disalbe Right click

Tuesday, March 21, 2017

உயில் - முழு தகவல்கள்

Image may contain: 1 person, sunglasses and text
உயில் - முழு தகவல்கள்

ஒருவர், தன் வாழ்நாளுக்குப் பின்னர், அவரின் சொத்துக்களை, உயில் மூலம், அவர் விரும்பும் நபருக்கு கொடுக்கலாம்! அப்படி எந்த உயிலும் எழுதி வைக்காமல் அவரின் சொத்தை விட்டுவிட்டு இறந்து விட்டால், அவரின் சட்ட பூர்வ வாரிசுகளுக்குச் சென்று விடும்; உயில் எழுதி வைத்தால், அவர் விரும்பியவருக்கு கொடுத்து விடலாம்; உயில் எழுதாமல் இறந்தால், சட்டபூர்வ வாரிசுகளை அடையும்.

உயில் எழுதி வைக்காத சொத்துக்கள், அந்தந்த மதச் சட்டப்படி இறந்தவரின் வாரிசைச் சென்று அடையும்.

 இந்துவுக்கு “இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956” உள்ளது; (இது 2005-ல் திருத்தம் செய்யப் பட்டது).

 அதுபோலவே, கிறிஸ்தவருக்கு வேறு ஒரு வாரிசு சட்டம் உள்ளது; அதன் பெயர் “இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925”

 இதுபோலவே முகமதியர்களுக்கும் (முஸ்லீம்களுக்கும்) ஒரு வாரிசுரிமைச் சட்டம் உள்ளது; அதன் பெயர் “ஷரியத் சட்டம் 1937”; 

முதற்கட்ட வாரிசுகள்
இந்து மதத்தைச் சார்ந்த ஒரு ஆண், அவரின் சொத்தை உயில் எழுதி வைக்காமல் இறந்து விட்டால், அவரின் வாரிசுகளான, அவரின் தாயார் (அப்போது உயிருடன் இருந்தால்), மனைவி, மகன்கள், மகள்கள் இவர்களுக்கு மட்டும் போய்ச் சேரும். இவர்கள் அனைவருமே முதல்கட்ட வாரிசுகள் ஆவார்கள். 

இரண்டாம்கட்ட வாரிசுகள்
இறந்தவரின் தந்தை இரண்டாம் கட்ட வாரிசாக வருகிறார். முதல் கட்ட வாரிசுகள் யாரும் இல்லை என்றால் மட்டுமே, இரண்டாம் கட்ட வாரிசாக, தந்தை, அவரின் இறந்த மகனின் சொத்து முழுவதையும் அடைவார். முதல் கட்ட வாரிசுகள் யார் யார் அப்போது உயிருடன் இருக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் தலைக்கு ஒரு பங்குவீதம் சொத்தை அடைவார்கள்.

இந்து மதத்தின்படி
இந்து மதத்தைச் சார்ந்த பெண் ஒருவர், தன் சொத்தை விட்டுவிட்டு, உயில் எழுதி வைக்காமல் இறந்து விட்டால், அந்தச் சொத்து, அவரின் கணவர், மகன்கள், மகள்கள் அடைவார்கள்.

 இந்துமதப் பெண்ணுக்கு குழந்தைகள் இல்லை என்றால், அந்தப் பெண்ணின் சொத்து வேறு மாதிரி வாரிசுகளை அடையும். அதாவது, 

(1)அந்த பெண்ணுக்கு குழந்தை இல்லாமல் இறந்து விட்டால், இறந்த பெண்ணின் சொத்து சுய சம்பாத்திய சொத்தாக இருந்தால், அவளின் கணவருக்குப் போய்ச் சேரும்; கணவரும் இல்லையென்றால், கணவரின் வாரிசுகளுக்குப் போய் சேர்ந்துவிடும்.

(2)இறந்த பெண்ணுக்கு, குழந்தையும் இல்லாமல், இருந்தால், அவளின் சொத்து, தன் பெற்றோரிடமிருந்து கிடைத்த சொத்தாக இருந்தால், அந்த சொத்து, திரும்பவும் அவளின் தந்தைக்கே போய்ச் சேர்ந்துவிடும்.

(3) இறந்த பெண்ணின் சொத்து, கணவரின் தகப்பனாரான மாமனாரிடமிருந்து கிடைத்து இருந்தால், அது அவளின் மாமனாருக்கே போய்ச் சேர்ந்து விடும். 

இப்படியாக, குழந்தை இல்லாமல் இறந்த இந்து பெண்ணின் சொத்து மூன்று வகைகளில் அந்தந்த வாரிசுகளை அடையும்; 

கிறிஸ்தவ மதத்தின்படி
கிறிஸ்தவர்களுக்கு உள்ள வாரிசுரிமைச் சட்டமான, இந்திய வாரிசுரிமை சட்டம் 1925-த்தின் படி, கிறிஸ்தவ ஆணோ, பெண்ணோ, உயில் எழுதாமல், சொத்தை விட்டு விட்டு இறந்து விட்டால், அவரின் சொத்து அவரின் கணவர் அல்லது மனைவிக்கு மூன்றில் ஒரு பங்கும், அவரின் பிள்ளைகளுக்கு (மகன்கள், மகள்கள்) மீதியுள்ள மூன்றில் இரண்டு பங்கும் போய்ச் சேரும். 

குழந்தைகள் இல்லையென்றால், அடுத்தடுத்த வாரிசுகளை போய் சேரும்.

முஸ்லீம் மதத்தின்படி
முகமதியர்கள் வாரிசுரிமைச் சட்டமான ஷரியத் சட்டம் 1937-ன்படி, முகமதியர் ஒருவர், இறந்து விட்டால், அவரின் மகன்களுக்கு தலைக்கு இரண்டு பங்கும், அவரின் மகள்களுக்கு தலைக்கு ஒருபங்கும், இறந்தவரின் மனைவிக்கு எட்டில் ஒரு பங்கும் கிடைக்கும்.

 இதுபோக, மீதியுள்ள பங்குகள் மற்ற பங்காளிகளுக்குக் கிடைக்கும்.

 சற்று குழப்பமாக இருந்தாலும், அதற்கென்று அந்த சட்டத்தில் சில கணக்குகள் கொடுத்துள்ளனர்.

இந்து மதத்தில் உயில் எழுதுவதை சட்டம் அனுமதிக்கிறது; கிறிஸ்தவ மதத்திலும் உயில் எழுதுவதை சட்டம் அனுமதிக்கிறது.
ஆனால் முகமதிய சட்டத்தில் உயில் எழுத முடியாது; ஏனென்றால், முகமதியர்களின் புனித நூலான குரானின் வாக்குப்படி, ஒருவரின் வாரிசுகளுக்கு சொத்தில் பங்கு இல்லாமல் செய்யும்படி உயில் எழுத முடியாது என்று சொல்லப் பட்டுள்ளது. 

ஆனாலும், சொத்தை வைத்திருப்பவர், அந்தச் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு சொத்துக்கு உயில் எழுதி வைக்கலாம் என்று சலுகை கொடுக்கப் பட்டுள்ளது.

 அந்த உயிலை எழுத வேண்டுமானால், அவரின் வாரிசுகள் சம்மதம் கொடுத்திருக்க வேண்டும் என்று கன்டிஷனும் போடப் பட்டுள்ளது.

 எனவேதான், முகமதியர் உயில் எழுத முடியாது என்று பொதுவாகச் சொல்லி விடுவர்;

இந்து, கிறிஸ்தவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடு இல்லை; உயிலை எழுதி அவரின் சொத்தை யாருக்கு வேண்டுமானாலும், கொடுத்து விடலாம்.

அமுலுக்கு வருவது எப்போது?
 உயில் எப்போதும், அதை எழுதி வைத்தவரின் ஆயுட்காலத்துக்கு பின்னர்தான் அமலுக்கு வரும். உயிலை எழுதியவர் உயிருடன் இருந்தால் அந்த உயில் நடைமுறைக்கு வரவே வராது. அவர் இறந்த பின்னர்தான் நடைமுறைக்கு வரும்.

எத்தனை உயில்கள் எழுதலாம்?
ஒருவர் ஒரு உயிலைத்தான் எழுதி வைக்க முடியும்; அடுத்தடுத்து உயில் எழுதி வைத்தாலும், கடைசி உயில்தான் செல்லும். மற்ற உயில்கள் செல்லாமல் போய்விடும். 

ஆனாலும், சிலர், தன்னிடம் உள்ள பல சொத்துக்களை, வேறு வேறு உயில்கள் மூலம் எழுதி, தன் வேறு வேறு பிள்ளைகளுக்கு தனித்தனியே கொடுத்து விடும் வழக்கம் உள்ளது. இது தவறு என்று சொல்வதற்கு ஆட்கள் இல்லை;

ஒரு உயிர், ஒரு உயில்!
உயில் என்றாலே, “அவரின் கடைசி ஆசை” என்றுதான் அதற்குப் பொருள்; உயில் என்பதற்கு ஆங்கிலத்தில் Will என்றே சொல்கின்றனர். அப்படிப் பார்த்தாலும், அவரின் விருப்பம் என்றுதான் பொருள் வருகிறது. எனவே ஒரு மனிதனுக்கு ஆசை என்பது கடைசி ஆசை மட்டுமே தன் கடைசி விருப்பமாக இருக்க முடியும். எனவே ஒருவர் ஒரு உயில் மட்டும்தான் எழுதி நடைமுறைப் படுத்த முடியும். 

ஏற்கனவே எழுதிய உயிலை மாற்றி எழுத வேண்டும் என்றால், அந்த உயிலை ரத்து செய்து விட்டு, வேறு ஒரு புதிய உயிலை எழுத வேண்டும். அல்லது பழைய உயிலை திருத்தம் செய்து மட்டும் வைத்துக் கொள்ளலாம்.

 இப்படிப் பார்த்தால், ஒரு உயிருக்கு ஒரு உயில்தான் இருக்க முடியும் என்பதே உண்மை.

கூட்டணி ஆகாது
உயில் எழுதும்போது தனியே தனக்கு மட்டுமே உயில் எழுதிக் கொள்வதே சிறந்தது. கூட்டாக இரண்டு பேர் எழுதும் உயிலில் நிறைய சட்டசிக்கல்கள் வருகின்றன. கணவர் சொத்தை கணவரும், மனைவி சொத்தை மனைவியும் தனித்தனி உயில்கள் மூலம் எழுதிக் கொள்ளலாம். அதைவிட்டு விட்டு, இருவரும் ஒரே உயிலில் எழுதுவார்கள். அதில் எழுதும் வாசகங்கள் அந்த கூட்டு உயிலை நடைமுறைப் படுத்துவதில் சட்ட சிக்கலை உண்டாக்கிவிடும்.

இரண்டு பேர் சேர்ந்து கூட்டாக எழுதும் உயிலுக்கு ஜாயிண்ட் உயில் (Joint Will) என்று பெயர். அதில், கணவர் முதலில் இறந்து விட்டால், கணவரின் சொத்து மனைவிக்குப் போய்ச் சேரும் என்றும், மனைவி முதலில் இறந்து விட்டால், மனைவியின் சொத்து கணவருக்கு போய்ச் சேரும் என்றும் எழுதுவார்கள். இப்படிப்பட்ட உயிலை கூட்டு உயில் என்று சொன்னாலும், அது உண்மையில் மியூச்சுவல் உயில் (Mutual Will) என்னும் வகையைச் சேர்ந்ததாகும்.

கணவனும் மனைவியும் கூட்டாக வாங்கிய சொத்தை, கூட்டாக ஒரே உயில் எழுதி அந்த சொத்தை தன் வாரிசுகளில் யாருக்காவது கொடுப்பர். இப்படிப்பட்ட உயிலில், கணவர் முதலில் இறந்தால், அந்த உயில் நடைமுறைக்கு வராது. மனைவி நினைத்தால் அந்த உயிலை ரத்து செய்து விடலாம் என்று சில சட்டத் தீர்ப்புகளும் உள்ளன என்பதால், அந்த குழப்பத்தைத் தவிர்க்கும் பொருட்டு தெளிவாக உயிலை எழுதி வைக்க வேண்டும்.

உயிலை நிறைவேற்றுபவர்
உயில்களில் எக்சிகியூட்டார்கள் என்னும் நிறைவேற்றாளர்களை நியமித்து இருப்பர். உயிலை எழுதியவர் இறந்த பின்னர், இந்த உயிலில் சொல்லப் பட்டுள்ள விஷயங்களை எப்படி பிரித்துக் கொடுப்பது என்று ஒரு பொதுவான நபரை அந்த உயிலிலேயே அதை எழுதி வைத்தவர் நியமித்து வைத்து விட்டு போய் இருப்பார். அவரைத்தான் எக்சிகியூட்டர் (Executor) என்பர்.

 சொத்துக்காரர் இறந்த பின்னர், அவரின் உயில்படி, அந்த எக்சிகியூட்டர் வந்து, அவரின் சொத்துக்களை கணக்கெடுத்து, அந்த உயிலில் சொல்லி கடன்கள், உயில் எழுதியவரின் இறப்புச் செலவு, உயில் எழுதியவர் யாருக்காவது பணம் கொடுக்கச் சொல்லி இருந்தால் அதைக் கொடுப்பது, அவரின் சொத்துக்களை, அந்த உயிலில் சொல்லி உள்ளபடி பிரித்துக் கொடுப்பது போன்ற பல வேலைகளைச் செய்வார். 

அவரே அந்த உயிலுக்கு அதிகாரி. இறந்தவரின் வாரிசுகள் அதில் தலையிட முடியாது.

ஒரு உயிலில் ஒரு எக்சிகியூட்டர் மட்டும் நியமித்திருப்பர். பொதுவாக இது போதும். ஆனால் செய்ய வேண்டிய வேலையைப் பொறுத்து இரண்டுக்கு மேற்பட்ட பல எக்சிகியூட்டர்களையும் நியமித்திருப்பார். அது உயிலை எழுதி வைப்பவரின் விருப்பத்தையும், நம்பிக்கையையும் பொருத்தது. 

ஒரு எக்சிகியூட்டர் அந்த வேலையை செய்ய விரும்பம் இல்லாமல் இருந்தாலும், மறுத்து விட்டாலும், இறந்து விட்டாலும், மற்ற எக்சிகியூட்டர்கள் இருந்து அந்த வேலையைச் செய்வர். கூட்டாகவும் செய்வர்.  தனித்தனியாகவும் செய்வர். அதை அந்த உயிலில் தெளிவாகச் சொல்லி இருக்க வேண்டும் அவ்வளவுதான்.

எக்சிகியூட்டர்கள் அவசியமா?
எல்லா உயிலிலிலும் எக்சிகியூட்டர் நியமித்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது உயில் எழுதி வைப்பவரின் விருப்பத்தைப் பொறுத்தது. அப்படி எந்த எக்சிகியூட்டார்களும் நியமிக்கவில்லை என்றால், வாரிசுகளில் யாராவது ஒருவர் அந்த வேலையைச் செய்து கொள்ளலாம், தவறில்லை. 

எனவே உயிலில் இரண்டு வகை; ஒன்று எக்சிகியூட்டார் நியமிக்கப்பட்ட உயில். மற்றொன்று எக்சிகியூட்டார் நியமிக்கப்படாத உயில் அவ்வளவுதான்.

கோர்ட்டில் ஒரு உயிலை புரபேட் செய்ய மனுச் செய்யும் போது, எக்சிகியூட்டார் நியமிக்கப்பட்ட உயிலில், அவரே மனுச் செய்ய வேண்டும். எக்சிகியூட்டர் நியமிக்கப்படாத உயிலில், இறந்தவரின் வாரிசுகளில் யாராவது மனுச் செய்ய வேண்டும்.

உயிலை பதிவு செய்ய வேண்டுமா?
உயிலை எழுதி வைத்தால் மட்டும் போதாது; அதை சட்டபூர்வமாக ஏற்படுத்தி வைக்க வேண்டும். உயிலை கையாலும் எழுதி வைக்கலாம். தட்டச்சு, கம்யூட்டர் பிரிண்ட் மூலமும் ஏற்படுத்தலாம். எப்படி இருந்தாலும், அது ஒரு பேப்பரில் இருந்தால் போதும். அதற்கு முத்திரை தீர்வை என்னும் ஸ்டாம்ப் பேப்பர் தேவையே இல்லை! வெறும் வெள்ளைப் பேப்பரில் எழுதி வைக்கலாம். அதில் ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய அவசியமும் இல்லை. அதை ரிஜிஸ்டர் என்னும் பதிவும் செய்து வைக்க வேண்டிய அவசியமும் இல்லை.

 ஆனாலும், அந்த உயிலைப் பதிவு செய்து வைத்தால் (ரிஜிஸ்டர் ஆபீஸூக்குச் சென்று அந்த உயில் பத்திரத்தை ரிஜிஸ்டர் செய்து வைத்தால்) நல்லது. பின்நாளில் அது மிகுந்த நம்பிக்கைக்கு உரிய பத்திரமாக இருக்கும். யாரும் ஒரு போலி உயில் என்று குற்றம் சொல்லி விட முடியாது. அதற்காக அந்த உயிலை பதிவு செய்து வைப்பது நல்லது.

சாட்சிகள் வேண்டுமா?
ஆனாலும், உயில் எழுதியவர், அந்த உயிலில் உள்ள எல்லாப் பேப்பரின் பக்கங்களிலிலும் அவரின் கையெழுத்தைச் செய்து வைக்க வேண்டும். கடைசி பக்கத்தில் அவரின் கையெழுத்துக்குக் கீழே கண்டிப்பாக இரண்டு சாட்சிகளின் கையெழுத்தைப் பெற்று இருக்க வேண்டும். 

ஒரு உயில் செல்லும் என்று சொல்வதற்கு மிக முக்கியமானதே இந்த இரண்டு சாட்சிகளின் கையெழுத்துத்தான்! உயிலுக்கு சாட்சிகளின் கையெழுத்து அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. 

சிலர் வெகு அஜாக்கிரதையாக சாட்சிகள் கையெழுத்தை வாங்காமல் வைத்திருப்பர். அப்படி இருந்தால், அந்த உயிலே செல்லாமல் போய்விடும்.

சாட்சிகள் எப்படி இருக்க வேண்டும்?
இந்த இரண்டு சாட்சிகளும், அந்த உயிலை எழுதியவர் போடும் அவரின் கையெழுத்தை நேரில் பார்த்தவர்களாக இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் உயிலை எழுதியவரும், சாட்களும் அந்த உயிலில் கையெழுத்துப் போட்டிருக்க வேண்டும். இதை சட்டம் கட்டாயப் படுத்துகிறது. இரண்டு சாட்சிகளும் உயில் எழுதியவரின் கையெழுத்து போடுவதை நேரில் பார்க்கவில்லை என்றாலும், அதில் ஒரு சாட்சியாவது கண்டிப்பாக பார்த்திருக்க வேண்டும் என்றும், மற்றொரு சாட்சி, உயில் எழுதியவரின் கையெழுத்தை அறிந்திருக்க வேண்டும் என்றும் சட்டம் சொல்கிறது. இப்படி இருக்கும்போது, பொதுவாக இரண்டு சாட்சிகளுமே நேரில் பார்த்த சாட்சிகளாக இருப்பது மிக நல்லது.

எனென்றால், உயிலை எழுதியவர் இறந்தபின்னர், இந்த சாட்சிகள் இருவர்தான் அந்த உயிலை உண்மையாக எழுதிய உயில் என்று நிரூபிக்க இருக்கும் சாட்சிகள் ஆகும். அந்த உயிலை, அதை எழுதியவர்தான் எழுதி வைத்தாரா என்பது, வேறு யாருக்கும் தெரியாது.  எனவேதான் உயிலுக்கு சாட்சிகள் முக்கியம், முக்கியம் என்று சட்டம் சொல்லிக் கொண்டிருக்கிறது;

சாட்சிகள் எப்படி இருக்க வேண்டும்? 
நியாயமானவராக இருக்க வேண்டும். குழப்பவாதியாக இருக்க கூடாது. எதிரியின் பக்கம் சாய்ந்து, பிறழ்ந்து சாட்சி சொல்பவராக இருக்க கூடாது. என்ன நடந்தது என்பதை உண்மையாகச் சொல்பவராக இருக்க வேண்டும். அப்படியென்றால், சாட்சிகள், பொதுவானவராக இருப்பதுதானே நல்லது!

மேலும், சாட்சிகள் இருவரும் நிரந்தர விலாசத்தில் வசித்து வருபவராகவும் இருக்க வேண்டும். சாட்சி போட்டவுடன் கண்காணாத இடத்துக்கு போய் சேருபவராக இருந்து விடக் கூடாது. வெளிநாட்டுக்கு ஓடிப் போய்விடுபவராக இருந்து விடக் கூடாது.

மேலும், குறிப்பாக வயதானவராக இருக்கக் கூடாது. உயிலை எழுதியவர் இறப்பதற்கு முன்னரே, அதில் கையெழுத்துப் போட்ட சாட்சி இறந்து விட்டால், யாரை வைத்து அந்த உயிலை நிரூபிப்பது? சிக்கல் வந்துவிடும் அல்லவா? அல்லது உயிலை நிரூபிப்பதற்கு முன்னரே சாட்சி இறந்தாலும் கஷ்டமே! எனவேதான், குறிப்பாக உயிலில் சாட்சிக் கையெழுத்துப் போடுபவர், இளையவராகவே, ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும். (ஒவ்வொருவரின் ஆயுளின் விதி என்பது வேறு!) முடிந்தவரை சிறு வயதினராக இருப்பது நல்லது.

சாட்சிகளின் தன்மை
மேலும், சாட்சிக் கையெழுத்துப் போடுபவர்கள், அந்த உயிலின்படி பலனை (சொத்தை) அடைபவராக கண்டிப்பாக இருக்கக் கூடாது. அப்படி, அந்த உயிலில் பங்கு வாங்குபவரே சாட்சியாகவும் இருந்தால், அந்த உயிலும் செல்லாது ஆகிவிடும். எனவே இதில் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்.

சாட்சிகள் நெருங்கிய உறவினராக இருந்தால்?
மேலும், உயிலில் சாட்சிக் கையெழுத்துப் போடுபவர், நெருங்கிய உறவினராக இருந்தால் வேறு ஒரு சிக்கல் வரும். உதாரணமாக, உயிலில் ஒரு மகளுக்குச் சொத்தை கொடுத்திருப்பார். அதில் சாட்சி போட்டவர், ஒரு மகனாக இருப்பார். முதலில் அப்பாவுக்காக அரை மனதுடன் சாட்சிக் கையெழுத்துப் போட்டிருப்பார். அப்பா இறந்தவுடன், அந்த சொத்தில் மகனுக்கும் ஆசை வந்துவிடும். அப்போது, சொத்தைப் பெறும் மகள், அந்த சாட்சி போட்ட மகனின் சாட்சியத்தை (வாக்குமூலத்தை) பெற வேண்டும். அப்போது அந்த மகன் உதவுவதற்கு வர மாட்டார். சாக்குப்போக்கு சொல்வார். தேவையில்லாமல் திருடன் கையில் சாவி கொடுத்ததைப் போல ஆகிவிடும். எனவே நெருக்கமான, அல்லது பின்நாளில் வில்லத்தனத்துடன் நடந்து கொள்ளும் நபரின் சாட்சியை இப்போதே பெறாமல் இருப்பது நல்லது!

நன்றி : திரு Advocate Balakrishnan (06.10.2016)
https://gblawfirm.blogspot.in -ல் இருந்து

Monday, March 20, 2017

சிவில் வழக்கை எந்தக் கோர்ட்டில் போட வேண்டும்?


சிவில் வழக்கை எந்தக் கோர்ட்டில் போட வேண்டும்?

சிவில் வழக்குகளை எந்த கோர்ட்டில் போட வேண்டும் என்பதில் சட்டம் தெளிவாக்கி உள்ளது. இது சிவில் நடைமுறைச் சட்டம் 1908 என்ற சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

எல்லாச் சிவில் வழக்குகளுக்கும் இதுதான் பைபிள். ஒரு சிவில் வழக்கை யார், எப்படி, யார்மீது, எப்போது, எந்த கோர்ட்டில் போடவேண்டும் என்று இதில் தெளிவு
படுத்தப்பட்டுள்ளது.

ஒரு வழக்கு “சிவில் வழக்குதான்” என்பதை எப்படி முடிவுக்கு வரமுடியும்? அந்த வழக்கில் சிவில் உரிமை இருந்தால் அது சிவில் வழக்கு. சிவில் உரிமை என்பது மனிதனின் எல்லா சிவில் உரிமைகளும் இதில் அடங்கும். 

வேறு தனிச் சட்டங்கள் அந்த சிவில் உரிமைக்கு ஏற்பட்டுத்தாதவரை, எல்லா சிவில் உரிமை வழக்குகளையும் சிவில் கோர்ட்டிலேயே தாக்கல் செய்யலாம்.

 பொதுவாகச் சொன்னால், கடன் கொடுத்த பணத்தை திரும்ப வசூல் செய்வது, அசையாச் சொத்தில் ஏற்படும் எல்லா உரிமைகளும், சிவில் உரிமைகளே! 

கிரிமினல் குற்றங்களைத் தவிர மற்ற எல்லா உரிமைகளும் சிவில் உரிமை என்று பொதுவாக எடுத்துக் கொள்ளலாம். 

ஒரு கோயிலில் சாமி கும்பிடுவது, அந்த சாமியை நம்புவது, அந்த சாமியைப் பற்றி பிரசங்கம் செய்வது என்பது அவனின் சிவில் உரிமைதான் என்று சென்னை ஐகோர்ட் 1982ல் ஒரு வழக்கில் இந்த தீர்ப்பை வழங்கியது (AIR 1982 Mad 170).

  அதேபோலவே சுப்ரீம் கோர்ட்டும் 1995ல் ஒரு வழக்கில் அப்படியே தீர்ப்பு கூறி உள்ளது (AIR 1995 SC 2001). சாமி கும்பிடுவது ஒருவனின் தனிப்பட்ட சிவில் உரிமை. எனவே அதில் மற்றவர் தலையிட முடியாது. 

ஆனாலும், எப்படிச் சாமி கும்பிடவேண்டும் என்றும் கோயிலில் பூஜை முறைகள் எப்படி இருக்க வேண்டும் என நினைப்பது அல்லது கேட்பது அவனது சிவில் உரிமை இல்லை என்று ஒரு விளக்கமான தீர்ப்பை 1994ல் சென்னை ஐகோர்ட் வழங்கி உள்ளது (AIR 1994 Mad 27).

அசையாச் சொத்துக்களின் மீது வழக்குப் போடுவது என்பது ஒருவரின் சிவில் உரிமை சார்ந்ததே! 

ஆனாலும், வேறு ஒரு சட்டப்படி அந்த பிரச்சனைக்கு தீர்வு இருந்தால், அதைச் சிவில் வழக்காக, சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்ய முடியாது. உதாரணமாக, பொது உபயோகத்துக்காக நில எடுப்பு செய்யும் அரசாங்க வேலைகளில், அதற்கென தனியே நில எடுப்புச் சட்டம் இருப்பதால், அதில் பாதிக்கப்பட்டவர், அதை சிவில் வழக்காகக் கருதி, சிவில் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது.

இந்தியாவில் சிவில் கோர்ட்டுகள் பல அடுக்கு முறைகளில் உள்ளன. தாலுகா அளவில் மாவட்ட முன்சீப் கோர்ட்டுகளும், சப்-கோர்ட்டுகளும், மாவட்ட அளவில் மாவட்டக் கோர்ட்டுகளும், மாநில அளவில் ஐகோர்ட்டுகளும், தேசிய அளவில் சுப்ரீம் கோர்ட்டும் உள்ளன.

சிவில் நடைமுறைச் சட்டம் 1908ல் பிரிவு 16-ம், பிரிவு 20-ம், எங்கு ஒரு சிவில் வழக்கைப் போட வேண்டும் என சொல்கிறது.

பிரிவு 16
பிரிவு 16, அசையாச் சொத்துக்களைப் பற்றியவழக்குகளைச் சொல்கிறது.

அதன்படி, அசையாச் சொத்தில் ஒருவருக்கு உள்ள உரிமையை நிலைநாட்டவும், அடுத்தவர் தொந்தரவு செய்தால் அதைத் தடுக்கவும், பாகப்பிரிவினை வழக்குகளும், அசையாச் சொத்தின் கிரயம், அடமானம் தொடர்பான வழக்குகளையும், அந்த அசையாச் சொத்து எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த எல்லைக்குள் உள்ள கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் எனச் சொல்கிறது.

பிரிவு 20
பிரிவு 20, அசையாச் சொத்து அல்லாத பிற வழக்குகளை (அதாவது பணம் கொடுக்கல் வாங்கல், போன்ற பணப்பிரச்சனை கொண்ட வழக்குகளை) எதிர்பார்ட்டி எந்த இடத்தில் வசிக்கிறாரோ அல்லது எந்த இடத்தில் வியாபாரம் செய்து வருகிறாரோ, அந்த எல்லைக்குள் இருக்கும் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சொல்கிறது. 

மேலும், இந்த பணம் கொடுக்கல் வாங்கல் செய்யும்போது, அல்லது ஒரு உடன்படிக்கை கையெழுத்து ஆகும்போது, அவை எந்த இடத்தில் நிகழ்ந்ததோ, அல்லது பல இடங்களில் நிகழ்ந்திருந்தால், அப்படி நடந்த ஏதாவது ஒரு இடத்தின் எல்லைக்குள் உள்ள கோர்ட்டில் அந்த வழக்கை தாக்கல் செய்யலாம் என்ற சலுகையும் உள்ளது.

எந்த எல்லைக்குள் உள்ள கோர்ட்டில் வழக்குப் போடலாம் என்று முடிவான பிறகு, வேறு ஒரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

அந்தச் சிவில் வழக்கு எவ்வளவு தொகை சம்மந்தப்பட்ட வழக்கு என்று கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.

 அந்த தொகைக்கு ஏற்ப அந்த வழக்கை மாவட்ட முன்சீப் கோர்ட், சப்-கோர்ட், மாவட்ட கோர்ட், ஐகோர்ட் என எங்கு அந்த வழக்கை தாக்கல் செய்யலாம் என முடிவு செய்ய வேண்டும். அதைpecuniary jurisdiction பெக்யூனரி வரையறை என்பர்.

சென்னை போன்ற நகரங்களில், ரூ.5,000/-க்கு குறைவான வழக்காக இருந்தால், அதை சென்னை ஸ்மால் காஸஸ் கோர்ட் என்னும் சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

 சென்னை தவிர வேறு பகுதிகளாக இருந்தால், ரூ.1 லட்சம் வரையிலான தொகை கொண்ட வழக்குகளை மாவட்ட முன்சீப் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். 

ரூ.5 லட்சம் வரையிலான தொகை கொண்ட வழக்காக இருந்தால், சப்-கோர்ட் என்னும் சப்ஆர்டினேட் கோர்ட்டில் (Sub-Ordinate Court or Sub-Court) தாக்கல் செய்ய வேண்டும்.

 ரூ.5 லட்சத்துக்கு மேற்பட்ட வழக்காக இருந்தால் மாவட்ட அளவில் உள்ள மாவட்ட கோர்ட்டில் (District Court) தாக்கல் செய்ய வேண்டும்.

சென்னை பெருநகரில் வேறு மாதிரி பிரிவுகள் உள்ளன. 

அதன்படி, ரூ.10 லட்சம் வரை சென்னை உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் (Asst. City Civil Court) தாக்கல் செய்ய வேண்டும். 

ரூ.25 லட்சம் வரை சென்னை மாவட்ட சிட்டி சிவில் கோர்ட்டில் (Principal District Court and Addl. District Court) தாக்கல் செய்யலாம்.

மேலும் இன்னொரு சலுகையாக, சென்னை எல்லைக்குள் உள்ள வழக்குகளில் ரூ.25 லட்சத்துக்கு மேல் தொகை உள்ள வழக்குகளை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யலாம். 

சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யும் சிவில் வழக்குகளுக்கு நீதிமன்றக் கட்டணம் வெகுகுறைவு. அதாவது 1% கட்டணமே. 

ஆனால் மற்ற எல்லாக் கோர்ட்டுகளிலும் தாக்கல் செய்யும் சிவில் வழக்குகளுக்கு 7.5% நீதிமன்றக் கட்டணம். (இந்த 7.5% கட்டணம் அதிகம் என்று தமிழக அரசு மீது தொடர்ந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வராமல் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது).

இப்படியாக சிவில் வழக்குகளை அந்தந்த மட்டத்தில் உள்ள சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்யலாம்.

நன்றி : திரு Advocate Balakrishnan (17.11.2016)
https://gblawfirm.blogspot.in -ல் இருந்து

சாட்சிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல!


சாட்சிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல!

ஒரே ஒரு சாட்சி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிமன்றம் தண்டனை வழங்கலாம். 
நீதிமன்றம் சாட்சியம் அளித்த சாட்சியின் நம்பகத்தன்மையை தான் பார்க்க வேண்டுமே தவிர எத்தனை சாட்சிகள் சாட்சியம் அளித்துள்ளார்கள் என்று பார்க்கக்கூடாது. ஒரே ஒரு சாட்சியின் வாக்குமூலம் மிகவும் நம்பகத்தன்மையுடன் இருக்கும் பட்சத்தில் அதற்கு ஆதரவாக கூடுதல் சாட்சியம் தேவையில்லை.
P. V. Haridas and Smt. Anuja Prabhussai Mohammed Badshaha Sayyad and Others 
 Vs
State of Maharastra, (2016-Cri.LJ-70-NOC-Bom),
Criminal Appeal No - 580&100/2007
Thanks to : Mr. Dhanesh Balamurugan Advocate
குறிப்பு: இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு-134லிலும் எந்த வழக்கிலும் ஏதாவதொரு சங்கதியை மெய்ப்பிப்பதற்கு இத்தனை எண்ணிக்கையுள்ள சாட்சிகள் வேண்டுமென்பதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி

ஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா?

Image may contain: one or more people and text

ஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா?

பெற்றோர்கள், தங்களுடைய மகள் அல்லது மகனுக்குத் திருமணம் செய்ய எண்ணும்போது அவர்களின் மனதில் சில சந்தேகங்கள் தோன்றுகின்றன. 
அதாவது, எந்த நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாம்? எந்த எந்த நட்சத்திரம் திருமணத்துக்கு உகந்தது அல்ல,எந்த நட்சத்திரம் தம் பிள்ளைக்குப் பொருந்தும்? என்றெல்லாம் சந்தேகம் எழுவது இயற்கை.அந்த வரிசையில், அனைவருக்கும் காலம் காலமாகத் தோன்றும் சந்தேகம் ஏக நட்சத்திரம் மற்றும் ஏக ராசியில் திருமணம் செய்யலாமா என்பதுதான். 

இதைப் பற்றி ஜோதிட நிபுணர் ஞானரதத்திடம் கேட்டோம். 

ஏக நட்சத்திரம் என்றால் என்ன? அல்லது ஏக ராசி என்றால் என்ன? என்பதைப் பார்ப்போம், ஏகம் என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில் 'ஒன்று' எனப் பொருள்படும். ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களை இணைக்கலாமா என்ற எண்ணம் அனைவருக்கும் தொன்றுதொட்டு  இருந்து வருகிறது. 

பொதுவாக ஜோதிட சாஸ்திரப்படி, சில நட்சத்திரங்கள் ஒரே நட்சத்திரமாக இருந்தால், திருமணம் செய்யலாம் என்றும் சில நட்சத்திரங்கள் திருமணம் செய்யக்கூடாது என்றும் 'காலபிரகாசிகா' என்ற ஜோதிட நூல் விளக்குகிறது. 

இணைக்கக் கூடாத ஒரே நட்சத்திரங்கள்:

பரணி, ஆயில்யம், ஸ்வாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி  ஆகிய  நட்சத்திரங்கள், மணமகள் மணமகன் நட்சத்திரங்களாக வந்தால், திருமணம் செய்யக்கூடாது. சிறிதுகூட பொருத்தம் இல்லை. இந்த நட்சத்திரக்காரர்களை இணைக்கக்கூடாது. 

இணைக்கக்கூடிய ஒரே நட்சத்திரங்கள்:

ரோகிணி, திருவாதிரை,,மகம், அஸ்தம், விசாகம்,,திருவோணம்,உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் மணமகன்,  மணமகளுக்கு ஒரே நட்சத்திரமாக வந்தால், திருமணம் செய்யலாம். இவை நல்ல பலன்களை கொடுக்கும். தசா சந்திப்பு தோஷம் உண்டாகாது.
மத்திம பலன்களை தரும் வகையில் இணைக்கக் கூடிய ஒரே நட்சத்திரங்கள்: அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம்  ஆகிய நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்று நட்சத்திரமாக வந்தால், திருமணம் செய்யலாம். ஆனால், மத்திமமான பொருத்தம்தான். மொத்தத்தில் திருமணம் செய்யலாம், பாதகம் இல்லை.

பொருத்தமுள்ள ஒரே நட்சத்திரத்தை, சேர்ந்த மணமகள் மணமகன்களுக்கு திருமணம் செய்யும்போது நட்சத்திரத்தின் முந்தைய பாதம் ஆணுக்கும்  அடுத்த பாதம் பெண்ணுக்கும் இருந்தால், திருமணம் செய்யலாம். 

உதாரணமாக, ரோகிணி நட்சத்திரம் என்றால், நட்சத்திரத்தின் முதல் பாதம் ஆணுக்கும் இரண்டு மூன்று நான்கு ஆகியவற்றில் ஏதாவதொரு பாதம் பெண்ணுக்கு இருப்பது நற்பலன்கள் கொடுக்கும்.

பெண் நட்சத்திரப் பாதம் முதலிலும் ஆண் நட்சத்திரப் பாதம் பிந்தியதாகவும் இருந்தால், திருமணம் செய்வது சிறப்பான பலன் இல்லை. உதாரணமாக, திருவாதிரை நட்சத்திரம் என்றால், திருவாதிரை நட்சத்திரத்தின் முதல் பாதம் பெண்ணுக்கும் இரண்டு மூன்று நான்கு பாதங்களில் ஏதாவதொரு பாதம் ஆணுக்கும் இருப்பது நற்பலன்களைக் கொடுக்காது.

27  வது நட்சத்திரம் திருமணம் செய்யலாமா?
பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து ஆணின் நட்சத்திரம் கணக்கிடும் போது 27 வது நட்சத்திரமாக வந்தால், பெண்ணின் நட்சத்திரம் ஆணின் நட்சத்திரமும் ஒரே ராசியில், இருந்தாலும் திருமணப் பொருத்தம் உண்டு. திருமணம் செய்யலாம் உத்தம பலன்கள் உண்டாகும்.

 அப்படி அல்லாமல், இருவர் ராசியும் வெவ்வேறாக இருந்தால் திருமணம் செய்யக்கூடாது. இதற்கு தினப்பொருத்தம் இல்லை. நற்பலனும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக, இருவரும்  ஒரே நட்சத்திரமாக இருந்தாலும் சரி, ஒரே ராசியாக இருந்தாலும் சரி, மணமகன் மற்றும் மணமகள் இருவரையும் இணைப்பதைத் தவிர்ப்பது நல்லது. 

காரணம் என்னவென்றால், இவர்கள் இருவருக்கும் ஆயுளில் பாதகம் ஏற்படாது. பரஸ்பரம் அன்பு அதிகமாகவே இருக்கும். ஆனால், மற்ற மற்ற சௌகரியங்கள் குறையுடன் இருப்பதைக் காணலாம். 

ஒரே ராசியாகவோ ஒரே நட்சத்திரமாகவோ உள்ள தம்பதிக்கு, ஏழரைச் சனி, கண்டகச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி வரும்போது இருவருக்கும் ஒன்றாகவே துன்பம் தரும். இதே போல குரு பகவானும் ஜென்ம குருவாகவும், அஷ்டம குருவாகவும் வரும்போதும் துன்பங்களையே தருவார்.

ஜாதகத்தில் நல்ல தசாபுக்தி நடைபெற்றால் பரவாயில்லை, மாறாக தசா புக்தியும் பாதகமாக வந்தால், அவர்களின் நிலை என்னவாகும் என்பதுதான் கேள்வி. ஆதலால், இருவரும் வேறு வேறு ராசிகளில் பிறந்திருந்தால் அவர்களை இணைத்தோமேயானால் அவர்களில் யாராவது ஒருவருக்கு ஏழரைச் சனி நடந்து  மற்றவருக்கு ஏழரைச்சனி இல்லாமல் இருந்தால் நன்மையைத் தரும்.

அதாவது ஒருவருக்கு துன்பம் ஏற்பட்டு இருக்கும்போது மற்றவருக்கு இன்பம் இருக்குமாயின் துன்பம் ஏற்பட்டவருக்கு உறுதுணையாக உடன் இருந்து உதவிபுரிய உதவுகிறது. 

அப்படி இல்லாமல் இருவருக்கும் துன்பம் ஏற்பட்டு இருக்குமாயின் யார் யாருக்கு உதவ முடியும். மீண்டும் சோகத்தையே அந்த தம்பதி தழுவ வேண்டியதுதான். 

எஸ்.கதிரேசன்

நன்றி : விகடன் செய்திகள் - 21.03.2017

ரத்தசோகையை ஏற்படுத்தும் உதிரப்போக்கு


ரத்தசோகையை ஏற்படுத்தும் உதிரப்போக்கு
வயதிற்கேற்ப மாதவிடாய் பிரச்னை மாறுபடும். பெண்களின் பருவத்தை பதின்பருவம், நடுத்தர வயது, மாதவிடாய் நிற்கும் பருவம் என பிரிக்கலாம்.
பூப்பெய்தியவுடன் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வரும் என எதிர்பார்க்க முடியாது.

இரண்டு மாதங்கள் முதல் ஓராண்டு கழித்துகூட வரலாம்.
கருப்பை மற்றும் சினைப்பை சரியாக முதிர்ச்சி அடையாமல் இருப்பதே இதற்கு காரணம்.
பதின்பருவ பெண்கள் சிலருக்கு அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு ரத்தசோகையில் முடியலாம்.
ஹார்மோன் மாற்றங்களினால் அதிகமான உதிரப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு. இதை மாத்திரைகளால் சரிசெய்ய முடியும். பதின்பருவ பெண்கள் சினைப்பை நீர்கட்டி நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
உடற்பயிற்சி, சரிவிகித உணவின் மூலம் உடல்பருமனை குறைத்து இந்நோயை ஓரளவு கட்டுப்படுத்தலாம். மிகவும் அரிதாக ரத்தம் உறைதலில் குறைபாடுள்ள பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு ஏற்படலாம்.
நடுத்தர வயது பிரச்னை நடுத்தர வயதுகளில் 22 முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வருவதும், 4 - 5 நாட்கள் வரை உதிரப்போக்கு இருப்பதும் இயல்பானது.
சில பெண்கள் எவ்வளவு அதிகமாக உதிரம் வெளியேறினாலும், நான்கு நாட்கள் தானே என நினைக்கின்றனர்.
இரண்டு நாட்களுக்கு மிக அதிகமாக உதிரப்போக்கு என்றாலும், அது பிரச்னைக்குரியது. மாதவிடாய் சம்பந்தமாக எந்த சந்தேகத்தையும் நாமாக அனுமானிக்காமல் மகளிர் மருத்துவரை அணுகுவதே நல்லது.
சிலபெண்களுக்கு மாதவிடாய் பிரச்னையாக உள்ளது என்பதே அவர்களது ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவாக இருப்பதை வைத்து தான் கண்டுபிடிக்க முடியும்.
சுழற்சி காலம் 20 நாட்களுக்குள் இருந்தாலோ, 35 நாட்களுக்கு மேல் வந்தாலோ, ஐந்து நாட்களுக்கு மேல் தொடர்ந்து உதிரப்போக்கு ஏற்பட்டாலோ மருத்துவரை அணுக வேண்டும்.
காரணங்கள் என்ன?
மாதவிடாய் தள்ளி போவதற்காக அடிக்கடி உட்கொள்ளும் ஹார்மோன் மாத்திரைகள்; காப்பர் டி எனப்படும் கருத்தடை சாதனம்; கர்ப்பப்பையின் உட்புறசுவரில் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் விளைவுகள்; கர்ப்பப்பை வாய்ப்பகுதியில் ஏற்படும் புண், கட்டிகள்; கருப்பையில் ஏற்படும் கட்டிகள் ஆகியவையே மாதவிடாய் பிரச்னைக்கான காரணங்கள்.
கர்ப்பப்பையின் வாய் பகுதியில் நாள்பட்ட புண் இருந்தாலோ 'பாலிப்' எனப்படும் சிறுகட்டிகள் இருந்தாலோ உதிரப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு.
மாதவிடாய் நிற்கும் நேரத்தில், அதிக உதிரப்போக்கு ஏற்படுவது இயல்பானதல்ல.
சுழற்சிநாட்கள் மாறலாம். அதிக உதிரப்போக்கால் ரத்தசோகை ஏற்படும். இதனால் உடல் வலுவிழந்து மூச்சுதிணறல், படபடப்பு, நெஞ்சுவலி, தலைசுற்றல் ஏற்பட வாய்ப்புள்ளது.
ரத்தசோகைக்கு பல காரணங்கள் இருந்தாலும் மாதவிடாய் கோளாறே முக்கிய காரணம்.
பதின்பருவத்தினரோ, பெரியவர்களோ மாதவிடாய் பிரச்னையாக இருக்கிறது எனில், மகளிர் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதே நல்லது. ஹார்மோன் மாத்திரைகள் மருத்துவர் கண்காணிப்பின் கீழ் உட்கொள்ள வேண்டும்.
-டாக்டர் சுஜாதா சங்குமணி, மதுரை, 94422 72876
நன்றி : தினமலர் நாளிதழ் - 20.03.2016

Sunday, March 19, 2017

தொலைநிலை கல்வியில் பிஎச்.டி. பேராசிரியர் வேலை கிடைக்காது!

No automatic alt text available.

தொலைநிலை கல்வியில் பிஎச்.டி. பேராசிரியர் வேலை கிடைக்காது!

’தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தவர்களை, கல்லுாரி பேராசிரியர்களாக நியமிக்க முடியாது’ என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., தெரிவித்து உள்ளது.

பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர், துணை பேராசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு, முதுநிலை கல்வியுடன், பிஎச்.டி., என்ற, ஆராய்ச்சி படிப்பு பட்டம் அல்லது, ’நெட், செட்’ என்ற இரண்டு தேர்வுகளில், ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பல இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், நெட், செட் முடிக்காதோர் மற்றும் பிஎச்.டி., பட்டம் பெறாதோர், ஒப்பந்த அடிப்படையில் பணியில் உள்ளனர். அவர்களை பணி நீக்கம் செய்யும்படி, யு.ஜி.சி., ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில், சில கல்லுாரிகள், தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தோரை, குறைந்த சம்பளத்தில் பேராசிரியர் பணிக்கு அமர்த்தியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து, யு.ஜி.சி., புதிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், ’கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ, பிஎச்.டி., படித்து பட்டம் பெற்றவர்கள், ’ரெகுலர்’ என்ற வகையில் சேர்க்கப்படுவர். 

’ஆனால், தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தோருக்கு, ரெகுலர் சான்றிதழ் கிடைக்காது. எனவே, அவர்களை கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், பேராசிரியர்களாக நியமிப்பதை ஏற்க முடியாது’ என, தெரிவித்துள்ளது.

நன்றி : தினமலர் (கல்விமலர்) - 20.03.2017

செட்டில்மெண்ட் பத்திரமும், தானப் பத்திரமும்

Image may contain: 1 person, sunglasses and text

செட்டில்மெண்ட் பத்திரமும், தானப் பத்திரமும்

செட்டில்மெண்ட் பத்திரத்தை (Settlement Deed) “ஒரு குடும்ப ஏற்பாட்டுப் பத்திரம்” என்கிறார்கள்.

ஒருவர் தனக்குச் சொந்தமான சொத்துக்களை இந்த செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் தன் குடும்பத்தில் உள்ள தன் உறவுகளுக்கு பிரித்து கொடுக்கும் பத்திரம் இதுவாகும்.

ஒருவருக்குச் சொந்தமான சொத்தை அவர் வாழ்நாளிலேயே, தன் குடும்பத்தில் உள்ள மற்ற உறவினர்களுக்கு கொடுப்பதால் செட்டில்மெண்ட் பத்திரம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 

தன் வாழ்நாளிலேயே, ஒருவர் தன் சொத்துக்களை, தன் உறவுகளுக்கு கொடுக்கும் பத்திரமான இந்த செட்டில்மெண்ட் பத்திரம் எழுதிக் கொடுக்கும்போது, அந்த சொத்தைப் பெறுபவர் “குடும்ப உறவினராக” இருக்க வேண்டும் என இந்திய ஸ்டாம்ப் சட்டம் சொல்கிறது.

குடும்ப உறவினர்கள் என்றால் யார், யார்?

இந்திய ஸ்டாம்பு சட்டத்தின்படி  தாத்தா, பாட்டி, (தந்தை வழி தாத்தா, பாட்டி, மற்றும் தாய்வழித் தாத்தா, பாட்டி), தந்தை, தாய், கணவன், மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி, இவர்கள் மட்டும்தான் “குடும்ப உறுப்பினர்கள்” ஆவார்கள்.

 பின்னர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், இந்த “குடும்ப உறுப்பினர்” என்ற உறவுகளை விசாலப்படுத்தி, “அண்ணன், தம்பி, அக்காள், தங்கை” இவர்களையும் அதில் சேர்த்துக் கொண்டது.

இந்த குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு யாருக்கும், ஒருவர் தன் சொத்துக்களை செட்டில்மெண்ட் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதை “தானமாகத் தான்” (Gift) கொடுக்க முடியும். 

தானப்பத்திரம் (Gift Deed)

மேலே சொன்ன குடும்ப உறுப்பினர் அல்லாத வேறு நபர்களுக்கு, ஒருவர் தன் சொத்துக்களை கொடுக்க நினைத்தால், அதை “தானப்பத்திரம்” என்னும் கிப்ட் பத்திரம் (GiftDeed) மூலமே கொடுக்க வேண்டும்.

இரண்டிற்கும்  என்ன  வித்தியாசம்?

செட்டில்மெண்ட் பத்திரத்துக்கும், தானப் பத்திரத்துக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை; இரண்டுமே ஒருவகையில் “தானம்” தான்.

மேற்சொன்ன குடும்ப உறவினர்களுக்குள் கொடுத்தால் அது செட்டில்மெண்ட் பத்திரம். அதையே வெளி நபர்களுக்குக் கொடுத்தால் தானப் பத்திரம் அவ்வளவுதான்.

ஆனால், இவ்வாறு கொடுக்கும் பத்திரத்துக்கு அரசுக்கு செலுத்தும் ஸ்டாம்ப் கட்டணத்தில்தான் வேறுபாடு. குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுக்கும் செட்டில்மெண்ட் பத்திரத்துக்கு, அந்த சொத்தின் மதிப்புக்கு 1% ஸ்டாம்பு கட்டணம் அல்லது அதிகபட்சமாக ரூ.25,000/- மட்டுமே.

அதாவது ரூ.25 லட்சம் வரை மதிப்புக்கு உட்பட்ட சொத்துக்களுக்கு 1% கட்டணம்: அதற்கு மேல் எவ்வளவு மதிப்புள்ள சொத்தாக இருந்தாலும் ரூ.25,000 கட்டணம் மட்டுமே.

ஆனால் குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களுக்கு கொடுக்கும் தானப் பத்திரத்துக்கு, அந்த சொத்தின் மதிப்புக்கு 7% ஸ்டாம்பு கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதி வைப்பதற்கு முன், ஒருசில சட்ட நுணுக்கங்களை சரியாகப் புரிந்து கொண்டு எழுதவேண்டும். 

பொதுவாக ஒருவர் தன் சொத்தை, செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் தன் குடும்பத்தினருக்கு கொடுத்தால், பின்னர் அந்த பத்திரத்தை ரத்து செய்யவே முடியாது.

இது தெரியாமல், ஏதோ ஒரு உந்துதலில் ஒரு செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதி கொடுக்கின்றனர். பின்னர், ஏதோ ஒரு வருத்தம் ஏற்பட்டு, அதை ரத்து செய்ய முயற்சி செய்கிறார்கள். இப்படிச் செய்ய அவர்களுக்கு அதிகாரம் இல்லை. 

ஆனாலும், பத்திரப் பதிவு அலுவலகங்களிலும் இவ்வாறு ரத்து செய்யும் பத்திரங்களை ஏற்றுக் கொள்வதால் இவர்களும் அதை ரத்து செய்கிறார்கள். 

சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கின்  அடிப்படையில், இப்போதுதான் பத்திரப் பதிவு அலுவலகங்கள், இவ்வாறான செட்டில்மெண்ட் பத்திரங்களை ரத்து செய்ய முடியாது என அறிவுறுத்தி உள்ளது.

ஒரு சொத்தில், தனக்குள்ள உரிமையை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டால், அந்த சொத்தில் அவருக்கு இருந்துவந்த உரிமை அத்துடன் முடிவுக்கு வந்து விடுகிறது. எனவே அவர் அந்த செட்டில்மெண்ட் பத்திரத்தை பின்நாளில் ரத்து செய்ய எந்த அதிகாரமும் அவருக்கு இல்லை என்பதுதான் சட்டம்.

ஆனால், சிலர் நினைத்துக் கொள்கிறார்கள், “என் சொத்தை, நான் தானமாகத்தானே கொடுத்தேன். எனக்கு விரும்பம் இல்லை என்பதால், அதை இப்போது ரத்து செய்கிறேன்” என்று நினைக்கிறார்கள். விற்ற சொத்தை எப்படி திரும்ப வாங்க முடியாதோ, அதேபோலத்தான், தானம் கொடுத்த சொத்தையும் திரும்ப வாங்க முடியாது.

இருந்தாலும், ஒருசிலர், இந்த செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி வைக்கும்போதே, அதை ஒரு உயில் போல எழுதி, அதாவது, தன் வாழ்நாளுக்குப்பின், தன் குடும்ப உறவினர்களுக்கு அந்த சொத்து, போய் சேர வேண்டும் என எழுதுவார்கள். 

அல்லது அவர் வாழ்நாள் வரை அந்த சொத்தில் உரிமையுடன் வாழ்ந்து வருவதாகவும், அதன் பின் அவர் யாருக்கு சொத்துக் கொடுக்கிறாரோ அவர் முழு உரிமையுடன் அடைந்து கொள்ளலாம் என்று எழுதி வைப்பார்கள்; இந்த வகையில் எழுதும் பத்திரங்கள், சில நேரங்களில் சரியாக அமைவதுண்டு. 

பல நேரங்களில் இதில் சட்டக் குழப்பங்கள் வந்து, கோர்ட்டுக்கு சென்று விடுகின்றன. இப்படிப்பட்ட குழப்பமான செட்டில்மெண்ட் பத்திரங்களை எழுதும்போது, அதன் பிற்கால பிரச்சனைகளையும் யோசித்து தீர்க்கமான முடிவுடன், சட்ட ஆலோசனையும் பெற்றுக் கொண்டு எழுதி வைப்பது, கோர்ட்டுக்கு போகும் வேலையை மிச்சமாக்கும்.

சிலர், குடும்ப நெருக்கடியில் ஒரு செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதுவார்கள். பின்னர், அந்த நெருக்கடி தீர்ந்தவுடன், அல்லது வேறு நெருக்கடி, வேறு ரத்த உறவுகளிடமிருந்து வந்தவுடன், ஏற்கனவே எழுதிய செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்வார்கள். இந்த வகை பத்திரங்களும் சட்ட சிக்கலை உண்டாக்கி கோர்ட்டுக்கு அலைய வைக்கும்.

தீர்மானமான முடிவுகள் எடுக்க முடியாதபோது, சொத்தைப் பொருத்து எந்த செட்டில்மெண்டும் எழுதாமல் இருப்பதே நல்லது. அல்லது ஒரு உயில் பத்திரம் மட்டும் எழுதி வைத்துக் கொள்ளலாம். இது இல்லாமல், செட்டில்மெண்ட்தான் எழுத வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து எழுதிவிட்டால், அத்துடன் அதில் தனக்கு இனி உரிமை ஏதும் இல்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டும். 

வாழ்நாள் வரை அதில் வசிப்பேன் என்று எழுதி இருக்கும் பத்திரங்களில்கூட, வயதான காலத்தில் அந்த உரிமையை நிலைநாட்ட கோர்ட்டுக்குத்தான் செல்ல வேண்டும்.

 எனவே முடிவு என்பது தீர்க்கமாக இருக்க வேண்டும்! பந்த பாசத்துக்கு அடிமையாகாமல், ரத்த உறவுகளின் மிரட்டலுக்கு பயப்படாமல், ஏமாறுவதற்கு இடம் கொடுக்காமல் முடிவுகள் தீர்க்கமாக இருக்க வேண்டும்! 

ஒருவர் தன் வாரிசுகளுக்கு, ரத்த உறவுகளுக்கு சொத்து வைத்து விட்டுத்தான் போகவேண்டும், ஆனால் அந்த சொத்தை தன் வாழ்நாளில் அனுபவிக்க முடியாமல், பறிகொடுத்து தவிக்கும் நிலைக்கு போக இடம் கொடுக்க கூடாது; தனக்கு தெளிவான சிந்தனை, செயல், அதிகாரம் இருக்கும் காலத்திலேயே அல்லது வயதிலேயே ஒரு தீர்க்கமாக முடிவை எடுத்து செயல் படுத்திவிட வேண்டும். எழுந்து நடக்கவே முடியாத போது, நாம் எடுக்கும் முடிவும் நடைமுறைக்கு வராது.

நன்றி : திரு Advocate Balakrishnan (05.02.2016)
https://gblawfirm.blogspot.in  -ல் இருந்து

Saturday, March 18, 2017

ஜி.மெயிலின் புதிய வசதியை தெரிந்து கொள்ளுங்கள்


ஜி.மெயிலின் புதிய வசதியை தெரிந்து கொள்ளுங்கள்

ஜி.மெயில் மூலம் அனுப்பும் வீடியோக்களை இனிமேல் டவுன்லோடு செய்யாமல் அப்படியே பார்க்கும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் இளைஞர்கள் மத்தியில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும் ஜி.மெயிலும் முக்கியமான ஒரு பயன்பாட்டு இணையமாகவே இருந்து வருகிறது. 

இளைஞர்களுக்கு அலுவலகம், படிப்பு, வேலை முதலான இடங்களில் வீட்டு முகவரி, போன் நம்பரை அடுத்து இணைய முகவரியும் கட்டாயமான ஒன்றாக உள்ளது. இணையமுகவரியில் ஜி.மெயில் முகவரிதான் பெரும்பாலானவர்கள் தேர்வாகவும் உள்ளது. 

ஜி.மெயில் மூலம் டாக்குமென்ஸ் எனப்படும் எழுத்து சார்ந்த ஆவணங்கள் அதிகமாக அனுப்பப்பட்டாலும், ஜி.மெயில் மூலமாக போட்டோவும், வீடியோவும் அனுப்பும் தேவையும் உள்ளது. 

இதுவரையில் ஜி.மெயில் மூலம் அனுப்பப்படும் வீடியோக்களை டவுன்லோடு செய்தால் மட்டுமே அதனைப் பார்க்க முடியும்.

தற்போது, டவுன்லோடு செய்யாமலே பார்க்க முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கணினியின் ஹார்ட் டிஸ்கில் உள்ள மெமரி பாதுகாக்கப்படும் வாய்ப்பு உள்ளது. 

மேலும், எளிதாகவும் வீடியோவைப் பார்க்க முடியும். டவுன்லோடு ஆகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

ஆனால் 25 MP-க்கு குறைவான மெமரி கொண்டிருக்கும் வீடியோக்களை மட்டுமே இப்படி பார்க்க முடியும். 

இந்த சேவை 15 நாள்களுக்குள் அறிமுகமாகிவிடும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி : விகடன் செய்திகள் - 18.03.2017

Friday, March 17, 2017

காவல் ஆணையர் மீது அவமதிப்பு வழக்கு


காவல் ஆணையர் மீது அவமதிப்பு வழக்கு!

அவமதிப்பு வழக்கில் 22ல் ஆணையர் ஆஜர் ஆவாரா?
சென்னை, : சென்னை, நீலாங்கரையைச் சேர்ந்த, பொன்.தங்கவேலு என்பவர், முன்னாள் கவுன்சிலர் அண்ணாமலைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

முன்னாள் கவுன்சிலரின் சொத்துகள் குறித்து, வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், தங்கவேலுவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என, தெரிவித்தது.

நீதிமன்ற உத்தரவுப்படி, போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படாததால், மாநகர போலீஸ் ஆணையர் ஜார்ஜ்க்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு மனுவை, அவரது வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்தார்.

இம்மனு, நேற்று முன்தினம், நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் ஆஜராகாத, போலீஸ் ஆணையர் ஜார்ஜ்க்கு, நீதிபதி கண்டனம் தெரிவித்தார். 

நீதிமன்ற உத்தரவை ஏன் பின்பற்றவில்லை; நீதிமன்றத்தில் எப்போது ஆஜராவார் எனவும், நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையடுத்து, நீதிபதி கிருபாகரன் முன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வெங்கட்ரமணி ஆஜராகி, வரும், 22ல், போலீஸ் ஆணையர் ஜார்ஜ் ஆஜராவதாக தெரிவித்தார். 

அதனால், விசாரணையை, 22க்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 17.03.2017

புகார் அளித்தவரிடமே லஞ்சம் பெற்ற அதிகாரி


புகார் அளித்தவரிடமே லஞ்சம் பெற்ற அதிகாரி
தான பத்திரம் மீது விசாரணை கை நீட்டிய 'தங்கம்' கைது!
விருதுநகர், : போலியாக பத்திரம் தயாரித்ததாக அளித்த புகாரை விசாரிக்க 3,000 ரூபாய் வாங்கிய, விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலக டைப்பிஸ்ட் தங்கத்தை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் சாமியார் கிணற்றுதெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன். பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். இவரது குடும்பத்தினர் பெயரில் பொதுச் சொத்துக்கள் உள்ளன.

'இதை பங்காளிகளில் ஒருவரான வெள்ளைச்சாமி, போலி பத்திரம் தயாரித்து தானம் கொடுத்து விட்டார்' என, சென்னை பத்திரப்பதிவு ஐ.ஜி.,யிடம் பாண்டுரங்கன் புகார் கொடுத்தார்.

லஞ்சம் கொடு: 
இதை விசாரிக்க விருதுநகர் மாவட்ட பதிவாளர் சந்தானத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இப்பிரச்னையில் பதிவாளர் அலுவலக டைப்பிஸ்ட் தங்கம் லஞ்சம் கேட்டார்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் பாண்டுரங்கன் புகார் அளித்தார். அலுவலகத்தில் நேற்று, டைப்பிஸ்ட் தங்கம் 3,000 ரூபாய் வாங்கியபோது, இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

கேட்டது ரூ.10 ஆயிரம்: 
பாண்டுரங்கன் கூறுகையில், ''எனக்கு சாதகமாக விசாரிக்க தங்கம், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். மறுத்ததால், மூன்றா யிரம் ரூபாயாக குறைத்தார். லஞ்சம் கொடுக்க விரும்பாமல் புகார் கொடுத்தேன்,'' என்றார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 17.03.2017


வங்கியில் மோசடி, மேனேஜருக்கு சிறைத்தண்டணை


வங்கியில் மோசடி, மேனேஜருக்கு சிறைத்தண்டணை

பாரத ஸ்டேட் வங்கியில் மோசடி: மேலாளருக்கு 7 ஆண்டு சிறை

மதுரை,:புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பாரத ஸ்டேட் வங்கி கிளையில், ஒரு கோடி 98 லட்சம் ரூபாய் மோசடி தொடர்பாக, மேலாளர் உட்பட ஆறு பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கிளை மேலாளராக ராதாகிருஷ்ணன், உதவியாளராக ராஜகோபாலன் பணிபுரிந்தனர். 

இவர்களது நண்பர்கள் புதுக்கோட்டை விஸ்வநாதன், விருதுநகர் சிவாரங்கசாமி, சிவகாசி ராஜ்கபூர், திருநெல்வேலி ஷேக்அமீர். 

இவர்களின் வங்கி கணக்குகளை, அன்னவாசல் பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு மாற்றினர்.இக்கணக்குகளுக்கு மும்பை வங்கிகளில் இருந்து காசோலைகள் மூலம் ஒரு கோடியே 98 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் வந்ததாக போலி ஆவணங்கள் தயாரித்தனர். 

காசோலைகளை நான்கு பேரின் கணக்குகள் மூலம் மாற்றி மோசடி செய்ததாக, சி.பி.ஐ., போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மதுரை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கணேசன் விசாரித்தார். 

ராதாகிருஷ்ணன், ராஜகோபாலன், ஷேக் அமீர், ராஜ்கபூர், சிவாரங்கசாமிக்கு தலா ஏழு ஆண்டு, விஸ்வநாதனுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 17.03.2017


தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக எம்.எல்.ஏ!


தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக எம்.எல்.ஏ!

அரசியல் பாதைகள் புதைகுழிகள் நிறைந்தவை’ என சொல்லப்படுவதுண்டு. இந்த புதைகுழிகள் நிறைந்த அரசியல் பாதையில் நீண்ட காலம் தங்கள் பயணத்தை மேற்கொள்வது என்பது நிச்சயம் சவால் மிக்கது.

அப்படி அரசியல் பாதையில் நீண்ட பயணங்களை மேற்கொண்டவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

90 வயதைக் கடந்தும் இன்னும் அரசியலில் இருந்து முழுமையாய் விட்டு விலகிடாத தி.மு.க. தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் அச்சுதானந்தன் ஆகியோர் வரிசையில் இணைந்துள்ளார் கேரளா காங்கிரஸ் தலைவரான கே.எம்.மானி.

84 வயதான இவர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்றத்தில் பணியாற்றி வருகிறார். தொடர்ச்சியாக சட்டமன்றத்தில் தோல்வியே சந்திக்காத தலைவர்களில் கருணாநிதிக்கு அடுத்த இடம் கே.எம்.மானிக்கு தான். 12 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுள்ளார் அதுவும் ஒரே தொகுதியில்.

கரிங்கோழக்கல் மானி மானி என்பது தான் இவருடைய முழு பெயர். வழக்கறிஞரான இவர் கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் இவரது நெருங்கிய உறவினருமான பி.டி.சாக்கோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கேரள காங்கிரஸ் என்ற தனி அமைப்பில் இணைந்து முக்கியப் பங்காற்றினார்.

1965ம் ஆண்டு முதன் முதலாக கோட்டயம் மாவட்டம் பாலா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாததால் ஆட்சி கலைக்கப்பட்டது. அதன் பின்னர் 1967ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் துவங்கி 2016ம் ஆண்டு வரை, அதே பாலா தொகுதியில் 12 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார் கே.எம்.மானி.

கேரள மாநில காங்கிரஸ் கட்சி, இடதுசாரி அமைப்பான மார்க்சிஸ்ட் என இரு பெரிய கட்சிகளுடனும் இவரது கேரள காங்கிரஸ் (மானி) கூட்டணி அமைத்து தேர்தல்களைச் சந்தித்து உள்ளது. கடந்த சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 6 எம்.எல்.ஏ.க்களைப் பெற்றனர். ஆனாலும், இப்போது எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் தனியாக செயல்பட்டு வருகின்றனர்.

ஆனாலும், ஒரே தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்ட போதிலும், ஒரு முறை கூட தோல்வியைச் சந்திக்காத சரித்திரம் கே.எம்.மானியை மக்கள் தொண்டனாக நிலை நிறுத்துகிறது. அடித்தட்டு மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனில் அதிக அக்கறை கொண்டு செயல்படக் கூடியவராக கே.எம்.மானி உள்ளார்.

கேரள சட்ட மன்றத்தில் 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்து இருக்கிறார். கேரள லாட்டரி உதவித் திட்டம் மூலமாக 1,400 கோடியைத் திரட்டி அதன் மூலமாக ஒன்றரை லட்சம் ஏழை நோயாளிகளுக்கு உதவிகள் கிடைக்கச் செய்தார். அத்துடன், உலகிலேயே முதல் முறையாக விவசாயிகள் மற்றும் விதவைகளுக்கு பென்ஷன் வழங்கும் திட்டம் இவர் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் தான் கேரள மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

கேரள சட்ட மன்றத்துக்குள் கே.எம்.மானி நுழைந்து தற்போது 50வது ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, கேரள சட்ட மன்றத்தில் நடந்த விவாதத்தில் பேசிய சபாநாயகரான ஸ்ரீராமகிருஷ்ணன், "கே.எம்.மானி, எப்போதுமே மானி சார் என்றே எல்லோராலும் அழைக்கப்படக் கூடியவர். அவர் தனது செயல்பாடுகள் மூலமாக சட்டமன்ற வரலாற்றில் இடம் பெற்று இருக்கிறார். கடந்த 50 வருடங்களாக எம்.எல்.ஏ.வாக இருப்பதன் மூலமாக சாதனை படைத்த அவர், தன் மீது எழும் விமர்சனங்களைக் கூட நகைச்சுவை உணர்வுடன் எடுத்துக் கொள்ளக்கூடியவர்" என்று புகழாரம் சூட்டினார்.

முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், "புள்ளி விவரப்படி பார்த்தால், கே.எம்.மானி தனது 50 வருட சட்டமன்ற சாதனையை கடந்த இரு வருடங்களுக்கு முன்பே எட்டி விட்டார். பாலா தொகுதியில் அவர் 1965ம் ஆண்டில் வெற்றி பெற்றார். ஆனால், அந்தத் தேர்தலில் கேரள சட்டமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் யாராலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. அதனால் அந்த சட்டமன்றம் கலைக்கப்பட்டதால், அந்தக் கணக்கு இதில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

அவரது இந்த சாதனை பாராட்டுக்குரியது. இந்தச் சாதனையை இனி யாராலுமே இந்தியாவில் முறியடிக்க முடியாது என்பது நிச்சயம். அவர் பாலா தொகுதியில் போட்டியிடும்போது பல பாரம்பரியக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு வெற்றியை கைப்பற்றி இருப்பது வரலாற்றில் எப்போதும் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.

இந்த சாதனைகளுக்கு மத்தியில் அவர் சட்டமன்ற மாண்பையும் மரபுகளையும் கடைப்பிடிப்பதையும் அனைவருமே பின்பற்ற வேண்டும்.

குறித்த நேரத்துக்கு சட்ட மன்றத்துக்கு வருவது மட்டும் அல்லாமல், அவரது வருகைப் பதிவையும் இன்றைய சட்ட மன்ற உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டும்’’ எனக் குறிப்பிட்டார்.

கேரள சட்ட மன்றத்தில் 1970ம் வருடம் இவருடன் இருந்த ஒரே சமகால அரசியல்வாதி, முன்னாள் முதல்வரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் மட்டுமே.

ஆனால், இந்த நிகழ்வின்போது அவர் சட்ட மன்றத்துக்கு வராததால், அவரது கருத்து சட்ட மன்றத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பது பெரும் குறையே.

இந்த நிலையில் சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதாலா தனது கருத்தைப் பதிவு செய்கையில், ‘‘இந்திய ஜனநாயக வரலாற்றில் அதிசயக்கத்தக்க ஒரு வரலாறு கே.எம்.மானி. அவர் எப்போதுமே தனக்கு எல்லாம் தெரியும் என்கிற மமதையுடன் செயல்படுவது இல்லை.

சட்டமன்ற உரையாக இருந்தாலும் செய்தியாளர் சந்திப்பாக இருந்தாலும், அது குறித்து முதலிலேயே நிறைய தகவல்களைச் சேகரித்த பின்னரே பேசுவார்’’ என்றார்.

கேரள அரசியலில் எதிரும் புதிருமாகச் செயல்படும் இரட்டையர்கள் என வர்ணிக்கப்படும் அளவுக்கு கே.எம்.மானியுடன் கருத்து வேறுபாடுகள் நிறைந்து இருப்பவர், பி.சி.ஜார்ஜ். அவர் பேசுகையில், ‘எனக்கு மானி சாருடன் எப்போதும் நல்ல உறவு இருந்தது இல்லை. ஆனாலும், அவரது சாதனைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பது மறுக்க முடியாதது’ என்றார்.

இவற்றுக்குப் பதில அளித்துப் பேசிய கே.எம்.மானி, ‘‘என்னை இந்த மன்றத்தில் பேசிய பலரும் பாராட்டியது மிகுந்த மனநிறைவு அளிக்கிறது. நான் கடந்த காலங்களில் எதிரி என நினைத்த சிலர் எனக்கு எதிரானவர்கள் அல்ல, அவர்கள் எனது நண்பர்கள் என்பதை நீங்கள் பேசியதில் இருந்து புரிந்து கொண்டு விட்டேன்.

என்னை இந்த அளவுக்கு உயரத்துக்கு கொண்டு வந்தது எனது பாலா தொகுதி மக்களே. அவர்களுக்கு கூப்பிய கரங்களுடன் மண்டியிட்டு நன்றி தெரிவிக்கிறேன்’’ என்று பேசி நெகிழ்ந்தார்.

வயது 84ஐ கடந்து விட்டது. அவரது உழைப்பு இன்னும் அவரை இளமையாக வைத்திருக்கிறது. வாழ்த்துகள் கே.எம்.மானி சார்...
- ஆண்டனிராஜ்

நன்றி : விகடன் செய்திகள் - 17.03.2017

Wednesday, March 15, 2017

தகவல் அளிக்காமல் நிறுத்தி வைக்கக்கூடாது

Image may contain: text

தகவல் அளிக்காமல் நிறுத்தி வைக்கக்கூடாது!



விசாரணையில் இருக்கிறது என்று தகவல் தராமல் தட்டிக் கழிக்கும் பொதுத் தகவல் அலுவலர்களுக்கு எதிரான மிகவும் அருமையான ஆணை !

ஆள் மாறாட்டம், பெண் கைது!


ஆள் மாறாட்டம், பெண் கைது! 

ஜாமீனுக்காக ஆள்மாறாட்டம் செய்ததால் விபரீதம் ரூ.500க்கு ஆசைப்பட்டு சிறைக்கு சென்ற பெண்: ஐகோர்ட்டில் பரபரப்பு

சென்னை : சென்னை கண்ணகி நகரை சேர்ந்த சூர்யா. இவர் போதை மருந்து மற்றும் மயக்க மருந்துகளை  சட்டத்திற்கு விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். 

இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு கண்ணகி நகர் போலீசார் சூர்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் சூர்யாவின் ஜாமீன் வழக்கு நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தில் உள்ள முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சூர்யா தரப்பில் ரூ.1 லட்சம் ஜாமீனில் விடுவிக்க கோரி சத்தியபாமா என்ற பெண் உரிமை கோரினார். 

 அதற்கான ஆவணங்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். நீதிபதி ஆவணங்களை சரிபார்த்த போது சத்தியபாமா அளித்த வாக்காளர் அடையாள அட்டையில் வேறு ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தை பார்த்து சந்தேகம் அடைந்து, சத்தியபாமாவிடம் இது உங்கள் புகைப்படமா என்று கேட்டார். அதற்கு அந்த படம் என்னுடைய படம் தான் என்று கூறியுள்ளார்.

ஆனால், சந்தேகம் தீராததால் நீதிபதி இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி நீதிமன்ற பெஞ்ச் கிளர்க் பஞ்சவர்ணம் (42) உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் சத்தியபாமா மீது புகார் அளித்தார். 

அதன்படி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திய போது சத்தியபாமா என்ற பெயரில் சைதாப்பேட்டை வெங்கடாபுரத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்று தெரியவந்தது. 

இவர் ரூ.500க்கு ஆசைப்பட்டு சத்தியபாமா என்ற பெயரில், ஜாமீனுக்காக ஆள்மாறட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து விஜயலட்சுமியை போலீசார் கைது செய்தனர். ஜாமீனுக்காக நீதிமன்றத்தில் ஆள்மாறட்டம் செய்த சம்பவம் உயர் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நன்றி : தினகரன் நாளிதழ் - 16.03.2017

ஃபெரா குற்றவாளி, தேர்தலில் போட்டியிட முடியாது!


ஃபெரா குற்றவாளி, தேர்தலில் போட்டியிட முடியாது!

ஃபெரா குற்றவாளி தினகரன் ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவே முடியாது...சட்டம் சொல்வது என்ன?

சென்னை: மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஃபெரா (Foreign Exchange Regulation Act) வழக்கில் அபராதம் விதிக்கப்பட்ட குற்றவாளியான டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவே முடியாது என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். 

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சசிகலா அதிமுக வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் ஃபெரா வழக்கின் குற்றவாளியான டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதற்கு ஓபிஎஸ் அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

1995, 1996ம் ஆண்டுகளில் டி.டி.வி. தினகரனின் வங்கிக் கணக்குகளில் பெருமளவு பணம் வெளிநாடுகளில் இருந்து டெபாசிட் செய்யப்பட்டது. 

இது தொடர்பாக டி.டி.வி. தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஹைகோர்ட் தீர்ப்பு 
இவ்வழக்கில் தினகரனுக்கு ரூ31 கோடி அபராதம் விதித்தது ஃபெரா வாரியம். இத்தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டில் ரூ28 கோடி அபராதம் உறுதி செய்யப்பட்டது. 

இதை எதிர்த்து டி.டி.வி. தினகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. அத்துடன் இவ்வழக்கில் டி.டி.வி. தினகரன் குற்றவாளியே என்றும் அவர் அபராதத் தொகை செலுத்தியே ஆக வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

6 ஆண்டுகாலம் போட்டியிட முடியாது 
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒரு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால் அந்த நபரால் 6 ஆண்டுகாலத்துக்கு தேர்தலில் போட்டியிடவே முடியாது.

 சரி, ஃபெரா வழக்கில் தினகரன் குற்றவாளி என்று மட்டும்தானே சொல்லியிருக்கிறதே... அவருக்கு எப்படி இது பொருந்தும் என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது.

சட்டம் என்ன சொல்கிறது?
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் எந்தெந்த குற்றங்கள் செய்திருந்தால் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என்கிற ஒரு பட்டியல் இடம்பெற்றுள்ளது. 

"Disqualification on conviction for certain offences" என்ற அந்த பிரிவின் (e) the Foreign Exchange (Regulation) Act, 1973 (46 of 1973) 

அதாவது ஃபெரா சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டவர்களும் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அபராதம்தானே... 
ஃபெரா வழக்கில் டி.டி.டி.வி. தினகரனுக்கு அபராதம் மட்டும்தானே விதிக்கப்பட்டுள்ளது... அதை செலுத்திவிட்டால் டி.டி.வி. தினகரனால் போட்டியிட முடியுமே என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

அபராதம் விதித்தாலும் போட்டியிட முடியாது 
ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் மேலே நாம் குறிப்பிட்டுள்ள,
 "Disqualification on conviction for certain offences" பிரிவில் 

[shall be disqualified, where the convicted person is sentenced to- (i) only fine, for a period of six years from the date of such conviction; (ii) imprisonment, from the date of such conviction and shall continue to be disqualified for a further period of six years since his release.] 

அதாவது குற்ற வழக்குகளில் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்ட நபர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது முதல் 6 ஆண்டுகாலத்துக்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்; சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், தண்டனை பெற்று விடுதலையானது முதல் மேலும் 6 ஆண்டுகாலத்துக்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என தெளிவாகவே குறிப்பிட்டுள்ளது. 

ஆக ஃபெரா வழக்கில் அபராதம் விதிக்கப்பட்ட குற்றவாளி டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின்படி போட்டியிடவே தகுதியற்றவரே என்கின்றனர் சட்டவல்லுநர்கள்.

நன்றி : ஒன்இந்தியா  » தமிழ்  » செய்திகள் - 16.03.2017