disalbe Right click

Tuesday, May 18, 2021

பிழை திருத்தப் பத்திரம்

பிழை திருத்தப் பத்திரம்
சொத்து சம்பந்தமான பத்திரங்களில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஆவணங்களில் பிழை திருத்தப் பத்திரமும் ஒன்றாகும்.
ஆங்கிலத்தில் இதனை Amendment Deed என்றும் Rectification Deed என்றும் சொல்கிறார்கள்.
சொத்துக்களை வாங்குபவர்கள் அந்த சொத்து குறித்த பத்திரத்தை தாய்பத்திரத்துடன் ஒப்பிட்டு, வரிக்கு வரி மிகவும் கவனமாக ஆராய்ந்து பார்த்து வாங்க வேண்டும்.
எவற்றை சரிபார்க்க வேண்டும்?
  • பத்திரத்தின் முகப்பில் சொத்தின் மதிப்பு
  • சொத்தின் வழிகாட்டி மதிப்பிற்கு ஏற்றாற்போல் பத்திரம் வாங்கப்பட்டுள்ளதா?
  • நாள், மாதம் மற்றும் வருடம்
  • வாங்குபவர் மற்றும் விற்பவரது தந்தையார்/கணவர் பெயர்
  • ஆதார் அட்டை எண்/வேறு அடையாள அட்டை எண்
  • வாங்குபவர் மற்றும் விற்பவரது முகவரிகள்
  • தாய்பத்திரத்தில் உள்ள ஆவண எண், நாள், மாதம், வருடம் மற்றும் சார்பதிவகம் பெயர்
  • சொத்து இருக்கின்ற ஊரின் பெயர்
  • சொத்தின் பட்டா எண் மற்றும் சர்வே எண்கள்
  • சொத்தின் பரப்பளவு
  • சொத்தின் நான்குபுறமும் உள்ள அளவுகள்
  • சொத்தின் நான்குபுறமும் உள்ளவர்களின் பெயர்கள்
  • சொத்தின் மின் இணைப்பு எண்
  • சொத்தின் குழாய் இணைப்பு எண்
  • பவர் பத்திரம் மூலமாக அந்த சொத்தை வாங்கினால், அது சம்பந்தமான ஆவணங்கள்
பாத்து பாத்துத்தான் வாங்குனேன்;
இது மட்டும் எப்படியோ கண்ணுக்கு சிக்கல!
  • இப்படி பல பேர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். அது போன்ற நேரங்களில் என்ன செய்வது?
  • சிறிய தவறுகளான கதவு எண், மின் இணைப்பு எண், குழாய் இணைப்பு எண், சர்வே எண், பட்டா எண், சொத்தின் நான்கு புறமுள்ள அளவுகள், திசைகள், ஊர் பெயர் மற்றும் தனது பெயரில் உள்ள தவறுகளை சாதாரணமாக பிழை திருத்தல் பத்திரம் மூலமாக திருத்தி விடலாம்.. எந்த பிரச்சனையும் வராது. ஒரு 1000 ரூபாய்க்குள் முடிந்துவிடும்.
பிரச்சனையுள்ள திருத்தங்கள் என்ன?
  • சொத்தின் பரப்பளவை குறைத்து எழுதிவிட்டால், குறைத்து எழுதப்பட்ட பரப்பளவிற்காக மறுபடியும் பத்திரங்கள் வாங்க வேண்டும்.
  • சொத்தை விற்றவர் உயிருடன் இருந்தால் அவரையும் அழைத்து வந்து அந்த பத்திரங்களில் கையெழுத்து பெற வேண்டும்.
  • அவர் உயிருடன் இல்லை என்றால், அவரது வாரிசுகளை அழைத்து வந்து அந்த பத்திரங்களில் கையெழுத்து பெற வேண்டும்.
  • ஒரு வேளை அவருக்கு நேரடியான வாரிசுகள் இல்லை என்றால், அவரது இரண்டாம் நிலை வாரிசு, மூன்றாம் நிலை வாரிசு ஆகியவர்களை அழைத்து வந்து அந்த பத்திரங்களில் கையெழுத்து பெற வேண்டும்.
  • சொத்தை விற்றவர் உயிருடன் இருந்து கையெழுத்துப் போட வரமாட்டேன் என்றாலோ, அவர் இறந்த பின் அவருக்கென்று வாரிசுகள் (இரண்டாம் நிலை வாரிசு, மூன்றாம் நிலை வாரிசு உள்பட ) யாருமே இல்லை என்றாலோ நீதிமன்றம்தான் செல்ல வேண்டும். வேறு வழியில்லை.
  • இது போன்ற நிலையில் சொத்தை வாங்கியவருக்கு அது மிகுந்த மன உளைச்சலையும், செலவையும் அளிக்கும்.
ஆகவே சொத்துக்களை வாங்கும்போதே மிக கவனமுடன் வாங்குங்கள்.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 18.05.2021
 

Sunday, February 28, 2021

அரசு மருத்துவமனை - சிகிச்சை - காயம் - மரணம் - இழப்பீட்


 அரசு மருத்துவமனை - சிகிச்சை - காயம் - மரணம் - இழப்பீடு!

அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த சிறுமியின் இறப்பு; தாயாருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு!
  • தமிழ் செல்வி என்பவரின் மகளின் பெயர் சங்கீதா. எட்டு வயது கொண்ட இந்த சிறுமி டான்சில் எனப்படும் (தொண்டையில் சதை வளர்ச்சி) நோயால் அவதிப்பட்டு வந்தார்.
  • சிகிச்சைக்காக கடந்த 07.04.2016 அன்று விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்படுகிறார்.
  • அறுவை சிகிச்சை செய்வதற்காக சிறுமிக்கு மயக்க மருந்து செலுத்தப்படுகிறது.
  • துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட சில சிக்கல்களினால், அந்த சிறுமி மதுரையிலுள்ள ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்.
  • கோமா நிலைக்கு சென்ற அந்த சிறுமி 05.07.2016 அன்று இறந்துவிடுகிறார்.
  • மருத்துவர்களின் அலட்சியத்தால் தனது மகள் இறந்ததாக தமிழ்செல்வி குற்றம் சாட்டி 20 லட்ச ரூபாய் இழப்பீடு கோரி ரிட் பெட்டிஷன் தாக்கல் செய்கிறார்.
  • நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு விசாரணை நடத்தி, மருத்துவர்களின் மீது தவறு இல்லை என்று ஏற்கெனவே அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ( WP(MD)No.2721 of 2017 ) வழக்கை கனம் நீதிபதி G.R.சுவாமிநாதன் அவர்கள் விசாரணை செய்து பிறப்பித்த உத்தரவு
  • அரசு மருத்துவமனையில் எதிர்பாராமல் நிகழ்கின்ற காயம், மரணத்திற்கு மருத்துவ அலட்சியம் காரணமாக இல்லாவிடினும் அரசு அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும்
  • G.O.(M.s) No:395 - 04.09.2018 ன்படி உருவாக்கப்பட்டுள்ள கார்பஸ் நிதியில் இருந்து இறந்து போன சிறுமியின் தாயாரான தமிழ்செல்விக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டை எட்டு வாரங்களுக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும்
  • என்று 01.02.2021 அன்று தீர்ப்பளித்துள்ளார்.
அந்த தீர்ப்பின் நகல் பெற கீழ்க்கண்ட லின்க்கை கிளிக் செய்யுங்கள்.

Sunday, December 20, 2020

வேலியே பயிரை மேய்ந்தாலும், சட்டம் சும்மா விடாது!

தவறான வழி தவறான முடிவையே தரும்! 
கடந்த 2010ம் ஆண்டில் நடந்த சம்பவம் இது.
மதுரை அண்ணா நகரில் வசித்து வந்த மேலூர் அரசு சித்த மருத்துவர் திரு அசோக் குமார் என்பவர் ஏராளமாக லஞ்சம் வாங்கி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்து வருவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் திரு பெருமாள் பாண்டியன் என்பவர் அசோக் குமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.
விசாரணைக்கு மருத்துவர் அசோக் குமாரை அழைத்த ஆய்வாளர் பெருமாள் பாண்டியன், அசோக் குமாருக்கு சாதகமாக அறிக்கை தயாரிக்க ரூ 12 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்றும், அப்படி பணம் தனக்கு கொடுக்காவிட்டால் அவருக்கு எதிரான ஒரு அறிக்கையைத் தயார் செய்து அனுப்பி லஞ்ச வழக்கில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்பி விடுவதாகவும் அவரை மிரட்டியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அந்த வழக்கிலிருந்து தப்புவிக்க இருவரும் பேரம் பேசி இறுதியில் ஏழு லட்ச ரூபாய் என்று முடிவு செய்துள்ளனர். அதற்கு அச்சாரமாக ரூ 1,20,000 ஐ தன்னுடைய நம்பிக்கைக்குரிய புரோக்கர் நமச்சிவாயம் என்பவரிடம் கொடுத்து விடுமாறு ஆய்வாளர் பெருமாள் பாண்டியன் மருத்துவர் அசோக் குமாரிடம் கூறியுள்ளார்.
விதியின் விளையாட்டு ஆரம்பம்!
மருத்துவர் அசோக்குமாருக்கு லஞ்சம் கொடுக்க பிடிக்கவில்லை. அதனால், அவர் உடனடியாக அப்போதைய மதுரை லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளரான திரு மாரிராஜன் அவர்களிடம் புகார் செய்தார்.
அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். முதலில் அது உண்மையான புகார்தானா? என்பதை சில ஆய்வுகள் மூலம் அறிந்து கொண்டார்.
என் வழி தனி வழி!
தனது துறையைச்சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது புகார் வந்த போதிலும், புறவழியை நாடாமல், சட்டத்தின் வழியில் நடந்தார். உடனடியாக லஞ்ச ஒழிப்பு துறை உயரதிகாரிகளுக்கு மாரிராஜன் தகவல் தெரிவித்துள்ளார். மேலதிகாரிகளின் உத்தரவின் பேரில் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மதுரைக்கு ரகசியமாக வந்து சேர்ந்தனர்.
அவர்களது வழிகாட்டுதலின் பேரில் மருத்துவர் அசோக் குமார் போனில் தொடர்பு கொண்டு பணம் தருவதற்கு தான் தயாராக பணத்துடன் இருப்பதை ஆய்வாளர் பெருமாள் பாண்டியனிடம் தெரிவித்துள்ளார்.
வலையில் சிக்கிய ஆய்வாளர்
தன்னைச் சுற்றி வலை பின்னப்பட்டுக் கொண்டிருப்பதை கொஞ்சம்கூட அறியாமல் கூலாக, பெருமாள் பாண்டியனும் அந்தப் பணத்தைப் புரோக்கர் நமச்சிவாயத்திடம் கொடுத்து விடும்படி கூறியுள்ளார்.


அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினரால் ரசாயனப் பவுடர் தடவிய பணக் கட்டுகள் தயார் செய்யப்பட்டது. அந்தப் பணக்கட்டுகளை புரோக்கர் நமச்சிவாயத்திடம் டாக்டர் அசோக் குமார் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


இந்த நிகழ்ச்சிகள் எதுவும் ஆய்வாளர் பெருமாள் பாண்டியனுக்கு தெரியாது. சினிமாவில் வருவது போல, பின் புரோக்கர் நமச்சிவாயத்தைப் அவரிடம் பேச வைத்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், பெருமாள் பாண்டியனுக்காக புரோக்கர் நமச்சிவாயம் பணக்கட்டுகளை பெற்றதை பதிவு செய்து, அதனை உறுதி செய்து கொண்டனர்.

அதன் பிறகு ஆய்வாளர் பெருமாள் பாண்டியன் வீட்டுக்குச் சென்று லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அவரிடம் ஆதாரங்களுடன் விசாரணை நடத்தியதில் தான் லஞ்சம் கேட்டது உண்மைதான் என்பதை பெருமாள் பாண்டியன் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார். பெருமாள் பாண்டியன் கைது செய்யப் பட்டார். ஆய்வாளர் பெருமாள் பாண்டியன், புரோக்கர் நமச்சிவாயம் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டு உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பிறகு இருவரது வீட்டிலும் சோதனை நடத்தியபோது கணக்கில் வராத பல்வேறு சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறை காவலர்கள் கைப்பற்றியுள்ளனர்.
அந்தக் காலத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு இது. தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவரே லஞ்சம் வாங்கி சிக்கிக் கொண்டாராமே! என்று நாடே அதிர்ச்சி அடைந்தது.
இதெல்லாம் நிக்காது; சும்மா ஒரு பரபரப்புக்காக! என்றும்,
அவுங்க ஆள அவுங்களே காட்டிக் கொடுப்பாங்களா? என்றும்,
ஆதாரம் இல்லன்னு கொஞ்ச நாளில் அவரை விட்டு விடுவார்கள்! என்றும்,
பலவிதமான விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எழுந்தது.
பத்து ஆண்டுகளாக நடந்த வழக்கில், அதற்கெல்லாம் இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
யார் இந்த பெருமாள் பாண்டியன்?
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இவர், எஸ்.ஐ-யாகப் பணியில் சேர்ந்து, தேனி மாவட்ட காவல்துறையில் பணியாற்றிவந்தார். அப்போது எழுந்த சில புகார்களால் இவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து ஆய்வாளராக பதவி உயர்வும் பெற்று, 2010-ம் ஆண்டில் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றினர்.


இவரது மனைவியின் பெயர் உமா மீனாட்சி. இவர் மதுரை கார்ப்பரேஷன் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு சுந்தர் சுகிர்தன் மற்றும் பிரனவ் கவுதம் என்று இரண்டு மகன்கள். இவர்கள் அனைவரும் மதுரை தத்த நேரியில் வசித்து வருகிறார்கள்.
மேற்கண்ட வழக்கில் உடனடியாக சஸ்பெண்ட் ஆன அவர், கடந்த 10 ஆண்டுகள் பணியில்லாமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இது சம்பந்தமாக குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள், சச்சரவுகள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 14.12.2020 அன்று, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு நீதிமன்றத்தால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டணை வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டிலேயே லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் பெற்ற வழக்கில் தண்டணை பெறுவது இதுதான் முதல் முறை! என்று தீயாக பரவிய செய்தி அவரை பெரும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டிருந்ததாக தெரிய வருகிறது.
இந்நிலையில் 17.12.2020 அன்று, மகன்கள் இருவரும் வெளியில் சென்றிருந்த நேரத்தில், அவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், அவரை சுத்தியலால் அடித்து கொன்றுவிட்டு தானும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தவறான வழிகளில் செல்வபர்களுக்கு தவறான முடிவு காத்திருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகிறது.
--------------------- அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 20.12.2020

Sunday, November 15, 2020

பூர்வீக சொத்து - பேரன், பேத்திகளுக்கு பங்கு!

பூர்வீக சொத்து - பேரன், பேத்திகளுக்கு பங்கு! 

எங்கள் ஊரில் இப்படி ஒரு பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கலாம்? சட்ட வல்லுநர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது என்று கடந்த 28.10..2020 அன்று முகநூலில் ஒரு பதிவு போட்டிருந்தேன்.
பல நண்பர்கள் அதற்கு பதில் அளித்திருந்தார்கள். பலர் சரியான பதிலை அளித்திருந்தார்கள். ஆனால், அவர்கள் இன்பாக்ஸில் அளித்திருந்த பதில்கள் மிக சுருக்கமாகவே இருந்தன. அவற்றை எத்தனை பேர் படித்திருப்பார்கள்? என்பது தெரியவில்லை. அதனால், மற்றவர்களும் இதைப்பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ள இந்தப் பதிவை வெளியிடுகிறேன்.
பூர்வீக சொத்து
முன்னோர்கள்களான நமது தாத்தா, பாட்டி மற்றும் அவர்களது பெற்றோர்கள் தேடி வைத்த சொத்துக்களை, பொதுவாக நாம் பூர்வீக சொத்துக்கள் என்று சொல்கிறோம்.
அது போன்ற சொத்துக்களை ஒருவரிடமிருந்து நாம் வாங்கும்போது பின்னாளில் அந்த சொத்தில் வில்லங்கங்கள் ஏதும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, பத்திரப்பதிவின்போது முன்னேற்பாடாக சில காரியங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
  • அந்த முன்னோர்களின் இறப்புச் சான்றிதழ்கள், அவர்களது வாரிசு சான்றிதழ்கள் ஆகியவற்றை பத்திரத்துடன் இணைக்க வேண்டும்.
  • ஒரு வேளை வாரிசுகள் யாராவது இறந்திருந்தால் அவர்களுடைய இறப்புச் சான்றிதழ் மற்றும் அவர்களது வாரிசு சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும்.
  • அந்த கிரையப் பத்திரத்தில் அந்த முன்னோரின் வாரிசுகள் அனைவரிடமும் கையெழுத்துக்களை பெற வேண்டும்.
  • அந்த சொத்தின் வாரிசுகள் மைனர்களாக இருந்தால், அவருக்குரிய பங்குத் தொகையை அவருடைய பெயரில் வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • ஏனென்றால் ஒரு மைனருடைய பங்கு சொத்து விற்பனை செய்யப்படும்போது அந்த மைனரின் பங்கு அவருக்கு முறையாக சேர்ப்பிக்கப்பட்டிருந்தால்தான் அந்த சொத்தை வாங்கும் நமக்கு பின்னாளில் பிரச்சனைகள் வராது.
  • இல்லையென்றால், அந்த மைனர் மேஜர் ஆன பிறகு, அதாவது தனது 18 வயதுக்குப் பிறகு தனது 21 வயதுக்குள் தங்களது பூர்வீக சொத்தை விற்பனை செய்தது செல்லாது என்று வழக்கு தொடுக்க முடியும். அதற்கு சாதகமாகவே சட்டமும் இருக்கிறது.
சுய சம்பாத்திய சொத்து
ஒரு ஆண், தான் சுயமாக சம்பாதித்த அசையா சொத்துக்கள் குறித்து ஏதும் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால் அந்த சொத்துக்களும் பூர்வீக சொத்துக்களுக்குரிய தன்மையை பெற்று விடுகின்றன.
  • உதாரணமாக தந்தை ஒருவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
  • தனது சொத்துக்கள் குறித்து ஏதும் எழுதி வைக்காமல் அவர் ஒரு நாள் திடீரென்று இறந்து விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
  • அவரது சுய சம்பாத்திய சொத்துக்களை அவரது வாரிசுகளான இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும், அவரது மனைவியும், அவரது தாய் உயிரோடு இருந்தால் அவரும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
  • அவர்கள் ஒவ்வொருவருக்கு அந்த சொத்துக்களில் ஆறில் ஒரு பங்கு கிடைக்கும்.
  • மேற்கண்ட அனைவரும் முதல்நிலை வாரிசுதாரர்கள் ஆவார்கள்.
வாரிசுகளின் வாரிசுகள்
  • அந்த இரண்டு மகன்களுக்கு திருமணமாகி வாரிசுகள் இருந்தாலோ, அந்த இரண்டு மகள்களுக்கு திருமணமாகி வாரிசுகள் இருந்தாலோ, அவர்களும் மேற்கண்ட சொத்துகளுக்கு மறைமுக வாரிசுதாரர்கள் ஆகிவிடுவார்கள்.
  • மேற்கண்ட வாரிசுகளின் பட்டியலில் மகனின் மனைவியோ, மகளின் கணவனோ இடம்பெற மாட்டார்கள்.
  • அந்த சொத்தை தனது தந்தையின் சொத்துதானே என்று தன்னிச்சையாக வேறு யாருக்கும் அந்த இரண்டு மகன்களோ அல்லது அந்த இரண்டு மகள்களோ விற்கவோ அல்லது அடமானம் வைக்கவோ முடியாது. அந்த இடத்தில் பேரன் பேத்திகளின் கையெழுத்து வேண்டும்.
  • மேலும், அந்த சொத்தை தனது உடன்பிறந்தவர்களுக்கு தான செட்டில்மெண்ட் செய்யவோ, பிறருக்கு தானம் செய்யவோ முடியாது.
  • அவர்கள் அந்த சொத்தை வாழ்க்கை முழுவதும் அனுபவித்துக் கொள்ளலாம், அவ்வளவுதான். எதையாவது விற்கவேண்டும் என்று நினைத்தால் அதற்கு அவர்களது வாரிசுகளின் ஒப்புதல் கண்டிப்பாக தேவை.
  • மேற்கண்டவாறு பத்திரம் பதிவு செய்யவில்லை என்றால் அந்த பத்திரப்பதிவு செல்லாது. அந்த பத்திரத்தை பதிவு செய்த சார்பதிவாளரும், அதனை தயாரித்த ஆவண எழுத்தரும் குற்றவாளி ஆவார்கள்.
தான செட்டில்மெண்ட் பத்திரம்
  • தனது பெயரில் உள்ள, தனக்குச் சொந்தமான சொத்தை மட்டுமே ஒருவர் , தனது ரத்த சம்பந்தமுள்ள மற்றவருக்கு தான செட்டில் மெண்ட் பத்திரம் மூலம் அளிக்க முடியும்.
  • பிரிக்கப்படாத பூர்வீக சொத்துக்களை தான செட்டில்மெண்ட் மூலம் பிறருக்கு அளிக்க முடியாது.
  • எதுவும் எழுதி வைக்காமல் இறந்து போன தந்தையின் சொத்தையோ, முன்னோர்களின் பூர்வீக சொத்தையோ தங்களது வாரிசுகளான மகன், மகள் ஒப்புதலின்றி ரத்த சம்பந்தமுள்ள ஒருவருக்கு தான செட்டில்மெண்ட் செய்ய முடியாது.
அப்படி என்றால், என்ன செய்ய வேண்டும்?
ரத்த சம்பந்தமுள்ள வேறு ஒருவருக்கு எதுவும் எழுதி வைக்காமல் இறந்து போன தந்தையின் சொத்தையோ, முன்னோர்களின் பூர்வீக சொத்தையோ ஒருவர் எழுதிக் கொடுக்க வேண்டும் என்றால், விடுதலைப் பத்திரம் மூலமாக எழுதிக் கொடுக்கலாம். ஆனால், அதிலும் தங்களது வாரிசுகளின் கையொப்பங்களை கண்டிப்பாக பெற வேண்டும்.

********************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 15.11.2020  

Sunday, November 8, 2020

கொடுக்கல், வாங்கல் - கடன் விதிமுறைகள்
அவசரத்திற்கு பணம் தேவைப்படுகிறது என்று உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ அல்லது வட்டிக்கு பணம் கொடுக்கின்ற தொழில் செய்பவர்களிடமோ நாம் கடனாக பணம் வாங்குகிறோம்.
அதிக வட்டி கிடைக்கிறது என்பதால், அதற்கென்று சில நிபந்தனைகளை வகுத்துக் கொண்டு, அடியாட்களை வைத்துக் கொண்டு வட்டிக்கு பணம் கொடுக்கின்ற தொழிலை சிலர் செய்து வருகிறார்கள்.
ஆனால், நமது அரசாங்கம் இதற்கென்று சில விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளது. அதனை பின்பற்றாமல். நீங்கள் கடன் வாங்கினாலும், கடன் கொடுத்தாலும் அது சட்ட விரோதம் ஆகிவிடும்! என்பது உங்களுக்குத் தெரியுமா?
கடன் கொடுப்பவருக்குண்டான விதிமுறைகள்:
வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் இருந்து கடன் வாங்கும் போது, கடன் பெறுபவர்களிடம் பல தாள்களில் கையெழுத்து வாங்குவார்கள். இதற்கென்று பல்வேறு விதிமுறைகளும், நடைமுறைகளும் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
அறிமுகமானவர்களுக்கோ அல்லது அறிமுகமானவர்கள் பரிந்துரைக்கின்றவர்களுக்கோ அவசரத் தேவைக்காக நீங்கள் அதிக வட்டிக்கு பணம் கொடுப்பவராக இருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட தொகைக்கு மேல் ரொக்கமாக கொடுக்க கூடாது என்ற விதிமுறை இருக்கிறது.
ரொக்கமாக எவ்வளவு கொடுக்கலாம்?
கடன் வழங்கும் போது, 20 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ரூபாய் அதிகமான தொகையாக இருந்தால் எனில், அதை ரொக்கமாகவோ அல்லது பெயர் தாங்கிய காசோலை மூலமாகவோ நீங்கள் வழங்க முடியாது.
அதனை அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தக்கூடிய காசோலையாகவோ, வரைவோலையாகவோ அல்லது மின்னணு பரிவர்த்தனை மூலமாகவோ மட்டுமே வழங்க வேண்டும்.
கொடுத்த கடனை தொகையை திரும்ப பெறுகின்ற போதும் இந்த முறையை கண்டிப்பாக நீங்கள் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால், அது சட்டவிரோத செயலாகிவிடும்.
வாடகை மற்றும் கட்டணங்கள்
வீடுகளுக்கோ, கடைகளுக்கோ மற்றும் திருமண மண்டபங்களுக்கோ நீங்கள் வாடகை செலுத்துவதாக இருந்தாலும் மேற்கண்ட முறையை பின்பற்ற வேண்டும். கல்வி கட்டணங்கள் செலுத்துவதற்கும் இந்த விதிமுறை உண்டு.
அபராதம் உண்டு:
மேற்கண்ட விதிமுறையை நீங்கள் மீறியது தெரியவந்தால், உங்களுக்கு வருமான வரித்துறையால் அபராதம் விதிக்கப்படும்.
இதற்கென்று வரி விதிப்பும் உண்டு
கடன் வழங்குவதற்கென்று வரி ஏதும் கிடையாது. ஆனால், கொடுத்த கடனுக்கு நீங்கள் பெறுகின்ற வட்டிக்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும். ஒருவரது இதர வருமானம் என்ற பிரிவின்கீழ் இது வரும்.
பதிவு செய்யப்படாத ஒப்பந்தங்கள்
சிலர் சொத்து வாங்கும்போது, கொடுக்கின்ற முன்பணத்தை 20 ரூபாய் பத்திரம் வாங்கி அதில் அதனை எழுதியோ, டை அடித்தோ வைத்துக் கொள்கிறார்கள். இது சட்டப்படி செல்லாது. உங்களிடம் பணம் வாங்கியவர் மிகவும் நம்பிக்கையானவராக இருக்கலாம். எதிர்பாராவிதமாக அவர் இறந்துவிட்டால் நீங்கள் கொடுத்த தொகையை திரும்பப்பெறுவது கேள்விக்குறி ஆகிவிடும்.
ஒப்பந்த பத்திரங்கள் சட்டம்
ஒப்பந்த பத்திரங்கள் சட்டம் பிரிவு 17ன்படி, 5,000 ரூபாய்க்கு மேல் உள்ள சொத்தினை வாங்கும்போதோ அல்லது கொடுக்கும்போதோ போடப்படுகின்ற ஒப்பந்தங்களை கண்டிப்பாக பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
எச்சரிக்கையுடன் இருங்கள்!
மேற்கண்ட முறைகளை பயன்படுத்தாமல் கொடுக்கல், வாங்கல் செய்பவர்களுக்கு சட்டச்சிக்கல் வரும் என்பது நிச்சயம். எனவே எச்சரிக்கையாக செயல்படுங்கள்.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 09.11.2020