disalbe Right click

Showing posts with label சங்கங்கள். Show all posts
Showing posts with label சங்கங்கள். Show all posts

Monday, July 10, 2017

சங்கங்களை பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்?

சங்கங்களை பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்?
சில காரியங்களை தனி ஒரு நபரால் செய்ய முடியாது. அதனைச் செய்வதற்கு பல நபர்கள் தேவைப்படும். அந்த நபர்களை சட்டபூர்வமாக ஒன்றிணைக்க சங்கம் ஏற்படுத்துவது அவசியம்.
ஒரு சங்கத்தை அமைப்பதற்கு அதிக நபர்கள் தேவையில்லை. குறைந்தபட்சம் 7 நபர்கள் இருந்தால் போதும். ஆனால், அவர்களுக்கு வயது 18 ஆகியிருக்க வேண்டும்.
சங்கம் அமைத்தால் மட்டும் போதாது. அதனை தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975 மற்றும் விதிகள் 1978ன்படி மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அது சட்டப்படியான அங்கீகாரத்தைப் பெறுகின்றது.
எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை 20தாண்டிவிட்டாலோ, அதனுடைய ஆண்டு வருமானம் அல்லது செலவு ரூ.10,000/-த்தை தாண்டிவிட்டாலோ மூன்று மாத காலத்திற்குள் சட்டப்படி கண்டிப்பாக அதனை ஒரு சங்கமாக பதிவு செய்ய வேண்டும்.
சங்கத்திற்கு பெயர் வைத்தல்
ஒரு சங்கம் ஏற்படுத்த முதலில் அதற்கு ஒரு நல்ல பெயரை சூட்டுவது மிக அவசியம். ஆனால், சங்கத்தின் பெயர் இந்திய இறையாண்மைக்கு மற்றும் இந்திய சட்ட திட்டங்களுக்கு எதிராக இருக்கக்கூடாது. மேலும் வன்முறையைத் தூண்டுவதாகவோ, அறுவறுப்பானதாகவோ மற்றும் ஆபாசமாகவோ இருக்கக் கூடாது. ஏற்கனவே செயல்பட்டு வருகின்ற ஒரு சங்கத்தின் பெயரை மற்றோரு சங்கத்திற்கு சூட்டுவதும் கூடாது.  இதுபற்றி சங்கத்தை பதிவு செய்ய மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் நீங்கள் விண்ணப்பிக்கும் போது அவர் உங்களுக்கு வழி காட்டுவார். 
பெயர் மாற்றம்
ஏற்கனவே ஒரு பெயரில் செயல்பட்டு வருகின்ற சங்கம் மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் ஒப்புதல் பெற்று தன்னுடைய பெயரை பொதுக்குழு கூட்டத்தில் இயற்றப்படுகின்ற சிறப்புத் தீர்மானம் மூலம் பொதுக்குழு கூட்டம் நடந்த தினத்தில் இருந்து 90 நாட்களுக்குள் மாற்றிக் கொள்ளலாம்.
பெயர் பலகை
அலுவலகம் ஒன்றை ஏற்படுத்தி, சங்கத்தின் பெயர் மற்றும் முகவரி தெளிவாக தெரியுமாறு தமிழில் எழுதி, முகப்பில் விளம்பர பெயர் பலகை மாட்ட வேண்டும். ஒருவேளை சங்கத்தின் பெயர் வேறு மொழியில் இருந்தால் அதன் உச்சரிப்பை தமிழில் எழுதி கண்டிப்பாக போர்டு வைக்க வேண்டும்.
சங்க நிர்வாகக் குழு
சங்கத்தை நிர்வகிக்க குறைந்தபட்சம் 3 உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதிகபட்சமாக எத்தனை நபர்கள் வேண்டுமானாலும் நியமித்துக் கொள்ளலாம். சங்க துணை விதிகள் (By Laws) ஏற்படுத்தப் பட்டிருந்தால், அதில் குறிப்பிட்ட அளவின்படிதான் நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும்.
இந்த நிர்வாகக்குழு உறுப்பினர்களை பொதுக்குழுக்கூட்டம் மூலம் சங்கத்தின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இவர்களது பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு மேல் கண்டிப்பாக இருக்கக்கூடாது. அதே நேரத்தில், சங்க உறுப்பினர்கள் மறுபடியும் சங்க நிர்வாகிகளாக இவர்களையே மீண்டும் தேர்ந்தெடுக்க எந்தவித தடையும் இல்லை.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பெயர் பட்டியலை FORM-VII மூலமாக மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் சமர்ப்பித்து அவரது சான்றொப்பம் பெற வேண்டும்.
பொதுக்குழுக் கூட்டம்
ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுக் கூட்டம் கண்டிப்பாக கூட்டப்பட வேண்டும். சட்டப்படி கூட்டம் நடைபெறும் நாளுக்கு 21 நாட்கள் முன்னதாக உறுப்பினர்களுக்கு கூட்டம் பற்றிய அறிவிப்பானது அறிவிக்கப்பட வேண்டும். அந்த அறிவிப்பில் நாள், இடம், கூட்டத்தின் குறிக்கோள் ஆகியவற்றை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
அந்தக் கூட்டத்தில் சங்கத்தின் ஆண்டு வரவு செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு (நகல்கள்) உறுப்பினர்களுக்கு வழங்கி அவர்களின் ஒப்புதல் பெற வேண்டும். மற்றும் அதில் இயற்றப்படும் தீர்மானங்கள் நிர்ணயம் செய்யப்பட்ட உறுப்பினர்களால் (Quorum) ஏற்றுக் கொள்ளப்பட்டு கூட்ட நடவடிக்கை குறிப்பேடு என்ற Minutes Bookல் கையெழுத்திடப்பட வேண்டும். இதனையும் மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் சமர்ப்பித்து அவரது சான்றொப்பம் பெற வேண்டும்.
உறுப்பினர்கள் மாற்றம்
உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்கம் சம்பந்தமான விபரங்களை FORM-VI மூலமாக விண்ணப்பித்து மாவட்டப் பதிவாளர் அவர்களின் சான்றொப்பம் பெற வேண்டும்.
சங்க துணை விதிகள்
சங்கத்திற்கென்று சட்டதிட்டங்களை ஏற்படுத்தி பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதனை தீர்மானமாக நிறைவேற்றி மாவட்டப் பதிவாளரின் ஒப்புதலோடு  சங்கத்தை நிர்வகிக்கலாம்.
மாவட்டப் பதிவாளர்
சங்க நிர்வாகிகளால் சமர்ப்பிக்கப்படுகின்ற ஆவணங்களை மாவட்டப் பதிவாளர் அவர்கள் (தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்ட விதிகள் 1978 - விதி எண்: 50ன்படி) ஆய்வு செய்தே ஏற்றுக் கொள்ள வேண்டும்.  
கலைப்பு
சட்டவிரோதமாக ஒரு சங்கம் செயல்படுவதாக தெரியவந்தால், உரிய விசாரணைக்குப் பிறகு அதனை கலைக்க மாவட்டப் பதிவாளர் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி


Saturday, September 3, 2016

பதிவு செய்யப்பட்ட சங்கங்கள்


பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் - என்ன செய்ய வேண்டும்?

சங்கங்களை உருவாக்குவது என்பது அனைவருக்கு பிடித்தமான விஷயமாக மாறிவருகின்றது. 

சங்கங்களை உடனடியாக பதிவு செய்து பதிவு எண் பெறுவதில் காட்டும் முனைப்பு பின்னர் சங்கத்ததை சட்டப்படி உயிர் கொடுத்து வருவதில் காண்பிப்பதில்லை. இன்று மாவட்ட சங்க பதிவாளரிடம் பதியப்பட்டிருக்கும் சங்கங்களில் 10 சதவித சங்கங்களுக்குகூட சட்டப்படியான உயிர் இல்லை என்பதுதான் உண்மை.  

ஏன் இந்த நிலைமை?

சங்ககத்தை உருவாக்கி பதிவு பண்ணினால் மட்டும் போதாது. சங்க தனிநிலை சட்ட விதிகளின் படி, நிர்வாகக்குழு கூட்டங்களை கூட்டி, அந்த நிர்வாகக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் அனைத்தையும் (உறுப்பினர் எவரும் சேர்க்காத தீர்மானம்) அந்த தீர்மான தேதியில் இருந்து 6 மாதத்திற்குள் சங்க பதிவாளரிடம் படிவம் 7-உடன் சேர்த்து தாக்கல் செய்யவேண்டும்.

ஏதாகிலும் உறுப்பினர்கள் சேர்ந்தாலும், நீக்கம் செய்யப்பட்டாலும் அல்லது அவர்கள் மறைந்தாலும், மற்றும் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அது சார்ந்த தீர்மான் நகலுடன், படிவும் 7-யுடன் சேர்த்து 3 மாதத்திற்குள் பதிவு செய்யப்படவேண்டும்.

சங்க வருமானம் ரூ.10 ஆயிரத்திற்கு மிகும்போது, தணிக்கையாளரை கொண்டு சங்க விதிகளின் படி தணிக்கை செய்து, ஆண்டு பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 30ம்தேதிக்குள் கூட்டி அதற்கான அறிவிப்பை ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கு 21 நாட்களுக்கு முன்னர் உறுப்பினர்களுக்கு வழங்கி, அந்த கூட்டத்தில் அந்த தணிக்கையை ஏகமனதாக ஒப்புக்கொண்ட தீர்மானத்தையும் கீழ்கண்ட ஆவணங்களையும்31ம் தேதி மார்ச் மாதத்திற்குள் சமர்பிக்கவேண்டும். 

ஆண்டு பொதுக்குழு கூட்ட தீர்மானத்தில், ஒருவரை உறுப்பினராக சேர்த்தாலோ, நீக்கினாலோ, அல்லது நிர்வாகக்குழுவினர் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டாலோ, 31ம் தேதி டிசம்பருக்குள் அனைத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்.

1975ம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச்சட்டத்தின் பிரிவு 16 மற்றும் 1978 தமிழ்நாடு சங்கங்களின் பதிவு விதி 22ன் படி கீழ்கண்ட ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்.

1) 2015-2016 ஆம் ஆண்டின் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு மற்றும் இருப்புநிலை ஏடு அறிக்கை

2) 2015-2016 முடிந்த கணக்காண்டு இறுதிநாளில் சங்க உறுப்பினர்களாக இருந்தவர்கள் பட்டியல் - படிவம் 6

3) சங்கம் செயலாற்றி வருவதற்கான உறுதிமொழி

4) 2015-2016முடிந்த கணக்காண்டு இறுதிநாளில் சங்க நிர்வாகிகளின் பட்டியல்

5) 29.09.2016 அன்று நடந்த ஆண்டு பொதுக்குழு கூட்ட தீர்மான நகல்

6) உறுப்பினர்களை நீக்கியதற்கான விபரம் அடங்கிய படிவம் 7

இந்த நடைமுறையில் ஒரு முறை தவறினாலும், அதற்கு பிறகு தாக்கல் செய்யும் எந்த ஆவணங்களையும் கோப்பிற்கு எடுத்து கொள்ளமாட்டார்கள். 

அதை தனி பைலில் வைத்து வருவார்கள். பின்னர் நாம், சென்னையில் உள்ள பதிவாளர் ஜெனரல் (பதிவுத்துறைத் தலைவர்) அவர்களுக்கு  மனு செய்து, அவர்கள் வந்து நமது சங்க ஆவணங்களை ஆய்வு செய்து, அதன்பிறகே எடுத்து கொள்வார்கள்.

எப்போது தங்கள் ஆவணங்கள் கோர்வைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லையோ, அன்றே உங்கள் சங்கம் செயலிலந்த சங்கமாகிவிடுகின்றது. அதற்கு பிறகு அந்த சங்கத்திற்கு சட்டப்படியான பாதுகாப்பு இல்லை.

 உதாரணமாக, அந்த சங்கத்தின் சார்பில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்யவோ அல்லது ஒரு வழக்கில் எதிர்வாதியாக இருக்கவோ அந்த சங்கத்திற்கு தகுதியில்லை.

இன்று இப்படி செயலலிழந்த பல சங்கங்கள், பல வழக்குகளை தாக்கல் செய்யும் வேளையில், சங்க பதிவாளருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பி, பதில் பெற்று, அந்த சங்கம் செயல் இழந்து விட்டது என்ற ஆவணத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அந்த வழக்கை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்துவிட வைத்துவிடலாம்.

குறிப்பு: இந்தப் பதிவு முழுவதும் உள்ள சங்கதிகள் leenus.blogspot.in ல் இருந்து எடுக்கப்பட்டது ஆகும்.

நன்றி :
வழக்கறிஞரும், எனது இனிய நண்பருமான 
திரு லீனஸ் லியோ எட்வர்ட்ஸ் அவர்களுக்கு