disalbe Right click

Saturday, July 28, 2018

புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் – 2018

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு 
இரு மடங்காக உயர்த்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் தொகை!
தமிழக அரசால் கடந்த 01.04.2014 அன்று துவங்கப்பட்ட தமிழக அரசு ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர் களுக்கானபுதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்2014.’ கடந்த 30.06.2018 அன்று முடிவடைந்துவிட்டது. கடந்த 01.07.2018 முதல் 30.06.2022 வரை நீட்டிக்கப்பட்டு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம்2018.’ தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் புதிய பயன்கள் என்ன?
  1. காப்பீட்டுக் காலமான நான்கு ஆண்டுகளுக்கு மருத்துவ உதவி (Medical Assistance) ரூ. 2 லட்சம் மட்டுமே இதற்கு முன்பு வழங்கப்பட்டு வந்தது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தில் இதன் மருத்துவ வசதி (இரண்டு மடங்காக) ரூ. 4 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.
  2. ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் மட்டுமே பயன் தந்துவந்த இந்தத் திட்டமானது தற்போது உடற்குறை உள்ள ஓய்வூதியதாரரின் மகன் மற்றும் திருமணமாகாத மகளுக்கும் பயன்தரும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளதுஇதனால், ஓய்வூதியதாரர்களின் குடும்பத்திலுள்ள  அனைத்து வகையான உடல் நலமின்மை, வாழ்வாதாரத்துக்குச் சம்பாதிக்க முடியாதபடி மனநலமின்மை, உடல் ஊனம் அல்லது பிற வகை இயலாமைகள் இருப்பவர்களும் இந்த திட்டத்தின் கீழ் மருத்துவ வசதி பெறலாம்.
  3. திருமணமாகாத / விவாகரத்தான / விதவையான ஓய்வூதியதாரரின் மகளுக்கும் சில நிபந்தனைகளுடன் இந்த திட்டத்தில் மருத்துவ வசதி பெறலாம்.
  4.  இத்திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை, கெமோதெரபி, ரேடியோ தெரபி, இம்யூனோதெரபி போன்ற உயிருக்கு ஆபத்தான அனைத்து சிகிச்சைகள், ஈரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைகள், காம்ப்ளெக்ஸ் ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை போன்றவை மற்றும் தீக்காயம் பராமரிப்பு போன்ற பல சிகிச்சைகள் செய்துகொள்வதற்கும் அனுமதி கிடைக்கும்இத்துடன், விபத்துக்கான அவசரச் சிகிச்சைக்கும்  மருத்துவம் பார்த்துக்கொள்ளலாம்.
  5. மூத்த குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான கண்புரை சிகிச்சைக்கான வரம்பு ரூ.15,000 -லிருந்து ரூ.20,000 உயர்த்தப்பட்டுள்ளது. கர்ப்பப்பை அகற்றுவதற்கு ரூ.40,000 வரையும் மருத்துவ உதவி உயர்த்தப்பட்டுள்ளது.

எந்த எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்?  
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்த திட்டத்தின் கீழ் புதுச்சேரி, திருவனந்தபுரம், டெல்லி மற்றும் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைகள் உட்பட மொத்தம் 913 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். பட்டியலில் இடம் பெறாத மருத்துவமனைகளிலும் இதற்கான சிகிச்சைகளைப் பெற முடியும். 
இதற்காக செலுத்தும் மாதச் சந்தா எவ்வளவு?
யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் கம்பெனி இந்த திட்டத்திற்கு பொறுப்பேற்றுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ஜூன் 2018 வரையான மாதச் சந்தா ரூ.150, ஜூலை 2018 முதல் மாதம் ரூ.350 வீதம் சந்தா தொகை ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தில் அரசால் பிடித்தம் செய்யப்படும்.
தமிழக அரசு ஓய்வூதியதாரர் / குடும்ப ஓய்வூதியதாரர் அல்லாமல், உள்ளாட்சிகள், சட்டப்பூர்வ கழகங்கள் (Statutory Boards) தமிழக அரசு பொறுப்பேற்று நடத்தி வருகின்ற பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் ஓய்வூதியதாரர்களுக்கும் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் இந்தத் திட்டத்தை நீட்டித்து அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு.
மேலும், இந்த திட்டத்தில் தன் நிறுவன நிதியிலிருந்து ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் வழங்கிவரும் மாநில அரசின் இதர நிறுவனங்களும் பங்கு பெறலாம். ஆனால், நிறுவனப் பங்குத் தொகையை நிறுவனமே செலுத்த வேண்டும் என்பது முக்கியம்.
***************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 27.07.2018 

Thursday, July 26, 2018

சிறப்புத் திருமணச் சட்டம் - 1954

சிறப்புத் திருமணச் சட்டம்  - யாருக்காக?
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
சிறப்பு திருமண சட்டம்-1954
நமது நாட்டில் திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பாக இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர், பார்சி, யஹொதி ஆகிய மதத்தினர்களுக்கு வெவ்வேறு சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட கிறிஸ்துவ திருமண சட்டம்-1872  இந்து, இஸ்லாமியர், பார்சி, யஹொதி மதங்களை தவிர்த்து கிறிஸ்தவர்களுக்கு மட்டும் பொருந்தக்கூடியது.
இந்து திருமண சட்டம்-1955ஆனது இந்து, ஜெயின், பவுத்த, சீக்கிய மதத்தினருக்கு  பொருந்தும்பார்சி, யஹொதி ஆகிய மதங்களுக்கு என்றும் தனி தனியாக திருமண சட்டங்கள் நம் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நமது நாட்டில் ஒரு மதத்தை விட்டு வேறொரு மதம் மாறி திருமணம் செய்து கொள்வதை அந்தந்த மதத்தைச் சேர்ந்த சட்டங்கள் அனுமதிப்பதில்லை. அப்படியென்றால் மதம்விட்டு மதம் மாறி காதலிப்பவர்கள் எப்படித்தான் திருமணத்தை பதிவு செய்து கொள்வது?.
சில ஆண்டுகளுக்கு முன் வரை அப்படி மதம் மாறி திருமணம் செய்துகொள்வது சட்டப்படி அங்கீகரிக்கப்படாத திருமணமாக இருந்தது. மதம் விட்டு மதம் மாறி திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் அதிகரிக்க தொடங்கியதால், அந்த திருமணங்களை சட்ட வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் சிறப்பு திருமணம் சட்டம்-1954  அமல்படுத்தப்பட்டது.  இதனை கலப்புத் திருமணச் சட்டம் என்றும் கூறுகிறார்கள். இச்சட்டம் கடந்த 01.01.1955ம் ஆண்டு முதல் ஜாமு-காஷ்மீர் மாநிலத்தை தவிர நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் மூலம் சாதி, மதம், மொழி பேதமில்லாமல் திருமணம் செய்து கொள்ளும் உரிமை நாட்டுமக்களுக்கு வழங்கப்பட்டது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிறப்பு திருமண சட்டத்தின் படி வெவ்வேறு சாதி, மதத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் விரும்பும் மத கலாச்சாரம் அல்லது சீர்த்திருத்த முறையில் திருமணம் செய்து கொள்பவர்கள் சிறப்பு திருமணம் சட்டம்-1954, சட்டப்பிரிவு 4ஐ  பின்பற்ற வேண்டும் 

  •  சிறப்பு திருமணம் சட்டம்-1954ன் கீழ், திருமணம் செய்து கொள்ளும் சமயத்தில் ஆணுக்கு திருமணமாகி மனைவி உயிருடன் இருக்கக்கூடாது. அதேபோல் பெண்ணுக்கு திருமணமாகி கணவர் உயிருடன் இருக்கக்கூடாது.
  •  திருமணம் செய்து கொள்ளும் சமயத்தில் மணமகன், மணமகள் இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருக்கக்கூடாது.
  • திருமணம் செய்து கொள்ள இருவரின் மனபூர்வமான ஒப்புதல் இருக்க வேண்டும். மணமக்கள் இருவரும் விருப்பமில்லாமல் திருமண பந்தத்திற்குள் செல்பவர்களாக இருக்ககூடாது.
  • மணமக்கள் மற்றவர்களின் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்பவர்களாக இருக்கக்கூடாது.
  • திருமணம் செய்து கொள்ளும் சமயத்தில் மணமகனுக்கு 21 வயது, மணமகளுக்கு 18 வயது முழுமையாக பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
  • மணமக்கள் பொருந்தாத உறவினர்களாக இருக்கக்கூடாது.
  • மணமக்கள் கண்டிப்பாக உறவினர்களாக இருக்கக்கூடாது.
புதிய சிறப்பு சட்டத்தின்படி திருமண ஏற்பாடு செய்ய என்ன செய்ய வேண்டும்?
  • அரசாங்க பதிவு மூலம் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்ற தம்பதிகள், தங்கள் திருமணம் செய்து கொள்வது தொடர்பாக 30 நாட்களுக்கு முன் அரசு திருமண பதிவு அதிகாரிக்கு நேரில் விண்ணப்பம் கொடுக்க வேண்டும். அதில் எந்த இடத்தில், என்ன தேதியில், அந்த மத வழிமுறைப்படி திருமணம் நடக்கிறது என்ற விவரங்கள் குறிப்பிட வேண்டும்.
  • சிறப்பு திருமணம் சட்டம்-1954,  பிரிவு 6-ன்படி பதிவு திருமணம் செய்து கொள்வது தொடர்பாக தம்பதிகள் கொடுக்கும் விண்ணப்பப் படிவத்தை பரிசீலனை செய்யும் அரசு அதிகாரி, தன் நகலை தனது அலுவலகத்தில் உள்ள தகவல் பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைப்பார். 
  • சிறப்பு திருமணம் சட்டம்-1954,  பிரிவு 7-ன்படி அரசு அலுவலகத்தில் வெளியிடப்படும் திருமண தகவலில் தம்பதிகள் நியாயமான சட்டப்படி திருமணம் செய்து கொள்ள தகுதியானவர்கள் அல்ல என்று பொதுமக்களில் எவரும் உரிய ஆதாரங்களுடன் ஆட்சேபனை மனு கொடுக்கலாம். 
  • அவ்வாறு யாரிடமிருந்தாவது ஆட்சேபனை திருமண பதிவாளரிடம் ஆட்சேபனை மனு கொடுத்தால், முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணையில் முடிவெடுக்க, சிவில் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் திருமண பதிவு அதிகாரிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
  • விசாரணையின் போது குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றால், ஆட்சேபனை மனு தள்ளுபடி செய்யப்படும். நியாயமான காரணங்கள் இருந்தால், திருமணம் செய்து வைக்க மறுக்கப்படும்சிறப்பு திருமணம் சட்டம்-1954,  பிரிவு 8-ன்படி பாதிக்கப்பட்டவர்கள் 30 நாட்களுக்குள் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து கொள்ளலாம்.
  • பதிவு திருமணம் செய்து கொள்ள விண்ணப்பித்து 30 நாட்களுக்கு பின் ஆட்சேபனை ஏதும் எவரிடத்தில் இருந்தும் வராத நிலையில், பதிவு அதிகாரி மூன்று சாட்சிகளின் கையெழுத்துடன் தம்பதிகள் விரும்பும் கலாச்சாரத்தின் அடிப்படையில் பதிவு திருமணம் செய்து வைப்பார்
  • இது போன்ற பதிவு திருமணமானது அரசு அலுவலகம் அல்லது தம்பதிகள் ஏற்பாடு செய்துள்ள மண்டபத்திற்கு அதிகாரி நேரில் வந்து நடத்தி வைப்பார்
  • சிறப்பு திருமணம் சட்டம்-1954,  பிரிவு 12-ன்படி திருமண நாளில் திருமணம் செய்து வைக்கும் உரிமை பெற்ற அதிகாரி முன் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியரில் மணமகன் தனது பெயரை குறிப்பிட்டு, மணமகனாகிய நான்,  மணமகளின் பெயரை குறிப்பிட்டு, மணமகளாகிய உன்னை, இன்றிலிருந்து சட்டப்படி மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன். நாம் இருவரும் வாழ்விலும், தாழ்விலும், இன்பத்திலும், துன்பத்திலும், மரணம் நம்மை பிரிக்கும் வரை கணவன், மனைவியாக வாழ ஒப்புதல் அளிக்கிறேன் என்று உறுதிமொழி கொடுக்க வேண்டும். அதே போன்ற  உறுதிமொழியை மணமகளும் கொடுக்க வேண்டும். அவர்கள் அறிக்கையில் கொடுக்கும் உறுதிமொழியின் கீழ் தம்பதியரின் உறவினர்கள் மூன்று பேர் சாட்சியாக கையெழுத்திட வேண்டும். அப்போது தான் அந்தத் திருமணம் அரசால் அங்கீகரிக்கப்படும்.
  • சிறப்பு திருமணம் சட்டம்-1954,  பிரிவு 13-ன்படி திருமணச் சான்றிதழ்:- பதிவு திருமணம் முடிந்த பின், இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மணமகன், மணமகள் தம்பதியராக அங்கீகரிக்கப்பட்டதை உறுதி செய்யும் வகையில் இரண்டு அசல் திருமண பதிவுச் சான்றிதழ்களை கணவன், மனைவியிடம் பதிவு அதிகாரி வழங்குவார்.