disalbe Right click

Showing posts with label பணம். Show all posts
Showing posts with label பணம். Show all posts

Thursday, March 22, 2018

உடனடி மணியார்டர் பற்றி.....

பால் அலுவலகங்களில் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பும் வசதி நமக்கு ஏற்கனவே தெரியும். இதன் மூலம் அனுப்புகின்ற பணம் போய்ச் சேர்வதற்கு இரண்டு, மூன்று நாட்கள் வரை ஆகும். இதிலேயே தந்தி மணி ஆர்டர் என்ற சேவையில் நாம் விரைவாக மற்றவருக்குப் பணம் அனுப்ப முடியும்.. இதனால். ஒரு நாளிலேயே பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இணையதளம் மூலமாக.....
இணைய தளம் வழியாக பணம் அனுப்பும் வசதியை IMO (Instant Money Order) இப்போது தபால் துறை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் இரண்டு நபர்கள் இண்டர்நெட் மூலம் பணம் அனுப்பும் உடனடி மணி ஆர்டர் சர்வீசில் 10 நிமிடத்திலேயே பணம் அனுப்பவும். பெறவும் முடியும்.
எவ்வளவு அனுப்ப முடியும்?
குறைந்த கட்டணத்தில் ரூ.50 ஆயிரம் வரை இணைய தளம் வழியாக பணம் அனுப்பலாம். பணம் அனுப்ப நினைத்து, அணுகும் நபருக்கு அஞ்சல் நிலையங்களில் உள்ள சேவை மையங்களில் பணத்தைச் செலுத்திய பிறகு, அவரிடம் ரகசியமாக 16 இலக்க எண் ஒன்று வழங்கப்படும். அந்த எண்ணை வழங்குபவருக்குக் கூட அந்த எண் எது என்பது தெரியாது. அவர் யாருக்கு பணம் அனுப்புகிறாரோ அவருக்கு அந்த எண்ணை மெயில் அல்லது செல்போன் மூலமாக அந்த எண்ணை தெரிவிக்க வேண்டும்.
பணத்தைப் பெறுபவர் தன் அடையாள அட்டை மற்றும் 16 இலக்க ரகசிய எண்ணை, தபால் நிலையங்களில் காண்பித்து அந்த பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவையின் மூலம் அனுப்புவதும் பெறுவதும் மிகவும் எளிதானது.
கட்டணம் எவ்வளவு?
இந்த சேவையில் ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரைக்கும் உடனடி மணியார்டர் அனுப்ப ரூ.100 கட்டணம். ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ரூ.110 கட்டணம். அதற்கு மேல் ரூ.50 ஆயிரம் வரை ரூ.120 கட்டணம் வசூலிக்கப்படுகிறது
*********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 23.03.2018

Wednesday, January 11, 2017

பணமில்லா பரிவர்த்தனை


பணமில்லா பரிவர்த்தனை

ரொக்கமில்லா பண பரிவர்த்தனை!

நவ., 8, 2016 - அன்று தான், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்தது, மத்திய அரசு.கறுப்பு பணம் ஒழியுமா, இல்லையா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, மக்கள் வேறொரு நிலைக்கு தள்ளப்பட்டு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு தயாராக வேண்டிய நிலைக்கு வந்து விட்டனர்.

ரொக்கமில்லா பண பரிவர்த்தனைகளை, எப்படியெல்லாம் செய்யலாம், அவற்றிற்கான சாதனங்கள் எவை, அவற்றை எப்படிப் பெறுவது மற்றும் பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்:

டெபிட் கார்டு - பற்று அட்டை:
'டெபிட்' கார்டு அதாவது, பற்று அட்டை என்றால் என்ன?

நீங்கள் எங்கே போனாலும், உங்கள் நண்பர் ஒருவர் கூடவே வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம், உங்கள் சேமிப்பை கொடுத்து வைத்திருக்கிறீர்கள். கடைக்கு போனதும் சில பொருட்களை வாங்குகிறீர்கள். பின், அந்த நண்பரிடம் அதற்கான தொகையை சொல்கிறீர்கள்; உடனே, அந்த நண்பர் அத்தொகையை, கடைக்காரரிடம் கொடுத்து விடுவார்.

இங்கு, நண்பருக்கு பதிலாக, வங்கி செயல்படுகிறது; அவ்வளவு தான். நண்பரை போல், வங்கி உங்களுடன் கூடவே வர முடியாது; எனவே, தன் சார்பாக, 'டெபிட்' அட்டையை உங்களுக்கு தருகிறது, வங்கி. 

கடையில், பொருட்கள் வாங்கியவுடன், 'டெபிட்' அட்டையை, கடைக்காரரிடம் இருக்கும், சிறு கருவியில், 'ஸ்வைப்' செய்தால் போதும்; 

அதிலுள்ள காந்தப் பெட்டியில் உங்கள் வங்கி கணக்கு விவரங்கள் பதிவாகி, உங்கள் கணக்கிலிருந்து, அத்தொகை கழிக்கப்பட்டு, கடைக்காரரின் கணக்குக்கு, வங்கியால் மாற்றப்பட்டு விடும். 'டெபிட்' அட்டையை, 'செக்கிங்' அட்டை என்றும் கூறுவதுண்டு.

கிரெடிட் கார்டு - கடன் அட்டை:

கிரெடிட் கார்டு - கடன் அட்டை என்றால் என்ன?

உங்களுடன் வரும் நண்பரிடம் உங்கள் சேமிப்பான, 2,500 ரூபாயை கொடுத்து வைத்துள்ளீர்கள். கடையில், நீங்கள் மொத்தம், 3,500 ரூபாய்க்கு பொருட்களை வாங்கியுள்ளதாக, கடைக்காரர் தெரிவிக்கிறார். இதை, நண்பரிடம் கூறுகிறீர்கள். அவர், நீங்கள் கொடுத்த, 2,500 ரூபாயுடன், தன் பணமான, 1,000 ரூபாயை சேர்த்து கடைக்காரருக்கு கொடுக்கிறார். அவர், அதை சும்மா கொடுத்து விடவில்லை. அந்த, 1,000 ரூபாயை, நீங்கள் அந்த நண்பருக்கு, மாதக் கடைசிக்குள் கொடுத்து விட வேண்டும். இந்த நண்பரை, வங்கி அளிக்கும், கடன் அட்டையுடன் ஒப்பிடலாம்.

இப்படி செய்வதால், வங்கிக்கு நஷ்டம் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்; இல்லை என்பது தான் பதில். ஏனென்றால், கடன் அட்டை மூலம் பொருட்களை வழங்கும் கடைக்காரர்கள், மாத கடைசியில் தான், இந்த பரிவர்த்தனை விவரங்களை, வங்கிக்கு அளித்து, அப்பணத்தை பெற்றுக் கொள்வர். 

மாத கடைசிக்குள், நீங்கள், உங்கள் வங்கி கணக்கில் உரிய பணத்தை செலுத்தவில்லை என்றால் கூட, வங்கி, கடைக்காரருக்கு உரிய முழு தொகையை செலுத்தி விடும்; ஆனால், உங்களிடம் அதிகப்படி தொகையை, கொழுத்த வட்டியுடன், திரும்ப வசூலித்து விடும்.

டெபிட் அல்லது கிரெடிட் - 

எந்த அட்டையை நீங்கள் பெற வேண்டுமென்றாலும், உங்களுக்கு, வங்கி கணக்கு இருக்க வேண்டும். பொதுவாக, டெபிட் அட்டையை, வங்கி, எளிதில் வழங்கி விடும். ஆன்லைனில் கூட, 'டெபிட்' அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆனால், கடன் அட்டையை, அவ்வளவு சுலபத்தில் தந்து விடாது. அதற்கு, சிறிது காலமாவது, வங்கியில், நீங்கள், உங்கள் கணக்கை எந்த சிக்கலுமின்றி இயக்கியிருக்க வேண்டும். அதில் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச தொகையை, நீங்கள் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். நீங்கள், அந்த வங்கியில், ஏதாவது கடன் பெற்றிருந்தால், அதற்கான தவணைகளை, உரிய காலத்தில் செலுத்தியிருக்க வேண்டும். இதிலெல்லாம் அந்த வங்கி திருப்தியானால் மட்டுமே, உங்களுக்கு கடன் அட்டை வழங்கும்.

நீங்கள் விண்ணப்பித்த சிறிது நாட்களில், உங்களுக்கு, 'டெபிட்' அட்டை அல்லது கடன் அட்டை வந்து சேர்ந்தவுடன், அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம். 

வங்கியில், உங்களுக்கு ரகசிய எண்ணை கொடுப்பர். இந்த ரகசிய எண்ணை, நீங்கள் குறிப்பிட்டால் தான், அட்டை பயன்பாட்டை துவக்க முடியும். 

வங்கி அளித்த ரகசிய எண்ணை தான், நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. நீங்களாகவே, நான்கு இலக்கு கொண்ட ரகசிய எண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

கடன் அட்டையை பயன்படுத்துவதில் பல ஆதாயங்கள் உண்டு. உங்கள் கணக்கில், இப்போதைக்கு தொகை இல்லையென்றால் கூட நீங்கள், கடன் அட்டை மூலம் பொருட்களை வாங்க முடியும். 

தவிர, கடன் அட்டையை அதிகமாக பயன்படுத்தும் போது, உங்களுக்கு பாயின்ட்கள் வழங்குவர். இதைக் கொண்டு, நீங்கள், சில கடைகளில், பரிசு பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

சில வகை கடன் அட்டைகளை பயன்படுத்தும் போது, விற்பனை தொகையில், ஒன்றிலிருந்து, ஐந்து சதவீதம் வரை தள்ளுபடியும் அளிப்பதுண்டு.

கடன் அட்டையை பயன்படுத்தும் போது, சில விமான சர்வீஸ்கள், தங்கள் கட்டணத்தில், சலுகை கொடுக்கும். வங்கிகள் வழங்கிய கடன் அட்டை என்றாலும், இவற்றில் மாஸ்டர் கார்டு, விசா கார்டு என்றெல்லாம் போட்டிருப்பர். இந்த அமைப்புகளுக்கும், விமான சர்வீஸ் நிறுவனங்களுக்கும் இடையே உள்ள ஒப்பந்தம் இது!

எனினும், நீங்கள் கீழ்காணும் குணம் கொண்டவராக இருந்தால், கடன் அட்டையை தவிர்ப்பது நல்லது. 

உங்களால் குறிப்பிட்ட காலத்துக்குள், சரியான தொகையை உங்கள் கணக்கில் செலுத்த முடியவில்லை என்றால், எக்கச்சக்கமான வட்டியை செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள், இயல்பாகவே வரவுக்கு மீறி செலவு செய்பவர் என்றால், 'டெபிட்' அட்டை தான் உங்களுக்கு லாயக்கு!'

உங்கள், 'டெபிட்' அட்டை தொலைந்து விட்டால், அதிகபட்சம், உங்கள் கணக்கிலுள்ள தொகை தான், களவு போகும்; ஆனால், கடன் அட்டை தொலைந்து விட்டால், நீங்கள், உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கா விட்டால், ஏமாற்றப்படும் தொகை, மிக அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு.

'டெபிட்' அட்டையோ, கடன் அட்டையோ தொலைந்தால், நீங்கள் உடனடியாக உங்கள் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு தெரிவித்து, அதை பெற்றதற்கான, 'அக்னாலட்ஜ்மென்ட்' வாங்கிக் கொள்ளுங்கள். மேலும், அருகிலுள்ள காவல் நிலையத்தில், தொலைந்து போன விவரத்தை பதிவு செய்து, எப்.ஐ.ஆர்., பெற்றுக் கொள்வது நல்லது.

உங்களுக்கு வங்கியில் கணக்கே இல்லையென்று வைத்துக் கொள்வோம். 

அதேசமயம், கையில் தொகையை எடுத்துக் கொண்டு வெளியே செல்லப் பிடிக்கவில்லை. அதுவும், வெளியூர் செல்லும் போது, உங்களுக்கு, 'டெபிட்' அட்டையோ, கடன் அட்டையோ அதிகம் பயன்படும். என்ன செய்யலாம்?

ப்ரிபெய்ட் டெபிட் கார்டு

ப்ரிபெய்ட் டெபிட் கார்டு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதாவது, வங்கியில் குறிப்பிட்ட தொகையை செலுத்தி, அத்தொகைக்கான, 'டெபிட்' அட்டையை பெற்றுக் கொள்ளலாம். அந்த வங்கியில், உங்களுக்கு கணக்கு இருக்க வேண்டும் என்பதில்லை. 
பின், வழக்கமான, 'டெபிட்' அட்டை போலவே, அதை நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால், ஒரு முக்கிய விஷயம். இந்த ப்ரீபெய்டு டெபிட் அட்டை தொலைந்து விட்டால், வங்கி உங்களுக்கு உதவிக்கு வராது. 

இந்நிலை மாற வேண்டும் என்றும், 'பிற வழக்கமான டெபிட் அட்டைதாரர்களுக்கு உள்ள பாதுகாப்புகளை இவர்களுக்கும் வங்கி தர வேண்டும்...' என்றும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 

ஆனால், அது, அக், 1, 2017 - லிருந்து தான் நடைமுறைக்கு வர இருக்கிறது.

இவை மட்டுமல்ல, ரொக்கமில்லா பண பரிவர்த்தனைகளை நடைமுறைப்படுத்த, வேறு பல, 'ஆயுதங்களும்' உள்ளன.


- ஜி.எஸ்.சுப்ரமணியன்

நன்றி : தினமலர் (வாரமலர்) - 08.01.2017

பிட்காயின்... கண்ணுக்குத் தெரியாத கம்ப்யூட்டர் பணம்!


பிட்காயின்... கண்ணுக்குத் தெரியாத கம்ப்யூட்டர் பணம்!

பணத்துக்கு இரண்டு அடையாளங்கள் உண்டு - ஒன்று, அது எந்த நாட்டைச் சேர்ந்தது; இரண்டு, அந்த நாட்டு அரசால் அல்லது மத்திய வங்கியால் உருவாக்கப்பட்டது என்பதாகும்.
ஆனால் எந்தவொரு நாட்டையும் சேராமல், எந்தவொரு நிறுவனத்தையும் சேராமல் கணினி மூலம் அடையாளம் தெரியாத சிலரால் உருவாக்கப்படும் பிட்காயின் என்கிற பணம்தான் இப்போது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவலாக பரிவர்த்தனையில் பயன்படுத்தப் படுகிறது.

நேரில் பார்க்க முடியாத இந்த பிட்காயின், கணினி மென்பொருளில் மறைந்து கொண்டிருக்கிறது.

பிட்காயின் சூத்ரதாரிகள்!  

மூன்றாம் நிறுவனத்தின் துணை இல்லாமல் இரு நபர்கள், தங்களிடையே பணப் பரிவர்த்தனை செய்வதையும்,  அந்தப் பரிவர்த்தனையை உறுதி செய்து, அதே நேரத்தில் இருவரின் அடையாளங்களைப் பாதுகாத்து வைக்கவும் ஒரு கணினி முறையை உருவாக்கியுள்ளதாக ‘Bitcoin: A Peer-to-Peer Electronic Cash System’ என்ற கட்டுரை மூலமாக சதோஷி நகமொடோ (Satoshi Nakamoto) என்பவர் 2008-ல் அறிவித்தார்.
இது ஒரு புனைப்பெயர் என்று அறியப்பட்ட பிறகு இதனை ஒருவர் அல்லது ஒரு சிலர் எழுதி இருக்கலாம் என்று கூறப்பட்டது. அடுத்த சில மாதங்களில் பிட்காயின் ஆர்வலர்கள் இந்தக் கட்டுரையின் அடிப்படையில் ஒரு கணினி மென்பொருளை உருவாக்கி வெளியிட்டனர். பிட்காயினுக்கான இந்த மென்பொருளை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

பிட்காயினை ‘மைனிங்’ மூலம் பெறலாம். மாறாக, இதற்காக உள்ள சந்தைகளில் எந்தவொரு நாட்டின் பணத்தையும் கொடுத்து பிட்காயினை பெறலாம். பிட்காயின் வாட்ச் (Bitcoin Watch) என்ற இணையதளத்தில், இந்த சந்தைகளில் நிலவும் மாற்று விகிதங்கள் தரப்பட்டிருக்கும். தற்போது 16 மில்லியன் பிட்காயின்கள் இருப்பதாகவும், அவற்றின் அமெரிக்க டாலர் மதிப்பு 11 பில்லியன் என்றும் இந்த இணையதளம் கூறுகிறது.

மைக்ரோசாஃப்ட், விக்கிபீடியா, டெஷ்லா (Tesla) போன்ற பல நிறுவனங்கள் பிட்காயினை பணமாக ஏற்றுக்கொண்டுள்ளன.  ஒவ்வொரு நாளும் பிட்காயினை ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. அதேபோன்று பிட்காயினின் பயன்பாடு புதிதாக பல நாடுகளுக்கு விரிவடையலாம்.

ஸ்பெஷல் அம்சங்கள்! 

கணினி பணத்தில் என்ன புதுமை இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இன்றும் கணினி முறையில்தான் பணம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதிலும் அசல் பணம் கைமாறுவதில்லை. உதாரணமாக, ஒரு  டெபிட் கார்டை பயன்படுத்தி கடையில் பணம் செலுத்தினால், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் கடைக்காரரின் வங்கி கணக்குக்கு செல்ல இடையில் ஒரு விசா, மாஸ்டர் கார்டு போன்ற ஒரு மூன்றாம் நிறுவனம் இருக்கிறது.
இவ்வகையான எந்த ஒரு மூன்றாம் நிறுவனத்தின் துணை இல்லாமல், ஒரு நபர் நேரடியாக மற்றொரு நபருக்கு பணத்தை கணினி மூலம் அனுப்புவது பிட்காயினின் சிறப்பு (Peer to Peer transfer).

எங்கேயும் எப்போதும்! 

இவ்வாறான பிட்காயின் பணப் பரிவர்த்தனைக்குக் கட்டணம் கிடையாது அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் (தற்போது உள்ள வங்கிக் கட்டணத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கைவிடக் குறைவு) பத்து நிமிடங்களில்  அல்லது அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் பிட்காயின் மூலம் அனுப்பலாம்.
நாடுகளுக்கிடையே பிட்காயின் அடிப்படையில் வர்த்தகம் நடைபெறும் போது அந்நியச் செலாவணி மாற்று விகிதத்தைப் பற்றி கவலைப்படாமல் வியாபாரம் செய்ய முடியும். இது பன்னாட்டு வர்த்தகத்துக்கு பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

உருவமில்லா பணம்!

கணினிப் பணம் என்பதால், பிட்காயினுக்கு உருவம் கிடையாது; ஆனால், எண்ணிக்கை உண்டு. ஒரு பிட்காயின் என்பதை  என்று குறிப்பிடலாம். ஒரு பிட்காயினின் ஆயிரத்தில் ஒரு பகுதியை ஒரு மில்லி பிட்காயின் (0.001) என்றும், பத்து லட்சத்தின் ஒரு பகுதியை மைக்ரோ பிட்காயின் (0.000001)  என்றும், பத்து கோடியின் ஒரு பகுதியை சதோஷி (0.00000001) என்றும் குறிப்பிடுகின்றனர்.  ஒரு பொருளின் மதிப்பை மிகத் துல்லியமாக பிட்காயின் மூலம் தெரிவிப்பது எளிது.
பிட்காயின் அளவைக் கணக்குவழக்கு இல்லாமல் உயர்த்த முடியாது. அதிகபட்சம் 21 மில்லியன் பிட்காயின்களைத்தான் உருவாக்க முடியும்.

யாருக்கும் தெரியாது! 

சட்ட ரீதியான அரசின் அங்கீகாரம் பெறாத பிட்காயினை எப்படிப் பணம் என்று பலர் பயன்படுத்துகின்றனர்?
காரணம், அதன் மீது இருக்கும் நம்பிக்கை மட்டுமே. ஒரு பணத்தின் மீது எவ்வாறு நம்பிக்கை வருகிறது? போலிப் பணத்தை உருவாக்க முடியாது என்றால் உண்மைப் பணத்தின் மீது நம்பிக்கை தானாகவே வரும். பிட்காயினை உருவாக் கும் தொழில்நுட்பத்தில் அதன் உண்மை தன்மையும், அதன் அடிப்படையில் அதன் மீதான நம்பிக்கையும் உருவாகிறது.

இப்போது உள்ள தொழில்நுட்பத்தில் யாராலும் போலி பிட்காயினை உருவாக்க முடியாது. அதே நேரத்தில் ஒருவரிடம் எவ்வளவு பிட்காயின் உள்ளது என்பதை யாராலும் அறியமுடியாது. இதனால் ஒருவர் சேர்த்த சொத்தினை  மறைத்து வைப்பதற்கு பிட்காயின் ஒரு சிறந்த முறையாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது.

ப்ளாக் செயின்! 

பிட்காயினை உருவாக்க, அதன் பரிவர்த்தனை களைப் பதிவு செய்ய, பிட்காயினைச் சேர்த்து வைக்க ஒரு ஒருங்கினைந்த மென்பொருள் உண்டு. இந்த மென்பொருளை பிட்காயின் பயன்படுத்தும் அனைவரும் தங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து வைப்பார்கள். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி, ஒவ்வொரு பிட்காயின் பரிவர்த்தனையும் ஓப்பன் லெட்ஜர் முறையில் எல்லாருக்கும் தெரியும் வகையில் கணக்கில் வைக்கப்படும்.

அதாவது, ஒவ்வொரு பிட்காயின் பரிவர்த்தனையும் எல்லா பிட்காயின் ஆர்வலர்களுக்கும் தெரியும் வகையில் ஓப்பன் லெட்ஜரில் பதிவு செய்யப்படும். இந்த ஓப்பன் லெட்ஜரின்  பிரதி, எல்லா பிட்காயின் ஆர்வலர்களின் கணினியிலும் இருக்கும். எனவே, யாருக்கும் தெரியாத வகையில் பிட்காயின் பரிவர்த்தனை நடைபெற வாய்ப்பு இல்லை. கணக்கில் வராத கறுப்பு பிட்காயின் இருக்க வாய்ப்பு இல்லை.

ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும்  நடைபெறும் பிட்காயின் பரிவர்த்தனைகள் அனைத்தும், ஒரு ப்ளாக் (Block) என்ற அளவில் ஒன்று சேர்க்கப்படும். பிறகு அந்த ப்ளாக்  ஏற்கனவே உள்ள ஒரு ப்ளாக் செயினில்  சேர்க்கப்படும். பிட்காயின் சமூகத்தில் உள்ளவர்கள் இந்த ஓப்பன் லெட்ஜர் மற்றும் ப்ளாக் செயின் உருவாக்கத்தில் ஈடுபடுகின்றனர்.

பிட்காயின் ஆர்வலர்கள், ஒவ்வொரு ப்ளாக் உருவாக்கத்திலும் ஒரு  கணக்குக்கான விடையைக் கண்டுபிடிக்க வேண்டும். இதற்காக அதிநவீன கணினியைப் பயன்படுத்த வேண்டும். நிறைய பொருள் மற்றும் நேரத்தை செலவு செய்யவேண்டும். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட விடை சரிதானா என்பதை எளிதில் உறுதி செய்யலாம். ஆனால், விடையை அவ்வளவு எளிதில் அறிய முடியாது.

எனவே, ஒரு கணக்குக்கான செய்முறையை கண்டுபிடித்தால் மட்டுமே அந்த ப்ளாக் செயினில் உள்ள பதிவுகளை மாற்றி, போலியான பிட்காயினை உருவாக்க முடியும். இதை செய்ய பல மில்லியன் டாலர்கள் செலவு செய்யவேண்டும். அவ்வாறு செலவு செய்தாலும் அதற்கு இணையான போலி பிட்காயினை உருவாக்கக்கூடிய அளவுக்கு  அந்த ப்ளாக்கில் பிட்காயின் இருக்காது. எனவே, போலி பிட்காயினை உருவாக்கும் முயற்சியில் யாரும் ஈடுபடுவதாகத் தெரியவில்லை.

பிட்காயினின் எதிர்காலம்!

இதுவரை எந்த நாடும் பிட்காயினை ஒரு பணமாக ஏற்கவில்லை. இதனை ஒரு பொருள் என்று கூறி, இதன் பரிவர்த்தனை மூலம் பெறப்படும் லாபம், வருவாய்க்கு வரி வசூலிக்க சில நாடுகள் முனைந்துள்ளன. தாய்லாந்து,  பிட்காயினை சட்டவிரோதப் பணம் என்று அறிவித்துள்ளது. பிட்காயினை ஏற்காத சீனாவில் பிட்காயினின் வளர்ச்சி வேகமாக உள்ளது. பிட்காயின் மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யும் நாடுகளில் முன்னணியில் சீனா உள்ளது. ஏற்கெனவே அமெரிக்கா, கனடா, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பிட்காயின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தெற்கு அமெரிக்க நாடுகளில் பிட்காயின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

பிட்காயினை சட்டரீதியாக ஒரு பணம் என்று ஏற்பதில் பல சிக்கல்கள் உள்ளன. பிட்காயின் பரிவர்த்தனையில் உள்ளவர்களின் அடையாளம் மறைக்கப்பட்டிருக்கும். ஒருவர் தாமாகவே முன்வந்து தனது பிட்காயின் கணக்கின் அடையாள முகவரியைக் கொடுக்கலாம்.

தவிர, பிட்காயின் மென்பொருள் என்பது ஒரு பொதுப் பொருள். எனவே, இதில் உள்ள தகவல்களை அரசு பெறவேண்டும் என்றால், அதனைப் பயன்படுத்தும் அனைவரையும் அதற்கு அனுமதிக்க வேண்டும். பிட்காயின் மென்பொருளை பயன்படுத்துபவர்கள் உலகம் முழுவதும் இருப்பதால், இவ்வாறான அனுமதி பெறுவது  என்றுமே சாத்தியமில்லை.

எனவே, பிட்காயின் போன்ற கணினிப் பணம் ஒரு மாற்றுப் பணமாக உருவெடுக்க முடியாது, அதே நேரத்தில், பிட்காயின் பயன்பாட்டின் வளர்ச்சி, அரசுப் பணத்தில் உள்ள குறைகளை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. இந்தக் குறைகளை நீக்குவது அவசியம் என்று இப்போது யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.  அந்த வகையில், பிட்காயின் மூலம் நாம் பெற்ற ஓப்பன் லெட்ஜர், ப்ளாக் செயின் தொழில்நுட்பங்கள் நிதித் துறையில் பெரிய மாற்றங்களை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்!
000000000000000000000000000000000000000000000000000000000000000
12 விதமான கணினி பணம்!

Litecoin, Peercoin, Primecoin, Namecoin, Ripple, Sexcoin, Quark, Freicoin, Mastercoin, Nxt, Auroracoin, Dogecoin என்று 12 விதமான கணினிப் பணங்கள் உள்ளன. இவை அனைத்தும் பிட்காயின் உருவானபின் வந்த கணினிப் பணங்கள்.

இவை பிட்காயினிலிருந்து சற்று மாறுபட்ட அம்சங்களைக் கொண்டதாக உள்ளன. அதில் ஐந்து வகை பணங்கள்தான் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. புழக்கத்தில் உள்ள கணினிப் பணங்களில் 90 சதவிகிதத்துக்கு மேல் பிட்காயின்தான் உள்ளது.

இராம சீனுவாசன் , 
இணைப் பேராசிரியர்,
பொருளாதார அளவியல் துறை, 
சென்னைப் பல்கலைக்கழகம்

நன்றி : நாணயம்விகடன் – 04.12.2016

Friday, December 30, 2016

பணமற்ற பரிவர்த்தனை - புதிய ஆப் அறிமுகம்


பணமற்ற பரிவர்த்தனை - புதிய ஆப் அறிமுகம்

புதுடில்லி: பணமற்ற பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக பாரத் இன்டர்பேஸ் பார் மணி ( பிம்) என்ற புதிய ஆப்சை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார்.

ஆண்ட்ராய்டு தளத்தில் கிடைக்கும் இந்த ஆப்ஸ், ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு செயல்படும். ஐஓஎஸ் ( ஆப்பிள்) தளத்திற்கான இந்த ஆப்ஸ் விரைவில் வெளியிடப்படும். இந்த புதிய ஆப்ஸ் மூலம் மக்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடன் பணமற்ற பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். இதர யுபிஐ மற்றும் பாங்க் கணக்குகளோடு தொடர்பு கொண்டு இந்த ஆப்சை பயன்படுத்தலாம்.

பிம் ஆப்சை எப்படி டவுன்லோடு செய்யலாம்?

கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள முகவரியில் இந்த ஆப்சை டவுன்லோடு செய்யலாம். https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp
இந்த பிம் ஆப்சை எப்படி பயன்படுத்துவது?இந்த பிம் ஆப்சை, பிளே ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்தபின், உங்களுடைய பாங்க் கணக்கை இதில் பதிவு செய்து அதற்கான யுபிஐ எண்ணை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பயன்படுத்துபவரின் மொபைல் எண்தான், பயன்படுத்துபவரின் முகவரியாக இருக்கும். இவ்வாறு ஒருமுறை பதிவு செய்து கொண்ட பின் பிம் ஆப்சைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

பிம் ஆப்சைப் பயன்படுத்தி எப்படி பணத்தைப் பெறுவது?பயன்படுத்துபவர், தங்களுடைய மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நுகர்வோரிடமிருந்து பணத்தைப் பெறலாம்; அவர்களுக்கு பணத்தை அனுப்பலாம். யுபிஐ தொடர்பு இல்லாத பாங்குகளுக்கும் ஐஎப்எஸ்சி எண்ணைப் பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யலாம்
இந்த பிம் ஆப்சை ஏற்கும் பாங்குகள் எவை?

அலகாபாத் பாங்க், 

ஆந்திரா பாங்க், 

ஆக்சிஸ் பாங்க், 

பாங்க் ஆப் பரோடா, 

பாங்க் ஆப் இந்தியா, 

பாங்க் ஆப் மகாராஷ்டிரா, 

கனரா பாங்க், 

கத்தோலிக் சிறியன் பாங்க், 

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, 

டிசிபி பாங்க், 

தேனா பாங்க், 

பெடரல் பாங்க், 

எச்டிஎப்சி பாங்க், 

ஐசிஐசிஐ பாங்க், 

ஐடிபிஐ பாங்க், 

ஐடிஎப்சி பாங்க், 

இந்தியன் பாங்க், 

இந்தியன் ஓவர்சீஸ் பாங்க், 

இந்துஸ் இந்த் பாங்க், 

கர்நாடகா பாங்க், 

கரூர் வைஸ்யா பாங்க், 

கோடக் மகிந்தரா பாங்க், 

ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ்,

 பஞ்சாப் நேஷனல் பாங்க், 

ஆர்பிஎல் பாங்க், 

சவுத் இந்தியன் பாங்க், 

ஸ்டாண்டர்டு சார்ட்டடு பாங்க், 

ஸ்டே்ட பாங்க் ஆப் இந்தியா, 

சிண்டிகேட் பாங்க், 

யூனியன் பாங்க் ஆப் இந்தியா, 

யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, 

விஜயா பாங்க். 

இதர விவரங்கள் பயனீட்டாளர் பணபரிவரி்த்தனை தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். மொபைல் எண் தவிர வழக்கமான பணபரிவர்த்தனை முகவரியையும் உருவாக்கி கொள்ளலாம். கியூஆர் குறியீடு மூலம் எளிதாக பண பரிவர்த்தனை செய்யாலாம். பிம் ஆப்ஸ் இப்போதைக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே செயல்படும். விரைவில் இதர மொழி வசதிகளும் செய்து தரப்படும்.

நன்றி : தினமலர் நாளிதழ் – 30.12.2016

Monday, December 26, 2016

நவீன வசதிகள் ஏதுமின்றி பணபரிவர்த்தனை


நவீன வசதிகள் ஏதுமின்றி பணபரிவர்த்தனை


புதுடில்லி:'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனையை வேகப்படுத்தும் விதமாக, ஆதார் எண்ணுடன் இணைந்த எளிமையான புதிய, 'ஆப்' இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம், 'ஸ்மார்ட் போன்' உட்பட, நவீன வசதிகள் ஏதும் இல்லாமல், வர்த்தகர்களின் கணக்கில் பணம் செலுத்த முடியும். 

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், சில்லரை பணமில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மக்கள், வங்கிகள், ஏ.டிஎம்.,களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது; வர்த்தக நடவடிக்கையும் முடங்கி வருகிறது. 

எனவே மக்கள், ரொக்கமின்றி டிஜிட்டல் முறை யில் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதை ஊக்குவிக்கும் பொருட்டு, சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன; கட்டணங்களும் குறைக்கப்பட்டு வருகின்றன. 

இருப்பினும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்ய, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இ - வாலட் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய, 'ஸ்மார்ட் போன்' தேவைப்படுகிறது.ஏராளமான மக்களிடம் இந்த வசதி இல்லாததால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதில் சிக்கல்நீடிக்கிறது. இதற்கு தீர்வாக, இவை எதுவும் இல்லாமல் டிஜிட் டல் முறையில் பணப் பரிவர்த் தனை செய்ய புதிய வசதி உருவாக்கப்பட்டு உள்ளது. 

'ஆதார் பேமென்ட் ஆப்' என்ற பெயரில், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட, 'ஆப்' உருவாக்கப் பட்டு உள்ளது; இது, இன்று அறிமுகம் செய்யப்படு கிறது. இதை, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் உருவாக்கி உள்ளது.

இதுகுறித்து அதன் நிர்வாக இயக்குனர் அஜய் பூஷண் கூறியதாவது:

நாட்டில் தற்போது, 40 கோடி வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிட்டது. 2017 மார்ச் சில், மீதமுள்ள வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் முழுமையாக இணைக்கப்பட்டுவிடும். எனவே, ஆதார் எண் மூலம் வங்கி கணக்கில் இருந்து வர்த்தகருக்கு பணம் செலுத்த இந்த வசதி பயன்படும்.

இதன் மூலம் எந்த ஒரு வசதியுமின்றி, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். வர்த்தகர் களும், 2,000 ரூபாய் செலவில், கைரேகை அடை யாள இயந்திரம் மட்டும் வாங்கினால் போதும், வாடிக்கையாளர் கணக்கில் இருந்து எளிதில் பணம்பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

எப்படி செயல்படுகிறது?

இந்த முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய, வர்த்தகர்களிடம் மட்டும் மொபைல் போன் இருந் தால் போதும்; பொதுமக்களுக்கு தேவை யில்லை. அதில், இந்த, 'ஆப்'பை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் கை ரேகை பதிவு இயந்திரத்தை இணைக்க வேண்டும்.

வாடிக்கையாளர், தன் ஆதார் எண்ணை தந்து கைரேகையை பதிவு செய்தால், அவர் வங்கி கணக்கில் இருந்து வர்த்தகரின் வங்கி கணக் கிற்கு பணம் சென்று விடும்; வங்கி கணக்கு, 'பாஸ்வேர்டாக' கைரேகை பயன்படுத்தப்படும். எனவே, வாடிக்கை யாளரிடம் மொபைல் போன் இல்லாமலேயே அவரது வங்கி கணக் கில் இருந்து வர்த்தகரின் வங்கி கணக்கிற்கு எளிமையாக பணம் செலுத்த முடியும்.

'ஸ்வைப்பிங் மிஷின்' தீவிரம்

'டிஜிட்டல்' முறை பணப் பரிமாற்றத்திற்கு உதவும் வகையில், 'பாயின்ட் ஆப் சேல் மிஷின்' எனப்படும் 'ஸ்வைப்பிங் மிஷின்கள்' தயாரிப்பை விரைவுபடுத்தும் படி, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, 15 லட்சம் இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன; இதில், பாரத ஸ்டேட் வங்கி, 3 லட்சம் இயந்தி ரங்களை உருவாக்கி வருகிறது.

நன்றி : தினமலர் நாளிதழ் – 24.12.2016

Wednesday, November 9, 2016

ரூ.500 & ரூ.1000 சந்தேகங்கள்-பதில்கள்


ரூ500 & ரூ.1000 மாற்றுவது பற்றிய சந்தேகங்கள், பதில்கள்
என்ன செய்ய வேண்டும்? 
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவது எப்படி?
- பதற்றம் தணிக்க ரிசர்வ் வங்கியின் 20 வழிகாட்டுதல்கள்
ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உதவி மையம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி.

பழைய ரூ 500 மற்றும் ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதையொட்டி, இந்திய ரிசர்வ் வங்கி தனது www.rbi.org.in இணையதளத்தில் இது குறித்து பொதுவாக எழுப்பப்படும் வினாக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மேலும் சந்தேங்களுக்கு / கேள்விகளுக்கு விளக்கும் அளிக்க, இந்திய ரிசர்வ் வங்கி, சென்னை அலுவகலத்தில் ஒரு உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பொது மக்கள் பின்வரும் தொடர்பு எண்களை அணுகலாம்: 044 25381390/ 25381392 என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி பொதுவாக எழுப்பப்படும் வினாக்களுக்கு அளித்துள்ள விளக்கம்:

1. பழைய நோட்டுகளை மாற்றினால் முழுத்தொகையும் கிடைக்குமா?

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகள்/ தபால் அலுவலகங்கள் ஆகியவற்றில் கொடுத்து அதற்கான முழு மதிப்பிலான தொகையையும் பெறலாம்.

2 .ரொக்கமாக எவ்வளவு பெற முடியும்?

இப்போதைக்கு தனிநபருக்கு ரூ.4000 வரை வங்கிகளில் பழைய நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகளை பெறலாம். அதற்கு மேலான தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.

3. நான் ஏன் எனது அனைத்து பழைய நோட்டுகளுக்கும் புதிய நோட்டுகளை பெற முடியாது?

இப்பொதைக்கு மத்திய அரசு அதனை அனுமதிக்கவில்லை. எனவே தற்போதைய இந்தத் திட்டம் ரூ.4000 வரை மாற்றி கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

4. எனக்கு ரூ.4,000 போதவில்லை நான் என்ன செய்வது?

ரூ.4000 ரொக்கத்தொகை போக மீதித் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம், அதனை காசோலை மற்றும் பிற எலக்ட்ரானிக் பணப்பரிவர்த்தனை மூலம் உங்கள் தேவைக்கு பயன்படுத்தலாம்.

5. என்னிடம் வங்கிக் கணக்கு இல்லை எனில்?

நீங்கள் வங்கிக் கணக்கு ஒன்றை அதற்கான அடையாள ஆவணங்களுடன் சமர்ப்பித்து தொடங்குவது அவசியம்.

6. என்னிடம் ஜன்தன் யோஜனா திட்டப்படி தொடங்கப்பட்ட கணக்குதான் உள்ளது என்றால்?

ஜன் தன் கணக்கு வைத்திருப்போர் அதற்கான விதிமுறைகளுடன் பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

7. பரிமாற்றத்திற்கு நான் எங்கு செல்ல வேண்டும்?

அனைத்து வர்த்தக வங்கிகள், ஆர்ஆர்பி.க்கள், அரசு கூட்டுறவு வங்கிகள், அல்லது எந்த ஒரு தலைமை மற்றும் துணை தபால் அலுவலகங்களிலும் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

8. நான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குத்தான் செல்ல வேண்டுமா?

ரூ.4,000 வரை மாற்றி கொள்ள எந்த ஒரு வங்கிக்கும் முறையான அடையாள அட்டையுடன் சென்று மாற்றிக் கொள்ளலாம். 

ரூ.4,000த்துக்கும் கூடுதலான தொகைக்கு நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம். நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் கிளைகளுக்கும் சென்று கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் ஆனால் அதற்குரிய அடையாள அட்டையைக் கொண்டு செல்ல வேண்டும். மெலும் எலெக்ட்ரானிக் முறையின் பணத்தை வங்கிக் கணக்கில் மாற்றம் செய்வதற்கான வங்கிக் கணக்கு விவரங்களையும் கொண்டு செல்லவும்.

9. நான் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் எந்த கிளைக்கும் செல்லலாமா?

ஆம். உங்கள் வங்கியின் எந்த ஒரு கிளைக்கும் செல்லலாம்.

10. எந்த ஒரு வங்கியின் எந்த ஒரு கிளைக்கும் செல்லலாமா?

ஆம். செல்லலாம், ஆனால் பணப்பரிமாற்றத்துக்கு தேவையான அடையாள அட்டை, ஆவணத்தை சமர்ப்பிப்பது அவசியம். ரூ.4,000த்துக்கும் அதிகமான தொகைக்கு எலெக்ட்ரானிக் நிதி பரிமாற்றத்துக்குத் தேவையான அடையாள அட்டை, வங்கிக் கணக்கு விவரங்களை சமர்ப்பிப்பது அவசியம். 

11. எனக்கு வங்கிக் கணக்கு இல்லை.. ஆனால் என் நண்பர் அல்லது உறவினர் வைத்திருக்கும் வங்கிக் கணக்கில் நான் பரிமாற்றி கொள்ளும் தொகையை வரவு வைத்துக் கொள்ளலாமா?

செய்யலாம், மற்றவர்களது விருப்பத்தின் பேரில், அவர்களது வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைக்கலாம். அப்போது உங்கள் அடையாள அட்டையை வங்கிக்கு கொண்டு செல்ல வேண்டும். வங்கி வாடிக்கையாளரின் ஒப்புதல் சான்றும் அவசியம்.

12. பணத்தை எடுத்துக் கொண்டு கணக்கு வைத்திருப்பவர்தான் நேரில் செல்ல வேண்டுமா, அல்லது பிரதிநிதியை அனுப்பலாமா?

நேரடியாக செல்வது விரும்பத்தக்கது. உங்களால் நேரடியாக செல்ல முடியாதபட்சத்தில் உங்கள் பிரதிநிதியிடம் உங்கள் கைப்பட எழுதிய அனுமதி கடிதம் அவசியம். அவரது அடையாள அட்டையும் அவசியம். 

13. ஏடிஎம்.இலிருந்து நான் பணம் எடுக்க முடியுமா?

18 நவம்பர் 2016 வரை நீங்கள் ரூ.2,000 வரை நாளொன்றுக்கு எடுக்க முடியும், அதன் பிறகு 19-ம் தேதியிலிருந்து இதன் வரம்பு ரூ.4000 ஆக அதிகரிக்கப்படும். 

14. காசோலை மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாமா?

இம்மாதம் 24ம் தேதி வரை வித்ட்ராயல் ஸ்லிப் அல்லது காசோலை மூலம் ஒரு நாளைக்கு ரூ.10,000 வரை எடுக்கலாம். வாரம் ஒன்றிற்கு ரூ.20,000 வரையே எடுக்க முடியும் (இதில் ஏ.டி.எம். பண எடுப்புத் தொகையும் அடங்கும்), இதன் பிறகு இந்தத் தொகையை உயர்த்த மறுபரிசீலனை செய்யப்படும். 

15. ஏ.டி.எம். மூலம் பணத்தை டெபாசிட் செய்யலாமா?

ஆம். ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஏ.டி.எம் மூலம் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம். 

16.நெட்பேங்கிங்கில் பணபரிமாற்றம் செய்யலாமா?
என்இஎப்டி / ஆர்டிஜிஎஸ் / ஐஎம்பிஎஸ் / இன்டர்நெட் பேங்கிங் / மொபைல் பேங்கிங் மூலம் பணப் பரிமாற்றம் செய்யலாம். எந்த தடையும் இல்லை.

17. நான் தற்போது இந்தியாவில் இல்லை, நான் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் பிரதிநிதியிடம் உங்கள் கையெழுத்துடன் ஒப்புதல் கடிதம் அளித்து அவரது அடையாள அட்டையுடன் வங்கிக்கு அவர் சென்று நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். 

18. நான் ஒரு என்.ஆர்.ஐ. என்னிடம் என்.ஆர்.ஓ. கணக்கு உள்ளது பரிமாற்றத் தொகையை என் கணக்கில் வரவு வைக்க முடியுமா?

ஆம், செய்யலாம்.

19. சுற்றுலாப் பயணிகள் தங்கள் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை என்ன செய்வது?

விமான நிலையங்களில் இருக்கும் பணப்பரிவர்த்தனை மையங்களில் 72 மணி நேரத்திற்குள் கொடுத்து ரூ.5,000 வரை மாற்றிக் கொள்ளலாம். ஓ.எச்.டி நோட்டுகளை பெற்றதற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும். 

20. செல்லுபடியாகும் அடையாள அட்டைகள் யாவை?

ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், என்.ஆர்.இ.ஜி.ஏ கார்டு, பான் கார்டு, அரசுத்துறை அதன் ஊழியர்களுக்கு அளித்துள்ள அடையாள அட்டை ஆகியவை.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 09.11.2016