disalbe Right click

Tuesday, May 18, 2021

உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி?

UAN என்றால் என்ன? 
உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி?

UAN என்றால் என்ன? உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி?
மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக பிஎஃப் என அழைக்கப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டம் உள்ளது.
  • பிஎஃப் கணக்கில் ஊழியர்கள் சம்பளத்திலிருந்து 12 சதவீதமும், நிறுவனம் சார்பில் 12 சதவீதமும் பங்களிப்பாக செலுத்தப்படும்.
  • இந்த பிஎஃப் கணக்கில் செலுத்தப்படும் தொகையின் பேலன்ஸ் என்ன என அறிந்துக்கொள்ள UAN (Universal Account Number) என் முக்கியமான ஒன்றாக உள்ளது.
  • பொதுவாக UAN மாத சம்பளத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
அப்படியில்லை என்றால் பிஎஃப் எண், ஆதார் அல்லது பான் எண்ணை பயன்படுத்தி UAN எண்ணை கண்டறிவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
  • 1. ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் உறுப்பினர்கள் சேவை வழங்கும் https://unifiedportal-mem.epfindia.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • 2. மேலே குறிப்பிட்டுள்ள இணைய பக்கத்திற்கு சென்று வலது பக்கம் உள்ள Know Your UAN Status என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • 3. Know Your UAN என்ற பக்கத்திற்கு சென்ற உடன் பிஎஃப் எண், ஆதார் எண் அல்லது பான் எண் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை க்ளிக் செய்து, பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், captcha போன்ற விவரங்களை அளிக்க வேண்டும்.
  • 4. பின்னர் Get Authorization Pin என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • 5. அடுத்த பக்கத்தில் I Agree என்பதை தேர்வு செய்து மொபைல் எண்ணிற்கு OTP அனுப்புக என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • 6. OTP எண்ணை பதிவிட்டு ‘சரிபார்க்கவும் (Validate)’ என்பதை கிளிக் செய்வதன் மூலம் UAN மற்றும் அதற்கான கடவுச்சொல்லும் எஸ்எம்எஸ் மூலம் மொபைல் எண்ணிற்கு வந்து சேரும். அதைப் பயன்படுத்தி பிஎஃப் கணக்கு குறித்த விவரங்கள் மற்றும் பேலன்ஸ் என்ன என்பது குறித்த விவரங்களை சரிபார்க்க முடியும்.
  • நன்றி : நியூஸ் 18 சானல் - 15.04.2019
    https://tamil.news18.com/.../what-is-my-uan-how-to-find...


 

லஞ்ச ஒழிப்புத்துறை - புகார் - விசாரணை

லஞ்ச ஒழிப்புத்துறை - புகார் - விசாரணை

நம்மில் சிலர் ”லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்ததாகவும், அதன்மீது எந்த நடவடிக்கையும் இல்லை” என்று முகநூலில் பதிவிட்டு வருகிறார்கள்.
அவர்கள் யார் மீது என்ன புகார் அனுப்பினார்கள்? எந்த முறையில் புகார் அனுப்பினார்கள் என்பதும், அவற்றின் மீது எதனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் எனக்குத் தெரியாது.
அதனால், பொதுமக்கள் அளிக்கின்ற புகாரினை லஞ்ச ஒழிப்புத்துறையினர் எப்படி கையாள்கின்றனர் என்பது பற்றி விளக்கமாக ஒரு பதிவு போடுவது என்று தீர்மானித்து, எனக்குள்ள அனுபவத்தின் அடிப்படையில் இந்த பதிவை இங்கு வெளியிடுகிறேன்.
பொதுமக்கள் அளிக்கின்ற புகார்
  • உங்களில் ஒருவர் அரசு அதிகாரியின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளிப்பதாக இருந்தால், 293, எம்.கே.என். ரோடு, ஆலந்தூர், சென்னை - 600 016 என்ற முகவரியில் செயல்பட்டு வருகின்ற லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேரடியாக பதிவுத்தபால் மூலம் அதனை அனுப்புங்கள்.
  • ஏனென்றால், உங்கள் மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நீங்கள் நேரடியாக சென்று புகார் அளித்தாலும், அது சென்னையிலுள்ள இயக்குநர் அலுவலகத்திற்கு அவர்களால் அனுப்பப்பட்டு அவர் எடுக்கின்ற முடிவின்படி அதன்பிறகே உத்தரவு அவர்களுக்கு பிறப்பிக்கப்படுகிறது.
  • ஆகையால், நீங்கள் நேரடியாக சென்னைக்கு புகாரை அனுப்பினால், காலதாமதத்தை தவிர்க்கலாம்.
  • புகார்மனுவில் இருக்கின்ற உங்களது முகவரி மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். கண்டிப்பாக உங்களது செல்போன் எண்ணை அதில் குறிப்பிட வேண்டும். இரண்டு தொடர்பு எண்கள் இருந்தால், அவற்றையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.
  • புகாரில் உங்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதிகாரிக்கு புகார் நகலை அனுப்பும் தவறை கண்டிப்பாகச் செய்யாதீர்கள். சிலர் இதனை தைரியம் என்றும், இதனால் அந்த அதிகாரி பயப்பட்டு தன்னைத் தேடி வருவார் என்றும் தவறாக நினைக்கிறார்கள்.
  • அது அந்த அதிகாரிக்கு விழிப்புணர்வை தோற்றுவிக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு உங்கள் மீது ஒரு கெட்ட அபிப்பிராயத்தையும் ஆரம்பத்திலேயே ஏற்படுத்திவிடும்.
  • புகார்தாரர் கடைசி வரையிலும் நமக்கு ஒத்துழைப்பு அளிப்பார்! என்று உங்களது ஒவ்வொரு நடவடிக்கையும் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பது மிக முக்கியமானது.
  • நீங்கள் அனுப்புகின்ற புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரியின் பெயர், அவரது பதவி, அவர் பணியாற்றுகின்ற அலுவலக முகவரி ஆகியவற்றை மிகத் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
  • அவர் செய்துள்ள குற்றம் பற்றியும், அது நடைபெற்ற காலம், இடம் ஆகியவற்றையும் குறிப்பிட்டு அதற்குண்டான ஆவண நகல்களையும் புகாருடன் வரிசையாக இணைக்க வேண்டும்.
  • ஆதாரம் இல்லாமல் புகார் அனுப்பினாலோ, யூகத்தின் அடிப்படையில் புகார் அனுப்பினாலோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்.
முதல் நிலை விசாரணை (Preliminary Enquiry):
  • உங்களது புகார் இயக்குநர் கையில் கிடைத்தவுடன் அவர் அதனை படித்து பார்த்து, புகாருடன் இணைக்கப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்து, குற்றம் நடைபெற்று இருக்கிறது; நாம் நடவடிக்கை எடுக்கலாம்! என்று திருப்தி அடைந்தால், உங்களது புகார் நகலை மட்டும் நீங்கள் வசிக்கின்ற பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அவர் அனுப்பி வைப்பார்.
  • அது கிடைத்தவுடன், உங்கள் பகுதிக்கு அருகிலுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இருந்து உங்களது செல்போனுக்கு தொடர்பு கொண்டு உங்களை ஒரு நாளில் விசாரணைக்கு அழைப்பார்கள்.
  • அவர்கள் அழைத்தவுடன் நீங்கள் உடனே விசாரணைக்கு சென்றால், அவர்களுக்கு உங்கள் மீது முதற்கட்ட நம்பிக்கை பிறக்கும் என்பதை மறக்காதீர்கள்.
  • அந்த விசாரணையில் உங்கள் புகார் நகலை காண்பித்து, நீங்கள்தான் புகார்தாரரா? இது நீங்கள் அனுப்பிய புகார்தானா? என்பதை உங்களிடம் உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.
  • ஏனென்றால், யாரோ ஒருவரது உண்மையான பெயர், முகவரி, செல்போன் எண்னை குறிப்பிட்டு, பொய்யான கையெழுத்து போடப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பல புகார்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
  • இந்த விசாரனை முடிந்தவுடன் அவர்களால் அது பற்றிய அறிக்கை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அவர்களுக்கு அனுப்பப்படும்.
விரிவான விசாரணை (Detailed Enquiry):
  • முதற்கட்ட விசாரணை முடிந்து அதில் திருப்தி அவர்களுக்கு ஏற்பட்டவுடன் விரிவான விசாரணைக்கான பணிகள் ஆரம்பமாகும்.
  • உதாரணமாக ஒரு அதிகாரி தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார் என்பது பற்றிய புகாராக இருந்தால், அவரது பணியிடத்து அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி அவர் தனது அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் குறித்து அளித்துள்ள அறிக்கைகளை பெறுவார்கள்.
  • பதிவுத்துறைக்கு கடிதம் அனுப்பி அவரது பெயரில், அவரது நெருங்கிய உறவினர்கள் பெயரில் வாங்கப்பட்டுள்ள அசையாச் சொத்துக்கள் குறித்த அறிக்கைகளை பெறுவார்கள்.
  • அதனையும், தாங்கள் புகாரில் அனுப்பிய ஆவணத்தையும் ஒப்பிட்டு பார்த்து அதற்கு தகுந்தாற்போல், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும்.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 18.05.2021 

பிழை திருத்தப் பத்திரம்

பிழை திருத்தப் பத்திரம்
சொத்து சம்பந்தமான பத்திரங்களில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஆவணங்களில் பிழை திருத்தப் பத்திரமும் ஒன்றாகும்.
ஆங்கிலத்தில் இதனை Amendment Deed என்றும் Rectification Deed என்றும் சொல்கிறார்கள்.
சொத்துக்களை வாங்குபவர்கள் அந்த சொத்து குறித்த பத்திரத்தை தாய்பத்திரத்துடன் ஒப்பிட்டு, வரிக்கு வரி மிகவும் கவனமாக ஆராய்ந்து பார்த்து வாங்க வேண்டும்.
எவற்றை சரிபார்க்க வேண்டும்?
  • பத்திரத்தின் முகப்பில் சொத்தின் மதிப்பு
  • சொத்தின் வழிகாட்டி மதிப்பிற்கு ஏற்றாற்போல் பத்திரம் வாங்கப்பட்டுள்ளதா?
  • நாள், மாதம் மற்றும் வருடம்
  • வாங்குபவர் மற்றும் விற்பவரது தந்தையார்/கணவர் பெயர்
  • ஆதார் அட்டை எண்/வேறு அடையாள அட்டை எண்
  • வாங்குபவர் மற்றும் விற்பவரது முகவரிகள்
  • தாய்பத்திரத்தில் உள்ள ஆவண எண், நாள், மாதம், வருடம் மற்றும் சார்பதிவகம் பெயர்
  • சொத்து இருக்கின்ற ஊரின் பெயர்
  • சொத்தின் பட்டா எண் மற்றும் சர்வே எண்கள்
  • சொத்தின் பரப்பளவு
  • சொத்தின் நான்குபுறமும் உள்ள அளவுகள்
  • சொத்தின் நான்குபுறமும் உள்ளவர்களின் பெயர்கள்
  • சொத்தின் மின் இணைப்பு எண்
  • சொத்தின் குழாய் இணைப்பு எண்
  • பவர் பத்திரம் மூலமாக அந்த சொத்தை வாங்கினால், அது சம்பந்தமான ஆவணங்கள்
பாத்து பாத்துத்தான் வாங்குனேன்;
இது மட்டும் எப்படியோ கண்ணுக்கு சிக்கல!
  • இப்படி பல பேர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். அது போன்ற நேரங்களில் என்ன செய்வது?
  • சிறிய தவறுகளான கதவு எண், மின் இணைப்பு எண், குழாய் இணைப்பு எண், சர்வே எண், பட்டா எண், சொத்தின் நான்கு புறமுள்ள அளவுகள், திசைகள், ஊர் பெயர் மற்றும் தனது பெயரில் உள்ள தவறுகளை சாதாரணமாக பிழை திருத்தல் பத்திரம் மூலமாக திருத்தி விடலாம்.. எந்த பிரச்சனையும் வராது. ஒரு 1000 ரூபாய்க்குள் முடிந்துவிடும்.
பிரச்சனையுள்ள திருத்தங்கள் என்ன?
  • சொத்தின் பரப்பளவை குறைத்து எழுதிவிட்டால், குறைத்து எழுதப்பட்ட பரப்பளவிற்காக மறுபடியும் பத்திரங்கள் வாங்க வேண்டும்.
  • சொத்தை விற்றவர் உயிருடன் இருந்தால் அவரையும் அழைத்து வந்து அந்த பத்திரங்களில் கையெழுத்து பெற வேண்டும்.
  • அவர் உயிருடன் இல்லை என்றால், அவரது வாரிசுகளை அழைத்து வந்து அந்த பத்திரங்களில் கையெழுத்து பெற வேண்டும்.
  • ஒரு வேளை அவருக்கு நேரடியான வாரிசுகள் இல்லை என்றால், அவரது இரண்டாம் நிலை வாரிசு, மூன்றாம் நிலை வாரிசு ஆகியவர்களை அழைத்து வந்து அந்த பத்திரங்களில் கையெழுத்து பெற வேண்டும்.
  • சொத்தை விற்றவர் உயிருடன் இருந்து கையெழுத்துப் போட வரமாட்டேன் என்றாலோ, அவர் இறந்த பின் அவருக்கென்று வாரிசுகள் (இரண்டாம் நிலை வாரிசு, மூன்றாம் நிலை வாரிசு உள்பட ) யாருமே இல்லை என்றாலோ நீதிமன்றம்தான் செல்ல வேண்டும். வேறு வழியில்லை.
  • இது போன்ற நிலையில் சொத்தை வாங்கியவருக்கு அது மிகுந்த மன உளைச்சலையும், செலவையும் அளிக்கும்.
ஆகவே சொத்துக்களை வாங்கும்போதே மிக கவனமுடன் வாங்குங்கள்.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 18.05.2021
 

Sunday, February 28, 2021

அரசு மருத்துவமனை - சிகிச்சை - காயம் - மரணம் - இழப்பீட்


 அரசு மருத்துவமனை - சிகிச்சை - காயம் - மரணம் - இழப்பீடு!

அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த சிறுமியின் இறப்பு; தாயாருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு!
  • தமிழ் செல்வி என்பவரின் மகளின் பெயர் சங்கீதா. எட்டு வயது கொண்ட இந்த சிறுமி டான்சில் எனப்படும் (தொண்டையில் சதை வளர்ச்சி) நோயால் அவதிப்பட்டு வந்தார்.
  • சிகிச்சைக்காக கடந்த 07.04.2016 அன்று விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்படுகிறார்.
  • அறுவை சிகிச்சை செய்வதற்காக சிறுமிக்கு மயக்க மருந்து செலுத்தப்படுகிறது.
  • துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட சில சிக்கல்களினால், அந்த சிறுமி மதுரையிலுள்ள ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்.
  • கோமா நிலைக்கு சென்ற அந்த சிறுமி 05.07.2016 அன்று இறந்துவிடுகிறார்.
  • மருத்துவர்களின் அலட்சியத்தால் தனது மகள் இறந்ததாக தமிழ்செல்வி குற்றம் சாட்டி 20 லட்ச ரூபாய் இழப்பீடு கோரி ரிட் பெட்டிஷன் தாக்கல் செய்கிறார்.
  • நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு விசாரணை நடத்தி, மருத்துவர்களின் மீது தவறு இல்லை என்று ஏற்கெனவே அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ( WP(MD)No.2721 of 2017 ) வழக்கை கனம் நீதிபதி G.R.சுவாமிநாதன் அவர்கள் விசாரணை செய்து பிறப்பித்த உத்தரவு
  • அரசு மருத்துவமனையில் எதிர்பாராமல் நிகழ்கின்ற காயம், மரணத்திற்கு மருத்துவ அலட்சியம் காரணமாக இல்லாவிடினும் அரசு அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும்
  • G.O.(M.s) No:395 - 04.09.2018 ன்படி உருவாக்கப்பட்டுள்ள கார்பஸ் நிதியில் இருந்து இறந்து போன சிறுமியின் தாயாரான தமிழ்செல்விக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டை எட்டு வாரங்களுக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும்
  • என்று 01.02.2021 அன்று தீர்ப்பளித்துள்ளார்.
அந்த தீர்ப்பின் நகல் பெற கீழ்க்கண்ட லின்க்கை கிளிக் செய்யுங்கள்.

Sunday, December 20, 2020

வேலியே பயிரை மேய்ந்தாலும், சட்டம் சும்மா விடாது!

தவறான வழி தவறான முடிவையே தரும்! 
கடந்த 2010ம் ஆண்டில் நடந்த சம்பவம் இது.
மதுரை அண்ணா நகரில் வசித்து வந்த மேலூர் அரசு சித்த மருத்துவர் திரு அசோக் குமார் என்பவர் ஏராளமாக லஞ்சம் வாங்கி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்து வருவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் திரு பெருமாள் பாண்டியன் என்பவர் அசோக் குமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.
விசாரணைக்கு மருத்துவர் அசோக் குமாரை அழைத்த ஆய்வாளர் பெருமாள் பாண்டியன், அசோக் குமாருக்கு சாதகமாக அறிக்கை தயாரிக்க ரூ 12 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்றும், அப்படி பணம் தனக்கு கொடுக்காவிட்டால் அவருக்கு எதிரான ஒரு அறிக்கையைத் தயார் செய்து அனுப்பி லஞ்ச வழக்கில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்பி விடுவதாகவும் அவரை மிரட்டியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அந்த வழக்கிலிருந்து தப்புவிக்க இருவரும் பேரம் பேசி இறுதியில் ஏழு லட்ச ரூபாய் என்று முடிவு செய்துள்ளனர். அதற்கு அச்சாரமாக ரூ 1,20,000 ஐ தன்னுடைய நம்பிக்கைக்குரிய புரோக்கர் நமச்சிவாயம் என்பவரிடம் கொடுத்து விடுமாறு ஆய்வாளர் பெருமாள் பாண்டியன் மருத்துவர் அசோக் குமாரிடம் கூறியுள்ளார்.
விதியின் விளையாட்டு ஆரம்பம்!
மருத்துவர் அசோக்குமாருக்கு லஞ்சம் கொடுக்க பிடிக்கவில்லை. அதனால், அவர் உடனடியாக அப்போதைய மதுரை லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளரான திரு மாரிராஜன் அவர்களிடம் புகார் செய்தார்.
அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். முதலில் அது உண்மையான புகார்தானா? என்பதை சில ஆய்வுகள் மூலம் அறிந்து கொண்டார்.
என் வழி தனி வழி!
தனது துறையைச்சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது புகார் வந்த போதிலும், புறவழியை நாடாமல், சட்டத்தின் வழியில் நடந்தார். உடனடியாக லஞ்ச ஒழிப்பு துறை உயரதிகாரிகளுக்கு மாரிராஜன் தகவல் தெரிவித்துள்ளார். மேலதிகாரிகளின் உத்தரவின் பேரில் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மதுரைக்கு ரகசியமாக வந்து சேர்ந்தனர்.
அவர்களது வழிகாட்டுதலின் பேரில் மருத்துவர் அசோக் குமார் போனில் தொடர்பு கொண்டு பணம் தருவதற்கு தான் தயாராக பணத்துடன் இருப்பதை ஆய்வாளர் பெருமாள் பாண்டியனிடம் தெரிவித்துள்ளார்.
வலையில் சிக்கிய ஆய்வாளர்
தன்னைச் சுற்றி வலை பின்னப்பட்டுக் கொண்டிருப்பதை கொஞ்சம்கூட அறியாமல் கூலாக, பெருமாள் பாண்டியனும் அந்தப் பணத்தைப் புரோக்கர் நமச்சிவாயத்திடம் கொடுத்து விடும்படி கூறியுள்ளார்.


அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினரால் ரசாயனப் பவுடர் தடவிய பணக் கட்டுகள் தயார் செய்யப்பட்டது. அந்தப் பணக்கட்டுகளை புரோக்கர் நமச்சிவாயத்திடம் டாக்டர் அசோக் குமார் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


இந்த நிகழ்ச்சிகள் எதுவும் ஆய்வாளர் பெருமாள் பாண்டியனுக்கு தெரியாது. சினிமாவில் வருவது போல, பின் புரோக்கர் நமச்சிவாயத்தைப் அவரிடம் பேச வைத்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், பெருமாள் பாண்டியனுக்காக புரோக்கர் நமச்சிவாயம் பணக்கட்டுகளை பெற்றதை பதிவு செய்து, அதனை உறுதி செய்து கொண்டனர்.

அதன் பிறகு ஆய்வாளர் பெருமாள் பாண்டியன் வீட்டுக்குச் சென்று லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அவரிடம் ஆதாரங்களுடன் விசாரணை நடத்தியதில் தான் லஞ்சம் கேட்டது உண்மைதான் என்பதை பெருமாள் பாண்டியன் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார். பெருமாள் பாண்டியன் கைது செய்யப் பட்டார். ஆய்வாளர் பெருமாள் பாண்டியன், புரோக்கர் நமச்சிவாயம் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டு உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பிறகு இருவரது வீட்டிலும் சோதனை நடத்தியபோது கணக்கில் வராத பல்வேறு சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறை காவலர்கள் கைப்பற்றியுள்ளனர்.
அந்தக் காலத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு இது. தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவரே லஞ்சம் வாங்கி சிக்கிக் கொண்டாராமே! என்று நாடே அதிர்ச்சி அடைந்தது.
இதெல்லாம் நிக்காது; சும்மா ஒரு பரபரப்புக்காக! என்றும்,
அவுங்க ஆள அவுங்களே காட்டிக் கொடுப்பாங்களா? என்றும்,
ஆதாரம் இல்லன்னு கொஞ்ச நாளில் அவரை விட்டு விடுவார்கள்! என்றும்,
பலவிதமான விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எழுந்தது.
பத்து ஆண்டுகளாக நடந்த வழக்கில், அதற்கெல்லாம் இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
யார் இந்த பெருமாள் பாண்டியன்?
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இவர், எஸ்.ஐ-யாகப் பணியில் சேர்ந்து, தேனி மாவட்ட காவல்துறையில் பணியாற்றிவந்தார். அப்போது எழுந்த சில புகார்களால் இவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து ஆய்வாளராக பதவி உயர்வும் பெற்று, 2010-ம் ஆண்டில் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றினர்.


இவரது மனைவியின் பெயர் உமா மீனாட்சி. இவர் மதுரை கார்ப்பரேஷன் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு சுந்தர் சுகிர்தன் மற்றும் பிரனவ் கவுதம் என்று இரண்டு மகன்கள். இவர்கள் அனைவரும் மதுரை தத்த நேரியில் வசித்து வருகிறார்கள்.
மேற்கண்ட வழக்கில் உடனடியாக சஸ்பெண்ட் ஆன அவர், கடந்த 10 ஆண்டுகள் பணியில்லாமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இது சம்பந்தமாக குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள், சச்சரவுகள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 14.12.2020 அன்று, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு நீதிமன்றத்தால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டணை வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டிலேயே லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் பெற்ற வழக்கில் தண்டணை பெறுவது இதுதான் முதல் முறை! என்று தீயாக பரவிய செய்தி அவரை பெரும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டிருந்ததாக தெரிய வருகிறது.
இந்நிலையில் 17.12.2020 அன்று, மகன்கள் இருவரும் வெளியில் சென்றிருந்த நேரத்தில், அவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், அவரை சுத்தியலால் அடித்து கொன்றுவிட்டு தானும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தவறான வழிகளில் செல்வபர்களுக்கு தவறான முடிவு காத்திருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகிறது.
--------------------- அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 20.12.2020