disalbe Right click

Tuesday, August 8, 2017

வழக்கறிஞர்களுக்குப் பதிலாக கட்சிக்காரர் வாதாடலாம்!

வழக்கறிஞர்களுக்குப் பதிலாக கட்சிக்காரர் வாதாடலாம்!
வழக்குரைஞர்கள் இல்லாவிட்டாலும் தொடர்புடையவர்களையே வாதாட அனுமதிக்கலாம்! கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை
வழக்குரைஞர்களுக்குப் பதிலாக கட்சிக்காரர்களை வாதாட அனுமதிக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
வழக்குரைஞர்கள் சட்டத்தில் உயர் நீதிமன்றம் கொண்டு வந்த புதிய திருத்தங்களை எதிர்த்து, ஜூன் 1-ஆம் தேதி முதல் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, அனைத்து நீதிபதிகள் கூட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வழக்குரைஞர்கள் ஆஜராகவில்லை என்றால், வழக்கில் தொடர்புடைய கட்சிக்காரர்களை ஆஜராகி வாதாடவும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதிக்க வேண்டும். அப்போது, வழக்குரைஞர்களுக்கு வழங்கப்பட்ட வக்காலத்து மனுவை ரத்து செய்ய வேண்டும்.
இதை வழக்குரைஞர்கள் யாராவது தடுத்தால், மாவட்ட முதன்மை நீதிபதிக்கு நீதிபதிகள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்டோர் மீது போலீஸார் வழக்கும் பதிவு செய்யவேண்டும்.
மாவட்ட அளவில் போலீஸ் படையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். எந்த நீதிமன்றத்துக்கும், நீதிபதிக்கும் பாதுகாப்பு தேவை என்றால், அந்த படையை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.
கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்படுவோர் சார்பில் ஜாமீன் கேட்டு, அவரது நெருங்கிய உறவினர்கள் நேரடியாக மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்.
சிறையில் இருக்கும் நபர்கள் ஜாமீன் கேட்டு சிறையில் இருந்தபடியே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும், அந்த மனு கையால் எழுதப்பட்டதாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டால், சிறையில் இருந்து அழைத்து வர உத்தரவிட வேண்டும்.
கைதிகளிடம் ஜாமீன் மனு மீது காணொலி காட்சி (விடியோ கான்பரன்சிங்) வசதி உள்ள நீதிமன்றங்கள் விசாரணை நடத்தலாம். தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக் குழு நீதிபதிகள், வாரத்துக்கு இருமுறை சிறைகளுக்குச் சென்று, கைதிகளிடம் ஜாமீன் மனுவை பெற்று, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த மனு குறித்து போலீஸ் தரப்பின் வாதத்தை கேட்டறிந்து, தகுந்த உத்தரவை சம்பந்தப்பட்ட நீதிபதிகள் பிறப்பிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமணி நாளிதழ் 05.08.2016

Sunday, August 6, 2017

வீட்டில் இருந்து கொண்டே காவல்துறையில் புகார் அளிக்கலாம்

வீட்டில் இருந்து கொண்டே காவல்துறையில் புகார் அளிக்கலாம்!
காவல்துறை இணையதளத்தில் முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) இலவசமாகப் பார்க்கவும், பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு இ-சேவை மையங்களில் ரூ.10 கட்டணம் செலுத்தியும் முதல் தகவல் அறிக்கையைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
குற்றம் மற்றும் குற்றவாளி களைக் கண்காணிக்கும் வலைப் பின்னல் திட்டம் மூலம் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யும் 1,913 காவல்நிலையங்கள் மற்றும் காவல் சிறப்புப் பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இணைய வழி (http://eservices.tnpolice.gov.in) சேவை மூலம் பொதுமக்களுக்கு சேவைகள் இலவசமாக வழங்கப் படுகின்றன.
பொதுமக்கள் வீட்டில் இருந்த படியே இணையதளம் மூலமாக காவல் நிலையத்துக்கு புகார் அனுப்பி பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலம் அளிக்கப்படும் புகார் பதிவு செய்யப்படும். முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பார்ப்பதுடன், பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்.
இணையதள புகார், முதல் தகவல் அறிக்கை, சமுதாய பணிப் பதிவேட்டின் (சிஎஸ்ஆர்) நிலையை அறிய முடியும். வாகனங்கள் தேடல், காணாமல் போனவர்கள், உயிரிழந்து அடையாளம் கண்டு பிடிக்கப்படாதவர்கள் உள்ளிட்ட விவரங்களை அறியலாம். இத்தகவல்கள் புகார்தாரர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். சாலை விபத்து தொடர்பான ஆவணங்களையும் காணலாம்.
முதல் தகவல் அறிக்கை
காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, தீவிர வாதம், இளம் சிறார், சர்ச்சைக்குரிய முக்கிய வழக்குகள் நீங்கலாக அனைத்து வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகளும் 24 மணி நேரத்துக்குள் காவல்துறையின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அதன்படி, 2016 நவம்பர் 15-ம் தேதிக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் மேற்குறிப்பிட்ட தடை செய்யப் பட்ட வழக்குகள் தவிர மற்ற அனைத்து வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையையும் தமிழ்நாடு காவல்துறை வலைதளத்தில் பொதுமக்கள் பார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும் முடியும்.
பொதுமக்கள் பழைய வாகனங்களை வாங்கும்போது, அவை விபத்தில் சிக்கியவையா, திருடப்பட்ட வாகனங்களா என்பதைக் கண்டறியவும் முடியும். சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு விரைவில் இழப்பீடு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட நபரின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் உதவியுடன் விபத்துகள் தொடர்பான ஆவணங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும், அதற்கான பணத்தை இணையதளத்திலேயே செலுத்தவும் இயலும்.
காவல்துறை வழங்கும் இணையதள சேவைகளை அரசு இ-சேவை மையங்களில் கட்டணம் செலுத்தியும் பொதுமக்கள் பெறலாம். சிஎஸ்ஆர், முதல் தகவல் அறிக்கை நிலை அறிதல், வாகனத் தேடலுக்கு தலா ரூ.10, இணையதள புகார் பதிவு நிலை அறிய ரூ.20 செலுத்தி தகவல் பெற்றுக் கொள்ளலாம்.
புகாரின் முடிவு பற்றி புகார் தாரரின் செல்போனுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் குறுஞ்செய்தி அனுப்பும் சேவை ஏற்கெனவே வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 06.08.2017 

Saturday, August 5, 2017

வருமான வரித்தாக்கல் செய்யாவிட்டால் என்னவாகும்?

வருமான வரித்தாக்கல் செய்யாவிட்டால் என்னவாகும்?
புதுடில்லி : 2016 -17 ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி தேதி என நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் அது ஆகஸ்ட் 5 வரை நீட்டிக்கப்பட்டது. வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று, நள்ளிரவு 12 மணி வரை வருமான வரி அலுவலகங்கள் திறந்திருக்கும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஒருவேளை, இன்றைக்குள் வருமான வரியை தாக்கல் செய்ய முடியாவிட்டாலும் கவலைப்பட தேவையில்லை. அரசு நிர்ணயித்த தேதிக்குள் வருமான வரியை தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு, தாமதிக்கப்பட்ட வரி தாக்கல் என கூறுகின்றனர். வருமான வரித்தாக்கல் சட்டப் பிரிவு 139(4) ன்படி, அரசு நிர்ணயித்த காலக் கெடுவிற்குள் வருமான வரியை தாக்கல் செய்ய முடியாதவர்கள், நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் எப்போது வேண்டுமானாலும் தங்களின் வருமான வரியை தாக்கல் செய்து கொள்ளலாம்.
அதாவது, 2018 ம் ஆண்டு மார்ச் 31 ம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் திருத்தப்பட்ட தாமதமான வருமான வரியை தாக்கல் செய்து கொள்ளலாம். இதற்குள் வருமான வரியை தாக்கல் செலுத்துவோருக்கு அபராதமும் விதிக்க ப்படாது. 2018 ம் ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி அல்லது அதற்கு பிறகு வருமான வரியை செலுத்துவோருக்கு ரூ.10000 முதல் அபராதம் வசூலிக்கப்படும்.
அனைவரையும் வருமான வரி செலுத்த வைப்பதற்காக மத்திய அரசு தற்போது இந்த திருத்த்தப்பட்ட தாமத வரி முறையை கொண்டு வந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோருக்கு இத்தகைய வசதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர் நாளிதழ் – 05.08.2017

Wednesday, August 2, 2017

வாரிசு இல்லாத பெண்களின் சொத்து என்னவாகும்?

வாரிசு இல்லாத பெண்களின் சொத்து என்னவாகும்?
பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு
பரம்பரை மூலமாக கிடைக்கின்ற  சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்கிற விஷயம் இப்போது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.  ஆனால், பாக பிரிவினை என்று செய்யும்போது, பெண்களுக்கு எந்தெந்த சூழ்நிலைகளில், நேரிடையாக சொத்து கிடைக்கும் என்று எல்லோருக்கும் தெரியாது.
அந்தக் காலத்தில், இந்து  வாரிசு சட்டம்-1956  என்கிற சட்டம் ஒன்று நமது நாட்டில் இருந்தது. 1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தில், பெண்களுக்குள்ள உரிமை என்னவென்றால், பிறந்த வீட்டில் தங்கிக் கொள்ளலாம், படித்துக் கொள்ளலாம், திருமணம் செய்து கொள்ளலாம்  சீர்வரிசை  செய்து அந்தப் பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைப்பர்; அதோடு சரி. வேறு எந்த உரிமையும் கிடையாது. 
இந்த சட்டத்தை , தமிழ்நாடு மாநில அரசு, ”இந்து வாரிசுச் சட்டம் - 1990” என்று மாற்றி சில  திருத்தங்களைக் கொண்டு வந்தது. பரம்பரையாக கிடைக்கின்ற பூர்வீகச் சொத்தில் கனவன் அவனுக்கு பின் அவன் மனைவி, மகன், மகள் என, அனைவருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்ற, அது  கடந்த 1990ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் நாள் முதல் அமுலுக்கு வந்தது.மத்திய அரசும் 2005ம் ஆண்டு திருத்தம் செய்து, இந்து  வாரிசுச் சட்டத்தில், இதே சம உரிமையைக் கொண்டு வந்தது.
ஆனால், இந்து வாரிசுச் சட்டத்தின் திருத்தப்படி 25.03.1989க்கு முன்பு திருமணம் செய்து கொண்ட ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பூர்வீகச் சொத்தில் உரிமை கிடையாது. மேலும், 25.03.1989க்கு பிறகு ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த பெண் திருமணம் செய்து கொண்டு இருந்தாலும், அவர், 25.03.1989க்கு முன்பு பங்கு பாகம் பிரிக்கப்பட்ட பூர்வீகச் சொத்தில் உரிமை கொண்டாட முடியாது.  
வாரிசு இல்லாத ஒரு பெண்ணுடைய பரம்பரை சொத்து என்ன ஆகும்?
பொதுவாக ஒரு குடும்பத்தில் ஆண் வாரிசுகள் மட்டும் இருந்தால், அந்த சொத்தானது எந்தப் பிரச்னையும் இன்றி, அடுத்த தலைமுறைக்கு சிரமம் என்பதே இல்லாமல் மாறிவிடும். ஆனால், ஆண் வாரிசு யாரும் இல்லாமல், பெண் மட்டுமே, அந்த குடும்பத்தில் வாரிசாக இருந்தால், அந்த சொத்து அடுத்த தலைமுறைக்கு செல்வதில் சில சிக்கல்கள் ஏற்படும். அது என்னவென்று பார்ப்போம்.
குடும்பத் தலைவரான ஒரு தந்தையிடம் இருந்து, மகள் பெயருக்கு ஒரு பரம்பரை சொத்து மாறுகிறது என்றால், அந்த பரம்பரைச் சொத்தினை பெற்ற மகளுக்கு திருமணமாகி குழந்தைகள் இருந்தால், அந்த சொத்து அக்குழந்தைகளின் பெயருக்கு, அந்த மகளின் விருப்பத்தின் அடிப்படையில் சென்றுவிடும். (குழந்தைகளுக்கு கண்டிப்பாக பங்கு தரவேண்டும் என்பது இல்லை) 
ஆனால், இதுபோல பரம்பரைச் சொத்துக்கு வாரிசாகும் ஒரு பெண் திருமணம் செய்யாமல்  தனி நபராகவே வாழ்ந்து வருகிறார் என்றால், அவருக்கு பின்னர் அந்த சொத்தானது யார் பெயருக்கு சேரும் என்பதில் சில சிக்கல் ஏற்படும். சொத்தை எழுதிக் கொடுத்த பெற்றோர் உயிரோடு இருந்தால், மீண்டும் அவர்களிடமே போய்ச் சேர்ந்துவிடும். அவர்களும் இறந்திருந்தால் அந்த பெண்ணுடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு சென்றடையும்.
யாரும் தலையிட முடியாது
திருமணமும்  செய்யாமல்,  வாரிசும்  இல்லாமல்  பூர்வீகச்  சொத்தை  பெற்ற பெண் ஒருவர்,  தான்  இறப்பதற்கு  முன்னால்,  தனக்கு  விருப்பமான நபர்கள் யாருக்காவது  அந்த  சொத்தை   முழுமனதுடன்    எழுதி   வைத்திருந்தால், அதன்படியே அந்த சொத்து அவர்களுக்குப் போய் சேரும். 
அதில் பெற்றோரோ, சகோதர, சகோதரிகளோ யாரும் தலையிட முடியாது.
இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 14
ஒரு பெண்ணுக்கு எந்த வகையில் சொத்துகள் இருந்தாலும் அது அவருடைய தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். திருமணமான ஒரு பெண்ணுக்கு அவரது பெற்றோர் மூலமாகச் சொத்துகள் கிடைத்தால், அதில் அவரது கணவரோ, குழந்தைகளோ உரிமை கோர முடியாது. 
ஏற்கெனவே சொன்னபடி, இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 14-ன்படி ஒரு பெண்ணிற்கு எந்த வகையில் சொத்து கிடைத்தாலும், அதாவது அவரது பெற்றோர்கள் மூலமாக, கணவனின் மூலமாக அல்லது சுய சம்பாத்தியம் மூலமாக என எந்த வகையில் சொத்து கிடைத்தாலும், அது அவரது தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். எனவே, அந்தச் சொத்தில் அவர் உயிருடன் இருக்கும் வரை அவருக்கு எதிராக பாகமோ, உரிமையோ வேறு யாரும் கோர முடியாது.

*********************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

பிளஸ் 1 பொது தேர்வில் சட்ட சிக்கல்!

பிளஸ் 1 பொது தேர்வில் சட்ட சிக்கல்!
பிளஸ் 1 பொதுத் தேர்வு குறித்த வழக்கை விரைந்து முடிக்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்என, பெற்றோரும், ஆசிரியர்களும் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில், பல ஆண்டு களாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும், பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த மதிப்பெண் அடிப்படையில், உயர் கல்வி வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே, பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் இருப்பதால், பெரும்பாலான பள்ளிகள், பிளஸ் 1 மாணவர்களுக்கும், பிளஸ் 2 பாடங்களே நடத்தி வந்தன.
உயர் கல்விக்கான, மத்திய அரசின் பல்வேறு நுழைவுத் தேர்வுகளில், பிளஸ் 1 பாடங்கள் அதிகளவில் இடம் பெற்றன. அதனால், தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாமல் தவித்தனர்.
இதையடுத்து, ’பிளஸ் 1 மாணவர்களுக்கும், இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு நடத்தப்படும்என, தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து, மதுரை உயர் நீதிமன்றத்தில், பெற்றோர் சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
அதில், ’ஏற்கனவே, 10ம் வகுப்பு; பிளஸ் 2வில், பொதுத் தேர்வு உள்ளது. பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு வந்தால், மாணவர்களுக்கு, மன அழுத்தம் ஏற்படும்என, கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித் துறை, இன்னும் சரியான முடிவு எடுக்காமல் திணறுகிறது.
அதனால், வழக்கு விசாரணை, ஆக., 7க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.இதனிடையே, வழக்கின் முடிவு எப்படி வரும் என்ற எதிர்பார்ப்பில், மீண்டும் பல பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பில் பாடம் நடத்துவதில் ஆர்வம் குறைந்துள்ளது.
தேர்வுக்கான விதிமுறைகள் வெளியிடப்படாததால், பிளஸ் 1 தேர்வு குறித்து, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர்.
இது குறித்து, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கூறுகையில், ’பள்ளிக்கல்வி அதிகாரிகள், உரிய முறையில் விளக்கம் கொடுத்து, சட்ட ரீதியான பிரச்னையை விரைந்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால், ’நீட்தேர்வு பிரச்னை போல், கடைசி வரை மாணவர்களை காத்திருக்க வைப்பது, இறுதியில் சிக்கலாகி விடும்என்றனர்.
நன்றி : தினமலர் - கல்விமலர் - 02.08.2017

Tuesday, August 1, 2017

வரலாற்றுக் கால வரைபடங்களுக்கான ஓர் இணையதளம்

வரலாற்றுக் கால வரைபடங்களுக்கான ஓர் இணையதளம்
வரைபடங்கள் மீது, அதிலும் வரலாற்றுக் கால வரைபடங்கள் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு ஓல்டுமேப்ஸ்ஆன்லைன் இணையதளம் ஏற்றதாக இருக்கும். பெயர் உணர்த்துவதுபோலவே இந்தத் தளம் பழைய வரைபடங்களின் இருப்பிடம்.
இந்தத் தளத்தில் வரலாற்றுக் கால வரைபடங்களைத் தேடிப்பார்க்கலாம். வரலாற்றின் குறிப்பிட்ட காலகட்டம் அல்லது குறிப்பிட்ட இடத்தைத் தெரிவித்துத் தேடும் வசதி இருக்கிறது. தேடலில் ஈடுபடும்போதே அந்தக் கால சென்னை தொடர்பான பல்வேறு வரைபடங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. தென்னக ரெயில்வே, தென்னிந்தியா, மலபார், கோரமண்டல் எனப் பல விதமான வரைபடங்களைப் பார்க்க முடிகிறது.
வரலாற்று ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்தத் தளம் பொக்கிஷமாக அமையும். வரைபடங்களை அச்சிட்டுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான செயலி வடிவமும் இருக்கிறது.
இணைய முகவரி: >http://www.oldmapsonline.org/
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 26.05.2017

துயரத்தை உருவாக்குவதே நீங்கள்தான்!

துயரத்தை உருவாக்குவதே நீங்கள்தான்!
கேள்வி: சத்குரு, நிறைவேறாத  ஆசைகள் நம்மை சோகத்தில் ஆழ்த்துகின்றன. இதை எப்படி சமாளிப்பது?
சத்குரு: ஒன்றை சமாளிப்பது, அல்லது அடக்கி ஆள்வது என்றால் அதற்கு என்ன அர்த்தம்? அதன் மீது நீங்கள் ஏறி அமர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள். ஒரு பிரச்சினையின் மேல் நீங்கள் அமர்ந்து கொள்வதால், உங்கள் வாழ்க்கை எவ்வழியிலாவது மேன்மையடையும் என்று நினைக்கிறீர்களா?
இல்லை. அதையெல்லாம் ஏற்கெனவே முயற்சி செய்து பார்த்துவிட்டீர்கள்தானே? அது வேலை செய்வதில்லை. துயரத்தை எப்படி தவிர்ப்பது என்று என்னைக் கேட்காதீர்கள், ஆனந்தமாய் வாழ்வது எப்படி என்று கேளுங்கள்.
துயரங்கள் நீங்களே உருவாக்கிக்கொள்வது. 
அது உங்களுக்கு இயல்பாக ஏற்படுவதில்லை. உங்கள் மனதோடு குளறுபடிகள் செய்யாமல், இங்கு சும்மா அமர்ந்திருந்தால், நீங்கள் நன்றாகவே இருப்பீர்கள். ஆனால் இப்போது மனதுடன் மிகவும் சிக்கிப் போய்விட்டீர்கள், தொடர்ந்து மனதைக் கிளறிக்கொண்டே இருக்கிறீர்கள். ஒரு நொடிகூட அதை விட்டு விலகி வரமுடியவில்லை. அதுதான் பிரச்சினை.
'துயரத்தில் உழலாமல் இருப்பது எப்படி?' என்பதே பொருத்தமற்ற கேள்வியாக இருக்கிறது. ஏனெனில் அதை உருவாக்குவதே உங்கள் மனம்தான். மனதைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான 'ஸ்விட்ச்' தெரியாமல், இருட்டில் துழாவிக் கொண்டிருக்கிறீர்கள். சில நேரம் தற்செயலாக ஏதோ ஒன்றைத்தொட்டுவிட, எல்லாம் நன்றாக இருக்கிறது. சில நேரம் வேறேதோ ஒன்றைத்தொட, அது துயரத்தை வரவழைக்கிறது. இதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
இது நீங்கள் ஒரு 'காரை' வைத்திருந்து, ஆனால் அதை ஓட்டும் வழிதெரியாமல் இருப்பதுபோல. மனம்போனபடி கீழிருக்கும் அந்த மூன்று மிதிக்கட்டைகளை (க்ளட்ச், பிரேக், ஆக்ஸெலரேட்டர்)யும் மாற்றி மாற்றி மிதித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் எந்தளவு மோசமான ஓட்டுனராக இருப்பீர்கள் என்பதை அறிவீர்களா? பயணம் மிகவும் குலுங்கிக் குலுங்கித் தானே நடக்கும்?
இப்போது உங்கள் உடலையும், மனதையும் அப்படித்தான் செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அவை எப்படி செயல்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி எடுக்காமல், தற்செயலாக அவற்றைச் செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு காரை ஓட்ட வேண்டும் என்றால் அதைப்பற்றி உங்களுக்கு நிறையத் தெரிந்திருக்க வேண்டும். அந்த எந்திரம் எப்படி வேலை செய்கிறது, அதை இயக்கும் விதிகள் என்ன என்பதெல்லாம் தெரிந்திருந்தால் அதை சுலபமாக இயக்கலாம்.
இது உங்கள் உடலிற்கும், மனதிற்கும், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்கும் பொருந்தும். இன்று பரவலாய் ஒரு கலாச்சாரம் இருக்கிறது. நாம் விரும்பும் ஒன்று நடக்கவேண்டுமெனில், அதற்கு என்ன தேவையோ அதை செய்வதற்குப் பதிலாக, மற்றதை எல்லாம் செய்துவிட்டு, நாம் விரும்புவது நடந்துவிட வேண்டும் என்று வேண்டிக் காத்திருப்பதுதான்.
வாழ்க்கை எப்போதும் இப்படி நடக்காது என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நல்லது. குழந்தைகள்போல் இல்லாமல், இனியேனும் கொஞ்சம் முதிர்ச்சியோடு செயல்படுங்கள். 'இன்று நான் கடவுளிடம் வேண்டிக் கொண்டுவிட்டேன், அதனால் இன்றைக்கு எதுவும் தவறாக நடக்காது' இப்படிக்கூட நினைக்கிறீர்கள், இல்லையா?
ஆனால் கடவுளை வேண்டிக் கொள்பவர்களும் தினமும் இறந்துகொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்தானே? பிரார்த்தனை போன்ற விஷயங்கள் எல்லாம் வேறொரு காரணத்திற்காக செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால், காலப்போக்கில், இப்போது, எதற்கு எது என்பதே புரியாது ஏதேதோ செய்துகொண்டிருக்கிறீர்கள். ஓட்டுவது சரியாக நடக்கவில்லை, வேண்டிக்கொள்வதும் சரியாக நடக்கவில்லை, தியானமும் சரியாக நடக்கமாட்டேன் என்கிறது. ஏனெனில் என்ன செய்ய வேண்டுமோ அதைச்செய்யாமல், வேறெதையோ நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள்.
உங்களுக்குச் செடி வளர்க்க வேண்டுமென்றால், எல்லா பிரார்த்தனைகளும் செய்துவிட்டு, பிறகு விதையை மண்ணில் விதைக்காமல், அதைக் கூரையில் ஒட்டிவைக்கிறீர்கள். அது எப்போதாவது வளருமா?
மண்ணில் தேவையான உரங்களைக்கலந்து, அதைச்சரியான பதத்தில் தயார்செய்து, அதில் வளரக்கூடிய விதையை விதைத்தால், அதுவளரும். சரியான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்பவருக்குத்தான் வாழ்வின் புதையல்கள் கிட்டும்.
நீங்கள் நல்லவராகவோ, கெட்டவராகவோ இருப்பதால் செடியில் பூக்கள் மலராது. அவன் கெட்டவன். ஆனால் அவனிடம் செல்வம் சேர்கிறது. எனக்கு மட்டும் ஏன் நடக்கமாட்டேன் என்கிறதுஎன்று பலர் அலுத்துக் கொள்வதைக் கேட்டிருப்பீர்கள். நீங்கள் நல்லவர்தான், ஆனால் முட்டாளாய் இருக்கிறீர்கள், என்னசெய்வது? சரியான விஷயங்களை செய்யாதவரை, உங்களுக்கு வேண்டியவை நடக்காது.
ஆனந்தமாக இருக்கவேண்டும் என்று நீங்கள் எண்ணினால், அதற்கு, உங்களுக்குள் என்ன செய்யவேண்டுமோ அதை நீங்கள் செய்யவேண்டும். வேண்டிக் கொள்வதாலோ, அல்லது அது 'வேண்டும், வேண்டும்' என்று ஆசைகொள்வதாலோ, அது உங்களுக்குக் கிடைத்துவிடாது. உங்களுக்குள் தேவையான சூழ்நிலையை நீங்கள் உருவாக்கிக்கொண்டால், ஆனந்தம் உங்களுக்குள் ஊற்றெடுக்கும்.
ஒரு மலரை உங்களால் மலரச் செய்ய முடியாது. ஆனால் அது மலர்வதற்குத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கினால், ஒன்றல்ல ஓராயிரம் பூக்கள் மலரும். வாழ்வில் இதைத்தான் நீங்கள் செய்யமுடியும். அதைச் செய்தாலே போதும்.
வாழ்வில் ஏதோ ஒன்று உங்களுக்கு நடப்பதற்கு நீங்கள் வேறு எதையும் செய்யத் தேவையில்லை. உங்களுக்கு என்னவேண்டுமோ, அதற்கு சரியான சூழ்நிலைகளை நீங்கள் அமைத்தால்போதும், தேவையானது நடந்துவிடும். உங்களுக்கு சாதம் சமைக்கவேண்டும் என்றால், கொஞ்சம் அரிசி, நீர், வெப்பம் இவற்றை எப்படி வைக்கவேண்டுமோ அப்படி வைத்தால், சாதம் தயார் ஆகிவிடும். அதை நீங்கள் போய் சமைக்கவேண்டாம். சரியான சூழ்நிலைகளை உருவாக்க நீங்கள் கற்றுக்கொண்டால்போதும், சமைப்பதுதானாக நடந்துவிடும்.
முதல்முறை செய்தபோது சரியான சூழ்நிலைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். அவ்வப்போது கையை உள்ளேவிட்டு, அன்று சாதத்திற்கு பதிலாக கஞ்சியை உருவாக்கினீர்கள். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல, சரியான சூழ்நிலையை உருவாக்க நீங்கள் கற்றுக்கொண்டபிறகு, அங்கே நீங்கள் நின்று கொண்டிருக்க வேண்டும் என்றுகூட அவசியம் இல்லை. சரியான சூழ்நிலையை உருவாக்கிவிட்டு, நீங்கள் அக்கம் பக்கத்தில் பேசிக்கொண்டிருந்து விட்டு வந்தாலும், சாதம் தயாராகி விடும். இது அவ்வளவு சுலபம்.
உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும்கூட இதேபோன்றுதான். எங்கெல்லாம் சரியான சூழ்நிலைகளை நீங்கள் அமைத்தீர்களோ, அங்கெல்லாம் நடக்கவேண்டியவை நன்றாகவே நடக்கிறது. எங்கெல்லாம் சரியான சூழ்நிலையை உங்களுக்கு அமைக்கத் தெரியவில்லையோ, அங்கெல்லாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், நீங்கள் தலைகீழாகவே நின்றாலும், அதுநடப்பதில்லை.
ஒரு சிறுகடையில் 300 ரூபாய் வியாபாரத்தை தினமும் சமாளிப்பவருக்கு இரத்தக்கொதிப்பு ஏற்பட்டு, அதுதாங்கமுடியாத பாரமாய் இருப்பதும், உலகெங்கும் 300 தொழில் ஸ்தாபனங்கள் நிறுவி, அவற்றை நேரில் சென்று பார்வையிடாமலேயே அவருக்கு எல்லாம் அற்புதமாய் நிகழ்வதையும் பார்த்திருக்கிறீர்கள்தானே?
ஏன் இப்படி? இது ஏனெனில், தொழில்கள் வெற்றிகரமாக நடப்பதற்கு ஏதுவான சூழ்நிலையை எப்படி உருவாக்குவது என்பதை அவர் கற்றுக்கொண்டு விட்டார். அந்த சூழ்நிலைகளை உருவாக்கிவிட்டு, அவை செயல்படுவதற்கு அனுமதித்தால், எல்லாம் நன்றாகவே நடக்கிறது. சரியான சூழ்நிலையை உருவாக்காமல், அதை சரியாக நானே நடத்துகிறேன் என்று முயற்சித்தால், உங்களுக்கு பித்துப்பிடித்துப்போகும். வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் இதுதான் உண்மை.
உங்களுக்கு எதுவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அது நடப்பதற்குத் தேவையான சூழ்நிலையை நீங்கள் உருவாக்கவேண்டும். இல்லையெனில் அது நடக்காது.
இப்போது ஆனந்தமாய் வாழவேண்டும், துயரத்தில் உழலக்கூடாது என்ற ஆசை உங்களுக்கு வந்திருக்கிறது. இதை உருவாக்கிக் கொள்ள எந்த மாதிரியான சூழ்நிலைகளை அமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு, அப்படி அமைத்துக் கொள்ளவேண்டும். அப்போது அது நடக்கும்.
அவ்வாறு இல்லாமல், ஏதோ ஒன்றைக் கைவிடவேண்டும் அல்லது ஒதுக்கிவிட வேண்டும் என்று முயன்றால், இப்போது இருப்பதைவிட இன்னும் ஆழமான துயரத்தில் நீங்கள் உழல்வீர்கள். 'எப்படியேனும் நான் என்னை மாற்றிக்கொண்டே ஆகவேண்டும்' என்று தன்னை கட்டாயப்படுத்தி முயல்பவர்கள், ஆனால் அதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் சாதாரணமாய் வாழ்பவர்களைவிட, அதிகமாக அவதியுறுவதைப் பார்த்திருக்கிறீர்களா?
இப்படி இருக்கவேண்டும், அப்படி இருக்கவேண்டும் என்று தங்களுக்குத்தானே விதிகளை வகுத்துக்கொண்டு வாழ்பவர்கள், மற்றவர்களைவிட மிக அதிகமாக துன்பத்தில் உழல்கிறார்கள்.
அதற்குக் காரணம், திட்டவட்டமாய் வகுக்க முடியாதவற்றை வகுக்க நினைப்பதால்தான். என்னவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அது நடப்பதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குங்கள். அதுபோதும், வேண்டியது நடக்கும்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 01.08.2017


சீராய்வு மனு - சட்டம் என்ன சொல்கிறது?

 
சீராய்வு மனு - சட்டம் என்ன சொல்கிறது?
சசிகலாவின் சீராய்வு மனு தண்டனையை தளர்த்துமா? 
சென்னை : சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சசிகலா தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர். 
சொத்து குவிப்பு வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சி.கோஷ் மற்றும் அமித்வராய் ஆகியோர் ஜெயலலிதாவை இறந்துவிட்ட காரணத்தினால் வழக்கிலிருந்து விடுவித்தும் சசிகலா உள்ளிட்ட மற்ற மூவருக்கும் செப்டம்பர் 2014ல் வழங்கப்பட்ட தனி நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தும் உத்தரவிட்டனர். 
இதன்படி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டள்ளனர். இந்நிலையில் சிறைத் தண்டனையை எதிர்த்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர். 
அதில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா அரசு ஊழியராக இருந்ததை வைத்தே வழக்கு தொடரப்பட்டதாகவும் அவர் இறந்து விட்ட காரணத்தால் வழக்கும் முடிவுக்கு வரும் என்றும் சசிகலா தரப்பில் வாதங்கள் அந்த மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளன. 
வலுவில்லை 
இந்த சீராய்வு மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் அப்பீல் அமைப்பு முறையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு 99 சதவீதம் இறுதியானது. இந்த வழக்கை பொருத்த வரை மனுதாரர் தரப்பில் வலுவான காரணங்கள் இல்லை. தள்ளுபடி தான் செய்யப்படும் 
சீராய்வு மனுக்களை பொதுவாக உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காது, அப்படியே எடுத்தாலும் அது தள்ளுபடியே செய்யப்படும். மேலும் வழக்கறிஞரின் பங்கு என்பதே மறுசீராய்வு மனு மீதான விசாரணையில் எந்த வாதமும் இருக்காது. ஏற்கனவே தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது மனுதாரர்கள் தரப்பில் வைக்கப்படும் முக்கிய காரணமே முக்கிய குற்றவாளி அரசுப் பணியாளர் என்றும் அவர் இறந்து விட்டதால் மற்றவர்களுக்கு தண்டனை பொருந்தாது என்று கூறுகிறார்கள். 
ஆனால் ஊழல் புகாரில் அரசுப் பணியாளருக்கு மட்டுமே தண்டனை என்றாலும் இதர குற்றச்சாட்டுகளில் சசிகலா உள்ளிட்ட இதர குற்றவாளிகளுக்கு தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டி ஏற்கனவே உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பை உறுதி செய்துள்ளதே சான்றாக உள்ளது. 
குற்றவாளியின் முயற்சி 
எனினும் குற்றவாளி என்ற முறையில் அவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க முயற்சிப்பார்கள். ஆனால் இப்போதைய நிலையில் இந்த வழக்கில் எந்த உறுதியான காரணமும் இல்லாததால் சீராய்வு மனு தள்ளுபடி செய்யவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது. 
குற்றவாளி சசிகலா சட்டத்தை வளைக்க எல்லாமே செய்கிறார் என்பது அண்மையில் பெங்களூரு சிறைச்சாலையில் வெளியான காட்சிகள் உறுதிபடுத்தியுள்ளன. இந்நிலையில் சசிகலாவின் உண்மையான நிலை என்ன என்பது தெரிந்த நிலையில் அவரது மனுவும் தள்ளுபடி செய்யப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளன.
Posted By: 
நன்றி : ஒன்இந்தியா  » தமிழ்  » செய்திகள் - 01.08.2017