disalbe Right click

Saturday, April 7, 2018

காவல் வட்ட ஆய்வாளருக்கு சட்ட அறிவிப்பு

வழக்கின் சாராம்சம் என்ன?
நான் சார்ந்துள்ள சங்க நிர்வாகிகள் 19.07.2015 அன்று நடைபெற்ற மகாசபைக் கூட்டம் குறித்து, போலி ஆவணம் தயாரித்துள்ளது பற்றியும், அதனை உண்மையானது போல பயன்படுத்திக் கொண்டிருப்பது பற்றியும், தகுந்த ஆவண சாட்சியங்கள் மூலம் எடுத்துக் கூறி, அவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய திருத்தங்கல் காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்று, குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 156(3)ன் கீழ்,  பார்ட்டி இன் பெர்சன் ஆக, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், சிவகாசியில் வழக்கு ஒன்று தொடுத்திருந்தேன். நீதிமன்ற நடுவர் அவர்கள், எனது குற்றச்சாட்டுகள் குறித்து இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்கள். 
போலி ஆவணம் பற்றி.....
ஷை சங்க நிர்வாகிகள் தயாரித்த போலி ஆவணத்தில் பல நபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கையெழுத்துக்கள் செய்திருந்தார்கள். கூட்டத்திற்கு வராத உறுப்பினர்களின் பெயர்கள் வரிசையாக அந்த (கூட்ட நடவடிக்கைக் குறிப்பேடு) போலி ஆவணத்தில் எழுதப்பட்டு இருந்தது. மேலோட்டமாக நான் ஆராய்ந்து பார்த்ததிலேயே 40 கையெழுத்துக்கள் போலியாக இருந்தது.  அந்த போலி கையெழுத்துகளின் தொகுப்பு தங்களது பார்வைக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



திருத்தங்கல் காவல் வட்ட ஆய்வாளர் அவர்களின் அறிக்கை 
திருத்தங்கல் வட்டக் காவல் ஆய்வாளர் அவர்கள் என்னிடமும், அவர்களிடமும் விசாரணை நடத்தினார். ஏற்கனவே என்னிடம் உள்ள ஆவணங்களை நான் கோர்ட்டில் தாக்கல் செய்து விட்டதால், நான் புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது,  அந்த மகாசபைக் கூட்டத்தில் ஆண்டு வரவு செலவு கணக்குகள் அடங்கிய (பேலன்ஸ் ஷீட்) ஒரு ஆவணம் கிடைத்தது. மொத்தமுள்ள 7 தாள்களில், நிர்வாகிகள் கையெழுத்து போட வேண்டிய 6 தாள்களில் ஒரு இடத்தில்கூட, நிர்வாகிகளின் கையொப்பம் இல்லாமல் அது இருந்தது.
சங்கத்தின் பைலா சொல்வது என்ன?
எங்களது சங்க பைலாவை பொருத்த அளவில், ஆடிட்டர் கணக்கு வழக்குகளை சரிபார்த்து கொடுத்த பிறகு, சங்க நிர்வாகிகள் அதனை நிர்வாக சபையில் வைத்து ஒப்புதல் பெற்று, அதன்பிறகு நடைபெறுகின்ற மகாசபையில் வைத்து உறுப்பினர்களிடையே அந்த வரவு செலவுகள் குறித்து விவாதம் செய்து அவர்களின் ஒப்புதல் பெற்று தீர்மானம் இயற்றப்பட வேண்டும். அதன் பிறகு அந்த ஆவணங்கள் மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் ஒப்புதல் பெற சமர்ப்பிக்கப்பட வேண்டும். 
மாவட்டப் பதிவாளர் அவர்களும் உடந்தை
மேற்கண்ட நடவடிக்கைகளில் அந்த வரவு செலவு அறிக்கை (சுமார் ஒன்பது கோடி ரூபாய்) நிர்வாகிகளின் கையெழுத்து இல்லாமலேயே பயணித்திருக்கிறது. தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டப் பிரிவு மற்றும் விதிகளின்படி இது மோசடி குற்றமாகும். இதனை கண்டு கொள்ளாமல் மாவட்டப்பதிவாளர் அவர்களும் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்திற்கு எதிராக, சட்டவிரோதமாக  அதனை கோர்வை செய்துள்ளார்.
குற்றம் சம்பந்தமான ஆவணங்களை வாங்க ஆய்வாளர் மறுப்பு
இதனை வட்டக் காவல் ஆய்வாளரிடம் தெரிவித்து அதன் நகல்களை சமர்ப்பித்தேன் அவர் அதனை வாங்க மறுத்ததால் அதனை பதிவுத்தபால் மூலம் அவருக்கு அனுப்பி வைத்தேன். அதனை பெற்றுக் கொண்ட அவர், சங்க நிர்வாகிகளை காப்பாற்ற வேண்டும் என்ற தவறான நோக்கத்தோடு, குற்றங்களை மறைத்து, தனது ஆய்வு அறிக்கையை உருவாக்கி, அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதன் நகல்கள் கீழே காணலாம்.




இந்த அறிக்கையில் வட்ட ஆய்வாளர் அவர்கள் என்னிடமிருந்து கடிதம் மூலமாக பெற்றுக் கொண்ட ஆண்டு வரவு செலவு அறிக்கையினைப் பற்றி எந்த ஒரு கருத்தும் சொல்லவில்லை. அதனை பெற்றுக் கொண்டதாகக் கூட அந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை. 
சங்க நிர்வாகிகள் மூன்று பேர்களிடம் மட்டுமே இரண்டு கையெழுத்து போட்டது பற்றி விசாரித்துள்ளார். அவர்களும் இரண்டு கையெழுத்துகள் போட்டதை ஒப்புக் கொண்டு எழுதிக் கொடுத்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதால், குற்றம் நடைபெற்றுள்ளது, அவர்கள் மீது  வழக்குப் பதிவு செய்யலாம் என்பதை நடுவரிடம், வட்ட ஆய்வாளர் அவர்கள் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், குற்றம் கூறிய என்மீதே குற்றம் சுமத்தியிருக்கிறார். உண்மைக்குப் புறம்பான சங்கதியை தாக்கல் செய்துள்ளதாக தனது அறிக்கையின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.  
குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற எழுதப்பட்ட காவல் ஆய்வு அறிக்கை
என்னால் ஆதாரபூர்வமாக குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற காவல் ஆய்வாளர் அவர்கள், செய்யப்பட்ட குற்றத்தை மறைத்து, பல பொய்யான தகவல்களை இணைத்து, குற்றம் கூறிய என்மீதே குற்றம் சுமத்தியுள்ளார். இது இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 219ன் கீழ் குற்றமாகும். இதனால், வட்ட ஆய்வாளர் அவர்கள் மீது வழக்குத் தொடுக்க முடிவு செய்துள்ளேன். அவருக்கு சட்ட அறிவிப்பும் அனுப்பிவிட்டேன். அந்த சட்ட அறிவிப்பு நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.




வட்ட ஆய்வாளர் அவர்கள் என்ன பதில் தரப்போகிறார்? காத்திருப்போம்.
*************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 07.04.2018


Friday, April 6, 2018

மருமகளுக்கு சொத்தில் பங்கு

கணவனை இழந்த ஒரு வயதான பெண்மணி. சுயசம்பாத்தியத்தில் அவருக்கென்று பல சொத்துக்கள் இருக்கிறது.  அவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார். துரதிருஷ்டவசமாக மகன் இறந்துவிடுகிறார். மருமகள் விதவை ஆகிறார். மகனுக்கென்று குழந்தைகள் இல்லை. இந்த சூழ்நிலையில்  எதிர்பாராவிதமாக அந்தப் பெண்மணியும் இறந்துவிடுகிறார். தான் சம்பாதித்து தனது பெயரில் வைத்துள்ள சொத்துகள் யார் யாருக்கு சேரவேண்டும் என்று எந்த ஒரு முன்னேற்பாடும் அந்தப் பெண்மணி செய்து வைக்கவில்லை. 
எனக்கும் பங்கு இருக்கிறது!
எனது கணவர் உயிரோடு இருந்தால் அவருக்கு சொத்தில் பங்கு கொடுப்பீர்கள்தானே! நான் அவருடைய வாரிசு என்பதால் எனக்கும் அந்த சொத்தில் உரிமை இருக்கிறது. அந்த சொத்தினை மூன்று சமபங்காக போட்டு, எனக்கு ஒரு பங்கு தர வேண்டும் என்று இறந்துபோன பெண்ணின் மருமகள் கேட்கிறார். கேட்பவர்களுக்கு இது நியாயந்தானே! என்று தோன்றும்.
சொத்து எங்களுக்கு மட்டும்தான்! 
இறந்துபோன பெண்ணின் மகள்கள் இருவரும், எங்கள் அம்மா பெயரில் இருக்கின்ற சொத்துக்கள் அனைத்தும் எங்களுக்கே சொந்தம் என்று தங்களது அண்ணனின் மனைவிக்கு பங்குதர மறுக்கிறார்கள். இது அநியாயம், அந்தப் பெண்ணிற்கு ஒரு பங்கு கொடுத்தால் என்ன? அவருடைய கணவன் பங்கைத்தானே அவர் கேட்கிறார் என்று நமக்குத் தோன்றும். பிரச்சனை தீர ஊர் பெரியவர்கள் இறந்து போன பெண்ணின் மகள்களிடம்  பேசிப் பார்க்கிறார்கள். அவர்கள் ஒரே பிடிவாதமாக பங்கு தர மறுக்கிறார்கள். இந்த வழக்கு கோர்ட்டுக்குச் செல்கிறது. நீதிமன்றம் அந்த விதவை மருமகளுக்கு, மாமியாரின் சொத்தில் பங்கு இல்லை என்று தீர்ப்பளித்தது. 
சட்டத்தின் கொடுமை இது!
இதை கேட்பதற்கே நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது அல்லவா? தனது பெற்றோரை, உடன் பிறந்தோரை, பழகிய பக்கத்து வீட்டு நண்பர்களை, சொந்த பந்தங்களை எல்லாம் விட்டுவிட்டு கணவனை மட்டுமே நம்பி, வாழ வந்த ஒரு பெண்ணுக்கு, கணவன் இறந்து போய்விட்ட சூழ்நிலையில் அவரது கணவனுக்கு உரிமையுள்ள சொத்தும் இல்லை என்றால், இது மிக மிக அநியாயமாக அல்லவா இருக்கிறது! 
சட்டம் என்ன சொல்கிறது?
மேற்கண்டது போல சுய சம்பாத்திய சொத்துக்கள் கொண்ட பெண் ஒருவர், அந்த சொத்துக்கள் குறித்து முன்னேற்பாடாக ஏதும் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால், அந்த சொத்துக்கள் அவரது வாரிசுகளான, கணவர், மகன்கள், மகள்கள் ஆகியோருக்குச் சேரும் என்றும், ஒருவேளை மகனோ அல்லது மகளோ ஏற்கனவே இறந்துபோயிருந்தால் அவர்களது குழந்தைகளுக்குச் சேரும் என்று சட்டம் சொல்கிறது. மகனின் மனைவிக்கோ, மகளின் கணவனுக்கோ அந்த சொத்து சேராது. 
குறிப்பு: இந்த வழக்கு சம்பந்தமான விபரங்களை PROPERTY RIGHTS என்ற தலைப்பில் மரியாதைக்குரிய வழக்கறிஞர் திரு  த.இராமலிங்கம் அவர்கள் பேசி You Tube ல் பதிவு செய்துள்ள  வீடியோவில் இருந்து தெரிந்து கொண்டேன். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 07.04.2018 

Friday, March 30, 2018

நிரந்தர உறுத்துக்கட்டளை - வழக்கு

வாதி என்ன சொல்றாருன்னு கேப்போம், வாங்க!
என்னோட பேரு வி.சக்ரவர்த்திங்க. எங்கப்பா பேரு வடிவேலுங்க.  கடலூர் மாவட்டத்தில திருவதிகைன்னு ஒரு ஊரு இருக்குதுங்க. அந்த ஊர்ல இருக்குற சரநாராயணப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ஒரு சொத்த, 40 வருஷத்துக்கு முன்னால, அப்ப இருந்த கோயில் நிர்வாகிங்க, எங்க அப்பாவுக்கு குத்தகைக்கு வுட்டாங்கங்க.   அப்போ குத்தகை வருஷத்துக்கு 15 ரூபாய்ங்க. எங்கப்பா 20 வருஷத்துக்கு முன்னால எறந்து போயிட்டாருங்க. இப்ப அந்த சொத்துக்கு நான் வருஷ குத்தகையா 2000 ரூபா கொடுத்திட்டு அனுபவப்பாத்தியம் செஞ்சிக்கிட்டு வாரேனுங்க. இப்ப இருக்குற கோயில் அதிகாரி (செயல் அலுவலர்) எனக்கு குத்தகைப் பத்திரம் எழுதிக் கொடுத்திருக்காருங்க. குத்தகைப் பணத்த நான் ஒழுங்கா அவருகிட்ட கொடுத்துக்கிட்டு வாரேனுங்க. எல்லாத்துக்கும் எங்கிட்ட ஆதாரம் இருக்குதுங்க..  என்னன்னே தெரியலீங்க? எங்க ஊரு வீ.ஏ.ஓ, பண்ருட்டி தாசில்தாரு, கடலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி கூட சேந்துக்கிட்டு, அந்த சொத்த எங்கிட்ட இருந்து, இப்ப அவரு அபகரிக்கப் பாக்குறாருங்க. நீதிபதி ஐயா, நான் அனுபவிச்சிக்கிட்டு இருக்குற கோயில் சொத்துல யாரும் உள்ள வந்து எந்தத் தொந்தரவும் செய்யக்கூடாதுன்னு ஒரு நிரந்தர உறுத்துக்கட்டளை கொடுங்கய்யா. 
வழங்கப்பட்ட தீர்ப்பு :
சான்றாவணங்கள் மூலம் வாதி¸ தாவா சொத்தின் அனுபவத்தில் இருந்து வருகிறார் என்றும்¸ வாதி தாவா சொத்தின் குத்தகைதாரர் என்றும் வாதிதரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. வாதியானர் 5 ஆம் பிரதிவாதிக்கு பாத்தியமான தாவா சொத்தின் குத்தகைதாரர் என விளம்புகை செய்தும்¸ வாதி அமைதியான முறையில் அனுபவித்து வரும் தாவா சொத்தில் பிரதிவாதிகளோ அவர்களது ஆட்களோ எவ்விதத்திலும் அத்துமீறி நுழையக்கூடாது என நிரந்தர உறுத்துக்கட்டளை பிறப்பித்தும் வாதிக்கு ஆதரவாக தீர்ப்பளித்து தீர்ப்பாணை பிறப்பிக்கப்படுகிறது.
************************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 31.03.2018
மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்¸ பண்ருட்டி
முன்னிலை: திருமதி ..உமாமகேஸ்வரி பி.எஸ்ஸிபி.எல்
மாவட்ட உரிமையியல் நீதிபதி¸ பண்ருட்டி
திருவள்ளுவராண்டு 2046¸ ஜய ஆண்டு¸ தைத்திங்கள் 15 ஆம் நாள்
2015 ம் ஆண்டு ஜனவரித்திங்கள் 29 ஆம் நாள் வியாழக்கிழமை
அசல் வழக்கு எண்.170 / 2006
வி.சக்கரவர்த்தி …................................................................................................................ வாதி
/எதிர்/
1. கிராம நிர்வாக அலுவலர்¸ திருவதிகை
2. தாசில்தார்¸ பண்ருட்டி
3. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்¸ கடலூர்
4. மாவட்ட ஆட்சியர்¸ கடலூர் மாவட்டம்
5. செயல் அலுவலர்¸ 
அருள்மிகு சரநாராயணபெருமாள் திருக்கோயில்¸திருவதிகை …........... பிரதிவாதிகள்
வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:
'இவ்வழக்கானது¸ வாதியானவர் 5 ஆம் பிரதிவாதிக்கு பாத்தியமான தாவா சொத்தின் குத்தகைதாரர் என விளம்புகை செய்யக்கோரியும்¸ வாதி அமைதியான முறையில் அனுபவித்து வரும் தாவா சொத்தில் பிரதிவாதிகளோ அவர்களது ஆட்களோ எவ்விதத்திலும் அத்துமீறி நுழையக்கூடாது என நிரந்தர உறுத்துக்கட்டளை பிறப்பிக்கக்கோரியும் மற்றும் தாவா செலவுத்தொகை கேட்டும் வாதியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது."
'2. வழக்குரையின் சுருக்கம்:
தாவா சொத்து திருவதிகையில் உள்ள அருள்மிகு சரநாராயணப்பெருமாள் கோயிலுக்கு பாத்தியமானது. தாவா சொத்தை அக்கோயிலின் அறங்காவலர்கள் வாதியின் தகப்பனார் வடிவேலு என்பவருக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு விட்டனர். அப்போது வருட குத்தகை ரூ.15 ஆகும். மேற்படி வாதியின் தகப்பனார் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இறந்தபின்னர் தாவா சொத்திற்கான குத்தகையை மேற்படி கோயிலுக்கு செலுத்தி வாதி அனுபவித்து வருகிறார். தற்போது தாவா சொத்திற்கான வருட குத்தகை ரூ.2000 ஆகும். தாவா சொத்துக்கான குத்தகைத் தொகையை 5 ஆம் பிரதிவாதிதான் வருடாவருடம் வசூலித்து வருகிறார். 5 ஆம் பிரதிவாதி தாவா சொத்தைப் பொறுத்து வாதிக்கு குத்தகைப் பத்திரங்கள் எழுதிக்கொடுத்துள்ளார். வாதி தாவா சொத்துக்கான குத்தகையை வருடாவருடம் தவறாமல் 5 ஆம் பிரதிவாதியிடம் செலுத்திவருகிறார். இந்நிலையில் திடீரென 1 முதல் 3 பிரதிவாதிகள் 2006 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் வாரத்தில் தாவா சொத்தை வாதியிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்க முயற்சித்து¸ அந்த முயற்சி வாதி கேட்டுக்கொண்டதின்பேரில் தவிர்க்கப்பட்டது. மேற்படி 1 முதல் 3 பிரதிவாதிகளின் சட்டபுறம்பான செய்கைக்கு 5 ஆம் பிரதிவாதி உடந்தையாக இருந்தார். வாதி¸ தாவா சொத்தின் குத்தகைதாரர். அவரை தாவா சொத்திலிருந்து வெளியேற்ற பிரதிவாதிகளுக்கு உரிமையில்லை. 4 ஆம் பிரதிவாதியானவர் 1 முதல் 3 பிரதிவாதிகளின் சட்டபுறம்பான செய்கைகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர். அதனால் அவரையும் வாதி இவ்வழக்கில் தரப்பினராக சேர்த்துள்ளார். எனவே வாதி¸ தன்னை தாவா சொத்தின் குத்தகைதாரர் என விளம்புகை செய்யக்கோரி இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்."
'3. ஐந்தாம் பிரதிவாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர்வழக்குரையின் சுருக்கம்:
வாதியின் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல¸ செலவுத்தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டியதொன்றாகும். தாவா சொத்து இந்த பிரதிவாதி கோயிலுக்கு பாத்தியமானது¸ அவரைத்தவிர மேற்படி தாவா சொத்தில் உரிமைகோர எவருக்கும் அருகதையில்லை. தாவா சொத்தானது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வாதிக்கு குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் இதுநாள்வரை வாதி குத்தகைத் தொகையை செலுத்தியதில்லை. எனவே இந்த பிரதிவாதி கடலூர் வருவாய் நீதிமன்றத்தின் முன்பு குத்தகை பாக்கியைக் கேட்டு வழக்கு தாக்கல் செய்து¸ செயல்முறை ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகுதான் வாதி மேற்படி குத்தகை பாக்கியை செலுத்த முன்வந்தார். ஆனால் வாதி¸ தாவா சொத்தின் குத்தகைதாரர் என்பதை மறுக்கவில்லை. 5 ஆம் பிரதிவாதி¸ 1 முதல் 3 பிரதிவாதிகளுக்கு உடந்தையாக இருந்ததாக கூறுவது தவறு. 1 முதல் 4 பிரதிவாதிகள் தாவா சொத்தில் எதுவும் செய்யவில்லை. அவர்களுக்கு தாவா சொத்தைப் பொறுத்து எவ்வித உரிமையும் இல்லை. மேலும் இவ்வழக்கிற்கு வழக்குமூலம் இல்லை. எனவே இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படவேண்டியதாகும்."
4. மேற்படி வழக்குரை மற்றும் எதிர்வழக்குரை ஆகியவற்றை பரிசீலனை செய்தபின்னர் 03.03.2008 ஆம் தேதி கீழ்கண்ட எழுவினாக்கள் வனையப்பட்டுள்ளன.
1) வழக்குச்சொத்து வாதியின் சுவாதீன அனுபவத்தில் உள்ளதா?
2) வழக்கில் வாதி கோரியுள்ளவாறு விளம்புகைப் பரிகாரம் வாதிக்கு கிடைக்கத்தக்கதா?
3) நிரந்தர உறுத்துக்கட்டளைப் பரிகாரம் பெறுவதற்கு வாதிக்கு தகுதி உள்ளதா?
4) இவ்வழக்குக்கு வழக்குமூலம் உண்டா?
5) வாதிக்கு எத்தகைய நிவாரணம் கிடைக்கக்கூடியது?
'6) வழக்கெழு வினாக்கள் 1 முதல் 3:
வாதிதரப்பில் தங்களது வழக்கினை நிரூபிக்கும் வகையில்¸ வாதியானவர் வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். வாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குரையில்¸ தாவா சொத்து திருவதிகையில் உள்ள அருள்மிகு சரநாராயணப்பெருமாள் கோயிலுக்கு பாத்தியமானது. தாவா சொத்தை அக்கோயிலின் அறங்காவலர்கள் வாதியின் தகப்பனார் வடிவேலு என்பவருக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு விட்டனர். அப்போது வருட குத்தகை ரூ.15 ஆகும். மேற்படி வாதியின் தகப்பனார் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இறந்தபின்னர் தாவா சொத்திற்கான குத்தகையை மேற்படி கோயிலுக்கு செலுத்தி வாதி அனுபவித்து வருகிறார். தற்போது தாவா சொத்திற்கான வருட குத்தகை ரூ.2000 ஆகும். தாவா சொத்துக்கான குத்தகைத் தொகையை 5 ஆம் பிரதிவாதிதான் வருடாவருடம் வசூலித்து வருகிறார். 5 ஆம் பிரதிவாதி தாவா சொத்தைப் பொறுத்து வாதிக்கு குத்தகைப் பத்திரங்கள் எழுதிக்கொடுத்துள்ளார். வாதி தாவா சொத்துக்கான குத்தகையை வருடாவருடம் தவறாமல் 5 ஆம் பிரதிவாதியிடம் செலுத்திவருகிறார். இந்நிலையில் திடீரென 1 முதல் 3 பிரதிவாதிகள் 2006 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் வாரத்தில் தாவா சொத்தை வாதியிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்க முயற்சித்து¸ அந்த முயற்சி வாதி கேட்டுக்கொண்டதின்பேரில் தவிர்க்கப்பட்டது. மேற்படி 1 முதல் 3 பிரதிவாதிகளின் சட்டபுறம்பான செய்கைக்கு 5 ஆம் பிரதிவாதி உடந்தையாக இருந்தார். வாதி¸ தாவா சொத்தின் குத்தகைதாரர். அவரை தாவா சொத்திலிருந்து வெளியேற்ற பிரதிவாதிகளுக்கு உரிமையில்லை. 4 ஆம் பிரதிவாதியானவர் 1 முதல் 3 பிரதிவாதிகளின் சட்டபுறம்பான செய்கைகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர். அதனால் அவரையும் வாதி இவ்வழக்கில் தரப்பினராக சேர்த்துள்ளார். எனவே வாதி¸ தன்னை தாவா சொத்தின் குத்தகைதாரர் என விளம்புகை செய்யக்கோரி இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது."
'7) இவ்வழக்கில் வாதி¸ வழக்குரையுடன் தாக்கல் செய்திருந்த ..793/06 தற்காலிக உறுத்துக்கட்டளை மனுவில்¸ 1 முதல் 5 பிரதிவாதிகளும் எதிருரை தாக்கல் செய்து¸ அம்மனுவில் விசாரணைக்குப்பிறகு வாதி கோரியவண்ணம் தற்காலிக உறுத்துக்கட்டளை பரிகாரம் வழங்கி 15.9.06 ஆம் தேதி உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து 1 முதல் 4 பிரதிவாதிகள் தரப்பில் பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் சி.எம்..7/06 மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டு¸ 6.9.07 ஆம் தேதி மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அசல் வழக்கிலும் 1 முதல் 4 பிரதிவாதிகள் எதிர்வழக்குரை தாக்கல் செய்யாத காரணத்தால் 22.9.06 ஆம் தேதி ஒருதலைபட்சமாக்கப்பட்டுள்ளனர்."
'8) 5 ஆம் பிரதிவாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர்வழக்குரையில்¸ தாவா சொத்து இந்த பிரதிவாதி கோயிலுக்கு பாத்தியமானது¸ அவரைத்தவிர மேற்படி தாவா சொத்தில் உரிமைகோர எவருக்கும் அருகதையில்லை. தாவா சொத்தானது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்புவாதிக்கு குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் இதுநாள்வரை வாதி குத்தகைத் தொகையை செலுத்தியதில்லை. எனவே இந்த பிரதிவாதி கடலூர் வருவாய் நீதிமன்றத்தின் முன்பு குத்தகை பாக்கியைக் கேட்டு வழக்கு தாக்கல் செய்து¸ செயல்முறை ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகுதான் வாதி மேற்படி குத்தகை பாக்கியை செலுத்த முன்வந்தார். ஆனால் வாதி¸ தாவா சொத்தின் குத்தகைதாரர் என்பதை மறுக்கவில்லை. 5 ஆம் பிரதிவாதி¸ 1 முதல் 3 பிரதிவாதிகளுக்கு உடந்தையாக இருந்ததாக கூறுவது தவறு. 1 முதல் 4 பிரதிவாதிகள் தாவா சொத்தில் எதுவும் செய்யவில்லை. அவர்களுக்கு தாவா சொத்தைப் பொறுத்து எவ்வித உரிமையும் இல்லை. மேலும் இவ்வழக்கிற்கு வழக்குமூலம் இல்லை. எனவே இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படவேண்டுமென்று கூறப்பட்டுள்ளது."
'9) வாதி தரப்பில் வா.சா..1 முதல் வா.சா..18 வரையிலான ஆவணங்களும்¸ நீ..சா..1 முதல் நீ..சா..3 வரையிலான ஆவணங்களும் குறியீடு செய்யப்பட்டுள்ளன. வா.சா..1 மற்றும் வா.சா..2 ஆகியவை முறையே 07.07.2001 மற்றும் 04.07.2005 ஆகிய தேதிகளில் 5 ஆம் பிரதிவாதி¸ வாதிக்கு எழுதிக்கொடுத்த தாவா சொத்துக்கான அசல் குத்தகைப்பத்திரங்களாகும். வா.சா..3 முதல் வா.சா..12¸ வா.சா..14¸ வா.சா..17 மற்றும் வா.சா..18 ஆகியவை வாதி¸ தாவா சொத்துக்கு 5 ஆம் பிரதிவாதிக்கு செலுத்திய குத்தகை ரசீதுகளாகும். வா.சா..13 என்பது 11.07.2001 ஆம் தேதி 5 ஆம் பிரதிவாதி¸ வாதிக்கு குத்தகை பாக்கி கேட்டு அனுப்பிய நோட்டீஸ் ஆகும். வா.சா..15 என்பது 22.10.2013 ஆம் தேதி வாதியை வருவாய் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டி அனுப்பப்பட்ட கடிதம் ஆகும். வா.சா..16 என்பது 21.11.2013 ஆம் தேதி வாதிக்கு கடலூர் வருவாய் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு நகல் ஆகும். வா.சா.1 தனது முதல் விசாரணையில் வழக்குரையை ஒட்டி சாட்சியம் அளித்துள்ளார். தனது குறுக்கு விசாரணையில்¸ தாவா சொத்து திருவதிகையில் உள்ள அருள்மிகு சரநாராயணர் கோயிருக்கு பாத்தியமானது என்றும்¸ தன் தகப்பனார் பெயர் சுமார் 60 வருடங்களுக்கு முன்பாகவே அப்போதைய கோயில் நிர்வாகத்தார்களிடமிருந்து குத்தகை எடுத்துக்கொண்டதாகவும்¸ அவருக்கு பின்னிட்டு தான் குத்தகைக்கு பயிர் செய்து வருவதாகவும்¸ ஆரம்பத்தில் தன் தகப்பனார் ரூ.90ம்¸ தற்காலம் தான் ரூ.2000 வருட குத்தகை செலுத்தி வருவதாகவும்¸ குத்தகை பாக்கி ஏதுமில்லை என்றும்¸ தன்பேரில் கோயில் நிர்வாகத்தால் கடலூர் ரெவின்யூ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து¸ அதன்படி தான் குத்தகை செலுத்தி வருவதாகவும்¸ தான் கோயிலுக்கு பாத்தியமான சொத்தைதான் அனுபவித்து வருவதாகவும்¸ அரசாங்கத்திற்கு இதில் சம்மந்தம் இல்லை என்றும்¸ தன்னை குத்தகைதாரர் அல்ல என்று கோயில் தரப்பில் எந்தகாலத்திலும் சொல்லவில்லை என்றும்¸ வழக்கு போடுவதற்கு முன்பு அரசாங்கத்திலிருந்து வந்து தாவா சொத்தில் கட்டுமானம் செய்யப்போவதாக சொல்லி பிரச்சனை செய்ததாகவும்¸ வழக்குக்கு பின்னிட்டு 1 முதல் 4 பிரதிவாதிகளான அரசாங்கத்திலிருந்து தனக்கு எந்த பிரச்சனையும் தரவில்லை என்றும்¸ 5 ஆம் பிரதிவாதியால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சாட்சியம் அளித்துள்ளார்."
10) இவ்வழக்கில் பிரதிவாதிகள் தரப்பில் எவ்வித சாட்சிகளும் முன்னிலைப்படுத்தப்படவில்லை¸ சான்றாவணங்களும் குறியீடு செய்யப்படவில்லை.
11) மேற்படி வாதிதரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களையும்¸ வாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களையும் பரிசீலனை செய்து பார்க்கும்பொழுது¸ தாவா சொத்து திருவதிகையில் உள்ள அருள்மிகு சரநாராயணப்பெருமாள் கோயிலுக்கு பாத்தியமானது என்பதும்¸ அதனை வாதியின் தகப்பனாரும்¸ அவருக்குப் பின்னிட்டு வாதியும் குத்தகைதாரர் என்ற முறையில் அனுபவித்து வருவதும் வாதியின் சாட்சியம் மற்றும் வாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வா.சா..1 முதல் வா.சா..18 வரையிலான சான்றாவணங்கள் மூலம் தெளிவாகிறது. மேலும்¸ வாதியும்¸ கோயில் நிர்வாகமும் குத்தகைப்பத்திரங்கள் எழுதிக்கொண்டதும் வாதிதரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் வாதி தொடர்ந்து குத்தகை தொகையை கோயில் நிர்வாகத்திடம் செலுத்தி வந்திருப்பதும் தெரியவருகிறது. மேலும் வாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வா.சா..16 ஆவணத்தை பரிசீலனை செய்து பார்க்கும்போது¸ 21.11.2013 ஆம் தேதி வாதிக்கு கடலூர் வருவாய் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு நகல் ஆகும். இதில் வாதி¸ கோயில் நிர்வாகத்திற்கு செலுத்தவேண்டிய குத்தகை பாக்கியை செலுத்தவேண்டுமென உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம்¸ தாவா சொத்தில் வாதிகுத்தகைதாரர் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இவ்வழக்கில் 1 முதல் 4 பிரதிவாதிகள் ஒருதலைபட்சமாகியுள்ளனர். 5 ஆம் பிரதிவாதியான கோயில் நிர்வாகத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர்வழக்குரையிலும்¸ வாதி¸ மேற்படி தாவா சொத்தின் குத்தகைதாரர் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் வாதி¸ தனது சாட்சியத்தில் வருவாய் நீதிமன்றத்தில் கொடுத்த தீர்ப்பின்படி தான் குத்தகை பாக்கியை செலுத்தி வருவதாகவும் சாட்சியம் அளித்துள்ளார். மேலும்வாதிதரப்பில் திடீரென 1 முதல் 3 பிரதிவாதிகள் 2006 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் வாரத்தில் தாவா சொத்தை வாதியிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்க முயற்சித்து¸ அந்த முயற்சி வாதி கேட்டுக்கொண்டதின்பேரில் தவிர்க்கப்பட்டதாகவும்¸ மேற்படி 1 முதல் 3 பிரதிவாதிகளின் சட்டபுறம்பான செய்கைக்கு 5 ஆம் பிரதிவாதி உடந்தையாக இருந்ததாகவும்¸ 4 ஆம் பிரதிவாதியானவர் 1 முதல் 3 பிரதிவாதிகளின் சட்டபுறம்பான செய்கைகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர் என்பதால் அவரையும் வாதி இவ்வழக்கில் தரப்பினராக சேர்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே வா.சா.1-ன் சாட்சியம் மற்றும் வா.சா..1 முதல் வா.சா..18 வரையிலான சான்றாவணங்கள் மூலமும் வாதி¸ தாவா சொத்தின் அனுபவத்தில் இருந்து வருகிறார் என்றும்¸ வாதி தாவா சொத்தின் குத்தகைதாரர் என்றும் வாதிதரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தாவா சொத்தைப் பொறுத்து வாதி கோரியுள்ள விளம்புகை மற்றும் நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் அவருக்கு கிடைக்கத்தக்கது என்றும் முடிவு செய்து எழுவினா 1¸2 மற்றும் 3 ஆகியவற்றிற்கு வாதிக்கு ஆதரவாக தீர்வு காணப்படுகிறது.
'14) முடிவாக¸ இவ்வழக்கானது அனுமதிக்கப்பட்டு¸ வாதியானர் 5 ஆம் பிரதிவாதிக்கு பாத்தியமான தாவா சொத்தின் குத்தகைதாரர் என விளம்புகை செய்தும்¸ வாதி அமைதியான முறையில் அனுபவித்து வரும் தாவா சொத்தில் பிரதிவாதிகளோ அவர்களது ஆட்களோ எவ்விதத்திலும் அத்துமீறி நுழையக்கூடாது என நிரந்தர உறுத்துக்கட்டளை பிறப்பித்தும் வாதிக்கு ஆதரவாக தீர்ப்பளித்து தீர்ப்பாணை பிறப்பிக்கப்படுகிறது. அவரவர்கள் செலவுத்தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்படுகிறது."
நன்றி : http://www.tamiljudgements.org