disalbe Right click

Thursday, December 22, 2016

நடைபாதை பக்தர்களுக்கு ஆதார் எண் கட்டாயம்!


நடைபாதை பக்தர்களுக்கு ஆதார் எண் கட்டாயம்!
திருமலைக்கு வரும் நடைபாதை பக்தர்களுக்கு ஆதார் எண்ணை தேவஸ்தானம் கட்டாயமாக்கி உள்ளது.
திருமலையில் தரிசன டிக்கெட், வாடகை அறை முன்பதிவு செய்ய தேவஸ்தானம் ஆதார் எண்ணை கட்டாயமாக்கியது. 

அதேபோல் தற்போது லட்டு டிக்கெட் முறைகேட்டை தடுக்க நடைபாதை பக்தர்களுக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கி உள்ளது.

அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை மார்க்கத்தில் வரும் பக்தர்கள், தரிசன டோக்கன்களை பெறும்போது அவர்களின் பெருவிரல் ரேகை பதிவுடன் ஆதார் எண்ணை பதிவு செய்யும் புதியமுறை வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. 

எனவே, நடைபாதை பக்தர்கள் கட்டாயம், தங்களுடன் ஆதார் அட்டை அல்லது வேறு ஏதாவது ஒரு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

நன்றி : தினமணி நாளிதழ் – 22.12.2016

இறந்தவரின் கையை அடுத்தவருக்கு பொருத்தலாம்!


இறந்தவரின் கையை அடுத்தவருக்கு பொருத்தலாம்!

கை இல்லாமல் பிறந்த நபருக்கு, இறந்த நபரின் கையைப் பொருத்தி போலந்து நாட்டு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இதுபோன்ற அறுவைச் சிகிச்சை நடைபெறுவது உலகில் இதுவே முதல் முறையாகும். போலந்தின் விராத்சாஃப் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள் குழுவின் தலைவர் ஆடம் டோமினோவிச் இது தொடர்பாகக் கூறியது:

32 வயது வரை மணிக்கட்டுக்கு கீழ் கை இல்லாமல் வாழ்ந்த வந்த ஒருவருக்கு, இறந்த நபரின் கை, அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி 13 மணி நேரம் நடைபெற்றது. இப்போது அந்த நபர் தனது விரல்களை அசைக்க முடிகிறது.

அவர் விரைவில் தனது கையை முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கி விடுவார்.
இதற்கு முன்பு கனடா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு, பிறந்தவுடன் இதுபோன்ற அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றார்.

கை, கால் போன்ற உறுப்புகள் முழுமையாக இல்லாமல் இருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு இந்த அறுவைச் சிகிச்சை மூலம் புதிய வாழ்வு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றி : தினமணி நாளிதழ் – 23.12.2016

நோய்களை தீர்க்கும் எனிமா!


நோய்களை தீர்க்கும் எனிமா!

நாள்பட்ட நோய்களின் தீவிரத்தை பெருமளவில் குறைத்து, பலருக்கு முழு நிவாரணமும் தரவல்ல இயற்கை மருத்துவ முறை. பல நோய்களையும் நமது உடல்தான் தீர்க்க வேண்டும் என்பது இயற்கை மருத்துவத்தின் முடிந்த முடிவு. 

அவ்வாறு உடல் செயல்படுவதற்கு நம் குடலைச் சுத்தம் செய்து கொள்வது இன்றியமையாதது. 'குடலைக் கழுவி உடலை வளர்'. நமக்கு வரும் பல்வேறு நோய்களில் பல மலச் சிக்கலை அடிப்படையாக வைத்தே வருகின்றன என்னும் கருத்து உண்டு.  அது உண்மையும் கூட. 

அதனால் காலாகாலத்தில் வெளியேற வேண்டிய கழிவுகள் உடலுக்குள் தங்கும் நேரம் அதிகமாவதால் உடம்பிலும் ரத்தத்திலும் தேவையற்ற கழிவுகள் கலந்து நோய்களாக மாற்றமடைகின்றன. அதனால் பெரும்பாலோருக்கு முதலில் வருவது பைல்ஸ் மூலநோய் ஆகும். 

அந்த நோய்க்கு முன்னதாகப் பலகாலமும் அதற்குச் சிகிச்சை செய்துகொண்டே பலகாலமும் துன்பப்படுபவர்கள் ஏராளம். எனவே எந்தக் காரணத்தைமுன்னிட்டும் மலச்ச சிக்கலுக்கு இடம்கொடுக்கவே கூடாது. ஆனால் அதனால் அனேகம் பேர் சிரமப்படுவதைப் பார்க்கலாம்.  நமது நண்பர்களும்கூட இருக்ககூடும்! 

மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் இருப்பவர்கள் உடனடியாகச் சிரமத்தைக் குறைத்துக்கொள்ள எளிய முறை உள்ளது. அது இயற்கையான முறை. அதுதான் இயற்கை எனிமா! இதை அஹிம்சை எனிமா என்றும் சொல்வார்கள்!

உடலுக்கு ஒத்துவராத உணவு உண்ணும் நாட்களிலோ மற்ற நாட்களிலோ காலையில் அல்லது இரவு சுத்தமான தண்ணீரைமட்டும் பயன்படுத்தி நாமே வயிற்றைச் சுத்தம் செய்துகொள்ளலாம். அதற்கு இது சிறந்த உபகரணமாகப் பயன்படுகிறது. 

இயற்கை மருத்துவத்தில் முக்கியமாகப் பயன்படுத்தப்படுவது இந்த இயற்கை எனிமா. 

எந்த நோயானாலும் உணவை நிறுத்தி எனிமா எடுத்துக் கொள்ள வேண்டும்.  

வயிறு காலியானாலே நோயின் தீவிரம் குறையும்.  சுத்தமான குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரை எனிமா கேனில் நிரப்பி செருகி (nozzle) மூலம் ஆசனவாயில் நுழைத்து சிறிது முன் சாய்ந்தோ அல்லது குனிந்தோ நிற்பதின் மூலமாகவோ அல்லது பக்கவாட்டில் படுத்திருப்பதின் மூலமாகவோ, கேனில் நிரம்பிய நீர் மலக்குடலில் செல்லும். சிறிது நேரம் நீரை மலக்குடலுக்குள் நிறுத்தி (ஓரிரு நிமிடங்கள் கழித்து) பின்னர் வெளியேற்றினால் மலம் நீருடன் சேர்ந்து பீய்ச்சிக் கொண்டு வெளி வரும்.

வயிற்றில் கிருமிகள் இருப்பின், வேப்பிலையை வேகவைத்து ஆறவைத்த நீர் (அ) ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் நீர் கலந்தும் எனிமா கேனின் உதவியுடன் மேற்குறிப்பிட்ட முறையில் உள்ளே ஏற்றி வெளியேற்றலாம். இந்த முறையால் மலச்சிக்கல், வயிற்றுச் சூடு, வயிற்று வலி, பேதிகள், உணவு சீரணம் ஆகாமை ஆகியவற்றிற்கு எனிமாவே கைகண்ட மருந்து என்கிறார். 

கடுமையான வயிற்றுப் போக்கு இருக்கும் போது எனிமா கொடுப்பதின் மூலம், பல தடவை பேதியாவதை தடுப்பதோடு, உடலின் சுரப்பு நீர்கள் வெளியேறுவதையும் தடுக்க இயலும்

எனிமா சிகிச்சை என்பது ரிஷிகளால் பண்டைய காலம் தொட்டே கண்டுபிடிக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்ட ஒரு முறையாகும். அஷ்டாங்க யோகத்தில், க்ரியாக்கள் என்று சொல்வார்கள். பலவகையில் உடலை சுத்தப்படுத்தும் முறைகளை ஷத்க்ரியாக்கள் என்று கூறுவார்கள். அதில் ஒன்று பஸ்திக்ரியா என்பது பஸ்திக்ரியாவின் நவீனப்படுத்தப்பட்ட முறையே எனிமா கேன் ஆகும்.

ச.பாலகிருஷ்ணன் கோயம்பத்தூர் 

நன்றி : தினமணி நாளிதழ் – 21.12.2016


கல்லூரி மாணவ மாணவியருக்கு ஸ்காலர்ஷிப்


கல்லூரி மாணவ மாணவியருக்கு ஸ்காலர்ஷிப்

கோவை: மத்திய அரசின்,’பிரகதி’ மற்றும் ’சாக் ஷாம்’ திட்டத்தில், பாலிடெக்னிக், இன்ஜி., கல்லுாரி மாணவியர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை அறிவிப்பை, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) வெளியிட்டுள்ளது.

’பிரகதி’ திட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முதலாமாண்டில் சேர்க்கை பெற்றுள்ள மாணவியர் விண்ணப்பிக்கலாம். ஒற்றை பெண் குழந்தையாகவும், பெற்றோரின் ஆண்டு வருமானம், ஆறு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் உதவித்தொகை பெறுவதற்கு தகுதியாக கருதப்படும்.

’சாக்ஷாம்’ திட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவராக இருப்பதுடன், அவரது குடும்ப ஆண்டு வருமானம் ஆறு லட்சத்துக்கு மிகாமலும் இருக்கவேண்டியது அவசியம். தகுதியுள்ள மாணவர்கள், ’ஆன்-லைன்’ மூலம், 2017, ஜன., 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், விபரங்களுக்கு www.aicte-india.org என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.

நன்றி : தினமலர் (கல்விமலர்) – 22.12.2016





Tuesday, December 20, 2016

குடும்ப அட்டை - இணைய தளம்


குடும்ப அட்டை சம்பந்தமான இணைய தளம்

தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் குறிக்கோள், எல்லா குடிமக்களுக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு உணவு வழங்குதல் ஆகும். பொது விநியோக திட்டம், அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் ஒவ்வொரு மாதமும் நியாய விலைக் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு வழங்குகிறது.

நீங்கள் இத்துறையின் இணையதளமான 

https://www.tnpds.com   க்குச் சென்றால், 

ஆன்லைன் மூலமாகவே

1) புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

2) புதிய குடும்ப அட்டை விண்ணப்ப நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.

3)  ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தாலுகாவிற்கும் வழங்கப்பட்டுள்ள உணவுப் பொருள்களின் இருப்பை அறிந்து கொள்ளலாம்.

4) ஒவ்வொரு மாவட்டத்திலும், தாலுகாவிலும் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ளலாம்.

5) புகார் செய்யலாம்.



ஆண்ராய்ட் போனில் தமிழில் டைப் செய்ய


ஆண்ராய்ட் போனில் தமிழில் டைப் செய்ய என்ன செய்ய வேண்டும்?

ஆண்ராய்ட் மொபைலில் தமிழ் டைப் அடிக்க கஷ்ட படுபவர்கள், 
google handwriting input எனும் App பதிவிறக்கும் செய்து, தமிழில் நேரடியாக கையால் ஸ்கிரினில் எழுதினால், எழுதும் சொற்கள் தானாகவே தமிழ் எழுத்துக்களாக ஏற்றுக்கொள்ளப்படும்.

இவ்வாறு ஆங்கிலத்திலும் கைப்பட எழுதுவது, எழுதும் ஆங்கில எழுத்துக்கள் உள்வாங்கப்படும். 

(குறிப்பு - தனித்தனியாக ஒவ்வொரு எழுத்துக்களையும் எழுத வேண்டும். Running Handwriting தவறுகளை ஏற்படுத்தும்)
*********************************************************************************
மேலும் செல்லினம் மற்றும் எழுத்தாணி எனும் மென்பொருள்களும் உள்ளது. அதனையும் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
*********************************************************************************

மொபைலில் நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய சில வார்த்தைகளின் விரிவாக்கம்.

CDMA - Code Division Multiple Access

E MAIL - ELECTRONIC MAIL

EDGE - Enhanced Data Rates for GSM Evolution

GPS - Global Positioning System

GSM - Global System for Mobile Communications

GPRS - General Packet Radio Service

IMEI – International Mobile Equipment Identity

LED - Light Emitting Diode

LCD - liquid crystal display

MMS - Multimedia Messaging Service

OS - Operating system

RAM - random access memory

ROM - read only memory

SIM - Subscriber Identity Module

SMS - Short Message Service

USB -universal serial bus

நன்றி : வழக்கறிஞர் திரு லீனஸ் லியோ எட்வர்ட்ஸ் அவர்கள்

Sunday, December 18, 2016

மைக்ரோ ஏ.டி.எம்


மைக்ரோ ஏ.டி.எம். - என்ன செய்ய வேண்டும்?
பணப் பரிமாற்றத்தை எளிதாக்கும் மைக்ரோ ஏடிஎம்!
நம் பணம் சார்ந்த வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது ஏடிஎம். எனினும், இன்று அனைவரிடமும் நிலவும் பணப் பற்றாக்குறை பிரச்னையில் மைக்ரோ ஏடிஎம்கள் அதைவிட அதிகப் பலனை அளித்து வருகிறது. 

மைக்ரோ ஏடிஎம்!
ஏடிஎம்-ன் மினி பதிப்பே மைக்ரோ ஏடிஎம். மைக்ரோ ஏடிஎம் என்பது சிறிய பிஓஎஸ் வகை மெஷின். மைக்ரோ ஏடிஎம்களில் வாடிக்கை யாளர்கள் டெபாசிட் செய்வது, பணம் பெறுவது மற்றும் பணம் அனுப்புவது போன்றவற்றைச் செய்ய முடியும். 

மைக்ரோ ஏடிஎம், ஜிபிஆர்ஸ் வழியாக வங்கிகளுடன் இணைக்கப்பட்டு, வங்கிப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.

இந்த மைக்ரோ ஏடிஎம்-ல் கைரேகை ஸ்கேனர், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் வசதி உள்ளது. இந்த மெஷின்களை வங்கிப் பிரதிநிதிகளால் பல்வேறு இடங்களுக்கு எளிதில் எடுத்துச் செல்ல இயலும். 

இந்த மைக்ரோ ஏடிஎம் மெஷின்கள் உள்ளே பணம் எதுவும் வைத்திருக்கமாட்டார்கள். மைக்ரோ ஏடிஎம்-ல் டெபிட் கார்டு தேய்க்கப்பட்டு, வங்கிக் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும். 

இதற்குரிய பணத்தை வங்கிப் பிரதிநிதிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள். மைக்ரோ ஏடிஎம் மெஷின்கள் வழியாக வாடிக்கை யாளர்களின் பணம் அல்லது சேவையைப் பெற்று, அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் பதிவுசெய்வது வங்கிப் பிரதிநிதிகளின் பொறுப்பு.

மைக்ரோ ஏடிஎம்-ல் என்னென்ன செய்ய முடியும்?
* பணம் டெபாசிட் செய்தல்
*பணம் எடுத்தல்
* பணம் அனுப்புதல்
 * பணம் கையிருப்பு விசாரணை
 * சேவை கோரிக்கை ஏற்பு   (Service Request Acceptance)
* வங்கிக் கணக்கை ஆதார் எண்ணுடன் இணைப்பது
* இ-கேஒய்சி சார்ந்த சேமிப்புக் கணக்கு துவக்கம்

மைக்ரோ ஏடிஎம் எப்படி இயங்குகிறது?
* சாதாரண ஏடிஎம் மெஷின்களைப் போலவே மைக்ரோ ஏடிஎம் மெஷின்களும் இயங்குகின்றன. 

* முதலில், நீங்கள் சரிபார்ப்புப் பணியை (Verification process) மேற்கொள்ள வேண்டும். சரிபார்ப்பு செயல்பாட்டில், ஆதார் அட்டையுடன்  கைரேகை ஸ்கேனிங் அல்லது உங்களுடைய டெபிட் / கிரெடிட் கார்டு வாயிலாகச் சரிபார்ப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

* சரிபார்ப்பு முடிந்தவுடன் மைக்ரோ ஏடிஎம் பல்வேறு பரிவர்த்தனைகளுக்கான விருப்பத்தைக் காண்பிக்கும்.

* உங்களுக்குத் தேவையான விருப்பத்தைத் தேர்வு செய்த பின்னர், மைக்ரோ ஏடிஎம் மெஷினில் அதற்கான பரிவர்த்தனை நடக்கும். 

* பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்தபின், மைக்ரோ ஏடிஎம் மெஷினில் அதற்குண்டான தகவல் திரையில் காட்டப்படும். அதன்பின் பற்றுச் சீட்டு (Print Receipt) வாடிக்கை யாளர்களுக்கு வழங்கப்படும்.

* இறுதியில் உங்களுடைய பரிவர்த்தனை பற்றி உங்கள் வங்கியில் இருந்து ஒரு எஸ்எம்எஸ் தகவல், பதிவு செய்யப்பட்ட உங்களுடைய மொபைல் போனுக்குக் கிடைக்கப்பெறும்.

* மைக்ரோ ஏடிஎம் மூலம் அனைத்து வங்கி களுக்கும் பரிவர்த்தனை வசதி அளிக்கப்படுகிறது. எனினும், உங்கள் வங்கிக் கணக்கில், உங்கள்  ஆதார் எண்ணை இணைத்து இருந்தால் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். 

நன்மைகள் என்ன?
* மைக்ரோ ஏடிஎம் மூலம் எந்த இடத்திலும் வங்கிச் சேவைகளைப் பெறலாம்.

* தற்போதைய ஏடிஎம் மெஷின்களைவிட இதற்கான செலவு மிகவும் குறைவு.

*  மைக்ரோ ஏடிஎம் ஒரு சிறிய சாதனம் என்பதால், எளிதில் கையாளலாம். எங்கு வேண்டு மானாலும் எடுத்துச் செல்லலாம்.

* பயோமெட்ரிக் வசதி இதில் உள்ளதால், படிக்காதவர்கள்கூட இதன் மூலம் பாதுகாப்பான முறையில் பணப் பரிமாற்றம் செய்ய முடியும். 

* மைக்ரோ ஏடிஎம் மெஷினில் எல்லா வங்கி டெபிட் கார்டுகளையும் பயன்படுத்தலாம்.

* பணத் தட்டுப்பாடு நிலவிய சமயங்களில் இந்த மைக்ரோ ஏடிஎம்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. 

2 லட்சம் மைக்ரோ ஏடிஎம்கள்!
மத்திய அரசு, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மைக்ரோ ஏடிஎம்களை அமைக்க வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளது. இதில் 90,000 ஏடிஎம்கள் நகர்ப்புறங்களிலும் 1.1 லட்சம் ஏடிஎம்கள் கிராமப் பகுதிகளிலும் அமைக்கப்பட உள்ளன.

இனி நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் மைக்ரோ ஏடிஎம் மூலம் யார் வேண்டுமானாலும் எளிதில் பணப் பரிமாற்றம் செய்ய முடியும்!

நன்றி : நாணயம்விகடன் – 11.12.2016


Saturday, December 17, 2016

நாமினிகள் வாரிசாக முடியாது


நாமினிகள் வாரிசாக முடியாது - என்ன செய்ய வேண்டும்?
சட்ட வல்லுநர் கருத்து
ஸ்ரீராம் சிட்பண்ட் நிறுவனத்தில் 1991-ல் ஜெயலலிதா ரூ.7 லட்சம் டெபாசிட் செய்தார். அதற்கான வாரிசுதாரராக சசிகலாவின் பெயரை குறிப்பிட்டுள்ளார். சசி கலாவே தம்முடைய வாரிசு என அன்றே ஜெயலலிதா அறிவித்து விட்டதற்கான ஆவணம்தான் இது என்கிறார் அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன். 

ஆனால், வங்கிகள், நிதி நிறுவனங் களில் நிதி சேமிப்பு வாரிசாக குறிப்பிட்டதால் மட்டுமே ஒருவர் சட்டப்படியான வாரிசாக உரிமை கோர முடியாது என சட்டவல்லு நர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது: 

வங்கிகள், நிதி நிறுவனங்களில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு யாரை வேண்டுமானாலும் வாரிசு தாரர்களாகக் குறிப்பிட முடியும். இப்படி வாரிசுதாரர்களாக குறிப் பிடப்படும் நபர்களுக்கு, டெபாசிட் செய்யப்பட்ட தொகையை திரும்ப எடுப்பதற்கு மட்டுமே உரிமை உள் ளது. 

ஆனால், அந்தத் தொகையை (சட்டப்படியான வாரிசுதாரராக இல்லாத பட்சத்தில்) அவர் அனுபவிக்க முடியாது. அதற்கான உரிமை அவரது சட்டப்படியான வாரிசுதாரர் களுக்கு மட்டுமே உண்டு.

டெல்லியைச் சேர்ந்த கண்டா ராம் தல்வார் என்பவர் தனது மகன் ராம்சந்தர் தல்வாரை வாரிசுதாரராக குறிப்பிட்டு வங்கியில் பணம் டெபாசிட் செய்திருந்தார். கண்டா ராம் இறந்த பிறகு அந்தத் தொகை முழுவதும் தனக்கே சொந்தம் என உரிமை கோரினார் ராம்சந்தர். 

இதை எதிர்த்து கண்டாராமின் இன்னொரு மகனான தேவேந்திரகுமார் தல்வார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் ’45 இசட், ஏ’ என்பது வங்கிகளை திறம்பட செயல்பட வைப்பதற்கான சட்டம் மட்டுமே. இதன் பிரகாரம், வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வாரிசுதாரராக குறிப் பிடப்படும் நபரானவர் அந்தத் தொகையை சட்டப்பூர்வமாக பெற்றுக் கொள்வதற்கு முழு உரிமை பெற்றவர். என்றாலும் பணத்தை டெபாசிட் செய்தவர் இறந்துவிட்டால் அவரால் டெபாசிட் செய்யப்பட்ட தொகையானது அவரது குடும்ப சொத்தாகிவிடுகிறது. 

அதை அவரது சட்டப்படியான வாரிசுதாரர் மட்டுமே பங்கிட்டுக்கொள்ளவோ அனுபவிக்கவோ உரிமை உள்ளது. எனவே அந்தத் தொகையை வாரிசு உரிமை சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படித்தான் பயன்படுத்த முடியும் என்று தீர்ப்பளித்தது.

தீர்ப்பின் சாரம் பொருந்தும்
மேல்முறையீட்டில் உச்ச நீதி மன்றமும் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை 6.10.2010-ல் உறுதி செய்தது. ஜெயலலிதா ஸ்ரீராம் சிட்பண்டில் முதலீடு செய் திருக்கும் தொகைக்கும் இந்தத் தீர்ப்பின் சாரம் பொருந்தும். அவ ரால் வாரிசுதாரராகக் குறிப்பிடப் பட்டுள்ள சசிகலா அந்தத் தொகையை சிட்பண்டில் இருந்து எடுக்க சட்டப்படியான உரிமை கொண்டவர்தான். 

ஆனால், அதை அவர் அனுபவிக்க முடியாது. அந்தத் தொகையை அவரிடம் கொடுக்க வேண்டாம் என ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசுகள் ஆட்சேபனை தெரிவிக்கலாம்.

நிதி நிறுவனத்துக்கு இதில் முடிவெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டால் தல்வார் குடும்பத்தைப் போல நீதிமன்றத்தின் உதவியை நாடலாம். 

எனவே, வங்கி டெபாசிட்டில் வாரிசுதாரராக காட்டப்பட்டிருக்கிறார் என்பதால் மட்டுமே யாரும் ஒருவரின் சட்டப்படியான வாரிசுதாரராக முடியாது. இவ்வாறு அந்த வழக்கறிஞர் தெரிவித்தார்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 17.12.2016

Monday, December 12, 2016

மாதவிடாய் கோளாறுகள்


மாதவிடாய் கோளாறுகள் நீங்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய்க் கோளாறு நீக்கும் நத்தைச் சூரி!  – நாட்டு வைத்தியம்
புல் – பூண்டு, செடி, கொடி, மரம் என இயற்கையின் கொடைகள் அனைத்துமே மனித இனத்துக்கு ஏதோ ஒருவகையில் பயன்படக்கூடியவையே. வெறுமனே பயன்படக்கூடியவை என்று சொல்வதைவிட இவற்றில் பல, நோய் தீர்க்கும் குணம் கொண்டவையாக உள்ளன. இதனால்தான் சித்தர்கள் இவற்றை மூலிகைகளாகக் கொண்டு பலவிதமான நோய்களைக் குணப்படுத்தி இருக்கின்றனர்.  அந்த வகையில் நாம் இங்கே நத்தைச் சூரி என்ற ஒரு மூலிகையைப் பார்ப்போம்.

நத்தைச் சூரி என்றதும் சிலர் ஏதோ ஒரு உயிரினத்தின் பெயர் என்று நினைப்பார்கள். இது அரிய வகை மூலிகைளில் ஒன்றாகும். இந்த மூலிகை பல்வேறு நோய்களைக் குணமாக்கப் பயன்பட்டதால், சித்தர்கள் இதை மகாமூலிகை என்று அழைத்தனர். நத்தைச் சூரிக்கு குழி மீட்டான், தாருணி, கடுகம், நத்தைச்சுண்டி, தொலியாகரம்பை என பல பெயர்கள் உண்டு. 
இது, பூண்டு வகையைச் சேர்ந்த தாவரமாகும். இதன் விதை, வேர் ஆகியவை மருத்துவக் குணம் கொண்டவை. 

நத்தைச் சூரியின் விதையை, லேசாக வறுத்துப் பொடியாக்கி, ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பாலில் கொதிக்கவைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து, காலை, மாலை அருந்தி வந்தால், உடல் சூடு தணிவதுடன், உடலில் உள்ள தேவையற்ற, வேதிப் பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகக் கல்லடைப்பை தடுக்கும். மேலும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.  

நத்தைச் சூரியின் விதையைப் பொடித்து, தினமும் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டால், சீதபேதி மற்றும் வயிற்றோட்டம் சரியாகும்.

நத்தைச் சூரியின் விதைகளை, சட்டியில் போட்டு, பொன் வறுவலாக வறுத்து, பொடித்து, நீரில் கலந்து கொதிக்க வைத்து… சுண்டவைத்து, அத்துடன் ஒரு டம்ளர் பசும்பால் கலந்து… காலை, மாலை என இரண்டுவேளை வீதம் தொடர்ந்து குடித்து வந்தால்,  ஊளைச் சதை குறையும். 

ஆண், பெண் இருவருக்கும் வரக்கூடிய  வெள்ளை நோய், வெட்டை நோய் குணமாகும்.  

பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் வரக்கூடிய அதிக உதிரப்போக்கைத் தடுப்பதோடு, வெள்ளைப்படுதலைக் குணமாக்கும். 

10 கிராம் நத்தைச் சூரி வேரை, காயவைத்து, பொடியாக்கி, பசும்பாலில் கலந்து, கொதிக்க வைத்து அருந்தி வந்தால், தாய்ப்பால் பெருகும். 

இதேபோல் ஆண்கள் அருந்தி வந்தால் ஆண்மை பலம் அதிகரிக்கும். நத்தைச் சூரியின் சமூலத்தை (முழு தாவரம்) அரைத்துப் பற்று போட்டு வந்தால், கல் போன்ற வீக்கமும் கரைந்து ஓடிவிடும்.

நன்றி : அவள்விகடன் - 13.12.2016

Sunday, December 11, 2016

மனைவி - பாலியல் வன்முறை


மனைவிக்கு பிடிக்கவில்லை என்றால், பாலியலும் ஒரு வன்முறைதான்!
என்ன செய்ய வேண்டும்?
திருமணம் முடிந்து புகுந்த வீடு செல்லும் பெண்களுக்கு, “அடங்கிப் போகணும். சின்னச் சின்ன விஷயங்களைப் பெரிசுப் படுத்தக்கூடாது. அங்கே இருக்கிற சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கணும். நீ நல்லா வாழ்வதில்தான் நம்ம குடும்பத்தின் மானமே அடங்கியிருக்கு’’ என்றெல்லாம் அறிவுரை கூறி அனுப்பி வைப்பார்கள்.

அப்படித்தான் ரம்யாவுக்கும் கூறப்பட்டது. ரம்யா நல்ல நிறுவனத்தில் வேலை செய்துவருகிறாள். அவள் கணவன் சுரேஷுக்குத் தனியார் வங்கியில் மேலாளர் பணி. அவனின் பெற்றோரும் படித்து, நல்ல வேலைகளில் இருக்கிறார்கள்.

தன்னை யாரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடந்துகொள்ளக்கூடியவள் ரம்யா. படித்து, வேலைக்குச் சென்றாலும் கூட ரம்யா ஒரு வகையில் கிணற்றுத் தவளைதான். இதுவரை எந்தப் பிரச்சினையும் சந்திக்காத, பாதுகாப்பான, அன்பான குடும்ப வளையத்துக்குள் மட்டுமே இருந்து பழகியவள்.

ரம்யாவும் சுரேஷும் ஒரு வாரத்தில் தேனிலவுக்குச் சிங்கப்பூர் சென்றார்கள். திரும்பி வரும்போது ரம்யா சந்தோஷமாக இல்லை. அடுத்தடுத்த மாதங்கள் ரம்யாவுக்கும் சுரேஷுக்கும் மகிழ்ச்சியின்றி கழிந்தன. 

குழந்தை தற்போது வேண்டாம் என்று சுரேஷ் கூறியதால், ரம்யா கவலை அடைந்தாள். ரம்யாவின் அம்மாவும் ஓராண்டு தள்ளிப் போடுவதில் தவறில்லை என்று கூறினார்.

“அம்மா, என் பிரச்சினை வேறு. சுரேஷுக்குப் பாலியல் நாட்டம் ரொம்ப அதிகமா இருக்கு. என்னால் அவருக்கு ஈடுகொடுக்க முடியலை. கர்ப்பமானால் ஒரு வருஷம் தப்பிச்சிடலாம்னு நினைச்சேன்” என்றாள் ரம்யா.

“சிலர் பாலியல் உறவில் அதிக ஆர்வமா இருப்பாங்க. சிலர் ஆர்வமே இல்லாமல், குறைவாக வச்சுப்பாங்க. இது அவரவர் இயல்பு. இதை எப்படித் தப்புன்னு சொல்லுவே? உன்கிட்ட அன்பாவும் பாசமாகவும் இருக்கும்போது, இது ஒரு குறையே இல்லை. புரிஞ்சுக்கம்மா” என்று அம்மா சொன்ன பிறகு, ரம்யாவால் ஒன்றும் பேச முடியவில்லை.

இரண்டு மாதங்கள் கழிந்தன. திடீரென்று அம்மா வீட்டுக்கு வந்து, 10 நாட்கள் தங்கப் போவதாகச் சொன்னாள் ரம்யா.

“தாராளமாக வந்து தங்கு ரம்யா. மாப்பிள்ளை கிட்ட பேசறேன். அவரையும் அழைச்சிட்டு வா” என்று அம்மா சொன்னவுடன், தான் வரவில்லை என்று கோபத்துடன் தொலைபேசி அழைப்பைத் துண்டித்தாள் ரம்யா.

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒன்றும் புரியவில்லை. என்ன பிரச்சினை என்று தெரிந்துகொள்வதற்காக, ரம்யாவின் மாமியாரைச் சந்தித்தார்கள்.

“என்ன சொல்றதுன்னே தெரியலை சம்பந்திம்மா. ரம்யா என் மகனோடு மகிழ்ச்சியா இல்ல. தாம்பத்தியத்தை மறுக்கிறதால தினமும் ராத்திரி ரெண்டு பேருக்கும் சண்டை வருது. தனித்தனி அறைகளில் தூங்குறாங்க. சுரேஷ் கிட்ட கேட்டால், அது அவங்களோட தனிப்பட்ட பிரச்சினைன்னு சொல்லிட்டான். எனக்கும் ஒண்ணும் புரியலை” என்று வருந்தினார் மாமியார்.

அலுவலகத்திலிருந்து வந்த ரம்யாவிடம் விசாரணை நடத்தினார் அவள் அம்மா. 

நீலப் படங்களை விரும்பிப் பார்க்கும் சுரேஷ், ரம்யாவையும் பார்க்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துவான். ரம்யா பிடிக்கவில்லை என்று பார்க்க மறுத்தால், வார்த்தைகளால் துன்புறுத்துவான். அதுமட்டுமின்றி, அந்தக் காட்சிகளைப் போலவே தன்னிடம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்துவான். நேரம் காலம் இல்லாமல், அவன் நினைக்கும்போதெல்லாம் உறவு வைத்துக்கொள்ள அழைப்பான். 

இதனால் நீலப் படங்கள் பார்க்கும் அந்த லேப்டாப்பையும் போனையும் கண்டாலே ரம்யாவுக்குப் பயம் வந்துவிடுகிறது. அன்பும் காதலும் இருக்கக்கூடிய தாம்பத்தியத்தில் தனக்கு உடன்பாடு இருக்கிறது என்றும், இயந்திரத்தனமாகத் தன்னை உறவுக்குப் பயன்படுத்துவதில் விருப்பம் இல்லை என்றும் அம்மாவுக்குப் புரியவைத்தாள் ரம்யா.

“எல்லாத்தையும் என் மாமியாரிடம் சொன்னேன். புருஷனுக்கு ஏத்த மாதிரி வாழறதுதான் ஒரு மனைவிக்கு அழகு. அவனுடைய ஆசைகளுக்கு வடிகாலாக இருப்பவள்தான் நல்ல மனைவின்னு சொல்லிட்டாங்க. கணவன் கொடுக்கும் பாலியல் தொல்லைகளை ஏன் யாருமே வன்முறையா பார்க்க மாட்டேங்கிறீங்க? தாலி கட்டிட்டார் என்பதற்காக அவர் செய்யும் அத்தனைக் கொடுமைகளையும் சகித்துக்கொள்ளத்தான் வேணுமா? இனியும் அவருடன் சேர்ந்து என்னால வாழ முடியாதும்மா” என்று உடைந்து அழுதாள் ரம்யா.

திட்டுவதும் அடிப்பதும் மட்டும் வன்முறையல்ல. 
பாலியல் ரீதியாக இழிவுபடுத்துவதும் பிடிக்காத ஒன்றைக் கட்டாயப்படுத்திச் செய்யவைப்பதும் வன்முறைகள்தான். பெண்களைக் குடும்ப வன்முறைகளிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தில், மேற்கண்ட எல்லாவிதமான செயல்களும் வன்முறைகளே. 

கணவனாக இருந்தாலும் பாலியல் துஷ்பிரயோகம், குடும்ப வன்முறையில் அடங்கும். இவற்றைச் சொல்லத் தயங்கி, தினமும் தொண்டைக்குள் சிக்கிய முள்ளாக வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள் ஏராளமான பெண்கள்.

இதுபோன்ற பிரச்சினைகளை யாரும் கேட்பார்களா? ஏற்பார்களா? கணவனுக்கு விற்கப்பட்ட உடல் என்று பெண்ணைக் கருதுவார்களோ என்றெல்லாம் அச்சப்படத் தேவையில்லை. 

குடும்ப உறுப்பினர்கள் பிரச்சினையைத் தீர்க்க முன்வரவில்லை என்ற நிலை இருந்தால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் பாதுகாப்பு அலுவலரிடம் மனு கொடுக்கலாம். 

அந்த மனு பாதுகாப்பு அலுவலர் மூலம் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டு, பல்வேறு வகையான நிவாரணங்களைப் பெறவும், தன்னை அந்த வன்முறைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் முடியும் என்பதை அறிந்தாள் ரம்யா.

கௌரவம் பார்த்துக்கொண்டு அன்றாடம் அல்லல்படுவதிலிருந்து மீண்டு வர, குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தை அறிந்துகொள்வதும், ஒவ்வோர் ஆணும் பெண்ணும் இதுவும் குடும்ப வன்முறைதான் என்பதைத் தெரிந்துகொள்வதும் அவசியம்.

கட்டுரையாளர், 
பி.எஸ். அஜிதாவழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 11.12.2016







Saturday, December 10, 2016

கால் புண் - நீரிழிவு நோய்

கால் புண்ணிலிருந்து நீரிழிவு நோயாளி தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
முற்றிய நிலையில் சர்க்கரை நோய் உள்ளவர்கள், மருத்துவமனையில் சேரும்படி ஆவதற்கு கால் புண்களும் ஒரு காரணம். 
டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு, கால்கள் வீக்கமடைவதுண்டு. சர்க்கரை நோயாளிகளின் கால்களில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து கவனிக்க வேண்டும். ஆனால் வீடு, அலுவலக சூழலில் இது முடியாமல் போய்விடுகிறது.
இந்த தேவையை நிறைவு செய்ய, 'சைரன் கேர்' என்ற நிறுவனம், கால்களில் அணியும் 'ஸ்மார்ட் சாக்ஸ்' ஒன்றை வடிவமைத்துள்ளது. இந்த 'புத்திசாலி' காலுறைகளில் உணர்வான்களும், சிறு மின்கலனும், ஒரு மொபைல் செயலிக்கு தகவல் அனுப்பும் சாதனமும் இருக்கும். இதை அணிந்த சர்க்கரை நோயாளியின் கால்களில் ஏற்படும் மாற்றங்களை காலுறைகள் மொபைல் செயலிக்கு, 'புளூ டூத்' மூலம் செய்தி அனுப்பும். 
கால்களின் வெப்பநிலை அதிகரித்தால் உடனே சிகிச்சை பெற்று கால்களின் வீக்கத்தை தணிக்கலாம்.
ஒரு ஜோடி ஸ்மார்ட் சாக்சை ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம். அதுவரை, அழுக்கானால் துவைக்கும் இயந்திரத்தில் கூடப் போட்டு துவைக்க முடியும். 
காலுறைகளை கழற்றினால் மின்கலனில் உள்ள மின்சாரம் மிச்சப்படுத்தப்படும். ஏழு ஜோடி காலுறைகளை ஒரே பெட்டியாக விற்க திட்டமிட்டிருக்கிறது சைரன் நிறுவனம். 
ஒரு பெட்டியின் விலை 8,130 ரூபாய். டென்மார்க் மற்றும் அமெரிக்காவிலிருந்து இயங்கும் சைரன் நிறுவனத்தின் காலுறைகள், 2017ல் விற்பனைக்கு வரும். இது இந்தியாவிலும் கிடைத்தால், பல நீரிழிவு நோயாளிகள் கால் புண்களில் இருந்து தப்பிக்க உதவும். 
நன்றி ; தினமலர் நாளிதழ் – 08.12.2016 

Thursday, December 8, 2016

பணமில்லா பரிவர்த்தனை


பணமில்லா பரிவர்த்தனை - என்ன செய்ய வேண்டும்?
பணப் பரிமாற்றத்தில் யூபிஐ… தேவை நிறைய மாற்றம்!
வங்கிகளில் பணம் கிடைக்கவில்லை என்று வருத்தப்படாதீர்கள். பணமில்லா பரிவர்த்தனையைப் பயன்படுத்துங்கள். வங்கிகள் தரும் யூபிஐ (UPI – Unified Payment Inteface) வசதியைப் பயன்படுத்தி எளிதில் பணத்தை அனுப்புங்கள்’’ என்று சொல்கிறது மத்திய அரசாங்கம்.

பிரதமர் தொடங்கி ஒவ்வொரு மத்திய அமைச்சரும் இந்த யூபிஐ-க்காக பிரசாரமே செய்து வருகின்றனர்.
வங்கிகள் தரும் யூபிஐ வசதியை சாதாரண மக்களும் பயன்படுத்தும் நிலையில் அது எளிதாக இருக்கிறதா என்பதை அறிய களத்தில் இறங்கினோம். களத்தில் இருக்கிற நிலைமை நம்மை அதிர்ச்சி அடையவே செய்தது.

யூபிஐ-யின் தொடக்கம்!

முதலில் இந்த யூபிஐ-யைப் பற்றி கொஞ்சம் பார்த்துவிடுவோம். ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி மொபைல் வழியிலான பணப் பரிவர்த்தனைகளை எளிதாகச் செலுத்தும் வசதியை யூபிஐ என்ற பெயரில் என்பிசிஐ அறிமுகப்படுத்தியது.

கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி, ரிசர்வ் வங்கியின் அப்போதைய கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் இந்த யூபிஐ-யை முறைப்படி அறிமுகப்படுத்த, ஜூலை 31-ம் தேதிக்குள் கிட்டத்தட்ட 15 வங்கிகள் இந்த யூபிஐ வசதியைத் தரத் தயாராகிவிட்டன. கனரா வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்பட பல வங்கிகள் பொது மக்களுக்கு இந்த யூபிஐ வசதியைத் தரத் தயாராக இருந்தன.

என்ன நன்மை?

உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் யூபிஐ வசதியைப் பயன்படுத்தி, நீங்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே பல்வேறு வேலைகளைச் செய்ய முடியும். அதிகபட்¬ச¬மாக ஒரு லட்சம் ரூபாய் வரை இதன் மூலம் பணத்தை அனுப்பவும், பெறவும் செய்யலாம். நண்பர்கள், உறவினர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் உடனடியாக பணத்தை அனுப்பலாம். ரயில்வே டிக்கெட், சினிமா டிக்கெட் வாங்கலாம்; பார்கோடு அடிப்படையில் பணம் செலுத்தலாம்; இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்தலாம். நன்கொடை, பள்ளிக் கட்டணங்கள் என கவுன்டர் பேமென்ட் வழியாகவும் பணத்தை செலுத்தலாம்; ஆன்லைன் மூலமாகவும் வாங்கும் பொருட்களுக்கும் கட்டணத்தைச் செலுத்தலாம்;

24 மணி நேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் செயல்படக்கூடியது; உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு இருந்தாலும் இதைப் பயன்படுத்த முடியும்; யூபிஐ-ல் இ-மெயில் முகவரி போன்ற விர்ச்சுவல் ஐடியை உருவாக்கி, எளிதாகப் பணம் அனுப்பலாம் என யூபிஐ மூலம் கிடைக்கும் பல செளகரியங்களைச் சொன்னார்கள்.

விர்ச்சுவல் ஐடி

யூபிஐ-ல் விர்ச்சுவல் ஐடி மூலம் எளிதாக பணத்தை அனுப்பலாம். உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு பொதுத் துறை வங்கியின் வாடிக்கையாளர் எனில், அந்த வங்கியின் மொபைல் ஆப்-ஐ உங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் பெயர், உங்களுடைய இ-மெயில் முகவரியைப் பதிவு செய்து புதிதாக விர்ச்சுவல் இமெயில் முகவரி ஒன்றை உருவாக்கி, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பணத்தை அனுப்பலாம்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளராக இருக்கிறீர்கள், அந்த வங்கியின் மொபைல் ஆப்ஸ் மட்டுமில்லை, வேறு ஒரு வங்கியின் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். இது போல் பல தரப்பட்ட வசதிகள் இந்த யூபிஐ-ல் இருக்கின்றன.

பணம் அனுப்புவதைப் பொறுத்தவரை அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை அனுப்பலாம். இது வங்கிகளுக்கு வங்கிகள் வித்தியாசப்படுகின்றன. இதற்கு ஒவ்வொரு வங்கியில் இருந்தும் ஒவ்வொரு விதமாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, 10,000 ரூபாய் அனுப்புகிறார் எனில், ரூ.5 என்கிற அளவில் கட்டணம் வசூலிக்கப்படு கின்றன.

இத்தனை வசதிகள் இருக்கும் என்று சொல்லி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த யூபிஐ வசதியை பல வங்கிகள், கடந்த மூன்று மாத காலத்தில் பெரிய அளவில் விளம்பரம் செய்து மக்களிடம் பிரபலப்படுத்தவே இல்லை. இதனால் இந்தியா முழுவதும் இதுவரை 2.5 லட்சம் பேர் மட்டுமே இந்த யூபிஐ ஆப்ஸை டவுன்லோடு செய்திருக்கிறார்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களில் ஆன்லைன் மூலம் கணக்குப் பரிவர்த்தனை செய்கிறவர்கள் குறைந்தபட்சம் ஒரு கோடி பேராவது இருக்கும்போது, வெறும் 2.5 லட்சம் பேர் மட்டுமே யூபிஐ ஆப்ஸை பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள் என்பது ஏமாற்றமளிக்கக்கூடியதாக இருக்கிறது.

மிகக் குறைவானவர்களே இந்த யூபிஐ வசதியைப் பயன்படுத்தி வருகிறபோதிலும், அவர்களும் இந்த வசதியானது திருப்தி அளிக்கக்கூடிய வகையில் இல்லை என்றே சொல்கின்றனர். உதாரணமாக, தென் மாநிலங்களில் பிரபலமாக விளங்கும் ஒரு பொதுத் துறை வங்கியின் யூபிஐ வசதியைப் பயன்படுத்தியவர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, அதன் கஸ்டமர் ரெவியூகளைப் பார்வையிட்டோம். மிகச் சிலர் மட்டுமே இந்த வசதியைப் பற்றி நன்றாகச் சொல்லி இருந்தாலும் பலரும் தங்களது மோசமான அனுபவத்தையே பதிவு செய்திருக்கின்றனர்.
புகார் பட்டியல்!

‘‘இந்த ஆப்ஸ் சுத்த மோசம்; ஒருமுறை பணம் அனுப்பினால், மூன்று முறை பணத்தை எடுத்துவிடுகிறது; பணத்தை அனுப்பியவுடன், கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு விடுகிறது. ஆனால், யாருக்கு பணம் அனுப்பினோமோ, அவருக்குப் பணம் போய்ச் சேரவில்லை; ஒவ்வொரு முறை பணம் அனுப்பும்போதும் எல்லாத் தகவல்களையும் கேட்கிறது. இதனால் பணம் அனுப்ப நீண்ட நேரம் ஆகிறது’’ என்கிற மாதிரி எல்லாம் பலரும் புகார் சொல்லி இருக்கிறார்கள்.

இந்தப் புகார்களைப் படித்துப் பார்த்த அந்த வங்கி நிர்வாகம், அந்தக் குறைகளை கூடிய விரைவில் நிவர்த்தி செய்வதாக புகாருக்குக் கீழேயே பதில் சொல்லி இருக்கிறது. இதேபோல டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு விளங்கும் இன்னொரு வங்கியின் யூபிஐ ஆப்ஸை பயன்படுத்தியவர்களும் தங்கள் அதிருப்தியை கொட்டவே செய்திருக்கிறார்கள்.

‘‘இந்த ஆப்ஸ் நம்பிக்கைக்குரியதாக இல்லை; இந்த ஆப்ஸை நான் வெறுக்கிறேன். இது ஒரு மோசமான அப்ளிகேஷன்; இந்த ஆப்ஸ் வீண்; இந்த ஆப்ஸில் நிறைய மாற்றம் செய்ய வேண்டும்; இது ஒரு நான்சென்ஸ் ஆப்ஸ்’’ என்றெல்லாம் திட்டித் தீர்த்திருக்கிறார்கள். ‘எல்லாக் குறைகளையும் சரிசெய்து விடுகிறோம்’ என பொறுமையாக பதில் சொல்லி இருக்கிறது வங்கி நிர்வாகம்.

யூபிஐ வசதியை எப்படிப் பயன் படுத்துவது? இப்படியொரு வசதி மக்களுக்குத் தெரியாமலே இருக்கிறதே..? சில வங்கிகளின் அதிகாரிகளை சந்தித்துக் கேட்டோம். சென்னை, அடையாரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி அதிகாரி ஜானிடம் கேட்டோம்.

எப்படிப் பயன்படுத்துவது?

‘‘யூபிஐ ஆரம்பித்து சில மாதங்களே ஆகின்றன. ஆனால், எங்கள் வங்கியில் பணியாற்றும் பெரும்பாலான பணியாளர்கள் இப்போதை யூபிஐ ஆப்-ஐ பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். வாடிக்கையாளர்களுக்கும் இதன் பயன் குறித்துத் தெரிவித்து வருகிறோம். எங்களுடைய வங்கி இணையதளத்திலும், மொபைல் ஆப்-லும் யூபிஐ குறித்து விளம்பரப்படுத்தி வருகிறோம். விர்ச்சுவல் ஐடியை எப்படி உருவாக்குவது, பணத்தை எப்படி அனுப்புவது, பெறுவது என அனைத்து விஷயங்களும் விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

நான்கூட இந்த ஆப்-ஐ பயன்படுத்தி பணத்தை அனுப்பியுள்ளேன். இதில் வங்கிக் கணக்கு விவரம், ஐஎஃப்எஸ்சி கோட் என பல தரப்பட்ட தகவல்கள் எதுவும் தரவேண்டியதில்லை. என் நண்பருக்கு பணம் அனுப்ப வெறும் இரண்டு நிமிடம் மட்டுமே ஆனது. வங்கிச் சேவையில் எப்போதும் பணத்தை அனுப்ப மட்டுமே முடியும். ஆனால், இந்த ஆப் மூலம் பணத்தை மற்றவர்களிடம் எளிதாகப் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்பதால், இந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக உள்ளது’’ என்றார்.

சென்னை முகப்பேர் மேற்கில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூத்த மேலாளர் எம்.எஸ்.சந்திரமொளலியிடம் கேட்டோம்.

“யூபிஐ வசதி இப்போதுதான் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஆர்டிஜிஎஸ், நெப்ட்-க்கு எல்லாம் ஐஎஃப்எஸ்சி கோட் தேவை. ஆனால், இதற்கு விர்ச்சுவல் ஐடி மட்டும் இருந்தால் போதுமானது. உடனடியாக பணத்தை அனுப்பலாம். மிகவும் எளிமையானது, பாதுகாப்பானது. யூபிஐ குறித்த விழிப்பு உணர்வு நன்றாகத்தான் உள்ளது.

இந்த ஆப்-ஐ இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இந்த ஆப்ஸை பற்றி சொன்னாலே பயப்படுகின்றனர். இதற்குக் காரணம், நம்முடைய பணம் பறி போய்விடுமோ என்ற பயம்தான்’’ என்றார்.

காலப்போக்கில் குறைகள் குறையும்!

சென்னையில் இருக்கும் ஒரு பொதுத்துறை வங்கியில் சீனியர் மேனேஜர் ஒருவருடன் பேசினோம்.
‘‘இப்போதுதான் யூபிஐ சேவையினை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். யூபிஐ பயன்படுத்துபவர்களிடம் எப்படி பயன்படுத்துவது என்ற பயம் இருக்கிறது. நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள். மேலும், போதுமான அளவு விழிப்பு உணர்வும் இல்லாமல் இருக்கிறார்கள்.

விழிப்பு உணர்வை உடனே ஏற்படுத்திவிடவும் முடியாது. மக்களிடையே யூபிஐ-யை கொண்டு சேர்க்க கொஞ்சம் காலம் ஆகும். யூபிஐ-யை பயன்படுத்துவோர் பல்வேறு சேவைக் குறைபாடுகள் இருப்பதாக சொல்வதற்குக் காரணம், இதற்கான சப்போர்ட்டிங் சிஸ்டத்தை இனிவரும் காலங்களில்தான் மேம்படுத்த வேண்டி இருக்கிறது. இதனை மேம்படுத்திய பின்பு சேவையில் ஏற்படும் குறைகள் உடனுக்குடன் சரிசெய்யப்படும்” என்றார்.

இன்றைக்கு இந்தியாவில் சுமார் 34 கோடி பேர் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. நல்லதொரு தரத்தில், பிழை இல்லாமலும் எளிமையான முறையிலும் பயன்படுத்துவதற்கு ஏற்ற மாதிரி யூபிஐ ஆப்ஸை எல்லா வங்கிகளும் அறிமுகம் செய்திருந்தால், இந்த நேரத்தில் குறைந்தபட்சம் ஒன்றிரண்டு கோடி பேராவது அதனைப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பார்களே! இதன் மூலம் பணத் தட்டுப்பாடு பிரச்னையை மிக எளிதாக சமாளித்திருக்க முடியுமே!

யூபிஐ ஆப்ஸில் இருக்கும் குறைகளை முழுவதுமாகக் களைந்து, அதைக் குறையில்லாத கருவியாக்கி, எல்லோரும் பயன்படுத்தும்படி பிரபலப்படுத்தினால் மட்டுமே பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமாகும் என்பதை மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அதை விட்டுவிட்டு, வெறுமனே பணமில்லா பரிவர்த்தனையை செய்யுங்கள் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இருக்காது! அதனால் மக்களின் அதிருப்தியைத்தான் சம்பாதித்துக் கொள்ள வேண்டியிருக்கும்!

சோ.கார்த்திகேயன், ஞா.சக்திவேல் முருகன்,


நன்றி- நாணயம் விகடன் – 11.12.2016