disalbe Right click

Showing posts with label சொத்து. Show all posts
Showing posts with label சொத்து. Show all posts

Tuesday, May 18, 2021

பிழை திருத்தப் பத்திரம்

பிழை திருத்தப் பத்திரம்
சொத்து சம்பந்தமான பத்திரங்களில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஆவணங்களில் பிழை திருத்தப் பத்திரமும் ஒன்றாகும்.
ஆங்கிலத்தில் இதனை Amendment Deed என்றும் Rectification Deed என்றும் சொல்கிறார்கள்.
சொத்துக்களை வாங்குபவர்கள் அந்த சொத்து குறித்த பத்திரத்தை தாய்பத்திரத்துடன் ஒப்பிட்டு, வரிக்கு வரி மிகவும் கவனமாக ஆராய்ந்து பார்த்து வாங்க வேண்டும்.
எவற்றை சரிபார்க்க வேண்டும்?
  • பத்திரத்தின் முகப்பில் சொத்தின் மதிப்பு
  • சொத்தின் வழிகாட்டி மதிப்பிற்கு ஏற்றாற்போல் பத்திரம் வாங்கப்பட்டுள்ளதா?
  • நாள், மாதம் மற்றும் வருடம்
  • வாங்குபவர் மற்றும் விற்பவரது தந்தையார்/கணவர் பெயர்
  • ஆதார் அட்டை எண்/வேறு அடையாள அட்டை எண்
  • வாங்குபவர் மற்றும் விற்பவரது முகவரிகள்
  • தாய்பத்திரத்தில் உள்ள ஆவண எண், நாள், மாதம், வருடம் மற்றும் சார்பதிவகம் பெயர்
  • சொத்து இருக்கின்ற ஊரின் பெயர்
  • சொத்தின் பட்டா எண் மற்றும் சர்வே எண்கள்
  • சொத்தின் பரப்பளவு
  • சொத்தின் நான்குபுறமும் உள்ள அளவுகள்
  • சொத்தின் நான்குபுறமும் உள்ளவர்களின் பெயர்கள்
  • சொத்தின் மின் இணைப்பு எண்
  • சொத்தின் குழாய் இணைப்பு எண்
  • பவர் பத்திரம் மூலமாக அந்த சொத்தை வாங்கினால், அது சம்பந்தமான ஆவணங்கள்
பாத்து பாத்துத்தான் வாங்குனேன்;
இது மட்டும் எப்படியோ கண்ணுக்கு சிக்கல!
  • இப்படி பல பேர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். அது போன்ற நேரங்களில் என்ன செய்வது?
  • சிறிய தவறுகளான கதவு எண், மின் இணைப்பு எண், குழாய் இணைப்பு எண், சர்வே எண், பட்டா எண், சொத்தின் நான்கு புறமுள்ள அளவுகள், திசைகள், ஊர் பெயர் மற்றும் தனது பெயரில் உள்ள தவறுகளை சாதாரணமாக பிழை திருத்தல் பத்திரம் மூலமாக திருத்தி விடலாம்.. எந்த பிரச்சனையும் வராது. ஒரு 1000 ரூபாய்க்குள் முடிந்துவிடும்.
பிரச்சனையுள்ள திருத்தங்கள் என்ன?
  • சொத்தின் பரப்பளவை குறைத்து எழுதிவிட்டால், குறைத்து எழுதப்பட்ட பரப்பளவிற்காக மறுபடியும் பத்திரங்கள் வாங்க வேண்டும்.
  • சொத்தை விற்றவர் உயிருடன் இருந்தால் அவரையும் அழைத்து வந்து அந்த பத்திரங்களில் கையெழுத்து பெற வேண்டும்.
  • அவர் உயிருடன் இல்லை என்றால், அவரது வாரிசுகளை அழைத்து வந்து அந்த பத்திரங்களில் கையெழுத்து பெற வேண்டும்.
  • ஒரு வேளை அவருக்கு நேரடியான வாரிசுகள் இல்லை என்றால், அவரது இரண்டாம் நிலை வாரிசு, மூன்றாம் நிலை வாரிசு ஆகியவர்களை அழைத்து வந்து அந்த பத்திரங்களில் கையெழுத்து பெற வேண்டும்.
  • சொத்தை விற்றவர் உயிருடன் இருந்து கையெழுத்துப் போட வரமாட்டேன் என்றாலோ, அவர் இறந்த பின் அவருக்கென்று வாரிசுகள் (இரண்டாம் நிலை வாரிசு, மூன்றாம் நிலை வாரிசு உள்பட ) யாருமே இல்லை என்றாலோ நீதிமன்றம்தான் செல்ல வேண்டும். வேறு வழியில்லை.
  • இது போன்ற நிலையில் சொத்தை வாங்கியவருக்கு அது மிகுந்த மன உளைச்சலையும், செலவையும் அளிக்கும்.
ஆகவே சொத்துக்களை வாங்கும்போதே மிக கவனமுடன் வாங்குங்கள்.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 18.05.2021
 

Sunday, November 15, 2020

பூர்வீக சொத்து - பேரன், பேத்திகளுக்கு பங்கு!

பூர்வீக சொத்து - பேரன், பேத்திகளுக்கு பங்கு! 

எங்கள் ஊரில் இப்படி ஒரு பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கலாம்? சட்ட வல்லுநர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது என்று கடந்த 28.10..2020 அன்று முகநூலில் ஒரு பதிவு போட்டிருந்தேன்.
பல நண்பர்கள் அதற்கு பதில் அளித்திருந்தார்கள். பலர் சரியான பதிலை அளித்திருந்தார்கள். ஆனால், அவர்கள் இன்பாக்ஸில் அளித்திருந்த பதில்கள் மிக சுருக்கமாகவே இருந்தன. அவற்றை எத்தனை பேர் படித்திருப்பார்கள்? என்பது தெரியவில்லை. அதனால், மற்றவர்களும் இதைப்பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ள இந்தப் பதிவை வெளியிடுகிறேன்.
பூர்வீக சொத்து
முன்னோர்கள்களான நமது தாத்தா, பாட்டி மற்றும் அவர்களது பெற்றோர்கள் தேடி வைத்த சொத்துக்களை, பொதுவாக நாம் பூர்வீக சொத்துக்கள் என்று சொல்கிறோம்.
அது போன்ற சொத்துக்களை ஒருவரிடமிருந்து நாம் வாங்கும்போது பின்னாளில் அந்த சொத்தில் வில்லங்கங்கள் ஏதும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, பத்திரப்பதிவின்போது முன்னேற்பாடாக சில காரியங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
  • அந்த முன்னோர்களின் இறப்புச் சான்றிதழ்கள், அவர்களது வாரிசு சான்றிதழ்கள் ஆகியவற்றை பத்திரத்துடன் இணைக்க வேண்டும்.
  • ஒரு வேளை வாரிசுகள் யாராவது இறந்திருந்தால் அவர்களுடைய இறப்புச் சான்றிதழ் மற்றும் அவர்களது வாரிசு சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும்.
  • அந்த கிரையப் பத்திரத்தில் அந்த முன்னோரின் வாரிசுகள் அனைவரிடமும் கையெழுத்துக்களை பெற வேண்டும்.
  • அந்த சொத்தின் வாரிசுகள் மைனர்களாக இருந்தால், அவருக்குரிய பங்குத் தொகையை அவருடைய பெயரில் வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • ஏனென்றால் ஒரு மைனருடைய பங்கு சொத்து விற்பனை செய்யப்படும்போது அந்த மைனரின் பங்கு அவருக்கு முறையாக சேர்ப்பிக்கப்பட்டிருந்தால்தான் அந்த சொத்தை வாங்கும் நமக்கு பின்னாளில் பிரச்சனைகள் வராது.
  • இல்லையென்றால், அந்த மைனர் மேஜர் ஆன பிறகு, அதாவது தனது 18 வயதுக்குப் பிறகு தனது 21 வயதுக்குள் தங்களது பூர்வீக சொத்தை விற்பனை செய்தது செல்லாது என்று வழக்கு தொடுக்க முடியும். அதற்கு சாதகமாகவே சட்டமும் இருக்கிறது.
சுய சம்பாத்திய சொத்து
ஒரு ஆண், தான் சுயமாக சம்பாதித்த அசையா சொத்துக்கள் குறித்து ஏதும் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால் அந்த சொத்துக்களும் பூர்வீக சொத்துக்களுக்குரிய தன்மையை பெற்று விடுகின்றன.
  • உதாரணமாக தந்தை ஒருவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
  • தனது சொத்துக்கள் குறித்து ஏதும் எழுதி வைக்காமல் அவர் ஒரு நாள் திடீரென்று இறந்து விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
  • அவரது சுய சம்பாத்திய சொத்துக்களை அவரது வாரிசுகளான இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும், அவரது மனைவியும், அவரது தாய் உயிரோடு இருந்தால் அவரும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
  • அவர்கள் ஒவ்வொருவருக்கு அந்த சொத்துக்களில் ஆறில் ஒரு பங்கு கிடைக்கும்.
  • மேற்கண்ட அனைவரும் முதல்நிலை வாரிசுதாரர்கள் ஆவார்கள்.
வாரிசுகளின் வாரிசுகள்
  • அந்த இரண்டு மகன்களுக்கு திருமணமாகி வாரிசுகள் இருந்தாலோ, அந்த இரண்டு மகள்களுக்கு திருமணமாகி வாரிசுகள் இருந்தாலோ, அவர்களும் மேற்கண்ட சொத்துகளுக்கு மறைமுக வாரிசுதாரர்கள் ஆகிவிடுவார்கள்.
  • மேற்கண்ட வாரிசுகளின் பட்டியலில் மகனின் மனைவியோ, மகளின் கணவனோ இடம்பெற மாட்டார்கள்.
  • அந்த சொத்தை தனது தந்தையின் சொத்துதானே என்று தன்னிச்சையாக வேறு யாருக்கும் அந்த இரண்டு மகன்களோ அல்லது அந்த இரண்டு மகள்களோ விற்கவோ அல்லது அடமானம் வைக்கவோ முடியாது. அந்த இடத்தில் பேரன் பேத்திகளின் கையெழுத்து வேண்டும்.
  • மேலும், அந்த சொத்தை தனது உடன்பிறந்தவர்களுக்கு தான செட்டில்மெண்ட் செய்யவோ, பிறருக்கு தானம் செய்யவோ முடியாது.
  • அவர்கள் அந்த சொத்தை வாழ்க்கை முழுவதும் அனுபவித்துக் கொள்ளலாம், அவ்வளவுதான். எதையாவது விற்கவேண்டும் என்று நினைத்தால் அதற்கு அவர்களது வாரிசுகளின் ஒப்புதல் கண்டிப்பாக தேவை.
  • மேற்கண்டவாறு பத்திரம் பதிவு செய்யவில்லை என்றால் அந்த பத்திரப்பதிவு செல்லாது. அந்த பத்திரத்தை பதிவு செய்த சார்பதிவாளரும், அதனை தயாரித்த ஆவண எழுத்தரும் குற்றவாளி ஆவார்கள்.
தான செட்டில்மெண்ட் பத்திரம்
  • தனது பெயரில் உள்ள, தனக்குச் சொந்தமான சொத்தை மட்டுமே ஒருவர் , தனது ரத்த சம்பந்தமுள்ள மற்றவருக்கு தான செட்டில் மெண்ட் பத்திரம் மூலம் அளிக்க முடியும்.
  • பிரிக்கப்படாத பூர்வீக சொத்துக்களை தான செட்டில்மெண்ட் மூலம் பிறருக்கு அளிக்க முடியாது.
  • எதுவும் எழுதி வைக்காமல் இறந்து போன தந்தையின் சொத்தையோ, முன்னோர்களின் பூர்வீக சொத்தையோ தங்களது வாரிசுகளான மகன், மகள் ஒப்புதலின்றி ரத்த சம்பந்தமுள்ள ஒருவருக்கு தான செட்டில்மெண்ட் செய்ய முடியாது.
அப்படி என்றால், என்ன செய்ய வேண்டும்?
ரத்த சம்பந்தமுள்ள வேறு ஒருவருக்கு எதுவும் எழுதி வைக்காமல் இறந்து போன தந்தையின் சொத்தையோ, முன்னோர்களின் பூர்வீக சொத்தையோ ஒருவர் எழுதிக் கொடுக்க வேண்டும் என்றால், விடுதலைப் பத்திரம் மூலமாக எழுதிக் கொடுக்கலாம். ஆனால், அதிலும் தங்களது வாரிசுகளின் கையொப்பங்களை கண்டிப்பாக பெற வேண்டும்.

********************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 15.11.2020  

Monday, March 2, 2020

சொத்து வாங்குபவர்கள் கவனத்திற்கு…..

சொத்து வாங்குபவர்கள் கவனத்திற்கு…..
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
கோவிந்தசாமி என்பவரிடமிருந்து ஒருவர், கட்டிடம் அல்லது காலி மனை வாங்க விரும்புகிறார். அதனுடைய மதிப்பு ரூ. 60 லட்சம். இந்திய வருமான வரிச்சட்டப்படி, அசையா சொத்து விற்பவர்கள் மூலதன லாப வரி செலுத்த வேண்டும். இதனால் சொத்தை வாங்குபவர் கிரைய பணத்தை கொடுக்கும் போது அதற்குரிய வரி பிடித்தம் செய்து கொடுக்க வேண்டும். அதன்பிறகு அந்த தொகையை கோவிந்தசாமி பெயரில் வருமான வரியாக செலுத்தவும் வேண்டும்.  அந்த ஆண்டில் கோவிந்தசாமி தனது ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது அந்த தொகையை கழித்துக்கொள்ளலாம். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நமது நாட்டில் அசையா சொத்துக்கள் வாங்கும்போது பின்பற்றவேண்டிய வரி நடைமுறைகள் இவ்வளவுதான்.
'கருப்பு' பணப்புழக்கத்தை தடுக்க வரிப்பிடித்தம்
இந்தியாவில் நடக்கும் கருப்பு பணப்புழக்கத்தில் கணிசமான தொகை அசையாச் சொத்து பரிவர்த்தனைகளில் நடைபெறுகிறது. அதனால், வருமான வரித்துறை கருப்பு பணத்தின் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில், அதன் ஒரு பகுதியாக அசையாச் சொத்துக்களை வாங்குபவர்கள் வரி பிடித்தம் செய்ய வேண்டும் என்ற விதியை சமீபகாலத்தில் ஏற்படுத்தி, அதனை நடைமுறைபடுத்திக் கொண்டிருக்கிறது.
இந்திய வருமானவரி சட்டம் என்ன சொல்கிறது?
இந்திய வருமானவரி சட்டம் பிரிவு 194-IAன் படி, அசையா சொத்தின் மதிப்பு 50 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால், அந்த சொத்தை வாங்குபவர், அந்த சொத்தை விற்பவருக்கு பணத்தை செலுத்தும்போது, வாங்கும் விலை மதிப்பில் ஒரு சதவீதம் வரி பிடித்தம் செய்து, அந்த தொகையை அரசிடம் செலுத்த வேண்டும்.
விதிவிலக்கு இருக்கிறதா?
மேற்கண்ட வரியானது, குடியிருப்பு சொத்து, வணிக சொத்து மற்றும் காலிமனை நிலங்களுக்கும் பொருந்தும். ஆனால், இந்த வரியில் இருந்து விவசாய நிலம் வாங்குவதற்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்த வகை சொத்தாக இருந்தாலும், 50 லட்சம் மதிப்பிற்கும் குறைவாக அசையா சொத்து வாங்கினால் வரிப் பிடித்தம் (TDS) தேவையில்லை.
இந்த தொகையை எப்படி செலுத்த வேண்டும்?
ஆவண மாற்றத்துக்கு முன்பணம் (அட்வான்ஸ்) வழங்கும்போதோ அல்லது ஆவணத்தை பதிந்து பெயர் மாற்றம் செய்யும் போதோ, அந்த சொத்தை வாங்குபவர், அந்த சொத்துக்கான விற்பனையாளருக்கு பணம் செலுத்தும்போது, மொத்த விற்பனை மதிப்பில் ஒரு சதவீதம் வரிப்பிடித்தம் கழித்துக்கொண்டு மீத தொகையை மட்டும் கண்டிப்பாக செலுத்த வேண்டும்.  எந்த தேதியில் வரிக்கான தொகை பிடிக்கப்பட்டுள்ளதோ அந்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் இந்த வரிப்பணத்தை, அந்த சொத்தை வாங்குபவர், மத்திய அரசின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். இதற்கான டிடிஎஸ் செலுத்த மற்றும் பிற விவரங்களை அளிக்க சலான் உள்ளடக்கிய 26-QB படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அந்த சொத்தை வாங்குபவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் அதற்கு ஏற்றவாறு தனித்தனியாக, 26-QB படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
TAN எனப்படும் வரிவிலக்கு கணக்கு எண்
பொதுவாக, டிடிஎஸ் தொகையினை கழிக்க பொறுப்புள்ள ஒவ்வொருவரும் ஒரு வரி விலக்கு கணக்கு எண் பெற்றிருக்க வேண்டும். இருந்த போதிலும், அசையாச் சொத்தை பொறுத்தவரை, வாங்குபவர் TAN வாங்க வேண்டியதில்லை. விண்ணப்பப் படிவம் 26-QB இல் விற்பனையாளர் மற்றும் வாங்குபவரின் பெயர், ஆதார் எண், முகவரி, பான் (PAN), மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் விவரம் போன்றவற்றை வழங்க வேண்டும்.  அதுமட்டுமல்லாது ஒப்பந்தம் செய்த தேதி, வாங்குகின்ற சொத்தின் முழு மதிப்பு, பணம் செலுத்த போகின்ற தேதி, ஆகியவற்றை இணைத்து, வாங்குகின்ற சொத்தின் முழுமையான முகவரியை குறிப்பிட வேண்டும்.
மேற்கண்ட வரிவிலக்கு கணக்கு எண் வழங்கப்படவில்லை என்றால்…..?
சொத்தை விற்பவரால் நிரந்தர வங்கி கணக்கு எண் வழங்கப்படவில்லை என்றால் ஆதாரப் பணத்திலிருந்து வரி பிடித்தம் 20 சதவீதம் கழிக்கப்படும். எனவே, அசையா சொத்துகளை வாங்குபவர்கள், வரி பிடித்தம் செய்து, விவரங்களை தாக்கல் செய்யும்போது சொத்து விற்பவரின் விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை நன்றாக பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விற்பனையாளருக்கு கிடைக்கக்கூடிய வரி வரவு தொகை கிடைக்காமல் போய்விடும்.
வரி பிடித்தம் இல்லாமல் சொத்தை விற்க முடியுமா?
தனது சொத்தை விற்பவர், 'தனது வருமானமும், மூலதன லாபமும் சேர்ந்து வருமானவரி வரம்புக்கு உட்பட்டதாக இருக்கிறது' என்று வருமானவரி அதிகாரியிடம் பிரிவு 197 படி விண்ணப்பிக்க வேண்டும். வரி பிடித்தம் செய்யாமலோ அல்லது குறைந்த விகிதத்தில் வரி பிடித்தம் செய்யும்படியோ வருமான அதிகாரியிடம் சான்றிதழ் பெறும் பட்சத்தில் சொத்தை வாங்குபவர் எந்தவித வரிகளும் பிடித்தம் இல்லாமல் பரிவர்த்தனை செய்ய முடியும்.
வரியை எப்படி செலுத்த வேண்டும்?
ஆன்லைன் மூலமாகவோ அல்லது வங்கிகள் மூலமாகவோ பிடித்தம் செய்த வரியை செலுத்தலாம். நீங்கள் வங்கி மூலம் செலுத்தினால், வருமான வரித்துறை இணையதளத்தில்,  அதனை வங்கிகள் தானாகவே பதிவு செய்யும். டிடிஎஸ் செலுத்த பட்டதும், சொத்து வாங்குபவர், இந்தவரியை செலுத்தியதற்கான அத்தாட்சியை படிவம் 16பி-யை வருமான வரித்துறை இணையதளத்தில் இருந்து எடுத்து சொத்து விற்றவருக்கு கண்டிப்பாக 15 நாட்களுக்குள்  அளிக்க வேண்டும்..
அதே நேரத்தில், சொத்து வாங்குபவர்கள் மற்றும் சொத்தை விற்பனை செய்பவர்கள் விற்பனையின் மீது ஏற்கனவே வரிப் பிடித்தம் செய்யப்பட்டதால் தனக்குக் கூடுதலாக வரிக் கட்டும் பொறுப்பு இல்லை என்றோ அல்லது வருமானவரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்றோ கருத கூடாது. ஒவ்வொரு மூல தனத்துக்கும் ஏற்றவாறு சரியான வரியைக் கணக்கிட்டு வருமானவரி கணக்குத் தாக்கல் செய்யவேண்டிய கடமை சொத்தை வாங்குபவர்களுக்கும், விற்பவர்களுக்கும் நிச்சயம் உண்டு.
விவசாய நிலங்களை வாங்குபவர்கள்…..
பொதுவாக ரூ. 50 லட்சத்திற்கு மேலுள்ள அசையாச் சொத்துக்களை வாங்குவோருக்கு வருமான வரி பிடித்தம் உண்டு. ஆனால் விவசாய பூமி வாங்குபவர்களுக்கு, அந்த நிலத்தின் மதிப்பு எவ்வளவாக வரி பிடித்தம் செய்ய தேவையில்லை.
***********************அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 03.03.2020