disalbe Right click

Monday, March 2, 2020

சொத்து வாங்குபவர்கள் கவனத்திற்கு…..

சொத்து வாங்குபவர்கள் கவனத்திற்கு…..
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
கோவிந்தசாமி என்பவரிடமிருந்து ஒருவர், கட்டிடம் அல்லது காலி மனை வாங்க விரும்புகிறார். அதனுடைய மதிப்பு ரூ. 60 லட்சம். இந்திய வருமான வரிச்சட்டப்படி, அசையா சொத்து விற்பவர்கள் மூலதன லாப வரி செலுத்த வேண்டும். இதனால் சொத்தை வாங்குபவர் கிரைய பணத்தை கொடுக்கும் போது அதற்குரிய வரி பிடித்தம் செய்து கொடுக்க வேண்டும். அதன்பிறகு அந்த தொகையை கோவிந்தசாமி பெயரில் வருமான வரியாக செலுத்தவும் வேண்டும்.  அந்த ஆண்டில் கோவிந்தசாமி தனது ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது அந்த தொகையை கழித்துக்கொள்ளலாம். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நமது நாட்டில் அசையா சொத்துக்கள் வாங்கும்போது பின்பற்றவேண்டிய வரி நடைமுறைகள் இவ்வளவுதான்.
'கருப்பு' பணப்புழக்கத்தை தடுக்க வரிப்பிடித்தம்
இந்தியாவில் நடக்கும் கருப்பு பணப்புழக்கத்தில் கணிசமான தொகை அசையாச் சொத்து பரிவர்த்தனைகளில் நடைபெறுகிறது. அதனால், வருமான வரித்துறை கருப்பு பணத்தின் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில், அதன் ஒரு பகுதியாக அசையாச் சொத்துக்களை வாங்குபவர்கள் வரி பிடித்தம் செய்ய வேண்டும் என்ற விதியை சமீபகாலத்தில் ஏற்படுத்தி, அதனை நடைமுறைபடுத்திக் கொண்டிருக்கிறது.
இந்திய வருமானவரி சட்டம் என்ன சொல்கிறது?
இந்திய வருமானவரி சட்டம் பிரிவு 194-IAன் படி, அசையா சொத்தின் மதிப்பு 50 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால், அந்த சொத்தை வாங்குபவர், அந்த சொத்தை விற்பவருக்கு பணத்தை செலுத்தும்போது, வாங்கும் விலை மதிப்பில் ஒரு சதவீதம் வரி பிடித்தம் செய்து, அந்த தொகையை அரசிடம் செலுத்த வேண்டும்.
விதிவிலக்கு இருக்கிறதா?
மேற்கண்ட வரியானது, குடியிருப்பு சொத்து, வணிக சொத்து மற்றும் காலிமனை நிலங்களுக்கும் பொருந்தும். ஆனால், இந்த வரியில் இருந்து விவசாய நிலம் வாங்குவதற்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்த வகை சொத்தாக இருந்தாலும், 50 லட்சம் மதிப்பிற்கும் குறைவாக அசையா சொத்து வாங்கினால் வரிப் பிடித்தம் (TDS) தேவையில்லை.
இந்த தொகையை எப்படி செலுத்த வேண்டும்?
ஆவண மாற்றத்துக்கு முன்பணம் (அட்வான்ஸ்) வழங்கும்போதோ அல்லது ஆவணத்தை பதிந்து பெயர் மாற்றம் செய்யும் போதோ, அந்த சொத்தை வாங்குபவர், அந்த சொத்துக்கான விற்பனையாளருக்கு பணம் செலுத்தும்போது, மொத்த விற்பனை மதிப்பில் ஒரு சதவீதம் வரிப்பிடித்தம் கழித்துக்கொண்டு மீத தொகையை மட்டும் கண்டிப்பாக செலுத்த வேண்டும்.  எந்த தேதியில் வரிக்கான தொகை பிடிக்கப்பட்டுள்ளதோ அந்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் இந்த வரிப்பணத்தை, அந்த சொத்தை வாங்குபவர், மத்திய அரசின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். இதற்கான டிடிஎஸ் செலுத்த மற்றும் பிற விவரங்களை அளிக்க சலான் உள்ளடக்கிய 26-QB படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அந்த சொத்தை வாங்குபவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் அதற்கு ஏற்றவாறு தனித்தனியாக, 26-QB படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
TAN எனப்படும் வரிவிலக்கு கணக்கு எண்
பொதுவாக, டிடிஎஸ் தொகையினை கழிக்க பொறுப்புள்ள ஒவ்வொருவரும் ஒரு வரி விலக்கு கணக்கு எண் பெற்றிருக்க வேண்டும். இருந்த போதிலும், அசையாச் சொத்தை பொறுத்தவரை, வாங்குபவர் TAN வாங்க வேண்டியதில்லை. விண்ணப்பப் படிவம் 26-QB இல் விற்பனையாளர் மற்றும் வாங்குபவரின் பெயர், ஆதார் எண், முகவரி, பான் (PAN), மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் விவரம் போன்றவற்றை வழங்க வேண்டும்.  அதுமட்டுமல்லாது ஒப்பந்தம் செய்த தேதி, வாங்குகின்ற சொத்தின் முழு மதிப்பு, பணம் செலுத்த போகின்ற தேதி, ஆகியவற்றை இணைத்து, வாங்குகின்ற சொத்தின் முழுமையான முகவரியை குறிப்பிட வேண்டும்.
மேற்கண்ட வரிவிலக்கு கணக்கு எண் வழங்கப்படவில்லை என்றால்…..?
சொத்தை விற்பவரால் நிரந்தர வங்கி கணக்கு எண் வழங்கப்படவில்லை என்றால் ஆதாரப் பணத்திலிருந்து வரி பிடித்தம் 20 சதவீதம் கழிக்கப்படும். எனவே, அசையா சொத்துகளை வாங்குபவர்கள், வரி பிடித்தம் செய்து, விவரங்களை தாக்கல் செய்யும்போது சொத்து விற்பவரின் விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை நன்றாக பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விற்பனையாளருக்கு கிடைக்கக்கூடிய வரி வரவு தொகை கிடைக்காமல் போய்விடும்.
வரி பிடித்தம் இல்லாமல் சொத்தை விற்க முடியுமா?
தனது சொத்தை விற்பவர், 'தனது வருமானமும், மூலதன லாபமும் சேர்ந்து வருமானவரி வரம்புக்கு உட்பட்டதாக இருக்கிறது' என்று வருமானவரி அதிகாரியிடம் பிரிவு 197 படி விண்ணப்பிக்க வேண்டும். வரி பிடித்தம் செய்யாமலோ அல்லது குறைந்த விகிதத்தில் வரி பிடித்தம் செய்யும்படியோ வருமான அதிகாரியிடம் சான்றிதழ் பெறும் பட்சத்தில் சொத்தை வாங்குபவர் எந்தவித வரிகளும் பிடித்தம் இல்லாமல் பரிவர்த்தனை செய்ய முடியும்.
வரியை எப்படி செலுத்த வேண்டும்?
ஆன்லைன் மூலமாகவோ அல்லது வங்கிகள் மூலமாகவோ பிடித்தம் செய்த வரியை செலுத்தலாம். நீங்கள் வங்கி மூலம் செலுத்தினால், வருமான வரித்துறை இணையதளத்தில்,  அதனை வங்கிகள் தானாகவே பதிவு செய்யும். டிடிஎஸ் செலுத்த பட்டதும், சொத்து வாங்குபவர், இந்தவரியை செலுத்தியதற்கான அத்தாட்சியை படிவம் 16பி-யை வருமான வரித்துறை இணையதளத்தில் இருந்து எடுத்து சொத்து விற்றவருக்கு கண்டிப்பாக 15 நாட்களுக்குள்  அளிக்க வேண்டும்..
அதே நேரத்தில், சொத்து வாங்குபவர்கள் மற்றும் சொத்தை விற்பனை செய்பவர்கள் விற்பனையின் மீது ஏற்கனவே வரிப் பிடித்தம் செய்யப்பட்டதால் தனக்குக் கூடுதலாக வரிக் கட்டும் பொறுப்பு இல்லை என்றோ அல்லது வருமானவரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்றோ கருத கூடாது. ஒவ்வொரு மூல தனத்துக்கும் ஏற்றவாறு சரியான வரியைக் கணக்கிட்டு வருமானவரி கணக்குத் தாக்கல் செய்யவேண்டிய கடமை சொத்தை வாங்குபவர்களுக்கும், விற்பவர்களுக்கும் நிச்சயம் உண்டு.
விவசாய நிலங்களை வாங்குபவர்கள்…..
பொதுவாக ரூ. 50 லட்சத்திற்கு மேலுள்ள அசையாச் சொத்துக்களை வாங்குவோருக்கு வருமான வரி பிடித்தம் உண்டு. ஆனால் விவசாய பூமி வாங்குபவர்களுக்கு, அந்த நிலத்தின் மதிப்பு எவ்வளவாக வரி பிடித்தம் செய்ய தேவையில்லை.
***********************அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 03.03.2020