disalbe Right click

Saturday, October 8, 2016

விவாகரத்தை தவிர்க்க


விவாகரத்தை  தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மணமுறிவு செய்து கொள்வதற்காக யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை. 

ஒன்று சிறப்பாக அமைய நாம் நேரத்தை ஒதுக்கி நிறைய முயற்சி செய்கிறோம். அவ்வாறுதான் திருமண வாழ்கையும். மண வாழ்க்கை பந்தம் தொடர்ந்திருக்க தம்பதிகள் பரஸ்பரம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக நேரத்தை ஒதுக்கி கொள்ள வேண்டும். 

திருமண வாழ்க்கை எல்லாவற்றிலும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கவே செய்கின்றன. வெளியிலிருந்து பார்த்தால், இருவரும் இணை பிரியா தம்பதிகளாக தெரிவர். 

ஆனால் அவர்களுக்குள் எத்தனையோ கசப்புகள் இருக்கலாம். இவற்றை களைந்து உள்ளும் புறமும் இணை பிரியாமல் இருப்பதற்கு அத்தம்பதிகள் சேர்ந்து செயலாற்ற வேண்டும்.

எனவே புதிதாக திருமணம் செய்து கொண்டவர்களே அல்லது இன்றோ நாளையோ மணமுறிவு கோரி நீதிமன்றத்தில் வழக்கிட சிந்தித்து கொண்டிருக்கும் தம்பதிகளே, உங்கள் இல்வாழ்க்கை இனிதாக எந்த இடர்படும் இன்றி தொடர இங்கு சில ஆலோசனைகளை உங்களுக்கு சொல்ல ஆசைபடுகிறோம். 

கடைபிடித்துப் பாருங்கள்.... உங்கள் துணை உங்கள் அன்புக்கு அடிமை ஆவது உறுதி.

1. ஆணும் பெண்ணும் வேறுபட்டவர்கள், மாறுபட்ட உணர்ச்சி கொண்டவர்கள் என்பதை முதலில் ஏற்று கொண்டு அதன்பின் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மண வாழ்க்கை இறுதி வரை சிறக்கும்.

2. சின்ன விஷயமோ பெரிய விஷயமோ, உங்கள் துணையை கலந்தாலோசித்தே எதையும் செய்யுங்கள். அவர் கூறும் கருத்தை கூர்ந்து கேளுங்கள். 

3. இருவரும் தவறுகளை செய்யக் கூடியவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அத்தவறுகளில் இருந்து சரியானதை அறிந்து கொள்ளுங்கள். ஒருமுறை செய்த தவறை அடுத்த முறை செய்யாதீர்கள்.

4. உங்கள் துணையிடம் மன‌ம் விட்டு பேசுங்கள், அவரின் பிரச்சனையை காது கொடுத்துக் கேளுங்கள்.

5. திருமணத்துக்கு முன்போ அல்லது அதன் பின்னரோ, மண வாழ்க்கைக்கு புறம்பான தொடர்புகளை கை விடுங்கள்.

6. எத்தகைய பிரச்சனை இருந்தாலும் அது இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தாலும் கூட, இரவில் தனித்தனி படுக்கைகளில் படுக்காதீர்கள். உறங்குவதற்கு முன் அப்பிரச்சனையை தீர்க்க ஏதேனும் வழிகளை கண்டுபிடிக்க முயலுங்கள். பிரச்சனையை சுமுகமாக முடிக்கவே முயல வேண்டும்.

7. உங்களை பற்றியே பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அது உங்கள் துணையை சலிப்படைய செய்து விடும்.இருவரும் ஒருவரைப் பற்றி மற்றவர் அதிக அக்கறையுடன் இருப்பது நல்லது.

8. சிறு சிறு கேலியும் கிண்டலும் இருக்கலாம். ஆனால் அது வன்மமாக மாறி விடக்கூடாது. அந்தந்த கோப தாபத்தை அப்படியே விட்டுவிட வேண்டும். 

9. ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்களாகவும், அன்பான காதலர்களாகவும் இருங்கள்.

10. உங்கள் துணையின் நண்பர்களை உங்கள் துணையை அருகில் வைத்து கொண்டு குறை கூறாதீர்கள். குறிப்பாக உங்கள் நண்பர்களின் முன்னிலையில் உங்கள் துணையை குறை கூறாதீர்கள்.

11. உங்கள் துணையின் பெற்றோர்களை இழிவு படுத்தாதீர்கள் அல்லது குறை கூறாதீர்கள்.

12. கொடுத்து பெற்று கொள்ளுங்கள்.

13. உடலுறவு கொள்வதை ஏதோ ஒரு வழக்கமாக மேற்கொள்ளாதீர்கள். ஆசையும், காதலும் கொண்டு அணுகுங்கள்.

14. என்ன சொல்லி விடப் போகிறாள்/றார் என்ற எண்ணத்தில் செயல்படுவதை தவிர்க்கவும். அதாவது உரிமை என்ற பெயரில் அத்து மீறாதீர்கள்.

15. உங்கள் துணையர் சோர்ந்திருக்கும் போது அவரை உற்சாகப்படுத்துங்கள், ஊக்கப்படுத்துங்கள், நம்பிக்கை கொடுங்கள். மாறாக அவரது சோர்வை அதிகப்படுத்தி விட வேண்டாம்.

16. உங்கள் தோற்றத்தை பொலிவாக வைத்திருங்கள். ஆரோக்கியம் பேணுங்கள்.  அழகு படுத்திக் கொள்ளுங்கள். 

17. ஒருவருக்கொருவர் நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள்.

18. சமாதானம்தான் தீர்வு என்பதை உணருங்கள்.

19. மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

20. எதையாவது கடனாக பெற விரும்பினால், அது பற்றி உங்கள் துணையிடம் கேளுங்கள்.

21. உங்களது எல்லா தகவல்களையும் உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

22. நீங்கள் உங்கள் துணையரை அதிகம் நேசிப்பதாக அவரிடம் அடிக்கடி கூறிக்கொண்டே இருங்கள்.

23. ஒருவருக்கொருவர் பாராட்ட பழகுங்கள். உள்ளன்போடு வாழ்த்துகளை சொல்லி மகிழுங்கள்.

24. சுகத்திலும், துக்கத்திலும் பங்கு கொள்ளுங்கள். குறிப்பாக துக்கத்தின் போது ஆறுதல் கூறி ஆதரவாக இருங்கள்.

25. பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

26. ஒருவருக்கொருவர் நன்றி மறவாதீர்.. உங்கள் துணையை ஒருபோதும் ஏமாற்ற முயலாதீர்கள்.

28. "என்னை மன்னித்துவிடு" என்று சொல்ல தயங்காதீர்கள்.

29. இயன்ற அளவு உங்கள் துணையை திருப்திபடுத்துங்கள். இயலாத நிலைக்கு வருத்தம் தெரிவியுங்கள்.

30. சகிப்புத்தன்மையை இருவரும் வளர்த்துக் கொள்ளுங்கள். சச்சரவுகளை கலந்து பேசி தீருங்கள். குறிப்பாக கணவன் எச்சமயத்திலும் மனைவியிடம் வன்முறையை கையாளக் கூடாது.

சேர்ந்து வாழ்ந்து இன்பம் காண்பதே இல்வாழ்க்கை என்பதை அடிக்கடி நினைவில் நிறுத்தி சந்தோஷங்களை இரட்டிப்பாக்குங்கள்.

நன்றி : தினமணி நாளிதழ் - 07.10.2016

தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை


தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை - என்ன செய்ய  வேண்டும்?

பத்திரப் பதிவுத் துறையில் மற்ற மாநிலங்களுக்கு இணையாக தமிழ்நாடு முன்னேற வேண்டுமானால் தற்போது உள்ள நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். நாம் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பத்திரப் பதிவு தொடர்பான நடவடிக்கைகள் பலவற்றை ஏற்றுச் செயல்படுத்த வேண்டும்.

சமீபத்தில் அம்மாநிலம் பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

தற்போது இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே பத்திரப் பதிவுகளைக் கணினிப் பதிவேடு (E-Registration) செய்யும் முறை உள்ளது. 

இந்த வசதியானது குத்தகைப் பத்திரம் மற்றும் புதிய குடியிருப்புகளுக்கான விற்பனைப் பதிவுப் பத்திரங்கள் ஆகியவற்றுக்கு உள்ளது.

மேலும் மகாராஷ்டிரம் இந்தியாவில் முதல் முறையாக IGR (Inspector General Of Registration) அழைப்பு மையத்தைப் பத்திரப் பதிவுத்துறைக்காகவே அமைத்துள்ளது. 

தற்போது இந்தச் சேவையானது மத்திய பிரதேசத்திலும், கேரளத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் வேலை நேரமானது அனைவரும் எளிதில் அணுகும் முறையில் உள்ளது. 

மும்பை, மும்பை புறநகர் மாவட்டம், தானே, கல்யாண், பன்வால் மற்றும் புனேவில் பதிவுத் துறை அலுவலங்கள் அமைந்துள்ளன. இவ்வலுவகங்கள் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், சில அலுவலகங்கள் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும் செயல்படுகின்றன.

மகாராஷ்டிர மாநிலத்தில் உபயோகிக்கப்படும் மென் பொருளானது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் இவை அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்றவாறு உள்ளன. நாள் ஒன்றுக்கு எவ்வளவு பத்திரம் பதியப்படுகிறது, எவ்வளவு வருமானம் போன்ற தகவல்களை ஆன்லைனில் அத்துறை தினமும் வெளியிடுகிறது. 
மாதம் மற்றும் ஆண்டுக்கான மொத்த வருமானமும் ஆன்லைனில் பதியப்படுகிறது. 

ஆன்லைன் பொதுத் தரவு நுழைவு வசதிகள் பல மாநிலங்களில் உள்ளன. இதன் மூலம் ஆவணங்களை ஸ்கேன் செய்வது எளிதாகிறது. 

மேலும் பதிவுசெய்த பத்திரமானது பதிவுசெய்த அரை மணிநேரத்துக்குள் சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைக்கப்படுகிறது. 

தற்போது தமிழ்நாடு, அசல் பத்திரத்தைப் பதிவுசெய்த இரண்டு நாட்களில் சம்பந்தப்பட்ட நபரிடம் வழங்குகிறது.

மகாராஷ்டிர சாரதி (SARATHI) என்ற சிற்றேடை நிறுவியுள்ளது 

இது ஆவணங்கள் பதிவு,முத்திரைவரி மதிப்பீடு, இ-கட்டணம் (E-PAYMENT), இ-சேவை (E-SERVICE) மற்றும் திருமணப் பதிவு போன்ற முழுமையான தகவல்களைக் கொண்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் 1985-ம் ஆண்டு முதல் ஸ்கேன் செய்த ஆவணச் சான்றிதழ்கள் கிடைக்கப் பெறுகின்றன. கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்திச் சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

இது போன்ற ஆன்லைன் வசதி ஆந்திரப் பிரதேசத்திலும் உள்ளது. 
அங்கு 1999-ம் ஆண்டு முதல் உள்ள ஆவணங்கள் கிடைக்கப் பெறுகின்றன. 

ஆனால் தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் certificed copy (பதிவு சார் தகவல்கள்) பெறும் வசதி இல்லை.

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் e-GPA என்ற ஆன்லைன் வசதி உள்ளது. 

அங்கு பதிவாகும் பொது அதிகாரப் பத்திரத்தின் தகவல்களை ஆன்லைனில் சரி பார்க்கும் வசதி உள்ளது. அந்தப் பொது அதிகாரப் பத்திரம் யார் எழுதியது, இப்போது அந்தப் பத்திரம் செல்லுபடியாக உள்ளதா, அந்தப் பொது அதிகாரப் பத்திரம் மூலம் எத்தனை ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன போன்ற தகவல்கள் ஆன்லைன் மூலம் கிடைக்கும்.

மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், கேரளம் போன்ற மாநிலங்களில் பத்திரப் பதிவு செய்யும் நபர்கள் பதிவுசெய்யும் சொத்தின் அனைத்துத் தகவல்களையும் கணினியில் பதிவு செய்த பின்னர் மட்டுமே பத்திரங்களைப் பதிவு செய்ய முடியும்.

குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஆகிய மாநிலங்களில் சொத்து விற்ற விற்பனைப் பத்திரங்களில் சம்பந்தப்பட்ட சொத்தின் புகைப்படங்களை இணைக்க வேண்டும்.
இதைப் போன்ற நடவடிக்கைகளைத் தமிழ்நாட்டிலும் அமல்படுத்த வேண்டும்.

கட்டுரையாளர்: 
வழக்கறிஞர் ஷியாம் சுந்தர்
கேரள அரசின் சட்ட ஆலோசகர்

நன்றி : தி இந்து (தமிழ்) நாளிதழ் - 08.10.2016

அடல் பென்சன் யோஜனா


அடல் பென்சன் யோஜனா - என்ன செய்ய வேண்டும்?

அடல் பென்ஷன் திட்டம்… ஏன்? எதற்கு? எப்படி?
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்திய சமூக பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றுதான் அடல் பென்ஷன் யோஜனா. இந்தத் திட்டம் ஜூன் 1, 2015-ல் இருந்து செயல்பட ஆரம்பித்திருக்கிறது.

இந்தத் திட்டத்தில் இணைய என்ன செய்ய வேண்டும், எப்படி பணம் வசூலிக்கப்படும், யார் இதை நிர்வகிப்பார்கள், எவ்வளவு தொகை பென்ஷனாக கிடைக்கும் என்று பல கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் தந்தார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வங்கிப் பரிமாற்றம் மற்றும் அரசுக் கணக்குகள் பிரிவின் இணைப் பொது மேலாளர் வி.வி.கணேசன்.

‘‘இந்தத் திட்டத்தின் நோக்கமே அமைப்பு சாராத (Unorganised) துறையில் வேலை செய்பவர்கள், ஓய்வுக்காலத்துக்குப் பின், அதாவது 60 வயதுக்குப்பின் மாதம் ரூ.1,000 – 5,000 வரை ஓய்வூதியம் பெற வேண்டும் என்பதுதான். அதற்காக அரசு தன் சார்பாக ஒரு சிறு தொகையைச் செலுத்தும்.

யார் இணையலாம்?
18  வயது முதல் 40 வயதுடைய, இந்தியாவில் வங்கி சேமிப்புக் கணக்கு வைத்துள்ள இந்தியர் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் இணையலாம். ஒரே குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்டு 40 வயதுக்குள் உள்ள அனைவரும் இந்தத் திட்டத்தில் இணையலாம்.

இந்தத் திட்டத்தில் டிசம்பர் 31, 2015-க்குள் இணைபவர்களுக்கு அரசு தன் சார்பாக வருடத்துக்கு ரூ.1,000 அல்லது நாம் செலுத்தும் தொகையில் 50 சதவிகிதம், இவற்றில் எது குறைவோ அந்த தொகையைச் செலுத்தும். 

பென்ஷன் தொகை தரக்கூடிய திட்டங்களில் ஏற்கெனவே இணைந்திருப்பவர்கள், சமூக பாதுகாப்புத் திட்டங்களில் இணைந்திருப்பதாக கருதப்படு வார்கள். அப்படிப்பட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களில் இருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் இணைய முடியும் என்றாலும் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை இவர்களுக்கு வழங்காது. அதேபோல், வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களும் இந்தத் திட்டத்தில் சேரலாம் என்றாலும் அவர்களுக்கும் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகை கிடைக்காது.

ஒருவேளை இப்போது அமைப்புசாரா துறையில் பணியாற்றிக் கொண்டிருந்து, பிற்காலத்தில் அமைப்பு சார்ந்த துறையில் பணியில் சேர்ந்தால், எந்த வங்கிக் கிளையின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைந்தார் களோ, அந்த வங்கிக் கிளைக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். அரசுக்கு தெரியப் படுத்தியவுடன் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை நிறுத்திக்கொள்ளும்.

எப்படி இணைவது?
எந்த வங்கிக் கிளையில் உங்களுக்கு சேமிப்புக் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கிக் கிளையில் இந்த பென்ஷன் திட்டத்துக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, முகவரி சான்று, புகைப்பட அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றைத் தரவேண்டும். வங்கி உங்களுக்கு ஒரு ‘ப்ரான் எண்’ணை (PRAN NO) வழங்கும். அந்த ‘ப்ரான் எண்’ணுக்கு நம் கணக்கிலிருந்து பணம் கிரெடிட் செய்யப்படும். இந்த ‘ப்ரான் எண்’ நாம் அடல் திட்டத்தில் இணைந்ததற்கு ஆதாரமாக இருக்கும்.

யார், எவ்வளவு தொகை செலுத்தலாம்?
நாம் விண்ணப்பம் பூர்த்தி செய்து தரும்போதே 60 வருடங்களுக்குப் பிறகு எவ்வளவு தொகை பென்ஷனாக கிடைக்க வேண்டும் என்பதைக் கேட்பார்கள். குறைந்தபட்சம் ரூ.1,000 தொடங்கி அதிகபட்சமாக ரூ.5,000 வரை ஒருவர் பென்ஷனாக பெற நினைக்கும் தொகையைக் குறிப்பிடலாம். பென்ஷனாக பெற நினைக்கும் தொகைக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் பணம் கட்ட வேண்டியிருக்கும். (பார்க்க  அட்டவணை!)

முதல்முறையாக இந்தத் திட்டத்தில் இணைந்தவுடன், இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கு சாட்சியாக ஒரு சான்றிதழ் வழங்கப்படும். அதுதான் ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம். அதேபோல் ஒவ்வொரு தவணை செலுத்தும்போதும் உங்களுக்கு ரசீதோ அல்லது குறுஞ்செய்தியோ அனுப்பப்படும்.

எப்படி பணம் செலுத்துவது?
ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்தபின் மாதாமாதம் செலுத்த வேண்டிய தொகையை ஆட்டோடெபிட் மூலம் செலுத்தலாம்.  நம் வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து வரவு வைக்கப்படும். நம் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, அது நம் ‘ப்ரான்’ கணக்கில்   வரவு வைக்கப் பட்டதும் நமக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

எப்போது பணம் எடுக்கப்படும்?
நாம் முதல் முறையாக அடல் திட்டத்தில் இணையும்போது எந்த தேதியில் பணம் செலுத்து கிறோமோ, அந்த தேதிதான் நம் அடுத்தடுத்த  மாதத்தின் கெடு தேதி. உதாரணமாக, ஜூன் மாதம் 8-ம் தேதி முதல் தவணை செலுத்தி இருந்தால், அடுத்தடுத்த மாதம் 8-ம் தேதி அன்று தவணைக்கான பணம் எடுக்கப்படும்.

தொகையை அதிகரிக்கலாமா?
வருடத்துக்கு ஒருமுறை நாம் செலுத்தும் தொகையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். ஒவ்வொரு ஆண்டின் ஏப்ரல் மாதம் மட்டும் இந்த வசதி மூலம் நாம் மாதாமாதம் செலுத்தும் பென்ஷன் தொகையை அதிகரித்துக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடியும்.

பணம் கட்டாவிட்டால்..?
இந்தத் திட்டத்தில் சேர்ந்தபின் சரியாக பணம் கட்டவில்லை என்றால் அபராதம் விதிக்கப் படும். ரூ.1 முதல் 100-க்கு ஒரு மாதத்துக்கு 1 ரூபாயும், ரூ.101 முதல் 500 வரை ஒரு மாதத்துக்கு 2 ரூபாயும், ரூ.501 முதல் 1,000 வரை ஒரு மாதத்துக்கு 5 ரூபாயும், ரூ.1001-க்கு மேல் ஒரு மாதத்துக்கு 10 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு பணம் செலுத்தவில்லை என்றால், நம் சேமிப்புக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும். தொடர்ந்து 24 மாதங்கள் பணம் செலுத்தவில்லை என்றால் சேமிப்புக் கணக்கு நிரந்தரமாக மூடப்பட்டு, திட்டத்திலிருந்து நீக்கப்  படுவார்கள்.

யார் நிர்வகிக்கிறார்கள்?
இந்தத் திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) என்கிற அரசு அமைப்பு நிர்வகிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதியில் 85%  அரசுப் பத்திரங்கள் மற்றும் பாண்டுகளில் முதலீடு செய்யப் படும். மீதமுள்ள 15% பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.

என்ன உறுதி?
நாம் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு  கூடுதல் தொகை கிடைத்தால், அந்த தொகை திட்டத்தில் முதலீடு செய்தவருக்கே  வழங்கப்படும். ஒருவேளை உறுதி செய்யப்பட்ட தொகையைவிட குறைந்த அளவே வருமானம் ஈட்டி இருந்தால், அதை அரசாங்கம் சரிகட்டும்.

எப்போது க்ளெய்ம் கிடைக்கும்?
இந்தத் திட்டத்தில் இணைந்தவர் 60 வயதுக்குப் பிறகு இறந்துவிட்டால், அவரது இறப்புச் சான்று, இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கான சான்றிதழ், ஆதார்  அட்டை விவரங்கள், நாமினியின் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை திட்டத்தை நிர்வகிக்கும் வங்கிக் கிளையில் சமர்பித்தால், வங்கி அந்த ஆவணங்களின் நகலை பிஎஃப்ஆர்டிஏவுக்கு அனுப்பும். பிஎஃப்ஆர்டிஏ  சான்றிதழ்களை சரிபார்த்து பென்ஷன் தொகையை நாமினிக்கு வழங்கும். ஒருவேளை 60 வயதுக்குமுன் இறந்தால் அல்லது உயிர் போகக்கூடிய நோய் காரணமாக பணத்தைத் திட்டத்திலிருந்து எடுக்க வேண்டும் என்றால், திட்டத்தில் இணைந்தவர் எவ்வளவு தொகை செலுத்தினாரோ அந்த தொகையும், அரசு தன் சார்பாக வழங்கிய தொகை மட்டும்தான் வழங்கும்.

60 வயதுக்குப் பின் இறந்தால்…?
இந்த திட்டத்தின் சிறப்பம்சமே, ஒருவர் 60 வயது முடித்து எத்தனை ஆண்டுகள் வாழ்கிறாரோ, அத்தனை ஆண்டுகளுக்கும் அவர் கோரி இருந்தபடி பென்ஷன் தொகை கிடைக்கும்.

அவருக்குப்பின் அவர் சொல்லும் நாமினி, அதாவது முதல் நாமினி, இறக்கும் வரை அதே அளவு தொகை ஒவ்வொரு மாதமும் பென்ஷனாக கிடைக்கும். முதல் நாமினியும் இறந்துவிட்டால், அவர் நாமினியாக நியமித்தவருக்கு, அதாவது இரண்டாவது நாமினிக்கு உறுதி செய்திருந்த மொத்த தொகையும்  (Lumpsum) வழங்கப்படும்.

உதாரணமாக, சேகர் என்பவர் தன் 30-வது வயதில் இந்தத் திட்டத்தில் இணைந்து மாதம் ரூ.577 செலுத்தி வருகிறார். அரசு தன் சார்பாக வருடத்துக்கு ரூ.1,000 செலுத்தி வருகிறது. இவருக்கு 61-ஆவது வயதிலிருந்து மாதம் ரூ.5,000 கிடைக்கும். சேகர் தன் 71-வது வயதில் இறந்துவிடுகிறார். ஆக சேகருக்கு  61 – 71 வயது வரை 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5,000 கிடைத்திருக்கும்.

சேகர் இந்தத் திட்டத்தில் இணையும்போது நாமினியாக தனது மனைவி கமலாவைக் குறிப்பிட்டிருக்கிறார்.  (நாமினி கணவன் /மனைவி யாகத்தான் இருக்க வேண்டும்) எனவே, சேகர் இறந்தபின், கமலா உயிரோடு இருக்கும் வரை மாதம் ரூ. 5,000 கிடைக்கும். கமலா தனது நாமினியாக தன் மகன் ரமேஷை நியமித்திருப்பார். கமலா இறந்த பிறகு, ரமேஷுக்கு மொத்தத் தொகையான 8.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

நாமினியை மாற்றிக் கொள்ளலாமா?
இந்தத் திட்டத்தில் இணைபவர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது கட்டாயம் நாமினியை குறிப்பிட வேண்டும். ஒருவேளை, நாமினி இறந்துவிட்டால், எந்த வங்கிக் கிளையில் இந்தத் திட்டம் நிர்வகிக்கப்பட்டு வருகிறதோ, அந்த வங்கியில் சென்று புதிதாக வேறு ஒரு நாமினியை நியமித்துக் கொள்ளலாம்.

வேறு வங்கிக் கிளைக்கு மாற்றலாமா?
இந்தத் திட்டத்தில் சேர்ந்தபின், ஒருவர் எந்த வங்கிக் கிளைக்கு வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், க்ளெய்ம் சமயத்தில் ஒருவரின் ‘ப்ரான் கணக்கு’ எங்கு நிர்வகிக்கப்படுகிறதோ, அங்குதான் க்ளெய்ம் கிடைக்கும்.

தரப்பட்ட தகவல்கள் தவறாக இருக்கும்பட்சத்தில், திட்டத்தில் இணைந்தவர் செலுத்திய தொகை மட்டும் திரும்ப வழங்கப்பட்டு திட்டத்திலிருந்து நீக்கப்படுவார். அரசு தன் சார்பாக வழங்கிய தொகை கிடைக்காது” என்றார் கணேசன்.

By vayal on 11/06/2015

Friday, October 7, 2016

பெற்றோர் பராமரிப்பு - விவாகரத்து


பெற்றோர் பராமரிப்பு - விவாகரத்து - என்ன செய்ய வேண்டும்? 

விவாகரத்து வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

வயதான பெற்றோரை உடன்வைத்து பராமரிக்க சம்மதிக்காத மனைவியை, கணவன் விவாகரத்து செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், விவகாரத்து கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் ஆர் தவே அளித்த தீர்ப்பில், "பெற்றோரால் வளர்த்து, கல்வி புகட்டி வளர்க்கப்படும் மகனுக்கு, வயதான, வருமானம் இல்லாத அல்லது குறைவான வருமானமே உடைய தனது பெற்றோரை பராமரிக்கும் தார்மீக பொறுப்பம், சட்டப்பூர்வ கடமையும் இருக்கிறது. 

மேற்கத்திய கலாச்சாரத்தில் தான் திருமணம் ஆனதும் அல்லது வயது வந்ததும் மகன் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து விடுகிறார். 

ஆனால் இந்தியாவில் மக்கள் பொதுவாக மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றுவதில்லை. 

இந்து சமூகத்தில் பிறந்த ஆண், அவரது பெற்றோரை பிரித்து வாழ்வது கலாசாரத்திற்கு எதிரானதாக கருதப்படுகிறது. 

பணம் சம்பாதிக்க இயலாத நிலையில் இருக்கும் பெற்றோர், தனது மகனை சார்ந்து வாழும் சூழலில் அவர்களை பிரிந்து செல்வது சரியான செயல் இல்லை.

 எனவே சரியான காரணமின்றி பெற்றோரிடமிருந்து கணவனை பிரிக்க மனைவி நினைப்பது கொடுமையாகவே கருதப்படும் 

அதுபோன்ற சூழலில் மனைவியை கணவன் விவகாரத்து செய்ய சட்டத்தில் இடமிருக்கிறது" என்று கூறியுள்ளார்

நன்றி : விகடன் செய்திகள் - 07.10.2016

ஆன்லைனில் ஆர்.டி.ஐ. கேள்வி பதில்கள்


ஆன்லைனில் ஆர்.டி.ஐ. கேள்வி பதில்கள் - என்ன செய்ய வேண்டும்?

புதுடில்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதற்கு அளிக்கப்பட்ட பதில்கள் குறித்த விபரங்களை, ஆன்லைனில் வெளியிடுமாறு, அனைத்து அரசுத் துறைகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம்:

ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பொதுமக்கள் அரசுத் துறை செயல்பாட்டை அறிந்து கொள்ள முடியும். இந்த சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு, குறிப்பிட்ட நாட்களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது. 

எனினும், சில அரசுத் துறை அதிகாரிகள், ஆர்.டி.ஐ., மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆன்லைனில் பதிவேற்றம்:

அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதற்கு, சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் குறித்த தகவல்களை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

 எனினும், ஆர்.டி.ஐ., மூலம் தகவல் பெறுபவர் மற்றும் பெறப்படுபவரின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடக் கூடாது. அனைத்து மத்திய அரசுத் துறைகளும் இதை கடைபிடிக்க வேண்டும். 

இவ்வாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

நன்றி : தினமலர் நாளிதழ் - 08.10.2016

சர்க்கரை நோயாளிகள்


சர்க்கரை நோயாளிகள் - என்ன செய்ய வேண்டும்?

பெரும்பான்மையான சர்க்கரை நோயாளிகள் Type-2 சர்க்கரை நோயால்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். Type-2 சர்க்கரை நோய் என்பது இன்சுலீன் பற்றாக்குறையால் வருவதில்லை. மாறாக சுரக்கின்ற இன்சுலீனை செயல்பட விடாமல் உடம்பிலுள்ள செல்கள் அதை எதிர்ப்பதனால் இந்த சர்க்கரை நோய் வருகிறது. 

நகரவாசிகள் பெரும்பாலும் இப்பொழுது அமர்ந்த இடத்திலேயே வேலை செய்வதால் உடம்பிற்கு தேவையான உடற்பயிற்சி கிடைக்காமல் போய்விடுகிறது. இது மட்டுமின்றி அளவுக்கதிகமாக செயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்டங்கள் இப்பொழுது சுலபமாகக் கிடைக்கின்றது. ஒரு வரம்பின்றி நாள்தோறும் மக்கள் இத்தகைய உணவுப் பண்டங்களை உண்பதால் ரத்த ஓட்டத்தில் ஏராளமான கார்போஹைட்ரேட் என்ற மாவுச்சத்து சேர்ந்து விடுகிறது. 

இதை ஜீரணிப்பதற்காக நம்முடைய உடம்பும் ஏராளமான இன்சுலீனை சுரந்து கொண்டிருக்கிறது. இன்சுலீன் குறைந்தால் செல்கள் பாதிக்கப் படுவது எவ்வளவு உண்மையோ அதே அளவிற்கு இன்சுலீன் அதிகமானாலும் செல்கள் பாதிக்கப்படுவதும் உண்மை. ஆகவே இன்சுலீன் அளவு அதிகரிக்கும் பொழுது அதை உள்ளே விடாமல் செல்கள் தடுக்கின்றன. இப்படி குறைவான உடற்பயிற்சி மற்றும் தவறான உணவு பழக்கங்கள் மற்றும் செல்களைப் பாதிக்க கூடிய அளவிற்கு இன்சுலீன் சுரந்து போதல் அதற்கு உடம்பில் வருகின்ற எதிர்ப்பு என்று இவையெல்லாம் சேர்ந்து Type-2 சர்க்கரை நோயை கொண்டு வந்துவிடுகிறது. இம்மாதிரியான சர்க்கரை நோய் நகரவாசிகளிடையே வேகமாக பரவியும் வருகிறது.
இத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இப்பொழுது சுலபமாகக் கிடைக்கின்ற மாத்திரைகளை உட்கொள்கின்றனர். மருந்தின் விளைவாக சர்க்கரை லெவல் குறையும் பொழுதோ நார்மலுக்கு வரும் பொழுதோ இப்படியே ஆயுள் பூராவும் சர்க்கரையை கட்டுப்படுத்திக் கொள்ளலாம். இனிமேல் உடல் நலத்தை பற்றிக் கவலைப்படத் தேவையில்லை  என்று நோயாளிகள் எண்ணுகிறார்கள். 
ஆனால் இப்படி நம்புவது தவறான நம்பிக்கையாகும். மருந்து, மாத்திரைகள் நோயின் சின்னங்களையும், அறிகுறிகளையும்தான் கட்டுப்படுத்துகின்றன. ஆனால் உண்மையில் அடிப்படைக் காரணங்களான உடற்பயிற்சியின்மை மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள் ஆகியவை தொடரும் வகையிலும் நோயின் பாதிப்பு தொடரத்தான் செய்யும். இந்த அடிப்படைக் குறைபாடுகளை தீர்க்காத பட்சத்தில் நோயாளி மேலும் மேலும் அதிகமாக மாத்திரைகளைச் சாப்பிட்டால்தான் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம் என்ற நிலை வரும். இரத்த ஓட்டம், அடர்த்தியாகி வேகமும் குறைந்து விடுகிறது. இதன் காரணமாக இதயம், ஈரல், சிறுநீரகம், கண்கள் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் கிடைக்காமல் அவைகளுடைய செயல்பாடு பாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோய் நீண்டகாலம் இருக்கும் பொழுது நோயாளியின் ஆயுட்காலம் 13.5 ஆண்டுகளுக்கு குறைவதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
Dewayne Mcculley என்ற அமெரிக்க என்ஜீனியர் ஒருவருக்கு திடீரென்று Type-2 சர்க்கரை நோய் உருவாகி அவருடைய சர்க்கரை லெவல் கிடுகிடுவென 1300 mg/dl புள்ளிகளுக்கு உயர்ந்து விட்டது. அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை செய்ய ஆரம்பித்தனர். ஆனால் அவர் பிழைப்பாரென்று யாருமே எதிர்ப் பார்க்கவில்லை. இருந்தாலும் உடனடியாக சிகிச்சை ஆரம்பித்ததன் பலனாக அவருடைய உயிரைக் காப்பாற்ற முடிந்தது. தன் உடம்புக்கு திடீரென்று இந்தப் பாதிப்பு எப்படி வந்தது? இதிலிருந்து எப்படி விடுபடுவது என்று அவர் யோசிக்க ஆரம்பித்தார். சர்க்கரை வியாதியைப் பற்றி கிடைத்த தகவல்களையெல்லாம் படித்து அந்த வியாதியைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டார். 
ஆயுள் முழுவதும் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும் என்ற நிலை அவருக்குப் பிடிக்கவில்லை. தனக்கு வந்துள்ள இந்தக் குறைபாடு தவறான உணவுப் பழக்கங்களாலும், போதிய உடற்பயிற்சியின்மையாலும்தான் வந்திருக்கிறது என்று நம்பினார். ஆகவே தன் உணவுப் பழக்கங்களை மாற்ற ஆரம்பித்து தான் சாப்பிடும் கார்போஹைட்ரேட் அளவை பெரும் அளவு குறைத்தார். மாவுச்சத்து மிக்க நன்கு பதப்படுத்தப்பட்ட செயற்கையாக சுவையூட்டப்பட்ட உணவுப் பண்டங்களை சாப்பிடுவதைக் குறைத்தார். இதற்குப் பதிலாக super-meal என்ற ஒரு புது உணவுத் திட்டத்தைத் தயாரித்தார். இந்த உணவுத் திட்டத்தில் 50% கார்போஹைட்ரேட் 25% புரோட்டீன், 25% கொழுப்புச்சத்து கிடைக்குமளவிற்கு உணவுப் பண்டங்களைச் சேர்த்தார். இவற்றோடு கூட கால்சீயம் மற்றும் விட்டமின்கள் ஆகிய கூடுதல் சத்துப் பொருள்களையும் சேர்த்தார். இந்த super-meal திட்டத்தில் நிறைய காய்கறிகள் மற்றும் கீரை வகைகளையும் சேர்த்துக் கொண்டுள்ளார். பப்பாளி, பம்பளிமாஸ், என்ற பழவகை களையும், முட்டைகோஸ் ஆகியவற்றை சேர்க்கிறார். 
அரிசியானாலும், கோதுமையானாலும், பழுப்பு நிற அரிசியினால் செய்யப்பட்ட சாதம் மற்றும் பழுப்பு நிற கோதுமையால் செய்யப்பட்ட ரொட்டியைத்தான் சாப்பிடச் சொல்கிறார். இந்த முறையான உணவுத் திட்டம் மற்றும் போதிய உடற்பயிற்சி ஆகிய இரண்டின் காரணமாக நாலே மாதங்களில் தனக்கு வந்த சர்க்கரை நோயிலிருந்து விடுபட்டார். இப்பொழுது மருந்து மாத்திரைகளின் உதவியில்லாமலேயே வெறும் உணவு கட்டுப்பாட்டின் மூலமாகவே சர்க்கரை நோயின்றி ஆரோக்கியமாக இருக்கின்றார்.
அவர் தயாரித்த super meal அமெரிக்கர்களுக்காக தயார் செய்யப்பட்டது என்றாலும் நம் நாட்டில் கிடைக்கின்ற உணவுப் பொருட்களை வைத்துக் கொண்டு நமக்கேற்ற மாதிரி உணவு தயார் செய்து கொள்ளலாம். ஒரு பக்கம் அவர் காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டுமென்று வலியுறுத்துகிறார் என்றாலும் அதே சமயத்தில் இன்னொரு பக்கம் மணிலா எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்ற எண்ணெய்களுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய்யை வறுவலுக்கு பயன் படுத்தச் சொல்கிறார். 
அவர் தவிர்க்க வேண்டுமென்று சொல்வதில் சர்க்கரை சத்து மிகுந்த பழங்களான வாழைப்பழம், திராட்சை, அன்னாசி போன்றவைகளும், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவைகளும் அடங்கும். நம்முடைய அன்றாட உணவில் 25%ஆவது கறி, மீன் வகைகள் இருக்கலாம் என்று அவர் சொல்கிறார் என்றாலும் சைவ சாப்பாடு சாப்பிடும் பல இந்தியர்களுக்குப் பொருந்தாது. ஆகவே அவர்கள் புரதச்சத்து பெறுவதற்காக நிறைய தயிர் மற்றும் சோயா, முந்திரி, மணிலா கொட்டைகளைச் சாப்பிடலாம்.
உடற்ப்பயிற்சியை மிக முக்கியமாக‌ ஆக எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் கருத்துப்படி தினசரி காலையிலும், மாலையிலும் ஒரு மணி நேரமாவது வேகமாக நடக்க வேண்டும் என்கிறார். எடை கூடுதலாக இருப்பது மற்றும் தொப்பை போட்டிருப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்கிறார். கூடுதல் எடைக்கும் உடம்பின் உடைய இன்சுலீன் எதிர்ப்பிற்கும் சம்மந்தம் இருக்கிறது என்கிறார். அவருடைய ஆராய்ச்சியில் கூடுதல் எடையை குறைத்தவர்களுக்கு சர்க்கரை அளவும் நன்றாக குறைந்துள்ளதாகச் சொல்கிறார்.
Dewayne Mcculley தான் சாதித்ததை மற்ற சர்க்கரை நோயாளிகளும் சாதிக்கலாம் என்று திட்டவட்டமாகச் சொல்கிறார். அந்த நம்பிக்கையில்தான், தன்னுடைய அனுபவங்களையும், தன்னுடைய super meal திட்டங்களையும், தான் இந்த சர்க்கரை நோயி லிருந்து மீண்ட விவரங்களையும், தான் எழுதியுள்ள Death to Diabetes என்ற புத்தகத்தின் மூலம் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார். அவருடைய ஆலோசனைகளையும், வழி காட்டல்களையும் பின்பற்றுபவர்கள் எவரும் சர்க்கரை வியாதியிலிருந்து விடுபட்டு நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வார்கள் என்பது உறுதி.
 By vayal on 25/05/2011


Thursday, October 6, 2016

சிமேட் தேர்வு


சிமேட் தேர்வு - என்ன செய்ய வேண்டும்?
Common Management Admission Test - CMAT)  ’சிமேட்’   நுழைவுத்தேர்வு; 
10.10.2016 முதல் ஆன்லைன் பதிவு

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி ( All India Council for Technical Education - AICTE)  கவுன்சிலான, அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில், எம்.பி.ஏ., படிப்புகள் உள்ளன.

அதில், முதுநிலை டிப்ளமோ மேலாண் நிர்வாகம்;முதுநிலை டிப்ளமோ நிறுவன நிர்வாகம் போன்ற படிப்புகளில் சேர, சிமேட் நுழைவுத் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.

ஆண்டுக்கு, இரு முறை இந்த தேர்வு நடத்தப்பட்டது.
நடப்பு கல்வி ஆண்டு முதல், ஒரு முறை மட்டுமே தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ஜன., 28, 29ம் தேதிகளில்,ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்;
10.10.2016ம் தேதி முதல், ஆன்லைன் பதிவு துவங்குகிறது; டிச., 10வரை விண்ணப்பிக்கலாம்.

அனைத்து இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்களும், இளங்கலை இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விபரங்களை, www.aicte-cmat.in/college/faq.aspx என்ற இணையதளத்தில் அறியலாம்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 06.10.2016

Wednesday, October 5, 2016

வாக்காளர் அட்டையில் உங்கள் போட்டோவை


வாக்காளர் அட்டையில் உங்கள் போட்டோவை அழகாக மாற்ற
என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்தில் உள்ள, 300க்கும் மேற்பட்ட, 'இ - சேவை' மையங்களில், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை, உடனுக்குடன் கிடைக்கும்; 

அதில், தேவைப்பட்டால், உங்கள் அழகான முகத்தைப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம்.

இது குறித்து, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: 

தமிழகத்தில் உள்ள, இ - சேவை மையங்களில், தற்போது, 100 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன; இந்த ஆண்டுக்குள், சேவைகளின் எண்ணிக்கை, 300 ஆக உயர்த்தப்படும். அதன் ஒரு பகுதியாக, வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வழங்கப்பட உள்ளது. 

அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின் கீழ், 486 இ - சேவை மையங்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் சார்பில், சென்னையில், சில இடங்களில், இந்த சேவை நேற்று துவங்கியது. 

அதற்காக, வாக்காளர்களின் புகைப்படம் உள்ளிட்ட முழு விபரங்கள், தகவல் தொழில்நுட்ப துறையிடம், தேர்தல் துறை வழங்கி உள்ளது.

வாக்காளர்கள் மையங்களுக்கு சென்று, வாக்காளர் அட்டை எண்ணை கூறியதும், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டை, அச்சிட்டு தரப்படும்; 25 ரூபாய் செலுத்த வேண்டும். 

வாக்காளர் அட்டை தொலைந்தாலும், இந்த மையத்தில், அடையாள அட்டை எண்ணை தெரிவித்து, புதிய அட்டை பெறலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அழகாக தெரிய வேண்டுமா? : 

வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படங்கள், மிக மோசமாக தெரிவதாக புகார்கள் உள்ளன. இ - சேவை மையங்களில், வாக்காளர்களை புகைப்படம் எடுத்து, அதை, வண்ண அடையாள அட்டையில் பதிந்து தர வசதிகள் உள்ளன. 

தேர்தல் கமிஷன் தந்த அட்டையில் உள்ள புகைப்படத்தை, விருப்பம் உள்ளோர், இந்த மையங்கள் வாயிலாக மாற்றிக் கொள்ளலாம். 

- நமது நிருபர் - 

நன்றி : தினமலர் நாளிதழ் - 05.10.2016


பழைய நிறுவனத்தின் மாற்றப்படாத பி.எஃப் கணக்கு!


 பழைய நிறுவனத்தின் மாற்றப்படாத பி.எஃப் கணக்கு!
என்ன செய்ய வேண்டும்?

மாத சம்பளம் வாங்கும் ஊழியரா நீங்கள், பல நிறுவனங்களில் பணி புரிந்தும் உங்கள் பிஎப் கணக்கை புதிய நிறுவனத்தின் பிஎப் கணக்குடன் இணைக்கவில்லையா?

அப்படியானால் அதுவும் நல்லது தான். 

நம்மில் பலர் பிஎப் கணக்கை மாற்றம் செய்து கொள்வது மற்றும் கணக்கில் உள்ள பணத்தை திரும்பப் பெறுவது பெறும் சிரமம் என்று நினைக்கின்றனர்.

நீங்கள் பிஎப் கணக்கை இன்னும் மாற்றவில்லை மற்றும் திரும்பப் பெறவில்லை என்றால் பின் வருவனவற்றைக் கண்டிப்பாக படியுங்கள். 

இங்கு நாம் பிஎப் கணக்கை எப்படி புதிய நிறுவனத்திடன் இணைப்பது? மற்றும் பிஎப் கணக்கில் உள்ள பணத்திற்கு எப்படி உரிமைகோருவது என்று இங்கு பார்ப்போம்.

செயலற்ற கணக்கு 

நீங்கள் மூன்று வருடத்திற்கு மேல் உங்கள் பிஎப் கணக்கை பயன்படுத்தாமல் இருந்தால் அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு வட்டி ஏதும் கிடைக்காது. 

கணக்கைச் செயல்படுத்தாமல் இருப்பது மற்றும் பணத்தை அதிக வட்டிக்காக எடுக்காமல் விடுவது போன்ற காரணங்களுக்காக இது போன்ற செயல்படாத கணக்குகளுக்கு வட்டி அளிப்பதை 2011 ஏப்ரல் 1 முதல் மத்திய அரசு நிறுத்திவிட்டது.  

இரட்டிப்பு லாபம் வீணாகிவிடும் 

ஒரு வேலை உங்கள் பிஎப் கணக்கில் 1 லட்சம் இருந்தால் 10 வருடம் வரை நீங்கள் எடுக்காமல் இருந்தால் 8.5 சதவீதம் வட்டி விகதத்திற்கு அப்படியே இரட்டிப்பாகி 2.26 லட்சம் வரை நீங்கள் பெற இயலும். 

அதுவே இது போன்று செயல்படாத கணக்கில் வைத்திருந்தால் உங்களால் லாபம் ஏதும் ஈட்ட இயலாது.

யுனிவர்சல் கணக்கு எண் 

நிறுவனம் மாறி வேலைக்குச் சேர்ந்தவுடன் உங்களிடம் பழைய நிறுவனத்தின் யுனிவர்சல் கணக்கு எண்(UAN) வைத்திருந்தால் உடனே அந்த எண்ணை உங்கள் புதிய நிறுவனத்தில் நீங்கள் அளிப்பதன் மூலம் அளிதாக உங்கள் பழைய பிஎப் கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ளலாம்

ஆன்லைன், ஆப்லைன் முறைகள் 

புதிய நிறுவனத்தில் வேளைக்குச் சேரும் போது ஆன்லைன், ஆப்லைன் என இருவழியாகவும் பிஎப் கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.

 ஆன்லைன் மூலம் மாற்ற உங்கள் பழைய நிறுவனம் பிஎப் அலுவலகத்தில் டிஜிட்டல் கையொப்பத்தைச் சமர்ப்பித்து இருத்தல் வேண்டும். 

ஆப்லைன் முறையில் மாற்றும் போது உங்களது புதிய நிறுவனம் பழைய நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு அதற்கான பணிகளைச் செய்யும்.

உரிமைகோரல்

 ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து இரண்டு மாதங்கள் நீங்கள் பணியை தொடராமல் இருந்தால் நீங்கள் படிவம் 19-ஐ பயன்படுத்தி பணத்திற்கான உரிமைகோரலாம். 

இதற்கான படிவத்திதை ஈபிஎப்ஓ(EPFO) இணையதளத்தில் இருந்து பதிறக்கி கொள்ளலாம்.

10 சதவீதம் டிடிஎஸ்

 நிறுவனத்தில் ஐந்து வருடம் தொடர்ந்து பணி புரியாமல் 50,000 ரூபாய்க்கு மேல் இருந்து பணத்திற்கான உரிமை கோரும் போது 10 சதவீதம் வரை டிடிஎஸ்(TDS) கட்டணம் செலுத்த வேண்டி வரும். அதுவே ஐந்து வருடத்திற்கு மேற்பட்டு நீங்கல் பணி புரிந்து இருந்தால் வரி செலுத்த தேவை இல்லை.

------------------------------------------------------------------------------------------------------------தமிழரசு

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் - 28.09.2016

Tuesday, October 4, 2016

உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா


உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா - என்ன செய்ய வேண்டும்?

ரகசிய காமிராவை  கண்டுபிடிப்பது எப்படி?
ஹோட்டல் அறை, உடை மாற்றும் அறைகளில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது ஆள் காட்டி விரலை வைக்க வேண்டும். இப்போது விரல் நுனிக்கும், கண்ணாடி பிம்பத்தில் தெரியும் பிம்ப ஆள்காட்டி விரல் நுனிக்கும் சிறிய இடைவெளி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடி. இல்லையேல், அது கண்ணாடிக்கு பின்னால் இருந்தும் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘இரு பக்க’ கண்ணாடியாகும். கண்ணாடிக்கு பின்னால் இருந்துகொண்டு அறையில் நடப்பதை பார்க்க முடியும்.

*

ஹோட்டல்களில் தங்கும் அறைக்குள் நுழைந்ததும் அனைத்து மின் விளக்குகளையும் அணைக்க வேண்டும். பின்னர், அறை முழுவதையும் செல்போனில் வீடியோ எடுக்க வேண்டும். தொடர்ந்து அதை ஓடவிட்டுப் பார்த்தால் எந்த இடத்திலாவது சிவப்பு அல்லது வெள்ளை நிற ஒளி வந்தால் அங்கு ரகசிய கேமரா இருக்கிறது என்று அர்த்தம்.

*

செல்போனில் யாரிடமாவது பேசியபடி அறை முழுவதும் மெதுவாக நடக்க வேண்டும். திடீரென இரைச்சல் சத்தம் கேட்டால், அருகே ரகசிய கேமரா போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் இருக்கிறது என்பது உறுதி.

*

விளக்குகளை அணைத்து விட்டு கண்ணாடி மீது டார்ச் அடித்துப் பார்த்தால், பின்னால் ஏதேனும் இருக்கிறதா என்பதை அறியலாம்.

பல வடிவங்களில்
ரகசிய கேமராக்கள் கதவு கைப்பிடி, கடிகாரம், சுவிட்ச், சுவிட்ச் போர்டு, பல வகை லைட் வடிவம், அலங்கார விளக்கு, பொம்மை, குளியல் அறை லைட், ஷவர், வாட்டர் ஹீட்டர், பூந்தொட்டி, திரைச் சீலை, வரவேற்பறை மாடல்கள், போர்டுகள் என எந்த வடிவங்களிலும் இருக்கலாம்.

உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை!

ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், வணிக வளாகங் கள் உட்பட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. இவை எல்லோருக்கும் தெரியும் வகையில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில் சிலர் உளவு பார்ப்பதற்காகவோ, வக்கிர எண்ணங்களுடனோ ரகசிய கேமராக்களை பொருத்தியி ருப்பார்கள். சில ஜவுளிக் கடைகளின் உடை மாற்றும் அறை, ஹோட்டல்களின் படுக்கை அறை, தங்கும் விடுதிகளின் குளியல் அறைகளில் ரகசிய கேமராக்கள் வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை நிரூபிக்கும் வகையில் சில மாதங்களுக்கு முன் கோவாவில் ஜவுளிக் கடை ஒன்றுக்கு சென்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அங்கு உடை மாற்றச் சென்றபோது அங்கு ரகசிய கேமரா இருந்ததை கண்டுபிடித்தார்.

இதேபோல் ரகசிய கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் இணைய தளங் களில் வைரலாக இன்னும் உல வுகின்றன. எனவே ஜவுளிக்கடை, தங்கும் விடுதி, ஹோட்டல் ஆகியவற்றுக்கு செல்பவர்கள் உஷாராக இருக்கும் படி சென்னை காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து, தியாகராய நகர் உதவி ஆணையர் ராதா கிருஷ்ணன் கூறும்போது, “சட்ட விரோதமாக ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டி ருந்தால் புகார் தெரிவிக்கலாம். உள் நோக்கத்தோடு ரகசிய கேமரா பொருத்தி வாடிக்கையாளர்கள், பணியாளர்களை படம் பிடித்தால் சம்பந்தப்பட்ட ஜவுளிக்கடை, தங்கும் விடுதி, ஹோட்டல்கள் ஆகியவற்றின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 05.10.2016

ஜீரோ எஃப்.ஐ.ஆர் என்றால் என்ன?


ஜீரோ எஃப்.ஐ.ஆர் என்றால் என்ன? - என்ன செய்ய வேண்டும்?

''ஜீரோ எஃப்ஐஆர் என்றால் என்னன்னு தெரியுமா?

பொதுவாக, ஒரு குற்றம் தொடர்பான புகார் குறித்து பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையான எஃப்ஐஆர் (FIR-First Information Record) ஆனது. சம்பவம் நடந்த ஏரியாவின் சட்ட எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தில்தான் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஆனால் பெண்களைப் பொருத்தவரை, ஆபத்து நேரங்களில் அவர்கள் எந்தக் காவல் நிலையத்திலும் FIR புகாரைப் பதிவு செய்யலாம்.
அது ஜீரோ எஃப்ஐஆர்(Zero FIR)ஆகப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் சம்பவம் நடந்த இடத்தின் அடிப்படையில் அது எந்தக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட வேண்டுமோ அங்கு மாற்றப்பட்டு, அந்தப் புகார் விசாரிக்கப்படும்.

பெண்களின் பாதுகாப்பு சட்டங்கள்


பெண்களின் பாதுகாப்பு சட்டங்கள் -  என்ன செய்ய வேண்டும்?

இந்தியப் பெண்களுக்குக் கைகொடுக்கும் கூரான சட்ட ஆயுதம், இந்த இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு - 354 ஆகும். வெளியிடத்தில் மட்டுமல்ல, வீட்டிலும்கூட ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் குறைக்கும் விதமான வார்த்தைகள் தாக்குதலோ அல்லது உடல் ரீதியான தாக்குதலோ நிகழ்த்தும் எவரின் மீதும், இந்தச் சட்டத்தின் கீழ் பெண்கள் புகார் அளிக்கலாம்.

குற்ற விசாரணைச் சட்டம், பிரிவு 164


Cr.P.C. section : 164 - என்ன செய்ய வேண்டும்?

குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் இருந்து ஒப்புதல் வாங்க முற்படுகின்ற போது நடுவரானவர், குற்ற விசாரணைச் சட்டம், பிரிவு 164ன்படி, குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் கீழ்கண்டவற்றை தெரிவிக்க வேண்டும்.
# தாங்கள் என்னிடத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க கட்டுப்பட்டவர் அல்ல.
# தாங்கள் கொடுக்கின்ற ஒப்புதல் வாக்குமூலமானது தங்களுக்கு எதிராக சாட்சியமாக பயன்படுத்தக்கூடியது.
மேலும், யாருடைய வற்புறுத்தலுமின்றி ஷை ஒப்புதல் வாக்குமூலமானது குற்றஞ்சாட்டப்பட்டவரால் தன்னிச்சையாகவே கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் மேற்கண்ட விஷயங்களை தன்முன்னால் குற்றஞ் சாட்டப்பட்டவருக்கு படித்துக் கட்டப்பட்டு அவரால் ஒத்துக் கொள்ளப்பட்டது என்பதையும் நடுவர் ஷை வாக்குமூலத்தின் அடியில் குறிப்பிட வேண்டும்.

Monday, October 3, 2016

முதல் சந்திப்பிலேயே பிறரை கவர்வதற்கு


முதல் சந்திப்பிலேயே பிறரை கவர்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

முதல்முறையா ஒருவரை சந்திக்கும்போதே இம்பரஸ் பண்ணுற மாதிரி நடந்துக்கணும்னு சொல்லுவாங்க. 

பெரும்பாலும்  'மூணு நிமிஷத்துல இருந்து 5 நிமிஷம் வரைதான் முதல்முறையா ஒருவர் கூட சந்திச்சு பேசும் சூழல் உருவாகும். 

அதுக்குள்ள எப்படிங்க இம்பரஸ்னு கேட்குறீங்களா? 

உங்களுக்கு ஹெல்ப் பண்ணதான் இந்த 5 பாயிண்ட்ஸ். படிங்க இம்பரஸ் பண்ணுங்க. 


5. மீட்டிங்க்கு ரெடி ஆகுங்க : 

ஆபிஸ் கான்பரன்ஸ், ப்ரெண்ட்ஸ் பார்ட்டி, இன்டர்வியூனு இப்படிப்பட்ட இடங்களில் தான் புதுபுது நபர்களை சந்திப்போம். 

முன்னாடியே இந்த நபரைதான் மீட் பண்ணப்போறீங்கன்னு தெரிந்தால், அவரை பத்தி சில பேசிக்கான விஷயங்களை தெரிஞ்சுட்டுப் போங்க. 

அவர் கூட என்ன பேசப்போறோம்னு மனசுக்குள்ளயே சின்னதாக டிரைலர் ஓட்டிப்பார்த்து கொஞ்சம் ரெடி ஆகுங்க.  

ஃபர்ஸ்ட் டைம் பேசும்போதே, அவரை பற்றி தெரிந்திருப்பதால், 'பரவாயில்லையே. நம்மளை பற்றி தெரிஞ்சு வைச்சு இருக்காறே'னு ஒரு சின்ன இம்பரஷன் கிடைக்கும். 

'அட, என் நண்பரோட, நண்பரைதான் பார்க்கப் போறேன். இதுக்கு எல்லாம் எதுக்கு ரெடி ஆகணும்னு நினைக்காதீங்க.  

யாருன்னே தெரியாது... அப்பதான் திடீர்னு ஒருவரை மீட் பண்ணுறீங்கன்னா... உங்களை பற்றி சுருக்கமா செல்ப் இன்ட்ரோ கொடுத்து, அவரை பத்தியும் கேட்டு தெரிஞ்சுக்கோங்க. 

4. உடையில் கவனம் : 

உங்க அறிவு, திறமை எல்லாம் உங்களை சந்திக்க வந்த நபருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. 

உங்களது உடையின் மீதும், முகத்தின் மீதும்தான் அவரது கவனம் இருக்கும். அதனால், உடையில் எப்போதும் கவனம் செலுத்துங்கள். 

சாதாரண டி-ஷர்ட் அணிந்தால் கூட அதில் ஒரு டீசன்ட் லுக் இருக்கணும் என்பதை மறக்காதீங்க. 

முகத்தை கொஞ்சம் ப்ரெஷாக வைச்சுக்கோங்க. அதுக்குனு மாடல் மாதிரி இருக்கணும்னு அவசியம் கிடையாது. 

ஜென் Z பசங்க போல, தலை முடியை கலைத்து சீவினாலும்... அதையும் ஸ்டைலா வைச்சுக்கோங்க. 

பிஞ்சு போன செப்பலையே தொடந்து பயன்படுத்துறது, பாலிஸ் பண்னாத ஷூ-வை போடுவதை எல்லாம் தவிர்த்துடுங்க. 

உங்க உடலும், உடையும் தான் முதல் இம்பரஷன். ஆபிஸ், பார்ட்டினு அதுக்கு தகுந்த மாதிரி டிரஸ் பண்ணுங்க. இம்பரஸ் செய்யுங்க. இதில்தான் நீங்க யார்னு தெரிஞ்சுப்பாங்க. 

3. பாடிலேங்குவேஜ் : 

உடல்மொழிக்கு நீங்க பேசுற மொழியை விட வலிமை அதிகம். முதலில் சந்திச்சதும், ஜென்டிலா ஸ்மைல் பண்ணி கான்பிடென்டா கைகொடுத்து வெல்கம் பண்ணுங்க. 

நீங்க பெண்ணாக இருந்தால், நீங்கதான் முதல்ல கையை நீட்டணும். 

'நாம கை நீட்டி அவங்க கொடுக்காம போய்ட்டா, என்ன பண்ணுறது?'னு சில ஆண்களிடம் சின்ன தயக்கம் உண்டு. 

இல்லைன்னா, சிம்பிளா 'வணக்கம்' சொல்லுங்க. 

அடுத்து அவங்க பேசும்போது அவங்க கண்ணை பார்த்து கவனமா கேளுங்க. இதுதான் அவங்க பேசுறதுக்கு நீங்க எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறீங்கனு புரிய வைக்கும். 

ஸ்டைலா சுவத்துல சாஞ்சுட்டோ, போனை நோண்டிட்டோ, நகத்தை கடிச்சுட்டோ, தலைமுடி கூட விளையாட்டிட்டோ பேசுறதையோ தவிர்த்துடுங்க. 

சிலர், அவரை விட பெரிய நபரை சந்தித்தால் எதுக்குனே தெரியாம பதட்டபட ஆரம்பிச்சுடுவாங்க. பதட்டப்படாதீங்க.

 'என்ன பண்ணாலும் பதட்டப்படாம இருக்க முடியலை'னு சொன்னால், வடிவேலு மாதிரி பதட்டதையும், பயத்தையும் முகத்துக்கு கொண்டு வராமல் பேஸ்மென்ட்லயே வைச்சுக்கோங்க. ஸ்மைலிங் ஃபேஸோட பேசுங்க. 

2. கண்ணியமா பேசுங்க :

முதல்முறையா பேசும்போது திக்கி திணறி பேசாமல், நிறுத்தி தெளிவா பேசுங்க. குரலை அதிகம் உயர்த்தியோ, 'நான் யார் தெரியுமா?' என்ற தோரணையில் பேசாதீங்க. 

அதுபோல, உங்க சாதனை பட்டியலை அந்த 5 நிமிஷத்துல சொல்லி முடிச்சடணும்னு நினைச்சு படபடவென அடுக்காதீங்க. 

நீங்க குறைவா பேசுங்க. அவரை அதிகம் பேச விடுங்க. 

உங்களை பத்திதான் உங்களுக்கு தெரியுமே. அவரை பத்திதானே நாம தெரிஞ்சுக்கணும் என்ற மனநிலையில் இருங்க. 

உங்க சொந்த கதைகளை எல்லாம் ஃபர்ஸ்ட் மீட்லேயே சொல்லாதீங்க.

1. 'மகிழ்ச்சி'னு சொல்லுங்க : 

உங்களுக்கு அவர் போன் நம்பர் தேவைப்பட்டால், பேசி முடிச்சதும் நம்பர் கேளுங்க. 

உங்க விசிட்டிங் கார்டு, இ-மெயில் ஐடி கொடுங்க.

 நடுவுல ஏதாவது சொல்லிட்டு இருக்கும்போதே 'உங்க நம்பர் கொடுங்களேன்'னு கேட்காதீங்க. 

அவர் முதல்முறை நம்பர் சொல்லும்போதே கவனமா நோட் பண்ணிக்கோங்க. 

திரும்ப திரும்ப நம்பரை சொல்ல வைக்காதீங்க. 

இதுல நீங்க எவ்வளவு கவனமான ஆளுனு புரிஞ்சுப்பாங்க. 

உங்க நம்பரை சேவ் பண்ணுறதுக்கு அவர்கிட்ட மிஸ்டு கால் விடுவதற்கு பதிலா, 'உங்களை சந்திச்சதில் மகிழ்ச்சி'னு உங்க பேரு போட்டு ஒரு எஸ்.எம்.எஸ் தட்டிவிடுங்க. 

அவர் உங்க நம்பரை சேவ் பண்ண மறந்தாலும், நீங்க அனுப்பின மெசேஜை வைச்சு மீண்டும் உங்களை தொடர்பு கொள்ள வசதியா இருக்கும். 

மீட்டிங் முடிந்ததும் கை கொடுத்து விடைபெறுங்க. 'தாங்க் யூ... மகிழ்ச்சி'னு ரஜினி ஸ்டைலில் சொல்லுங்க. 

இனி என்னங்க 'First impression is the best impression'னு கெத்து காட்டுங்க

நன்றி : விகடன் செய்திகள் - (20/09/2016)

ஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார்


ஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?

நீங்கள், ஒரு நுகர்வோர் எனில் ஒரு பிராண்ட்- இன் தயாரிப்புப் பொருட்கள், அல்லது சேவையின் தரம் பற்றி உங்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், நீங்கள் ஒரு நுகர்வோர் புகார் தாக்கல் செய்து அதைச் சரி செய்ய முடியும். 

ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைப் பொறுத்து ஒரு நுகர்வோர் பல்வேறு வகையான புகார்களைத் தாக்கல் செய்ய இயலும். 

ஒரு நுகர்வோருக்குப் பிரச்சனைகள் இருந்தால், அவர் அந்தப் பிரச்சனை சம்பந்தப்பட்ட தேவையான ஆவணங்களுடன் ஒரு நுகர்வோர் நீதிமன்றம் சென்று அவருடைய பிரச்சனைகளைப் பதிவு செய்யலாம். 

இது தான் தற்பொழுது இருக்கும் நடைமுறை. 

இதற்கு மாற்றாக, நுகர்வோராகிய நீங்கள் ஒரு நுகர்வோர் புகாரை இணைய மூலமும் பதிவிட இயலும்.

 இணைய மூலம் உங்களுடைய பிரச்சனைகளைப் பதிவிடப் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வலைத்தளம் அரசாங்கம், நுகர்வோர் ஆன்லைன் ஆதார மற்றும் அதிகாரமளித்தல் மையம் (http://consumerhelpline.gov.in/) என அழைக்கப்படும் ஒரு வலைத்தளத்தை நடத்தி வருகின்றது. 

இது ஒரு நுகர்வோர் புகார் மற்றும் குறைகளை நிவர்த்திச் செய்யும் மையம் ஆகும். இது நுகர்வோர் ஒருங்கிணைப்புக் கவுன்சிலால் நடத்தப்படுகின்றது. இதற்கு இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை ஆதரவு வழங்குகின்றது.   

பதிவு புகார் கொடுக்க விரும்பும் நுகர்வோர், முதலில் இந்தத் தளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அந்த வலைத்தளத்தில் உள்ள ஆன்லைன் பதிவு படிவத்தில் நுகர்வோரின் பெயர், மின்னஞ்சல், முகவரி மற்றும் தொலைப்பேசி எண் போன்ற விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும். 

அதன் பிறகு அவருக்கு உரியப் பயனாளர் ஐடி மற்றும் கடவுச்சொல் உருவாக்கப்படும். புகார் பதிவு ஒரு நுகர்வோர், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு பிராண்ட் அல்லது சேவைக்கும் எதிராகப் புகார் தெரிவிக்க இயலும். ஆன்லைன் புகார் அமைப்பு வலைத்தளத்தில் பல்வேறு துறைகள், பிராண்டுகள், மற்றும் சேவைகளை உள்ளடக்கிய ஒரு மெனு உள்ளது. 

அதைப் பயன்படுத்தி ஒரு நுகர்வோர் தன்னுடைய புகாரைப் பதிவு செய்யலாம். செயல்முறை புகாரின் தன்மை, அந்தப் புகாருடன் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் மற்றும் அதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் ஆகியவற்றை அந்தத் தளத்தில் பதிவேற்ற வேண்டும். 

புகாரின் விளைவுகள் மற்றும் நுகர்வோர் கோரும் நிவாரணம் போன்றவற்றையும் அந்தத் தளத்திலேயே பதிவிடலாம். 

புகாரின் தற்பொழுது நிலைமை புகார் சமர்ப்பிக்கப்பட்ட பின் அந்தப் புகாருக்கு உரிய எண் மின்னணு முறையில் உருவாக்கப்பட்டு அந்தப் புகாருக்கு ஒதுக்கப்படும். 

அந்தப் புகார் தீர்க்கப்படும் வரை, புகாருக்கு உரிய எண்ணைப் பயன்படுத்தி அந்தப் புகாரின் நிலையைக் கண்காணிக்க இயலும்.      

Written by: திரு Batri Krishnan

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » 03.10.2016