disalbe Right click

Saturday, February 25, 2017

தானே ஆஜராகி வாதாடுபவர்கள் கவனத்திற்கு.....


தானே ஆஜராகி வாதாடுபவர்கள் கவனத்திற்கு.....
நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிடும் மனுதாரருக்கு சட்ட அறிவு தேவை: 
உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை:
'வழக்குகள் தொடர்பான நீதிமன்றத்தில் மனுதாரர்களே ஆஜராகி வாதிடும்போது சட்டத்திற்குட்பட்டு எதை பேச வேண்டுமோ அதை வாதிட வேண்டும். சட்டம் பற்றி அறிந்திருக்க வேண்டும்; தெரியாது எனக்கூறி தப்பித்துக் கொள்ளக்கூடாது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்துார் கணபதிராஜ். இவர், மாசிலாமணி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வசித்து வந்தார். வீட்டை காலி செய்ய, வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் கணபதிராஜ் மனு செய்தார். 
அம்மனு பரிசீலனைக்கான ஆரம்ப கட்ட (எஸ்.ஆர்.,) எண் வழங்கப்பட்டது. பிரதான எண் வழங்கப்படவில்லை. இம்மனு நிலை நிற்கத்தக்கதா? என்ற தலைப்பின் கீழ் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. 
நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு விசாரித்தார். 
மனுதாரர் ஆஜராகி,“கீழமை நீதிமன்றம் சரியாக விசாரிக்கவில்லை. சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை சரியாக நடத்தவில்லை,” என்றார்.
நீதிபதி: 
ஏற்கனவே கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தபோது, அதை எதிர்த்து மனுதாரர் தாக்கல் செய்த மனுவை இந்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் பின் கீழமை நீதிமன்றம் வீட்டை காலி செய்யுமாறு உத்தரவிட்டது. 
ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கை மறைத்து, மனுதாரர் இங்கு மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் உரிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டும்.
பலமுறை மனுதாரர் ஆஜராகியும், இம்மனு நிலைத்து நிற்கத்தக்கதல்ல என இந்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
சட்டம் பற்றி தெரியாமல் இருப்பது தவறில்லை. ஆனால், மனுதாரரே ஆஜராகி வாதிடும்போது, சட்டம் பற்றி அறிந்திருக்க வேண்டும். சட்ட உதவி மையத்தை அணுகி, அதன் சேவையை பயன்படுத்தியிருக்கலாம். 
மனுதாரரைப் போல் வழக்குகள் தொடர்பாக மனுதாரர்களே ஆஜராகி வாதிடும்போது எதை வேண்டுமானாலும் பேசலாம் என கருதுகின்றனர். 
சட்டத்திற்குட்பட்டு எதை பேச வேண்டுமோ அதையே வாதிட வேண்டும். சட்டம் தெரியாது எனக்கூறி தப்பித்துக் கொள்ளக்கூடாது.
மனுதாரரின் பொருளாதார நிலையை கருதி, கருணை அடிப்படையில் அவருக்கு அபராதம் விதிப்பதை தவிர்க்கிறேன். 
இனியாவது சரியான சட்ட வழிமுறைகளை மனுதாரர் பின்பற்றுவார் என இந்நீதிமன்றம் நம்புகிறது. 
மனு விசாரணைக்கு உகந்ததல்ல. மனுவை நிராகரிக்கிறேன், என்றார். 
நன்றி : தினமலர் நாளிதழ் - 25.02.2017

Thursday, February 23, 2017

செயல்படாத மக்கள் பிரதிநிதிகள், திரும்பப் பெறும் சட்டம்


செயல்படாத மக்கள் பிரதிநிதிகள், திரும்பப் பெறும் சட்டம்

 பொது விவாதம் தேவை, ராமதாஸ்

செயல்படாத மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் சட்டம் குறித்து பொது விவாதத்தை தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் நிலவும் இன்றைய அரசியல் சூழலைப் பார்க்கும் போது, இனிவரும் காலங்களிலாவது இத்தகைய நிலைமை ஏற்படாமல் தடுக்க தேவையான சட்டத் திருத்தங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. தேவைகள் தான் புதிய கண்டுபிடிப்புகளுக்கு தூண்டுகோல்களாக இருக்கின்றன என்பதை உணர்ந்து, இன்றைய சூழலைத் தேவையாகக் கருதி, ஆரோக்கிய அரசியலுக்கான தீர்வுகளை ஆராய வேண்டும்.

தமிழகத்தின் புதிய முதல்வராக சசிகலாவை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்வு செய்ததைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் ஏற்பட்ட கொந்தளிப்பும், அதை பிரதிபலிக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு பிரிவினர் பிரிந்து சென்றதும் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட, அவருக்கு பதில் எடப்பாடி பழனிசாமி புதிய முதல்வராக பதவியேற்றிருக்கிறார். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக அவர்கள் நடத்திய ஜனநாயகப் படுகொலைகள் கண்டிக்கத்தக்கவை.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் அணி மாறி விடுவார்களோ என்ற அச்சத்தில், அவர்கள் 11 நாட்கள் கூவத்தூரில் தனியார் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்து அவர்கள் அமைச்சர்களின் காரில் அடைத்து சட்டப்பேரவைக்கு அழைத்து வரப்பட்டு வாக்களிக்கச் செய்யப்பட்டனர். பொதுமக்களின் மனநிலை மற்றும் எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்து கொண்டதால் அவர்களால் தொகுதிகளுக்குள் நுழைய முடியாத நிலை நிலவுகிறது.

பல இடங்களில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. தங்களின் உணர்வுகளை மதிக்காத சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேவையில்லை என்றும், அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

மற்றொருபுறம், மக்களின் பிரச்சினைகளுக்காக சட்டப்பேரவையில் குரல் கொடுக்க வேண்டிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அவையில் நடந்து கொண்ட விதம் முகம் சுளிக்க வைக்கிறது. இப்போது கூட தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினைகள் ஏராளமாக இருக்கும் நிலையில், அவற்றுக்காக போராடாமல், பேரவை செயல்பாடுகளால் தங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயரைப் போக்கும் நோக்குடன் நடத்தும் போராட்டங்களை தமிழக மக்கள் ஏற்கவில்லை.

சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களின் போது, ஏற்கெனவே இருந்தவர்களை பிடிக்காததாலும், வேறு காரணங்களாலும் மோசமானவர்களுக்கு வாக்களித்து தேர்ந்தெடுக்கும் மக்கள், அடுத்த சில மாதங்களில் அவர்களின் உண்மை உருவம் தெரியவரும் போது ஏமாற்றமடைகின்றனர்; வருந்துகின்றனர்.

ஆனாலும், வாக்களித்து தேர்ந்தெடுத்தவர்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாது என்பதால், பிடிக்காவிட்டாலும் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

மக்கள் பிரதிநிதிகளை மாற்றும் வசதி இருக்கக்கூடாதா? என அவர்கள் ஏங்குகின்றனர். இத்தகைய தருணங்களில் தான் செயல்படாத மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமையை வழங்கும் உரிமை முக்கியத்துவம் பெறுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்ப்பேரவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் சரியாக செயல்படாத போது, அவர்களுக்கு வாக்களித்த மக்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்காளர்கள் மனு செய்தால், சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறுவது குறித்து தேர்தல் ஆணையம் வாக்கெடுப்பு நடத்தும். அதில் அதிக எண்ணிக்கையிலானோர் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வாக்களித்தால் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்.

 பிலிப்பைன்ஸ், வெனிசூலா உள்ளிட்ட சில நாடுகளிலும், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் சில மாநிலங்களிலும் இந்த முறை செயல்பாட்டில் உள்ளது. இதைப் பயன்படுத்தி தவறு செய்த மக்கள் பிரதிநிதிகள் திரும்ப அழைக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்தியாவில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், பிகார் ஆகிய மாநிலங்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இதை மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுவதும், பின்னர் அடங்குவதும் கடந்த காலங்களில் நடந்திருந்திருக்கின்றன.

மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலும் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்ட போதெல்லாம், அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமல்ல என்று கூறி மத்திய அரசு நிராகரித்திருக்கிறது. பொதுவாழ்க்கையில் நேர்மை குறைந்ததற்கு இதுவும் காரணமாகும்.

மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை நடைமுறைக்கு வந்தால், தவறு செய்யும் பிரதிநிதிகள் பதவி நீக்கம் செய்யப்படுவர் என்பது ஒருபுறமிருக்க, இப்படி ஒரு சட்டம் இருந்தால் தவறு செய்யவே மக்கள் பிரதிநிதிகள் அஞ்சுவார்கள் என்பது தான் இதன் சிறப்பு ஆகும். இப்படி ஒரு நடைமுறையை கொண்டு வருவதிலும், செயல்படுத்துவதிலும் பல சிக்கல்கள் உள்ளன என்பதையும், தேர்தல் ஆணையத்திற்கு பணிச்சுமை அதிகரிக்கும் என்பதையும் மறுக்க முடியாது.

ஆனால், தேர்தல் நடைமுறையில் ஏராளமான சீர்திருத்தங்களை கொண்டு வந்த இந்திய தேர்தல் ஆணையத்தால் இது சாத்தியம் தான். அதுமட்டுமின்றி, இந்திய ஜனநாயகத்தைக் காப்பதற்காக சிரமங்களை பொருட்படுத்தாமல் சில நடவடிக்கைகளை எடுத்து தான் தீர வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் சட்டத்தை உடனடியாக வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்ற போதிலும், குறைந்தபட்சம் அதுகுறித்த பொது விவாதத்தையாவது தொடங்க வேண்டும். அப்போது தான் அடுத்த சில ஆண்டுகளிலாவது இந்த அற்புத யோசனை சட்டம் ஆகும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 23.02.2017

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியிழப்பு


உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியிழப்பு

இணையதளத்தில் வெளியிட ஐகோர்ட் உத்தரவு
மதுரை: 'உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, செலவு கணக்கை தாக்கல் செய்யாமல், தகுதியிழப்பு செய்யப்பட்டவர்களின் விபரங்களை, மாநில தேர்தல் கமிஷனின் இணையதளத்தில், ஒரு வாரத்திற்குள் வெளியிட வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:

மறு பரிசீலனை : உள்ளாட்சித் தேர்தல் நடத்த, 2016ல் அறிவிப்பு வெளியானபோது, மதுரை மாநகராட்சி வார்டு, 41ல் போட்டியிட, என் மனைவி முத்துசுமதி - இந்திய கம்யூ., மனு தாக்கல் செய்தார். அ.தி.மு.க., கவுன்சிலராக இருந்த இந்திராணியும் மனு தாக்கல் செய்தார்.

அவர், 2011 உள்ளாட்சித் தேர்தல் செலவு கணக்கை சமர்ப்பிக்கவில்லை எனக்கூறி, மனு பரிசீலனையின்போது, அதிகாரியிடம் எதிர்ப்பு தெரிவித்தோம்.

ஆட்சேபனை மனுவை ஏற்ற அவர், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை; ஒப்புகைச் சான்றும் வழங்கவில்லை.

போட்டியிடுபவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தல் செலவு கணக்குகளை விதிகளின்படி சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், தகுதியிழப்பு செய்யப்படுவர்.

ஓட்டு போட தகுதியானவர்கள் பட்டியலை வெளியிடும்போது, போட்டியிட தகுதி மற்றும் தகுதியற்றவர்களின் பட்டியலை வெளியிட வேண்டியது, மாநில தேர்தல் கமிஷனின் கடமையாகும்.

இதை அரசியலமைப்புச் சட்டப்படி மேற்கொள்ள வேண்டும். ஒருவர் மனு தாக்கல் செய்யும்போது, அவருக்கு எதிராக யார் ஆட்சேபனை தெரிவித்தனரோ, அவர்களே குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கூறுகிறார்.

எதிர்ப்பு தெரிவிக்கும் வேட்பாளர் தான் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. புகாரை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சான்று வழங்காதது, தேர்தல் முடிந்த பின், சட்டப்படி நிவாரணம் தேடுவதற்கு தடையாக இருக்கும்.

தகுதியிழப்பு : கடந்த, 2011 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, செலவு கணக்கை தாக்கல் செய்யாமல் தகுதியிழப்பு, செய்யப்பட்டவர்களின் விபரங்களை வெளியிட வேண்டும்.

யாரேனும் ஆட்சேபனை மனு அளித்தால், அதை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கும் வகையில், தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர்களுக்கான வழிகாட்டுதலை, கையேட்டில் சேர்க்க நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கண்ணன் மனு தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் கொண்ட அமர்வு விசாரித்தது.அரசு வழக்கறிஞர், 'நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 4,772 பேர் தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளனர்' என்றார்.

நீதிபதிகள், '2011 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, செலவு கணக்கை தாக்கல் செய்யாமல் தகுதியிழப்பு செய்யப்பட்டவர்களின் விபரங்களை, மாநில தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் ஒரு வாரத்திற்குள் வெளியிட வேண்டும்' என உத்தரவிட்டனர்.

மாநில தேர்தல் கமிஷனின் செயலர், மதுரை கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி, மார்ச் 8க்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 24.02.2017

ஜெயலலிதாவின் பெயர், படம் அகற்ற வழக்கு


ஜெயலலிதாவின் பெயர், படம் அகற்ற வழக்கு
சென்னை: உச்ச நீதிமன்றத்தால், குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர், புகைப்படங்களை, அரசு திட்டங்களில் இருந்து நீக்கவும், அரசு அலுவலகங்களில் பயன்படுத்தவும் தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு, நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின், 2016 டிச., 5ல் மறைந்தார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான, சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், பிப்., 14ல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜெயலலிதா இறந்து விட்டதால், மற்ற மூவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை, 10 கோடி ரூபாய் அபராதத்தை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
இந்நிலையில், சமூக நீதிக்கான வழக்கறிஞர் கள் பேரவையின் தலைவர், கே.பாலு தாக்கல் செய்த மனு:முதல்வராக இடைப்பாடி பழனி சாமி பதவியேற்ற பின், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு, 'அம்மா இரு சக்கர வாகன திட்டம்' என்ற திட்டத்தை, பிப்., 20ல் அறிவித்தார்.

ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஜெயலலிதா குற்றம் புரிந்துள்ளார் என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த தீர்ப்புக்கு பின்னும், ஜெயலலிதாவின் புகைப்படங்களை, அரசு அலுவலகங்களில் வைத்திருப்பது, நேர்மையாக பணியாற்றுபவர்களின் மனதை திசை திருப்புவது போலாகி விடும். குற்றவாளியின் பெயரில் திட்டம் அறிவிப்பது, அரசியலமைப்பு சட்டத்தின்படி எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது.

ஜெயலலிதாபெயரில் பல திட்டங்களை, தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. அந்த திட்டங் களில் எல்லாம், ஜெயலலிதாவின் புகைப் படங் களும் இடம்பெற்றுள்ளன. அவரது பெயரையும், புகைப்படங்களையும் அகற்ற வேண்டும்.

'அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா பார்மசி, அம்மா உப்பு, அம்மா சிமென்ட்' என, அறிவிக்கப்பட்ட பல திட்டங்களில் உள்ள ஜெயலலிதாவின் பெயரையும், அவரது புகைப் படத்தையும் நீக்கும்படி, அரசுக்கு மனு அனுப்பினேன்.

பள்ளி மாணவர்களுக்கான பை, சைக்கிள், மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, இரு சக்கர வாகனங் களில் இடம் பெற்றுள்ள, ஜெயலலிதாவின் படங்களை அகற்ற வேண்டும். தமிழக அரசின் நிதியில், ஜெயலலிதாவின் மரண நிகழ்வு, சினிமா தியேட்டர்களில் ஒளிபரப்பப்படுகிறது; இதற்கும், தடை விதிக்க வேண்டும்.

அரசுக்கு அனுப்பிய மனு, நிலுவையில் உள்ள போது, அரசு நிதியில், பிரம்மாண்டமான நினைவிடம் கட்ட, அரசு திட்டமிட்டுள்ளது. ஜெயலலிதா இறந்து விட்டதால், அவருக்கு எதிரான மேல்முறையீடு விலக்கப்பட்டிருந் தாலும், அவர் ஒரு அப்பாவி என கருதக்கூடாது.

நாளை விசாரணை:

ரசுதிட்டங்களில், அவரது புகைப்படங்களை பயன் படுத்துவது என்பது, அரசியலமைப்பு சட்டத் தையும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத் தையும் மீறுவது போலாகும். மக்களுக்கான நலத் திட்டங் களுக்கு, ஜெயலலிதாவின் சொந்த பணத்தை பயன்படுத்தவில்லை; அரசின் வருவாயில் இருந்து, நலத் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.

ஊழல் வழக்கில் குற்றவாளியாக உள்ள ஒருவருக்கு, அரசு திட்டங்களில் விளம்பரம் செய்யப்படுகிறது. ஜெயலலிதா மீது விசுவாசம் உள்ளவர்கள், அவரது புகைப்படத்தை, அவரவர் களின் வீடுகளில் வைத்துக் கொள்ள லாம். ஆனால், அரசு நிகழ்ச்சிகள், அலுவலகங்களில், அவரது புகைப்படத்தை வைப்பது, அதிகார துஷ்பிரயோகம் செய்வது போலாகும்.

எனவே, அரசு செலவிலோ, கட்சி செலவிலோ, பொது இடத்தில் ஜெயலலிதாவுக்கு நினை விடம் கட்டுவதற்கு, தடை விதிக்க வேண்டும். ஜெயலலிதா பெயரையும், அவரது புகைப்படத் தையும், அரசு திட்டங்களில் இருந்து அகற்றி விட்டு, புதிய பெயரை வைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுஉள்ளது. இம் மனு, நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்லி.,யில் ஜெ.,க்கு சிலை!

ஜெ., படத்தை அகற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 'ஜெயலலிதாவுக்கு, பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்; பார்லிமென்ட் மைய மண்டபத்தில், சிலை அமைக்க வேண்டும்' என, அ.தி.மு.க., சார்பில், தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.அக்கட்சியின் மகளிர் அணி, வழக்கறிஞர் அணி கூட்டங்களில், இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நன்றி : தினமலர் நாளிதழ் - 22.03.2017

மருத்துவமனைகளை கண்காணிக்கும் அதிகாரம்

Image may contain: text
மருத்துவமனைகளை கண்காணிக்கும் அதிகாரம்

மருத்துவமனைகளை கண்காணிக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லையா ?
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளைகள், அரசு மருத்துவமனைகளின் அலட்சியங்கள், போலி மருத்துவர்களின் அட்டகாசங்கள் இவற்றையெல்லாம் நாள்தோறும் எதிர்கொண்டு  வருகிறோம்.இவற்றையெல்லாம் அரசால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை? 

சட்டரீதியாக நம்மிடம் என்ன சிக்கல் இருக்கிறது?பதிலளிக்கிறார் கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் துணை இயக்குநர் கிருஷ்ணன்.

‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 47-வது பிரிவில், அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான மருத்துவ வசதிகளை அளித்து, தரமான மருத்துவ சேவையை உறுதிப்படுத்த வேண்டும் என்று The Clinical Establishments (Registration and Regulation) Act 2010-ல் சொல்லப்பட்டுள்ளது. 

இந்த சட்டத்தை இதுவரை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தவில்லை. இதை ஒரு முக்கிய காரணமாகச் சொல்லலாம்.

ஆனால், இந்த சட்டம் இந்தியாவின் மற்ற மாநிலங்களான சிக்கிம், மிசோரம், இமாச்சலப்பிரதேசம், அருணாச்சலப்பிரதேசம், பீகார், உத்தரப்பிரதேசம், உத்தர் காண்ட், அசாம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், புதுச்சேரி, சண்டிகர், அந்தமான், லட்சத்தீவு போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது’’ என்றவரிடம், தமிழ்நாட்டில் க்ளினிக்கல் எஸ்டாப்ளிஷ்மென்ட் ஆக்ட் நடைமுறைக்கு வருவதில் என்ன சிக்கல் என்று கேட்டோம்.

‘‘இந்த சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், தமிழக அரசின் சார்பில் ‘Tamilnadu Private Clinical Establishment Act என்ற பெயரில் 1997-ல் சட்டசபையில் மசோதா நிறைவேற்றி சட்டமாக்கப்பட்டுள்ளது’ என்று பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், தமிழ்நாட்டில் இந்த சட்டமும் இதுவரை சரியாக அமலாக்கப்படவில்லை என்பதே யதார்த்தம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ‘ஏன் இந்த சட்டம் இதுவரை அமலாக்கப்படவில்லை?’ என்று கேள்வி எழுப்பியதுடன் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவைகளை அளிக்கக்கூடிய மருத்துவமனைகள் பல இருந்தாலும், கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் இயங்கும் பல மருத்துவமனைகளி்ல் தரப்படும் மருத்துவம் தற்போது கேள்விக் குறியாகவே உள்ளது. 

இதுகுறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சேகரித்தபோது, தனியார் மருத்துவமனைகளைக் கண்காணிக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்று மருத்துவ சேவைகளின் இயக்குநர் அலுவலகம் பதில் அளித்துள்ளது’’ என்கிறார் அவர்.

Clinical Establishment Act 2010-ன் அம்சங்கள் குறித்தும் அவரிடம் கேட்டோம்…‘‘மருத்துவ சிகிச்சை, மருத்துவ சோதனை மற்றும் மருத்துவம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எந்த ஒரு நிறுவனமும் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.தனி ஒரு மருத்துவரால் நிர்வகிக்கப்படும் மருத்துவமனை, சேவை மையங்கள், அரசு மற்றும் பொது நிறுவனங்களால் நடத்தப்படும் மருத்துவமனைகள் போன்ற அனைத்தும் இந்த சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டது. 

ஆனால், இந்திய ராணுவத்தால் நடத்தப்படக்கூடிய மருத்துவனைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் அகில இந்திய தேசிய கவுன்சிலால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதன்படி நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் இந்த கவுன்சிலில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதேபோன்று ஒவ்வொரு மாநிலத்திலும் பதிவுமுறைகள் நடத்தப்பட வேண்டும். இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறும் மருத்துவ நிறுவனங்கள், முதல் முறை செய்யும் தவறுக்கு 10 ஆயிரம் ரூபாயும், அடுத்த முறை செய்யும் தவறுக்கு 50 ஆயிரம் ரூபாயும், தொடர்ந்து செய்யப்படும் தவறுகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை அபராதங்கள் விதிக்கப்படுகிறது.

இந்த சட்டத்தின்மூலம் ஒவ்வொரு நோய்க்கும் அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. மேலும், இதில் மருத்துவமனைகள் A,B,1(A),1(B) என்று தரத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.

மருத்துவப் பரிசோதனை நிலையங்களும் அவற்றின் தன்மைக்கு ஏற்றவாறு வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்திய மருத்துவம், யுனானி, யோகா, சித்தா, ஹோமியோபதி போன்ற முறைகளை பின்பற்றும் மருத்துவமனைகளும் இதில் அடங்கும். 

இதுபோன்ற மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் கல்வித் தகுதியும் நெறிமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.

’’இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் என்ன பலன்களை எதிர்பார்க்கலாம்?‘‘

தமிழ்நாட்டில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் போலி மருத்துவர்கள் மற்றும் போலி மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்த முடியும். மேலும், மக்களுக்கு சரியான, தரமான மருத்துவ சிகிச்சையை வழங்கிடவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது’’ என்கிறார் கிருஷ்ணன்.

நன்றி குங்குமம் டாக்டர் – 01.12.2016

Wednesday, February 22, 2017

இலவச சட்ட உதவி மையங்கள் பற்றித் தெரியுமா?


இலவச சட்ட உதவி மையங்கள் பற்றித் தெரியுமா?
எவரும் உலகிலத்தில் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. சூழ்நிலைகள்தான் பெரும்பாலும் மனிதர்களை குற்றவாளி ஆக்குகின்றன. 
பேராசைகளினாலும், ஆத்திரம் கொள்வதாலும், சிந்திக்காமல் செயல்படுவதாலும், வக்கிர எண்ணங்களினாலும் குற்றங்கள் நாட்டில் நடக்கின்றன. 
குற்றத்தை செய்தபின்பு காவலர் மூலம் கைது செய்யப்பட்டு நீதிமன்றப் படிகளில் ஏறும்போதுதான் தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று  பல பேர்கள் உணர்கிறார்கள். 
நிறைய பணத்தை செலவழித்து வழக்கறிஞர்கள் மூலம் வசதி படைத்தவர்கள்  தங்கள் வழக்கை நடத்துகிறார்கள். ஆனால்,  கிராமங்களில் வசிக்கும் பாமர மக்கள் அடிப்படை சட்ட உரிமைகளைக்கூட அறியாமல் இருக்கின்றனர். வழக்கு என்று ஒன்று வந்த பிறகு, அதற்கு யாரை நாடுவது?, எப்படி வழக்கை கொண்டு செல்வது என்று திக்குத் தெரியாமல் இருக்கின்றனர்.
படித்தவர்களில்  ஒரு சிலரும் சட்ட விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், தவறான வழக்கறிஞர்களிடம் சிக்கிக் கொண்டு நாட்களையும் பணத்தையும் வீணாக இழந்து கொண்டு இருக்கிறார்கள்.
இது போன்ற குறைகளை நீக்குவதற்கான, அரசு உருவாக்கியதுதான்  இலவச சட்ட உதவி மையங்கள் ஆகும்.
இலவச சட்டஉதவிகள்  குறித்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்  பிரிவு 304-ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நமது நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வழக்கறிஞர்  வைத்து தன் வழக்கை வாதாடுவதற்கு உரிமை வழங்க வேண்டும் என்பதுதான்  இலவச சட்ட உதவி மையத்தின் நோக்கமாகும்.
தனது குடிமக்களுக்கு நீதியை வழங்க வேண்டியது ஒவ்வொரு அரசின் கடமையாகும். நீதியைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் குடிமக்களுக்கு வழக்கறிஞரின் உதவியை அளிப்பதற்காக செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாட்டின்படி, அந்த வழக்கில் வசதியில்லாத ஏழை மக்களின் சார்பாக ஆஜராகின்ற வழக்கறிஞருக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை அரசே செலுத்திவிடும்.  
நமது மாநிலத்தில்,  ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நீதிமன்ற வளாகங்களில், இலவச சட்ட உதவி மையம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.  
இலவச சட்ட உதவிக்கு என்ன செய்ய வேண்டும்? 
வசதி இல்லாதவர்கள் தங்களுடைய வழக்குகளை நடத்த இலவச சட்ட உதவி தேவைப்படுபவர்கள் இலவச சட்ட உதவி மையத்தை அணுகி, தங்கள் வழக்கு விபரங்களை விபரமாக எழுதி மனுவாக கொடுக்க வேண்டும். அங்குள்ள பதிவாளர் தங்கள் மனுவை படித்துப் பார்த்துவிட்டு, அதற்கு ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்து தருவார். இதற்கென்று எந்தவிதமான கட்டணமும் நீங்கள் செலுத்த வேண்டியதில்லை.
எந்தெந்த வழக்கிற்கு இலவச சட்ட உதவி கிடைக்கும்?
ஜீவனாம்சம் பெறுவதற்கு. 
வரதட்சணை வழக்கு, 
நிலம் பங்கு பிரிப்பு வழக்கு 
ஜாமீன் எடுப்பதற்கு
கொலை வழக்கு,
மேல்முறையீடு செய்வதற்கு,
சீராய்வு மனு கொடுப்பதற்கு 
போன்றவைகளை எந்த ஒரு செலவும் இல்லாமல் இலவச சட்ட உதவி மையம் மூலமாக செய்துமுடித்து நீங்கள் பயன்பெறலாம். 
மேலும் பாதிக்கப்பட்ட பொது மக்கள் சட்ட உதவிகளை கேட்டு அணுகும்போது, அவர்கள் பிரச்சனை தொடர்பான சட்டத்துறையில் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரை தேர்வு செய்து கொள்வத்ற்கும்  தமிழ்நாடு சட்டஉதவி மற்றும் ஆலோசனைக் கழகம் வாய்ப்பளிக்கிறது.
பணம் உள்ளவர்களால் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்காட முடியும் என்ற நிலையை மாற்றி ஏழை, எளிய மக்களும் இந்த இலவச சட்ட உதவி மையத்தின் வாயிலாக நீதிமன்றங்களை அணுகி பயன்பெற  வேண்டும் என்பதே சட்ட உதவி மையங்களின் உயர்ந்த நோக்கமாகும். 
**********************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 22.02.2017

ரூ.400 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு சிறை


ரூ.400 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு சிறை

ஸ்ரீவி., நீதிமன்றத்தில் தீர்ப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்;வீட்டுவரி பெயர் மாற்றம் செய்ய ரூ400 லஞ்சம் வாங்கிய திருத்தங்கல் நகராட்சி ஊழியருக்கு ஒன்றரை ஆண்டு சிறைதண்டனை , ரூ. 7 ஆயிரம் அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருத்தங்கல் மேலரதவீதியை சேர்ந்தவர் அய்யனார்.43. இவரது மனைவி சாந்திக்கு அவரது பெற்றோர் இரண்டு வீடுகளை கொடுத்துள்ளனர். இதற்காக வீட்டு வரி பெயர் மாற்றம் செய்யக்கோரி, திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

பெயர் மாற்றம் செய்ய ஒரு வீட்டுக்கு ரூ. 200 வீதம் இரண்டு வீட்டுக்கு ரூ400 லஞ்சம் தருமாறு நகராட்சி அலுவலக உதவியாளர் ஜேசு கேட்டுள்ளார். 

கடந்த 2008 ஆகஸ்ட் 10ல் ஜேசு லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டார். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. 

ஜேசுவிற்கு ஒன்றரை ஆண்டு சிறை, ரூ. 7 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வசந்தி தீர்ப்பளித்தார்.

நன்றி : தினமலர் நாளிதழ் – 21.02.2017

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு-8(4)

Image may contain: text

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு-8(4)
கடந்த, 2013 வரை அமலில் இருந்த மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவு 8 - 4ன் படி, மக்கள் பிரதிநிதிகள், குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றாலும், 90 நாட்களில் மேல்முறையீடு செய்வதன் மூலம், பதவி இழப்பிலிருந்து தப்பிக் கலாம். இதனால், வழக்குகளில் தண்டனை பெற்ற பலர்,

பதவிகளில் தொடர்ந்தனர். வழக்குகளை இழுத்தடித்தனர். 2005ல் வழக்கறிஞர் லில்லி தாமஸ், சுக்லா ஆகியோர், இச்சட்டப் பிரிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். 

இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம்,'மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவு 8- 4, அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோத மானது என்ப தால், அது செல்லாது' என, கூறியது. இதனால், இரண்டு 
ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர் கள், தண்டனை அனுப வித்த காலத்தில் இருந்து, ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

இதன் மூலம், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., செல்வகணபதி உள்ளிட்டோர், தகுதி நீக்கம் செய்யப் பட்டனர். லாலு பிரசாத்தை காப்பாற்றும் முயற்சி யாக, அப்போதைய காங்., அரசு, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, அவசர சட்டம் கொண்டு வந்தது. ஆனால், காங்., துணை தலைவர் ராகுல் எதிர்ப்பால், இச்சட்டம் நிறைவேற்றப்படவில்லை. 

இதன்பின், 2014ல், சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு காரணமாக, இந்தியாவிலேயே பதவி இழந்த முதல் முதல்வர் என்ற பெயரை, ஜெயலலிதா பெற்றார். தற்போது, சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் எதிர்ப்பு, கவர்னர் வித்யாசாகர் ராவின் தாமதம் போன்ற காரணங்களால், எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருந்தும், சசிகலா முதல்வராக பதவியேற்பது தள்ளிப் போனது.ஒருவேளை அவர் பதவியேற்றிருந்தால், குற்ற வழக்கில் தண்டனை பெற்று, பதவியை 
இழந்த இரண்டாவது முதல்வர் என்ற பெயர் கிடைத்திருக்கும்.

சசிகலா இன்னும் அனுபவிக்க வேண்டிய மூன்றரை ஆண்டுகள் தண்டனையை முடித்து விட்டு, நடப்பு, அ.தி.மு.க., ஆட்சியிலேயே வெளியில் வந்து விடுவார். இருப்பினும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, தண்டனை அனுபவித்த நாளில் இருந்து, மேலும், ஆறு ஆண்டுகள் அவர், தேர்தலில் போட்டியிட முடி யாது. வரும், 2027ம் ஆண்டில், அரசியல் சூழல் அவருக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில், தேர்தலில் போட்டியிடலாம். 

- நமது நிருபர் -

நன்றி : தினமலர் நாளிதழ் - 21.02.2017

பினாமி நடவடிக்கைகள் (தடுப்பு)திருத்தச் சட்டம்-2016


பினாமி நடவடிக்கைகள் (தடுப்பு)திருத்தச் சட்டம்-2016

ஆட்டம் போடும் பினாமிகளும் திருத்தப்பட்ட தடுப்புச் சட்டமும்!

பண மதிப்பு நீக்க நடவடிக் கையின் பாதிப்பு நீங்கியுள்ள நிலையில், மத்திய அரசு இப்போது பினாமிகளின் பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளது. 
ஆனால் இதற்கான சட்டம் இந்த நடவடிக்கைக்கு முன்பே கொண்டு வரப்பட்டுவிட்டது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

சொத்துக்கான உரிமை ஒருவரிடம்; ஆனால், பல்வேறு சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க வசதியாக வேறு ஒருவர் பெயரில் எழுதித் தருவது. அதாவது, உண்மையான உரிமையாளர் ஒருவர்; போலியாக அல்லது பொய் யாகப் புனையப்பட்ட உரிமை யாளர் மற்றொருவர். இவர்தான் பினாமி.

இத்தகைய பினாமி நடவடிக் கைகளைத் தடுப்பதற்காக 1988-ம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டது. இதில் பல மாற்றங்களைச் செய்து, ‘பினாமி நடவடிக்கைகள் (தடுப்பு) திருத்த சட்டம் 2016' கொண்டு வரப்பட்டுள்ளது.

2016 ஆகஸ்ட் 10 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற இச்சட்டம், அரசு இதழில் (‘கெஜட்') வெளியாகும் நாளில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டது. இச்சட்டத்தின் அவசரம் அவசியம் கருதி, மறுநாளே (ஆகஸ்ட் 11) இதனை அரசிதழில் வெளியிட்டது.

``சொத்துக்கான ‘விலை’யை ஒருவர் வழங்கி, உடனடி (அ) எதிர்கால, நேரடி (அ) மறைமுக நன்மைக்காக, இந்தச் சொத்தின் உரிமை வேறு ஒருவரிடம் தரப்பட்டால்,
யார் இந்த சொத்தை வைத்துக் கொள்கிறாரோ அல்லது இச்சொத்தின் மீது தனது ‘பெயரைப் பயன்படுத்திக் கொள்ள' யார் அனுமதிக்கிறாரோ, அவர் ‘பினாமி’ ஆகிறார்.

சில விதி விலக்குகளும் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று - ‘குடும்பச் சொத்தாக இருந்து, குடும்பத் தலைவர் ('கர்த்தா') சொத்துகளை நிர்வகிப்பவராக இருந்தால், அவர், ‘பினாமி' ஆகமாட்டார்'. இது குடும்பங்களுக்குத்தான் செல்லுபடி ஆகும்; ‘குடும்பம் மாதிரியான' அமைப்புகளுக்கு அல்ல!

இந்த சட்டம், தனி நபர்களுக்கு மட்டுமல்ல நிறுவனம், கூட்டு வியாபாரம், ‘தனிநபர்களின் சங்கம்'... என அனைத்துக்குமே பொருந்தும்.

`சொத்து’ என்பது நகரும், நகரா; கண்ணுக்குப் புலப்படும், புலப்படா எல்லாவகை சொத்துகள்; எல்லாவித ‘உரிமைகள்', சட்டபூர்வ ஆவணங்கள், சாதனங்கள் ஆகியன அனைத்தும் அடங்கும். 

மாற்றத்துக்கு உள்ளாகக் கூடிய சொத்துகளாக இருந்தால், மாற்றப்பட்ட வடிவமும் அதன் மூலம் ஏற்படும் பயன்களும் கூட இப்பிரிவின் கீழ்,`சொத்து' ஆகும்.

`பினாமி’ நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு ஒரு ஆண்டு முதல் 7 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை விதிக்க சட்டம் வகை செய்கிறது. மேலும், பினாமி சொத்தின் ‘சந்தை' மதிப்பில், 25% அபராதம் விதிக்கப்படும். 

வேண்டுமென்றே தவறான தகவல் அல்லது தவறான ஆவணம் தருவோருக்கு 6 மாதங்களுக்கு குறையாமல் 5 ஆண்டுகள் வரை கடுங்காவல் மற்றும் சொத்தினுடைய ‘சந்தை’ மதிப்பின் 10% அபராதம் விதிக்கிறது இச்சட்டம்.

ஒரு பினாமிதாரர், அதன் பிறகு வேறு ஒரு பினாமிதாரருக்கோ, அல்லது முதல் உரிமையாளருக்கோ கூட பினாமி சொத்துகளை மாற்ற முடியாது.

பினாமி நடவடிக்கைகளின் மீது ‘செயல் புரிய’, தீர்மானிக்கிற பொறுப்பாளர்களை (adjudicating authorities) மத்திய அரசு நியமிக்கலாம்.தேவைப்பட்டால் மத்திய அரசு, மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்து ஆலோசித்து, சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து விரைந்து தீர்வு காணலாம்.

பினாமி சொத்துகளாக தீர்மானிக்கப்படுபவை மத்திய அரசால் பறிமுதல் செய்யப்பட நேரிடும். ‘பினாமி'களுக்கு எதிரான சட்டம் தயாராகி விட்டது. நடைமுறைக்கும் வந்து விட்டது. முகமூடிகளின் கதைகள் முடிவுக்கு வரும் என்று நியாயமாக எதிர்பார்க்கலாம்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 22.02.2017

Monday, February 20, 2017

அன்னப்பிளவு

அன்னப்பிளவு


1 அன்னப்பிளவு என்றால் என்ன?
கர்ப்ப காலத்தில் குழந்தை கருப்பையில் வளரும்போது, ரத்த நாளத்திலிருந்து, மூக்கின் கீழ்ப்பகுதி வளர உதவும் தசைகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் தடையேதும்
ஏற்பட்டால், அப்பகுதி முழுமையாக வளர்ச்சி பெறாமல் பிளந்து காணப்படும். இதுவே, அன்னப்பிளவு என்றழைக்கப்படுகிறது.
2அன்னப்பிளவு ஏற்பட காரணம் என்ன?
கருவிலிருக்கும் குழந்தையின் உடல் உறுப்புகள், முழு வளர்ச்சி அடையாமல் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமே, ஊட்டச்சத்து குறைபாடு தான். எனவே, கர்ப்பிணிகள், கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதோடு, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
3 இப்பிரச்னை பிறவிக் குறைபாடா?
கருவிலேயே குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுவதால், இது பிறவிக் குறைபாடு தான். இப்பிரச்னையை குழந்தை கருவில்இருக்கும் போதே தீர்க்க முடியாது. குழந்தை பிறந்தவுடன் தான் தீர்வு காண முடியும்.
4 இப்பிரச்னையால் எவ்வகையான குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்?
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பை சார்ந்தவர்களுக்கு, பிறக்கும் குழந்தைகளில், சில பேர் அன்னப்பிளவோடு பிறக்கின்றனர். கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்தின்
முக்கியத்துவத்தை அறியாமல், சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளாத மற்றும் கர்ப்ப காலத்தை அதிக மன அழுத்தத்தோடு கடத்தும் கர்ப்பிணிகளுக்கு, பிறக்கும் குழந்தைகள் அன்னப்பிளவால் பாதிக்கப்படுகின்றனர்.
5 மேற்சொன்ன காரணங்களால் மட்டுமே அன்னப்பிளவு ஏற்படுகிறதா?
கர்ப்ப காலத்தில், மருத்துவரின் அறிவுரை படி, நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யாத கர்ப்பிணிகளுக்கு, பிறக்கும் குழந்தைகள் அன்னப்பிளவால் பாதிக்கப்படுகின்றனர். அது மட்டுமல்ல; கர்ப்பத்திலுள்ள குழந்தைகள் அன்ன வளர்ச்சிக்கு செல்லும் ரத்தக்குழாயான முகத்தமனியை, சில வேளைகளில் கருவிலிருக்கும் குழந்தைகளே அழுத்திக் கொண்டிருந்தாலும் இப்பிரச்னை ஏற்படும்.
6 கருப்பையிலிருக்கும் குழந்தைக்கு உடல் உறுப்புகள் முழு வளர்ச்சியடையாமல் இருக்கிறது என்பதை, எவ்வாறு அறிந்து கொள்வது?
‘ஸ்கேன்’ செய்து கொள்வது பற்றி, மக்களிடம் மிகத் தவறான கருத்து நிலவுகிறது. மருத்துவத் துறையில் வியக்கத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கும் காலம் இது. எனவே கர்ப்பிணிகள் அனைவரும் கட்டாயம் தேவையான சமயங்களில், பரிசோதனை செய்வதன் மூலம், குழந்தையின் உடல் உறுப்புகள் சீராக வளர்ச்சியடைந்து இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம்.
7 கருவிலிருக்கும் போதே குழந்தைக்கு ஏற்படும் வளர்ச்சி குறைபாட்டை, சீர் செய்ய முடியாதா?
குழந்தை வயிற்றில் இருக்கும் போதே, சில குழந்தைகளுக்கு அன்னப்பிளவு, ஆறாவது விரல் போன்ற குறைபாடுகள் இருக்கும், சில குழந்தைகளுக்கு வயிற்றுப் பகுதி லேசாக வீங்கியிருக்கும். இது மாதிரியான குழந்தைகளுக்கு உடனே சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவசியமில்லை; செய்யவும் முடியாது. எனவே, குழந்தை பிறந்தபின் மட்டுமே சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
8 குழந்தைகள் அன்னப்பிளவு பாதிப்பை தவிர்க்க என்ன செய்யலாம்?
கர்ப்ப காலத்தில் ஊட்டச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். சீரான நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனையுடன் செய்ய வேண்டும்.
மன அழுத்தம் இல்லாமல், மன மகிழ்ச்சியோடு கர்ப்ப காலத்தை கடக்க வேண்டும்.
9 அன்னப்பிளவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எவ்வகையான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்?
காது, மூக்கு மற்றும் தொண்டை வளர்ச்சி குறைபாடுகளும் ஏற்படும். சில குழந்தைகளுக்கு இதயம் சார்ந்த நோய்களும் ஏற்படும். திட, திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளும்
போது, அவை மூக்கு வழியாக வெளியேறும். மூக்கு வழியாக சென்ற உணவு நுரையீரலுக்கு செல்வதால், நிமோனியா காய்ச்சல் போன்றவை ஏற்படும்.
10 இதற்கு சிகிச்சை என்ன?
குழந்தை பிறந்த மூன்று மாதம் முதல், ஒரு வருடத்திற்குள் முகசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்தால் நல்ல பலன் இருக்கும். குழந்தை வளர்ந்த பின் சிகிச்சை மேற்கொண்டால் அங்கிருக்கும் சதைகள் குறைபடுவதால், முகசீரமைப்பு சீராக வராது. அன்னப்பிளவு, தீர்க்கக் கூடிய பிரச்னையே!
By vayal on 17/02/2016

பிஎப் பணத்தை இணையம் மூலம் எடுக்கலாம்!


பிஎப் பணத்தை இணையம் மூலம் எடுக்கலாம்!

கவணிக்க வேண்டிய 10 விஷயங்கள்! 

இணையம் மூலம் பிஎப் பணத்தை பெறக்கூடிய சேவை மற்றும் பிஎப் பிடித்தம் அளவை முடிவு செய்வது போன்ற சேவையை அளிக்க இருக்கின்றது.

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் இணையம் மூலம் பிஎப் பணத்தை பெறக்கூடிய சேவை மற்றும் பிஎப் பிடித்தம் அளவை முடிவு செய்வது போன்ற சேவையை அளிக்க இருக்கின்றது. 

இந்தச் சேவையை பயன்படுத்துவது பயனர்களுக்கு அவ்வளவு எளிதான செயல் அல்ல என்ற போதிலும் வேகமாக பிஎப் பெறுதல் முறைகளைப் பின்பற்ற முடியும் என்று கூறப்படுகின்றது. இதற்காக அனைத்துக் கிளை அலுவலகங்களையும் சர்வரில் இணைக்கும் பணி நடந்து வருவது என்றும், இந்தப் பணிகள் எல்லாம் முடிவடைந்த உடன் இணையத்தில் சமர்ப்பிக்கக் கூடிய பிஎப் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்படும் என்றும் அதைப் பயன்படுத்தி எளிதாக பணத்தை திரும்பப் பெற இயலும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையம் அறிவித்துள்ளது. 

இணையம் மூலம் சில மணி நேரத்தில் எடுக்கக் கூடிய பிஎப் முறையில் இருந்து நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை இங்குப் பார்ப்போம்.

1 கோடி விண்ணப்பம் 

ஓய்வூதிய நிதி ஆணையம் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இப்போது 1 கோடி விண்ணப்பங்கள் வரை திரும்பப் பெறும் கோரிக்கைக்காக மட்டும் சமர்ப்பிக்கப்படுகின்றது.

சில மணி நேரத்தில் பிஎப் பணம் 

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இணையம் மூலம் செயல்படும் போது சில மணி நேரங்களில் வங்கி பரிவத்தனைகள் பொன்று விண்ணப்பித்த விண்ணப்பித்த அன்றே கிடைக்கும்.

தற்போதைய குறைந்தபட்ச நாட்கள் 

பிஎப் அலுவலகங்களில் இப்போது பணத்தை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகள் பெறும் போது குறைந்தது 20 நாட்களுக்குள் வரை நேரம் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. 50 துறை அலுவலகங்களில் பைலட் திட்டம் மூலம் ஏற்கனவே பிஎப் அலுவலகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இப்போது மீதம் உள்ள 123 அலுவலகங்களை மத்திய சர்வருடன் இணைக்க வருங்கால வைப்பு நிதி ஆணையம் முடிவு செய்துள்ளது.  

ஆதார் அவசியம்

 ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இதற்காக அனைத்து பிஎப் கணக்குகளுக்கும் ஆதார் எண் அவசியம் என்று கூறுகின்றது. இதனால் பிஎப் சந்தாதார்கள், மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை பிஎப் கணக்குடன் இணைத்தல் வேண்டும்.

ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு 

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு மட்டும் இல்லாமல் வங்கி கணக்குகளிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருந்தால் மட்டுமே இந்த முறை எளிதாக பணத்தை எடுக்க முடியும்.

வரி விலக்கு 

நீண்ட கால சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல சேமிப்பு திட்டங்களில் வரி விலக்கை அளிக்கின்றது அரசு. பிஎப் பணத்தை 5 வருடங்களுக்கும் அதிகமாக எடுக்காமல் இருந்தால் மொத்த பிஎப் தொகைக்கும் வரி செலுத்த தேவையில்லை. இரண்டு மூன்று நிறுவனங்களில் மாற்றம் செய்து பணி புரிந்து வந்தாலும் புதிய நிறுவனத்திற்கு மாறும் போது பழைய பிஎப் கணக்கையே தொடரவும் முடியும். இதற்கு புதிய நிறுவனத்திற்கு நீங்கள் பணி புரிந்த பழைய நிறுவனத்தில் இருந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.

5 வருடங்களுக்கு முன்பு பிஎப் பணத்தை எடுத்துக்கொண்டால் என்னவாகும்..? 

ஐந்து வருடத்திற்கு முன்பு பிஎப் பணத்தை திரும்பப் பெறும் போது அந்த ஆண்டு வருமானத்தில் பிஎப் பணத்தை கணக்கு காண்பித்து வரி செலுத்த வேண்டும். நிறுவனத்தின் பங்கீட்டிற்கும் சேர்த்து வரி பிஎப் பணத்தில் தங்களது பங்கீடு மட்டும் இல்லாமல் நிறுவனத்தின் பங்கிடு மற்றும் அதன் வட்டிக்கும் சேர்த்து வருமான வரி செலுத்த வேண்டி வரும்.

பிரிவு 80 சி 

பிஎப் பணத்தை ஐந்து வருடங்களுக்கு முன்பு எடுக்கும் போது அது உங்களது வருமானமாகத் தான் காண்பிக்கப்படும். இதனைப் பிரிவு 80சி-ன் கீழும் காண்பித்து அதன் மூலம் பெறும் வட்டிக்கும் வரி விலக்கு பெற இயலாது. பிஎப் மூலம் பெறும் வட்டி பணம் கூட உங்களுக்குக் கிடைத்த பிற வருவாயாகத் தான் கணக்கிடப்படும்.

டிடிஎஸ்(TDS) 

தொடர்ந்து ஒரு நிறுவனத்தில் ஐந்து வருடம் பணி புரிந்த பிறகு பிஎப் பணத்திற்கு எந்த வரியும் கிடையாது. இதுவே ஐந்து வருடத்திற்குள் பணத்தை திரும்பப் பெறும் போது பான் எண்ணைச் சமர்ப்பிக்கவில்லை என்றால் 30 சதவீதம் வரை டிடிஎஸ் செலுத்த வேண்டி வரும். 

இதுவே பான் எண்ணை 15ஜி/15எச் உடன் சமர்ப்பித்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது. 

இதுவே படிவம் 15ஜி/15எச் சமர்ப்பிக்காமல் பான் எண்ணை மற்றும் சமர்ப்பித்தால் 10 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். படிவம் 15ஜி/15எச் யாருடைய வருமான எல்லாம் வருமான வரி விளம்பிற்குக் குறைவாக இருந்தும் வரி பிடித்தம் செய்யப்படுகின்றதோ அவர்களுக்கு அதில் இருந்து விலக்குப் பெற பயன்படுவதாகும்.

Written by: Tamilarasu

குட்ரிட்டன்ஸ் » தமிழ் » செய்திகள் 20.02.2017

மனை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை


மனை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை
வீட்டு மனை வாங்குவது இப்போது அதிகரித்துவருகிறது. பின்னால் வீடு கட்டுவதற்காகவும், சந்ததியினருக்கான முதலீடாகவும் இந்த வீட்டு மனை இப்போது பார்க்கப்படுகிறது.
இன்றைக்கு வேலையின் பொருட்டு வெவ்வேறு ஊர்களில் வசிக்க வேண்டியிருப்பதால் அங்கேயே தங்களுக்கான வீட்டு மனைகளை வாங்கிவருகிறார்கள். சிலர் நில மதிப்பு உயரும் சாத்தியம் உள்ள பகுதிகளைத் தேடி முதலீடு செய்கிறார்கள். இம்மாதிரி தெரியாத இடத்தில் வீட்டு மனை வாங்கும்போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
நமது சொந்த ஊரில் மனை வாங்கும்போது அந்த நிலத்தில் உள்ள வில்லங்கம், வாரிசுகள் யாரும் இருக்கிறார்களா என்பன போன்ற விவரங்கள் தெரியவரும். அல்லது குறைந்தபட்சம் நாம் வசிக்கும் இடத்திற்கு அருகில் என்றால் அந்தச் சம்பந்தப்பட்ட இடத்தைத் தொடர்ந்து பார்வையிட முடியும். தரகர்களை மட்டுமே நம்பி வெளியூரில் வீட்டு மனை வாங்கும்போது பல விஷயங்களில் நாம்தான் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்.
நாம் வாங்கப் போகும் இடம் வீடு கட்டுவதற்கான நிலமாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்துத் தெளிவுபெற வேண்டும்.
காலி நிலங்களை வீட்டு மனைகளாகப் பிரித்து விற்கும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் உள்ளாட்சிகளுக்கான வழித்தடத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கவில்லை என்றால் அந்த இடத்தை நாம் கொடுக்க வேண்டியிருக்கும்.
அதனால் முறையாக உள்ளாட்சிகளின் வழித்தடத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளுங்கள். உள்ளாட்சிகளுக்கு முறையாக இடம் ஒதுக்கும்போதுதான் அந்த அமைப்பு நம் பகுதிக்கான சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதரும்.
வெளியூர்களில் இதுமாதிரி விற்பனைசெய்யப்படும் இடங்களில் பெரும்பாலானவை முறைப்படி உள்ளாட்சிகளுக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருக்கிறது. அடிப்படை வசதிகள் கோரி உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செல்லும்போதுதான் இது நமக்குத் தெரிய வரும். அதுபோல ஊருக்கு வெளியே நிலம் வாங்கும்போது அதில் ஓடைகள், வாய்க்கால் போன்ற மழைநீர்ப் பாதைகள் இருந்தனவா என்பதைக் குறித்து விசாரித்து அறிந்துகொள்ள வேண்டியது.
மழைநீர் வரும் பாதை என்றால் பிற்காலத்தில் பிரச்சினைகள் வரக் கூடும். மேலும் மழைக்காலத்தில் நீர் தேங்கும். முக்கியமான பிரச்சினை இம்மாதிரியான நிலத்தில் நிலத்தடி மண் ஈரத்தன்மையுடன் இருக்கும். அதனால் கட்டிடத்திற்கான அஸ்திவாரம் வலுவாக இட வேண்டியதிருக்கும்.
மனையின் சாலை அளவு உள்ளாட்சி அமைப்பைப் பொறுத்து மாறுபடும். மாநகராட்சி என்றால் 24 அடி, நகராட்சி என்றால் 23 அடி இருக்க வேண்டும். அப்போதான் உங்க மனைக்கு அப்ரூவல் கிடைக்கும்.
லே அவுட்டில் மனையைப் பார்க்கும்போது சாலை எத்தனை அடி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டுக் கடன் வாங்கும்போது, முதலில் கேட்கப்படும் விஷயம் லே அவுட் அங்கீகாரம்தான்.
தி இந்து தமிழ் நாளிதழ் - 04.10.2014

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள்


நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள்
சுத்தம் சுகம் தரும்! தினமும் இருமுறை குளிக்கிறோம். தேவைப்படும் போது எல்லாம் முகம், கை, கால் கழுவிக்கொள்கிறோம். சுத்தம் என்பது வெளிப்புறத்தில் மட்டுமில்லை. உள்ளேயும் கூடதான். உள் உறுப்புக்களை எப்படிச் சுத்தம்செய்வது? உள்ளுறுப்புகளில் கழிவுகள் சேராதவகையில் இருந்தால், நோயின்றி உறுப்புகள் சீராகச் செயல்படும். மாசு நிறைந்த காற்றும், வாகனப் புகை, சிகரெட் புகையும் நுரையீரலில் அழுக்காகப் படியும். இந்தக் கழிவுகளை சுலபமாக எப்படி அகற்றுவது?
குருசிஃபெரஸ் காய்கறிகள் (Cruciferous vegetables)
முட்டைகோஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்தக் காய்கறிகளின் இதழ்கள், சிலுவை போன்ற அமைப்பில், ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கடுக்காக வளர்வதால் இந்தப் பெயர். உதாரணம் முட்டைகோஸ், புரோகோலி, காலிஃபிளவர். இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்துள்ளன. இது நுரையீரலில் உள்ள நச்சுக்களை அகற்றும். குளுகொசினேட்ஸ் (Glucosinolates) என்ற சத்து, புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜன் என்ற காரணியை அழித்து, செல்களுக்குப் பாதுகாப்பைத் தரும். பூச்சிகொல்லி தெளிக்கப்படாத ஆர்கானிக் காய்கறிகளாக வாங்கிச் சாப்பிடுவது நல்லது.
கார்டீனாய்ட்ஸ் (Cartenoids)
இது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் ஓர் சத்து. இதுவும் ஆன்டிஆக்ஸிடன்ட்தான். நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. இந்த சத்து ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் நிறப் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும். சக்கரவள்ளிக் கிழங்கு, கேரட், பரங்கிக்காய், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்ரிகாட் ஆகியவற்றில் அதிக அளவில் கார்டீனாய்ட் சத்து உள்ளது. பீட்டாகரோட்டினும், வைட்டமின் ஏ-வும் சேர்ந்து இருப்பதால், நுரையீரலின் நண்பன் கேரட்.
ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்

நுரையீரலுக்கு மட்டும் அல்ல. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நன்மைகளைச் செய்யக்கூடிய சத்து இது. நுரையீரல் செயல்பாட்டைச் சீராக்க உதவும். நுரையீரலில் ஏற்படும் வீக்கங்கள் போன்றவற்றைக் குறைப்பதற்கு உதவும். அனைத்துவகை மீன்கள், பாதாம், வால்நட் போன்ற நட்ஸ், பிளாக்ஸ் மற்றும் வெள்ளரி விதைகள் போன்றவற்றில் ஒமேகா 3 சத்து நிறைந்துள்ளது.
பூண்டு


இது ஒரு மூலிகைப் பொக்கிஷம். உடலில் இயற்கையாக எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். கெட்ட கொழுப்பைக் கரைத்து, ஆரோக்கியமாக வைக்கும். உணவில் அவ்வப்போது சிறிது பூண்டைச் சேர்த்துவர, நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். இதில் உள்ள அலிசின் (Allicin) சத்து, ஒரு நேச்சுரல் ஆன்டிபயாடிக். பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகளிலிருந்து நுரையீரலைக் காக்கும்.
இஞ்சி

பூமிக்கு அடியில் விளையும் இந்தக் கிழங்கு, ஒர் பவுர்ஃபுல் ஆன்டிஆக்ஸிடன்ட். நுரையீரலில் படிந்திருக்கும் கழிவுகளை அகற்றும். நுரையீரல் வீக்கத்தைக் குறைக்கும். நுரையீரலில் இருக்கும் மியூகஸ் எனும் திரவத்தைக் குறைக்கும் தன்மை இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் சத்தில் உள்ளது. ஆஸ்துமா நோயாளிகள் சுலபமாக சுவாசிக்க இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சுவாசப் பாதையைச் சீராக்கும். டீ, ஜூஸ் போன்றவற்றில் சிறிதளவு இஞ்சியை சேர்த்துக்கொள்ளலாம்.
வைட்டமின் சி

உடலில் ஆக்சிஜனை முழுமையாகக் கடத்திச் செல்ல வைட்டமின் சி உதவும். நுரையீரலின் சீரான இயக்கத்துக்கு உதவும். ஆஸ்துமா, பிரான்சிடிஸ் போன்ற பிரச்னைகளின் தீவிரத்தைக் குறைக்கும். நெஞ்சக நோய் தொடர்பான பிரச்னைகளின் வீரியம் குறையும். கொய்யா, ஆரஞ்சு, கிவி, எலுமிச்சை, சாத்துகுடி, மாதுளை, பைன் ஆப்பிள் போன்றவை நுரையீரலின் பாடிகாட்ஸ்.
நன்றி : ப்ரீத்தி (விகடன் செய்திகள் - 17.02.2016)

Saturday, February 18, 2017

நம்பிக்கை வாக்கெடுப்பும், கட்சி தாவல் தடை சட்டமும்


நம்பிக்கை வாக்கெடுப்பும், கட்சி தாவல் தடை சட்டமும்  

10 முக்கியத் தகவல்கள் - சட்டம் என்ன சொல்கிறது?

 1985ல் உருவாகி, 2003ல் திருத்தப்பட்டது கட்சித் தாவல் தடை சட்டம்

 கட்சியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக விலகினால் பதவி  பறிபோகும்

 கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால் பதவி பறிபோகும்

 சட்டமன்ற / நாடாளுமன்றக் கட்சி உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைந்தால் பதவி தப்பும்

 ரகசிய வாக்கெடுப்பா, வெளிப்படையான வாக்கெடுப்பா என்பது சபாநாயகரின் முடிவு

 சபாநாயகரின் முடிவு இறுதியானது - ஆனால் நீதிமன்றங்கள் சில சந்தர்ப்பங்களில் மறுபரீசலனை செய்யலாம்

 அவையில் கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தாலும்,  வாக்கு செல்லும்.

 கொறடாவின் உத்தரவை மீறிய உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமுன் நோட்டிஸ் கொடுத்துத்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.

 மீறிய உறுப்பினர்களை சபாநாயகர் மன்னிக்கவும் வழிவகை உண்டு.

 கட்சியிலிருந்து விலக்கப்பட்ட உறுப்பினர்களை கொறடா கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு விடையில்லை.

நன்றி : BBC - தமிழ் - 17.02.2017

குடற்புழுவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க


குடற்புழுவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க

குழந்தைகள் வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்குவதெல்லாம் கொள்ளுப் பாட்டிகளுக்கு கை வந்த கலை. குழந்தைக்கு மாதத்தில் ஒரு நாள் விளக்கெண்ணெயைக் குடிக்க வைத்து வயிற்றைச் சுத்தம் செய்வார்கள். பின்பு பத்தியச் சாப்பாடு கொடுத்து பேரன் பேத்திகளின் உடல்நலத்தைக் காப்பார்கள். எல்லாரும் வளர்ந்து நின்ற பின்னும் இதுவே வழக்கமாக இருக்கும்.

வீட்டு மருத்துவத்தை விட்டொழித்து அலோபதி மருத்துவத்தை நம்பிய பின் மருத்துவராய் பார்த்து வயிற்றில் பூச்சி இருக்கலாம் என்ற கணிப்பில் பூச்சி மருந்துகள் கொடுக்கப்படுகிறது. அதுவும் குறிப்பிட்ட இடைவெளியில் கொடுக்கப்படுவதில்லை. குடற் புழுக்கள் ஜாலியாக வளர்ந்து குழந்தைகளைப் படுத்தியெடுக்கும்.

தமிழக பள்ளிகளில் 2 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வழியாக இந்தக் குடற்புழு நீக்க மருந்து கொடுக்கப்படுகிறது. 

இது குறித்து மருத்துவக் கண்காணிப்பாளர் அம்சவேணி கூறுகையில்,

“குடற்புழுக்களின் அட்டகாசம், சுவையான உணவையும் சாப்பிட விடாது. போதிய சத்துணவு எடுத்துக் கொள்ளாததால் உடல் மெலிந்தும், வெளுத்தும் காணப்படுவார்கள். வறட்டு இருமல், இளைப்பு மற்றும் வயிற்றுப் போக்கு, வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.

குடற்புழு தொற்று இருப்பவர்கள் அடிக்கடி மலம் கழிக்க வேண்டியிருப்பது போல் உணர்வார்கள். குடற்புழு உள்ளவர்களுக்கு தோல் பகுதியில் வெள்ளைத் திட்டுகள் இருப்பதால் அரிப்பால் அவதிப்படுவார்கள். சில புழுக்கள் குழந்தையின் ஆசனவாயில் முட்டையிடுவதால் அந்த இடத்தில் அரிப்பு ஏற்பட்டு இரவில் அவதிப்படுவதைப் பார்க்கலாம்.

ஒரு புழு, ஓர் ஆண்டில் 300 முட்டைகள் வரை இடுகிறது. கொக்கிப்புழு மற்றும் குடற்புழு என்று இரண்டு வகையாக புழுக்கள் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குடற்புழு நீக்க மாத்திரை புளிப்புச் சுவையில் இருக்கும். அப்படியே மென்று சாப்பிட வேண்டியதுதான். வாந்தி, பேதி போன்ற அறிகுறிகள் இருக்காது. 

ஆறு மாதத்துக்கு ஒரு முறை குழந்தைகள் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளவேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த மாத்திரை பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பள்ளிகளில் குழந்தைகள் மத்தியில் ஆய்வு செய்யப்பட்டது. கொக்கிப் புழுக்கள் குழந்தைகளின் ரத்தத்தை உறிஞ்சுவதால் ரத்த சோகை நோய்க்கு ஆளாகின்றனர். வயிற்றுப் பிரச்னைகளோடு, சோர்வாகவும் காணப்படலாம். இதனால், குழந்தைகள் படிப்பில் ஆர்வம் குறைந்து விடுகிறது. இந்த புழுக்களின் அட்டகாசம் அவர்களின் மூளைத்திறனில் கை வைத்து படிப்பை காலி செய்வது வரை நடக்கிறது.

அதனால், இரண்டு வயது வரை அரை மாத்திரை வழங்கப்படுகிறது. இரண்டு வயதுக்கும் மேல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 400 மிலி கிராம் அளவு கொண்ட ஒரு மாத்திரை வழங்கப்படுகிறது.

இந்த மருந்து கொடுக்கப்பட்ட பின்பு குழந்தைகள் பள்ளியில் இருந்து இடை நிற்றல் குறைந்துள்ளது. ரத்தசோகை ஏற்படாமல் பாதுகாப்பதுடன் படிப்பிலும் கவனம் செலுத்த குழந்தைகளுக்கு உதவுகிறது. குறிப்பிட்ட வயதுள்ள அனைத்து குழந்தைகளும் குடற்புழு நீக்க மருந்தை ஆறு மாத இடைவெளியில் எடுப்பது நல்லது. 

இந்த மாத்திரையைக் கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ஏற்படும் அறிகுறிகள் அதற்கான முன் தயாரிப்புகள் குறித்தும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

குடற்புழு மாத்திரை எடுத்துக் கொள்ள குழந்தைகள் பயப்படத் தேவையில்லை” என்கிறார் அம்சவேணி.

நன்றி : விகடன் செய்திகள் - 15.02.2017