disalbe Right click

Tuesday, November 29, 2016

பெண் சிசு கருக்கலைப்பு தடுப்புச் சட்டம்


பெண் சிசு கருக்கலைப்பு தடுப்புச் சட்டம்-1994 - என்ன செய்ய வேண்டும்?

உலகில் வளர்ந்து வரும் மருத்துவ வளர்ச்சியின் பரிணாமமாக தாயின் கருவில் வளரும் குழந்தையின் செயல்பாடுகளை கண்டறியும் புதிய தொழில்நுட்பம் கண்டுப்பிடித்து நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதற்காக தயாரிக்கப்பட்ட ஸ்கேன் கருவி இயந்திரம் மூலம் கருவில் வளரும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதா? அதன் உடல் உறுப்புகள் சீராக உள்ளதா? உயிரோட்டம் நல்லமுறையில் இயங்குகிறதா? சிசுக்கு ஏதாவது நோய் தாக்கியுள்ளதா என்பது குறித்து கண்டறிய பயன்படுத்தப்பட்டதுடன், கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை உறுதி செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.

நல்ல நோக்கத்திற்காக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கேன் இயந்திரத்தை பிற்காலத்தில் கருவில் வளரும் சிசு பெண்ணாக இருக்கும் பட்சத்தில், அதை கருவிலேயே அழிக்கும் கொடிய செயலுக்கு பெற்றோர்களின் அனுமதியுடன் சில தனியார் மருத்துவமனையில் செயல்படுத்தியது. இது நாடு முழுவதும் பரவ தொடங்கியது. இதன் காரணமாக நாட்டில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைய தொடங்கியது. நாட்டில் கடந்த 1991ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒரு ஆண்டில் பிறக்கும் குழந்தைகளில் ஆயிரம் ஆண்களுக்கு 972 பெண்கள் இருந்தனர். 

கடந்த 2001ம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பில் பெண்களின் பிறப்பு விகிதம் 942 ஆக குறைந்தது. கருவில் வளரும் குழந்தை எந்த பாலினத்தை சேர்ந்தது என்பதை கண்டறியும் ஸ்கேன் மூலம் பெண் சிசுவை கருவுற்றிருப்பது தெரிந்து அழிப்பதால், பெண் குழந்தை பிறப்பு குறைந்து வருவதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். கருவில் பெண் சிசு கொலை செய்யப்படுவதை தடுக்கும் சட்டம் கொண்டுவரும் படி மத்திய அரசுக்கு பல வழிகளில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

மக்களின் கருத்துக்கு மதிப்பளித்த அரசாங்கம் கருவில் வளரும் சிசுவின் பாலினத்தை கண்டறியும் ஸ்கேன் முறையை கட்டுப்படுத்தும் சட்டம் கொண்டுவர தீர்மானித்தது. அதன்படி The Pre-natal Diagnostic Techbiques (Regulation and Prevention of misuse) Act-1994 என்ற சட்டத்தை அமலுக்கு கொண்டுவந்தது. இச்சட்டம் ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தை தவிர்த்து, நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தும் வகையில் அறிமுகம் செய்தது.

இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள்: கருவில் வளரும் சிசு பரிசோதனையின் போது விதித்துள்ள நிர்பந்தம்:தாயின் கருவில் வளரும் குழந்தையின் செயல்பாடுகளை கண்டறியும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்கேன் இயந்திரத்தை சிசுவின் பாலினத்தை கண்டறிவதற்கு பயன்படுத்தாமல், கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை மட்டுமே பரிசோதிக்க வேண்டும். 

கருவில் உள்ள சிசுவை நோய் பாதித்துள்ளதா? இல்லையா? உடல் ஊனம் உள்பட வேறு ஏதாவது பாதிப்பு உள்ளதா? போன்ற நல்ல நோக்கத்திற்கான சோதனைகள் மட்டுமே நடத்த வேண்டும். இதை உறுதி செய்யும் வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் பின்பற்ற வேண்டும்.

* கருவில் வளரும் சிசு குரோமசோம் குறைபாடுடன் (Chromosomal abnormalities) உள்ளதா அல்லது மரபணு வளர்ச்சியற்ற நோயுடன் (Genetic Metabolic Diseases) உள்ளதா என்பதை கண்டறியவும் அல்லது ரத்த குழாயில் பிராணவாயுவை கொண்டு செல்லும் நாளங்கள்(Haemoglobinopathies) சரியாக இயங்குகிறதா அல்லது  பாலினம் தொடர்பான நோய்கள் (Sex linked genetic diseases) கண்டறிவது அல்லது மத்திய கண்காணிப்பு கழகம் (central supervisory board)  வகுத்துள்ள நோய்கள் கண்டறிவது மட்டுமே. குறிப்பிட்ட நோக்கமில்லாமல் ஸ்கேன் செய்தால் தண்டனை.

மேற்கண்ட நோக்கத்தை தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் கருவில் உள்ள சிசுவை ஸ்கேன் செய்தால் அது பெரிய குற்றமாக கருதப்படும். இந்த தவறு செய்திருப்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் சம்மந்தப்பட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ஒருமுறை தண்டனை பெற்றவர் மீண்டும் தவறு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

* மேற்கண்ட நோக்கத்தை தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் கருவில் உள்ள சிசுவை ஸ்கேன் செய்ய கர்பவதியான பெண் மேற்கொண்டாலும் அது குற்றமாக கருதி மேற்கூறிய தண்டனை வழங்கப்படும். ஒருவேளை இதுபோன்ற பரிசோதனையை அவர் வேரொருவரின் கட்டாயம் மற்றும் நிர்பந்தத்தின் பேரில் செய்தால் தண்டனையில் இருந்து தப்பிக்கலாம்.

* மேற்கண்ட நோக்கத்தை தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் கருவில் உள்ள சிசுவை ஸ்கேன் செய்ய கருவுற்ற பெண்ணின் கணவர் அல்லது உறவினர்கள் ஊக்கப்படுத்தினாலோ அல்லது நிர்பந்தம் செய்தாலோ மேற்கண்ட தண்டனைக்கு உள்ளாவார்கள். இதை நீதிமன்றமும் உறுதி செய்யும்.கருவில் வளரும் குழந்தை குறித்து ஸ்கேன் செய்து பார்க்க விரும்பினால், கீழ்கண்ட நோக்கங்களாக மட்டுமே இருக்க வேண்டும்:

* கர்ப்பிணி பெண்ணின் வயது 35 தாண்டியிருக்க வேண்டும் அல்லது* கர்ப்பிணி பெண்ணுக்கு இரண்டு அல்லது மூன்று முறை கரு சிதைவு ஏற்பட்டிருக்க வேண்டும் அல்லது கர்ப்பிணி பெண்ணின் கருவில் வளரும் குழந்தையை பாதிக்கும் வகையில் அவர் ஏதாவது மருந்து, மாத்திரைகள் எடுத்து கொள்ளும் பட்சத்தில் சிசுவின் வளர்ச்சியை காண ஸ்கேன் செய்யலாம் அல்லது* அவளின் வம்சத்தில் பிறக்கும் குழந்தை மனநலம் பாதித்தோ, புத்தி சுகவீனத்துடனோ, உடல் ஊனமாகவோ அல்லது வேறு ஏதாவது நோய்பாதித்து பிறந்திருந்தால், தனது கருவில் வளரும் சிசுவின் நிலையை தெரிந்து  கொள்ள ஸ்கேன் செய்யலாம் அல்லது* மத்திய கண்காணிப்பு கழகம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு ஸ்கேன் செய்யலாம். 

கருவில் வளரும் சிசு குறித்து ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்யும் நபர் கீழ் கண்ட விதிமுறையை பின்பற்ற வேண்டும்:

* கர்ப்பவதியான பெண்ணிடம் எழுத்து பூர்வமாக கடிதம் பெற வேண்டும். அவர் கையெழுத்து போட்டு கொடுக்கும் இரண்டு கடிதங்கள் வாங்கிகொண்டு, ஒன்றில் பரிசோதனை செய்யும் நபர் கையெழுத்திட்டு சம்மந்தப்பட்டவரின் கொடுக்க வேண்டும்.

* ஸ்கேன் செய்வதின் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கர்ப்பிணிக்கு தெளிவாக விளக்கம் கொடுக்க வேண்டும்.

* பெண்ணின் கருவில் வளரும் சிசு குறித்து ஸ்கேன் செய்தபின் சிசு எந்த பாலினத்தை சேர்ந்தது என்ற விவரத்தை கர்ப்பணி, அவரது கணவர் அல்லது உறவினர்களுக்கு வாய்வழிகவோ, சைகை மூலமோ அல்லது எழுத்து மூலமாகவோ எந்த நிலையிலும் சொல்லக்கூடாது.

* பாலினத்தை கண்டறியும் நோக்கத்தில் ஸ்கேன் செய்வது சட்டபடி குற்றமாகும்.சட்டத்தை மீறினால் தண்டனை என்ன?ஸ்கேன் செய்யும் நபர் கர்ப்பிணி, அவரது கணவர் அல்லது உறவினர்களுக்கு கருவில் உள்ளது என்ன பாலினம் என்பதை சொல்லக்கூடாது மற்றும் பாலினம் கண்டறிவதற்காக ஸ்கேன் செய்யக்கூடாது. அரசாங்கத்தில் உறுதியாக வரையரை செய்துள்ள சட்டத்தை மீறி தனிநபரோ அல்லது மருத்துவமனையோ ஸ்கேன் செய்தால் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 

* ஒருமுறை தவறு செய்தவர் மீண்டும் தவறு செய்தால் 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் கருவில் வளரும் சிசுவின் பாலினம் கண்டறிவது தொடர்பான விளம்பரம் செய்வதும் சட்டப்படி குற்றமாகும். அதற்கும் மேற்கண்ட தண்டனை பொருந்தும்.

நன்றி : தினகரன் நாளிதழ் - சட்டம் ஒரு எட்டும் கனி - 29.11.2016

Sunday, November 27, 2016

குரோம் இணையதளம் வசப்படுத்த


குரோமை வசப்படுத்த என்ன செய்ய வேண்டும்?


இணையத்தில் தேடல் பிரிவில், தனக்கு நிகர் என எதுவும் இல்லாத வகையில், கூகுள் நிறுவனத்தின் தேடல் இஞ்சின் இயங்கி வருகிறது. தேடல் என்றாலே, அது கம்ப்யூட்டருக்குள் என்றாலும், இணையத்தில் என்றாலும், கூகுள் இஞ்சின் தான் முதல் இடம் பெறுகிறது. 

அதே போல, கூகுள் தந்துள்ள குரோம் பிரவுசர், இணையப் பயனாளர்களால் அதிக அளவில் விரும்பப்படும் பிரவுசராக இயங்கி வருகிறது. நாம் விரும்பும் வகையில் அதனை வடிவமைத்துச் செயல்படுத்த, கூகுள் பல வழிகளைத் தந்துள்ளது. 

தெளிவான இடைமுக அமைப்புகள் இதன் இன்னொரு சிறப்பாகும். அத்துடன் நம் இணைய உலாவிற்கான பாதுகாப்பு, அவ்வப்போது இணைக்கப்படும் புதிய வசதிகள் என நம் இணைய உலாவினை அன்றாடம் ஒரு புதிய அனுபவமாகவே கூகுள் தந்து வருகிறது. 

கூகுள் குரோம் பிரவுசரில் இந்த வசதிகளைப் பெறும் வழிகளை இந்த கட்டுரை விளக்குகிறது. 

1. பிரவுசரில் திறந்து வைக்கப்பட்டுள்ள தளங்களுக்குச் செல்ல,கீ போர்ட் வழியாக ஒரு வழி உள்ளது. முதலில், நீங்கள் விரும்பும் இணைய தளம் காட்டப்படும் டேப் எந்த இடத்தில் (1,2,3,4...) உள்ளது எனப் பார்க்கவும். பின்னர், கண்ட்ரோல் கீ அழுத்தி, அதன் இடத்திற்கான எண்ணை (Ctrl+3) அழுத்தினால், அந்த குறிப்பிட்ட டேப் உள்ள தளம் திரையில் கிடைக்கும்.

2.  ஸ்பேஸ் பாரினை அழுத்தினால், எந்த இணைய தளத்திலும், தளமானது ஒரு பக்கம் கீழாகச் செல்லும் என்பதனை நீங்கள் அறிந்திருக்கலாம். இதே போல, ஷிப்ட் கீ அழுத்தி ஸ்பேஸ் பார் அழுத்தினால், அதே போல பக்கங்களைத் தாண்டிச் செல்லலாம்.

3. குரோம், அதன் எக்ஸ்டன்ஷன்களுக்குச் செல்ல ஷார்ட் கட் கீ வழிகளை அமைக்க வசதி தருகிறது. இதற்கு chrome://extensions/ எனச் செல்லவும். கிடைக்கும் பக்கத்தில் கீழாகச் செல்லவும்.இங்கு “Keyboard shortcuts” என்ற இடத்தில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் செயல்பாடுகளுக்கு, ஷார்ட் கட் கீகளை அமைக்கலாம்.

4. சில எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் பின்னணியில் இயங்கினாலே போதும். எனவே, ஏன் அவை பிரவுசரின் டூல்பாரில், இடம் எடுத்துக் கொண்டு தேவையற்ற வகையில் காட்டப்படுகிறது. இதனைப் போக்க, எந்த எக்ஸ்டன்ஷன் காட்டப்பட வேண்டாம் என்று எண்ணுகிறீர்களோ, அதற்கான ஐகானில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ்விரி மெனுவில், “Hide button” என்ற பட்டனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். 

5. எந்தவிதமான கவனச் சிதறலும் இல்லாமல், இணையப் பக்கத்தில் உலா வர, F11 என்ற கீயை அழுத்தவும். உடன், குரோம் பிரவுசர் முழு திரையிலும் காட்டப்படும். வழக்கமாகக் காட்டப்படும் பிரவுசர் சார்ந்த ஐகான்கள் மற்றும் பிற வகை தோற்றங்கள் அனைத்தும் மறைக்கப்படும். 

6. நிறைய டேப்களைத் திறந்து வைத்து, பிரவுசரைப் பயன்படுத்து பவரா நீங்கள்? இவற்றில் சிலவற்றை மறைத்து வைக்க விரும்புகிறீர்களா? பிரவுசரின் முகவரி விண்டோவில், chrome://flags என டைப் செய்திடவும். அங்கு Stacked Tabs என்பதனைத் தேடி அறியவும். அதனை இயக்கும் வகையில் enable செய்திடவும். இதனால், டேப்கள் அனைத்தும் சுருங்கி, சிறியதாகக் காட்சியளிப்பதற்குப் பதிலாக, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுக் காட்சி அளிக்கும்.

7. எந்த இணைய தளத்தினையும், அதன் காட்சித் தோற்றத்தினைப் பெரிதாக்கிப் (Zoom) பார்க்கலாம். பின் சுருக்கலாம். இதற்கு கண்ட்ரோல் கீ அழுத்திய நிலையில் “+” அல்லது “-” கீயினை அழுத்த வேண்டும். ஸூம் செய்யப்படும் அல்லது ஸூம் செய்த காட்சி சுருக்கப்படும். இதன் மூலம் இணைய தளப் பக்கத்தில் உள்ள எழுத்துக்களும் படங்களும் விரிக்கப்பட்டுக் காட்டப்படும்.

8. கண்ட்ரோல் + ஸீரோ (Ctrl+-0) அழுத்தினால், நீங்கள் ஸும் செய்த ஸ்கிரீன், அல்லது சுருக்கிய திரை பழைய 100% நிலைக்குத் திரும்பும். 

9. நீங்கள் எப்போது விரும்பினாலும், குரோம் பிரவுசரின் தாய் முகப்புப் பக்கத்திற்குச் செல்லலாம். Alt-+Home கீகளை அழுத்திப் பெறலாம். இதற்குப் பதிலாக ஹோம் பட்டன் இருந்தால், அதனை மட்டும் அழுத்திச் செல்லலாம் அல்லவா? இதனைப் பெற, chrome://settings தேர்ந்தெடுத்துச் செல்லவும். அங்கு, “Show Home button” என்று உள்ள பெட்டியில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, இதற்கான பட்டன் ஒன்று ஸ்கீரினில் காட்டப்படும்.

10.எந்த இணையதளத்திற்குமான ஷார்ட் கட் ஒன்றை, விண்டோஸ் டெஸ்க்டாப்பில் அமைக்கலாம். முகவரி கட்டத்தில் காட்டப்படும் முகவரியினை, மவுஸ் மூலம் அப்படியே இழுத்துச் சென்று, திரையில் அமைத்தால், அது, அந்த இணைய தளத்திற்கான ஷார்ட் கட் கீயாகச் செயல்படும். அப்ளிகேஷன்களுக்கு நாம் ஏற்படுத்தும் ஷார்ட் கட் கீ ஒன்றையும், இணையப் பக்கங்களுக்கு ஏற்படுத்தலாம். பிரவுசரின் மெயின் மெனுவிற்குச் செல்லவும். அங்கு Tools தேர்ந்தெடுக்கவும். இதில் “Create application shortcuts” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி, குறிப்பிட்ட பக்கமானது முழுமையாகத் திரை முழுவதும் காட்டப்படும். வழக்கமான பிரவுசர் சார்ந்த எதுவும் காட்டப்பட மாட்டாது.

11. பிரவுசரில் பல இணைய தளங்களைப் பார்த்துத் தேவையான தகவல்களை தேர்ந்தெடுக்கிறீர்கள். கம்ப்யூட்டரை நிறுத்தி, வேறு சில வேலைகளை முடித்து மீண்டும் திரும்ப நினைக்கிறீர்கள். பிரவுசரில் பார்த்த அனைத்து தளங்களும் அதன் டேப்களோடு உங்களுக்கு வேண்டும் என விரும்புகிறீர்கள். இதற்கு, chrome://settings செல்லவும். அங்கு, “On startup” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ““Continue where I left off.”” என்பதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுத்து அமைக்கவும். அடுத்த முறை, குரோம் பிரவுசரை இயக்கும்போது, அதற்கு முன் இயக்கியபோது நீங்கள் பார்த்த அனைத்துஇணைய தளங்களுடன், பிரவுசர் திறக்கப்படும்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 21.11.2016

குழந்தை வளர்ப்பு - பாட்டி வைத்தியம்


குழந்தை வளர்ப்பு - பாட்டி வைத்தியம் - என்ன செய்ய வேண்டும்?

குழந்தை வளர்ப்பு என்பது, மிகப்பெரிய கலை. வாய் திறந்து பேசும் வரை, எதற்காக குழந்தை அழுகிறது என தெரியாமல், இளம் தாய்மார்கள் படும் அவஸ்தையை விளக்க வார்த்தைகள் இல்லை. இதற்கு தீர்வாக, 

நாட்டு மருத்துவர்கள் கூறும் சில ஆலோசனைகள்:

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன், ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த, அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால், குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். தேன் தடவுவதால், நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்.

தினமும் இரவில் விளகேற்றியவுடன், சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து, குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, பின் சிறிது தொப்புளைச் சுற்றி தடவ வேண்டும். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி, அதை விளக்கில் வாட்டி, பொறுக்கும் சூட்டில், குழந்தையின் தொப்புள் மேல் போட்டால், அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும். 

நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் கிடைக்கும். அதை வாங்கி, வேகும் சாதத்தில் போட்டு எடுத்து, உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால், நாக்கில் உள்ள மாவு அகன்று, குழந்தை ருசித்துப் பால் குடிக்கும். 

சில குழந்தைகள், அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை, அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டு பிழிந்து, வடிகட்டி ஊற்றினால், வாந்தி சட்டென்று நின்றுவிடும். 

குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை, மலம் கழிக்க வேண்டும். கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால், ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை, வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால், ஒரு மணி நேரத்தில் மலம் போய்விடும். 

மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ கொடுக்க வேண்டாம். ஆசனவாயில், வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப்பு துண்டோ வைத்தாலே வெளியே வந்து விடும். 

பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிக் கொடுத்தால் சளி பிடிக்காது. சளி பிடித்திருந்தாலும் அகன்று விடும். 

குழந்தைகளுக்கு பேதிக்கு மாத்திரை கொடுப்பது, எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதிலும் மூக்கிலும் எண்ணெய் விடுவது ஆகியவற்றை தவிர்த்து விடவும். 

குழந்தைக்கு சளி பிடித்திருந்தால், தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்து நெஞ்சில் தடவினால், சளி இளகிக் கரைந்து விடும்.

தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு, வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு, சும்மா கலகலவென்று இருக்கும். தகுந்த மருத்துவரின் ஆலோசனையின்படி, சிகிச்சையை மேற்கொள்ளவும்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 22.11.2015



Saturday, November 26, 2016

காதலை வெளிப்படுத்தும் ஆண்கள்


ஆண்கள் தங்களின் காதலை வெளிப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

கண்டதும் காதல், காணாமலே காதல், கடிதக் காதல், ஃபோன் காதல், கல்லூரிக் காதல், பேருந்துக் காதல், உறவுக் காதல், ஊர்க் காதல்,  ஃபேஸ்புக் காதல் என, காதல் முளைக்கும் களங்கள் கணக்கற்றவை. ஒரு ஆண் ஒரு பெண்ணிடமோ அல்லது ஒரு பெண் ஒரு ஆணிடமோ, தங்கள்  காதலை  வெளிப்படுத்தி, அன்பை இணையிடம்  தொடர்கிறார்கள். 

காதலை வெளிப்படுத்துவதை ஆங்கிலத்தில் புரபோசல்( love proposal) என்கிறோம். இந்த புரபோசலை பெண்களைவிட ஆண்களே முதலில் செய்கிறார்கள். அப்படி ஆண்கள் செய்யும் புரபோசல்கள் பெருமளவில் நிராகரிக்கப்படுகின்றன.

பெண்களைத் துரத்தித்துரத்தி  காதல் செய்வதால் ஒரு பயனும் இல்லை. மாறாக தன் மீது விருப்பம் இல்லாத பெண்ணின் மீது ‘காதலை வெளிப்படுத்துகிறேன்’ என்ற பெயரில்  தொந்தரவு செய்வதால், பெண்  உட்சபட்ச கோபம் அடையக் கூடுமே தவிர , எந்தவிதத்திலும் காதல் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் தன் விருப்பத்தைத் தெரிவிக்கும் முன் கீழ்காணும் விஷயங்களைப் பின்பற்றலாம்.

பொய் சொல்லக் கூடாது காதலா!

தான் விரும்பும் பெண் அழகினாலோ, கல்வி, வசதி வாய்ப்புகளாலோ அல்லது மற்ற காரணங்களாலோ  ஈர்த்திருக்கலாம். ஆனால், தனக்கு காதல் வந்த காரணத்தை நேரடியாகச் சொல்லாமல், பொய்யான காரணத்தைத்  தனக்கு சௌகரியமாகச்  சொல்லி காதலை வெளிப்படுத்துவது கூடவே  கூடாது. நீங்கள் எந்த விஷயத்துக்காக அவரை விரும்புகிறீர்கள் என்பதை முதல் முறையிலேயே சொல்லிவிடுவது நல்லது.

உனக்குப் பிடிச்சா மட்டும் ஓகே சொல்லு!

தனக்கு ஏற்கெனவே தெரிந்த பெண்ணாக இருந்தாலும் சரி, புதிதாக அறிமுகமாகி இருக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி, உங்கள் காதலை வெளிப்படுத்திய நொடியில் இருந்து அவரிடம் இருந்து ‘ஆம்’ என்ற பதிலே வரவேண்டும் என்பதை எதிர்ப்பார்க்காதீர்கள். ‘இது என் விருப்பம், அதே போல உனக்கு என்னைப் பிடித்திருந்தால் மட்டும் சம்மதி’ என்று சொல்லலாம். இப்படிச் செய்வது உங்கள் மீது மரியாதையை உயர்த்தும்!

எடுத்ததும்  ஐ லவ் யூ வேண்டாமே!

‘எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்கலாமா?’ , வீட்ல கூட பேசிட்டேன்...உனக்கு ஓகேவா?’, ‘நான் உன்னை லவ் பண்ணிடுவேனோனு பயமா இருக்கு. ஆனா, லவ் பண்றேன்னு நினைக்கிறேன்,’  இப்படி முதல் புரபோசல் 'ஐ லவ் யூ' என்ற வாக்கியமாக இல்லாமல் ,வேறு எப்படி எல்லாம் இருக்கலாம் என்று சிலர் தேடிப்பிடித்து முயற்சித்து, வித்தியாசமாகச் சொன்னாலும் பெருமளவில் ‘ஐ லவ் யூ’ என்கிற வாக்கியமே காதலை வெளிப்படுத்த  பயன்படுத்தப்படுகிறது. 

ஆகவே, ‘ஐ லவ் யூ’ வை தனக்குப் பிடித்த பெண்ணிடம் சொல்வதற்கு முன்பாக , உங்கள் மீது சிறு அளவிலாவது அந்தப் பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு 'ஐ லவ் யூ' சொல்லுங்கள்.

நான் இப்படித்தான்’னு சொல்வதுதான் பெஸ்ட்!

நீங்கள் விரும்பும் பெண் உங்களுடைய தோற்றம், பேச்சு, பழகும் விதம் இதையெல்லாம் பார்த்து உங்கள் மீது வேறொரு பிம்பத்தை வைத்திருக்கலாம். ஆனால், நீங்கள் அவர்களின் நினைப்புக்கு அப்படியே நேர்மாறாக இருக்கலாம். பார்த்ததும் காதல் என்பது  திரைப்படத்திற்கு வேண்டுமானால் சுவாரஸ்யமாக இருக்கலாம். 

அதனால், உங்கள் கல்வி, வேலை, குடும்பச்சூழல், உங்கள் எதிர்காலத் திட்டம், பிடித்தவை, பிடிக்காதவை உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை அவர்களிடம் தெரிவித்து, அவர்கள் அவற்றையெல்லாம் தெளிவாகப் புரிந்துகொண்டார்களா என்று தெரிந்த பின் காதலைச் சொல்வது நல்லது. அதே போல பெண்ணைப் பற்றிய முழு விவரங்களை நீங்களும் தெரிந்து வைத்துக்கொள்வதும் அவசியம்!

தயக்கமும் வேண்டாம் நெருக்கமும் வேண்டாம்!

காதலைச் சொல்லும்போது பயந்த நிலையில் ஏனோதானோவென்று சொன்னால், உங்கள் மீதான நம்பிக்கை குறையக்கூடும். கையில் ஒரு  ரோஜா மலரோடு மண்டியிட்டுதான் காதலைச் சொல்ல வேண்டும் என்றில்லை. 

முகத்துக்கு நேராக கண்களைப் பார்த்து, சிறு புன்னகையுடன் வெளிப்படுத்துங்கள். அதே போல  தைரியமானவர் என்பதை வெளிப்படுத்த, அவசரப்பட்டு ஆரம்பத்திலேயே தொடுதல் உள்ளிட்ட செய்கைகள் மூலம் காதலைச் சொன்னால், அதுவும்கூட உங்கள் மீதான மதிப்பீட்டைக் குறைத்துவிடும். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை அவசியம் இங்கு!

 பொது இடங்களில் கேர்ஃபுல்!

காதலைச் சொல்ல இயற்கையான சூழல்களைத் தேர்ந்தெடுப்பது நல்ல மனநிலையைக் கொடுக்கும். அதே நேரத்தில் பீச், பார்க் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களாகவும் இருந்தால், நீங்கள் காதலை வெளிப்படுத்தும்போது, அது மற்றவர்களின் கவன ஈர்ப்பைச் செய்வதாக இருக்க வேண்டாம். 

நீங்கள் அப்படிச் செய்வது உங்கள் இணைக்குப் பிடிக்காதபட்சத்தில், அவர் உங்களை நிராகரிக்கக்கூடும். அதனால், பொது இடங்களில் காதலை வெளிப்படுத்தும்போது அவருக்கு எந்த வகையிலும் தொந்தரவு இல்லாத சூழலை உருவாக்கிக்கொண்டு காதலைச்  சொல்லுங்கள்!

செல்போன் புரபோசல் வேண்டவே வேண்டாம்!

 இணையத்தின் வழியிலேயே பல வேலைகள் நடந்துவிடுகின்றன. ஆணுக்கும் பெண்ணுக்குமான தகவல் தொடர்பு செல்போன் வழியே பரிமாறப்பட்டாலும் நீங்கள் முதன் முதலாக வெளிப்படுத்தும் காதல், நேரில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது. நேரில் சொல்லும்போது, அந்தத் தருணத்தில் உங்கள் முகங்களில் வெளிப்படும் மலர்ச்சி உங்களுக்குக் கிடைக்கும் வாழ்நாள் பொக்கிஷம். 

அந்த அனுபவத்தைத்  தவறவிடாதீர்கள். செல்போன் இருக்கிறது என்பதால் மனதில் பட்டதை எல்லாம் பட்டென்று சொல்லிவிடலாம் என்ற நினைப்பில் விரும்பத்தகாத வார்த்தைகளைப்   பிரயோகம்செய்வது உங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும். அதனால், இதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

காதலிக்கு என்ன பிடிக்கும்?

புரபோஸ் செய்யும் முன், தான் விரும்பும் பெண்ணுக்குப் பிடித்த நிறத்தில் உடை அணிந்து செல்லலாம். அவள் ரசித்தப் பாடலை உங்கள் செல்போனின் ரிங் டோனாகவும், காலர் டியூனாகவும் வைத்திருக்கலாம். நீங்கள் விரும்பும் பெண்ணுக்குப் பிடித்த பொருட்கள் நிறைய இருக்கலாம். 

அவர் வாங்கிக்கொள்ளும் விருப்பம் உள்ளவராக இருந்தால்,  நீங்கள் காதலை வெளிப்படுத்தும் நாளில் அதை அவரிடம் கொடுத்து சர்ப்ரைஸ் செய்யலாம். அல்லது அவர் பொருட்கள் வாங்குவதில் விருப்பம் இல்லாதவராக இருந்தால், தயவுசெய்து அப்படிச்  செய்வதைத் தவிர்த்துவிடுங்கள்.

கட்டாயப்படுத்துவது கூடவே கூடாது!

ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் விருப்பம் இல்லாதவரிடம் கட்டாயப்படுத்திக் காதலைச் சொல்வது நல்லதல்ல. அதனால், நீங்கள் காதலிக்கும் நபர் உங்கள் காதலை ஏற்றுக்கொள்ளப் போதுமான அவகாசம் கொடுங்கள். ரத்தத்தால் கடிதம் எழுதுவது, அழுது கெஞ்சுவது, போகும் இடமெல்லாம் பின் தொடர்வது இதெல்லாம் காதலில் சேராது. 

உங்கள் மீது அனுதாபத்தை ஏற்படுத்தி காதலிக்க வைத்தால், அதுவும் கட்டாயப்படுத்துவது போலத்தான். அதனால், காதலை மெல்லிய பூங்காற்றாய் நுகரப் பழகுங்கள்.

காதலை வெளிபடுத்தும் உத்திகள் தனிநபரின் விருப்பத்தில் இன்னும் கூட பல வகைகளில் மாறுபடலாம். ஆனால், அவை எப்படி இருந்தாலும்,  துன்புறுத்திப் பெறாமல் இருப்பதே சிறந்தது.

லவ் இஸ் வெல்! ஆல் தி பெஸ்ட்!

______________________________________________________________- பொன்.விமலா

நன்றி : விகடன் செய்திகள் - 26.11.2016

பவர் பத்திரம் - அதிகாரம்


பவர் பத்திரத்தின் பவர் - என்ன செய்ய வேண்டும்?

பவர் பத்திரம் மூலம் ஒருவர் தன்னுடைய முகவருக்குச் சில குறிப்பிட்ட அதிகாரங்களைத் தன் சார்பாகச் செயல்பட வழங்க முடியும். இப்படி பவர் பத்திரம் எழுதிக் கொடுப்பவரை முதன்மையாளர் (Principal) என்று சொல்வார்கள். 

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முதன்மையாளர் மட்டும் பவர் பத்திரத்தில் கையெழுத்துப் போட முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது பவர் பத்திரத்தில் முதன்மையாளர் கையெழுத்து மட்டுமல்ல, அவர் நியமிக்கும் முகவரும் கையொப்பம் இட வேண்டிடும் கட்டாயம்.

பவர் பத்திரத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். 

ஒன்று, பொது அதிகாரப் பத்திரம், அடுத்தது, குறிப்பிட்ட அதிகாரப் பத்திரம். ஒரு வேளை பவர் பத்திரத்தில் காலத்தைக் குறிப்பிடாமல் இருந்தால், அந்த பவர் பத்திரத்தை முதன்மையாளர் ரத்து செய்யும் வரை செல்லும். அதேசமயம் முதன்மையாளர் இறந்துவிட்டால் பவர் பத்திரம் தானாகவே காலாவதியாகிவிடும். 

சில மாநிலங்களில் பவர் பத்திரத்தில் பின்பற்றப்படும் விசேஷ அம்சங்கள்:

தமிழ்நாடு

2010 நவம்பர் முதல் பவர் பத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் புத்தகம் 1-ல் பதிவுசெய்யப்படுகிறது (முன்பு இது டீழுழுமு ஐஏ-ல் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது).
இதன்மூலம் நவம்பர் 2010-க்குப் பிறகு பதிவு செய்த பவர் பத்திரத்தின் விவரங்கள், தமிழ் நாட்டின் சொத்து வில்லங்கச் சான்றிதழில் இடம் பெறுகின்றன. இந்த அம்சம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் செயலில் உள்ளது.

ஆந்திரப்பிரதேசம்

இந்தியாவிலே ஆன்லைன் மூலம் பவர் பத்திரத்தின் விவரங்களைச் சரி பார்க்கும் முறை ஆந்திராவில் மட்டும் உள்ளது.

ஆன்லைன் மூலம் சம்பந்தப்பட்ட முதன்மையாளரின் பெயர், முகவரின் பெயர், சொத்தின் விவரங்கள், பவர் பத்திர எண், தேதி மற்றும் அந்த பவர் பத்திரம் மூலம் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களின் விவரங்களைச் சரி பார்க்கலாம். இந்தச் சேவை தெலங்கனா மாநிலத்திலும் நடைமுறையில் உள்ளது.

மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் குறிப்பிட்ட சொத்தின் மேல் பவர் பத்திரம் வழங்கினால் அது ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதே போல் சட்டீஸ்கரில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

பவர் பத்திர அம்சங்கள்

1. சொத்து சம்பந்தமாக பவர் பத்திரம் வழங்கினால், அதில் குறிப்பிட்ட முத்திரைத் தீர்வு மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

2. முதன்மையாளர் மற்றும் முகவரின் கையெழுத்து, புகைப்படம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.

3. முதன்மையாளாரின் சொத்து உரிமை சரி பார்க்கப்பட வேண்டும் மற்றும் முதன்மையாளாரின் வருவாய், வருவாய்த் துறையினரால் வழங்கப்பட்ட நில உரிமைச் சான்றிதழும் சரிபார்க்கப்பட வேண்டும்.

4. பவர் பத்திரம் மூலம் பதிவு செய்யும் ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் முதலில் அந்த பவர் பத்திரம் ரத்து ஆகவில்லை என உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் முதன்மையாளர் உயிருடன்தான் உள்ளார் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

5. முகவருக்கு பவர் பத்திரத்தில் விற்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

6. ஒரு வேளை பில்டர் சொத்தின் உரிமையாளராக இருந்தால், சில சமயங்களில் தங்களின் ஊழியர்களுக்கு பவர் பத்திரத்தை அளிப்பார்கள். இதுபோன்ற சமயங்களில் அந்த பில்டரிடம் இது சரிதானா என உறுதி செய்துகொள்ள வேண்டும்.

7. ஒரு வேளை முதன்மையாளர் வெளிநாட்டிலும், அவரது முகவர் இந்தியாவிலும் இருந்தால் அந்த பவர் பத்திரம் நோட்டரி அல்லது சம்பந்தப்பட்ட அந்த நாட்டில் உள்ள இந்திய வெளியூறவுத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் முதன்மையாளர் பவர் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். பவர் பத்திர முதன்மையாளர் இந்தியாவில் வசிக்கும் முகவருக்கு அதை தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். முகவர் அந்த பவர் பத்திரத்தைச் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் 120 நாட்களுக்குள் (adjudicate) பதிவு செய்ய வேண்டும் அதன் செய்த பிறகுதான் வெளிநாட்டில் வாழும் முதன்மையாளர் வழங்கப்பட்ட பவர் பத்திரம் இந்தியாவில் செல்லுபடியாகும்.

8. கிரயப் பத்திரம் பதிவு செய்யும் முன், அசல் பவர் பத்திரத்தைச் சரி பார்க்க வேண்டும். பவர் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளனவா என்றும் உறுதிப்படுத்திக் 
 கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர்: திரு ஷ்யாம் சுந்தர்
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 26.11.2016

ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு


JEE ENTRANCE EXAM - என்ன செய்ய வேண்டும்?
டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம்!
ஐ.ஐ.டி., என்ற உயர்கல்வி தொழில்நுட்ப கல்லுாரிகளில் இன்ஜினியரிங் படிப்பதற்கான, ஜே.இ.இ., மெயின் நுழைவுத் தேர்வுக்கு, டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம்.

ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.டி.எம்., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., மற்றும் பி.பிளான் போன்ற படிப்புகளில் சேர, ஜே.இ.இ., மெயின், அட்வான்ஸ் என்ற, இரண்டு கட்ட நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். 

வரும் கல்வி ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு, சி.பி.எஸ்.இ., மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, ஏப்., 3ல் எழுத்துத் தேர்வும், ஏப்., 9, 10ல், ஆன்லைன் வழி தேர்வும் நடத்தப்படுகிறது. 

இதற்கு, டிச., 1 முதல், 31 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வில் பங்கேற்க, தமிழக அரசு பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., உட்பட, 54 பாடத்திட்ட மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உட்பட நாடு முழுவதும், 132 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. 

வெளிநாட்டில் இருப்போர், ஜே.இ.இ., மெயின் தேர்வை எழுத, துபாய், பக்ரைன், மஸ்கட், ரியாத் மற்றும் ஷார்ஜா ஆகிய நகரங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.

குஜராத்தியில் எழுதலாம்: 
ஜே.இ.இ., மெயின் தேர்வை, ஆங்கிலம் அல்லது இந்தி என, ஏதாவது ஒரு மொழியில் எழுத அனுமதி உள்ளது. தமிழிலும், இத்தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. 

இந்நிலையில், இந்த ஆண்டு முதல் குஜராத்தியிலும், ஜே.இ.இ., தேர்வை எழுதலாம் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் சென்னை, கோவை, திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர் உட்பட, பல மாவட்டங்களில் குஜராத்தி மொழி பேசுவோர் பரவலாக உள்ளனர்.

நன்றி : தினமலர்-கல்விமலர் - 26.11.2016


Tuesday, November 22, 2016

நீட் - நுழைவு


நீட் தேர்வுக்கு தயாராக - என்ன செய்ய வேண்டும்?
மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு முறை (National Eligibility cum Entrance Test - NEET) கட்டாயமாக்கப் பட்டுவிட்டது. இதனால் தற்போது பிளஸ் டூ படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் அவர்களுடைய பெற்றோரும் குழப்பத்திலும் அச்சத்திலும் ஆழ்ந்திருக்கிறார்கள். 

புதிய தேர்வு முறை என்பதால் இதற்கு எப்படித் தயாராவது, தேர்வை எப்படி எதிர்கொள்வது, ஓஎம்ஆர் ஷீட்டில் (OMR sheet) எப்படி பதிலளிப்பது போன்ற பல கேள்விகள் எழும். 

இவை அனைத்துக்கும் உங்களுக்குப் பயிற்சி அளித்து நீட் தேர்வுக்கு முழுவதுமாகத் தயார்படுத்தும் விதத்தில் உண்மையான தேர்வுபோன்ற ஒரு மாதிரித் தேர்வை நடத்தும் முயற்சியை ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழின் இணைப்பிதழான எஜுகேஷன் பிளஸ்ஸும் ஸ்மார்ட் பயிற்சி மையமும் இணைந்து முன்னெடுத்து இருக்கின்றன.

வரும் ஆண்டில் நீட் தேர்வை எழுத முனைவோருக்கு மாநில அளவிலான மாதிரித் தேர்வைத் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மையங்களில் 2017 ஜனவரி 8 அன்று நடத்துகிறார்கள். 

இந்த மாதிரித் தேர்வில் உயர்ந்த மதிப்பெண் பெறும் முதல் 100 பேருக்கு நீட் தேர்வு எழுத இலவசமாகச் சிறப்புப் பயிற்சி அளிக்க ஸ்மார்ட் மையம் முன்வந்திருக்கிறது. மாநில அளவிலான இந்த மாதிரித் தேர்வு எழுத ரூ. 650/- கட்டணம் செலுத்த வேண்டும்.

பணி வாழ்க்கைக்குப் பயிற்சி அளிப்பதில் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஸ்மார்ட். அந்நிறுவனம் நீட் தேர்வுக்குத் தமிழக மாணவர்களைத் தயார்படுத்த முடிவெடுத்திருக்கிறது. பொதுத் தேர்வுகளுக்குக் கேள்வித் தாளைத் தயாரிக்கும் கல்வியாளர்கள் மற்றும் தேர்வு ஆய்வாளர்களின் ஆலோசனையின்படி இந்தத் திட்டத்தை ஸ்மார்ட் நிறுவனம் வகுத்திருக்கிறது. “மாநில அளவிலான இந்த மாதிரித் தேர்வை எழுதும் ஒவ்வொரு மாணவருக்கும் மாநில அளவில் ராங்க் அளிப்போம்.

படிப்பில் அவர்களுடைய பலம் / பலவீனம் மற்றும் எந்தப் பாடப் பகுதிகளில் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் ஆகியவற்றையும் விரிவான பகுப்பாய்வு அறிக்கையாகத் தருவோம். 

குறிப்பாக, இந்த மாதிரித் தேர்வை எழுதும் அனைத்து மாணவர்களும் நீட் புளூ பிரிண்ட்டை பின்பற்றும் ஆன்லைன் தொடர் தேர்வுகளை எழுதுவதற்கான வாய்ப்பை இலவசமாக அளிக்கவிருக்கிறோம்” என்கிறார் ஸ்மார்ட் மையத்தின் நிர்வாக இயக்குநரான அர்ச்சனா ராம்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் (CBSE), மாநிலக் கல்வி வாரிய பாடத்திட்டம் மற்றும் இதர வாரிய பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ் 2 படிக்கும் அல்லது பிளஸ் டூ முடித்தவர்கள் அனைவரும் நீட் தேர்வு எழுதத் தகுதி பெற்றவர்கள்.

தேர்வில் நேரடியாகப் பங்குபெற விரும்பும் மாணவர்கள் www.smartneet.in-ல் விண்ணப்பிக்கலாம். 

தங்களுடைய பள்ளி வளாகத்திலேயே மாநில அளவிலான மாதிரித் தேர்வை நடத்த விரும்பும் பள்ளிகள் தொடர்புக்கு: 

பிரவீன் 7401658483.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 22.11.2016



Monday, November 21, 2016

இறந்து போனவரின் ஏ.டி.எம். கார்டு


இறந்து போனவரின் ஏ.டி.எம். கார்டு - என்ன செய்ய வேண்டும்?

இறந்து போன ஒருவரின் ஏடிஎம் கார்டை பிறர் பயன்படுத்தலாமா?

 “வங்கிக் கணக்கு என்பது ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்டது. ஒருவரின் கணக்கிலிருந்து வேறு ஒருவர் (அவர் யாராக இருந்தாலும்)  பணத்தை எடுப்பது சட்டப்படி தவறாகும். எனவே, அவர் மீது சம்பந்தப்பட்டவங்கியில் இருந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். 

இறந்து போனவரின் பிள்ளைகளோ, அல்லது மனைவியோ இறந்து போனவரது கணக்கில் இருந்து பணம் எடுத்திருந்து , அதைப்பற்றி அந்தக் குடும்பத்தில் உள்ள யாராவது ஒருவர் வங்கியில் புகார் அளித்தால் வங்கியானது சம்பந்தப்பட்ட நபர்மீது நடவடிக்கை எடுக்கும்.

அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் இதனை பெரிது படுத்தாமல் விட்டுவிட்டால் எந்த வங்கியிலிருந்தும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை. 

வாரிசுதாரர்கள் அல்லது நாமினி என்ன செய்ய வேண்டும்?
ஒரு வங்கியில்  கணக்கு வைத்திருப்பவர் இறந்தவுடன், அவரது நாமினியோ அல்லது அவரது வாரிசுதாரர்களோ அதை உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு தெரிவிப்பது அவசியமானது ஆகும்.

 கணக்கு வைத்திருந்தவர் இறந்ததற்கான இறப்புச் சான்றிதழ் நகல் , ஏடிஎம் கார்டு அசல், பாஸ்புக் அசல், காசோலை புத்தகம் அசல் ஆகியவற்றுடன் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு கடிதம் எழுதி வங்கி மேலாளரிடம் நேரில்  தரவேண்டும். அவர்கள் அதனை வாங்கிக்கோண்டு, பரிசீலனை செய்து  வங்கிக் கணக்கில் நாமினி குறிப்பிடப்பட்டிருந்தால், அவருடைய பெயருக்கு கணக்கை  மாற்றித்தருவார்கள்.

ஒருவேளை நாமினி பெயர் குறிப்பிடப்படாமல் இருந்து, ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்போது அந்தக் கணக்கில் உள்ள பணத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும், அதற்கு மற்ற வாரிசுகள் அனைவரும் ஒப்புதல் தெரிவித்து கடிதம் எழுதி கையெழுத்திட்டு வங்கியில் ஒப்படைக்க வேண்டும். அந்த நபரிடம் கணக்கில் உளள பணத்தை வங்கி ஒப்படைக்கும். 

இருக்கின்ற வாரிசுகளில் யாராவது ஒருவர் இதற்கு உடன்பட மறுத்தாலும், இறந்தவரது பெயரில் கணக்கில் உள்ள பணத்தை யாருமே பெற முடியாது.

வாரிசுதாரர்களில் யாராவது வங்கி நடைமுறையை சரியாகப் பின்பற்றாமல் பணத்தை எடுத்தால், வங்கி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.

இது  மோசடியாக பணத்தை கையாள்வதற்கு நிகரானது. என்றாலும், இதில் வங்கி நேரடியாக தலையிட முடியாது. சம்பந்தப்பட்ட வாரிசுதாரர் அல்லது நாமினி புகார் கொடுத்தால் மட்டுமே வங்கியால் இதில் தலையிட முடியும். ஏனெனில், ஏடிஎம் கார்டு ஒருவரின் தனிப்பட்ட விஷயமாகும்.   

ஜாயிண்ட் அக்கவுண்டாக இருந்தால்....
வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் ஜாயின்ட் அக்கவுன்ட் (கணவன் – மனைவி அல்லது அப்பா-மகன்) என்று வைத்திருந்தால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஏடிஎம் கார்டு இருக்கும். 

ஜாயின்ட் அக்கவுன்ட் வைத்திருப்பவரில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால், இன்னொருவர் ஏடிஎம் கார்டு மூலமாக கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், அந்தப்பணம் இருவருக்குமே உரிமையானது. இருந்தபோதிலும், கணக்கு வைத்திருப்பவர்களில் ஒருவர் இறந்த செய்தியை வங்கிக்குத் தெரிவிப்பது முக்கியமானதாகும்’’ .

ஏடிஎம், நெட் பேங்கிங் உள்ளிட்ட அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும்  இதுபோன்ற  சூழ்நிலைகளில் சட்டப்படியான செயல்களை மேற்கொள்வதே நல்லதாகும்.

--------------------------------------------------------------------------------------செல்வம்பழனிச்சாமி-

Sunday, November 20, 2016

நெட் பேங்கிங் - அறிந்து கொள்ளுங்கள்


நெட் பேங்கிங் - அறிந்து கொள்ள வேண்டியவை - என்ன செய்ய வேண்டும்?

நெட் பேங்கிங்வசதி மூலம், பணப் பரி­வர்த்­தனை மேற்­கொள்­வது தவிர, மேலும் 
பல­வி­தங்­களில் வங்கிச் சேவை­களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இணையம் மூலம் வங்கிச் சேவையை பெற வழி செய்யும் நெட் பேங்கிங் வசதி, வேக­மாக பிர­ப­ல­மாகி வரு­கி­றது. 


பலரும் நெட் பேங்கிங் வச­தியை பயன்­ப­டுத்த துவங்­கி­யி­ருக்­கின்­றனர். எனினும் 
பெரும்­பா­லானோர் கணக்கில் மிச்­ச­முள்ள தொகையை அறி­யவும், பணப் பரி­வர்த்­தனை 
செய்­யவும் தான், இந்த சேவையை அதிகம் பயன்­ப­டுத்­து­கின்­றனர். நெட் பேங்கிங் 
வச­தியை மேலும் பல­வி­தங்­களில் பயன்­ப­டுத்திக் கொள்ள முடியும்.
நெட் பேங்கிங் வச­தியை பயன்­ப­டுத்தும் போது, வங்­கிகள் அதற்­கான இணை­ய­த­ளத்தை அமைத்­துள்ள விதத்தை சரி­யாக புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்­வொரு வங்கி 
இணை­ய­த­ளத்­திலும், பல்­வேறு வச­தி­களை அணுகும் வசதி வெவ்­வேறு இடங்­களில் இருக்­கலாம். 
உதா­ர­ண­மாக, எச்.டி.எப்.சி., வங்கி இணை­ய­த­ளத்தில் காசோலை புத்­த­கத்­திற்­கான கோரிக்கை வைக்கும் வசதி, ‘ரிக்வெஸ்ட்எனும் வேண்­டுகோள் பகு­தியில் இடம்­
பெற்­றுள்­ளது. ஸ்டேட் பேங்க் இணை­ய­த­ளத்தில் இந்த வசதி, இ- சர்­வீசஸ் எனும் 
பகு­தியின் கீழ் வரு­கி­றது. எனவே முதலில், வங்­கி­களின் இணை­ய­தள அமைப்பை புரிந்து கொண்டால், எந்­த­தெந்த சேவையை எப்­படி அணு­கலாம் என்­பதை தெரிந்து 
கொள்­ளலாம்.
மேலும் வச­திகள்இணை­ய­தளம் மூலம் காசோலை புத்­தகம் கோரு­வது தவிர
வழங்­கப்­பட்ட காசோ­லைக்­கான பணத்தை நிறுத்தி வைக்கும், ‘ஸ்டாப் பேமென்ட்’ 
கோரிக்­கை­யையும் வழங்­கலாம். இதற்­காக காசோலை விப­ரங்­களை குறிப்­பிட்டு, பணத்தை நிறுத்தி வைக்க கேட்­ப­தற்­கான கார­ணத்தை தெரி­விக்க வேண்டும். 

ஆனால் இந்த வச­தியை பயன்­ப­டுத்த கட்­டணம் செலுத்த வேண்­டி­யி­ருக்­கலாம் 
என்­பதை அறி­யவும்.இதே போலவே, இணையம் மூலமே வரை­வோலை எனப்­படும், ‘டிடிகோரும் வச­தியும் இருக்­கி­றது. உறுப்­பினர் தன் கணக்கில் இருந்து தொகை மற்றும் டிடியார் பெயரில் என, குறிப்­பிட வேண்டும். 
குறிப்­பிட்ட காலத்­திற்­கான வங்கி கணக்கு அறிக்கை விபரம் தேவை என்­றாலும் அதை இணை­ய­த­ளத்தில் பார்த்துக் கொள்­ளலாம் அல்­லது, ‘டவுன்­லோடுசெய்து கொள்­ளலாம். கே.ஒய்.சி., அப்டேட் கணக்கு தொடர்­பான தக­வல்­களை அறிந்து கொள்­வ­தோடு, கே.ஒய்.சி., விப­ரங்­களை அப்டேட் செய்­யவும் முடியும். இதற்­காக, இணை­ய­தளம் மூலமே கோரிக்கை வைக்­கலாம். மேலும் குறுஞ்­செய்தி மூலம் தக­வல்­களை கோரும் வச­தியில் இணை­யலாம்; அதி­லி­ருந்து விலகிக் கொள்­ளலாம். கணக்கில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள நாமினி பெயரை மாற்­றவும் கோரலாம். 
வங்கி இணை­ய­த­ளங்­களில் இதற்­கான வழி­மு­றைகள் கொடுக்­கப்­பட்­டுள்­ளன.பலரும் வங்­கி­களில், பணப் பரி­வர்த்­தனை சேவைகள் தவிர முத­லீடு தொடர்­பான வசதி­யையும் நாடு­கின்­றனர். காப்­பீடு, மியூச்­சுவல் பண்ட் ஆகிய சேவை­க­ளையும் வங்­கிகள் மூலம் பெற முடி­கி­றது. இது போன்ற முத­லீட்டு வச­தி­களை நிர்­வ­கிப்­ப­தற்கும் கூட இணைய வச­தியை பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம். வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி, டிமெட் கணக்கு மூல­மான பங்கு பரிவர்த்­தனை, காப்­பீடு சேவைகள் உள்­ளிட்­ட­வற்றை வங்கி இணை­ய­தளம் மூலம் பெறலாம். இதற்­கான பணத்தை வாடிக்­கை­யாளர் தன் 
கணக்­கி­லி­ருந்து இணையம் மூலமே செலுத்­தி­வி­டலாம். பங்கு பரி­வர்த்­தனை 
போன்­ற­வற்­றுக்­காக, வங்­கியில் டிமெட் கணக்கு துவக்க வேண்டும் என்­றாலும் எளி­தாக செய்து கொள்­ளலாம். டிமெட் கணக்கு துவக்க கூடுதல் கட்­டணம் இல்லை என்­றாலும், சில வங்­கிகள் ஆண்டு பரா­ம­ரிப்பு கட்டணம் வசூ­லிக்­கலாம். 

பரி­வர்த்­தனைமின் கட்­டணம், தொலை­பேசி கட்டணம் உள்­ளிட்ட பெரும்­பா­லான பில் தொகையை நெட் பேங்கிங் வசதி மூலம் செலுத்­தலாம். செலுத்­தப்­படும் தொகையை வாடிக்­கை­யாளர் பார்த்து பரி­சீ­லித்த பின் ஒப்­புதல் அளிக்கும் வச­தியும் இருக்­கி­றது. ஆனால் சில நேரங்­களில், பில் தொகை செலுத்­தப்­ப­டா­ம­லேயே பணம் பிடிக்­கப்­
ப­டு­வ­தாக சிலர் புகார் தெரி­விக்­கின்­றனர். 
இது போன்ற நேரங்­களில், வங்­கி­யிடம் முறை­யிட்டு சரி செய்து கொள்­ளலாம். இணையம் மூலம் பணம் செலுத்தும் போது தள்­ளு­படி கூப்­பன்கள் போன்ற 
சலு­கை­களை பெறும் வாய்ப்பும் இருக்­கி­றது.
எனினும் இணையம் வங்கிச் சேவையை பயன்­ப­டுத்தும் போது அது பாது­காப்­பான­தாக அமை­வ­திலும் கவனம் செலுத்த வேண்டும். நெட் பேங்கிங் நடை­முறை தொடர்­பாக 
சொல்­லப்­படும், ‘பாஸ்­வேர்டுபாது­காப்பு உள்­ளிட்ட அம்­சங்­களை தவ­றாமல் கடை­பி­டிக்க வேண்டும். சந்­தே­கத்­திற்கு இட­ம­ளிக்கும் வகை­யி­லான இ மெயில் இணைப்­பு­களை கிளிக் செய்­வது போன்­ற­வற்றை தவிர்க்க வேண்டும் என, வல்­லு­னர்கள் 
வலி­யு­றுத்­து­கின்­றர்.
நன்றி ; தினமலர் நாளிதழ் – 21.11.2016

நெட் பேங்கிங் - பணபரிமாற்றம்


நெட் பேங்கிங் - என்ன செய்ய வேண்டும்?
ஆன்லைன் மூலம் ஒரு வங்கியின் ஒரு கணக்கிலிருந்து, அதே வங்கியில் மற்றொரு வங்கி கணக்கிற்கு சுலபமாக பணத்தை மரிமாற்றம் செய்ய முடியும்.
வெவ்வேறு வங்கிகளில் உள்ள வங்கி கணக்குகளிடையே ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்ய 
NEFT(National Electronic Fund Transfer), 
RTGS(Real Time Gross Settlement) என்ற இரண்டு முறைகள் உள்ளன.

NEFT (National Electronic Fund Transfer)
ஆன்லைனில் ஒரு வங்கியின் கிளையில் இருந்து மற்றொரு வங்கியின் கிளைக்கு மிகவும் பாதுகாப்பாகவும், துரிதமாகவும் பணத்தை அனுப்புவதற்காக முதன் முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்ட முறை தான் NEFT(National Electronic Fund Transfer).

NEFT 2005ம் வருடம் அக்டோபர் மாதம் ரிசர்வ் வங்கியினால் அறிமுகப்படுத்தபட்டது.

NEFT இந்தியாவின் முதன்மையான ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையாகும்.

NEFTன் அடிப்படை IFSC(Indian Financial System Code) ஆகும்.

IFSC என்பது, 11இலக்கங்கள் கொண்ட எண்ணாலும், எழுத்தாலும் ஆனா ஒரு குறியீட்டு எண்ணாகும். 

இதில் முதல் 4 இலக்கங்கள் வங்கியின் பெயராக இருக்கும். இந்த 4இலக்கங்களுக்குப் பின் ஒரு பூஜ்ஜியம் இருக்கும். அதற்குப் பின் வருகின்ற ஆறு இலக்கங்கள் வங்கியின் கிளையைக் குறிக்கும்.

உதாரணத்திற்கு CUB00000104 என்ற அக்கவுன்ட் எண்ணில், 
CUB என்பது சிட்டி யூனியன் பேங்க் என்பதையும். 
அதப் பின் ஒரு பூஜ்ஜியமும், அதற்குப் பின் வருகின்ற ஆறு இலக்கங்கள் சிட்டி யூனியன் பேங்க் தமிழ் நாடு, 
சென்னை, நங்கநல்லூர் கிளையையும் குறிக்கிறது.

இந்த IFSC எண் வங்கிக் கணக்குப்புத்தகத்தில் அச்சிடப்பட்டிருக்கும். வங்கியில் நேரிடையாக அல்லது http://bankifsccode.com/ என்ற இணையத்தில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம்.

NEFT செயல்படும் முறை
நாம் ஒரு வங்கியின் கணக்கிலிருந்து ஆன்லைன் மூலம், மற்றொரு வங்கியின் கணக்கிலிருந்து ஆன்லைன் மூலம் பணம் அனுப்பியவுடன், அந்த தகவல் NEFT சேவை மையத்திற்கு (NEFT service centre) செல்லும்.
இந்த தகவலைப் பற்று கொள்ளும் NEFT சேவை மையம் அதை NEFT பட்டுவாடா மையத்துக்கு (NEFT Clearing Centre)க்கு அனுப்பி வைக்கும்.

இதனை ரிசர்வ் வங்கியின் கீழுள்ள தேசிய பட்டுவாடா செயலகம் (National Clearing Cell) பெற்றுக் கொள்ளும்.
இப்போது NEFT பட்டுவாடா மையம், வங்கி வாரியாகக் கணக்கினைத் தயார் செய்யும், அதாவது எந்த வங்கியில் இருந்து பணத்தை எடுக்க வேண்டும், எந்த வங்கிக்கு அனுப்ப வேண்டும் என்ற பட்டியல் தயாராகும். பணத்தை அனுப்பி வைக்க வேண்டிய வங்கிக்கான பட்டியல் தயாரானதும், அது NEFT சேவை மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

NEFT சேவை மையத்தில் இருந்து குறிப்பிட்ட பணம் பெரும் வங்கிகளுக்குச் செய்தி வந்தவுடன், வங்கிகள் அந்த பணத்தைக் குறிப்பிட்ட வங்கி கணக்கில் கிரெடிட் செய்துவிடும்.

அதாவது அன்றாடம் நடைபெறுகின்ற ஒவ்வொரு பணப்பரிமாற்றமும் NEFT பட்டுவாடா மையத்துக்குப் போய்விடும். அம்மையம் அவற்றை உடனடியாக செயல்படுத்தாது. மொத்தமாக ஒரு குறிப்பிட்ட பணப்பரிமாற்றங்கள் வந்தவுடன் அவற்றை செயல்படுத்தும்.

எனவே, NEFT மூலம் நாம் பரிவர்த்தனை செய்யும் பணம் உடனுக்குடன், பட்டுவாடா செய்யப்பட மாட்டாது. குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப் படுகிறது.

NEFT – சில முக்கிய தகவல்கள்
NEFT மூலம், வார நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பணம் அனுப்பலாம். 9.00/ 11.00/ 12.00/1.00 /3.00 /5.00 என்று வார நாட்களில் 6 சுற்றுக்களில் பணப்பரிமாற்றம் நடைபெறும். உதாரணத்துக்கு 1.05க்கு நாம் பணம் அனுப்பினால் அது 3 மணி சுற்றில் சேர்ந்து விடும். 5 மணிக்கு நாம் அனுப்பியவரின் கணக்கில் பணம் கிரெடிட் ஆகி விடும்.

சனிக்கிழமைகளில் 9.00 மணி 11.00 மணி, 12.00 மணி என்று 3 சுற்றுக்களில் பணபரிமாற்றம் நடைபெறும். உதாராணத்துக்கு 12.05 மணிக்கு நாம் பணம் அனுப்பினால், அது வங்கியின் அடுத்த வேலை நாளான திங்கள் அன்று 9 மணி சுற்றில் தான் வரும். 11 மணிக்கு நாம் அனுப்பியவரின் கணக்கில் பணம் கிரெடிட் ஆகிவிடும். இவை வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றத்துக்கு உட்பட்டதாகும்.

NEFT மூலம் குறைந்தபட்சத தொகையாக 1ரூபாய் முதல் அதிகபட்சமாக 2,00,௦௦௦ லட்சம் ரூபாய் வரை பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும். இவை வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றத்துக்கு உட்பட்டதாகும்.
NEFT மூலம் இந்தியாவில் உள்ள எல்லா ஊருக்கும் பணபரிமாற்றம் செய்ய முடியும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் NRE, NRO கணக்குகள் வைத்திருந்தால், அந்தந்த வங்கிகளின் விதிமுறைகளுக்கு ஏற்ப, இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு பணம் அனுப்ப முடியும்.

NEFT மூலம் அனுப்பபடுகின்ற பணத்தை பெறுபவர்களுக்குக் கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால் பணத்தை அனுப்புபவருக்கு சேவை கட்டணமும், சேவை வரியும் உண்டு. இவை வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றத்துக்கு உட்பட்டதாகும்.

வங்கியில் Savings Account, Current Account, ODCC Account, NRE, NRO வைத்திருப்பவர்கள் NEFT மூலம் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.

Muhammadh

நன்றி : ஆதிரைப்பிறை - 08.09.2015

Saturday, November 19, 2016

ஃபேஸ்புக் மார்க் சக்கர் பெர்க்


”ஃபேஸ்புக்” மார்க் சக்கர்பெர்க் வரலாறு - என்ன செய்ய வேண்டும்?
மார்க் சக்கர்பெர்க்... காலத்தை வென்ற இளைஞன்!
“உன்கிட்ட ஃபேஸ்புக் அக்கவுன்ட் இல்லையா....” என்று சொல்லி கலாய்க்கும் அளவுக்கு ஃபேஸ்புக் நம்முடைய அத்தியாவசிய சொத்துக்களில் ஒன்றாகவே மாறிவிட்டது.
கணினியும் இணையமும் எப்படி 20-ம் நூற்றாண்டு மக்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆட்டிப் படைத்ததோ அதே போல், 21-ம் நூற்றாண்டு மக்களை ஃபேஸ்புக் ஆட்கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே மக்களின் மனம் கவர்ந்த தலைவனாக நிமிர்ந்து நிற்கிறார் மார்க் சக்கர்பெர்க். இத்தனைக்கும் இவருக்கு வயது 32. இவருடைய சொத்து மதிப்போ ரூ.2.38 லட்சம் கோடி.
மார்க் சக்கர்பெர்க்கின் இந்த வளர்ச்சிக்கு என்ன காரணம்?, அமெரிக்க அதிபர் போட்டியில் இருக்கும் தலைவர்களோடு ஒப்பிட்டு அவர்களைவிட நல்ல தகுதிகள் மார்க்குக்கு இருப்பதாகவும் சொல்கிறார்களே, அப்படி என்ன செய்துவிட்டார் என்பதை தெரிந்துகொள்வதற்கு முன் மார்க்கின் ஆரம்ப காலத்தைப் பார்ப்போம்.
மார்க் ஒரு மேதை!
1984-ம் ஆண்டு மே 14 அன்று பிறந்தார் மார்க் சக்கர்பெர்க். அவரது தந்தை எட்வர்ட் சக்கர்பெர்க், ஒரு பல் மருத்துவர். அவருடைய மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை வரிசைப் படி, சிகிச்சைக்கு அழைக்க ஒரு அப்ளிகேஷனை உருவாக்கிய போது அவருக்கு வயது வெறும் 12. பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு முன்பே, ‘மெர்ஸி’ கல்லூரியில் சேர்ந்து பட்டப் படிப்பை முடித்துவிட்டார். மார்க்கின் புரோகிராமிங் திறமையை வளர்க்கப் பெற்றோரால் நியமிக்கப்பட்ட ஆசிரியர், இவரது திறமையைப் பார்த்து ’மார்க் ஒரு மேதை’ என்று குறிப்பிட்டார்.
2004-ம் ஆண்டு, தான் படித்துகொண்டிருந்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தூங்கும் அறையிலிருந்து விளையாட்டாக ஆரம்பித்ததுதான் ஃபேஸ்மேஷ். கல்லூரி மாணவர்கள் தங்களுக்கிடையே உரையாடிக் கொள்ளவும், தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும் மட்டுமே தொடங்கப்பட்டது.
அப்போது அவருக்கே தெரிந்திருக்கவில்லை இதன் வீரியம் உலகை ஆளப் போகிறது என்று. இதற்காகக் கல்லூரி டேட்டா பேஸைத் திருடி தண்டனையும் பெற்றார். ஆனாலும் தொடர்ந்து அதன் ஆராய்ச்சியிலேயே இருந்ததால் ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப் பட்டார்.
உலகின் புகழ்பெற்ற பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறியதும் அவருக்கு புரோகிராமிங் ஆராய்ச்சியே முழுநேர வேலை யாகிப் போனது. ‘தி ஃபேஸ்புக்’ உருவானது. சிவப்பு, பச்சை நிறத்தைப் பிரித்தறிய முடியாத நிறக்குருடு நோய் காரணமாக நீல நிறத்தில் உருவாக்கினார்.
ஜாம்பவான்களை மிஞ்சிய மார்க்!
இன்று ஃபேஸ்புக்கை 160 கோடிக்கும் மேலானோர் பயன்படுத்துகின்றனர். ஒருசில நாடுகளில் ஃபேஸ்புக் தடை செய்யப்பட்டிருந்தாலும் மறை முகமாக அந்நாட்டு மக்கள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்து கிறார்கள். ஃபேஸ்புக் வலை தளத்தை ஹேக் செய்ய ஒரு நாளுக்கு 6 லட்சம் முயற்சிகள் நடக்கின்றன.
2006-ல் ஃபேஸ்புக்கை ஹேக் செய்த கிரிஸ் புட்னாமை தனது நிறுவனத்திலேயே வேலைக்கு எடுத்துக்கொண்டார் மார்க். ஆனால் அதற்குப் பின் யாராலும் ஃபேஸ்புக்கை ஹேக் செய்ய முடியவில்லை. சராசரியாக ஒவ்வொரு ஃபேஸ்புக் யூசரும் நாள் ஒன்றுக்கு 40 நிமிடமாவது ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்கள்.
ஃபேஸ்புக்கில் மாதம் ஒன்றுக்கு சுமார் 250 கோடி போட்டோக்கள் அப்லோட் செய்யப்படுகிறது. வீடியோக்கள் தற்போது ஃபேஸ்புக்கில் மிக வேகமாகப் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஃபேஸ்புக் மெருகேறி வளர்ந்து கொண்டிருக்கிறது.
கணினி மற்றும் இணைய உலகில் ஜாம்பவான்களாக இருக்கும் பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் இருவரின் சாதனைகளை எல்லாம் முறியடித்துக் கொண்டிருக்கிறார் மார்க். பில் கேட்ஸ் மைக்ரோ சாஃப்ட்டை தொடங்கும்போது வயது 20. மார்க் ஃபேஸ்புக்கை தொடங் கும்போது வயது 19. மார்க் 23 வயதிலெல்லாம் பில்லினியர் என்ற தகுதியைப் பெற்றார். ஆனால், பில்கேட்ஸ் 30 வயதாகிய நிலையிலும் பில்லினியர்் என்ற நிலையை அடையவில்லை. பில்கேட்ஸ் 30 வயதில்தான் ஐபிஓ வெளியிட்டார். ஆனால் மார்க் 28 வயதிலேயே ஐபிஓ வெளியிட்டு விட்டார். மார்க் 2010-ல் தனது 26 வயதில் டைம் இதழின் ‘பர்சன் ஆஃப் தி இயர்’ என்றப் பட்டத்தை பெற்றார். ஆனால், பில்கேட்ஸ் தனது 50 வயதில்தான் அந்த இடத்தைப் பிடித்தார்.
இனி ஃபேஸ்புக்தான் கூகுளுக்கே கேட்வே!
இணையத்தின் வளர்ச்சி அதிகரித்தபோது எவ்வளவோ தேடுதல் பொறிகள் வந்த போதும் கூகுளை மிஞ்ச யாராலும் முடியவில்லை. ஆனால், கூகுளில் நாம் தேடும் தகவலை அவ்வளவு விரைவாகப் பார்க்க முடியாமல் போனது. அதற்கு கூகுள் விளம்பரங்களும் அதன் விளம்பர தாரர்களின் செய்திகள் முன்னிலையில் வருவதும் காரணமாக இருந்தது.
ஆனால், ஃபேஸ்புக் அதை மாற்றியது. ஃபேஸ்புக் பயனாளிகளுக்கு தேவையானதை விரல்நுனியில் கொண்டு வந்தது. அல்காரிதம் மூலம் ஃபேஸ்புக் பயனாளிகள் அனைவரையும் அதில் பங்கு பெறும்படி மாற்றியதால் அது எல்லோராலும் தவிர்க்க முடியாதபடி மாறியது.
இளைஞன், கணவன், தலைவன்!
சுருட்டை முடியும், குழந்தை முகமும், சாம்பல் நிற டிசர்ட்டும் போட்டுத் திரிந்த இளைஞனும், சிலிகன் வேலியின் செல்லப் பிள்ளையுமான மார்க் ஒரு அன்பான கணவனாகவும், அழகான தந்தையாகவும் மாறியிருக்கிறார்.
சமீபத்தில் பிறந்த தனது மகள் மேக்ஸிலா சான் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு தன்னை தனது ஃபேஸ்புக்கின் முதல் பயனாளியாகவும், ரசிகனாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார். இது எல்லோரின் வரவேற்பையும் பெற்றது.
2010-ல் ஏற்கெனவே தனது சொத்தில் பாதியை அறக்கட்டளைக்காக அளித்த மார்க், தனது மகளின் பிறப்பைக் கொண்டாடும் வகையிலும், உலகக் குழந்தை களின் நலனுக்காகவும் ஃபேஸ்புக்கின் 99 சதவிகிதப் பங்குகளை நன்கொடை செய்துள்ளார். இவரது மனைவி பிரிசில்லா சான், ஏழை குழந்தை களுக்கு இலவச கல்வி அளிக்கும் ஒரு அமைப்பும் தொடங்கி உள்ளார்.
இதையெல்லாம்விட, இளைஞன் மார்க் அமெரிக்க அதிபராவதற்கு அத்தனை தகுதி களையும் கொண்டிருப்பதாக மக்கள் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். காரணம், அனைவரையும் அரவணைக்கும் அவரது பண்பு. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப், முஸ்லீம்களை அமெரிக்காவுக்குள் வரவிட மாட்டேன் என்று சொன்னதை மார்க் தவறு என்று சொன்னார்.
அதோடு ஃபேஸ்புக் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் தாக்குதல் நடவடிக்கைகளைத் திட்டமிடுவது தெரிந்து அதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு பல பாதுகாப்பு ஏற்பாடுகள் வைக்கப் பட்டு உள்ளதாகவும் கூறினார்.
“அதற்காக அவர்களுக்கு இணையத்தையும் ஃபேஸ்புக்கையும் தடை செய்வது நியாயமாகாது. நான் இணையத்தை மட்டும் மாற்ற நினைக்கவில்லை, உலகையே மாற்ற நினைக்கிறேன். ஏற்கெனவே மக்கள் குழுக்களாகப் பிரிந்து கிடக்கிறார்கள். அவர்களை மேலும் மேலும் பிரிக்காமல் ஒருங்கிணைக்க முயற்சிப்போம்” என்று கூறியுள்ளார். அமெரிக்க அதிபர்களிலேயே ஒபாமாவை சிறந்தவராகக் குறிப்பிடக் காரணம், அவர் அனைவரையும் அன்பு என்ற விஷயத்தினால் அரவணைத்ததுதான் என்கிறார்.
மக்களோடு மக்களாகப் பயணிக்கும் பண்பு, உலக மக்களின் நலனுக்காக தன் சொத்துக்களைப் பகிர்ந்தளிக்கும் தாராள குணம், தகவல் மற்றும் இணைய தொழில்நுட்பத்தில் யாரும் அடையாத முடியாத உச்சம் என தனது 30 வயதிலேயே பணமும் பாசமும் காதலும் புகழும் வாய்க்கப் பெற்று காலத்தை வென்ற இளைஞனாக ஜொலிக்கும் மார்க்குக்கு லைக்கோ லைக்ஸ்தான்.
ஜெ.சரவணன்
நன்றி : நாணயம்விகடன் - 29.05.2016