disalbe Right click

Wednesday, August 31, 2016

உள்ளுணர்வு - என்ன செய்ய வேண்டும்?


உள்ளுணர்வு - என்ன செய்ய வேண்டும்?
நம் ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்டு உணர்ந்து அறிதலை இ.எஸ்.பி (எக்ஸ்ட்ரா சென்செரி பிரசப்ஷன்) என்று அழைக்கிறோம். இதை 'ஏழாம் அறிவு' என்று கூட சொல்லலாம்.
இ.எஸ்.பியின் மூலம் ஒருவர் கடந்த, நிகழ், எதிர்காலத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
இதை 1870ல் பிரிட்டனைச் சேர்ந்த சர்.ரிச்சார்ட் பர்ட்டன், டாக்டர்.ஜே.பி.ரைன் கண்டறிந்தனர். 1892ல் டாக்டர்.பால் ஜாய்ன் இதை தன் ஆராய்ச்சியில் அதிகம் உபயோகித்தார்
ஒவ்வொரு மனிதனும் இந்த இ.எஸ்.பி., யை வளர்த்துக் கொள்ள முடியும். நம் அன்றாட நடவடிக்கையில் இந்த இ.எஸ்.பி., எப்படி வேலை செய்கிறது, அதனால் நமக்குக் கிடைக்கும் நன்மை என்ன என்பதை நாம் உணருவதில்லை.
உதாரணமாக நாம் வெகு நாட்களாக, ஆண்டுகளாக சந்திக்காத, தொடர்பு கொள்ளாத ஒருவரைப் பற்றி கனவு கண்டிருப்போம். அடுத்த சில நாட்களில் அவரிடமிருந்து இமெயில், போன், நேரில் தொடர்பு கிடைத்திருக்கும். இது எல்லோருக்கும் இ.எஸ்.பி., சக்தி இருக்கிறது என்பதைக் குறிக்கிறது.
ஆழ்மனது : 
சிலருக்கு பிறவியிலேயே இந்த சக்தி அதிகமாக இருக்கும். தனக்கு இத்தகைய சக்தி இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்தும் இருப்பார்கள். நாமும் உறுதியுடன் முயற்சித்தால் இ.எஸ்.பி., சக்தி பெறலாம். ஏனென்றால் அதற்குத் தேவையான தனித்திறமை நம்முள் இருக்கிறது. இ.எஸ்.பி., விஷயங்கள் நிகழ நம் ஆழ்மனதை துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இ.எஸ்.பி., சக்தியால் வாழ்வில் என்னவெல்லாம் சாத்தியமாகிறது என்று பார்ப்போம்:
டெலிபதி : 
ஒரு மனதிலிருந்து, இன்னொரு மனதுடன் தொடர்பு கொள்வது டெலிபதி எனப்படுகிறது. இது ஒருவழி, இருவழித் தொடர்பாக இருக்கலாம். இதற்கு துாரமும், நேரமும் தேவையில்லை. முனிவர்கள், யோகிகள் தங்கள் குருவிடமிருந்து டெலிபதி மூலம் அறிவும், ஞானமும் பெற்றிருக்கிறார்கள். டெலிபதிக்கு ஒளியை விட வேகம் அதிகம்.
மிருகங்கள், பறவைகள், பூச்சிகள் டெலிபதியைப் பயன்படுத்துகின்றன. மனிதர்களுக்கும் இந்த சக்தி இருக்கிறது.
உள்ளுணர்வு : 
காரணமில்லாமல் ஒரு விஷயத்தை சரியானது என்று தெரிந்து கொள்வதை உள்ளுணர்வு என்று சொல்லலாம். தினமும் வாழ்க்கையில் இந்த உள்ளுணர்வு நமக்கு கார் ஓட்டும் போது, நடக்கும் போது, குளிக்கும் போது, பிரார்த்தனை, தியானம் செய்யும் போது கூட வரலாம்.
கிரேக்க மேதை ஆர்க்கிமெடிஸ் குளிக்கும் போது தோன்றிய புதிய விஷயத்தை உடனே அரசரிடம் போய் சொல்ல 'யுரேகா' என்று கூவியபடி ஓடியதைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். நமக்கு சவாலான, கஷ்டமான நேரங்களில் பளிச்சென ஒரு எண்ணம் தோன்றி, நாம் நிலைமையை சமாளித்திருப்போம்.
இவை நம் உள்ளுணர்வின் வழிகாட்டல் தான்.
சூட்சும திருஷ்டி : நம் உடலில் இருக்கும் கண்களினால் பார்க்க முடியாத விஷயங்களைக் கூட பார்க்கக்கூடிய திறமையே சூட்சும திருஷ்டி. கண்ணுக்குத் தெரியாத இடங்கள், சூழ்நிலைகள், பொருட்கள், மனிதர்கள், அவர்களுடைய ஒளி உடல், மனநிலை ஆகியவற்றைப் பார்க்க முடியும். பல சூட்சும திருஷ்டியாளர்கள் விண்வெளியில் உள்ள பல கோள்களைப் பற்றி கூறிய விஷயங்கள் ஆராயப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேஜாவு : 
இந்த பிரென்ஞ் மொழி சொல்லிற்கு தமிழில் பொருள் இல்லை. நீங்கள் புதியதாக ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது, ஏற்கனவே அந்த இடத்தைப் பார்த்திருப்பதாகத் தோன்றினால், ஒருவருடன் பேசும் போது ஏற்கனவே இந்த பேச்சைக் கேட்டிருப்பது போல் தோன்றினாலோ, அது தான் தேஜாவு. நம்முடைய முந்தைய பல பிறவியில், ஏதோ ஒரு பிறவியில் இது போன்ற நிகழ்ச்சி நடந்திருந்தால், நம் ஆழ்மனது அதை ஞாபகப்படுத்தும்.
டெலிகைனசிஸ் : 
மனதின் சக்தியால் துாரத்திலிருக்கும் பொருட்களை அசைக்க, இயக்க முடியும். இது விஞ்ஞானிகளால் புரிந்துகொள்ள, விளக்கம் தர முடியாத விஷயமாக இருக்கிறது.
1973ல் உரிஜெல்லர் என்பவர் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், மனதின் சக்தியால் துாரத்திலிருந்தே ஒரு சாவியை வளைத்துக் காட்டினார்.
ஒரு குறிப்பிட்ட மனநிலையில் எதிர்காலத்தில் வரப்போகும் விஷயங்களை முன்னரே உணர்தல் முன்னுணர்வாகும். சிலர் தங்கள் குடும்பத்தில் வரப்போகும் விபத்து, இறப்பை கனவில் கண்டிருப்பர். சிலருக்கு இந்த முன்னுணர்வு பிரார்த்தனை, தியானத்தின் போது கிடைக்கக் கூடும்.
இ.எஸ்.பி., திறமைகளை வளர்ப்பதற்கான வழிமுறைகள்: 
நம் ஆழ்மனதுடன் நாம் தொடர்பு கொள்ள, பல வழிகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது, ஆக்கப்பூர்வமாக தோற்றப்படுத்துதல்;
ஒருவருடைய கற்பனை சக்தியை கொண்டு ஆக்கப்பூர்வமாக தோற்றப்படுத்தும் போது நாம் வெற்றிகளைக் கவர்ந்திழுப்பவர்கள் ஆகிறோம். நம் எண்ணங்களின் சக்தியையும், உணர்வுகளின் சக்தியையும், ஒருங்கிணைத்து ஒருமுகப்படுத்தும் போது, அந்த சக்தி பிரபஞ்சத்தை எட்டி அங்கிருந்து அந்த எண்ணங்களுக்கு ஏற்ப விஷயங்களை நமக்குப் பெற்றுத்தரும்.

புதிய விஷயங்கள்:
நம் அன்றாட வாழக்கையில் பழக்க வழக்கம் காரணமாக தினசரி செய்ததையே ஒவ்வொரு நாளும் அதேபோல் மீண்டும், மீண்டும் செய்கிறோம். இதை தவிர்த்து தினமும் புதுப்புது விஷயங்கள் கற்க, கேட்க, வேண்டும்.
நம் அன்றாட வேலைகளைக் கூட புது மாதிரி செய்ய வேண்டும். இதுவும் நம் ஆழ்மனதை அணுகுவதற்கு துணைபுரியும்.
நல்ல விஷயங்களைப் பற்றி மட்டுமே நினைக்கவோ, பேசவோ செய்வது என்று உறுதியாக இருக்க வேண்டும். எல்லாம் நன்மைக்கே என்று செயல்பட வேண்டும்.
உங்கள் நோக்கத்திற்கும், குறிக்கோளை அடைவதற்கும் உதவும் புத்தகங்களைத் தேந்தெடுத்து, அவற்றை இரவு துாங்கும் முன் வாசியுங்கள்.
துாங்கும் முன், நாம் பெறும் தகவல்கள் நம் ஆழ்மனம் செயல்படுவதற்குத் தேவையான செய்திகளை ஆழ்மனதிற்குக் கொடுக்கும்.

மெஸ்மெரிஸம் : 
மெஸ்மெரிஸம் என்பது பிரான்ஸ் அன்டன் மெஸ்மர் என்பவரால் கண்டறியப்பட்டது. அவர் மனிதர்களின் உடலுக்குள் காந்த சக்தி மிகுந்த திரவம் ஓடுவதாக நினைத்தார். அதன் ஓட்டம் தடைபடும் போது நோய்கள் உண்டாவதாகவும், இதனால் காந்த சக்தி கொண்டு சரிப்படுத்தினால், நோய்கள் சரியாகிவிடும் என்றும் நினைத்தார். பின், காந்த சக்தியை பயன்படுத்தாமல் மனதின் சக்தி கொண்டு குணப்படுத்த முடியும் என்று கண்டார்.
ஹிப்னாடிஸத்தை மெஸ்மெரிசத்திலிருந்து வேறுபடுத்தி, பழக்கத்தில் கொண்டு வந்தவர் ஜேம்ஸ் பிரைய்டு.
இதில் சிகிச்சை அளிப்பவர் நோயாளியிடம் பேசி சில கட்டளை, யோசனைகளைக் கூறி நோயாளியின் மனதில் குறிப்பிட்ட எண்ணங்களை துாண்டிவிட்டு, ஆழ்ந்த உறக்க நிலைக்கு கொண்டு செல்கிறார். பின் நோயாளியின் ஆழ்மனதிலிருக்கும் விஷயங்களை பல கேள்விகள் கேட்பதன் மூலம் வெளிக்கொண்டு வருகிறார்.
இது போன்ற சூழ்நிலைகளில் தான் பலர் தனக்கு தெரியாத மொழியிலும், தெரியாத நபர்கள் குறித்தும் பேசுகின்றனர்.

நம் ஆழ்மனம் ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்டு அறிவு, மனம் சார்ந்த தகவல்களைப் பெறுவதால், நம்முடைய இ.எஸ்.பி., சக்தி துாண்டி விடப்பட்டு செயல்பட ஆரம்பிக்கும்.
ஆழ்மனதின் உதவியுடன் போட்டி, பொறாமை, வருத்தம், பயம், மன அழுத்தம் போன்ற எதிர்மறை விஷயங்களைக் களைந்து விட்டு, துாய்மையான மனதுடன் முயற்சியும், பயிற்சியும் செய்தால் இ.எஸ்.பி., திறமைகளை பெற்று சமூகத்திற்கு நன்மை செய்ய முடியும்.
- ஜெ. விக்னேஷ் சங்கர்
மனநல ஆலோசகர், மதுரை.
99525 40909
நன்றி : தினமலர் நாளிதழ் - 31.08.2016



Saturday, August 27, 2016

பேப்பர், பேனா மூலம் போராடுபவர்கள்

பேப்பர், பேனா மூலம் போராடுபவர்கள் என்ன செய்ய வேண்டும்?
நமது நாட்டில் நமக்கான தேவைகளை பெறுவதற்கும், உரிமைகளை அடைவதற்கும் ஒவ்வொருவரும் போராடத்தான் வேண்டியதிருக்கிறது. 
பணவசதி உள்ளவர்கள்   லஞ்சம் மூலமாக அதனை அடைந்து விடுகின்றனர். பணவசதி இல்லாதவர்களும், லஞ்சம் கொடுக்கக்கூடாது என்ற வைராக்கியம் உள்ளவர்களும் சட்டத்தின் உதவியை நாடுகின்றனர்.
முன்பெல்லாம் பொதுமக்கள் கையாண்ட  “மொட்டைக் கடிதம்” என்ற ஒரு ஆயுதத்திற்கு அரசாங்கத்தில் பணியாற்றுபவர்கள் பயந்து நடுங்குவார்கள். 
தங்களது கோபத்தையும், ஆத்திரத்தையும் தணித்துக் கொள்ள சிலர் “மொட்டைக் கடிதத்தை” தவறாக பயன்படுத்தியதால் அரசாங்கம் அதன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்ற நிலையை எடுக்க வேண்டியது வந்தது.
ஆனால், இப்போதெல்லாம் உரிய ஆவணங்களுடன் புகார் அனுப்பினால்கூட அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. 
எத்தனையோ முறை விண்ணப்பித்து்ம் ஒரு நடவடிக்கையும் இல்லை என்று பொதுமக்கள் சலித்துக் கொள்வதை நான் மட்டுமல்ல, அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். 
அவர்களுக்காகத்தான் இந்தப்பதிவு!
உளி, சுத்தியல் கொண்டு பாறையை உடைப்பதை பார்த்திருக்கிறீர்களா?
ஒரே அடியில் பாறை உடைந்து விடுகிறதா? இல்லை.
பலமுறை அடித்த பிறகுதான் பாறை உடையும். 
ஆனால், ஒவ்வொரு முறை சுத்தியலால் அடிக்கும் போதும் பாறைக்குள் சில மாற்றங்கள் ஏற்படும். பாறையின் வலிமை உள்ளுக்குள் பலவீனமாகும். அந்த மாற்றம் வெளியில் நமக்குத் தெரியாது. 
அதே போலத்தான் அரசாங்கத்திற்கு அனுப்பப்படுகின்ற புகார் மனுக்களும். 
ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்றுதடவை என்று அதோடு நிறுத்திக் கொள்ளாமல், தொடர்ந்து மனுக்களை துறை உயர் அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு (வட்டம், கோட்டம், மாவட்டம், கோட்டை) அனுப்பிக் கொண்டே இருங்கள். தொடர்ந்து  போராடுங்கள். 
சுத்தியல் மூலமாக விழுகின்ற அடிகளால், பாறைக்குள் ஏற்படுகின்ற மாற்றத்தைப் போல, உங்களது தொடர்ச்சியான புகார்மனுக்கள் அரசாங்கத்துறைக்குள்ளும் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தும். 
வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள்! 
............................................................................................அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

Friday, August 26, 2016

கம்ப்யூட்டரில் பணி செய்பவர்கள்


கம்ப்யூட்டரில் பணி செய்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?


கண்கள் பாதுகாப்பு - விதிமுறைஅவசியம்!

மூன்று மணி நேரத்துக்கு மேல், தொடர்ச்சியாக கணினியில் பணியாற்றும்போது, சி.வி.எஸ்., - கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் குறைபாடு ஏற்பட, 90 சதவீதம் வாய்ப்பு உள்ளது.

இந்த பிரச்னை, எந்த வயதினருக்கும் ஏற்படும். மனிதன் ஒரே இடத்திலேயே மணிக்கணக்கில் அமர்ந்து, கண்களுக்குப் பெரிய அசைவு எதுவுமின்றி, கணினியில் வேலை செய்வதால், கண் சோர்வு, வலி, அரிப்பு, எரிச்சல், மங்கலான பார்வை, தலைவலி மற்றும் இரட்டைக் காட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

20:20:20 விதிமுறை

நம் கண்களைப் பாதுகாக்க, 20:20:20 என்ற விதிமுறையைப் பின்பற்ற வேண்டும். அதாவது, 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக வேலை செய்தால், 20 நொடிகள் தள்ளிச் சென்று, கண்களுக்கு ஓய்வு கொடுப்பதே இந்த விதிமுறை. மீண்டும், 20 நிமிடங்கள் வேலை செய்யலாம்.

ஒவ்வொரு முறை கண்களை சிமிட்டும்போதும் கண்களில் உள்ள நீர்ப்படலம் நிரம்புகிறது.

சராசரியாக, ஒரு நிமிடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு டஜன் தடவை கண்களைச் சிமிட்டுகிறோம்.

ஆனால், கணினி உள்ளிட்டவற்றில் அதிக நேரம் பணி செய்யும்போது, இந்த சிமிட்டும் அளவு குறைகிறது.

மேலும், கணினியில் பணியாற்றும்போது, கண்கள் நேர்கொண்ட பார்வையில் இருக்கிறது. அப்போது, கண்கள் பார்க்கும் பரப்பளவு அதிகமாக உள்ளது.
இதனால், நீர்ப்படலம் ஆவியாகிறது.

கணினி, ஐபோன் போன்ற சாதனங்களில் பணிபுரியும்போது, முடிந்த அளவுக்கு, அடிக்கடி கண்களை சிமிட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அதுவே, உடனடியாகக் கிடைக்கும் நிவாரணி.

குளிர்சாதன அறைகள் மற்றும் மின் விசிறிக்கு அடியில் அமர்ந்து பணிபுரிந்தால், கண்கள் விரைவாக வறண்டு போகின்றன.

உங்கள் கண்களின் மீதோ அல்லது கம்ப்யூட்டர் மானிட்டர் மீதோ, நேரடியாக விளக்கின் வெளிச்சம் படாதவாறு பணிச் சூழலை அமைத்துக் கொள்ள வேண்டும்.

சிகிச்சை செய்யப்படாத பார்வைக் குறைபாடுகள் அல்லது தவறான கண்ணாடியை அணிதல் போன்றவற்றின் மூலம், சி.வி.எஸ்., பிரச்னை மேலும் சிக்கலாகும்.

தரமான பர்னிச்சர்களை பயன்படுத்தி, நேராக அமர்ந்து, உங்களின் கண்களுக்கும், மானிட்டருக்குமான துாரத்தை குறைந்தபட்சம், 20 முதல், 28 அங்குலம் வரை அமைத்து பணியாற்றுங்கள்.

மானிட்டர் உங்கள் கண்களின் உயரத்தை விட, நான்கு முதல், ஒன்பது அங்குலம் வரை தாழ்த்தி வைக்கவும்.

இதன்மூலம் நம் கண்கள் கீழ் நோக்கிப் பார்க்கும். கழுத்து, முதுகு மற்றும் தோள்பட்டை ஆகியவற்றுக்கு ஏற்படக்கூடிய சிரமங்கள் நீங்கும்.

டாக்டர் அமர் அகர்வால், தலைவர்
அகர்வால் கண் மருத்துவமனை குழுமம்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 27.08.2016

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005


தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 - என்ன செய்ய வேண்டும்?

ஆர்.டி.ஐ-யில் பதில் கேட்பது எப்படி?

கேள்வி கேட்பது சுலபம்... பதில் சொல்வதுதான் சிரமம் என்கிறீர்களா? பதில் சொல்லக்கூடிய மாதிரியான கேள்விகளைக் கேளுங்கள். கண்டிப்பாகப் பதில் கிடைக்கும். 

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் (Right To Information Act 2005 - RTI) மூலம் அரசுத் துறை, அரசு உதவி பெறும் தனியார் துறைகளில் நமக்கு தேவையான தகவல்களை நாம் பெற முடியும்.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஒரு தனிநபர் எந்தத் தகவலையும் (விதிவிலக்குகளைத் தவிர) கேட்டுப் பெற முடியும். ‘எனக்கு இந்தக் காரணத்துக்காக அந்தத் தகவல் தேவைப்படுகிறது’ என்று நாம், தேவைக்கான காரணங்களைத் தகவல் கொடுப்போரிடம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதற்காக. 'என்னுடைய பக்கத்து வீட்டுல இருக்குற ஆசாமி ரொம்ப ஹெல்த்தியா இருக்கான். அவன் என்ன மாதிரியான உணவை எடுத்துக்கொள்கிறான்னு தெரியலை. கொஞ்சம் கேட்டுச் சொல்றீங்களா... என்று நாம் கேட்க முடியாது; பதிலும் கிடைக்காது. 

இதுபோன்ற ஒரு தனி மனிதனின், தனிப்பட்ட விஷயங்களைக் கேள்வியாகக் கேட்டால் நேரம்தான் வீண்.

ஆர்.டி.ஐ சட்டத்தில் தகவலைக் கேட்டு வாங்க, நாம் அனுப்பும் சம்பந்தப்பட்ட துறை அலுவலரால் தள்ளுபடி செய்ய முடியாதபடி அந்த விண்ணப்பம் இருக்கவேண்டும். மனுவில், நம்முடைய கையெழுத்தும் பெயரும் இருந்தால் போதுமானது. நம்முடைய வேலை, பதவி, பொறுப்பு போன்ற எதையும் குறிப்பிட வேண்டியதில்லை.

மனுவின் தொடக்கத்திலேயே, ‘‘ஏன் அந்தச் சாலையில் ஆறு மாதங்களாகக் கல்லைக் கொட்டி வைத்திருக்கிறீர்கள் என்றோ, எப்படி அந்த இடத்தில் கொட்டினீர்கள் என்றோ அல்லது எப்போது கல்லைக் கொட்டினீர்கள் என்றோ கேள்வியை ஆரம்பித்தால் பதிலை வாங்குவது கடினம். 

கான்ட்ராக்ட் எடுத்தவர், அதை மேல் கான்ட்ராக்ட்டுக்கு பெற்ற நான்கைந்து பேர், கல்லைக் கொட்டிய லோடு லாரி ஓனர், லாரியில் வந்த ஊழியர்கள் (இப்போது அவர்கள் எங்கு கல்லைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்களோ?) என்று பலரைத் தேடிப்பிடித்துப் பதிலை வாங்கித் தரவேண்டும் அல்லவா?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள், கேள்வி வடிவத்திலோ, ஆலோசனை வழங்கும் விதத்திலோ இருக்கக் கூடாது. உதாரணத்துக்கு, ‘என்னுடைய தொகுதியில் பல ஏக்கர் அரசு நிலம் உள்ளது. அங்கு ஒரு கோழிப்பண்ணை வைத்தால் என்ன’ என்று கோரிக்கை மனுபோல விண்ணப்ப மனு இருத்தல் கூடாது.

தகவலைத் தருகிற பொதுத் தகவல் அலுவலர், இந்த மனுமீது பதிலை தரலாம்... தராமலும் இருக்கலாம். அவர் தகவல் தரவில்லையே என்பதற்காக நாம் அடுத்தடுத்து மனு செய்யலாம்.

ஆனால், நம்முடைய மனுமீது பொதுத் தகவல் அலுவலர் பதில் தரவில்லை என்பதற்காக நாம் அவர்மீது மேல் நடவடிக்கை எதையும் எடுக்க முடியாது. 'நான் மனஉளைச்சலுக்கு ஆளாகி நிற்கிறேன். இந்த மனுதாரரை என்னால் சமாளிக்கவே முடியவில்லை' என்று சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலர்தான் நம்மீது நடவடிக்கை எடுக்க முயற்சிப்பார்.

விண்ணப்பம் செய்வதற்கு ஒரு வெள்ளை பேப்பர் போதும். நீதிமன்ற முத்திரைத்தாள் (கோர்ட் ஸ்டாம்ப்) தேவையில்லை. எழுதுவதைத் தெளிவாக எழுதினால் போதும். கையால் எழுதினால்கூடப் போதும். டைப் செய்து அனுப்புவது நம்முடைய நேரம், விருப்பத்தைப் பொறுத்தது. ஒரு மனுவில் எத்தனை தகவல்களைக் கேட்க முடியுமோ, அத்தனை தகவல்களையும் கேட்கலாம். கேள்வி நீளமாக இருந்தால், ஒரே கேள்வியோடு மனுவை முடித்துக்கொள்வது நல்லது.

நாம் தகவலைக் கேட்டு விண்ணப்பிக்கும் பொதுத் தகவல் அலுவலர் யார், நாம் அவருக்குத்தான் மனுவை அனுப்புகிறோமா என்பதைத் தயக்கம் காட்டாமல் பலமுறை உறுதி செய்துகொண்டு, பின் மனுவை அனுப்பலாம். இதனால், ‘அவர் வருவாரா, பதிலைத் தருவாரா’ என்று ஒரு மாத காலம் வரையில் காத்திருப்புப் பாடல் பாடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

பொதுத் தகவல் அதிகாரியின் முகவரி குறித்து நம்மால் அறிய முடியவில்லை என்றால், மாநில அரசாக இருந்தால் நாம் தகவலைக் கேட்கும் மாவட்டத்தில் வருகிற மாவட்ட ஆட்சியருக்கும், மத்திய அரசாக இருந்தால் தலைமைத் தபால் அலுவலருக்கும் மனுவை அனுப்பிவைக்கலாம். ‘அவர் வருவாரா’ என்ற பாடலைப் பாடாமல் மூச்சுக்காற்றை மிச்சப்படுத்தலாம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளும், தலைமைத் தபால் துறை அலுவலக அதிகாரிகளும் நம்முடைய மனுக்களை எங்கு அனுப்பிவைக்க வேண்டுமோ, அங்கே அனுப்பிவைப்பார்கள்.
'திரு. திருவாடானை மெய்யகாத்தான் அவர்கள்' என்று ஆரம்பித்து பின்னர் அந்த அதிகாரியின் பதவி, பொறுப்பைக் குறிப்பிடுவது எப்போதும் சரியாய் வராது. 

நாம் மனுவை அளிக்கும்போது திருவாடானை மெய்யகாத்தான் இடத்துக்கு, வேப்பம்பட்டி வேம்புலிங்கம் வந்திருக்கக் கூடும். அதிகாரிகள் மாறுவர், பதவி, பொறுப்பு, இடம் மாறுவதில்லை. ஆக, எப்போதுமே அதிகாரிகளின் பெயரைக் குறிப்பிடாமல், அவர்களின் பதவிப் பொறுப்பையும், குறிப்பிட்ட மாவட்டத்தையும் மட்டும் குறிப்பிடலாம்.

முதன்முறை விண்ணப்பம் அனுப்ப, கட்டணம் 10 ரூபாய். நாம் விண்ணப்பித்துப் பெறும் தகவல் நகலின் பக்கம் ஒவ்வொன்றுக்கும் கட்டணமாக 2 ரூபாய் செலுத்த வேண்டும். குறுந்தகடுகள் வழியில் தகவலைப் பெற கட்டணம் 50 ரூபாய். வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு எந்தவிதக் கட்டணமும் இல்லை. ஆனால், இதற்கான சான்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

மாநில அரசின் கீழ்வரும் துறைகளுக்கு டிமாண்ட் டிராஃப்ட், பேங்கர்ஸ் செக், அஞ்சலக தபால் ஆணை, கோர்ட் ஸ்டாம்ப்கள், வரையறுக்கப்பட்ட வங்கிக்கணக்குகள் மூலம் பணத்தைச் செலுத்தலாம்.
மத்திய அரசின் கீழ்வரும் துறைகளுக்கு, மத்திய அஞ்சலகத் துறை, ‘Accounts officer’ என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட், கேட்புக் காசோலை, அஞ்சலக தபால் ஆணை எடுத்து அனுப்பலாம்.

இந்தியக் குடிமகன்கள், அயல்நாட்டு வாழ் இந்திய வம்சாவளியினர், www.epostoffice.gov.in என்ற இணைப்புக்குள் போய், தங்களது பெயர்களை நிரந்தரமாகப் பதிவு செய்துகொள்ளலாம். இதன் பின்னர் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி இணையத் தபால் ஆணையை (இ-போஸ்டல் ஆர்டர்) பெறலாம். பிரத்யேகமான எண்கள் இதற்காக வழங்கப்படும். இந்த எண்களைத் தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தில் குறிப்பிட்டால் போதும்.

30 நாட்களுக்கு மேலாகிவிட்டால் தகவலை இலவசமாகத் தரவேண்டும். நேரடியாக நம்முடைய விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டபின், அதற்கான நகல், கட்டணம் செலுத்திய சான்றான ரசீது, அதில் கையெழுத்து, தேதி, அலுவலக முத்திரை போன்றவைகள் உள்ளனவா என உறுதி செய்துகொள்ளுதல் அவசியம்.

பதிவு அஞ்சலுடனான (ரிஜிஸ்டர் போஸ்ட்) பதில் அட்டை (AD)-யில் உள்ள தபால் துறை முத்திரை, நமக்கான ஓர் அத்தாட்சி ஆகும். பதிவு அஞ்சலுடனான அட்டையில் கையெழுத்து, தேதி, முத்திரை சரியாக இல்லையென்றால், தபால் அலுவலகத்துக்குச் சென்று இவற்றையெல்லாம் சரி செய்துகொள்ள வேண்டும்.

கட்டணம் செலுத்திய காசோலை, கேட்புக் காசோலை, அஞ்சலகத் தபால் ஆணை ஆகியவை பற்றிய குறிப்புகளை விண்ணப்ப மனுவின் இறுதியில் தவறாமல் குறிப்பிடுவது மிகவும் அவசியம்.
www.indiapost.gov.in/speednew/trackaspx என்ற இணையதளம் மூலம், நம்முடைய மனு உரிய அலுவலகத்துக்குச் சென்று சேர்ந்துள்ளதா என்பதை அறிந்து, அதற்கான அத்தாட்சி சீட்டை பெற்று வைத்துக்கொள்ள வேண்டும். தனியார் விரைவு அஞ்சல் சேவை மூலம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை அனுப்பக் கூடாது. நாம் அனுப்பிய இடத்துக்கு, அந்த மனுக்கள் சென்று சேர்ந்ததற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.

நாம் அனுப்பும் கேள்விக்குப் பொதுத் தகவல் அலுவலரிடம் இருந்து 30 நாட்களுக்குள் பதில் கிடைக்கப் பெறவில்லை என்றாலோ, (இணைத் தகவல் உரிமை அலுவலரிடம் விண்ணப்பித்திருந்தால் 35 நாட்கள்) அல்லது பதில் திருப்தி அளிக்கவில்லை என்றாலோ, முடிவு பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அந்தத் துறையின், முதல் மேல் முறையீட்டு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.

முதல் மேல்முறையீட்டு அலுவலர் 30 நாட்களுக்குள் தனது பதிலை அளிப்பார். தாமதத்துக்கான காரணங்களை எழுத்து மூலம் அவர் நம்மிடம் தெரிவித்துவிட்டு, அவர் மேலும் 15 நாட்கள் (மொத்தம் 45 நாட்கள்) எடுத்துக்கொள்ளலாம்.

முதல் மேல்முறையீட்டு அலுவலர் வாய்மொழி ஆணை அல்லது எழுத்துப்பூர்வ ஆணை அளிக்க அதிகாரம் பெற்றவர் ஆவார்.

இரண்டாம் மேல்முறையீட்டு மனுவைப் பூர்த்திசெய்து, இதுவரை கிடைக்கப்பெற்ற பதில்களின் நகல்களையும், கட்டணம் செலுத்திய அனைத்து ரசீதுகளையும் இணைத்து அனுப்பலாம்.

இரண்டாம் முறை மேல்முறையீடு செய்ய 
மாநில அரசின் கீழ்வரும் துறைகளுக்கு இவரிடம் விண்ணப்பிக்கலாம். அவர், 
மாநில தலைமை தகவல் ஆணையர், 
தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையம், 
2, தியாகராயர் சாலை, 
ஆலையம்மன் கோயில் அருகில், 
தேனாம்பேட்டை, 
சென்னை-600018
(அல்லது) 

மாநில தலைமை தகவல் ஆணையர், 
தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையம், 
தபால் பெட்டி எண்: 6405,
தேனாம்பேட்டை, 
சென்னை-600018 

என்ற முகவரிக்கு உரியவர். 

அவருடைய தொலைபேசி எண்: 044-24347590, 
பேக்ஸ்: 044-24357580, 
Email: sicnic.in Web: www.tnsic.gov.in.

மத்திய அரசின் கீழ்வரும் துறைகளுக்கு, 

“CENTRAL INFORMATION COMMISSION,
 II floor, August Kranti Bhavan,
 Bhikaji Kama Place,
 NEW DELHI – 110 066 

என்ற இந்த முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் என்றால்,
 www.rtionline.gov.in/ என்ற தளத்தில்
 மத்திய அரசின்கீழ் வரும் துறைகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

இதே ஆன்லைன் தளத்திலேயே முதல் மேல்முறையீடும் செய்யலாம்.

www.rti.india.gov.in என்ற தளத்தில் இரண்டாம் மேல் முறையீடு செய்யலாம். இதற்கான 10 ரூபாய் கட்டணத்தை கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு/எஸ்.பி.ஐ. வங்கியின் மூலம் செலுத்தலாம். மேற்கண்ட தளங்களிலேயே கூடுதல் விவரங்களையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.

 ந.பா.சேதுராமன்
நன்றி : விகடன் செய்திகள் - 25.08.2016

துணிவு இல்லாத அதிகாரிகள், குவியும் வழக்குகள்


துணிவு இல்லாத அதிகாரிகள்,  குவியும் வழக்குகள் 
 என்ன செய்ய வேண்டும்?

திறமையான பல அதிகாரிகளின் செயல்பாடுகளால் தான் அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது; அரசின் நலத்திட்டங்களின் பலன்கள் சாதாரண மக்களைச் சென்று அடைகின்றன. அந்த வகையில், தன் நம்பிக்கைக்கு பாத்திரமான அதிகாரிகளைத் தான் அரசு, முக்கிய பொறுப்பில் அமர்த்துகிறது என்பதில் சந்தேகமில்லை. 

ஆனால், எதிரணியில் இருப்பவர்கள் அதற்கு வேறு விதமாக காரணம் கற்பித்து கொண்டிருந்தாலும், ஆளும் அரசுக்கு விசுவாசமாக இருப்பது தான் அதிகாரிகளின் கடமை. அதிகாரிகள் அரசுக்கு காட்டும் விசுவாசம், அரசை தேர்ந்தெடுத்த மக்களுக்கு காட்டும் விசுவாசம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு சில, திறமையற்ற, நேர்மையற்ற, அனுபவமற்ற அதிகாரிகள் தான் அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்துபவர்; இத்தகையவர்கள், விரைவாகவும், துணிந்தும் முடிவெடுக்கும் திறமையற்றவர்கள்.

இத்தகையவர்களுக்கு எந்த முடிவெடுப்பதற்கும், எந்தவொரு செயலைச் செய்வதற்கும் அச்சம். 'சிக்கலில் மாட்டிக் கொள்வோமோ' என்ற பயம். அதனால் தான், பிறர் செய்வதற்கெல்லாம் தலையை ஆட்டி, காலத்தைத் தள்ளிக் கொண்டிருப்பர். 

துறைமுகத்திலேயே கப்பல் நங்கூரமிட்டிருப்பது அதன் பாதுகாப்புக்கு உகந்தது தான். ஆனால், அது உருவாக்கப்பட்டதன் நோக்கம் அதுவல்ல. 

ஆங்கிலத்தில், 'கரேஜ் ஆப் கன்விக் ஷன்' என்ற அருமையான வார்த்தை உண்டு. தாம் செய்யும் செயல் குறித்து மிகத் தெளிவாக இருக்கும் போது நமக்கு ஏற்படும் துணிவு தான், வலிமையான, தெளிவான நம்பிக்கையின் காரணமாக ஏற்படும் துணிவு அது. மனதில் அந்த துணிவு இருந்தால் செய்யும் செயலில் தயக்கம் ஏற்படாது.

இத்தகைய திறமை இல்லாத சிலர் முக்கிய பொறுப்பில் அமர்ந்து, கடமையில் துாங்கி, புகழை இழந்து கொண்டிருக்கின்றனர்; எதைச் செய்வதற்கும் இவர்களிடம் துணிவு இருப்பதில்லை.

சட்டத்தைக் காரணமாகக் காட்டி, தனி மனித சுதந்திரத்தைப் பறிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதைத் தான், ஒரு சில அதிகாரிகள் தெரிந்தே செய்கின்றனர். சுய லாபத்துக்காகவும், சொந்த விருப்பு, வெறுப்புக்காகவும் செய்கின்றனர். ஒரு சிலர் தங்கள் அறியாமையால் செய்கின்றனர். 

இதனால் பல அப்பாவி அலுவலர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

அதிகமாக படித்து, அகில இந்திய அளவில் தேர்வு எழுதி, வெற்றி பெற்று அதிகாரிகளாக வந்தவர்களில் சிலர், பணியில் இருக்கும் போது, சாமானியர்கள் கொடுக்கும் மனுக்களைப் படிக்குமளவுக்கு கூட பொறுமையாக இருப்பதில்லை. 

உயரதிகாரிகளை அணுகும் ஒரு சாதாரண குடிமகனின் மனு, பரம பத விளையாட்டில் பாம்பிடம் கடிபட்ட காய் போல, அலட்சியம் காட்டிய அதிகாரியிடமே வந்து சேர்ந்து, மனு கொடுத்தவரை ஏளனமாகப் பார்க்கும் நிலை தான் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் நிலவுகிறது. 

அதற்காக, இந்த அதிகாரிகள் எல்லாருமே நேர்மையற்றவர்கள்; கையூட்டு பெற்று கீழ்மட்ட அலுவலர்களைக் கண்டுகொள்வதில்லை என, சொல்லி விட முடியாது. 

சமூகத்தில் தாதாக்கள் உருவாவது போல, இதுபோன்ற அதிகாரிகளின் தலைமையின் கீழ் சில தாதாக்கள் உருவாகி கோலோச்சி கொண்டிருப்பர்; அவர்களுக்கு பயந்து அப்பாவி ஊழியர்கள் அடிமைகள் போல் வேலை செய்து கொண்டிருப்பர்; பணிய மறுப்பவர்கள் பழிவாங்கப் படுவர். பழிவாங்கப்பட்டு, தண்டிக்கப்பட்டவர்கள், பதவி உயர்வு மறுக்கப்பட்டவர்கள், நீதிமன்றத்திற்கு ஓடிக் கொண்டிருப்பர். 

பொதுமக்கள் பலர் சின்னச் சின்ன பிரச்னைகளுக்கும், அரசு அலுவலர்கள் தங்கள் மீது அதிகாரிகளால் எடுக்கப்பட்ட தவறான நடவடிக்கைக்காகவும் நீதிமன்றத்துக்கு ஓடவேண்டிய கட்டாயத்தை உருவாக்குவது, இதுபோன்ற திறமையற்ற, பொறுப்பற்ற அதிகாரிகள் தான்.

இப்போதெல்லாம் சில அதிகாரிகளே, 'கோர்ட்டுக்கு போய், உத்தரவு வாங்கி வாருங்கள்' என, தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதும், அப்படிப் போய் வாங்கி வந்தாலும், தங்கள் துறை சட்ட ஆலோசகரிடம் கருத்துரை பெற வேண்டும் என்ற சாக்கில், நாளை கடத்தி, எதிர் தரப்பினர் அதற்கு மாற்று உத்தரவு வாங்க ஆலோசனையும் வாய்ப்பும், வழங்குவதும் வாடிக்கையாக உள்ளது.

இதனால், நீதிமன்றங்களில் வழக்குகள் நிரம்பி வழிகின்றன. 'வாய்தா' தேதி தெரிந்து கொள்ளவே நிறைய பேர் நீதிமன்றத்தில் கூட்டம் சேர்ந்து, அங்கு சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டு, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.போலி வழக்கறிஞர்கள் சிலர் நீதிமன்றத்தை விட்டு, அரசு அலுவலகங்களிலும், காவல் நிலையத்திலும் நேரடியாக வந்து மோத ஆரம்பித்து விட்டனர். 

இதில் பல நல்ல, மூத்த வழக்கறிஞர்களுக்கு உடன்பாடு இல்லை என்பது மட்டுமல்ல; வழக்கறிஞர்கள் சிலரின் போக்கு, மூத்த வழக்கறிஞர்களுக்கு மன வருத்தத்தையும் கொடுத்திருக்கிறது.

முன்பெல்லாம் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு வெளியே வந்து கட்சிக்காரரை சந்திப்பதையும், அவர்களுக்காக காவல் நிலையம் மற்றும் பிற அரசு அலுவலகங்களுக்கு செல்வதையும் விரும்ப மாட்டார்கள்; தங்கள் தொழிலுக்கு இழுக்கு என்று நினைப்பர். 

ஆனால் இன்று, இளம் வழக்கறிஞர்கள் அரசு அதிகாரிகளை, அலுவலகங்களுக்கு சென்று சந்திக்கின்றனர்.

உண்மையில் வழக்கறிஞர்களும், அரசு அதிகாரிகளும் சுயநலம் இல்லாமல், சமூக பொறுப்போடு நடந்து கொண்டால், கோர்ட்டுக்கு போகாமலேயே பல பிரச்னைகளை சுமுகமாக முடிக்க முடியும்; ஏழை, எளியவர் களுக்கு வீண் செலவு இல்லாமல் நீதி கிடைக்கச் செய்ய முடியும்.

பல சிறிய பிரச்னைகள், திறமையற்ற அதிகாரிகளாலும், பொறுப்பற்ற, லாப நோக்கத்தோடு செயல்படும் போலி வழக்கறிஞர்களாலும் பெரிதாக்கப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

இ - மெயில்: spkaruna@gmail.com

- மா.கருணாநிதி -
காவல் துறை கண்காணிப்பாளர் (ஓய்வு), 
சென்னை.

நன்றி : தினமலர் நாளிதழ் - 20.08.2016



Thursday, August 25, 2016

92 பைசாவில் பயணக் காப்பீடு


92 பைசாவில் பயணக் காப்பீடு - என்ன செய்ய வேண்டும்?

92 பைசாவில் முன்பதிவு பயணிகளுக்கு பயணக் காப்பீடு

ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்காக 92 பைசாவில் கொண்டுவரப்பட்டுள்ள பயணக் காப்பீட்டுத் திட்டம் ஆக. 31-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ரயில்கள் விபத்துக்குள்ளாகும்போது, பயணக் காப்பீடு எடுத்துள்ள பயணிகள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு விருப்பத் தேர்வாக பயணக் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்படும் என்று பட்ஜெட் தாக்கலின்போது ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்திருந்தார். அதன்படி, இந்தப் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை உயரதிகாரி ஒருவர், தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

ரயில்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்காக 92 பைசாவில் பயணக் காப்பீடுத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வரும் 31-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

ஆன்லைன் மூலம் பயணச் சீட்டுக்கு முன்பதிவு செய்யும்போது, விருப்பத் தேர்வாக இந்த பயணக் காப்பீடு திட்டம் இருக்கும். பயணிகள் விரும்பினால், ரயில் கட்டணத்துடன் கூடுதலாக 92 பைசாவை செலுத்தி பயணக் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். 

பயணக் காப்பீடு 5 வயதுக்குக் குறைவான சிறார்களுக்கும், வெளிநாட்டினருக்கும் பொருந்தாது. 

அதேபோல், புறநகர் ரயில்களில் பயணிப்பவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாது.

 ரயில்கள் விபத்தை சந்தித்தாலோ அல்லது பயங்கரவாதத் தாக்குதலின்போதோ பயணக் காப்பீடு எடுத்துள்ள பயணிகள் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

விபத்தில் பயணிகள் முழுமையாக செயல்படாத அளவுக்கு ஊனமடைந்தால் ரூ.10 லட்சமும், கை, கால்கள் போன்ற உடல் உறுப்புகளை இழக்க நேரிட்டால், ரூ.7.5 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும். 

இதேபோல், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுக்கு ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். 

முன்பதிவு செய்த பிறகு பயணச்சீட்டை ரத்து செய்தால் பயணக் காப்பீட்டுத் தொகை திருப்பி அளிக்கப்படமாட்டாது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

நன்றி : தினமணி நாளிதழ் - 26.08.2016

Tuesday, August 23, 2016

ஆவணப்பதிவு - தடை கோரி விண்ணப்பம்

ஆவணப்பதிவு - தடை கோரி விண்ணப்பம் - என்ன செய்ய வேண்டும்?

கீழ்க்கண்ட லின்க்கை கிளிக் செய்து டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

நன்றி : எனது முகநூல் நண்பர் திரு A Govindaraj Tirupur.


Monday, August 22, 2016

டூ வீலர் இன்சூரன்ஸ்


டூ வீலர் இன்சூரன்ஸ் - என்ன செய்ய வேண்டும்?

டூவீலர் இன்ஷூரன்ஸ்... மூன்றாண்டு பாலிசி லாபமா?

இரு சக்கர வாகனங்களுக்கு பாலிசி எடுப்பவர்களில் பலரும் தொடர்ந்து அதை புதுப்பிப்பது இல்லை. இந்தியாவில் சுமார் 75% பேர் இரு சக்கர வாகன இன்ஷூரன்ஸ் பாலிசி இல்லாமல் இருப்பதாக 2015, மே மாதத்தில் ஐ.ஆர்.டி.ஏ. நடத்திய சர்வே ஒன்றில் தெரிய வந்துள்ளது. 

நகர்ப்புறங்களைவிட கிராமப் புறங்களில் இந்தப் போக்கு மிக அதிகமாக உள்ளது. பாலிசிக் காலம் முடிந்தபின்பு, அந்த பாலிசியை தொடர முடியாமல் போவதற்கு முக்கியக் காரணம், விழிப்பு உணர்வின்மையும் நேரமின்மையும்தான். இந்தப் பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வாக, மூன்றாண்டு பாலிசிகளுக்கு பிரீமியம் கட்டும் நடைமுறை இப்போது கொண்டு வரப்பட்டுள்ளது. 

மோட்டார் வாகன பாலிசி களில் இரு வகைகள் உள்ளன. 

ஒன்று, நம் வாகன பாதிப்புக்கான ஓன் டேமேஜ் பாலிசி (Own Damage Policy). 

அடுத்து, நம் வாகனத்தால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கான மூன்றாம் நபர் பாலிசி (Third Party Insurance).

இந்த பாலிசிகளை ஒருவர் தனியாகவோ அல்லது குரூப்  பாலிசியாகவோ எடுக்கலாம்.  இந்த இரு பாலிசிகளை ஓராண்டுக்கு பதிலாக தற்போது மூன்றாண்டுகளுக்கு எடுக்கலாம்.   

ஒரு வருட பாலிசிக்கும், மூன்று வருட பாலிசிக்கும் என்ன வித்தியாசம், எதற்காக இந்த மூன்று வருட பாலிசி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது, 

இதனால் என்ன பயன் என்பது குறித்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் டிவிஷனல் மேனேஜர் கேசவனிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“இரு சக்கர வாகனக் காப்பீடு பாலிசிகளை ஒரு வருட பாலிசியாகத்தான் வழங்கி வந்தோம். இப்போது நீண்ட கால பாலிசியாகவும் மூன்றாண்டுகளுக்கு கவரேஜ் இருக்கும்படியும் வழங்கி வருகிறோம். 

இருசக்கர வாகனங் களுக்கான இன்ஷூரன்ஸை பொறுத்தவரை, போலீஸ் அதிகாரிகள் கேட்கும்போதும், அல்லது வாகன விபத்து ஏற்படும் போதுதான் பாலிசியைப் புதுப்பிக்கவில்லை என்ற எண்ணமே நினைவுக்கு வருகிறது. இதுவே மூன்று வருட பாலிசி என்கிறபோது ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கத் தேவை இல்லை. ஒருமுறை புதுப்பித்து விட்டால் அடுத்த மூன்று வருடங்களுக்கு அந்த பாலிசியை வைத்திருக்கலாம். 

ஆண்டுதோறும் மூன்றாம் நபர் பாலிசியின் பிரீமியம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உதாரணத்துக்கு, ரூ.50,000 கவரேஜ், 150 சிசி திறன் கொண்ட இரு சக்கர வாகனத்துக்கு 2012-13-ல் ரூ.357 -ஆக இருந்த மூன்றாம் நபர் பாலிசி பிரீமியம், 2013-14-ல் ரூ.422-ஆகவும், 2014-15-ல் ரூ.464-ஆகவும், 2015-16-ல் 538 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. 

மூன்றாண்டு கால பாலிசியை எடுக்கும்போது அதிகரிக்கும் பிரீமியத்தை செலுத்த தேவையில்லை என்பது பாசிட்டிவ்-ஆன விஷயம்” என்றவர் சற்று நிறுத்தி, ஓராண்டு பாலிசிக்கு பதில் மூன்றாண்டு பாலிசி எடுத்தால், எவ்வளவு பிரீமியம் மிச்சமாகும் என்பதைச்  சொன்னார். 

‘‘ரூ.50 ஆயிரம் மதிப்புடைய 150சிசி திறன் கொண்ட புதிய வாகனம் அல்லது 5 ஆண்டுகள் ஆன பழைய வாகனம் என்றால், ஒரு வருட பாலிசியில் ஓன் டேமேஜ் பிரீமியம் முதல் ஆண்டுக்கு 854 ரூபாயும், இரண்டாம் ஆண்டில் 683 ரூபாயும், மூன்றாம் ஆண்டில் 640 ரூபாயும் என மூன்று ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.2,177 செலுத்த வேண்டும். இந்த  மூன்று ஆண்டுகளுக்கும் க்ளெய்ம் எதுவும் இல்லை என்கிற கணக்கில் (நோ க்ளெய்ம் போனஸ் சலுகை அளிக்கப்பட்டுள்ள நிலையில்) செலுத்தும் மொத்த பிரீமியம் ஆகும். 

இதுவே மூன்று ஆண்டு பாலிசி என்றால் 30%  தள்ளுபடியுடன் ரூ.1,793 செலுத்தினால் போதும். பாலிசி எடுப்பவர்கள் அதிகமான சலுகையை எதிர்பார்த்தால், கூடுதலாக 20% தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு உண்டு.  இந்தத் தள்ளுபடியும் கிடைத்தால், மூன்று ஆண்டு பாலிசிக்கு பிரிமீயம் ரூ.1,281 மட்டும் செலுத்தினால் போதும். ஆக, மூன்று ஆண்டு பாலிசி பிரீமியத்தில் குறைந்தது 18 % முதல் 41% வரை, அதாவது ரூ.384 முதல் ரூ.896  வரை சேமிக்க முடியும். 

மூன்றாண்டு பாலிசியை புதுப்பிக்கும்போது எந்த க்ளெய்மும் செய்யவில்லை என்றால் 30% நிச்சய தள்ளுபடி மற்றும் 20% சிறப்புத் தள்ளுபடி கிடைக்கலாம். இதுவே ஒருமுறை க்ளெய்ம் செய்திருந்தால், 30% நிச்சய தள்ளுபடியுடன், 10% சிறப்புத் தள்ளுபடி கிடைக்கலாம். 

இரண்டு முறை க்ளெய்ம் செய்திருந்தால், 30% நிச்சய தள்ளுபடி மட்டுமே கிடைக்கும். ஒரு வருட பாலிசியில் ஆண்டுக்கு ஒரு க்ளெய்ம் செய்திருந்தால், நோ க்ளெய்ம் போனஸ் கிடைக்காது. தவிர, ரெனிவல் பிரீமியம் அதிகரிக்கும்.   

தற்போது, ஐ.ஆர்.டி.ஏ. மூன்றாண்டு பாலிசியை இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதித்து உள்ளது. விரைவில் நான்கு சக்கர வாகனங்களுக்கும் இந்த பாலிசி தரப்படலாம்” என்றார்.

மூன்றாண்டு பாலிசியில் பணம் மிச்சமாவதோடு, நேரமும் மிச்சமாகிறது. இனி பாலிசியை புதுப்பிக்க நேரமில்லை என்று சொல்ல மாட்டீர்கள்தானே?

ஓன் டேமேஜ் பாலிசி -  பிரீமியத்தில் எவ்வளவு லாபம்?

ஒரு வருட பாலிசி - (மூன்றாண்டுகளுக்கு சேர்த்து மொத்த பிரீமியம்) - ரூ.2,177

3 ஆண்டு பாலிசி  (நிச்சயம் 30% தள்ளுபடி, 20% சிறப்புத் தள்ளுபடி) - ரூ.1,281

லாபம் - ரூ.896(வாகனத்தின் மதிப்பு ரூ.50,000, 150 சிசி, புதிய அல்லது பழைய வாகனம்.)

சோ.கார்த்திகேயன்

நன்றி : நாணயம்விகடன் - 07.02.2016

Friday, August 19, 2016

நிறுவனங்களின் அனுமதி இல்லாமலேயே பி.எஃப்.


நிறுவனங்களின் அனுமதி இல்லாமலேயே பி.எஃப். 
பணம் பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

ஓய்வூதிய நிதியை நிர்வகித்து வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) பிஎப் சந்தாதாரர்களுக்கு புதிய பொதுக் கணக்கு எண்ணை (யுஏஎன்) அடிப்படையாக கொண்ட 10டி படிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் நிறுவனங் களின் ஒப்புதல் இல்லாமலேயே சந்தாதாரர்கள் தங்களது ஓய்வூதிய தொகையை பெற்றுக் கொள்ளமுடியும். தற்போதைய நிலையில் ஊழியர்கள் ஓய்வூதிய திட்டம் 1995-ன் கீழ் சந்தாதாரர்கள் அவர்களது ஓய்வு கால பலன்களை பெறுவதற்கு நிறுவனங்களின் ஒப்புதல் வேண்டும்.
சந்தாதாரர்களின் பொதுக் கணக்கு எண்ணைக் அடிப்படை யாக கொண்டு 10-டி யுஏஎன் என்ற புதிய படிவம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக இபிஎப்ஓ வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்த புதிய படிவத்துக்கு நிறுவனங்களின் ஒப்புதல் தேவையில்லை.
நேரடி யாக இபிஎப்ஓ அலுவலகம் சென்று விண்ணபிக்கலாம். மேலும் இபிஎப் சந்தாதார்கள் தங்களது ஓய்வூதிய பலன்களை உயர்த்திக் கொள்ளுவதற்கு வாய்ப்பையும் தற்போது வழங்கி வருகிறது.
58 வயதுக்கு மேல் பங்களிப்பு செய்தோ அல்லது பங்களிப்பு இல் லாமலேயே தங்களது ஒய்வூதிய பலன்களை 58 வயதிலிருந்து 60 வயதுக்குள் எப்போது வேண்டுமா னாலும் பெற முடியும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தி இந்து நாளிதழ் - 20.08.2016

Wednesday, August 17, 2016

அனஸ்தீசியா (மயக்க மருந்து)


அனஸ்தீசியா(மயக்க மருந்து) - என்ன செய்ய வேண்டும்?

காயம், அறுவைசிகிச்சை என்றால் வலிநிவாரணிகள், மயக்க மருந்துகள் அளிக்கப்படுகின்றன. மயக்க மருந்து இல்லை என்றால், நம் நிலை என்ன என்று யோசித்துப்பார்த்தாலே பயம் வரும். அந்தக் காலத்தில், நம் பாரம்பரிய மருத்துவங்களில் வலி நிவாரணியாக அபின், கஞ்சா போன்ற போதைவஸ்துக்கள் பயன்படுத்தப்பட்டன. 

டாக்டர் வில்லியம் தாமஸ் கிரீன் மார்ட்டன் முதன்முதலில் ஈதர் என்ற மயக்க மருந்தை நோயாளிக்கு அளித்தார். அதன் மூலம், நோயாளிக்குக் கழுத்தில் இருந்த கட்டி, வலி இன்றி அகற்றப்பட்டது. இன்று, பல் பிடுங்குவதில் இருந்து சிசேரியன் வரை எந்த அறுவைசிகிச்சையாக இருந்தாலும், மயக்க மருந்து இல்லாமல் செய்யப்படுவது இல்லை.

அனைவராலும் மயக்க மருந்தை எளிதில் கொடுத்துவிட முடியாது. சிறிது அதிகமானாலும், உயிரிழப்புகூட ஏற்படும் என்பதால், இதற்கு எனப் பிரத்யேகப் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மட்டும்தான் மயக்க மருந்தைக் கொடுக்க முடியும். இதற்கு, அனஸ்தீசியா என்ற பிரத்யேக மருத்துவப் பிரிவே உள்ளது.

அனஸ்தீசியா

நோயாளிக்கு உடல் முழுவதையுமோ அல்லது குறிப்பிட்ட பகுதியையோஉணர்வற்றதாக, வலியற்றதாக மாற்ற, மருந்து அளிப்பதை அனஸ்தீசியா என்கிறோம். மொபைலில் சைலன்ட் மோடு இருப்பது போல, முழு உடல் அல்லது குறிப்பிட்ட பகுதியைத் தற்காலிகமாக ஸ்லீப் மோடுக்கு மாற்றுவதுதான் அனஸ்தீசியா. இதன் மூலம், வலி என்ற விஷயமே நோயாளிக்குத் தெரியாது.

யாருக்கு, என்ன அளவு, என்ன மாதிரியான மயக்க மருந்து என்பதை முடிவுசெய்யும் திறன் பெற்றவரை ‘மயக்க மருந்தியல் நிபுணர்’ என்கிறோம். ஒருவருக்கு ஏற்பட்ட பிரச்னை மற்றும் செய்யப்படும் அறுவைசிகிச்சை ஆகியவற்றைப் பொறுத்து, எந்த வகை மயக்க மருந்தைச் செலுத்துவது என்பதை மருத்துவர் தீர்மானிப்பார். எந்த வகையாக இருந்தாலும், அதைத் தேர்ந்த மருத்துவர் மட்டுமே அளிக்க வேண்டும். பொது மருத்துவர், செவிலியர் என்று யார் வேண்டுமானாலும் மயக்க மருந்தைக் கொடுக்க முடியாது.

 லோக்கல் அனஸ்தீசியா

உடலில் ஒரு சிறு இடத்தை மட்டும் மரத்துப்போகச் செய்வதற்காக லோக்கல் அனஸ்தீசியா பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, பற்களில் செய்யப்படும் அறுவைசிகிச்சைகளுக்கு லோக்கல் அனஸ்தீசியா அளிக்கப்படும். குறிப்பிட்ட பகுதியைச் சுற்றிலும் தேவைப்படும் அளவுக்கு ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தப்படும். இதனால், அந்தப் பகுதி மட்டும் மரத்துப்போகும். ஆனால், அறுவைசிகிச்சை செய்யப்படும்போது, நோயாளி சுயநினைவுடன் இருப்பார்.

ரீஜனல் அனஸ்தீசியா

உடலின் ஏதாவது ஒரு பகுதியில் பாதிப்பு என்றால், அந்தப் பகுதி முழுவதுமே உணர்வு நீக்கம் செய்ய மருந்து அளிப்பதை ‘ரீஜினல் அனஸ்தீசியா’ என்பார்கள். உதாரணமாக, கை மூட்டு அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் எனில், ஒரு பக்க கை, கால் மரத்துப்போக மயக்க மருந்து தரப்படும். ஊசி மூலமாகவே இந்த வகை மயக்க மருந்துகள் செலுத்தப்படும். ரீஜினல் அனஸ்தீசியாவில் இரண்டு வகை இருக்கின்றன.

அடிவயிறு, இடுப்பு, மலக்குடல், கால் மூட்டு  போன்ற இடுப்புக்குக் கீழே இருக்கும்  இடங்களில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டியதாக இருந்தால், முதுகுத்தண்டுக்கு கீழே குறிப்பிட்ட இடத்தில் ஒரே ஒரு ஊசி மட்டும் போடுவார்கள். இதனால், இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதிகள் மட்டும் முற்றிலும் மரத்துப்போகும். இதை, ‘ஸ்பைனல் அனஸ்தீசியா’ என்பார்கள்.

சிசேரியன் முதலான அறுவைசிகிச்சைகளுக்கு ‘எபிடியூரல் அனஸ்தீசியா’ என்ற முறை கையாளப்படுகிறது. சில அறுவைசிகிச்சைகளில், வலி மிக அதிகமாக இருக்கும் என்பதால், அதைக்  கட்டுப்படுத்த இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது. முதுகுத்தண்டுக்குக் கீழே ஊசி மூலம் கதீடர் எனும் குழாய்  இணைக்கப்பட்டு, அதன் வழியே தொடர்ச்சியாக மயக்க மருந்துகள் செலுத்தப்படும். மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் செய்யப்படும்  அறுவைசிகிச்சைகளுக்கு இந்த முறையில் மயக்க மருந்துகள் செலுத்தப்படும்.

ஜெனரல் அனஸ்தீசியா 

‘புரொப்பஃபால்’ (Propofol) முதலான மயக்க மருந்துகள் ‘ஜெனரல் அனஸ்தீசியா’ வகையைச் சேர்ந்தவை. ஒரு சில அறுவைசிகிச்சையின்போது நோயாளியைத் தற்காலிகமாக சுயநினைவை இழக்கச்செய்ய  ஜெனெரல் அனஸ்தீசியா முறை நடைமுறையில் உள்ளது. இந்த முறையில் நோயாளி முற்றிலும் சுயநினைவு இன்றி இருப்பார். செயற்கை ஆக்சிஜன் கொடுக்கப்படும். மயக்க மருந்துகள் டிரிப்ஸ் வழியாகச் செலுத்தப்படும். 

இதில் கொடுக்கப்படும் மயக்க மருந்துகளால், தசைகள் செயற்கையாகச் செயல் இழக்க வைக்கப்பட்டு அறுவைசிகிச்சைக்குத் தயாராக்கப்படும். இந்தத் தசைகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர தனி மருந்துகள் தந்து, படிப்படியாக நோயாளியை மீட்டு, இயல்புநிலைக்குக் கொண்டுவருவார்கள். அதுவரை, மயக்கவியல் நிபுணர், செவிலியர்கள் உடன் இருந்து கண்காணிப்பர்.

யாருக்கு, என்ன அளவு தர வேண்டும்?

நோயாளியின் எடையைப் பொறுத்தே மயக்க மருந்தின் அளவு தீர்மானிக்கப்படும். ஒரு கிலோவுக்கு குறிப்பிட்ட அளவில் கொடுக்கப்படுகின்றன. ரிஸ்க் என்பது எல்லாவற்றிலும் உள்ளதுபோல, இதிலும் இருக்கிறது. மது, சிகரெட் போன்ற கெட்ட பழக்கம் இல்லாத, இயல்பான ஆரோக்கியமான நபருக்குப் பாதிப்பு மிகமிகக் குறைவாக இருக்கும். 

பல் அறுவைசிகிச்சைகளில் லிக்னோகைன் எனும் லோக்கல் அனஸ்தீசியா கொடுக்கப்படும். இது, 30 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை வாயை மரத்துப்போகச்செய்யும். இது போல, ஒவ்வொரு மயக்க மருந்துக்கும் கால அளவு இருக்கிறது. இதனை, மருத்துவர்கள் அனுமதி இன்றி எந்தக் காரணம் கொண்டும் யாரும் பயன்படுத்தக் கூடாது. 

ஒரு நோயாளி, அறுவைசிகிச்சை செய்துகொள்ளும் முன்பு, பிரீமெடிகேஷன்  கொடுப்பது, தொடர்ந்து அறுவைசிகிச்சையின் போது உடல்நலனில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பது, அதற்கு ஏற்ப உடனடியாக மருந்துகள் தர வேண்டியது, அறுவைசிகிச்சை முடிந்து மீண்டும் நலம் பெற்றுத் திரும்பும் வரை கண்காணிக்க வேண்டியது மயக்க மருந்தியல் மருத்துவரின் கடமை.

ஏன் மயக்க மருந்தியல் மருத்துவர் ஆலோசனை தேவை?

எல்லா பிரச்னைகளையும் கண்டறிய பரிசோதனைகள் பயன்படாது. சிகிச்சை வரலாறு தெரிந்தாலேபோதும். ஒரு நோயாளியின் கடந்த காலத்தில் ஏற்பட்ட மருத்துவப் பிரச்னைகளை சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் மட்டும் அல்லாமல் மயக்க மருந்தியல் மருத்துவரிடம் தவறாமல் சொல்ல வேண்டும்.   சிலருக்கு, சாதாரண குரோசின் முதலான வலி நிவாரணி மாத்திரைகளேகூட அலர்ஜியாக இருக்கும். எனவே, எந்தப் பொருள் அலர்ஜி என்பதை மறைக்கக் கூடாது. பெற்றோர்களுக்கு என்னென்ன நோய்கள் இருந்தன என்பதைச் சொல்ல வேண்டும். ஏற்கெனவே அறுவைசிகிச்சை செய்திருந்தால், அதுபற்றி தெரிவித்து, ரிப்போர்ட் இருந்தால் எடுத்து வர வேண்டும். ஏனெனில், எந்த மயக்க மருந்து எப்படி வேலை செய்தது என்பதை அப்போதுதான் கண்டுபிடிக்க முடியும். 

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் இருந்தால், கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். இல்லை எனில் நுரையீரல், கல்லீரல் போன்றவற்றில் சிகிச்சையளிக்கும்போது பாதிப்புகள் ஏற்படலாம். ஆஸ்துமா, வலிப்பு நோய், மஞ்சள் காமாலை, டெங்கு  காய்ச்சல், சர்க்கரை நோய், நெஞ்சு வலி போன்றவை ஏற்கெனவே வந்திருந்தால், மறைக்காமல் தெரிவிக்க வேண்டும்.

சந்தேகங்கள் கேட்கத் தயங்கக் கூடாது. அறுவைசிகிச்சை முடிந்து நலமான பிறகு அறுவைசிகிசசையின்போது, எந்தெந்த சமயங்களில் என்னென்ன மயக்க மருந்துகள் கொடுக்கப்பட்டன, அதற்கு உங்கள் உடல் என்ன எதிர்வினை செய்தது என்பதை எழுத்துப்பூர்வமாக கேட்டுப் பெறுவதும்கூட நோயாளியின் உரிமை.

 பரிசோதனை அவசியம்!

மயக்க மருந்தால் உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் பக்கவிளைவு ஏற்படும் என்பதால், பல பரிசோதனைகள் செய்த பிறகே ஒருவருக்கு என்ன மயக்க  மருந்து தர வேண்டும் என்பதை மருத்துவர் தீர்மானிக்க முடியும். உதாரணமாக, ஒருவருக்கு ரத்தம் வெளியேறும் பிரச்னை இருந்தால், அவருக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்வது எளிதான விஷயம் இல்லை. அதேபோல, கல்லீரல் செயல்பாடுகள் சரியாக இல்லை என்றால், மயக்க மருந்தால் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. எனவே, அறுவைசிகிச்சை செய்துகொள்ளப்போகும் நபருக்கு ஹீமோகுளோபின் பரிசோதனை, யூரியா கிரியாட்டின் பரிசோதனை, குளுக்கோஸ் அளவுகள், ஈ.சி.ஜி, எக்கோ, எக்ஸ்ரே, நுரையீரல் பரிசோதனை மற்றும் நேரடிப் பரிசோதனை போன்றவற்றை மேற்கொண்ட பிறகுதான், ஒருவருக்கு எந்த வகையான மயக்க மருந்து தருவது என முடிவுசெய்யப்படும்.

நிபுணரிடம் பேசுங்கள்!

பெரும்பாலானவர்கள், அறுவைசிகிச்சை  செய்யும் சமயத்தில் தனக்கு என்ன மருந்து செலுத்தப்பட்டது, அதன் இயல்பு என்ன என்பதைக்கூட தெரிந்து வைத்துக் கொள்வது கிடையாது. ஒரு நோயாளி அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருடன் மட்டும் அல்லாமல், மயக்க மருந்தியல் நிபுணரிடமும் கலந்து ஆலோசிக்க வேண்டியதும் முழுத் தொடர்பில் இருக்க வேண்டியதும் மிகவும் அவசியம்.

நன்றி : டாக்டர் விகடன் - 01.08.2016

பத்திரப்பதிவு சந்தேகங்கள்

பத்திரப்பதிவு சந்தேகங்கள் - என்ன செய்ய வேண்டும்?
பத்திரப் பதிவு குறித்த ட்விட்டர் கேள்வி பதில்
1. சொத்தின் மதிப்பில் எத்தனை சதவிகிதம், பத்திரம் பதிய செலவாகும்? 
 பதில்: நீங்கள் என்ன வகை ஆவணம் என்பதை இங்கே குறிப்பிடவில்லை. ஆகையால் விற்பனை ஆவணம் (Sale Deed) என்று எடுத்துக்கொண்டால், அந்தச் சொத்தின் சந்தை மதிப்பில் (அரசு வழிகாட்டி மதிப்பு) 7 சதவிகிதம் முத்திரை கட்டணமாகவும், 1 சதவிகிதம் பதிவுக் கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.  
2. சொத்தின் மதிப்பு எவ்வளவுக்கு அதிகமாக இருந்தால், அந்தச் சொத்தை பதிவு செய்ய வேண்டும்? 
பதில்: ரூ. 100 க்கு அதிகமான மதிப்பு கொண்ட அசையாத சொத்துகள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும்.  
3. குறிப்பிட்ட மதிப்புக்கு கீழ் இருந்தால், மனையை பதிவு செய்ய கட்டணம் கிடையாது என்று என் நண்பன் சொன்னான். அந்தத் தொகை எவ்வளவு என்று குறிப்பிட முடியுமா? 
பதில்: ஆம், அந்தக் குறிப்பிட்ட தொகை ரூ. 25,000. 
4. நான் வாங்கப் போகிற மனையின் அரசு மதிப்பு சதுர அடி ரூ. 1,000. சந்தை விலை ரூ. 500. எந்த மதிப்புக்கு நான் பத்திரம் பதிவு செய்ய வேண்டும்?
பதில்: நீங்கள் அரசு வழிகாட்டி மதிப்புக்குத்தான் ஆவணத்தைப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் குறைந்த மதிப்பிற்குப் பதிவு செய்திருந்தால் சார் பதிவாளர் அந்த ஆவணத்தை, சிறப்பு துணை மாவட்ட ஆ ட்சியர் (முத்திரைத்தாள்) அலுவலகத்திற்கு அந்தச் சொத்தின் சந்தை மதிப்பை அறிய அனுப்பி வைப்பார். அவர் கண்டறிந்த மதிப்பும் நீங்கள் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள மதிப்பும் ஒன்றாக இருந்தால், உங்கள் ஆவணம் உங்களிடம் ஒப்படைக்கப்படும். ஒருவேளை அந்த மதிப்பு நீங்கள் குறிப்பிட்டுள்ள மதிப்பை விட அதிகமாக இருந்தால், கூடுதல் மதிப்புக்கு முத்திரை, பதிவு கட்டணம் நீங்கள் தனியே செலுத்த வேண்டியிருக்கும். மேலும், சில நேரங்களில் அப்போதைய சந்தை நிலவரத்தை வைத்து சந்தை மதிப்பை சிறப்பு துணை மாவட்ட ஆட்சியர் அரசு வழிகாட்டி மதிப்பை விட அதிகமாகக் கணக்கிட வாய்ப்பும் உள்ளது. 
5. கடந்த 5 வருடங்களுக்கு முன் வீட்டு மனை ஒன்று வாங்கினேன். அதனை இப்போது விற்க முயற்சிக்கும் போது சர்வே எண் தவறாக எழுதப்பட்டுள்ளது. இதற்கு திருத்தல் பத்திரம் போட வேண்டும் என்கிறார்கள். 2010-ல் சதுர அடி அரசு மதிப்பு 1000 ரூபாய். இப்போது ரூ. 2,000. வித்தியாசப்படும் தொகைக்கு முத்திரைத் தீர்வை பதிவு கட்டணம் அலுவலகத்தில் கட்டச் சொல்கிறார்கள். இந்தத் தொகையை எனக்கு தவறாக பதிவு செய்து கொடுத்த எனக்கு இடத்தை விற்றவரிடம் கேட்க முடியுமா?
பதில்: பதிவு செய்யப்பட்ட ஆவணத்தில் எந்தத் திருத்தம் செய்யப்படுவதாக இருந்தாலும் பிழை திருத்தல் ஆவணம் மூலம் தான் செய்யப்படும். எல்லா பிழை திருத்தல் ஆவணத்திற்கும், அதிலுள்ள கவனக்குறைவால் ஏற்பட்ட பிழைகளுக்காக கூடுதல் முத்திரை வரியோ கட்டணமோ வசூலிக்கப்பட மாட்டாது. ஆனால் தாய் பத்திரத்தில் சர்வே எண் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட நான்கு எல்லைகள், பரப்பளவு, அமைவிடம் ஆகிய மற்ற குறிப்பிட்ட விஷயங்கள் தாய் பத்திரத்தில் உள்ளபடியே இருந்தால், பிழை திருத்துவதற்கு ரூ. 200 முதல் 300 வரை செலவாகலாம். ஒருவேளை ஆவண மதிப்பில் உள்ள புதிய விகிதப்படி சார் பதிவாளர், கூடுதல் முத்திரை கட்டணத்தை கட்ட சொன்னால், நீங்கள் உயர் அதிகாரிகளிடம் மேல்முறையீடு செய்யலாம். உங்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 
6. புதிதாக ஃபிளாட் பதிவு செய்யும்போது, பத்திரப் பதிவுக்கு என்னென்ன கட்டணங்கள் செலுத்த வேண்டி இருக்கும்? விரிவாக விளக்கவும்.
பதில்: புதிய ஃபிளாட்டுக்கு, முதலில் நீங்கள் கட்டுமான உடன்படிக்கைப் பத்திரத்தைப் பதிவு செய்ய வேண்டும். அதற்கு கட்டட மதிப்பில் 1 சதவிகிதம் முத்திரை கட்டணமாகவும், 1 சதவிகிதம் பதிவு கட்டணமாகவும் செலுத்த வேண்டும். பின்னர், பிரிபடாத மனை விற்பனை ஆவணத்தைப் பதிவு செய்ய வேண்டும். இதற்கு பிரிபடாத மனை (யூடிஎஸ்) வழிகாட்டி மதிப்பில் 7 சதவிகிதத்தை முத்திரை கட்டணமாகவும் 1 சதவிகிதத்தைப் பதிவு கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.  
7. நான்கு வருட பழைய அடுக்குமாடி குடியிருப்பை வாங்குகிறேன். வீட்டின் பரப்பு 1000 சதுர அடி. யூடிஎஸ் 600 சதுர அடி. வீட்டை 35 லட்ச ரூபாய்க்கு வாங்குகிறேன். எனக்கு பத்திரப் பதிவுக்கு எவ்வளவு செலவாகும்?
பதில்: நீங்கள் வாங்கும் கட்டடம் எவ்வளவு பழையதாக இருந்தாலும், பொதுப்பணி துறையினர் வழங்கியுள்ள மதிப்பின் அடிப்படையில் உங்கள் கட்டடம் மதிப்பிடப்படும். இந்த மதிப்பு ஒவ்வொரு வருடமும் இவ்வாறு கணக்கிடப்படும். இதன் விவர அட்டவணை சார் பதிவாளரிடம் இருக்கும். இதன்படி சொத்தின் தற்போதைய மதிப்புக்கு 7% முத்திரை கட்டணமும் 1% பதிவு கட்டணமும் செலுத்த வேண்டும். 
முதலில் நீங்கள் அந்த நிலத்தின் பிரிபடாத பங்கின் அரசு வழிகாட்டி மதிப்பையும் அந்தக் கட்டத்தின் ஒரு சதுர அடிக்கான விலையையும் கேட்டு அறிந்து அதற்கேற்ப பத்திரத்தை உருவாக்க வேண்டும். அந்த பழைய ஃப்ளாட்டை பதிவிற்கு பின் சார் பதிவாளர் நேரில் வந்து சோதனை செய்வார். அவர் இடும் மதிப்பு ஆவண மதிப்பை விட கூடுதலாக இருந்தால் அதற்கு எவ்வளவு கூடுதல் முத்திரை கட்டணம், பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை சொல்வார். மதிப்பு சரியாக இருந்தால் ஆவணத்தை அப்படியே திருப்பி தருவார். 
8. என் பெயரில் இருக்கும் சொத்தை என் மனைவிக்கு தானமாக கொடுக்க விரும்புகிறேன். சொத்தின் மதிப்பு ரூ. 40 லட்சம். என் மனைவியின் பெயருக்கு சொத்தை மாற்ற எவ்வளவு செலவாகும்? 
பதில்: அசையாத சொத்து மனைவி பெயருக்கு மாற்றப்படும்போது, அதன் மதிப்பு ரூ 40 லட்சமாக இருந்தால் ரூ. 25,000 முத்திரை கட்டணமாகவும், ரூ. 5,000 பதிவுக் கட்டணமாகவும் செலுத்த வேண்டும். 
9. நான் வாங்கும் சொத்துக்கு அரசு வழிகாட்டி மதிப்பு, சந்தை மதிப்பை விட இரு மடங்கு அதிகமாக இருக்கிறது. இதனை குறைத்து, சரியான சந்தை மதிப்பில் பத்திரம் பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்?
பதில்: 4வது கேள்விக்கான பதிலை பார்க்கவும். 
10. நான் புதிதாக ஒரு வீடு வாங்க இருக்கிறேன், வீட்டின் மதிப்பு 50 லட்சம் ரூபாய். இதற்கு முத்திரை மற்றும் பதிவுக் கட்டணமாக சொத்து மதிப்பில் 12 சதவிகிதம் பில்டர் கேட்கிறார். சரி தானா? 
பதில்: 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய வீட்டுக்கு முத்திரைக் கட்டணம் 3,50,000 ரூபாய், பதிவுக் கட்டணம் 50,000 ரூபாய் மட்டுமே. 
11. நான் 28 வருடங்களுக்கு முன் ஒரு வீட்டை என் பெயரில் வாங்கினேன், தற்போது என் மகனின் பெயருக்கு அதை மாற்றி பதிவு செய்ய வேண்டும் அதற்கு என்ன நடைமுறைகள் என்று விளக்கவும்? அதோடு எவ்வளவு செலவாகும் என்பதையும் குறிப்பிடவும்.
பதில்: உங்கள் பெயரில் உள்ள வீட்டை உங்களுடைய மகன் பெயருக்கு மாற்ற தான ஏற்பாடு பத்திரம் எழுதி பதிவு செய்ய வேண்டும். இதற்கு முத்திரைக் கட்டணம் தற்போதைய சந்தை மதிப்பில் 1 சதவிகிதமாக இருக்கும். ஆனால், இந்த கட்டணம் அதிகபட்சம் 25,000 ரூபாய் மட்டுமே. இதைத் தவிர்த்து சொத்து மதிப்பில் 1 சதவிகிதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இதன் அதிகபட்சம் 5,000 ரூபாய் மட்டுமே. 
12. சொத்து பதிவு மற்றும் முத்திரைக் கட்டணம் யாருக்கு செல்கிறது. இதனால், பொது மக்களுக்கு என்ன நன்மை?
பதில்: முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் அரசின் வருவாய்க்கு செல்கிறது. இது பொது நோக்கங்களுக்காக வரவு-செலவு திட்டம் (பட்ஜெட்) மூலம் செலவழிக்கப்படுகிறது. 
13. நில மோசடிகளில் கிரிமினல் வழக்கு எப்படி தொடுப்பது? எந்தெந்த சட்டப் பிரிவுகளில் தொடுப்பது?
பதில்: நில மோசடி, நில அபகரிப்பு ஆகியவற்றில் இந்திய தண்டனைச் சட்டம் 420 (மோசடி)பிரிவு 120 பி (குற்றச்சதி), பிரிவுகள் 405, 406 (நம்பிக்கை மோசடி), பிரிவுகள் 441, 447 (குற்ற ஆக்கிரமிப்பு), பிரிவுகள் 465, 466, 468 (ஃபோர்ஜரி) பிரிவுகள் 472, 473, 474, 475, 476 (போலி உருவாக்கல்), 416, 419 (ஆள்மாறாட்டம்), பதிவுச்சட்டம் பிரிவு 81, 82, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் முதலில் காவல் நிலையத்தில் புகார் செய்து முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகாரை சமர்ப்பித்து வழக்கு தொடர்ந்தால் அவர் அதை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அருகில் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைப்பார். 
14. நான் ஒரு ஆவணத்தைக் கையெழுத்து வாங்கி உடனடியாக பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது. இந்த ஆவணம் எதுவரை செல்லுபடி ஆகும்?
பதில்: ஒரு ஆவணத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்துப் போட்டுவிட்டால் நான்கு மாதங்களுக்குள் சார் பதிவாளர் முன்பாக பதிவுக்கு தாக்கல் செய்யவேண்டும். இயலாதவர்கள் அரசு விதித்த விகிதச்சாரப்படி அபராதம் கட்டி மேலும் நான்கு மாத காலம் முடிவதற்குள் தாக்கல் செய்துகொள்ளலாம். ஆவணத்தை எழுதிக்கொடுத்தவர்களில் எவராவது சார் பதிவாளர் முன்பு தோன்றி ஒப்புதல் கையெழுத்து செய்யவும், ரேகை பதிவு செய்யவும் இயலாவிட்டால் மேலும் நான்கு மாதங்கள் அபராதம் கட்டுவதன் மூலம் காலத்தை நீட்டிக்கலாம். எனவே ஆவணத்தைத் தாக்கல் செய்வதற்கு எட்டு மாதங்களும் சார் பதிவாளர் முன்பு தோன்றுவதற்கு நான்கு மாதங்களும் ஆகமொத்தம் ஒரு ஆவணத்தின் ஆயுள் ஒரு ஆண்டு காலம் ஆகும். கையெழுத்து போடப்பட்டு எட்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் சார் பதிவாளர் தாக்கல் செய்யப்படாத ஆவணம் செல்லாமல் போய்விடும். அதே போல் சார் பதிவாளர் முன் தாக்கல் செய்யப்பட்ட பின் நான்கு மாதங்களுக்குள் கையெழுத்திட்ட அனைவரும் வந்து ஒப்புதல் கையெழுத்து, கைரேகை இடுதல் முதலியன செய்யாவிட்டால் ஆவணம் பதிவு செய்ய மறுக்கப்பட்டு திருப்பி அளிக்கப்படும். 
15. பதிவு செய்த விற்பனை ஆவணத்தை ரத்து செய்ய முடியுமா?
பதில்: பதிவு செய்த ஆவணத்தை ஒருதலைபட்சமாக விற்பவர் மட்டும் வந்து ரத்து செய்ய இயலாது. விற்றவர், வாங்கியவர் இருவரும் வந்து ரத்து செய்தாலும் கூட அந்த ரத்து முறைப்படியான மறுவிற்பனை ஆவணத்தின் மூலமே செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் மேற்படி பதிவானது, சட்டப்படி நடைமுறைப்படுத்தப்படாது என்று ஆவணத்தில் மேற்குறிப்பு செய்யப்படும். 
16. நில அபகரிப்பைப் பற்றி காவல் துறையில் புகார் செய்யும்போது சிவில் கேஸ் என்று சொல்லி சிவில் கோர்ட்டுக்கு போங்கள் என்று சொல்கிறார்கள், இது சரியா?   
பதில்: சில நிகழ்வுகளில் இது சரியாக இருக்கலாம். ஒரு சொத்தின் மீது பங்காளி சண்டை இருந்தால் அந்தச் சொத்தின் மீது உரிமையுள்ள ஒருவர் தனக்கு மட்டும் நிலத்தை அபகரித்துக்கொண்டு மற்றவர்களை விரட்ட முயற்சி செய்தால் அதில் யாருக்கு உண்மையான உரிமை உள்ளது என்பதை சிவில் நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் சம்பந்தமில்லாத ஒருவர் உங்கள் சொத்தை ஃபோர்ஜரி, ஆள்மாறாட்டம், போலி ஆவணம் முதலிய வழிகளில் அபகரிக்க முயற்சிக்கும்போது அது முழுக்க முழுக்க கிரிமினல் குற்றம் ஆகும்.  
17. மைனர் சொத்தை அவரது தந்தை அல்லது காப்பாளர் விற்பனை செய்தால் வாங்கலாமா?
பதில்: இளையவர் சொத்தை நீதிமன்றத்தின் அனுமதியோடுதான் விற்பனை செய்ய முடியும். அதே போல் அறக்கட்டளைகள் சொத்தையும் நீதிமன்ற அனுமதியோடுதான் விற்பனை செய்ய முடியும்.
18. என் வீட்டின் உண்மையான மதிப்பு 32 லட்சம் தான் ஆனால் சந்தை விலை 41 லட்சமாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த பிரச்னையை யாரிடம் சொல்லி புரிய வைத்து என் வீட்டின் மதிப்பை குறைத்து பதிவு செய்ய முடியும்?
பதில்:  கேள்வி 4-ல் கொடுக்கப்பட்டுள்ளது.
19. இரண்டு மாதங்களுக்கு முன், என் வீட்டின் சந்தை மதிப்பை விட 5 லட்சத்திற்கு கூடுதலாக பதிவு மற்றும் முத்திரைக் கட்டணத்தை செலுத்திவிட்டேன். இதை திரும்பப் பெற வழி இருக்கிறதா? 
பதில்: நீங்களாக முன் வந்து வற்புறுத்தலின்றி செலுத்தியிருந்தால் அதைத் திரும்பப் பெற சாத்தியமில்லை. மாறாக வலியுறுத்தலின் பேரில் எதிர் உணர்வின் அடிப்படையில் (under protest) செலுத்தியிருந்தால் மேலதிகாரிக்கு முறையீடு செய்து திருப்புத் தொகை (refund) பெறலாம். 
20 என் மனைவியின் அப்பா எனக்கு 10 சென்ட் வீட்டு மனையை தருவதாக சொல்கிறார். இதற்கு நான் எப்படி முத்திரை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்?
பதில்: உங்கள் மனைவியின் பெயரிலோ அல்லது உங்கள் பிள்ளைகள் பெயரிலோ சொத்தை எழுதிக்கொடுப்பதாக இருந்தால், கேள்வி 8-க்கான பதிலை பார்க்கவும். 
உங்களுக்கு நேரடியாக எழுதிக்கொடுப்பதாக இருந்தால் கேள்வி 1-க்கான பதிலைப் பார்க்கவும்.
21. அரசு மதிப்பை விட மனையின் சந்தை விலை குறைவாக இருந்தால், எந்த மதிப்புக்கு நான் பதிவு செய்வது?
பதில்: கேள்வி 4-க்கான பதிலைப் பார்க்கவும்
22.பதிவு செய்த விற்பனை ஆவணத்தை ரத்து செய்ய முடியும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.. கட்டிய முத்திரை மற்றும் பதிவு கட்டணம் திரும்பக் கிடைக்குமா?
பதில்: ஒரு ஆவணம் பதிவு செய்யப்பட்டுவிட்டால் முத்திரைத்தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் திருப்பி தரப்பட மாட்டாது. ஆவணம் பதிவு செய்யப்படாமல் நிலுவை ஆவணமாக வைக்கப்பட்டு அப்படியே திருப்பி பெறப்பட்டால் முத்திரைத்தீர்வை பதிவுக் கட்டணத்திற்கு திருப்பு தொகை பெறலாம்.
23.பத்திரப் பதிவிற்கு செல்லும்போது சார்பதிவாளர்கள் அதைக் கொண்டு வா? இதை கொண்டு வா என்று அழைக்கழிக்கிறார்கள். பதிவிற்கு நாம் என்னென்ன கையில் கொண்டு செல்ல வேண்டும்?
பதில்: 
A. தயாரிக்கப்பட்ட ஆவணம்
B. வீடு இருந்தால் அதன் முழு விவரம் அடங்கிய படிவம், வரைபடம், மனைப்பிரிவின் அங்கீகாரம் பெற்ற நிலப்படம்.
C. ஆவணதாரர்களின், சாட்சிகளின் புகைப்பட அரசு/அரசுசார்பு அடையாள அட்டைகள் அசலில் மற்றும் சீராக்கப்படிவத்துடன்.
D. பதிவுக் கட்டணம் ரூ. 1000/-க்கு மேல் இருந்தால் கேட்பு காசோலை, முத்திரைத் தீர்வை இட்டது குறைவாக இருப்பின் குறைவுத் தொகை ரூ. 1000/-க்கு மிகுமானால் அதற்கான கேட்பு காசோலை
E. ஆவணதாரர்களை நன்கு அறிந்த இரண்டு சாட்சிகள் (சாட்சிகளை அழைக்காது சென்றுவிட்டு யாரிடமாவது ரூ. 50, ரூ 100 கொடுத்து சாட்சி கையெழுத்து போட வைக்க வேண்டாம். ஏனெனில் பின்னர் சொத்துப் பிரச்சனை வந்தால் சாட்சி சொல்ல ஆளைத் தேடிப் போனால் கிடைக்கமாட்டார்கள். கிடைத்தாலும் சாட்சி சொல்ல ரூ. 1 லட்சம் கொடு ரூ. 2 லட்சம் கொடு என்று கேட்ட முன் உதாரணங்கள் உண்டு)
F. தாய்ப்பத்திரங்கள் அல்லது தாய்ப்பத்திரங்கள் வங்கியில் இருப்பின் அதற்கான வங்கிச்சான்று மற்றும் தொலைந்து போயிருந்தால் அதற்கான காவல்துறை சான்று
G. விவசாய நிலம் என்றால் அரசு வழங்கிய பட்டா முதலிய வருவாய்த்துறை சான்றுகள்
H. வீடு என்றால் விற்பவர், எழுதிக்கொடுப்பவர் பெயரில் உள்ள சொத்துவரி முதலிய விவரங்கள். 
I. வாரிசு முறைப்படி சொத்து வந்திருந்தால் சொத்து உரிமையாளரின் வாரிசு இவர்தான் என்பதை நிலைநாட்ட வாரிசுச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ்
J. சொத்து பற்றிய நடப்பு வில்லங்கச் சான்று விற்பவர், எழுதிக்கொடுப்பவர் பெயரில் இருக்க வேண்டும் (கடந்த 10 நாட்களுக்குள் வாங்கி இருக்க வேண்டும்)
K. ஆலய, வக்பு நிலம் என்றால் தடையின்மைச் சான்று (NOC)
L. விவசாய நிலம் மனைப் பிரிவு ஆக்கப்படுமானால் மாவட்ட ஆட்சியரின் தடையின்மை சான்று 
M. மனைப்பிரிவுக்கான DTCP/CMDA ஏற்பளிப்பு.
N. ஆவணதாரர்களில் வயோதிகம் காரணமாக வர இயலாதவர்கள் மருத்துவமனைகளில் உள்ளவர்கள் பொருட்டு பதிவாளர் அங்கே வர வேண்டுமென்றால் முன்பே மருத்துவர்களிடம் சான்று பெற்று உரிய கட்டணம் செலுத்தி பதிவாளரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று இருக்க வேண்டும்.
O. குறைவு முத்திரைத் தீர்வை செலுத்த வேண்டுமென்றால் அதற்கு தனியான விண்ணப்பம்
P. இரண்டாம், மூன்றாம் படி ஆவணங்கள் (Duplicate,Triplicate) பதிவு செய்ய தனியே விண்ணப்பம்.
Q. ஆவணதாரர்களில் எவரேனும் பதிவு அன்று வர இயலாவிட்டால் அவர்களுக்காக ஆவணத்தை (வந்தவர்கள் பொறுத்து பதிவை முடித்து) நிலுவையில் வைக்க தனியே விண்ணப்பம்.
R. பொது அதிகார ஆவணத்தின் மூலம் பதிவு செய்ய வரும்பொழுது பொது அதிகாரம் வழங்கிய முதல்வர் (பிரின்சிபால்) உயிரோடிருக்கிறார் என்பதற்கான சான்று.
24. எனக்கு கிரயம் எழுதிக்கொடுத்தவர் எழுதிக்கொடுத்த பின் பின் வாங்குகிறார். என்ன செய்வது?
பதில்: எழுதிக்கொடுத்தவர் திடீரென பின்வாங்கினால் பதற வேண்டாம். ஆவணத்தை எழுதி வாங்கியவர் அதைத் தாக்கல் செய்து வராமலிருப்பவருக்கு அழைப்பானை அனுப்பும் "கட்டாயப் பதிவு" என்று அழைக்கப்படும் நடைமுறையைப் பின்பற்றலாம். இதில் எழுதிக்கொடுத்தவர் சார் பதிவாளர் முன்பு வந்து எழுதிக்கொடுத்தது உண்மைதான் ஆனால் இப்பொழுது எனக்கு விற்க சம்மதமில்லை அல்லது கூடுதல் தொகை வேண்டும் என்று கேட்பாரானால் அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் ஒப்புதல் கையெழுத்து போடாமலேயே ஆவணத்தைப் பதிவு செய்து வில்லங்கச் சான்றில் இடம்பெறச் செய்ய சட்டத்தில் வழி உள்ளது.    
25. உயிலை எழுதி வைத்தவர் அதனை பதிவு செய்யாமலேயே இறந்துவிட்டார். அதனை தற்போது பதிவு செய்ய இயலுமா?
பதில்: உயில் மட்டுமல்ல கிரயம் போன்ற ஆவணங்களைக் கூட எழுதிக்கொடுத்தவர்கள் இறந்துவிட்டால் அவர்களது சட்டபூர்வமான வாரிசுகள், சாட்சிகள், ஆவண எழுத்தர் முதலியவர்களை அழைத்து விசாரித்து ஆவணம் இறந்து போனவரால்தான் எழுதிக்கொடுக்கப்பட்டது என்பது குறித்து பதிவாளர் மனநிறைவடைந்தால் அந்த உயிலையோ அல்லது கிரய ஆவணத்தையோ பதிவு செய்து வில்லங்கச் சான்றில் ஏற்ற முடியும்.
26. வில்லங்கம், வில்லங்கச் சான்று என்று சொல்கிறார்களே அப்படியென்றால் என்ன?
பதில்: உங்கள் அசையாச் சொத்தின் மீது எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் வில்லங்கக் குறிப்பு என்றே அழைக்கப்படும். அது வில்லங்கச் சான்றில் குறிக்கப்படும். உதாரணமாக உங்கள் தந்தை பூர்விகமாக அனுபவித்து வந்த ஒருவரிடமிருந்து அறுபது ஆண்டுகளுக்கு முன் சொத்து ஒன்றை வாங்கியிருந்தால் அந்தக் குறிப்பும் அதன் பின் உங்கள் தந்தையார் வாங்கிய கடன் மீதான அடைமானம், அது செல்லடித்ததற்கான ரசீது அனைத்தும் பதிவு செய்யப்பட்டால் வில்லங்கச் சான்றில் இடம்பெறும். இதே சொத்தை அவர் உங்களுக்கு தான பத்திரம் எழுதி கைமாற்றிக்கொடுத்திருந்தால் அதுவும் வில்லங்கச் சான்றில் இடம்பெறும். எனவே சொத்தின் உரிமையாளருக்கு தெரியாமல், அவர் சம்மதம் இல்லாமல் சொத்தின் மீது எதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அதுதான் உண்மையான வில்லங்கம் ஆகும். மற்றவையெல்லாம் சாதாரண பதிவு குறிப்புகளே. எனவே வில்லங்கச் சான்றை பதிவு குறிப்பு சான்று என்று அழைப்பதே சரி.      
****************************************நன்றி : நாணயம்விகடன் - 05.11.2015