disalbe Right click

Monday, April 15, 2019

UAN என்றால் என்ன?

UAN என்றால் என்ன? உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி?
மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக பிஎஃப் என அழைக்கப் படும் வருங்கால வைப்பு நிதி திட்டம் உள்ளது.
பிஎஃப் கணக்கில் ஊழியர்கள் சம்பளத்திலிருந்து 12 சதவீதமும், நிறுவனம் சார்பில் 12 சதவீதமும் பங்களிப்பாக செலுத்தப்படும். இந்த பிஎஃப் கணக்கில் செலுத்தப்படும் தொகையின் பேலன்ஸ் என்ன என அறிந்துக்கொள்ள UAN (Universal Account Number) என் முக்கியமான ஒன்றாக உள்ளது.
பொதுவாக UAN மாத சம்பளத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கும். அப்படியில்லை என்றால் பிஎஃப் எண், ஆதார் அல்லது பான் எண்ணை பயன்படுத்தி UAN எண்ணை கண்டறிவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
1. ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் உறுப்பினர்கள் சேவை வழங்கும் https://unifiedportal-mem.epfindia.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
2. மேலே குறிப்பிட்டுள்ள இணைய பக்கத்திற்கு சென்று வலது பக்கம் உள்ள Know Your UAN Status என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
3. Know Your UAN என்ற பக்கத்திற்கு சென்ற உடன் பிஎஃப் எண், ஆதார் எண் அல்லது பான் எண் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை க்ளிக் செய்து, பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், captcha போன்ற விவரங்களை அளிக்க வேண்டும்.
4. பின்னர் Get Authorization Pin என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
5. அடுத்த பக்கத்தில் I Agree என்பதை தேர்வு செய்து மொபைல் எண்ணிற்கு OTP அனுப்புக என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
6. OTP எண்ணை பதிவிட்டுசரிபார்க்கவும் (Validate)’ என்பதை கிளிக் செய்வதன் மூலம் UAN மற்றும் அதற்கான கடவுச்சொல்லும் எஸ்எம்எஸ் மூலம் மொபைல் எண்ணிற்கு வந்து சேரும். அதைப் பயன்படுத்தி பிஎஃப் கணக்கு குறித்த விவரங்கள் மற்றும் பேலன்ஸ் என்ன என்பது குறித்த விவரங்களை சரிபார்க்க முடியும்.
நன்றி : Tamil News Online - News18 Tamil - 15.04.2019

அரசு அதிகாரி மீது வழக்குத் தொடர முன் அனுமதி அவசியம்!


அரசு அதிகாரி மீது வழக்குத் தொடர முன் அனுமதி அவசியம்!
அலுவலகத்தில் தனது கடமையை சரியாக செய்யாத ஓர் அரசு ஊழியர் மீது நீதிமன்றம் மூலம் பாதிக்கப்பட்ட நபர் நடவடிக்கை எடுக்க முடியுமா?
K. முருகன் என்பவர் ஒரு வழக்கறிஞர். அவர் 26.12.2012 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கீரைத்துறை காவல் நிலையத்திற்கு அவரது கட்சிக்காரரான பால்பாண்டி சார்பாக சென்றார். அப்போது செந்தில்குமார் என்னும் காவல் அதிகாரி பணியில் இருந்துள்ளார்.
வழக்கு சம்பந்தமாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காவல் அதிகாரி செந்தில்குமார் வழக்கறிஞர் முருகனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமில்லாமல் அவரை காவல் நிலையத்திற்குள் நுழையக் கூடாது என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை ராஜகுரு, விஜயன் என்ற இரு வழக்கறிஞர்களும், ராமர் என்ற ஒரு நபரும் பார்த்துள்ளனர்
வழக்கறிஞர் முருகன் செய்த காரியம்
சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் முருகன் மதுரை நகர காவல்துறை ஆணையரிடம் இது குறித்து ஒரு புகாரை நேரிடையாக அளிக்கிறார். ஆனால் அந்த புகாரை ஆணையர் வாங்க மறுத்து விடுகிறார். அதனால் முருகன் பதிவுத் தபாலில் புகாரை ஆணையருக்கு அனுப்பி வைக்கிறார். தொடர்ந்து உடனே செந்தில்குமார் மீது மதுரை 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனிநபர் புகாரை தாக்கல் செய்கிறார். அந்தப் புகாரை நடுவர் கோப்புக்கு எடுத்துக் கொண்டு செந்தில்குமாருக்கு சம்மன் அனுப்புகிறார்.
செந்தில்குமார் செய்த காரியம்
இந்நிலையில் பாதிக்கப்பட்ட அரசு அதிகாரி செந்தில்குமார் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்கிறார்.
செந்தில்குமார் தரப்பு வழக்கறிஞர் வாதம்
செந்தில்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கறிஞர் முருகன் என்ன விஷயத்திற்காக காவல் நிலையத்திற்கு வந்தார் என்று புகாரில் தெளிவாக எதையும் கூறவில்லை. வழக்கறிஞர் முருகன் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் காவல் நிலையத்தில் வைத்து நடந்துள்ளது. அப்போது செந்தில்குமார் பணியில் இருந்துள்ளார். பணி நேரத்தில் அலுவலக கடமையை ஆற்றிக் கொண்டிருக்கும் போது, அலுவலகத்தில் கூட்டமாக கூடியுள்ளவர்களை கலைப்பதற்கான உரிமை செந்தில்குமாருக்கு உள்ளது. சார்பு ஆய்வாளர் பதவிக்கு குறைவில்லாத பதவியில் உள்ள ஒரு நபர் சட்டத்திற்கு புறம்பாக கூடியுள்ள கூட்டத்தை கலைப்பதற்கான அதிகாரம் இந்திய தண்டனைச் சட்டம் சட்டம் பிரிவு 179 ன் கீழ் செந்தில்குமாருக்கு உள்ளது. மேலும் அரசு அதிகாரியான செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன், எவர் ஒருவரும், அரசிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டியது அவசியம். ஆனால் வழக்கறிஞர் முருகன் அவ்வாறு அனுமதி எதையும் பெறவில்லை
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 131 & 132
குற்றவியல் நடுவரும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 131 & 132 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி இந்த வழக்கை கோப்புக்கு ஏற்றுக் கொண்டுள்ளார். ஒரு அரசு ஊழியர் அவரது அலுவலக கடமையை ஆற்றிக் கொண்டிருக்கும் போது குற்றம் செய்தால் அவர்மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் முன் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும் என கல்கத்தா உயர்நீதிமன்றம் " நாராயணன் சந்திர பிரம்நாயக் Vs ஆனந்த மண்டல் மற்றுமொருவர் (1984-CRLJ-1334)" என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பையும், அலகாபாத் உயர்நீதிமன்றம் "ராம் ஆதார் யாதவ் Vs ராம சந்திர மிஸ்ரா மற்றுமொருவர் (1992-CRLJ-2216)" என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பையும் சுட்டிக்காட்டி குற்றவியல் நடுவரின் உத்தரவை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டார்
முருகன் தரப்பு வழக்கறிஞரின் வாதம்
வழக்கறிஞர் முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், செந்தில்குமார் சட்ட நடவடிக்கைகளை தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும், காவல் நிலையத்திற்குள் ஒரு வழக்கறிஞர் செல்வதை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்றும். முருகனை வழக்கறிஞர் என்றுகூட பார்க்காமல் செந்தில்குமார் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளது குற்றம் என்றும் கூறினார்


நீதிபதியின் உத்தரவு
செந்தில்குமார் காவல்துறை அதிகாரி என்பதை வழக்கறிஞர் முருகன் மறுக்கவில்லை. செந்தில்குமார் முருகனை தகாத வார்த்தைகளால் திட்டும் போது அவர் தனது அலுவலகத்தில் பணிசெய்து கொண்டு இருந்துள்ளார். ஆகையால் செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் அரசிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே வழக்கறிஞர் முருகனின் வழக்கை குற்றவியல் நடுவர் கோப்புக்கு எடுத்துக் கொண்டது தவறானது. எனவே செந்தில்குமாரின் சீராய்வு மனுவை அனுமதித்து, குற்றவியல் நடுவரின் உத்தரவை ரத்து செய்கிறேன் என்று கூறி உத்தரவு பிறப்பித்தார்.
CRL. RC. No - 193/2018    Dt - 16.7.2018 
செந்தில்குமார் Vs K. முருகன் 2018-2-TNLR-65
நன்றி : எனது முகநூல் நண்பரும் வழக்கறிஞருமான Dhanesh Balamurugan அவர்களுக்கு