கும்.

மாதவிலக்கை சீராக்கும்.

வெங்காயத்தில் உள்ள குரோமியம், ரத்தத்தை சுத்திகரிக்க உதவும். கந்தகம், தோல் நோய்களைப் தடுக்கும்.

`குவர்சிடின்’ என்ற ஃப்ளேவனாய்டு இருப்பதால், புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்.

காஸ்ட்ரிக் அல்சர் வராமல் காக்கும்.

ஆன்டிசெப்டிக், ஆன்டிபயாடிக், ஆன்டி மைக்ரோபயல் தன்மை கொண்டிருப்பதால், தொற்றுக்கள் வராமல் காக்கும்.

பரங்கிக்காய்



கிட்டப்பார்வை, தூரப்பார்வையைச் சரிசெய்யும்.

புற்றுநோய் வரும் வாய்ப்புகளைக் குறைக்கும்.

உடல் எடை அதிகரிக்க உதவும்.

தசைகள் வலுவாகும்.

நல்ல உணர்வுகளை உண்டாக்கும்.

பெப்டிக் அல்சரை சரிசெய்யும். ப்ராஸ்டேட் வீக்கத்தைச் சரிசெய்யும்.

உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

பொலிவான சருமம் கிடைக்கும்.

இதய நோய்களைத் தடுக்கும்.

நல்ல உறக்கத்தைத் தரும்.

கர்ப்பிணிகள் சாப்பிட்டுவர, கருவுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

வைட்டமின் சி, இ, பீட்டாகரோட்டின், ரிபோஃபிளேவின், பொட்டாசியம், நியாசின், வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளன.

உடல் எடை அதிகரிக்க, இதைச் சாப்பிடலாம்.

இனப்பெருக்க உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.

வெண்டைக்காய்



ஃபோலிக் ஆசிட் நிறைவாக இருப்பதால், கர்ப்பிணிகள் சாப்பிடலாம்.

உடல் எடையைக் குறைக்கும்.

வைட்டமின் பி9 இருப்பதால், மூளைக்கு நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பார்வைத்திறனை அதிகரிக்கும்.

ரத்தசோகையைத் தடுக்கும்.

வயிறு தொடர்பான புற்றுநோய்களைத் தடுக்கும்.

நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கலை சரிசெய்யும்.

ஆஸ்துமாவின் வீரியத்தைக் குறைக்கும்.

வைட்டமின் ஏ, பீட்டாகரோட்டின் உள்ளதால், நினைவுத்திறன் அதிகரிக்கும்.

சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட, சர்க்கரை கட்டுக்குள் வரும்.

பீட்ரூட்

நார்ச்சத்து, ஃபோலேட், மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் சி நிறைந்துள்ளன.

மூளையைச் சுறுசுறுப்பாக்கும்.

ரத்தசோகையைக் குணமாக்கும்.

சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவில் சாப்பிடலாம்.

பீட்டாசயனின் இதில் உள்ளதால், கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

ரத்தத்தை சுத்திகரிக்கும்.

மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

செரிமானப்பாதையை ஆரோக்கியப்படுத்தும்.

இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

எலும்பு அடர்த்திக் குறைதல் நோயைத் தடுக்கும்.

ஸ்டாமினாவை அதிகரிக்க உதவும்.

கணையம், மார்பகம், ப்ராஸ்டேட் புற்றுநோய்களைத் தடுக்கும்.

இதில் உள்ள நைட்ரிக் அமிலம் பிராணவாயுவை சீராக்கி, ரத்தஓட்டத்தை மேம்படுத்தும்.

மறதி நோயைத் தவிர்க்கும்.

சேப்பக் கிழங்கு


வைட்டமின் ஏ, இ இருப்பதால், சருமத்துக்கு நல்லது.

சிறுகுடல் மற்றும் பெருங்குடலுக்கு நல்லது.

பால் ஊட்டும் தாய்மார்களுக்கு நல்லது.

உடல் எடையை அதிகரிக்கும்.

நச்சுக்களை வெளியேற்றும்.

மூப்பினால் பார்வைக்குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கும்.

தசைகள், எலும்புகள் வலுவாகும்.

உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.

வைட்டமின் ஏ, சி, இ, ஃபோலேட், மக்னீசியம், காப்பர் நிறைந்துள்ளன.

சருமப் புண்கள், காயங்கள், சருமத் தொல்லைகள் தீர, இதைச் சாப்பிடலாம்.

வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும். மூட்டுவீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

அமினோ ஆசிட், ஒமேகா 3 சத்துக்கள் இருப்பதால், இதய நோய்கள் வராமல் காக்கும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு



வைட்டமின் பி6, சி, டி, இரும்புச்சத்து, மக்னீசியம் உள்ளன.

கார்டினாய்டு, பீட்டாகரோட்டின், வைட்டமின் ஏ இருப்பதால், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

தைராய்டு சுரப்பியின் இயக்கத்தைச் சீராக்கும்.

ரத்த செல்கள் உருவாக உதவும்.

எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.

மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

பளபளக்கும் சருமத்தைப் பெறலாம்.

உடல் எடை கூடும்.

சர்க்கரை நோயாளிகள் அளவாகச் சாப்பிடலாம்.

மாரடைப்பு வராமல் தடுக்கும்.

சருமத்துக்குத் தேவையான இழுதன்மை (Elasticity) அதிகரிக்கும்; சருமம் அழகாகும்.

செரிமானப்பாதைக்கு நன்மையைச்செய்யும்.

உயர் ரத்த அழுத்தம் சீராகும்.

உருளைக் கிழங்கு


வைட்டமின் சி, பி காம்ப்ளக்ஸ் இருப்பதால், சருமத்துக்கு நல்லது.

கால்சியம், மக்னீசியம் நிறைந்துள்ளன.

செரடோனின், டோபோமைன் உள்ளதால், மனம் தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும்.

தீக்காயங்களைச் சரிசெய்யும்.

மூட்டு தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும்.

மாவுச்சத்து உள்ளதால், உடல் எடை கூடும்.

செரிமான சக்திக்கு உதவும்.

மூளை வளர்ச்சிக்கு உதவும்.

புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும்.

எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

மூளை செல்களைத் தூண்டி, புத்துயிர் பெறச் செய்யும்.

அதிகமாக வியர்ப்பவர்கள் அவசியம் சாப்பிட நல்லது.

உதடுவெடிப்பு, ரத்தம் கசியும் ஈறுகள், வைரல் தொற்று, ஸ்கர்வி நோய்கள் சரியாகும்.

குழந்தைகளுக்கு அவசியம் தர வேண்டிய உணவு.

வாழைப்பூ



இரும்புச்சத்து இருப்பதால், ரத்தசோகையைக் குணமாக்கும்.

அல்சர் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

மலச்சிக்கலைத் தீர்க்கும்.

மக்னீசியம் இருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கர்ப்பப்பை ஆரோக்கியமாகும். மாதவிடாய் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

கர்ப்பப்பை நோய்களைச் சரிசெய்யும்.

மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியைத் தடுக்கும்.

பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டுவர, பால் அதிகமாகச் சுரக்க உதவும்.

கர்ப்பிணிகள் வாரம் இருமுறை சாப்பிட்டுவர, குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

சுவாசப்பாதை சீராகும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.

காலிஃபிளவர்



கொலைன் சத்து இருப்பதால், மூளை வளர்ச்சிக்கு உதவும்.

ஒரு நாளுக்குத் தேவையான அளவு வைட்டமின் சி நிறைவாக உள்ளது.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

செரிமானப்பாதையைச் சீர்செய்யும்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

வயிற்று உபாதைகளைச் சரிசெய்கிறது.

தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.

நினைவுத்திறனை அதிகரிக்கிறது.

எலும்பு அடர்த்தி குறைதல் பிரச்னையைக் கட்டுப்படுத்துகிறது.

சல்ஃபோராபேன் (Sulforaphane) சத்து இருப்பதால், புற்றுநோய் செல்களை அழிக்கும்.

மெதுவாக உருவாகும் கட்டிகளை அழிக்கும்.

பைடோநியூட்ரியன்ட்ஸ், ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், நாள்பட்ட நோய்களின் தீவிரம் குறையும்.

முருங்கைக்காய்



வைட்டமின் சி இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வைட்டமின் ஏ இருப்பதால், பார்வைத்திறன் அதிகமாகும்.

வறண்ட தொண்டையைச் சரிசெய்யும்.

சருமப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

கால்சியம் உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கு உதவும். ஆண்மையைப் பெருக்கும்.

நுரையீரல் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.

கர்ப்பிணிகளுக்கு நல்லது. குழந்தையின்மை, இனப்பெருக்கக் குறைபாடுகள் குணமாக வாய்ப்புகள் அதிகம்.

தொற்றுக்கள் உருவாவதைத் தடுக்கும்.

இதனை சூப்வைத்துக் குடிக்க, சுவாசம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் நீங்கும்.

கத்திரிக்காய்



டைப் 2 சர்க்கரை நோயைத் தடுக்கும்.

பைட்டோநியூட்ரியன்ட்ஸ் இருப்பதால், நினைவுத்திறன் அதிகரிக்கும்.

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், கொழுப்பைக் கரைக்கும்.

புற்றுநோய் வராமல் காக்கும்.

இதய நோய்கள் வருவதைத் தடுக்கும்.

உடலில் சேர்ந்த அதிகப்படியான இரும்புச்சத்தைச் சமன்படுத்தும்.

மூளைச் செல்களைப் பாதுகாக்கும்.

இதில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும்.

முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்.

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, மன அமைதியைத் தரும்.

நார்ச்சத்து நிறைந்துள்ளதால், ஜீரணசக்தியை மேம்படுத்தும்.

குடமிளகாய்



வைட்டமின் ஏ, பி6, சி, கே, நார்ச்சத்து நிறைந்துள்ளன.

மூட்டு தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும்.

மெனோபாஸின் தொல்லைகளை ஓரளவுக்குக் குறைக்கும்.

பெப்டிக் அல்சரை சரிசெய்யும்.

சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.

மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

பாதித்த மூளை செல்களைச் சரிசெய்யும்.

சருமத்தின் ஆரோக்கியத்தைக் கூட்டும்.

மன அழுத்தம், இதய நோய்களை வராமல் செய்யும்.

வைட்டமின் சி இருப்பதால், பளபளப்பான சருமம் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நரம்பு தொடர்பாக ஏற்படும் வலிகள் சரியாகும்.

உயர் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு சீராகும்.

இரைப்பை தொடர்பான பிரச்னைகளின் வீரியம் குறையும்.

முட்டைகோஸ்



உடல் எடை குறைப்போருக்கு ஏற்றது.

வைட்டமின் பி6, சி, கே நிறைந்துள்ளன.

இதில் உள்ள பீட்டாகரோட்டின் பார்வைத்திறனை மேம்படுத்தும்.

ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால், புற்றுநோயைத் தடுக்கும்.

கவனச்சிதறல்களைச் சரிசெய்யும்.

மூட்டுவலிகளைச் சரிசெய்யும்.

அல்சரைத் தடுக்கும். செரிமான உறுப்புகளைச் சீராக்கும்.

ரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.

சல்ஃபர் இருப்பதால், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

மூளைக்கான உணவுப்பட்டியலில் அவசியம் இருக்க வேண்டியது இது.

நூல்கோல்



வைட்டமின் ஏ, சி, இ, பீட்டாகரோட்டின், நார்ச்சத்து நிறைவாக உள்ளன.

கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன.

மாரடைப்பைத் தடுக்கும்.

புற்றுநோய்க் கட்டிகள் உருவாவதைத் தடுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்னையைப் போக்கும்; வராமல் தடுக்கும்.

நுரையீரல் தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும்.

செரிமானத்தைத் தூண்டும்.

எலும்பு வளர்ச்சிக்கு நல்லது.

கலோரிகள் குறைவு, உடல் எடை அதிகரிக்காது.

உடல் துர்நாற்றத்தைக் குறைக்கும்.

வைட்டமின் சி, இ, பீட்டாகரோட்டின், மாங்கனீசு போன்றவை செல்களில் உள்ள ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தைத் குறைக்கும்.

வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை ஆஸ்துமா பிரச்னையைக் குறைக்கும்.

பச்சைப் பட்டாணி



வைட்டமின் சி, பி, கே நிறைந்துள்ளன.

புரதம், நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

வயிறு தொடர்பான புற்றுநோய் வராமல் தடுக்கும்.

மறதி நோய் வராமல் காக்கும்.

சுவாசப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

இதயத்தைப் பாதுகாக்கும்.

எனர்ஜி கொடுக்கும் சிறப்பான உணவு இது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சமன்செய்யும்.

லூட்டின் சத்து இருப்பதால், கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.

ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, முதல் திட உணவாகத் தரலாம்.

சருமத்தில் தோன்றும் சுருக்கங்கள் வராமல் தடுக்கும்.

செரிமான மண்டலம் மேம்படும்.

அவரைக்காய்



வைட்டமின்கள் ஏ, சி, நீர்ச்சத்து, புரதம் நிறைந்துள்ளன.

இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், ரத்தசோகை குணமாகும்.

புதிய செல்கள் உருவாக உதவும்.

கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் சாப்பிட்டால், குழந்தையின் மூளை வளர்ச்சி சிறப்பாகும்.

நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்னை தீரும்.

கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்பு வளர்ச்சி சீராக இருக்கும்.

கெட்ட கொழுப்பைக் கரைத்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, இதய நோய்களைத் தடுக்கும். சிறுநீரகக் கற்களைத் தடுக்கும்.

நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கல் தீரும்.

கர்ப்பிணிகளுக்குத் தேவையான ஃபோலேட் சத்துக்கள் கிடைக்கின்றன.

வைட்டமின் சி நிறைந்துள்ளதால், புற்றுநோய் வராமல் காக்கும்.

பீன்ஸ்


நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், மாங்கனீசு உள்ளன.

ரத்தம் உறையாமல் பாதுகாக்கும்.

கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும்.

இரும்புச்சத்தைக் கிரகிக்கும்.

ஒருநாளுக்குத் தேவையான ஃபோலேட் சத்துக்களைத் தரும்.

வயிறு தொடர்பான புற்றுநோயைத் தடுக்கும்.

இரைப்பை பிரச்னைகளைச் சரிசெய்யும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.

செரடோனின், டோபோமைன் போன்ற நல்ல ஹார்மோன்களின் உற்பத்தியைச் சீராக்கும்.

உடைந்த எலும்புகள் விரைவில் சேர உதவும்.

கர்ப்பிணிகள் சாப்பிட, குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

மனம் தொடர்பான பிரச்னைகளின் தீவிரம் குறைய உதவும்.

புரோகோலி



நார்ச்சத்து நிறைந்திருப்பதால், கொழுப்பைக் குறைக்கும். இதயத்தைப் பாதுகாக்கும்.

அலர்ஜியால் ஏற்படும் பிரச்னைகளைக் குறைக்கும்.

கால்சியம், வைட்டமின் கே இருப்பதால், எலும்புகள் உறுதியாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

உயர் ரத்த அழுத்தப் பிரச்னையைச் சரிசெய்யும்

இளநரையைத் தடுக்கும்.

மூளையின் திறனை அதிகரிக்கும். அல்சைமரைத் தடுக்கும்.

ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

ஆரம்ப நிலை மார்பகப் புற்றுநோயைக் குணமாக்க உதவும்.

உணவுக்குழாய், ப்ராஸ்டேட், கணையப் புற்றுநோய்கள் வரும் வாய்ப்புகள் குறையும்.

நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

இஞ்சி


வயிறு தொடர்பான புற்றுநோயைத் தடுக்கும்.

மலச்சிக்கலைப் போக்கும்.

ஒற்றைத் தலைவலியைக் குறைக்கும்.

சளி, தும்மல், இருமலைக் கட்டுப்படுத்தும்.

நெஞ்சு எரிச்சலைச் சரிசெய்யும்.

சுவாசப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

உடல் எடையைச் சீராகவைத்திருக்க உதவும்.

மாதவிலக்கு வலியைக் குறைக்கும்.

சிறந்த நச்சுநீக்கியாகச் செயல்படும்.

இஞ்சியில் ‘ஜிஞ்சரால்’ எனும் சத்து இருக்கிறது. இது, செரிமானமண்டலத்தைச் சீர்செய்கிறது. மைக்ரேன் தலைவலியைப் போக்கும்.

இஞ்சியில் வைட்டமின் இ, மக்னீசியம் நிறைந்துள்ளன. தினமும் ஏதாவது ஒருவகையில் இஞ்சியைச் சமையலில் சேர்த்துவருவது நல்லது.

வாந்திக்கு, இஞ்சி சிறந்த நிவாரணி. பசியின்மை, ஏப்பம் போன்றவற்றையும் சரிசெய்யும்.

பூண்டு


ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

எலும்புகளை உறுதியாக்கும்.

மறதி நோய் வரும் வாய்ப்புகளைக் குறைக்கும்.

வைட்டமின் சி, பி6, மாங்கனீசு நிறைந்துள்ளன.

குடலில் ஏற்படக்கூடிய தொற்றுகளைத் தடுக்கும்.

கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.

உடலில் சேர்ந்த நச்சுக்களை வெளியேற்றும்.

உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும்.

பல் வலியைக் குறைக்கும். டான்ஸில்ஸ் பிரச்னை குணமாகும்.

கபம், வாதம் போன்றவை அதிகரிக்கும்போது, பூண்டு சாப்பிடுவது நல்லது. பூண்டு சாப்பிட்டுவந்தால், ஆண்மைசக்தி பெருகும்.

பார்வையைத் தெளிவாக்கும். நல்ல குரல் வளம் கிடைக்க உதவும். ரத்தக் குழாய் அடைப்பைச் சரிசெய்யும். கந்தகச்சத்து நிறைந்தது. பல்வேறு புற்றுநோய்களைத் தடுக்கும்.

கொத்தவரங்காய்



கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதயத்தை ஆரோக்கியப்படுத்தும்.

உடலில் ரத்த உற்பத்தி சீராகும்.

உடலுக்குத் தேவையான உயிர்சக்தி கிடைக்கும்.

இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் பிரச்னையைச் சீர்செய்யும்.

கால்சியம், பாஸ்பரஸ் உள்ளதால், எலும்புகள் உறுதியாகும்.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, மலச்சிக்கலைத் தீர்க்கும்.

மன அழுத்தம், அதீத உணர்வுகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.

வைட்டமின் ஏ, பி, கே, கால்சியம், இரும்புச்சத்து, ஃபோலேட், பொட்டாசியம் நிறைந்துள்ளன.

ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளதால், கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டும்.

குறைந்த கிளைசமிக் இண்டெக்ஸ் இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்தது.

பீர்க்கங்காய்



வைட்டமின் சி, தயமின், ரிபோஃபிளேவின், மக்னீசியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளன.

ஃபிளேவனாய்டு, ஃபீனாலிக் அமிலம், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன.

இந்தக் காயில் உள்ள சத்துக்கள் மூளை செல்கள், திசுக்களைப் பாதுகாக்கும்.

இதன் சாறு இ-கோலி, பி சப்டிலிஸ் (B. Subtilis) போன்ற கிருமிகளை அழிக்கும்.

சீஸனல் அலர்ஜிக்கு, இந்தக் காயை 48 நாட்கள் சாப்பிட்டுவர, நல்ல பலன் கிடைக்கும்.

அதிக அளவு நீர்சத்து இருப்பதால், உடல் எடை குறைக்க உதவியாக இருக்கும்.

குடியால் பாதித்த கல்லீரலைப் பலப்படுத்தும்.

மஞ்சள்காமாலை நோய் உள்ளவர்களுக்கு பீர்க்கங்காயைச் சாப்பிடக் கொடுக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதில் உள்ள செல்லுலோஸ் சத்துக்கள், மூல நோயின் பாதிப்பைக் குறைக்க உதவும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.

சுரைக்காய்



சிறுநீர்த்தொற்றைத் தடுக்கும்.

கோடை காலத்தில் சாப்பிட்டால், சுறுசுறுப்புடன் இருக்க உதவும்.

நார்ச்சத்து நிறைந்து, மலச்சிக்கல் சரியாகும்.

அசிடிட்டி, செரிமானப் பிரச்னை, அல்சர் ஆகியவற்றுக்குச் சிறந்த தீர்வு.

இதில், 96 சதவிகிதம் நீர்ச்சத்து இருப்பதால், உடல் எடையைப் பராமரிக்க உதவும்.

தயமின், வைட்டமின் சி, இரும்புச்சத்து, மக்னீசியம் உள்ளன.

பற்சொத்தை, பற்கள் பாதிப்பைத் தடுக்க உதவும்.

கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றின் பாதிப்பைக் குறைக்கும்.

இளநரையைத் தடுக்கும்.

உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, இதயத்தைப் பலப்படுத்தும்.

உடலுக்குத் தேவையான எலெக்ட்ரோலைட் சத்துக்களைச் சமன்படுத்தும்.

கோவைக்காய்



பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னைக்குச் சிறந்த தீர்வு.

மலமிளக்கியாகச் செயல்பட்டு, மலச்சிக்கல் பிரச்னையைத் தீர்க்கும்.

பீட்டாகரோட்டின், வைட்டமின் ஏ, சி, பி1, பி2 நிறைந்துள்ளன.

சுவாசப் பிரச்னைகளைத் தடுக்கும்.

தொழுநோய், ஸ்காபீஸ், சொரியாசிஸ் பிரச்னைகளின் வீரியத்தைக் குறைக்கும்.

இதன் சாறு, சருமத்தைப் பளபளப்பாக்கும். நீர்ச்சத்தின் தேவையைப் பூர்த்திசெய்யும்.

ஹார்மோன் சுரப்பைச் சீராக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்குத் தேவையான சத்துக்கள் உள்ளதால், சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்

இதயப் படபடப்பு, மன அழுத்தப் பாதிப்புகளைக் குணப்படுத்தும்.

வயிறு தொடர்பான புண்களை சரிசெய்யும்.

நார்ச்சத்து நிறைந்தது, செர்மானத்துக்கு ஏற்றது.

புடலங்காய்



அதிக அளவில் நீர்ச்சத்து இருப்பதால், கலோரிகள் குறைவு. உடல் எடை குறைப்போருக்கு ஏற்றது.

வைட்டமின் ஏ,பி,சி, தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன

படபடப்பு உணர்வு குறையும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.

மார்பகம், நுரையீரல் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

டீடாக்ஸ் ஏஜென்டாகச் செயல்படும் என்பதால், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.

மஞ்சள்காமாலை, கல்லீரல், சிறுநீரகப் பாதிப்புகளைச் சரிசெய்யும்.

வாயுத் தொல்லை, மலச்சிக்கல் பிரச்னைகளைச் சரியாக்கும்.

செரிமான சக்தியை மேம்படுத்தும். இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் பிரச்னையைச் சரிசெய்யும்.

சரும வறட்சி, சருமப் பிரச்னைகள் தீரும்.

அசிடிட்டி, அல்சர், ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வு.

வைட்டமின் சி, பி, ஏ, புரதம், ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளதால், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வாழைத்தண்டு



வைட்டமின் ஏ, பி6, சி, ஃபோலேட்ஸ், நியாசின் உள்ளன.

சிறுநீரகம், பித்தப்பை ஆகியவற்றில் உள்ள கற்களைக் கரைக்கும்.

ரத்தசோகை, கரோனரி இதய நோய், நரம்பு மண்டலப் பிரச்னை உள்ளவர்களுக்கு ஏற்றது.

ரத்த அழுத்தம், அதிகப்படியான இதயத் துடிப்பு கட்டுக்குள் வரும்.

நார்ச்சத்து உள்ளதால், கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

வைட்டமின் ஏ இருப்பதால், கண்களுக்கு நல்லது.

இதில் உள்ள மக்னீசியம், எலும்புகளை வலிமையாக்கும்.

கர்ப்பிணிகள் வாரம் ஒருமுறை உண்ணலாம்.

உடலில் உள்ள தொற்றுக்கள், கழிவுகள் வெளியேறும்.

உடல் எடை குறைக்க நினைப்போருக்கு சிறந்த தீர்வு

பைட்டோகெமிக்கல்ஸ் சத்துக்கள் உள்ளதால், அல்சரைத் தடுக்கும்.

வெள்ளைப் பூசணி

உடல் எடை குறைக்க நினைப்போருக்கு சிறந்த உணவு.

நீர்ச்சத்து மிகுந்துள்ளதால், சிறுநீர்ப் பெருக்கியாகச் செயல்பட்டு, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும்.

நரம்பு மண்டலத்தைச் சரிசெய்யும்.

குடல் புழுக்களை வெளியேற்ற உதவும்.

வாரம் இருமுறை சர்க்கரை நோயாளிகள் அவசியம் சாப்பிடவும்.

உடலுக்குக் குளிர்ச்சி என்பதால், கோடை காலத்தில் சாப்பிடலாம்.

உடலில் பிஹெச் (pH) நிலையைச் சமநிலைப்படுத்த உதவும்.

சிறுநீரகம், கல்லீரல், குடல் போன்ற முக்கிய உறுப்புகளைச் சுத்தம்செய்யும்.

புரதம், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம் உள்ளன.

பித்தப்பைக் கற்கள் வெளியேற, இதன் சாறு பயன்படும்.

செளசெள



ஃபோலேட், வைட்டமின் பி, அமினோ அமிலங்கள் இருப்பதால், கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லது.

வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட், மாங்கனீசு, காப்பர், துத்தநாகம், பொட்டாசியம் நிறைந்துள்ளன.

ரத்தசோகையைச் சரிசெய்யும்.

செலினியம், வைட்டமின் பி6 ஆகியவை கர்ப்பப்பைவாய் புற்றுநோயைத் தடுக்கும்

தசைப்பிடிப்பு, மறதி, சருமப் பிரச்னைகள், தைராய்டு பிரச்னைகள் சரியாகும்.

நன்றி : டாக்டர் விகடன் - 16.01.2016

மோட்டார் இன்சூரன்ஸ் கிளெய்ம்

எதற்கெல்லாம் மோட்டார் இன்சூரன்ஸ் கிளெய்ம் செய்ய முடியாது?
நான் நிறுத்தி நிதானமாகத்தான் வண்டி ஓட்டுறனே… என் வண்டிக்கு நான் எதுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கணும்… என மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுப்பதையே தவிர்த்து வருகின்றனர் நம்முடைய மக்கள். சாலையில் நாம் என்னதான் நிதானமாகச் சென்றாலும், நம் வாகனத்துக்கு முன்னாலும் பின்னாலும் செல்லும் வாகன ஓட்டிகளும் நிதானமாக வருவார்களா என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. ஆகையால், மோட்டார் இன்ஷூரன்ஸ் என்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்று.
ஆனால், இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துவிட்டாலே நமக்கு நிச்சயமாக இழப்பீடு கிடைத்துவிடும் என்று நினைத்துவிடக் கூடாது. இன்ஷுரன்ஸ் பாலிசி எடுத்தபின் பெரும் பாலான சமயங்களில் க்ளெய்ம் கிடைக்கும் என்றாலும் சில சமயங்களில் க்ளெய்ம் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு என்கிற உண்மையை ஒவ்வொரு பாலிசிதாரரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, இன்ஷுரன்ஸ் பாலிசி எடுக்கிறவர்கள் எந்தெந்த நிலைமையில் க்ளெய்ம் செய்யும்போது இழப்பீடு கிடைக்கும் அல்லது கிடைக்காது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
எதற்கெல்லாம் க்ளெய்ம் இல்லை?மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தபின் எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்காது என்பது குறித்து இன்ஷூரன்ஸ் துறை நிபுணர் மற்றும் வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷிடம் கேட்டோம். 
அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார். 
“வாகனத்தை ஓட்டுகிறவர்கள் (உரிமையாளர் அல்லது ஓட்டுநர்) மது அருந்திவிட்டு அல்லது போதைப் பொருள் சாப்பிட்டு விட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் க்ளெய்ம் இல்லை. 
வாகனத்தை 16 வயதுக்கு உட்பட்டவர் ஓட்டியிருந்தால், க்ளெய்ம் இல்லை. பழகுநர் உரிமம் பெற்ற ஒருவர் வாகனம் ஓட்டும்போது விபத்துக்குள்ளானால், உரிமம் பெற்ற ஒருவர் அப்போது உடன் இருந்திருந்தால்தான் க்ளெய்ம் கிடைக்கும்.
தனிநபர் வாகன பாலிசியில், வாகனத்தை தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்தும்போது பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே க்ளெய்ம் கிடைக்கும். அந்த வாகனத்தை வாடகை டாக்சியாகவோ அல்லது சரக்கு போக்குவரத்து வாகனமாகவோ பயன்படுத்தி, அப்போது விபத்து ஏற்பட்டு க்ளெய்ம் கோரினால் இழப்பீடு எதுவும் கிடைக்காது.
வாகனத்தை ஓட்டுகிறவர்களிடம் (உரிமையாளர் அல்லது ஓட்டுநர்) முறையான மற்றும் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் இல்லாமல் விபத்து நடந்தால், க்ளெய்ம் கிடைக்காது. 
சாதாரண பாலிசியை எடுத்து விட்டு, மோட்டார் சைக்கிள் அல்லது கார் பந்தயங்களில் பங்கேற்று சேதம் ஏற்பட்டால், க்ளெய்ம் கிடைக்காது. பந்தயங்களில் கலந்து கொள்பவர்கள் அதற்கென இருக்கும் தனி பாலிசியை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு பிரீமியம் சற்று அதிகமாக இருக்கும்.
வழக்கமாக குறிப் பிட்ட இடைவெளியில் மேற்கொள்ளும் பராமரிப்புச் செலவு களுக்கு க்ளெய்ம் கிடையாது. 
நீதிமன்றம், போக்கு வரத்து அதிகாரி அல்லது போலீஸ் அதிகாரிகளால் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்
பட்டவர்களுக்கு க்ளெய்ம் கிடையாது.
டிரைவிங் லைசென்ஸ் இல்லை எனில்..?வாகனம் ஓட்டும் உரிமையாளர் அல்லது டிரைவரிடம் முறையான மற்றும் செல்லத்தக்க டிரைவிங் லைசென்ஸ் இல்லை என்றால் இழப்பீடு கிடைக்காது. நாளடைவில் ஏற்படும் வாகனத்தின் தேய்மானத்துக்கு க்ளெய்ம் இல்லை. 
நம் நாட்டின் எல்லைக்கு வெளியே விபத்து நடந்தால் க்ளெய்ம் கிடைக்காது. அடிக்கடி விபத்து ஏற்படுத்துவர்களுக்கு க்ளெய்ம் கிடையாது. ராங் சைட் டிரைவிங் ஓட்டினால் க்ளெய்ம் கிடையாது” என எந்தெந்த நிலையில் க்ளெய்ம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை தெளிவாக விளக்கினார்.
இழப்பீட்டுத் தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தர மறுக்கும்போது, இன்ஷூரன்ஸ் குறை தீீர்ப்பாளர்களிடம் முறையிடலாம். குறை தீர்ப்பாளர்கள் க்ளெய்ம் வழங்க மறுக்கும்பட்சத்தில் உரிய நீதிமன்றத்தில் வழக்கிட்டு நீதிபதி திருப்தி அடையும் பட்சத்தில் க்ளெய்ம் கிடைக்கும்.
தற்போது இந்தியாவில் ஒரு வாகனத்துக்கு மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுக்க, அதன் மொத்த விலையில் 3 சதவிகிதத்துக்கும் குறைவாகவே செலவாகிறது. சர்வதேச அளவில் இது 5 சதவிகிதமாக இருக்கிறது.
மோட்டார் வாகன பாலிசிகளில் இரண்டு வகை உண்டு. 
ஒன்று, நம் வாகன பாதிப்புக்கான பாலிசி (own damage policy). 
அடுத்து, நம் வாகனத்தால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கான பாலிசி (third party insurance). 
மேற்கண்ட இரண்டு வகையான பாலிசிகளின் பலன்களை ஒருசேரத் தருவது ஒருங்கிணைந்த பாலிசி (Comprehensive policy). விவரம் தெரிந்த வாகன ஓட்டிகள் அனைவரும் பாலிசி எடுக்கும்போதே மிக கவனமாக இருப்பது நல்லது!
By vayal on 16/01/2016 

பி.எஃப் விண்ணப்பங்கள்




பி.எஃப் விண்ணப்பங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா?

பிஎப் எனப்படும் தொழிலாளர் வைப்பு நிதி உங்கள் ஓய்வு களத்தில் சேமிப்பாக உதவுவதுடன் மற்றும் பல்வேறு பயன்களையும் தருகிறது. 


தேவையான அளவு தொகையைப் பிஎப் கணக்கில் சேர்த்த நபர்கள் அதிலிருந்து முன்பணத்தைப் பெறவும், 58 வயதைக் கடந்திருந்தால் தங்கள் எல் ஐ சி பாலிசிக்கு நிதியளிக்கவும் அல்லது தங்கள் பி எப் கணக்கை முடிவுக்குக் கொண்டுவரவும் முடியும். 



இவ்வளவு வசதிகள் இதில் இருப்பதால் நாம் இவற்றிற்கான விண்ணப்பப்படிவங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்பதை அறிந்திருப்பது அவசியமாகும். இதன் மூலம் இந்த நடைமுறைகள் எளிதாகவும் ஆகும். 

இழப்பீட்டிற்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டிய பல்வேறு படிவங்கள் இதோ உங்களுக்காக : 

1. ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் தனிநபர்

படிவம் 31 

இந்தப் படிவம் ஒரு தனிநபர் தன் கணக்கிலிருந்து தனக்குத் தேவையான கடன், முன்பணம் அல்லது பணமெடுப்பு போன்ற பரிவர்த்தனைகளுக்குப் பயன்படும். கடன்கள் ஒருவருடைய தகுதியைப் பொறுத்து மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலே படிக்க.. 

படிவம் 14 

ஒருவர் தன்னுடைய எல்ஐசி பாலிசி நிதிக்கு பிஎப் கணக்கிலிருந்து பணம் பெற இதைப் பயன்படுத்த வேண்டும். படிவம் 10டி இந்தப் படிவம் தன்னுடைய ஓய்வூதிய நிதி (பென்ஷன் பண்ட்) வைத்திருப்போருக்குத் தேவைப்படும். இந்த நிதியில் 10 வருடத்தை முடித்திருந்து ஒருவருடைய வயது 58-இற்கு மேல் இருந்தால் இந்தப் படிவத்தை நிரப்பி அதனை முடித்துக்கொள்ளலாம். 

படிவம் 10சி

தன ஓய்வூதிய நிதியிலிருந்து பணமெடுக்க ஒருவர் 10 வருடங்களை அல்லது 58 வயதை கடந்திராவிடில் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தலாம்.


2) ஒரு நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்தில் சேர்ந்த நபர்கள் 

படிவம் 13 

ஒருவர் தான் முன்பு பணிசெய்த நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்குத் தன பி எப் கணக்கை மாற்றப் படிவம் 13 ஐ பயன்படுத்த வேண்டும்.


3) பணியை விட்டுவிட்டு எங்கும் பணியைத் தொடராதவர்கள் 


படிவம் 19 

ஒருவர் 10 வருடப் பணியை முடித்து ஆனால் வயது 50 வயதுக்குள் இருக்குமானால் அவர்கள் படிவம் 19 ஐ கொடுத்துக் கணக்கை முடித்துக் கொள்ளலாம். 

படிவம் 10சி 

ஒருவர் தன்னுடைய ஓய்வூதிய நிதியில் இருந்து சான்றிதழையும் முடிவுறு தொகையையும் பெறப் படிவம் 10சி ஐ பயன்படுத்த வேண்டும். 10 வருடப் பணிக்காலத்தை முடிக்காதவர்கள் கூட இதற்குப் படிவம் 19 மற்றும் படிவம் 10சி ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். படிவம் 10டி ஒருவர் 58 வயதைக் கடந்திருந்தால் படிவம் 10டி ஐ பயன்படுத்தலாம். ஆனால் 10 வருடப் பணிக்காலத்தை முடித்திருக்க வேண்டும்.

4) உடல் ஊனத்தால் பணியைத் தொடர இயலாதவர்கள்

படிவம் 19 - ஓய்வூதியத் தொகையைப் பெற 

படிவம் 10டி - 58 வயதுக்குக் குறைவான ஆனால் 10 வருடம் பணி நிறைவு செய்தவர்கள் - ஓய்வூதியப் படிவம் 10டி மூலம் மாதாந்திர உறுப்பினர் ஓய்வூதியம் பெறலாம். படிவம் 10சி வயது 58- க்குள் இருக்கும் 10 வருடப் பணி நிறைவு செய்யாதவர்கள் ஓய்வூதியப் படிவம் 10 சி நிரப்பி ஓய்வூதிய நிதி முடிவுறு பலன்களைப் பெறலாம்.

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » 17.01.2016


பி.எஃப் கணக்கு - இ பாஸ்புக் டவுண்லோடு செய்ய



பி.எஃப் கணக்கு - இ பாஸ்புக் டவுண்லோடு செய்ய என்ன செய்ய வேண்டும்?

தொழிலாளர் வைப்பு நிதி அல்லது பிஎஃப் கணக்கு வைத்திருப்போர் தற்போது தங்கள் கணக்கின் இருப்பு மற்றும் பரிவர்த்தனைகளைத் தெரிந்துகொள்ள இ-பாஸ்புக் எனப்படும் மின்னணு கணக்குப் புத்தகத்தைப் பயன்படுத்த வசதி செய்து தரப்பட்டுள்ளது. 

இதனை எத்தனை முறை வேண்டுமானாலும் டவுன்லோட் செய்துகொள்ளலாம். இந்தச் சேவையைப் பெற ஒருவர் பிஎஃப் அலுவலக இணையதளத்தில் தங்கள் விவரங்களைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். 

உங்களுடைய பிஎஃப் கணக்கு எண், உங்கள் சம்பளப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனத்தின் குறியீட்டு எண் மற்றும் பெயர் ஆகிய விவரங்களைக் கொண்டு ஈபாஸ்புக்கைப் பெற இயலும்.

இ-பாஸ்புக்கை பெற எவ்வாறு பதிவு செய்வது? 

பிஎஃப் கணக்கு வைத்துள்ள எந்த ஒரு உறுப்பினரும் பிஎஃப் அலுவலக இணையத் தளத்தில் புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, ஆதார் அட்டை, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவேடு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றின் உதவியுடன் பதிவுசெய்து கொண்டு உங்கள் மொபைல் எண்ணை பாஸ்வேர்டாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

படிகள் 

1. பிஎஃப் அலுவலக இணையதளத்திற்குச் செல்லவும் 

2. உங்கள் மொபைல் எண், பிறந்த தேதி மற்றும் பெயர் ஆகிய விபரங்களை ஆதார் ஆவணங்களில் உள்ளவாறு நிரப்பவும். 

3. கட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக்களையும் டைப் செய்யவும் 

4. கெட் பின் (Get PIN) என்று சொல்லப்பட்டிருக்கும் வார்த்தையினை அழுத்தவும்.

ரகசிய எண் 

நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணிற்குப் பின் நம்பர் அல்லது ரகசிய எண் அனுப்பிவைக்கப்படும். 

அதனைக் கடவுச்சொல்லாகப் பயன்படுத்தி விவரங்களை அடையலாம்.

இ-பாஸ்புக்கை எவ்வாறு உருவாக்கி டவுன்லோட் செய்வது? 

நீங்கள் லாகின் (Login) செய்ததும் அல்லது இணையதளத்தில் நுழைந்ததும், முகப்புப் பகுதியில் இ-பாஸ்புக் என்ற மெனுவை அழுத்தவும். 

இதன் பின் பின்வரும் படிகளைத் தொடரவும்.

படிகள் 

1. நீங்கள் வேலை செய்யும் நிறுவனக் குறியீட்டு எண்ணை நிரப்பவும் 

2. உங்களுடைய பிஎஃப் கணக்கு எண்ணை நிரப்பவும்

3. உங்களுடைய சம்பளக்கணக்குப் பட்டியலில் உள்ளவாறு பெயரை நிரப்பவும் 

4. அங்கே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை நிரப்பவும்

5. கெட் பின் என்ற தொடர்பை அழுத்தவும்

6. பின் நம்பர் கிடைத்தவுடன் அதனைக் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் நிரப்பவும் 

7. விவரம் தரும் தொடர்பை அழுத்தவும் 

ஒருவர் தேவைப்படும் பொழுதெல்லாம் தங்களுடைய கணக்கில் இருக்கும் இருப்பைப் பார்த்துக்கொள்ள முடியும்.

பாஸ்புக் இல்லை என்றால்?

உங்கள் கணக்கில் விவரங்கள் இல்லாத பட்சத்தில், அதற்கான விண்ணப்பத்தினை அங்கே கொடுக்கப்பட்டுள்ள தொடர்பில் உருவாக்கினால், உங்கள் பாஸ்புக் தயாரானதும் உங்களுக்குக் குறுஞ்செய்தி (SMS) மூலம் தெரிவிக்கப்படும். 

பின்னர் நீங்கள் உங்கள் இ-பாஸ்புக்கை டவுன்லோட் செய்துகொள்ள முடியும்.

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » 14.01.2016

சிபில் ஸ்கோர் பற்றி அறிய


சிபில் ஸ்கோர் பற்றி அறிய என்ன செய்ய வேண்டும்?

சிபில் என்பது CREDIT INFORMATION BUREAU (INDIA) LTD என்பதன் சுருக்கம் ஆகும். இந்த அமைப்பானது நம் நாட்டில் கிரடிட் கார்டு பயன்படுத்துபவர்களைப்பற்றியும்,கடன் வாங்குபவர்களைப் பற்றி்யும் தகவல்களை சேகரித்து பராமரிப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட ஒரு அமைப்பாகும்.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் பெற்றவர்கள் பற்றிய தகவலையும், அவர்கள் அதனை திருப்பிச் செலுத்துவது பற்றிய தகவலையும் இந்த அமைப்பிற்கு தெரிவிக்கும். இதனை இந்த சிபில் அமைப்பு சேகரித்து வைக்கும். இதனை வைத்து ஒருவர் வாங்கியுள்ள கடனைப்பற்றியும் அதனை திருப்பிச் செலுத்தும் அவரது திறனைப் பற்றியும் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். 

வீடு வாங்க ஹோம் லோன், கார் வாங்க கார் லோன், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க பெர்சனல் லோன் என்று கடன் வாங்குவதற்காக விண்ணப்பிக்கும்போது முதலில் கேட்கப்படுவது இந்த சிபில்ஸ்கோர் தான்.

நீங்கள் வாங்கிய கடனை அடைக்க, செலுத்தும் தொகையை ஒருமுறை தாமதமாக செலுத்தினால்கூட அதனது பாதிப்பு இந்த சிபில் ஸ்கோரில் பிரதிபலிக்கும். 

கடன் வாங்குவபரின் சம்பளத் தொகையில் 60% அளவுக்கே அதிகபட்சம் கடன் இருக்க வேண்டும். அதற்கு மேல் கடன் வாங்கினால்கூட அதன் தாக்கம் சிபில் ஸ்கோரில் பிரதிபலிக்கும்.

அதேபோல் கிரடிட்கார்டு லிமிட் தொகையில் அதிகபட்ச தொகையை பயன்படுத்திவிட்டு, குறைந்தபட்ச தொகையை செலுத்தினாலும் உங்கள் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும்.

ஒரே நேரத்தில் பல வங்கிகளில் கடனுக்கு விண்ணப்பிப்பதும் தவறு. வங்கிக்கடன் அல்லது கிரடிட் கார்டு பெற்று ஆறு மாதங்கள் கழித்தே அடுத்த கடனுக்கு அல்லது அடுத்த கிரடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

வங்கிக்கடனை சரியாக செலுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் கடனை செலுத்திய 3 மாத்தித்தில் இருந்து 6 மாதங்களுக்குள் சிபில் ஸ்கோர் ரிப்போர்ட்டை விண்ணப்பித்து பெற வேண்டும். சில வேளைகளில் தாங்கள் கடனை ஒழுங்காக திருப்பி செலுத்தியிருந்தால்கூட வங்கி அதனை சிபில் அமைப்பிடம் தெரிவிக்காமல் இருந்தால், வங்கி மேலாளரிடம் பேசி அதனை சரிசெய்ய வைக்கவேண்டும்.

எதற்கு எவ்வளவு வெயிட்டே்ஜ்?

கடனை திருப்பி செலுத்தும் வகைக்கு 30%

கடனி்ன் கால அளவிற்கு 25%

கடனுக்கும் சம்பளத்திற்கும் உள்ள வித்தியாசம் 25%

கிரடிட்கார்டு பயன்படுத்துவதற்கு 20% மும் வெயிட்டேஜ் இருக்கும்.

இன்றைய நிலையில் கை நிறைய கடன் வாங்கிவிட்டு, அதை சரிவர திரும்பக் கட்டாமல், சிபிலில் மாட்டி கடைசியில் புதிதாக கடன் பெறும் தகுதியை இழந்து, அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் பலர். 

வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்தி, சிபிலில் நூற்றுக்கு நூறு எடுக்க என்ன செய்ய வேண்டும் ?

''வங்கிகளில் கடன் வாங்க நினைக்கிற வர்கள் முதலில் ரூ.500 செலுத்தி தங்களுடைய பெயர், தந்தை பெயர், தங்களுடைய முகவரி, பிறந்த தேதி, தொலை பேசி எண்கள் மற்றும் பான் நம்பர், ஓட்டுநர் உரிமம் எண், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் நம்பர் ஆகியவற்றில் அடையாளத்துக்குக் கொடுக்கப்பட்ட ஒன்றை சிபில் அமைப்புக்கு அனுப்பி, 
தங்களின் சிபில் ஸ்கோர் மற்றும் தங்கள் மீது தங்களுக்கே தெரியாமல் ஏதாவது, கடன் நிலுவை உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

சிபில் ஸ்கோர்!

சிபில் ஒவ்வொருவருக்கும் 300 முதல் 900 வரை ஸ்கோர் கொடுக்கிறது. ஏற்கெனவே கடன் வாங்கிய ஒருவர், இன்னொரு கடனுக்கு விண்ணப்பித்து, அவருக்கு 800-க்கு மேல் ஸ்கோர் இருந்தால், அவரது கடன் விண்ணப்பம் உடனடியாக பரிசீலிக்கப்படும். அவர்களுக்கு கிரீன் சேனல் கடன் வழங்கப்படும்.


ஸ்கோர் 700 முதல் 800 வரை இருந்தால், ஆவணங்களை சரி பார்த்துவிட்டு வங்கிகள்/நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும். ஸ்கோர் 600 முதல் 700-ஆக இருந்தால் தீவிர பரிசீலனைக்குப் பின் விண்ணப்பதாரர் மேல் எந்தத் தவறும் இல்லை என்று விண்ணப்பதாரர் நிரூபித்தால், அவர்களுக்கும் கடன் கிடைக்க வாய்ப்பு உண்டு. 

ஆனால், விண்ணப்பதாரரின் ஸ்கோர் 600-க்கு கீழே இருந்தால் கடன் கேட்டு வருபவரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் நிராகரிக்கப்படும். இவர்களுக்கு எந்த வங்கியிலும் கடன் கிடைக்காது.

விண்ணப்பத்தாரரின் ஸ்கோர் சான்றிதழில் விவரம் இல்லை என்பதை என்.ஏ. அல்லது என்.ஹெச். (NA or NH) என்று இருந்தால் அவர்கள் கடனுக்கு புதியவர்கள்.

இதுவரை கடந்த 2 வருடங்களில் அவர்கள் எந்த கடனும் வாங்கவில்லை என்று அர்த்தம். இது மாதிரியான புதியவர்களுக்கு உடனடியாக கடன் வழங்கப்படும்.

'CIBIL Score sheet-ல் XXX’ என்றோ அல்லது DPD (Days Past Dues) என்றோ போட்டிருந்தால் கவலை வேண்டாம். அவர்கள் வாங்கிய கடனை சரியாக திருப்பிச் செலுத்துகிறார்கள் என்று அர்த்தம்.

ஸ்கோர் குறைய காரணங்கள்..!

கடனை உரிய காலத்தில், உரிய தவணையில் செலுத்தத் தவறினால் ஸ்கோர் குறையும்.

கிரெடிட் கார்டு கடன், குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்திவிட்டு மீதமுள்ள தொகையை தவணையில் செலுத்தினால் அபராதத்திலிருந்து தப்பிக் கலாம். ஆனால், ஸ்கோர் உடனடியாக குறையும். அந்த தவணைக் காலம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் உங்கள் ஸ்கோர் குறைந்து கொண்டே போகும்.

நீங்கள் வாங்கும் வீட்டுக் கடன் அல்லது கார் கடன் அதிகமாக இருந்து பெர்சனல் லோன் குறைவாக இருந்தால், உங்கள் ஸ்கோர் பாதிக்கப் படாது. 

அடமானம் இல்லாத கடன் (உதா. பெர்சனல் லோன்), அடமானக் கடனைவிட (உதா. வீட்டுக் கடன்) அதிகமாக இருந்தால் ஸ்கோர் மிகவும் பாதிக்கப்படும். 

உதாரணமாக மொத்த கடன் 25 லட்ச ரூபாயாக இருந்தால், இதில் கிரெடிட் கார்டு இரண்டு லட்ச ரூபாய், அடமானம் இல்லாத கடன் 12 லட்ச ரூபாய், கார் லோன் இரண்டு லட்சம் ரூபாய், வீட்டுக் கடன் 9 லட்சம் ரூபாயாக இருந்தால் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருக்கும். ஏனெனில் கடனில் 44% மட்டுமே அடமானத்துடன் கூடிய கடன் (வீட்டுக் கடன்) மீதமுள்ள 56% அடமானம் இல்லாத கடன் (பெர்சனல் லோன் மற்றும் கிரெடிட் கார்டு கடன்). 

ஆகவே, பெர்சனல் லோன் கடனையும், கிரெடிட் கார்டு கடனையும் அதிகம் வாங்காமல் இருந்தால் ஸ்கோர் நன்றாகவே இருக்கும். 

வீட்டுக் கடனையும், கார் கடனையும் அதிகபட்சமாக 75% முதல் 80% வரை வாங்கி பயன் அடையலாம்.

ஒருவர் வீட்டுக் கடன் வாங்க வேண்டுமென்றால் குறைந்த வட்டியுள்ள ஒரே ஒரு வங்கியைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தை அங்கு மட்டுமே விண்ணப்பித்தாலே போதும். ஒரே நேரத்தில் ஐந்தாறு வங்கிகளில் விண்ணப்பித்தால் அனைத்து வங்கிகளிலும் உங்கள் பெயர் விசாரிக்கப்பட்டு, அதனால் உங்கள் ஸ்கோர் குறைய வாய்ப்பிருக்கிறது. இரண்டு கடனுக்கு மத்தியில் குறைந்தபட்சம் 4 முதல் 6 மாத இடைவெளி இருக்க வேண்டும்.
முடிந்த வரை யாருக்கும் கடன் ஜாமீன் கையெழுத்து போடாமல் இருந்தால் நல்லது. அவர்கள் பணம் கட்டவில்லை என்றாலும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப் பட்டு உங்களுக்கு கடன் கிடைக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது.

கடன் கிடைக்காது!

நீங்கள் கடன் வாங்கி அதை குறிப்பிட்ட தேதியில் செலுத்த தவறி இருந்தால், வங்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி, மீதமுள்ள கடனையோ அல்லது மொத்தத் தொகையையும் தள்ளுபடி செய்திருக்கலாம். இதனால் உங்களுடைய சிபில் சான்றிதழில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது (Written-off) என்றோ, செட்டில் செய்யப் பட்டது (settled) என்றோ வரும். இந்நிலையில் உங்களை அடுத்த ஏழு வருடங்களுக்கு கறுப்புப் பட்டியலில் (Black List) சேர்த்துவிடுவார்கள். இதன் பிறகு அத்தியாவசிய கடனுக்காக நீங்கள் அழுது புலம்பினாலும் கடன் கிடைக்காது.

ஐந்து கட்டளைகள்!

நீங்கள் சிபிலில் அதிக ஸ்கோர் வாங்கி நல்ல பெயர் எடுக்க வேண்டுமெனில் பின்வரும் ஐந்து விதிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.

1. உங்களுடைய இ.எம்.ஐ.-யை நிலுவை தேதிக்கு முன்னதாகவே செலுத்தி விடுங்கள். கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டாம்.

2. கிரெடிட் கார்டு நிலுவையை மொத்தமாக செலுத்துவது நல்லது. குறைந்த பட்ச தொகையைச் செலுத்தி விட்டு மீதியை இ.எம்.ஐ-ல் செலுத்தக் கூடாது.

3. அடமானமில்லாத கடன் மற்றும் பெர்சனல் லோன் வாங்குவதை நிறுத்த வேண்டும்.

4. அதிக கிரெடிட் கார்டுகள் இருந்தால் இரண்டு மட்டும் வைத்துக் கொண்டு மீதியை சரண்டர் செய்துவிடுங்கள். அதில் குறைந்த தொகையை பயன்படுத்தவும்.

5.ஒரே நேரத்தில் வீட்டுக் கடன் அல்லது கார் கடனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளுக்கு விண்ணப்பிக்கக் கூடாது.

இந்த விதிமுறைகளை 24 மாதங்களுக்கு சரியாக பின்பற்றி வந்தால் உங்கள் ஸ்கோர் 300-ஆக இருந்தாலும் அது 800ஆக உயர வாய்ப்பு இருக்கிறது. ஆல் த பெஸ்ட்..!

நன்றி: திரு.கார்த்திகேயன்.

https://www.cibil.com/online/credit-score-check.do என்ற இணையதளத்தில் இருந்து சிபில் ஸ்கோர் படிவத்தை டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

சிபில் ஸ்கோர் வந்த பிறகு அதனைப்பற்றி புரிந்துகொள்ள 
https://www.cibil.com/video-credit-report-meaning இணையதளத்தில் உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

கேஷ் கார்டு பற்றி


கேஷ் கார்டு பற்றி தெரிந்து கொள்வோமா?

உங்களுக்கு கிரெடிட்கார்டு தெரியும்; டெபிட்கார்டு தெரியும், காஷ்கார்டு தெரியுமா? 


அதான் பிரீபெய்ட் வெர்சுவல் கார்டு, மொபைல்வாலட் என்றெல்லாம் சொல்கிறார்களே! உங்கள் கைபேசிக்குள் ஒளிந்திருக்கும் பணம் இது!



வங்கிக்குப் போகாமல், ஏன் உங்களுக்கு வங்கிக் கணக்கே இல்லையென்றால் கூட நீங்கள் இதைப் பயன்படுத்தி மற்றொரு ஊரிலிருப்பவருக்குப் பணம் அனுப்பலாம். கரண்ட் பில் கட்டலாம். டாப்அப் செய்யலாம். ரயில் டிக்கெட்டும் சினிமா டிக்கெட்டும் கூட எடுக்கலாம். 

பேடிஎம் போன்ற பல நிறுவனங்கள் இச்சேவையை அளித்தாலும் இன்று இச்சந்தையைக் கலக்கிக் கொண்டிருப்பது ஐகேஷ் எனும் காஷ்கார்டு சேவையே!

பீஹாரிலிருந்து சென்னை வந்து கட்டிட வேலை செய்பவரை எடுத்துக் கொள்ளுங்கள். அத்தொழிலாளியிடம் இணைய வசதி இருக்காது; வங்கிக்குச் செல்ல நேரம் இருக்காது. ஆனால் கைபேசி இல்லாமல் இருக்குமா? அம்மாதிரியான ஆட்கள் தெருக்கோடியில் இருக்கும் ஸ்மார்ட்ஷாப் எனும் முகவரின் கடைக்குச் சென்று தங்களது கணக்கில் பணத்தைச் செலுத்திவிடலாம். 

பின்னர் தேவையான பணத்தை கைபேசி மூலமாக அனுப்பினால், சில நொடிகளில் அவரது உறவினர் தமது ஏடிஎம் கார்டு மூலம் அதை எடுத்துக் கொள்ளலாம். கோயம்பேடு சந்தைகளிலுள்ள சிறு வியாபாரிகள் இச்சேவையைப் பயன்படுத்துகிறார்கள்!

இதன் பின்னணி சுவாரஸ்யமானது! 2008ல் கைபேசிகளின் ஆதிக்கத்தால் எஸ்டீடி பூத்துகளுக்கு தேவை குறைந்ததால் பல ஆயிரம் கடைகளை மூடிவிடக்கூடிய சூழ்நிலை உருவா யிற்று. ஆனால் அதே சமயம் பல லட்சக்கணக்கான தொழிலா ளர்கள் வங்கி மூலம் பணம் அனுப்புவதில் சிரமப்பட்டனர்.

இவையிரண்டையும் பார்த்த ராமுஅண்ணாமலை, பழனியப்பன் எனும் நம்மூர் சகோதரர்களுக்கோ இதில் ஒரு அரிய சேவை மற்றும் வர்த்தக வாய்ப்பு கண்ணுக்குத் தெரிந்திருக்கிறது.

வங்கிகளே தயங்கிய காலத்தில் அவர்கள் தைரியமாக இறங்கினார்கள். இவ்விரண்டையும் இணையத்தினால் இணைத்தார்கள். ஐகேஷ் என்னும் கைபேசி பணப்பரிமாற்றச் சேவையை உருவாக்கி ஒரு அமைதிப் புரட்சியே செய்துவிட்டார்கள். இன்று இந்தியாவெங்கும் 90,000 ஸ்மார்ட்ஷாப்புகளில் ஐகேஷ்-ஐ பயன்படுத்தி நடக்கும் பரிவர்த்தனைகள் நாளொன்றுக்கு இரண்டரை லட்சமாம்!

தி இந்து தமிழ் நாளிதழ் - 18.01.2016

குறிப்பு: இந்த சேவையைப் பெற www.icashcard.in செல்லுங்கள்.