disalbe Right click

Tuesday, June 27, 2017

13: சம்பாதிப்பதைச் சேமிக்கிறோமா?

13: சம்பாதிப்பதைச் சேமிக்கிறோமா?

உயிர் வாழ மூச்சு காத்து எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பணம். தொழில் தொடங்க, தொடர்ந்து நடத்த, தொழிலை முடிவுக்குக் கொண்டுவர என எல்லா நிலைகளிலும் பணம் தேவை. அதனால் நிதி பற்றிய அறிவும் முக்கியமாகிறது.
நுகர்வோர் சந்தையின் நிஜம்!
நம்மில் பலர் நீட்டிய பக்கத்திலெல்லாம் கையெழுத்து போடும் மனோபாவம் கொண்டவர்கள்தான். ஒரு கடனுக்கு விண்ணப்பித்தால்கூடக் கத்தை கத்தையாய்த் தாள்கள் கொடுத்துக் கையெழுத்து வாங்குவார்கள். சுழித்த இடங்களில் கையொப்பம் இடுவதற்கு முன்னால் அதைப் படித்துப் பார்க்கும் மனோபாவம் வேண்டும். கேள்விகள் கேட்க வேண்டும். புரியாதது நம் தவறில்லை. முட்டாளாகத் தெரியக்கூடாது என்று கேள்வி கேட்பதை நிறுத்தாதீர்கள். கேள்வி கேட்பது முட்டாள்தனம் அல்ல. தவறாக முடிவு செய்வதும், தகவல் இல்லாமல் முடிவு செய்வதும்தான் முட்டாள்தனம்.
இன்னொரு மனோபாவம் ஆபத்தானது. பணம் கிடைத்தால் வாரியிறைத்துச் செலவு செய்யலாம் என்பதுதான் அது. இன்றைய இளைஞர்கள் சேமிப்பதைவிட சம்பாதிப்பதிலும் செலவு செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அமெரிக்க வாழ்வியல் பாதிப்பு இன்று நம்மைக் கடன் கலாசாரத்துக்குத் தள்ளிவிட்டது. இருபது வருடங்களுக்கு முன்னால் வசதியல்லாதவர்கள் மளிகை கடைகளில் நோட்டு போட்டுக் கடன் சொல்லிப் பொருள் வாங்குவார்கள். இன்று வசதி படைத்தோர், இல்லாதோர் அனைவரும் கிரெடிட் கார்டில் (கடன் அட்டையில்) பொருள் வாங்கிப் பிறகு கடன் கட்டும் வழக்கத்துக்கு வந்துவிட்டோம். அதனால் பணம் இல்லாமல் (பல நேரங்களில் தேவைகூட இல்லாமல்) பொருள் வாங்குவது இன்றைய நுகர்வோர் சந்தையின் நிஜம்.
ரெண்டு யானை கொடுங்க!
ஒருவர் யானை விற்க வந்தாராம், வாடிக்கையாளர் சாதா சம்பளக்காரர். “எனக்கு எதற்கப்பா யானை? தவிர இதற்குத் தீனி போட்டு வளர்க்க, பணம், இடம், நேரம் எதுவுமே இல்லை. அதனால் வேண்டாம்!” என்றாராம். விற்பனை சிப்பந்தியோ யானையின் பெருமைகளை எடுத்துரைத்தார். “இந்த யானைக்கு மீதமுள்ள சோறு போட்டால் போதும். தெருவிலேயே விட்டுவிடலாம். எல்லோரும் யானையைப் பார்த்துக் காசு போடுவார்கள். யானைச் சாணத்தை விற்கலாம்…” என்றெல்லாம் சொன்னபோது மசியாதவர் கடைசியில் இதைக் கேட்டதில் விழுந்துவிட்டாராம். “சார், இப்போ பணம் எதுவும் கட்ட வேண்டாம். சுலபத் தவணை (ஈ.எம்.ஐ.) உண்டு. எப்ப முடியலைன்னாலும் ‘பே பேக்’ பாலிசியில் பாதி விலைக்கு எடுத்துக்குறோம்!”
“அப்ப ரெண்டு யானை கொடுங்க சார்!”
இந்தக் கடன் வாங்கிச் செலவு செய்யும் மனோபாவம் தொழிலுக்குக் உதவாது. தொழிலுக்கு கடன் வாங்கினால், கடன் கட்டும் தொகைக்கு மேல் பன்மடங்கு வருமானம் வரும் என்றால்தான் கடன் வாங்க வேண்டும். அதற்கு நுட்பமான நிதி அறிவு வேண்டும். எல்லாப் பெரிய நிறுவனங்களும் தொழிலுக்குக் கடன்வாங்குவதற்கு முன் அதன் நிதி மேலாளர்களைக் கொண்டு தீவிர ஆய்வு மேற்கொள்கின்றன. கடன், வட்டி, வருமானம், சந்தைப்போக்கு என அனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் தான் கடன் பெறுகின்றன.
சிறிதாகத் தொழில் ஆரம்பிப்பவர்களும் இதைச் செய்ய வேண்டும் என்பதுதான் எனது அறிவுரை. ரூபாய் ஐம்பது லட்சம் மூலதனம் போட்டு மேலும் தேவைக்குத் தொழில் கடனில் வியாபாரத்தை ஆரம்பிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். எப்போதிலிருந்து லாபம் சம்பாதிக்க ஆரம்பிப்பீர்கள், எப்போது கடன் முடியும், எதிர்பாராத சூழல் வந்தால் அதற்கு மாற்றுத்திட்டங்கள் என்பதை முதலிலேயே யோசிக்க வேண்டும்.
தவறினால் இங்குப் பலருக்கு இருக்கும் ‘ரொட்டேஷன்’ வியாதி வந்துவிடும். இதை வாங்கி அதில் போட்டு, அதை வாங்கி இதில் போட்டு, சொந்தப் பணம், தொழில் பணம் எல்லாம் கரைந்து கடைசியில் கடனாளியாக்கும். தொழிலை ஒரு சூதாட்டமாக்கும். வெளியிலிருந்து பணம் கிடைத்தால் கரையேறலாம் என்ற தவறான மனப்போக்கைக் கொண்டுவரும். கடன் வாங்குவது பெரிதல்ல. கடனைத் தொழிலில் சரியாகச் செலுத்தி விரைவில் லாபம் பார்ப்பதுதான் திறமை.
உங்கள் தொழில் ஆரோக்கியத்தின் டாக்டர்
ஒரு நல்ல ஆடிட்டர் அனைவருக்கும் அவசியம். நாம் சொன்னதைச்செய்யும், வரியைக் குறைக்கும், கடன் வாங்க ஆலோசனை சொல்லும் ஆடிட்டர் போதும் என்பது தவறான அணுகுமுறை. உங்கள் தொழிலுக்குப் பணம் மூச்சு காற்று என்றால் அதைச் சீராக இயக்குகிறீர்களா என்று ஆய்வு மேற்கொள்ளும் அளவுக்கு உங்கள் ஆடிட்டர் செயலாற்ற வேண்டும். உங்கள் தொழில் ஆரோக்கியத்தின் டாக்டர் உங்கள் ஆடிட்டர்.
தொழிலின் ஆதாரம் நிதி என்றால் அந்த நிதியை நிர்வாகம் செய்யத் தெரிந்துகொள்வது ஒவ்வொரு தொழில் முனைவோரின் அத்தியாவசியத் தேவை. நிதியறிவு இல்லாமல் யாரும் ஜெயித்ததில்லை. அப்படியே ஜெயித்தாலும் நிலைத்ததில்லை!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 02.05.2017

12: மல்லையா அளவுக்குச் சிறு வியாபாரிகளை நம்புவதில்லையே!

12: மல்லையா அளவுக்குச் சிறு வியாபாரிகளை நம்புவதில்லையே!

யாரிடம் பணம் கேட்பது என்ற கேள்வி தொழில் தொடங்குவதில் முக்கியக் கேள்வி. முதல் போட்டால்தானே முதலாளி? முதலுக்கு எங்குப் போவது? யாரைக் கேட்பது? எப்படிக் கேட்பது? எவ்வளவு கேட்பது? இவை புதிதாகத் தொழில் யோசிப்போரை அலைக்கழிக்கும் கேள்விகள்.
வெறும் கை முழம் போடாது
பணம் இருந்தால் போதும் தொழில் செய்துவிடலாம் என்று நம்புவது எவ்வளவு மடத்தனமோ அதே போலப் பணமே இல்லாமல் தொழிலை ஆரம்பிக்கலாம் என்று எண்ணுவதும் மடமையே. விசிட்டிங் கார்ட் வைத்துக்கொண்டு ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும் சேவைத் துறை தொழில்களுக்கும் முதல் தேவை.
அளவில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் வெறும் கை முழம் போடாது. பெரும்பாலும்! அதையும் மீறிப் போட்டவர்கள் இருக்கலாம். பல கிரிமினல் கதைகளில் இப்படி வெறும் கையால் முழம் போட்டு மேலே வந்தவர்கள் இருக்கலாம். ஆனால், உழைத்து வெற்றி பெறத் துடிக்கும் சிறு வியாபாரிகளுக்கு முதல் அவசியம் முதல்தான்.
தேவைப்படுவோருக்குப் போய்ச் சேர்கிறதா?
இந்தியச் சூழலில் தொழில் தொடங்குவது என்பது மிகவும் சிரமமான காரியம். பெரும்பாலான குடும்பங்கள் தொழில் என்றதும் பயப்படுவார்கள். தொழில் கடனுக்கு வங்கிகளை அணுகுவதில் பொது மக்களுக்குப் பெரும் தயக்கம் உள்ளது. தற்போது நிலைமை சிறிது மாறினாலும், வங்கிகள் என்றாலே கையை விரிப்பார்கள் என்ற எண்ணத்தைத்தான் அவர்கள் இதுநாள்வரை தோற்றுவித்துள்ளனர்.
சொல்லப்போனால் பல அரசாங்கத் திட்டங்கள் உள்ளன. ஆனால், அவை தேவைப்படுவோருக்கு முழுமையாகப் போய்ச் சேர்கிறதா என்றால் பதில் உங்களுக்கே தெரியும். தவிர அரசாங்க அலுவலகத்தில் சென்று ஒரு காரியம் முடிக்க வேண்டும் என்றால் நிறைய தனித்திறமைகள் தேவைப்படுகின்றன. அது முதல் முறையாகத் தொழில் முனைய நினைப்போரைச் சோர்வடையச் செய்துவிடும்.
சொல்லப்போனால் பல அரசாங்கத் திட்டங்கள் உள்ளன. ஆனால், அவை தேவைப்படுவோருக்கு முழுமையாகப் போய்ச் சேர்கிறதா என்றால் பதில் உங்களுக்கே தெரியும். தவிர அரசாங்க அலுவலகத்தில் சென்று ஒரு காரியம் முடிக்க வேண்டும் என்றால் நிறைய தனித்திறமைகள் தேவைப்படுகின்றன. அது முதல் முறையாகத் தொழில் முனைய நினைப்போரைச் சோர்வடையச் செய்துவிடும்.
வறுமையின் அபராதம்
இந்தக் காரணங்களால்தான் சொத்தை அடமானம் வைத்துத் தொழில் தொடங்குகிறார்கள் வசதி படைத்தவர்கள். நடுத்தர வர்க்கப் பாட்டு இதுதான்: “தங்கமே உன்ன நான் தேடி வந்தேன் நானே…” நலிந்த பிரிவினர் எல்லாம் அநியாய வட்டிக்கு அடிமையாகிவிடுகின்றனர். மறைந்த நிர்வாக மேதை சி.கே. பிரகலாத் இதை வறுமையின் அபராதம் என்று கூறுவார். அங்காடிகளில் முதல் புரட்டுபவர்கள் வாங்கும் கடனின் வருடாந்தர வட்டி சினிமா வட்டியை விடப் பன்மடங்கு அதிகம். காலையில் 900 ரூபாய் கொடுத்து மாலையில் 1000 ரூபாய் வசூலிப்பவர்கள் இருக்கிறார்கள். காலையில் கடன் வாங்கிப் பொருள் எடுத்து, நாள் முழுவதும் உழைத்து, விற்று, லாபத்தில் மாலையில் கடனை அடைக்கும் தினசரிச் சிறு வியாபாரிகள் இதனால் பலன் அடைகிறார்கள். அவர்கள் அன்றாட பிழைப்புக்கு வாங்கும் இந்த வட்டி விகிதத்தைக் கணக்கு போட்டுப் பாருங்கள். தலை சுற்றும்!
எது பெருமை?
இந்தியா முன்னேறச் சிறு மற்றும் குறு வியாபாரிகள் தழைக்க வேண்டும். உலகப் பணக்காரர்களில் முதல் நூறில் இந்தியாவின் பணக்காரர்கள் இருப்பது நமக்குப் பெருமை இல்லை. வறுமை நாடுகள் பட்டியலில் இந்தியா வெளியேற வேண்டும். அதுதான் பெருமை. அதற்கு ஒரே வழி சிறு தொழில் மேம்பாடுதான். வங்க தேசத்தில் பேராசிரியர் முகமது யூனஸ் கிராமீன் வங்கி (Grameen Bank) எனும் வங்கி மூலம் கடனுக்குத் தகுதியில்லாத நலிந்த பிரிவினருக்குக் கடனுதவி செய்து சாதனை படைத்தார். அதுவரை நிலவிவந்த ஒரு பெரும் பொய்யான பிம்பத்தை உடைத்ததுதான் என்னைப் பொறுத்த வரை நிஜமான சாதனை. பொருளாதார வசதி இல்லாதவருக்குக் கடன் தந்தால் திரும்ப வராது என்பதைப் பொய்யாக்கி ஏழை எளியவர்கள், மத்திய, மேல் தட்டு மக்களை விடக் கடன் தொகையைச் சரியாகத் திருப்பிக் கட்டுகிறார்கள் என்று வருடா வருடம் நிரூபித்தார். நம் நாட்டு வங்கி முதலாளிகள் மல்லையாவை நம்பும் அளவுக்குச் சிறு வியாபாரிகளை நம்புவதில்லை.
நம் கிராமங்களில் அபாரத் தொழில் எண்ணமும் ஆர்வமும் கொண்ட பலர் தொழில் செய்யத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலர் பிழைப்புக்காக வேறு வேலைக்குப் போய்த் தங்கள் தொழில் ஆசையைத் தொலைத்துவிடுகிறார்கள். ஒரு கிராமத்துக்கு ஒருவர் நல்ல தொழில் புரிந்தாலே அந்தக் கிராமம் சுபிட்சம் பெறும். லட்சக்கணக்கான தொழிலதிபர்கள் வரும் அளவுக்கு இந்தியாவில் வளமும் சந்தையும் உள்ளது. இவர்களுக்குத் தேவை முதல் தொழிலுக்கான பயிற்சியும் ஊக்குவிப்பும் கடனுதவியும்தான்.
வணிகம் செய்யும் சவால்
கல்விக்கு லட்சக்கணக்கில் செலவு செய்வோம், வேலையே கிடைக்காவிட்டாலும். கல்யாணத்துக்கு லட்சக்கணக்கில் செலவு செய்வோம், அது வாழ்க்கைக்குப் பயன்படாவிட்டாலும். ஆனால், தொழில் செய்ய என்றால் முதல் கிடைப்பது மிகவும் சிரமம். இதுதான் நிதர்சனம்.
இதனால்தான் இங்கு தனியார் வங்கியில் தனிப்பட்ட கடன் (பர்சனல்லோன்) எடுப்பது. சீட்டு பணத்தைத் தள்ளி எடுப்பது, நகைகளை அடமானம் வைப்பது, சொத்துக்களை விற்பது எல்லாம் சகஜம். அவசரப் பணத் தேவைக்கு உள்ளவர்களை உறிஞ்சிக் கொழுக்கும் அமைப்புகள் செழிக்கின்றன. ஆனால், நல்ல தொழில் திட்டத்துக்கு நியாயமான வட்டியில் கடனுதவியும் கிடைப்பது அரிதாகிறது.
இந்த வறண்ட பூமியைப் பிளந்து வருவதுதான் வீரிய விதையின் சவால். தொழில் செய்பவர்களுக்கு எந்த வகையிலும் சலுகை காட்டாத சமூகத்தில் வணிகம் செய்யும் சவால் அது!
முடியாதது என்று எதுவுமில்லை. முடியும். முதலைப் பெறும் வெற்றிதான் தொழில் முனைவோரின் முதல் வெற்றி!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 25.04.2017

11: யாரைக் கண்டும் பயப்பட வேண்டாம்!

11: யாரைக் கண்டும் பயப்பட வேண்டாம்!

எதுவும் எழுத்து மூலம் இருக்க வேண்டும் என்று சொல்வது சட்டரீதியாக மட்டுமல்ல, உளவியல் ரீதியாகவும் மிக அவசியம்.
வெற்றிக்கான வழிமுறைகளில் ஒன்று உங்கள் இலக்கை எழுத்துக்களாய், எண்களாய் எழுதிவைப்பது. அதையும் ரகசியமாக வைக்காமல் வெளிப்படையாக்குங்கள். சுவரில் தொங்க விடுங்கள். வீட்டிலும் நண்பர்களுக்கும் சொல்லுங்கள். எண்ணத் தெளிவு வரும். வைராக்கியம் வரும். உங்களுக்கு இலக்கு நோக்கி நகரத் தேவையான ஊக்கம் கிடைக்கும்.
தொடர்ந்து கவனம் செலுத்த…
மாணவர்கள் முதல் நிறுவனங்கள் வரை பின்பற்றுகின்ற உத்தி இது. 490 / 500 மதிப்பெண்கள் என்று எழுதிப் படிக்கும் மேஜை மேல் ஒட்டி வைத்தால் அது படிக்க உட்காரும்போதெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். பல உற்பத்தி நிறுவனங்கள் தரத்துக்கு, உற்பத்திக்கு என்று ஒரு இலக்கை நிர்ணயித்து அதைப் பணியிடமெல்லாம் ஒட்டி வைத்திருப்பார்கள். அது அங்குள்ள அனைவரையும் ஊக்கமாகப் பணி செய்ய வைக்கும். விற்பனைத் துறையிலும் இதைப் பின்பற்றுவார்கள்.
நிதியாண்டு தொடக்கத்தில் ஒரு இலக்கை நிர்ணயித்து அதை மந்திரம் போல ஜெபிக்கத் தொடங்குவார்கள் வருடம் முழுவதும். ஒவ்வொரு மீட்டிங்கிலும் இது அலசப்படும். நினைவூட்டப்படும். சற்றுப் பதற்றம் அளித்தாலும் மனதை இலக்கில் தொடர்ந்து கவனம் செலுத்த இத்தகைய உத்திகள் பயன்படும்.
ஒரு ஐடியா கொடுங்கள் சார்!
இதை ஒவ்வொரு தொழில் முனைவோரும் பயன்படுத்தலாம். தொழில் தொடங்கும் முன்னரே தெளிவு பெற உங்கள் திட்டத்தை முதலில் எழுதிப் பாருங்கள். எப்படி எழுதுவது என்றெல்லாம் கவலைப்படாதீர்கள். ஒரு கதைபோலக்கூட எல்லாவற்றையும் விவரமாக எழுதுங்கள். பின் உங்கள் நெருங்கிய வட்டத்திடம் கொடுத்துப் படிக்கச் சொன்னாலே அவர்கள் சில தகவல்கள் இல்லாததைச் சுட்டிக் காட்டுவார்கள். ஓரளவு எல்லாத் தகவல்களும் வந்த பின் இதைச் சுருக்கி ஒரு பக்கத்தில் எழுத முடியுமா என்று பாருங்கள்.
என்னிடம் தொழில் பற்றி ஆலோசனை கேட்டு வரும் பல கேள்விகள் மிகவும் மேம்போக்காக வரும். “ நான் நாகப்பட்டினத்தில் இருக்கிறேன். என்ன தொழில் செய்யலாம்?” “மெயின் ரோட்டில் இடம் உள்ளது. என்ன செய்யலாம்? “வேலையில் நாட்டமில்லை. தொழில் பண்ண ஒரு ஐடியா கொடுங்கள் சார்!” “கோடி ரூபாய் வருமானம் வரும் தொழில்கள் என்னென்ன?” இவை அனைத்தும் தொழிலைப் பரிசீலிக்கும் ஆரம்ப நிலை எண்ணங்கள். இதற்கு ஆலோசனை சொல்வது கடினம்.
“இந்தத் தொழில், இவ்வளவு முதலீடு, இது என் அனுபவம், இந்தச் சந்தையில் இப்படிச் செய்யலாமா?” என்று எழுதினால் ஓரளவு தொழில் பற்றி யோசித்திருக்கிறார்கள் என்று புலப்படும். பின் ஒரு நல்ல தொழில் திட்டம் எழுதவைத்தால் அவர்களுக்குத் தொழில் தொடங்கும் சாத்தியக்கூறுகள் அதிகம்.
ஆலோசனை கேளுங்கள்
எழுதாமல் பேசிக்கொண்டே இருந்தால் தினம் ஒரு புது எண்ணம் வரும். யாருக்குமே முதலில் பல தொழில் எண்ணங்கள் வருவது இயற்கை. பல தொழில்களைப் பரிசீலிப்பதும் நியாயமானதுதான். ஆனால் ஒரு கால கட்டத்தில் “இதுதான் உகந்தது” என்று ஒன்றை முடிவு செய்து தொழில் திட்டம் எழுதுவது நல்லது. எழுதும் போதுதான் உங்களுக்குப் பல கேள்விகள் வரும். படிப்பவர்களுக்கும் பல கேள்விகள் வரும். தொடர்ந்து அந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடுவதும், திட்டத்தை மெருகேற்றுவதும் நடக்கும்.
உங்கள் திட்டத்தை மற்றவர்களிடம் படிக்கக் கொடுத்து ஆலோசனை கேளுங்கள். அவர்கள் நிபுணர்களாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் எதிர்மறை உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் பயப்படாதீர்கள். அவர்கள் சொல்கிற விஷயம் தர்க்கரீதியாக உள்ளதா என்று மட்டும் பாருங்கள். யாரைக் கண்டும் பயப்பட வேண்டாம். யாரையும் உதாசீனப்படுத்தவும் வேண்டாம். உங்கள் ஐடியா களவு போய்விடும் என்று பயப்படாதீர்கள். அப்படி ஒரு மனிதராக இருந்தால் அவர் இந்நேரம் பெரிய தொழிலதிபராக ஆகியிருப்பார். அப்படிக் களவு கொள்ளத் தக்க தொழில் திட்டம் ஒன்று கையில் இருந்தால் அதை விடச் சிறப்பான இன்னொரு தொழில் திட்டத்தையும் உங்களால் உருவாக்க முடியும். அதனால் கவலை வேண்டாம்.
சட்ட உதவியை நாடலாம்
“எனக்கு நம்பிக்கை இல்லை சார். ஆரம்பிக்கும்வரை யாரிடமும் சொல்ல மாட்டேன்!” என்கிறீர்களா? நீங்கள் தொழில் முறை ஆலோசகர்களிடம் செல்லலாம். “அவர்களும் என் ஐடியாவை யாருக்காவது விற்றுவிட்டால்?” அதற்கும் வழி உள்ளது. பெரிய நிறுவனங்கள் Non Disclosure Agreement என்ற ஒன்றில் கண்டிப்பாக ஆலோசகர்களிடம் கையெழுத்து வாங்குவார்கள். நீங்களும் அப்படி ஒன்றை (சட்ட உதவியுடன்) தயார் செய்து, அதை ஆலோசனையின்போது ‘இந்தத் தொழில் திட்டம் சம்பந்தப்பட்ட எந்தத் தகவலும் என் மூலம் வெளியே போகாது என்று உறுதியளிக்கிறேன்’ என வாங்கிக்கொள்ளலாம்.
ஆலோசனை பெறுவதன் நோக்கம் உங்கள் தொழில் திட்டத்தைத் திடமானதாக ஆக்குவது. சரி, எழுதலாம். அதற்கான படிவம் என்று ஏதாவது உண்டா? உண்டு. ஆனால் அதற்கு முன் ஒரு பால பாடம். உங்கள் ஒரு பக்கத் திட்டத்தில் இந்த 7 கேள்விகளுக்குப் பதில் உள்ளதா என்று பாருங்கள்.
என்ன? (What?)
ஏன்? (Why?)
யார்?/ யாருக்கு? (Who?/ Whom?)
எப்போது? (When?)
எங்கு? (Where?)
எப்படி? (How?)
என்ன கணக்கு? (How much?)
5W2H என்ற இந்தச் சின்னச் சூத்திரத்தை வைத்துக்கொண்டு ஒரு பக்கத் தொழில் திட்டம் தயார் செய்யுங்கள். பின் விரிவான திட்டம் தீட்டலாம்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 18.04.2017

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 2

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 2
அறிவோம் ஜிஎஸ்டி: வரி ஏய்ப்பில் ஈடுபட்டால் அபராதம்..
வரி செலுத்துபவர்கள் தங்களது வரிக் கணக்கை எப்படி தாக்கல் செய்வது?
வரி செலுத்துபவர்கள் தங்களது வரிக் கணக்கை தாக்கல் செய்ய பல வழிகள் உள்ளன. தற்போதுள்ளதுபோல வருமானம் மற்றும் செலவு விவரங்களை நேரடியாக வருமான வரித்துறை இணைய தளத்தின் வழியாக தாக்கல் செய்யலாம். ஆனால் முன்னேற்பாடு இல்லாமல் செய்தால் ஏராளமான ஆவணங்களை இணைக்க வேண்டி இருக்கும். எனவே வரி செலுத்துபவர்கள் வரித்துறை இணையதளத்தில் உள்ள பிரத்யேக விவர குறிப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதை பூர்த்தி செய்து வரித்துறை இணையதளம் வாயிலாகவே தாக்கல் செய்யலாம். அல்லது ஜிஎஸ்டிக்கு என்று உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் வாழியாகவும் தாக்கல் செய்யலாம்.
வருமானத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட வரியை திரும்பப் பெறுவது எப்படி?
ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வரியை பிடித்தம் செய்தவர், தான் யாரிடமிருந்து வரியை பிடித்தம் செய்தாரோ அவரது விவரத்தை பிடித்தம் செய்த மாதத்தின் அடுத்த மாதத்தில் 10-ம் தேதிக்குள் தனது ஜிஎஸ்டிஆர்-7 படிவத்தில் பூர்த்தி செய்து வருமான வரி தாக்கல் அறிக்கையில் அளிப்பார். தவிர தான் மேற்கொண்ட அனைத்து பிடித்தங்களையும் இந்த வகையில் அவர் அளிக்க வேண்டும். வரிப் பிடித்தம் செய்தவர் தன் விவரங்களை பதிவேற்றம் செய்த பிறகு, யாரிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டதோ அவரது ஜிஎஸ்டிஆர்-2 படிவத்துக்கு தானாகவே இந்த விவரங்கள் சென்றுவிடும். இதற்கு அடுத்து வரி பிடித்தம் செய்யப்பட்ட நபர் தொகையைப் திரும்ப பெறுவதற்கு தனது ஜிஎஸ்டிஆர்-2 படிவத்தை உறுதி செய்ய வேண்டும். இதற்காக டிடிஎஸ் சான்றிதழ் அல்லது மின்னணு படிவங்களையுயோ சமர்ப்பிக்கத் தேவை யில்லை. தேவையெனில் டிடிஎஸ் ஆவணத்தை வருமான வரித்துறை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட தேதிக்குள் வரித் தாக்கல் செய்யவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதிவு செய்துள்ள ஒரு நபர் அல்லது நிறுவனம் குறிப்பிட்ட தேதிக்குள் வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். குறிப்பாக தாமதித்த ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்படும். இது அதிகபட்சமாக ரூ.5,000 வரையில் செல்லும். கெடு அளிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆண்டு வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்யத் தவறினாலும், ஒவ்வொரு நாளும் நூறு ரூபாய் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். அறிக்கை தாக்கல் செய்வதை திட்டமிட்டே தாமதப்படுத்தினால் அதிகபட்சமாக அவரது மொத்த பரிவர்த்தனையில் இருந்து 0.25% வரை அபராதம் கணக்கிட்டு வசூலிக்கப்படும்.
ஜிஎஸ்டி சட்டத்தின் படி எவையெல்லாம் குற்றங்களாகக் கருதப்படும்?
வரி ஏய்ப்பு குற்றங்களுக்கு தற்போதுள்ள சட்ட வரையறைகள் அனைத்தும் பொருந்தும் என்றாலும் ஜிஎஸ்டி சட்டப்படி சில குறிப்பிட்ட சட்ட வரையறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. பொருட்களை அளிக்காமல் விற்பனை ரசீது மட்டும் அளிப்பது, வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்துடன் தவறான தகவல்களை தருவது, பொய்யான நிதிநிலை அறிக்கை தயார் செய்வது, சட்டவிரோத சரக்குகளை சேமிப்பது, வழங்குவது, வாகனங்களில் கொண்டுசெல்வது போன்றவற்றுக்கு இப்போதுள்ள சட்ட நடவடிக்கைகள் ஜிஎஸ்டிக்கும் பொருந்தும். அதே நேரத்தில் முறையான விற்பனை ரசீதுகள் இல்லாமலோ அல்லது தவறான விற்பனை ரசீதுகளின் அடிப்படையிலோ விற்பனை செய்வது, வரி பிடித்தம் செய்யாமல் இருப்பது அல்லது குறைவாக வரிப் பிடித்தம் செய்வது போன்றவற்றுக்கு நடவடிக்கை இருக்கும்.
வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்ட வரியை மூன்று மாதங்களுக்கு மேலாக வரி ஆணையத்திடம் செலுத்தாமல் இருப்பது, சரக்குகளை அல்லது சேவையைப் பெறாமல் உள்ளீட்டு வரிக் கடனை பெறுவது அல்லது பயன்படுத்துவது. ஆவணங்கள் இன்றி சரக்குப் போக்குவரத்து மேற்கொள்வது போன்றவையும், மற்றொரு நபருடைய ஜிஎஸ்டி எண்ணைப் பயன்படுத்தி விற்பனை செய்வது, அல்லது ஆவணங்களை அளிப்பது தண்டனைக்குரிய நடவடிக்கையாக என்கிறது.
வரி ஏய்ப்பில் ஈடுபட்டால் ஜிஎஸ்டி சட்டப்படி எவ்வளவு அபராதம் விதிக்கப்படும்?
ஜிஎஸ்டி சட்டப்படி வரி ஏய்ப்பில் ஈடுபடு பவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது வரி ஏய்ப்பு செய்த தொகை, மோசடியான வழிகளில் பெறப் பட்ட கூடுதல் தொகை, குறைவாக வசூலிக்கப் பட்ட தொகை இவற்றிலிருந்து 10 சதவீதம் அபரா தமாக விதிக்கப்படும். வரி ஏய்ப்பு தொகையை பொறுத்து 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.
வரி விலக்கு பெற்ற சரக்குகளை எடுத்துச் செல்லும்போதும் உரிய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டுமா?
சட்டப்படியான ஆவணங்கள், அல்லது விற்பனை, கொள்முதல் ரசீதுகள் இல்லாமல் சரக்குகளை எடுத்துச் செல்வது குற்றமாகும். அல்லது பயண வழியில் ஆவணங்கள் இல்லாமல் சரக்குகளை சேகரித்துக் கொண்டு செல்வதும் குற்றமாகும். இதனால் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகலாம். சரக்குகள் ஏற்றப்பட்ட வாகனத்தோடு தடுத்து நிறுத்தப்படலாம். இதற்கு ஜிஎஸ்டி சட்டம் அனுமதிக்கிறது.
வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் என்றா லும் அவற்றின் மதிப்பில் 2% அல்லது ரூ.25,000 இவற்றில் எது குறைவோ, அந்தத் தொகை அபராதமாக வசூலிக்கப்படும். வரி விதிப்பு சரக்கு எனில் அவற்றுக்கென விதிக்கப்படும் வரியையும், அதைப்போல 100% அபராதமாகவும் கட்ட வேண்டும். அல்லது அதற்க இணையாக உறுதிமொழி பத்திரங்களை அளிக்க வேண்டும்.
பல மாநிலங்களில் வழங்கப்படும் சேவைகளுக்கு எங்கிருந்து வரி செலுத்துவது?
எந்த ஒரு சேவையாக இருந்தாலும் அந்த சேவையைப் பெறுபவர் பதிவு செய்த நபராக இருந்தால், இந்த சேவையை அளிக்கும் நபர் எங்கிருக்கிறாரோ, அவர் இருக்கும் இடம் சேவை வழங்கும் இடமாக கணக்கிடப்படும். அதேநேரத்தில் சேவையைப் பெறுபவர் பதிவு செய்யாதவராக இருந்தால் அந்த நிகழ்வு நடக்கும் இடத்தை சேவை வழங்கும் இடமாகக் கருதப்படும்.
எனவே இதற்கேற்ப வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஒரு சேவை பல மாநிலங்களிலும் நடைபெற்றால் அது நடை பெறும் ஒவ்வொரு இடத்திலும் சேவையின் அளவுக்கு ஏற்ப மதிப்பிடப்படும்.
தொடரும்..

- ஆடிட்டர். கோபால் கிருஷ்ண ராஜூ

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 24.06.2017

Monday, June 26, 2017

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் :1


ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 1
சரக்குகள் மற்றும் சேவைகள் என இரண்டு பிரிவுகளின் அடிப்படையில் மட்டுமே வரி விதிப்பு இருக்கும். மாநிலத்துக்குள் நடக்கும் சரக்கு பரிமாற்றத்துக்கு சிஜிஎஸ்டி / எஸ்ஜிஎஸ்டி மற்றும் யுடிஜிஎஸ்டி என விதிக்கப்படும். மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் சரக்குகள் பரிவர்த்தனைகளின் மீது ஐஜிஎஸ்டி என விதிக்கப்படும்.
ஜிஎஸ்டி வரியை எப்படி செலுத்துவது?
நேரடி வரி விதிப்பு ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாகவே வரியைச் செலுத்தலாம். ஆனால் இதன் மூலம் வரி மட்டுமே செலுத்த முடியும். அபராதம் மற்றும் பிற கட்டணங்களை செலுத்த முடியாது. அதேபோல ஆன்லைன் வழியாக செலுத்தப்பட்ட வரிகளை இன்புட் டேக்ஸ் கிரெட்டாக எடுத்துக்கொள்ளலாம். அவற்றை அவுட்புட் டேக்ஸ் செலுத்தலுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்படும். ஆனாலும், சிஜிஎஸ்டியின் இன்புட் டேக்ஸ் கிரெடிட்டை எஸ்ஜிஎஸ்டி வரிச் செலுத்தலுக்காகப் பயன்படுத்த முடியாது. அதாவது ஐஜிஎஸ்டி, சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி என்ற வரிசையில்தான் பயன்படுத்த முடியும். வரி செலுத்துபவர் ரொக்கமாகவும் செலுத்தலாம். தவிர மின்னணு பரிவர்த்தனைகள் மூலம் ஆர்டிஜிஎஸ். என்இஎப்டி வழியாகவும், அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் மூலமாகவும் ஜிஎஸ்டியை செலுத்தலாம்.
ஜிஎஸ்டி வரியை மாதத்தில் எந்த நாட்களில் செலுத்த வேண்டும்?
ஒவ்வொரு வரி செலுத்துபவரும் மாதாந்திர அடிப்படையில் ஜிஎஸ்டியை தாக்கல் செய்ய வேண்டும். முதல் மாதத்தின் விற்பனையை அடுத்து வரும் மாதத்தின் 20ஆம் தேதியில் செலுத்த வேண்டும். பணமாக செலுத்துவதாக இருந்தால் முதலில் வங்கிக் கணக்கில் அவை வைப்பு வைக்கப்பட வேண்டும். வரி செலுத்தும்போது அதிலிருந்து செலுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு வரி செலுத்து தலின்போதும் எடுக்கப்படும் தொகை பதிவு செய்யப்படும். உதாரணமாக மார்ச் மாதத்துக்கான வரி ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி செலுத்தப்பட வேண்டும். நிறுவனம் சார்பாக வரி செலுத்துவோர் காலாண்டு அடிப்படையில் வரி செலுத்தலாம்.
வரிக் கணக்கு தாக்கல் செய்து, வரிச் செலுத்தாமல் இருந்தால் என்ன ஆகும்?
இதுபோன்ற சமயங்களில் வரிக் கணக்கு தாக்கல் செய்ததாக எடுத்துக் கொள்ள சட்டம் அனுமதிக்கவில்லை. தாக்கல் செய்யப்பட்ட கணக்குக்கான முழு வரியையும் செலுத்தியிருந்தால் மட்டுமே அது ஏற்றுக்கொள்ளப்பட்ட வரித் தாக்கல் ஆகும். அந்த வரித் தாக்கலுக்கு மட்டுமே பொருட்களைப் பெறுபவர் இன்புட் டேக்ஸ் கிரெடிட்டை பயன்படுத்திக்கொள்ள முடியும். அதாவது வரிக் கணக்கு தாக்கல் செய்து முழு செல்ஃப்-அசெஸ்டு வரியையும் செலுத்தினால் மட்டுமே, பொருளைப் பெற்றவர் தாக்கல் செய்த வரிக்கான இன்புட் டேக்ஸ் கிரெடிட் வசதி ஏற்றுக்கொள்ளப்படும்.
அறக்கட்டளை மூலம் அளிக்கப்படும் பொருட்களுக்கு வரி செலுத்த வேண்டுமா?
எந்த பரிவர்த்தனையாக இருந்தாலும் வர்த்தக நோக்கில் மேற்கொள்ளும்பட்சத்தில் வழங்கப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வரி விதிக்கப்படும். ஆனால் வர்த்தக நோக்கம் இல்லாமல் அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியதில்லை. அதாவது கொடுக்கல் வாங்கல் என்பது வர்த்தக நடவடிக்கையாக இருக்கக்கூடாது.
ஜாப் ஒர்க் செய்யும் நிறுவனங்களுக்கு சரக்கை அனுப்பினால் ஜிஎஸ்டி வரி கணக்கிடப்படுமா?
விநியோகம் என்பது விற்பனை, இடமாற்றம் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கியதால் இது விநியோகமாகவே எடுத்துக் கொள்ளப்படும். எனினும் நிபந்தனைகளும் உள்ளன. வரி செலுத்தும் பணி அளிக்கும் நிறுவனம் அல்லது நபர் எவ்வளவு சரக்குகளையும் வரியின்றி ஜாப் ஒர்க் செய்யும் நபருக்கு அனுப்பலாம். அங்கிருந்தும் அது பிற ஜாப் ஒர்க் நபர் / நிறுவனங்களுக்கும் அதைக் கொண்டு செல்லலாம். வரி செலுத்துபவர் அந்த சரக்குகளை ஜாப் ஒர்க் முடிந்த பிறகு அந்த இடத்திலிருந்து அவை அனுப்பப்பட்ட 3 ஆண்டுகளுக்குள் திரும்ப எடுக்கும்போது வரி செலுத்த வேண்டும். அல்லது ஏற்றுமதிச் சரக்கு என்றால் வரி செலுத்தாமலோ திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.
ஜாப் ஒர்க் செய்யும் இடத்திலிருந்து சரக்குகள் நேரடியாக சப்ளை செய்யட்டால் அது யாருடைய வரிக் கணக்கில் வரும்?
ஜாப் ஒர்க் நிறுவனங்களின் கணக்கில் இது சேராது. அது பணி அளிக்கும் நிறுவனங்களில் கணக்கில்தான் வரும். எனினும் வேலையைச் செய்து முடிக்க ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பயன்படுத்தும் சரக்குகள் / சேவைகளின் மதிப்பும் பொருளில் சேரும் என்பதால், அந்த குறிப்பிட்ட பகுதி மட்டும் ஜாப் ஒர்க் நிறுவனங்களின் சேவையாக கணக்கிடப்பட்டு வரி கணக்கிடப்படும்.
பணி அளிப்பவரும், பணியை பெறுபவரும் வெவ்வேறு மாநிலமாக இருந்தால் எப்படி கணக்கிடப்படும்?
ஜாப் ஒர்க் பணிகளுக்கான சட்டப் பிரிவுகள் ஐஜிஎஸ்டி சட்டத்திலும் யுடிஜிஎஸ்டி சட்டத்திலும் உள்ளன. இதனால் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே, பணி அளிக்கும் நிறுவனமும், அதை செய்து கொடுக்கும் நிறுவனமும் ஒரே மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. வெவ்வேறு மாநிலம் யூனியன் பிரதேசமாகவும் இருக்கலாம்.
ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தபின் ஆரம்பத்தில் எழும் சந்தேகங்களை எப்படி தீர்ப்பது?
இதற்கு மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் பல்வேறு வகைகளில் வரி செலுத்துபவர்களுக்கு உதவி செய்கிறது. மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்தின் இணையதளத்தில் இது தொடர்பாக பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வரி செலுத்துபவர்களில் சந்தேகங்களை இந்தி, ஆங்கிலம் தவிர பிராந்திய மொழிகளிலும் உள்ளன. ஆரம்ப சிக்கல்களுக்கு இவை தீர்வை அளிக்கும். மேலும் உதவி தேவையெனில் வரிஆணைய அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
தொடரும்..
- ஆடிட்டர். கோபால் கிருஷ்ண ராஜூ
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 23.06.2017

பி.எஃப் பணம்: ஆன்லைன் மூலம் க்ளெய்ம் செய்வது எப்படி?

பி.எஃப் பணம்: ஆன்லைன் மூலம் க்ளெய்ம் செய்வது எப்படி?
நம் நாட்டில் தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் பி.எஃப் பணத்தை, ஆன்லைனில் எளிதாகப் பெறும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (.பி.எஃப்.), ஆரக்கிள் .எஸ் மூலம் ஒருங்கிணைந்த டேட்டா சென்டரை டெல்லி அருகே உள்ள துவாரகாவில் அமைத்துள்ளது. இந்த டேட்டா சென்டருடன் நாடு முழுவதிலும் உள்ள 123 .பி.எஃப். அலுவலகங்களும் இணைக்கப்படும்.
இதன் மூலம் பி.எஃப் பணத்தை ஆன்லைனில் திரும்பப் பெறும் புதிய வசதி நமக்குக் கிடைத்துள்ளது.
பி.எஃப் நடைமுறை
இதற்குமுன் பி.எஃப் பணத்தைத் திரும்பப் பெறவேண்டுமெனில், வேலை பார்த்த நிறுவனத்தின் கையொப்பம் அவசியம் தேவை. பி.எஃப் பணத்தை எடுக்கும்போது படிவம் எண் 19, 10சி ஆகியவற்றைப் பூர்த்தி செய்து வேலை செய்யும் நிறுவனத்திடம் தரவேண்டும். அதன்பிறகு அந்தப் படிவம், நிறுவனத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
நிறுவனம் ஒப்புதல் அளித்தபிறகு, பி.எஃப் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு, ஊழியருக்கு பி.எஃப் பணம் செட்டில்மென்ட் செய்யப்படும். இந்த நடைமுறையினால் பி.எஃப். பணத்தைப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.
நிறுவனத்தில் ஏதோவொரு பிரச்னை காரணமாக வேலையிலிருந்து விலகியவர்களுக்கும் பி.எஃப் பணத்தைத் திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் விதமாக நிறுவனத்தின் கையொப்பம் இல்லாமல் பி.எஃப் பணத்தை எடுக்க, யு..என் (Universal Account Number) எண் கொண்டுவரப்பட்டது.
இதன் மூலம், வேலை பார்க்கும் நிறுவனத்தின் கையொப்பம் இல்லாமல் ஒருவர் தனது பி.எஃப் பணத்தை எடுக்க முடியும் என்ற நிலை உருவானது.
யு..என் ஆக்டிவேட் அவசியம்
தற்போது பி.எஃப் பணத்தைப் பெறுவதற்கு யு..என் அவசியம். பி.எஃப் சந்தாதாரர்கள் அனைவரும் இந்த யு..என் எண்ணை ஆக்டிவேட் செய்து வைத்திருப்பது நல்லது. இந்த யு..என் எண் பெறுவதற்கு ஆதார் எண், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, வங்கிக் கணக்கு எண் ஆகியவை தேவை. இந்த எண்ணை வேலை பார்க்கும் நிறுவனத்தின் மூலம் பெறலாம்.
வேலையில் இல்லாதவர்களும் ஆன்லைனில் விண்ணப்பித்து, இந்த எண்ணைப் பெற முடியும். இந்த எண் கிடைத்தபிறகு, ஊழியர்கள் அதை ஆக்டிவேட் செய்துகொள்ள வேண்டும். அதன்பிறகு பி.எஃப் பணத்தைப் பெறுவதற்கு பி.எஃப் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
பி.எஃப் பணத்தை எடுப்பதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதனுடன் வங்கிக் கணக்கு விவரம், ரத்து செய்யப்பட்ட காசோலை ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இதன்பிறகு பி.எஃப் செட்டில்மென்ட் பணம் நேரடியாக ஊழியரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது இதுவரை பி.எஃப் பணத்தை எடுக்கும் நடைமுறையாக இருந்தது.
ஆன்லைன் மூலம் பி.எஃப் பணம்
இப்போது பி.எஃப் பணத்தை ஆன்லைனில் எளிதாகப் பெறும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஆணையர் சலில் சங்கர் மற்றும் உயர் அதிகாரி சங்கரிடம் கேட்டோம்.

``பி.எஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்கும் நடைமுறைகளை பி.எஃப் அமைப்பு மிகவும் எளிமைப் படுத்தியுள்ளதுபி.எஃப் பணத்தை ஆன்லைன் மூலம் க்ளெய்ம் செய்து பெற்றுக் கொள்ளலாம்இது ஜூன் முதல் வாரத்திலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.
பி.எஃப் சந்தாதாரர்களுக்கு யு..என் எண் இருந்து வங்கிக் கணக்குமொபைல் நம்பர் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைத்திருந்தால்பி.எஃப் பணத்தை ஆன்லைன் மூலம் பணத்தை எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம்.
 இந்தப் புதிய வசதியில் சந்தாதாரர்களின் பி.எஃப் கணக்குடன் வங்கிக் கணக்கு எண்ஆதார் எண்பான் கார்டு எண் மற்றும் யு..என் எண்ணை அவசியம் இணைத்திருக்க வேண்டும்.
 அப்படி இணைத்திருந்தால்பி.எஃப் இணையதளத்தில் பணத்தை எடுப்பதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
 விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகுபி.எஃப் பணம்சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக ட்ரான்ஸ்ஃபர் செய்யப்படும்.
 பி.எஃப் பணத்தை ஆன்லைன் மூலம் க்ளெய்ம் செய்வதற்குமுன்உங்களுக்கு யு..என் எண் அவசியம் இருக்க வேண்டும்.
 யு..என் எண்ணை ஆக்டிவேட் செய்யும்போது எந்தத் தொலைபேசி எண்ணை வழங்கினீர்களோஅந்த எண் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
 இதுதவிரஉங்களுடைய பி.எஃப் கணக்கின் கே.ஒய்.சி ஆவணத்தில் ஆதார் விவரத்தை இணைத்திருக்க வேண்டும்.
 உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப் பதிவு செய்திருந்தால்பி.எஃப் பணத்தை ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்துப் பெறலாம்” என்றனர்.
பி.எஃப் பொறுத்தவரைகுறைந்தபட்சம் ஐந்து வருடங்களுக்கு நீங்கள் .பி.எஃப். உறுப்பினராக இல்லாவிட்டால்உங்கள் பான் கார்டு எண்ணைச் சமர்பிக்க வேண்டும்தொடர்ந்து 60 நாள்களுக்கு மேல் வேலையில்லாமல் இருந்தால் பி.எஃப் பணத்தை எடுக்க முடியும்ஆனால், ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு மாறும்போது பணத்தை எடுக்க முடியாதுநிரந்தரமாக வெளிநாட்டுக்குச் செல்லும்போது, 55 வயது முடிந்து நிரந்தரப் பணி ஓய்வு பெறுபவர்   எந்தவிதமான காத்திருப்புக் காலமும் இல்லாமல் பி.எஃப் பணத்தைத் திரும்பப் பெறமுடியும்.
இந்தியாவில் பி.எஃப் சந்தாதாரர்களைப் பொறுத்தவரைகிட்டத்தட்ட நான்கு கோடி பேர் பங்களிக்கின்றனர்இதில் 1.72 கோடி பேர் மட்டுமே ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை யு..என் எண்ணுடன் இணைத்துள்ளனர்.
பி.எஃப்சந்தாதாரர்கள் இந்த வசதியினைப் பயன்படுத்தி நன்மை பெறலாமே!
சோ.கார்த்திகேயன்
நன்றி : நாணயம் விகடன் - 25.06.201