disalbe Right click

Saturday, March 28, 2020

பிரச்சனைகளுக்குள்ளேயே தீர்வு இருக்கும்!

பிரச்சனைகளுக்குள்ளேயே தீர்வு இருக்கும்!
ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்படுவதற்கு சில நாட்கள் முன்னாலேயே கொரோனா ஊடகங்களில் பிரதான செய்தியானது. ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதில் இருந்து வேறு ஏதும் செய்திகள் இடம் பெறாமல் ஊடகங்கள் முழுவதையும் அது ஆக்கிரமித்துக் கொண்டது. நானும்கூட அதைப்பற்றிய செய்திகளையே அதிகம் பரிமாறிக் கொண்டேன். போரடித்துவிட்டது. நடப்பது நடக்கட்டும். ரூட்ட மாத்துவோம்னு இத எழுத ஆரம்பித்துள்ளேன். இதை ஒரு தொடராக எழுத வேண்டும் என்ற எண்ணமும் எனக்குள் உள்ளது. ஏன்னா, எனக்கும் வேற வழியில்லை.  எப்படியோ பொழுத போக்கணும். நீங்களும் படிச்சிதான் ஆகணும்; உங்களுக்கும் வேற வழியில்லை. 
எனது இளமைக் காலம்
எனது திருமணம் முடிந்திருந்த நேரம். நான் அப்போது ஒரு (ஐ.டி.ஐ) டர்னர். ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த வேலையில் சம்பளம் குறைவாக இருந்த காரணத்தால் வேறு வேலை தேடிக் கொண்டு இருந்தேன். எங்களது வீட்டுக்கருகிலேயே சுந்தரவேல் குச்சி பேக்டரி என்று ஒன்று இருந்தது. அங்கு வேலை கேட்கலாம் என்று போயிருந்தேன். உள்ளே அனுமதித்தார்கள். மானேஜரை பாருங்கள் என்று கூறி அவரை சந்திப்பதற்கு  வழியும் காட்டினார்கள்.
நான் படித்த வேலை அங்கு இல்லை
அந்த நிறுவனத்திற்கு 20க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் விருதுநகர் மாவட்டத்தில் இருந்தது. அத்தனை தீப்பெட்டி தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்களை அந்த மேனேஜர்தான் நிர்வகித்துக் கொண்டிருந்தார். அவரது பெயர் திரு காந்தி முருகேசன்.  என்னைப் பார்த்து விசாரித்து விபரம் அறிந்து கொண்டு, இங்க லேத் இல்லையேப்பா! என்றார். லேத் என்பது டர்னர்கள் வேலை பார்க்கும் இயந்திரம். பிறகு அவரே பிட்டர் வேலைதான் இருக்கு; பாக்குறீயா? என்றார். 
பிட்டர்ன்னா, என்ன வேலை பார்க்க வேண்டும்? என்றேன். 
அது வேற ஒண்ணுமில்லப்பா, தீப்பெட்டிக்குத் தேவையான மருந்து அரைக்கிற கிரைண்டிங் மெஷின்கள் நம்மளோட ஒவ்வொரு தீப்பெட்டி ஆபிஸிலும் இருக்கு. நீ ஒவ்வொரு ஆபிஸிற்கும் சென்று அதை மேற்பார்வை பார்க்கணும். சரி செய்ய முடிஞ்சா, அங்கேயே வச்சி சரி செஞ்சி கொடுக்கணும். அதிக பட்சம் புஸ் மாத்த வேண்டியதிருக்கும். அதுக்கும் மேல போச்சுதின்னா மெஷின மாத்தி கொடுக்க வேண்டியதிருக்கும். நம்மகிட்ட ஒரு நாலஞ்சி மெஷினு எப்பவுமே ஸ்பேரா இருக்கும். அதில ஒண்ண அங்க அனுப்பிட்டு, அங்க உள்ள மெஷின (தனியார்) ஒர்க்‌ஷாப்புக்கு அனுப்பி வைக்கணும். அப்புறம்  அங்க இருக்கிற ஆயில் எஞ்சினயும் பாத்துக்கிடணும் என்றார்.
மேனேஜர் கொடுத்த தைரியம்
எனக்கு மலைப்பாக இருந்தது. ஏன்னா, நான் ஆயில் எஞ்சின தூரத்தில பாத்ததோட சரி. அதப்பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாது. கிரைண்டிங் மெஷினக் கூட சமாளிச்சிரலாம்; ஆயில் எஞ்சின எப்படி சமாளிக்கிறது? என்று யோசித்தேன்.
அவர் என்னப்பா இப்படி யோசிக்கிற? என்றார்.
இல்ல அண்ணாச்சி எனக்கு ஆயில் எஞ்சினப் பத்தி ஒண்ணுமே தெரியாது! அதனாலதான் யோசிக்கிறேன்ன்னு  அவரிடம் உண்மையைக் கூறினேன். 
அதனால என்ன?  பரவாயில்லப்பா. உனக்கு தெரிஞ்ச வரைக்கும் பாரு. முடியலின்னா வெளிய இருந்து மெக்கானிக்க வரச்சொல்லிருன்னு சொல்லிட்டு அவர் வெளியே கிளம்பிட்டாரு. 
அங்கு இருந்த அவருடைய அஜிஸ்டெண்டு ஒரு முன்னாள் ஆசிரியர்.  அவரை எல்லோரும் வாத்தியார் என்றே அழைத்தனர். அவர் என்னிடத்தில் வந்து அந்தா இருக்கு டூல்ஸ் பை. எடுத்துக்கிட்டு முதல்ல பக்கத்தில இருக்குற தீப்பெட்டி ஆபிஸுக்கு போங்க. நான் போன் பண்ணி தகவல் சொல்லிடுறேன் என்றார். தயங்கிக் கொண்டே அதை எடுத்துக் கொண்டு அங்கே சென்றேன். 
அதிர்ச்சி அளித்த போர்மேன்
அந்த தொழிற்சாலை மிகவும் அருகிலேயே இருந்தது. அதனால் அங்கு எனது சைக்கிளிலேயே சென்றேன். அங்கு சென்று போர்மேனிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஓ, நீங்கதான் புது பிட்டரா? வாங்க, வாங்க. இங்க, ஆயில் எஞ்ஜின் ரெண்டு நாளா ஓடல; கொஞ்சம் என்னான்னு பாருங்க! என்று சொல்லிவிட்டு அவரது வேலையை பார்க்க போய்விட்டார். எனக்கு தூக்கிவாறி போட்டது. ஆயில் எஞ்ஜினை அப்போதுதான் முதன் முதலாக அருகில் சென்று பார்த்தேன். 
Diesel Engines - Diesel Engines - Lister Type Diesel Engine ...

சமாளித்தேன்
அதனை எப்படி இயக்க வேண்டும் என்பதும் எனக்குத் தெரியாது. அதனால் மீண்டும் போர்மேனை அழைத்தேன்.  அண்ணே, என்ன பிரச்சனை? என்றேன். ஸ்டார்ட் செய்வதற்கு சுழற்றியை போட்டு சுழற்றும்போது ஸ்டார்ட் ஆகும் நேரத்தில் ப்ளைவீல் சுழற்றியுடன் ரிவர்ஸில்  சுத்துகிறது.  ஸ்டார்ட் ஆகமாட்டேன் என்கிறது. எத்தனை தடவை சுழற்றினாலும் இதுபோல்தான் இருக்கிறது என்றார்.  என்முன்னே ஒரு முறை சுற்றுங்கள் என்றேன்.  ஒரு வேலையாளை அழைத்து சுழற்றச் சொன்னார். அந்த வேலையாள் அதனை சுழற்றியை வைத்து சுத்தினார். அவர் சொன்னது போலவே ஒரு வீல் மட்டும் ரிவர்ஸில் சுத்தியது. 
சரி நீங்கள் போங்கள், நான் என்னவென்று பார்க்கிறேன் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தேன். முடியவில்லை என்று முதலிலேயே சொல்லிவிடுவோமா? என்று எண்ணினேன். மேனேஜர் கூறியது (ஒனக்கு தெரிஞ்ச வரைக்கும் பாரு. முடியலின்னா வெளிய இருந்து மெக்கானிக்க வரச்சொல்லிரு) எனது நினைவுக்கு வந்தது. சரி முயற்சி செஞ்சிதான் பாப்போமே என்று அந்த எஞ்ஜினை சுத்தி சுத்தி வந்தேன்.
முயற்சி திருவினை ஆனது
அந்த எஞ்ஜின் அருகிலேயே ஒரு காட்டர் பின் கிடந்தது. அது அந்த எஞ்ஜினுக்கு உரியதா? என்பதை சோதித்தேன். அந்த எஞ்ஜினுக்கு உரியதுதான். ரிவர்ஸில் சுத்திய வீலுக்கு உரியது. பிரச்சனைக்கு காரணம் இதுவாகத்தன் இருக்குமோ என்று நினைத்தேன். அதை எடுத்து அந்த வீலில் மாட்டினேன்.  சரி இப்போது ஓட்டி பார்ப்போம்; என்ன ஆகிறது என்று எண்ணி போர்மேனை மறுபடியும் அழைத்து, அந்த எஞ்ஜினை மீண்டும் இயக்கச் சொன்னேன். அவர் வேறு ஆளை அழைக்காமல் அவரே அதனை இயக்கினார்.
நீங்கதான்யா மெக்கானிக்
என்ன ஒரு ஆச்சர்யம்?  எஞ்ஜின் இயங்க ஆரம்பித்துவிட்டது. போர்மெனுக்கு ரொம்ப சந்தோஷம். மகிழ்ச்சியில் என்னிடம் கை கொடுத்தார். வந்து அரைமணி நேரத்தில் எஞ்ஜின ஓடவச்சிட்டீங்களே, மெக்கானிக்குனா நீங்கதான் மெக்கானிக் என்று பாராட்டினார்.  எனக்கும் சந்தோஷமாக இருந்தது. கம்பீரமானேன்.
இதைப் போல்தான் பிரச்சனைகளும்
நாம் நமது வாழ்க்கையில் சந்திக்கின்ற பிரச்சனைகளும் இதுபோல்தான். அதனை நாம் கையாளும் விதத்தில்தான் நமது வெற்றி அதில் அடங்கியுள்ளது. 
Cricket batsman clipart 4 » Clipart Station
கிரிக்கெட் விளையாட்டில் பவுலர் உங்களை அவுட் ஆக்க வேண்டும் என்றுதான் பந்து வீசுவார். நீங்கள் அந்தப் பந்தை உங்கள் கையில் உள்ள மட்டையின் மூலம் கையாளுவதன் மூலம் அதனை சிக்ஸ் ஆக மாற்ற முடியும். ஆகையால் பிரச்சனைகளை கண்டு பயம் கொள்ளாமல் அதனை ஆராய்ந்து லாவகமாக கையாண்டு வெற்றி பெறுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.
******************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 28.03.2020 

Saturday, March 21, 2020

பொது தகவல் அலுவலர் மீது ஓர் புகார் மனு

பொது தகவல் அலுவலர் மீது ஓர் புகார் மனு
மதுரையில் உள்ள சார்பதிவாளர், தனது கடமையை சரியாக செய்யவில்லை என்று அது  சம்பந்தப்பட்ட எனது நண்பர் ஒருவருக்கு கோபம். இதனை ஆர்.டி.ஐ. மூலமாக கேட்க வேண்டும். டைப் அடித்து தாருங்கள் என்று சென்ற மாதத்தில் ஓர் நாள் என்னிடம் வந்திருந்தார். நானும் டைப் செய்து கொடுத்தேன்.
பதிவுத்துறைத்தலைவர் சுற்றறிக்கை 
அதாவது, சொத்துக்களை சார்பதிவாளர் பதிவு செய்யும்போது, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று  சுற்றறிக்கை மூலமாக பதிவுத்துறைத்தலைவர் அறிவுறுத்தி உள்ளார். ஆனால், மதுரையில் உள்ள சார்பதிவாளர் ஒருவர் அதனை செய்யவில்லை. அது குறித்து சில தகவல்களை எனது நண்பர் தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 6(1)ன் கீழ் மதுரை பதிவுத்துறை துணைத்தலைவர் அவர்களிடம் கேட்டிருந்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 7(1) என்ன சொல்கிறது?
ஒரு மனுதாரர் உரிய முறையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்கும்போது, அதனை பெற்ற நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தகவல்களை அளிக்க வேண்டும்; அல்லது சட்டப்பிரிவு 8 மற்றும் 9-ல் குறிப்பிட்டுள்ளபடி தகவல்களை வழங்க மறுக்க வேண்டும் என்று உள்ளது.  
தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 7(3) என்ன சொல்கிறது?
மனுதாரர் கோருகின்ற தகவல்களை நகல் எடுத்து வழங்க வேண்டியது இருந்தால், அதற்குரிய  கட்டணத்தை தெரிவிக்க வேண்டும் என்று பிரிவு 7(3)ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது தகவல் அலுவலர் அளித்த தகவல்
பதிவுத்துறை இணையதளத்தை குறிப்பிட்டு நீங்கள் கேட்ட தகவல் அதில் இருக்கிறது.  அதனை ஓப்பன் செய்து டவுண்லோடு செய்து கொள்ளுங்கள் என்று  பொது தகவல் அலுவலர் தகவல் அளித்திருந்தார். 


இது சட்டப்படி தவறான தகவல் ஆகும். பிரிவு 7(3)ன்படி அவர் அதனை நகல் எடுத்து, அதற்குரிய கட்டணத்தை பெற்று  மனுதாரருக்கு  வழங்கி இருக்க வேண்டும். 
இவர்களை ஒன்றுமே செய்ய முடியாதா?
எனது நண்பருக்கு கோபம் வந்துவிட்டது. இப்படி பொறுப்பில்லாமல் பதில் அளிக்கிறார்களே,  இவர்களை ஒன்றுமே செய்ய முடியாதா? என்று என்னிடம் மிகவும் ஆதங்கப்பட்டார். என்னிடம் இருந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட புத்தகத்தை எடுத்து கொடுத்தேன். வாசித்து பார்த்தார். முகம் மலர்ச்சி அடைந்தார். எனக்கு தகவலே வேண்டாம். முதலில் புகார்மனு டைப் அடியுங்கள் என்றார். அடித்து கொடுத்தேன்.  
மன்னிக்கவும். இன்னும் அந்த கடிதம் அனுப்பப்படாததால் அதன் நகலை   பிரசுரிக்க இயலவில்லை. இரண்டு நாட்கள் பொறுங்கள்.
************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 21.03.2020. 

பதிவுத்துறை ஆவணங்களை ஆய்வு செய்ய முடியாது!

பதிவுத்துறை ஆவணங்களை ஆய்வு செய்ய முடியாது! 
எங்களது சங்கத்தில் நடக்கின்ற மோசடி
எங்களுடைய சங்க நிர்வாகத்தில் பல மோசடிகள் நடந்துள்ளது. சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்ற சங்க நிர்வாகிகளுக்கு சாதகமாக விருதுநகர் மாவட்டப்பதிவாளர் திரு து.குணசேகரன் அவர்கள் நல்லதொரு பாதுகாப்பை தொடர்ந்து வழங்கி வருகிறார். அவர்கள் என்ன தவறு செய்து இருந்தாலும், அதனை ஆதாரபூர்வமாக நான் நிரூபித்தாலும் தீர்ப்பு என்னமோ அவர்களுக்கு சாதகமாகத்தான் வழங்கப்படுகிறது. மாவட்டப் பதிவாளர் மட்டும்தான் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறார் என்று பார்த்தால் பதிவுத்துறையே அவர்களுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. 
மாவட்டப் பதிவாளர் திரு து.குணசேகரன் அவர்கள் செய்த பல மோசடிகள்
நான் சங்க நிர்வாகிகள் மீது ஆதாரத்துடன் புகார் அளிப்பேன். யாராவது ஆதாரங்களுடன் புகார் அளித்தால் விசாரணை நடத்த வேண்டும் அல்லவா?  உடனே எனக்கு விசாரணை அழைப்பு விடுக்கப்படும். நானும், ஆஹா, மாவட்டப் பதிவாளர் விசாரணைக்கு நம்மை அழைத்துவிட்டார்; இதோடு சங்க நிர்வாகிகளின் மோசமான நிர்வாகத்திற்கு ஒரு முடிவு ஏற்பட்டுவிடும்! என்று அந்த விசாரணைக்கு ஆர்வத்துடன் செல்வேன். விசாரணை நடக்கும். நான்  சங்க நிர்வாகிகளின் மீது ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுவேன். என்முன்னே அவர்களை மிரட்டுவது போல் மாவட்டப் பதிவாளர் பாசாங்கு செய்வார். அவர்கள் தலையை சொரிவார்கள். என்னை மட்டும் அனுப்பிவிட்டு அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பார்.
விசாரணையின் முடிவு அறிவிக்க மாட்டார்கள்
நடந்து முடிந்த விசாரணையின் முடிவை மாவட்ட பதிவகத்தில் இருந்து புகார்தாரரான எனக்கு வழங்கவே மாட்டார்கள். ஆனால், வழங்கியது போல ஒரு ஏற்பாட்டை செய்து கொள்வார்கள். இது சமீபத்தில்தான் எனக்கு தெரிய வந்தது. அதுபற்றிய ஆதாரமும் எனக்கு எதேச்சையாக கிடைத்தது. இதுபற்றிய செய்தியை 17.03.2020 அன்று ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். கீழ்க்கண்ட லின்க்கை கிளிக் செய்து அதனை அறிந்து கொள்ளலாம். 
ஆவணங்களை ஆய்வு செய்தால் என்ன?
சங்க நிர்வாகிகளும், பதிவுத்துறையும் சேர்ந்து செய்கின்ற அத்தனை மோசடிகளையும் கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கு என்ன செய்யலாம்? என்று யோசித்தபோது, சங்க நிர்வாகிகள் பதிவுத்துறையில் சமர்ப்பித்துள்ள ஆவணங்களை ஆய்வு செய்தால் என்ன? என்று ஒரு யோசணை தோன்றியது. தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 2 (ஜே) ன் கீழ், விருதுநகர் மாவட்டப்பதிவாளர் திரு து.குணசேகரன் அவர்களுக்கு, கடந்த 2001ம் ஆண்டு முதல் கடந்த 2019ம் ஆண்டு வரை எங்களது சங்க நிர்வாகிகள் தங்களிடம் சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும் தாங்கள் அவர்களுக்கு, மற்றவர்களுக்கு அனுப்பிய கடிதங்களை ஆய்வு செய்து கொள்லவும், குறிப்பெடுத்துக் கொள்ளவும் அனுமதிக்க வேண்டும் என்று   ஒரு கடிதத்தை கடந்த 31.08.2019 அன்று அனுப்பினேன். 
பதிவுத்துறையின் சட்டதிட்டங்கள் வேறு
தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 2 (ஜே) ன் கீழ் பதிவுத்துறையில் உள்ள சங்க ஆவணங்களை ஆய்வு செய்ய அனுமதிக்க முடியாது என்றும்,  பதிவுத்துறையின் சட்டதிட்டங்கள் மூலமாகவே அவற்றை ஆய்வு செய்ய முடியும் என்றும் மாவட்டப் பதிவாளர் எனக்கு 30.09.2019 அன்று கடிதம் அனுப்பினார்.
போராளிகளின் வேகத்தை தடுக்கின்ற ஸ்பீடு பிரேக்கர்
அதனால், மதுரை - பதிவுத்துறை துணைத் தலைவருக்கு எனது முதல் மேல்முறையீட்டை சமர்ப்பித்தேன். அங்கு பதிவுத்துறை துணைத் தலைவராகவும், பொது தகவல் அலுவலராகவும் வீ.வாசுகி என்று ஒரு அம்மையார் பணியாற்றி வருகிறார்கள். எனக்கு எந்த பதிலையுமே அனுப்பவில்லை. தகவல் ஆணையமானது முதல் முறையீடு செய்யாமல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீடு செய்தால் அந்த மனுக்களை தள்ளுபடி செய்கிறார்களே தவிர, முதல் மேல்முறையீடு செய்த மனுதாரர்களுக்கு எந்தவித பதிலையும் அளிக்காத முதல் மேல்முறையீட்டு அலுவலர் மீது நடவடிக்கை எடுப்பதே இல்லை. போராளிகளின் வேகத்தை தடுக்கின்ற ஸ்பீடு பிரேக்கராகவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் முதல் மேல்முறையீடு இருக்கிறது.
இரண்டாம் மேல்முறையீடு! 
”அழுதுகிட்டு இருந்தாலும் உழுதுகிட்டு இருன்னு!’ நம்ம ஊருகளில் ஒரு பழமொழி சொல்வார்கள்.  அது சட்டப்போராளிகளின் வாழ்க்கைக்கும் நன்றாக பொருந்தும். அதனால், எனது இரண்டாம் மேல்முறையீட்டை கடந்த 21.11.2019 அன்று தகவல் ஆணையத்திற்கு அனுப்பினேன்.
ஆணையம் போட்ட உத்தரவு
தகவல் ஆணையத்தில் இருந்து எனக்கு மேற்கண்ட ஆய்வு சம்பந்தமாக, விருதுநகர் மாவட்டப் பதிவாளர் அவர்களுக்கு அனுப்பிய உத்தரவு நகல் ஒன்றை எனக்கு 24.02.2020 அன்று அனுப்பி வைத்திருந்தார்கள். அதில் ஆய்வு செய்ய என்னை அனுமதிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் தண்டம் விதிக்க நேரிடும் என்றும் மாவட்டப்பதிவாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
அசராத மாவட்டப் பதிவாளர்
அதற்கு 04.03.2020 அன்று அனுமதி அளிக்க வழியில்லை என்று ஒரு கடிதம் மூலமாக தகவல் ஆணையத்திற்கும் சட்டம் சொல்லித் தந்திருந்தார். ஆணையம் 19.03.2020 அன்று நேரடி விசாரணைக்கு அவரை மட்டும் அழைத்தது. நானும் பல வழிகளில் விசாரணை செய்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதிவுத்துறையில் ஆய்வு செய்ய அனுமதிக்கலாம்!  என்பதை எனது 14.03.2020 கடிதத்தில் மீண்டும் தகவல் ஆணையத்தின் ஆணையாளருக்கு வலியிறுத்தி இருந்தேன்.
மாவட்டப் பதிவாளர் அனுப்பி,  எனக்கு பறந்து வந்த கடிதம்
19.03.2020 விசாரணையில் நேரடியாக ஆஜரான மாவட்டப் பதிவாளர் திரு து.குணசேகரன் அவர்கள்  எப்போது விருதுநகர் வந்தாரோ, எப்போது கடிதம் எழுதினாரோ, எப்போது அனுப்பினாரோ,  21.03.2020 அன்று எனக்கு அவர் அனுப்பிய கடிதம் கிடைத்தது. அதில் வருகின்ற 30.03.2020 அன்று விருதுநகர் மாவட்டப் பதிவகத்தில் ஆய்வு செய்ய எனக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதம் தங்களது பார்வைக்காக கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிந்தவுடன் இது சம்பந்தமான அடுத்த பதிவை என்னிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கலாம்.


************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 21.03.2020 

Wednesday, March 18, 2020

தீர்ப்புக்கு தேவை காலக் கெடு!

தீர்ப்புக்கு தேவை காலக் கெடு!
மன்னராட்சி காலத்தில், நாட்டை நிர்வகித்த மன்னர்கள், நீதி பரிபாலனத்தையும் மேற்கொண்டனர். அந்த மன்னர்களுக்கு சட்டத்தையும், நீதி பரிபாலனத்தையும் கற்றுக் கொடுத்தோர், குருகுல ஆசிரியர்கள் தான்.
அதை, மன்னர்கள் செவி வழியாக கேட்டு, கற்று, புரிந்து, மூளையில் பதிய வைத்துக் கொண்டனர்.
ஏடுகளில் எழுத்தாணி கொண்டு, பாடல்களைத் தான், பதிய வைத்தனரே தவிர, சட்டத்தை அல்ல!மன்னர்கள் அவ்வாறு வழங்கிய தீர்ப்புகளில், கண்ணகி வழக்கில், பாண்டியன் நெடுஞ்செழியன் கொடுத்த தீர்ப்பு ஒன்று தான், தவறான தீர்ப்பாக அமைந்துவிட்டது;
வேறு எந்த மன்னர் கொடுத்த தீர்ப்புகளும், தவறாக போகவில்லை.கோவலன் விஷயத்தில், நெடுஞ்செழியன் அளித்த தீர்ப்பில், 'கொண்டு வருக' என்று அவர் கூறியதை, 'கொன்று வருக' என, காவலர்கள் தவறாக புரிந்து, கோவலனைக் கொன்றதாகவும் கருத்து உண்டு.
தவறான தீர்ப்பை வழங்கியதற்காக, அம்மன்னன், 'யானோ மன்னன்... யானே கள்வன். கெடுக என் ஆயுள்' என்று சொல்லி, உயிரை விட்டதாக, 'சிலப்பதிகார' காப்பியம் கூறுகிறது.
ஆனால், இப்போதுள்ள நடைமுறையில், தவறான தீர்ப்பை வழங்கியதற்காக, எந்த நீதிபதியாவது வருத்தம் தெரிவித்திருக்கிறாரா?பதவியில் உள்ள நீதிபதிகளுக்கு, சட்டமும், சாட்சிகளும், ஆதாரங்களும் தான், ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்க தேவையாக உள்ளதே தவிர, எந்த நீதிபதியும், மனசாட்சியை துணைக்கு வைத்துக் கொள்வதில்லை.
மன்னராட்சியில், மன்னர்கள் வழங்கிய தீர்ப்புகளை விடுங்கள். மக்களாட்சியில், நீதிமன்றங்களை நாடாமல், கிராமப் புறங்களில், ஆலமரத்தின் கீழ் அமர்ந்து விசாரித்து வழங்கப்படும் பஞ்சாயத்து தீர்ப்புகளை பாருங்கள்.
அங்கு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புகளில், எதுவாவது, மேல் முறையீட்டுக்குச் சென்றதுண்டா; அங்கிருக்கும் பஞ்சாயத்தார், எந்த சட்டப் புத்தகங்களையும் படித்து, தீர்ப்பு வழங்கியதில்லை!
செஷன்ஸ் நீதிமன்றங்களில் இருந்து, உச்ச நீதிமன்றம் வரை, பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள், தீர்ப்புக்காக காத்திருக்கின்றன.
இவற்றை எப்போது விசாரித்து, எப்போது தீர்ப்பு வழங்குவர்; நீதிமன்றங்களுக்கும் தெரியாது; அரசுக்கும் தெரியாது; ஆண்டவனுக்கே வெளிச்சம்!
ஆண்டவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும், அந்த ஆண்டவனே, ஓர் ஆயுட்காலத்தை நிர்ணயித்து வைத்திருக்கிறான்.
ஆனால், நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகள் எப்போது விசாரிக்கப்படும்; எப்போது தீர்ப்பு வழங்கப்படும்; எப்போது தண்டனை கிடைக்கும் என்பதற்கு, காலக்கெடு இல்லை.
சில சமயங்களில் விசாரணை விரைவாக நடத்தி முடிக்கப்படும். ஆனால், தீர்ப்பு வழங்குவர் என்று சொல்ல முடியாது. ஒரு மாதமும் ஆகலாம்; ஒன்பது மாதமும் ஆகலாம்.
சில வழக்குகள், ஐம்பது ஆண்டுகளாகியும் கூட, முடியாமல், நீடித்துக் கொண்டு இருக்கின்றன. விசாரணையை முடித்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைப்பதை, நீதிமன்றங்கள் வாடிக்கையாகவே வைத்திருக்கின்றன.
இப்படி செய்வதால், தண்டனை பெறும் குற்றவாளிகள் கூட, தண்டனையை அனுபவிக்காமல், தப்பி விடும் அவலமும் நடக்கிறது.
'நாம் கால தாமதம் செய்ததால் தானே, இந்த வழக்கில் தண்டிக்கப் பட்டிருக்க வேண்டிய குற்றவாளி, தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள நேர்ந்தது... இனியாவது, விசாரணை முடிந்தவுடன், தீர்ப்பை அறிவித்து விடுவோம்' என்ற முடிவுக்கு, எந்த நீதிபதியும் வருவதில்லை.
இந்த விஷயத்தில், மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றங்களை பாராட்டியே ஆக வேண்டும். பெட்டி கேஸ், அடிதடி வழக்குகள், போக்குவரத்து விதி மீறல்கள் போன்ற, சாதாரண குற்றங்கள் விரைந்து முடிகின்றன.
காவல் துறை வழக்கு பதிந்து, மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் வழக்குகள், சில சமயங்களில், ஓரிரு நாட்களில், முடித்து வைக்கப்படுகின்றன.
திருட்டு, கொள்ளை, கொலை, ஊழல் வழக்குகளை, இது போல முடிக்க முடியாது தான். ஆனால், ஒரு வழக்கை, இத்தனை காலத்திற்குள் முடிக்க வேண்டுமென்ற காலக் கெடு நிர்ணயிப்பது அவசியம் தானே!
ஆனால், அரசும் நிர்ணயிக்கவில்லை; சட்டமும் குறிப்பிடவில்லை. அதனால், நீதிபதிகளும், அது குறித்து கவலை கொள்வதில்லை; கோளாறே, இங்கு தான் துவங்குகிறது.
ஏராளமான சட்ட புத்தகங்களைப் படித்த வழக்கறிஞர், தன் கட்சிக்காரருக்காக வாதாடுகிறார்.
அதுபோலவே, ஏராளமான சட்ட புத்தகங்களை கரைத்துக் குடித்தவர், நீதிபதியாக அமர்ந்திருக்கிறார்; தீர்ப்பு வழங்குகிறார்.
எனினும், எந்த நீதிபதியாலும், வாதி, பிரதிவாதி இருவரும், ஏற்றுக் கொள்ளும்படியான தீர்ப்பை வழங்க முடியாது.
அத்தனை பேருக்கும், நல்லவனாக ஆண்டவன் கூட இருப்பானா என்பது சந்தேகமே.
கீழ் கோர்ட்டில் யாருக்கு எதிராக தீர்ப்பு அமைந்துள்ளதோ அவர், அடுத்த கட்ட நடவடிக்கையாக, உயர் நீதிமன்றத்தை அணுகுவார்.
உயர் நீதிமன்றத்திலும், மீண்டும் முதலிலிருந்து வழக்கு விசாரிக்கப்படும்.அங்கு, விசாரித்து முடித்தவுடன், அங்கிருக்கும் நீதிபதி, கீழ் கோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தாலும் செய்யலாம்; ரத்து செய்தாலும் செய்யலாம்.
அப்படி ரத்து செய்தால், கீழ் கோர்ட்டில் விசாரித்துக் கொடுத்த தீர்ப்புக்கு என்ன மரியாதை; அந்த நீதிபதி ஆராயாமல் தீர்ப்பு வழங்கினாரா என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
ஆனால், நீதிபதிகளோ, வழக்கறிஞர்களோ வாய் திறப்பதில்லை! விஷயம் இத்தோடு முடிவதில்லை. உயர் நீதிமன்றதீர்ப்பால், பாதிக்கப்பட்டவர், உச்ச நீதிமன்றத்தை நாடுவார்.
அங்கு மீண்டும் வழக்கு, முதலில் இருந்தே துவங்கும். அங்குள்ள நீதிபதியும், மெத்த படித்தவர் தான்.
அவர், அந்த உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தாலும் செய்யலாம்; ரத்து செய்தாலும் செய்யலாம். இரண்டும் அல்லாது, வேறு வகையான தீர்ப்பை வழங்கினாலும் வழங்கலாம்.
கால மாற்றத்திற்கேற்ப, சில திருத்தங்களை, நடைமுறைக்கு கொண்டு வந்தால் மட்டுமே, நீதிமன்றங்கள் சுறுசுறுப்பாக இயங்கும்;
வழக்குகளும் தேங்காது; நீதியும், தாமதமின்றி கிடைக்கும்.* தற்போது ஒரு, 'ஷிப்ட்' மட்டும் இயங்கும் நீதிமன்றங்கள், இரண்டு ஷிப்டுகளாக இயங்க வேண்டும்
·        அரசியல் கட்சிகளின் வழக்குகள் எதையும், நீதிமன்றங்கள் ஏற்கக் கூடாது.
·  அவை, அந்தந்த மாநில காவல் துறை உயரதிகாரிகளால் விசாரித்து, தீர்ப்பு வழங்க வேண்டும்
·  தொடுக்கப்படும் வழக்குகள் அத்தனைக்கும், தடை, தற்காலிகத் தடை மற்றும் நிரந்தரத் தடை விதிக்கும் போக்கை, நீதிமன்றங்கள் கைவிட வேண்டும்.

இந்த மூன்று வகையான தடைகளே, பல லட்சம் வழக்குகள் முடிக்கப்படாமல், இழுபறியில் இருக்க முக்கிய காரணங்களாகும்.
·        ஒவ்வொரு வாய்தாவிலும், ஒவ்வொரு மனுவாக போட்டு, வழக்கை நீட்டித்துக் கொண்டிருக்கும் போக்குக்கு, 'செக்' வைக்க, வாய்தாக்களுக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும்
·        தேர்தல் தொடர்பாக தொடுக்கப்படும் வழக்குகளை, ஆறு மாதங்களுக்குள் முடித்து விட வேண்டும். வழக்குகள் முடியும் வரை, மேற்படி நபர், சட்டசபை அல்லது பார்லிமென்டில் நுழையவே கூடாது. அவருக்கு, அரசு சார்பில் வழங்கப்படும் எவ்வித சலுகைகளும், சம்பளமும் வழங்கக் கூடாது.
·        சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள், ஒவ்வொன்றுக்கும் காலக் கெடு நிர்ணயிக்க வேண்டும்.
·   சிவில் வழக்குகளுக்கும், ஊழல் வழக்குகளுக்கும், அதிகபட்சம் ஓர் ஆண்டு, கிரிமினல் வழக்குகளுக்கு, ஆறு மாதம் என, காலக்கெடு நிர்ணயிக்கலாம்
·    வழக்கு விசாரணை முடிந்தவுடன், தீர்ப்பை வழங்க வேண்டும். விசாரணையை முடித்து, தீர்ப்பை ஒத்தி வைக்கும் நடைமுறையை, நீதிமன்றங்கள் கைவிட வேண்டும்
·    தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் மட்டுமே, வழக்குகளை மேல் முறையீட்டுக்கு அனுமதிக்க வேண்டும்.
·    எல்லா வழக்குகளுக்கும் மேல் முறையீடு செய்ய அனுமதி அளித்துக்கொண்டிருக்க கூடாது. மாநிலங்களுக்கு இடையே நிகழும் வழக்குகளுக்கும், இது பொருந்தும்.
·        ஜாமின் மற்றும் முன் ஜாமின் முறைகள், முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும்.
·    குற்றம் சாட்டப்பட்டவர், விசாரணை முடிந்து, தீர்ப்பு வழங்கப்படும் வரை, சிறையில் தான் இருந்தாக வேண்டும்.
இதுபோல, நிறைய நடைமுறைகள் திருத்தப்பட வேண்டும்.
·    இவற்றை நடைமுறைக்குக் கொண்டு வந்தாலே, நீதியும் தாமதிக்காது; நீதிமன்றங்களும் சுமுகமாக இயங்கும்; நீதிபதிகளும், 'ரிலாக்ஸ்டாக' வழக்கை விசாரித்து, தீர்ப்பு வழங்க முடியும்.
·        ஜனாதிபதி, பிரதமர், மத்திய -மாநில அமைச்சர்கள், சட்டசபை, பார்லிமென்ட், பஞ்சாயத்து உறுப்பினர்கள், நீதிபதிகள் போன்ற அனைவருக்குமே, பதவிக்கான காலக் கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
·   ஆனால், நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் வழக்குகளுக்கு மட்டும், விசாரித்து தீர்ப்பு வழங்க, காலக் கெடு கிடையாது.
·      அந்தக் காலக் கெடு இல்லாததால், நாடும், நாட்டு மக்களும் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம்.
·        அந்த பிரச்னைகளுக்கு முடிவும், விடிவும் ஏற்பட வேண்டும்!
கட்டுரையாளர் : ஆர் .ஜெயகுமாரி, சமூக ஆர்வலர்,
-மெயில்: jeyakumarir55@gmail.com
நன்றி : தினமலர் நாளிதழ் - 18.01.202