disalbe Right click

Showing posts with label சுய முன்னேற்றம். Show all posts
Showing posts with label சுய முன்னேற்றம். Show all posts

Wednesday, August 9, 2017

அமெரிக்க ஜனாதிபதியின் வெற்றி ரகசியம்

அமெரிக்க ஜனாதிபதியின் வெற்றி ரகசியம்
"இது ஹாலுசினேஷன் அல்ல, இன்ஸ்பிரேஷன்!" ட்ரம்ப்பின் பிக்பாஸ் சீக்ரெட்
நடக்காத ஒரு விஷயத்தை நடந்ததாக கூறிக்கொண்டிருப்பதுதான் ஹாலுசினேஷன்...
ஆனால் நடந்த சில விஷயங்களில் இருந்து வெறும் பாசிட்டிவ் விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டால் அது இன்ஸ்பிரேஷன். 
ஒரு நாளில் ஒரு மனிதர் வெறும் பாசிட்டிவ் விஷயங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு வாழ்ந்தால் அந்த மனிதர் எப்படிப்பட்ட ஒரு நிலையில் இருப்பார் என்று நினைத்துப்பார்க்க தோன்றுகிறதா? அவர் அமெரிக்க அதிபராக இருக்கிறார். ஆம். பல கிண்டலுக்கு ஆளாகும் டொனால்ட் ட்ரம்ப்பின் தினசரி நடவடிக்கைகள் கட்டாயம் ஏதோ ஒரு நேரத்தில் நம் வாழ்க்கைக்குத் தேவைப்படும்.
அதிபர் ட்ரம்புக்கு அவரது வார் ரூம் அமைப்பு மூலம் தினசரி காலை 9:30 மணிக்கும், மாலை 4:30 மணிக்கும் 20 முதல் 25 பக்கங்களை கொண்ட ஒரு ஃபைல் கொடுக்கப்படும் அதில் ட்ரம்ப்பை பற்றிய பாசிட்டிவ் விஷயங்கள் மட்டுமே இருக்கும்.
முன்னதாக தினசரி ஆறு மணிக்குத் வார் ரூம் தனது வேலையை துவங்கும். ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பதிவுகளை ஒருங்கிணைக்கும். இதில், வெள்ளை மாளிகை இமெயில்கள், ட்விட்டுகள், செய்திகள் மற்றும் இன்டர்வியூ ட்ரான்ஸ்கிரிப்டுகள் அடங்கும்.
இதனைக் கொண்டு ஃபைல்களைத் தயாரித்து காலை 9:30 மணிக்கும், மாலை 4:30 மணிக்கும் ஓர் அறிக்கையை வழங்கும். இந்த இரண்டு அறிக்கைகளும் அதிபரின் பார்வைக்குச் செல்லும். முன்னாள் தலைமை அதிகாரி ரெயின்ஸ் மற்றும் செய்தித் தொடர்பாளர் ஸ்பைசர் இருவரும் இந்தத் தகவல்களைக் கொண்டு 20 - 25 பக்க அறிக்கையைத் தயார் செய்வார்கள். அதனை, காலை 9:30 மணிக்கு ட்ரம்பிடம் அளிப்பார்கள். இதில், வெறும் பாசிட்டிவ் செய்திகளும், ட்ரம்பின் புகழ்பாடும் செய்திகளும் மட்டுமே இடம்பெறும். நெகட்டிவ் விஷயங்கள் தவிர்க்கப்படுமாம். ட்ரம்பைக் கெத்தாகக் காட்டும் புகைப்படங்கள், டி.வி ஷோக்கள் மட்டுமே இதில் இடம்பெறும்.
ட்ரம்ப்
தன்னைப்பற்றிய நெகட்டிவ் செய்திகளை தவிர்த்துவிட்டு எப்படி முன்னேற முடியும் என்றாலும். ஒருவர் தனது இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் போதும் சரி, தோல்வியின் பிடியில் சிக்கித் தவிக்கும் போதும் சரி. நெகட்டிவ் விஷயங்கள் நம்மை மேலும் கீழே அழுத்தும். அந்த நேரத்தில் பாசிட்டிவ் விஷயங்களை தவிர வேறு எதையுமே நாம் கவனிக்கவில்லை எனில் நாம் தோல்வியிலிருந்து எளிதில் மீள முடியும்.
காலையில் ஒரு வேலையை நெகட்டிவ் மனநிலையோடு துவங்கிப் பாருங்கள் அன்றைய நாளில் அந்த வேலை கண்டிப்பாக முடியாது. அப்படியே முடிந்திருந்தாலும் அது சிறப்பானதாக இருந்திருக்காது. ஆனால் நம் மீது நெகட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் பாசிட்டிவாக ஒருநாளை துவங்கி பாருங்கள் அன்றைய நாளின் வேலை சுலபமாக முடியும்.
ட்ரம்ப் மீதான விமர்சனம், மீம்ஸ்கள் இவற்றை ட்ரம்ப் கவனிப்பதில்லை. இதையெல்லாம் கவனித்தால் அவரால் அன்றைய நாளை அதிபராக சிறப்பாக துவங்க முடியாது என அவர் நம்புகிறார். இது அவருக்கு நல்லதோ, கெட்டதோ... தோல்வியின் பிடியில் சிக்கி இருக்கும், அல்லது வெற்றிக்காக போராடும் ஒருவர் ட்ரம்பிடம் இருந்து இந்த ஒரு விஷயத்தை பின்பற்ற வேண்டும். உங்களது பாசிட்டிவை மட்டும் 100 சதவிகிதம் பின் தொடருங்கள். நெகட்டிவ் எண்ணங்களை தவிருங்கள். அப்படி பாசிடிவ் எண்ணங்களோடு இருந்தாலே போதும், அமெரிக்க ஜனாதிபதி ஆகிறோமோ இல்லையோ ஆஃபீஸில் அதிபதி ஆகலாம்!
ஸ்ரீராம் சத்தியமூர்த்தி 
நன்றி : விகடன் செய்திகள் - 10.08.2017

Wednesday, October 26, 2016

உங்களுக்கான வாய்ப்புகள்


உங்களுக்கான வாய்ப்புகள் - என்ன செய்ய வேண்டும்?

"ஒரு நாள், ஒரே ஒரு நாள் நீ முதல்வரா இருந்துப்பாருன்னு" முதல்வன் படத்துல ரகுவரன் அர்ஜுன்கிட்ட சவால் விடுவாரே அப்படி ஒரு சந்தர்ப்பம் உங்களுக்கு அமைஞ்சா என்ன செய்விங்க? 

அட முதல்வரா கூட வேணாங்க. அலுவலகத்திலோ கல்லூரியிலோ எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒரு நண்பர்கள் தின விழாவை நடத்த வேண்டும் என்பது போன்ற ஒரு பொறுப்பு உங்களுக்கு கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். என்ன செய்வோம்?  

நம்மில் நிறைய பேர் நமக்கெதுக்குங்க வம்பு என அந்த பொறுப்பிலிருந்து தப்பவே பார்ப்போம். 

அதற்கு நாம் சொல்லும் காரணங்கள்

"நம்ம வேலை கெட்டுடும்"

"இவங்க கொடுக்குற சம்பளத்தக்கு இத வேற செய்யணுமா?"

" நாம மட்டும் தனியா தெரிவோம்" என்பதாகத்தான் இருக்கும்.

இதில் "நம்ம வேலை கெட்டுடும்" என்ற டயலாக்கை தினமும் நினைத்துப்பார்த்து வேலை செய்தால் போதும்.

 உங்கள் அலுவலகத்தில் உங்களை யாருமே அடிச்சுக்க முடியாது தானே!? 

வாய்ப்புகள் எல்லா நேரமும் வந்து நம் வீட்டு கதவை தட்டிக் கொண்டு இருக்காது. நமக்கான வாய்ப்புகளை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

தற்போதிருக்கும் இடத்திலிருந்து அடுத்தக் கட்டத்தை நோக்கிய முயற்சியை மேற்கொண்டு கொண்டே இருக்க வேண்டும்.

யாரோ ஒருவரால் உங்களுக்கான வாய்ப்புகளும் உங்கள் வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களும் உருவாக்கப்படுவதை விடவும் உங்களுக்கான வாய்ப்பை நீங்களே உருவாக்கி கொள்வது தான் சிறந்த பலனைத் தரும்.

ஒவ்வொரு நாளும் இன்று வேறு ஒரு உச்சத்தைத் தொட வேண்டும் என்றோ, புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள கொள்ள வேண்டும் என்ற மனநிலையுடன் உற்சாகமாக தொடங்குங்கள். 

மேலோட்டமாகவும், அது வரையில் அனுபவத்திடாத ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும் பொழுது எப்போதுமே மனதில் ஒரு சின்ன தயக்கம் இருக்கத்தான் செய்யும். 

அந்த தயக்கத்துக்கு அடி பணிந்தால் வாய்ப்புகள் கை நழுவிப் போகத்தான் செய்யும்.  தைரியமாக கெத்தாக ஒவ்வொரு வாய்ப்பையும் பற்றிக்கொண்டு செயல்பட ஆரம்பியுங்கள்.

ரகுவரன் விட்ட சவாலை ஏற்காமல் பின் வாங்குவது போன்ற ஒரு காட்சி படத்தில் வந்திருந்தால். முதல்வனை அவ்வளவு ரசித்திருக்க மாட்டோம் அல்லவா? 

ஆம், ஒவ்வொரு வாய்ப்பையும் பற்றிக் கொண்டு போராடுபவனைத்தான் உலகம் விரும்பும்.

நன்றி : விகடன் செய்திகள் - 27.10.2016


Thursday, June 2, 2016

எப்போதும் தோல்வி, நஷ்டம்!


எப்போதும் தோல்வி, நஷ்டம்! என்ன செய்ய வேண்டும்?

"மாத ஊதியப் பணியில் என்னால் தொடர்ந்து பொருந்தியிருக்க முடியவில்லை. சரி, சுயதொழில் செய்யலாம் என்று காய்கறிக் கடை வைத்தேன். பிறகு சிறிய அளவில் உணவு விடுதி நடத்திப் பார்த்தேன். அதே தொழில்களில் எத்தனையோ பேர் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் எனக்கு எங்கே போனாலும் தோல்வி, எல்லாம் நஷ்டம். எனக்கு மட்டும் ஏன் அதிர்ஷ்டம் இல்லை? முன்பே தீர்மானிக்கப்பட்ட பாதையில் இயற்கை என்னை இழுத்துச் செல்கிறதா?"
சத்குரு:
"தூண்டிலோடு கரையில் நிற்பவன் கண்களில் 100 மீன்கள் தென்படும். எல்லாவற்றுக்கும் ஆசைப்பட்டு தூண்டிலை இப்படியும் அப்படியும் நகர்த்திக்கொண்டே இருந்தால், ஒன்றுகூடச் சிக்காது. எதிலும் நிலைத்திருக்காமல் இதுவா, அதுவா என்று இடம் மாறிமாறித் தேடினால், எதிலும் திருப்தி கிடைக்காது.
ஒருவருக்கு, கிரிக்கெட் வெறும் விளையாட்டு. இன்னும் சிலருக்கு, அது வெறும் கேளிக்கை. விளையாடுபவருக்கோ, அதுதான் வாழ்க்கை. எதையும் அணுகும் கோணத்தில் ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுவதில்தான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே இருக்கிறது. உங்களுக்கான தொழிலோ, பணியோ எது என்பதில் தெளிவு வேண்டும்.
சங்கரன் பிள்ளை ஒரு தெர்மாஸ் ஃபிளாஸ்க் வாங்க கடைக்குப் போயிருந்தார்.
'இது சூடான பொருட்களை ஆறு மணி நேரங்களுக்குச் சூடு குறையாமலேயே வைத்திருக்கும்' என்றார் விற்பனையாளர்.
'குளிரான பொருட்களை?'
'குறைந்தது ஆறு மணி நேரங்களுக்கு அதே குளிர்ச்சியுடன் வைத்திருக்கும்'.
சங்கரன்பிள்ளை ஃபிளாஸ்க்கை வாங்கிக்கொண்டு வீட்டிற்குப் போனார்.
'உங்களைக் கடைக்காரன் ஏமாற்றி இருப்பான்' என்றாள் அவருடைய மனைவி.
'அதைக் கண்டுபிடிக்கத்தான், வரும் வழியிலேயே, சுடச்சுட காபியும், ஜில் என்று குல்ஃபியும் வாங்கி வந்து இருக்கிறேன்' என்றார், சங்கரன்பிள்ளை.
இப்படி ஒரே சமயத்தில் இதுவாகவும் இருக்க வேண்டும், அதுவாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தால் என்னாகும் யோசியுங்கள்.
மாடு மாதிரி உழைத்தேன், பலன் இல்லை என்று புலம்புவதிலும் அர்த்தம் இல்லை. எவ்வளவு நேரம் உழைக்கிறீர்கள் என்பதைவிட ஒவ்வொரு கட்டத்திலும், உங்கள் திறமையை முழுமையாகப் பயன்படுத்துகிறீர்களா என்பதுதான் உங்கள் வெற்றிகளை நிர்ணயிக்கிறது.
மூன்று மாதங்களுக்கு முன்பு வகுப்புக்கு வந்திருக்க ஓர் அம்மா, 'வாழ்க்கையை வெறுத்து ஐந்துமுறை தற்கொலைக்கு முயற்சி செய்தவள் நான்' என்று ஆரம்பித்தார். நான் உடனே, 'நிறுத்துங்கள் அம்மா, போதும்!' என்றேன். வாழ்வதுதான் கஷ்டமான வேலை. சாவது கூடவா? தற்கொலை செய்துகொள்ளவே ஐந்துமுறை முயற்சித்துத் தோற்றார் என்றால், வாழ்க்கையைக் கையாள்வதில் அவருடைய திறன் எப்பேர்ப்பட்டதாக இருக்க வேண்டும்?
நீங்கள் திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை, எல்லாமே இயற்கையின் விருப்பப்படிதான் நடக்கிறது என்கிறீர்கள். அப்படி இருந்தும், இன்னும் இந்த உலகில் வாழ்கிறீர்கள் என்றால், உங்களைச் சுற்றி உள்ளவர்கள் உங்களிடம் மிக நல்லவர்களாக நடந்துகொண்டு இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
உங்களை நீங்களே அதிர்ஷ்டம் கெட்டவராக நினைத்துக் கொள்வது,
எனக்கு ஒரு கதையை நினைவுபடுத்துகிறது.
அரசன் ஒருமுறை வேட்டைக்குப் புறப்பட்டபோது, முதலில் நாவிதன் ஒருவன் எதிர்ப்பட்டான். எவ்வளவு அலைந்து திரிந்தும் வேட்டையில் அரசனுக்கு எந்த மிருகமும் சிக்கவில்லை. அந்த நாவிதனை இழுத்து வந்து தூக்கில் போடுங்கள். அவன் முகத்தில் விழித்ததுதான் எனக்குத் துரதிர்ஷ்டமாகிவிட்டது என்று அரசன் ஆணையிட்டான். நாவிதன் கதறக் கதற அரண்மனைக்கு இழுத்துவரப்பட்டான். தெனாலிராமன் இதைக் கேள்விப்பட்டான். அரசவைக்கு வந்தான். மன்னா, எனக்குத் தெரிந்த இன்னொருவரின் முகம் இதைவிட துரதிர்ஷ்டமானது. அவருக்கும் இதே தண்டனை விதிக்கப்படுமா?
'நிச்சயமாக யார் அந்த இன்னொருவர்?'
'நீங்கள்தான் மன்னா!'
'என்ன திமிர் உனக்கு?' என்று அரசன் சீறினான்.
'பொய் இல்லை மன்னா, நாவிதன் முகத்தைப் பார்த்தீர்கள். வேட்டையில்தான் வெற்றி இல்லை. ஆனால், காலையில் உங்கள் முகத்தைப் பார்த்த நாவிதனுக்கு உயிரே போகப்போகிறது. எந்த முகம் அதிகத் துரதிர்ஷ்டவசமானது,
நீங்களே சொல்லுங்கள்!'
இப்போது சொல்லுங்கள். நீங்கள் அதிர்ஷ்டம் அற்றவரா?
மேலே இருந்து உங்களைவிடச் சக்தி வாய்ந்த வேறு எவரோ உங்களை இயக்கிக்கொண்டு இருப்பதாக நினைப்பது எல்லாம் படுமுட்டாள்தனம்.
உங்களுக்கு நேர்வது ஒவ்வொன்றும் உங்களால் வரவழைக்கப்பட்டது. பிரச்சினை என்னவென்றால், பலசமயம் அதை நீங்கள் உணர்வதுகூட இல்லை.
உண்மையில், எல்லாவற்றையும்விட மிகச் சக்தி வாய்ந்தது எதுவோ, படைத்தலுக்கே மூல சக்தி எதுவோ, அதுவே உங்களிடம்தான் இருக்கிறது. விழிப்புணர்வைவிட மிக்க சக்தி வாய்ந்த எதுவும் இங்கே இல்லை. உங்கள் திறமை எது என்று புரிந்துகொள்ளாமல், அதை முழுமையாகப் பயன்படுத்தாமல் இருப்பது உங்கள் வாழ்க்கையில் நேரும் மிகப்பெரும் துக்கமாகும்.
இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று மனதில் எதையும் நிர்ணயித்துக்கொள்ளாதீர்கள். எந்தத் தொழில் செய்ய விருப்பம் வந்தாலும், அதன் அடிப்படை நுணுக்கங்களை முழுமையாக முதலில் அறிந்துகொள்ளுங்கள். முழுத் திறமையைப் பயன்படுத்தாமல் செலவு செய்கிற ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையில் வீணடிக்கப்பட்ட நிமிடம். இதைக் கவனத்தில் கொள்ளுங்கள். 100 சதவிகிதத் திறமையைப் பயன்படுத்துங்கள். சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு, கவனமாகச் செயலாற்றுங்கள்.
இயற்கை உங்களுக்குச் சாதகமாக வேலை செய்யத் துவங்கிவிடும்".

நன்றி : தினமலர் நாளிதழ் - 02.06.2016

Saturday, May 21, 2016

முயல் வளர்ப்பு


முயல் வளர்ப்பு - என்ன செய்ய வேண்டும்?

இறைச்சிக்கான கால்நடை வளர்ப்புத் தொழிலில் இறங்கி, கையைச் சுட்டுக் கொண்டவர்கள் பலர் உண்டு. குறிப்பாக, முயல் வளர்ப்பில் இறங்கிய பல விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்ததால், முயல் வளர்ப்பு என்றாலே பலரும், 'வேண்டாம்’ என்றுதான் துள்ளி ஓடுவார்கள் முயலைவிட வேகமாக! ஆனால், இவர்களுக்கு மத்தியில் மிகுந்த முனைப்புடன் முயல் வளர்த்து, அதில் நல்ல லாபமும் ஈட்டி வருகிறார், விழுப்புரம் மாவட்டம், வித்யா நகரைச் சேர்ந்த முரளிதரன்.
பசுமை நிறைந்த மரங்கள் சூழ்ந்திருந்த முயல் பண்ணையில், கூண்டுகளுக்குள் முயல்கள் ஓடித்திரிந்து கொண்டிருந்தன. அந்த ரம்மியமான சூழலில் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த முரளிதரனைச் சந்தித்தோம்.
''எங்கப்பா 'லேப் டெக்னீசியன்’ வேலை பார்த்தாலும்... விவசாயத்தை விடாம செய்துகிட்டிருந்தார். விவசாயத்துல சம்பாதிச்ச பணத்துலதான், 'இன்ஜினீயரிங்’ படிக்க வெச்சார். படிப்பை முடிச்சுட்டு, ஸ்ரீ ஹரிகோட்டாவுல இருக்குற 'இஸ்ரோ’ நிறுவனத்துல... விஞ்ஞானியா 16 வருஷம் வேலை பார்த்தேன். பிறகு, சவுதி அரேபியாவுல ஏழு வருஷம் வேலை பார்த்தேன். அதன் பிறகு, இந்தியாவுக்கே திரும்பிட்டேன். மூணு வருஷமா ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்திட்டு வர்றேன். அது மூலமா, கல்வராயன் மலையில இருக்குற மலைவாழ் மக்களுக்கு, சில உதவிகளைச் செஞ்சுக்கிட்டிருக்கோம்.
இதுக்கு நடுவுல இணையதளம் மூலமா முயல் வளர்ப்பைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்காக, கொடைக்கானல்ல இருக்குற மத்திய செம்மறி ஆடுகள் மற்றும் ரோம ஆராய்ச்சி மையத்துல பயிற்சி எடுத்துக்கிட்டேன். ஆரம்பத்துல, 10 முயல்களை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன். மூணு வருஷத்துல 1,500 முயல்கள் கிடைச்சுது. அதுல ஆயிரம் முயலை வித்துட்டேன். இப்போ 500 முயல்களை வெச்சுருக்கேன்'' என்று முன்னுரை கொடுத்த முரளிதரன், தொடர்ந்தார்.
Image result for முயல் வளர்ப்பு
''சாப்பிடுற உணவை, கறியா மாத்துற திறனும், இன விருத்தியும்... மத்த விலங்குகளைவிட முயலுக்கு அதிகம். முயலை நம்ம வசதியைப் பொருத்து, எந்த இடத்துல வேணும்னாலும் வளக்கலாம். நான் என்னோட வீட்டைச் சுத்திக் கூண்டு வெச்சு வளக்குறேன். முயல் கறி, சாப்பிட்ட உடனே ஜீரணமாயிடும். இந்தக் கறியில கம்மியான கொழுப்பு, அதிக புரதம், குறைஞ்ச கலோரிதான் இருக்கு. முயல் கறி மிருதுவா, சுவையா இருக்கறதால குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் எல்லோருமே சாப்பிடலாம். இவ்ளோ இருந்தும், யாரும் இந்தத் தொழிலுக்கு வர்றதில்லைன்றதுதான் ஆச்சரியம்.
'இதை விக்க முடியாது’னுதான் நிறைய பேர் காரணம் சொல்றாங்க. என்னோட அனுபவத்துல விற்பனை ஒரு பிரச்னையே இல்லை. தமிழ்நாட்டுல போதுமான அளவுக்கு முயல் இல்லை. எந்தப் புதுப்பொருளா இருந்தாலும் அதைச் சாப்பிட்டு ருசி கண்டாத்தான்... அடுத்தடுத்து சாப்பிடத்தோணும். நம்ம ஊர்ல ஆட்டுக்கறி, கோழிக்கறி கிடைக்கிற அளவுக்கு முயல் கறி கிடைக்கறதில்லை. அதனால மக்கள் வாங்கி சாப்பிடுறதில்லை. அதில்லாம, முயல் மென்மையான, சாதுவான பிராணி. அதனால, அதைக் கொன்னு சாப்பிடுறது பாவம்ங்கிற எண்ணமும் இருக்கு. அதனாலதான் பயன்பாடு கம்மியா இருக்கு.
விழுப்புரத்துல ஒரு ஹோட்டல்ல நான் ஆர்டர் கேட்டப்ப, 'தினம் 5 முயல் உங்களால கொடுக்க முடிஞ்சா நாங்க முயல்கறி பிரியாணி போடத் தயார்’னு சொன்னாங்க. ஆனா, அந்தளவுக்கு என்னால கொடுக்க முடியாதுங்றதுதான் உண்மை.
விற்பனைக்கு உதவி செய்வேன்!
வளர்ப்புக்கு, இனப்பெருக்கத்துக்கு, சோதனைக் கூடங்களுக்கு, கறிக்குனு பலவகையிலும் முயல்களுக்குத் தேவை இருந்துக்கிட்டுத்தான் இருக்கு. என்கிட்ட இருக்குற ஆர்டருக்கே என்னால் சப்ளை செய்ய முடியல. முயல் வளத்துக்கிட்டு இருக்கறவங்களுக்குத் தேவையான ஆலோசனை கொடுக்கவும், விற்பனை செய்து கொடுக்கவும் நான் தயாராக இருக்கேன்'' என்று அனுபவப் பாடத்தை முடித்த முரளிதரன், வளர்ப்புப் பாடத்தை ஆரம்பித்தார்.
மூன்று மாதங்களில் 3 கிலோ!

முயலின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இன விருத்திக்காக வளர்க்கும்போது, 5 ஆண்டுகள் வரை வளர்ப்பதுதான் சிறந்தது. வெள்ளை ஜெயன்ட், சாம்பல் ஜெயன்ட், சோவியத் சின்சிலா, நியூசிலாந்து வெள்ளை ஆகிய ரகங்கள் வளர்ப்புக்கு ஏற்றவை. இவை மூன்று மாதங்களில் 2 கிலோ முதல், 3 கிலோ அளவுக்கு வளரக் கூடியவை.

வலை கவனம்!
கொட்டகைக்கு அதிகச் செலவு செய்யாமல், வீட்டைச் சுற்றி நிழலுள்ள இடங்களில் கூண்டுகளை அமைத்து முயல் வளர்க்கலாம். ஒரு முயலுக்கு நான்கு சதுரடி இடம் தேவை.
Image result for முயல் வளர்ப்பு
அதாவது, இரண்டடிக்கு இரண்டடி என்ற அளவில் கூண்டு இருக்க வேண்டும். தனித்தனியாக கூண்டு செய்யாமல், பத்தடி நீளம், நான்கடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் ஒரே கூண்டை செய்து, அதை இரண்டு இரண்டு அடியாகப் பிரித்துக் கொண்டால்... செலவு குறையும். இது வளரும் முயல்களுக்கான கூண்டு.
குட்டி ஈனும் முயலுக்கு... இரண்டரை அடி சதுரம், ஒன்றரை அடி உயரத்தில் இதேபோல கூண்டுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். கூண்டுக்கு 14 'கேஜ்’ கம்பிகளைப் பயன்படுத்தினால், முயலுக்குக் காலில் புண்கள் உண்டாகாது. அதேபோல தண்ணீருக்கு 'நிப்பில்’ அமைப்பை அமைத்து விட்டால்... தண்ணீர் வீணாகாது.
ஒரு யூனிட்டுக்கு 10 முயல்!


சினை முயல் ஒன்று, பருவத்துக்கு வந்த இரண்டு பெட்டை முயல்கள் (4 மாதம் வயதுடையவை ), 6 மாத வயதுடைய ஒரு ஆண், ஒரு கிலோ அளவுடைய இரண்டு ஆண் முயல்கள், நான்கு பெட்டைக் குட்டிகள் என ஏழு பெண் முயல்கள், மூன்று ஆண் முயல்கள் என பத்து முயல்களைக் கொண்டது ஒரு யூனிட். முயல் வளர்ப்பில் இறங்குபவர்கள், ஒரே வயதுடைய முயல்களை வாங்கி வளர்க்கும்போது, வளர்ப்பு நிலை தெரியாமல் கஷ்டப்படுகிறார்கள். இந்த முறையில் வளர்க்கும்போது, 3 மாதங்களில் அனைத்து நிலைகளையும் கடந்து விடலாம். ஒரு யூனிட் முயல்களை, ஒரு கூண்டுக்கு ஒரு முயல் எனத் தனித்தனியாக விட்டுவிட வேண்டும்.

15 நாட்களுக்கு ஒரு முறை பருவம்!
முயல், ஐந்து மாத வயதில் பருவத்துக்கு வரும். பெண் முயலின் பிறப்புறுப்பு சிவந்து தடித்திருப்பதைப் பார்த்து பருவமடைந்ததைக் கண்டுபிடித்து விடலாம். அதன் பிறகு, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து பருவத்துக்கு வரும். பருவம் வந்த பெண் முயலை, ஆண் முயல் இருக்கும் கூண்டுக்குள் விட வேண்டும். விட்ட ஓரிரு நிமிடங்களில் இனச்சேர்க்கை நடந்து விடும். பிறகு, பெண் முயலை அதனுடைய கூண்டில் விட்டுவிட வேண்டும். இன விருத்திக்காக ஆணுடன், பெட்டையைச் சேர்க்கும்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முயல்களாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், மரபு ரீதியான குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
ஆணுடன் சேர்த்த 15 நாட்கள் கழித்து, பெண் முயலின் அடி வயிற்றைத் தடவிப் பார்த்தால் குட்டி தென்படும். உடனே, சினை முயலுக்கான கூண்டுக்கு மாற்றிவிட வேண்டும். குட்டி உருவாகவில்லையெனில், மீண்டும் அடுத்த பருவத்தில் இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.
ஆண்டுக்கு 8 முறை குட்டி!
குட்டி ஈனும் கூண்டில் தனிப்பெட்டி வைத்து, அவற்றில் தேங்காய் நார் கழிவுகளை வைக்க வேண்டும். முயலின் சினைக்காலம் முப்பது நாட்கள். ஆண்டுக்கு 6 முதல் 8 முறை குட்டி ஈனும். குட்டி ஈன்ற உடனே அடுத்த சினைக்குத் தயாராகிவிடும். அடுத்தப் பருவத்திலேயே மீண்டும் இனச்சேர்க்கை செய்யலாம். முதல் ஈற்றில் மூன்று குட்டிகள் வரைதான் கிடைக்கும்.
அடுத்தடுத்து குட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து, ஒரு ஈற்றில் 5 முதல் 9 குட்டிகள் வரை கிடைக்கும். பிறந்த குட்டியின் எடை 60 கிராம் இருக்கும்.
குட்டிகள் ஒரு மாதம் வரை தாயிடம் பால் குடிக்கும். அதன் பிறகு குட்டிகளைப் பிரித்துவிட வேண்டும். முதலில் தாய் முயலைப் பிரித்து விட்டு, ஐந்து நாட்கள் கழித்து குட்டிகளை இடம் மாற்ற வேண்டும். பால் குடிக்கும் பருவத்தில் ஒரு குட்டி 750 கிராம் அளவுக்கு வந்துவிடும். தொடர்ந்து தீவனம் கொடுத்து வரும்போது, நான்கு மாதங்களில் இரண்டு கிலோ அளவுக்கு எடை வந்துவிடும்.
பசுந்தீவனமாக தட்டைச்சோளம்!
முயலுக்கு அருகம்புல், வேலிமசால், அகத்தி, மல்பெரி இலைகள், தட்டைச்சோளம் ஆகியவற்றைப் பசுந்தீவனமாகக் கொடுத்து வளர்க்கலாம். அடர் தீவனமாக கடையில் கிடைக்கும் தீவனங்கள் விலை அதிகமாகவும், தரமில்லாமலும் இருக்கின்றன. அதனால், நாமே அடர் தீவனத்தைத் தயாரித்துக் கொள்ளலாம்.

பருவமடைந்த முயல் ஒன்றுக்கு தினமும் 250 கிராம் பசுந்தீவனமும், 100 கிராம் அடர் தீவனமும் கொடுக்க வேண்டும். குட்டி ஈன்ற முயலுக்குத் தினமும் 150 கிராம் அடர் தீவனமும், 250 கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும். குட்டிகளுக்கு 50 கிராம் அடர் தீவனமும், 100 கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும். முயல்கள் பகல்வேளையில் தூங்கும் பழக்கம் கொண்டவை. அதனால், காலை ஏழு மணிக்கு மொத்தத் தீவனத்தில் கால் பங்கு; இரவு ஏழு மணிக்கு முக்கால் பங்கு என பிரித்துக் கொடுக்க வேண்டும்'' வளர்ப்புப் பாடத்தை முடித்த முரளிதரன், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.
ஆண்டுக்கு 210 முயல்கள்!
''ஒவ்வொரு முயலும் சராசரியாக வருஷத்துக்கு ஆறு முறை குட்டி போடும். ஒவ்வொரு முறையும் சராசரியா 5 குட்டினு வெச்சுக்கிட்டா, ஒரு யூனிட்ல இருக்கற ஏழு பெண் முயல்கள் மூலமா...வருஷத்துக்கு 210 குட்டிகள் கிடைக்கும். நாலு மாசம் கழிச்சு விக்கும்போது, ஒரு முயல் சராசரியா ரெண்டு கிலோ இருக்கும். சராசரியா ஒரு கிலோவுக்கு 175 ரூபாய் விலை கிடைக்குது. ஒரு முயல் 350 ரூபாய்னு 210 முயல்களையும் விக்கிறப்போ...
73 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல, தீவனம், மருத்துவச் செலவு, பராமரிப்புக்கு 52 ஆயிரத்து 800 ரூபாய் போக 20 ஆயிரத்து 700 ரூபாய் லாபம்.
இது, பத்து முயல்கள் அடங்கிய ஒரு யூனிட்டுக்கான கணக்கு. ஆடு கோழி வளர்ப்பைவிட இதுல லாபம் குறைவா இருக்குறது போல தோணலாம். ஆனா, இதுல பராமரிப்பு குறைவு. அதாவது, இதுக்காக நீங்க செலவிடற நேரம் ரொம்பவே குறைவாத்தான் இருக்கும். பகுதி நேர வேலையாவே இதைச் செய்யலாம். அதேபோல நோய் தாக்குதலும் அதிகம் இருக்காது.
5 யூனிட்டா... அதாவது 50 முயல்களைக் கொண்டு பண்ணையைத் தொடங்கினா, வருஷத்துக்கு 1 லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கும். சினை முயலா வித்தோம்னா, ஒரு முயல் 600 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை விற்பனை ஆகும். சோதனைக் கூடங்களுக்கு வித்தா, ஒரு முயலை 1,500  ரூபாய் வரைக்கும்கூட விக்க முடியும்'' என்றார், மகிழ்ச்சியாக!  
உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும்!
முயல் வளர்ப்பு பற்றி பேசும், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தின் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் குமரவேல், ''தமிழ்நாட்டில் ஒரு அழகுப் பிராணியாகத்தான் முயலைப் பார்க்கிறார்கள். சென்னை, செங்கல்பட்டு போன்ற நகரங்களிலும், பெரிய ஹோட்டல்களிலும் முயல் கறிக்கான தேவை இருக்கிறது. ஆனால், உற்பத்திதான் இல்லை. எல்லோரும் தற்பொழுது இன விருத்திக்கான முயலை விற்பனை செய்வதில்தான் கவனம் செலுத்துகின்றனர். கறிக்கான முயல் வளர்ப்பு செய்தால், விற்பனை வாய்ப்பை அதிகப்படுத்தலாம். எங்கள் மையத்தில் இதற்கான பயிற்சிகளைக் கொடுத்து வருகிறோம். மேலும், இனவிருத்திக்கான முயலை 200 ரூபாய் வீதம் விற்பனை செய்து வருகிறோம்'' என்று சொல்கிறார்.
இப்படித்தான் அடர் தீவனம் தயாரிக்கணும்!
மக்காச்சோளம்-20 கிலோ, கம்பு-15 கிலோ, கேழ்வரகு-3 கிலோ, அரிசி-15 கிலோ, கோதுமை தவிடு-12 கிலோ, கடலைப்பொட்டு-20 கிலோ, தாது உப்பு- ஒன்றரை கிலோ, உப்பு- அரை கிலோ ஆகியவற்றை கலந்து அரைத்துக் கொள்ள வேண்டும். தீவனம் வைப்பதற்கு 12 மணி நேரம் முன்பு 13 கிலோ கடலைப் பிண்ணாக்கை ஊறவைத்து, இக்கலவையுடன் கலந்து முயல்களுக்குக் கொடுக்க வேண்டும். இது 100 கிலோ தீவனம் தயாரிப்பதற்கான உதாரண அளவு. எவ்வளவு முயல் இருகின்றனவோ... அதற்கு ஏற்ற அளவில் தீவனத்தைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.  
முயல் கறியில் உள்ள சத்துகள்!
புரதம்-21%, கொழுப்பு-11%, நீர்ச்சத்து 68%. 100 கிராம் கறியில்... 50 மில்லி கிராம் கொழுப்புச் சத்து, 20 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்து 40 மில்லி கிராம் சோடியம், 350 மில்லி கிராம் பாஸ்பரஸ் சத்து ஆகியவை இருக்கின்றன.
விளம்பரத்தை நம்பாதீர்கள்!
கொடைக்கானலில் இயங்கிக் கொண்டிருக்கும் மத்திய செம்மறி ஆடுகள் மற்றும் உரோம ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானியான ராஜேந்திரன் முயல் வளர்ப்பு பற்றி சில தகவல்களை இங்கு சொல்கிறார்.

''இப்போ, முயல் வளக்க ஆசைப்படுறவங்க, தனியார் நிறுவனங்களோட விளம்பரங்களை நம்பி... 10 முயல்கள் கொண்ட யூனிட்டை... 20 ஆயிரம், 30 ஆயிரம் ரூபாய்னு வாங்குறாங்க. ஆனா, 10 முயல், கூண்டு எல்லாம் சேர்த்தே அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய்தான் இருக்கும். இதுமாதிரியான ஏமாற்று வேலைகளை நம்பாதீங்க.
முயல் வளர்ப்பு லாபகரமான தொழில்தான். விற்பனைக்காக மற்றவர்களை சார்ந்திருக்காம நேரடியா கறி விற்பனையில் இறங்கறது நல்லது. கேரளா மாநிலத்துல அரசுத் துறைகள் மூலமாவே முயல் வளர்த்து, மக்களுக்கு இனவிருத்தி முயலா கொடுக்கிறாங்க. நம்ம மாநிலத்துலயும் இதேமாதிரி கொடுத்து, பயிற்சிகளையும் கொடுத்தா, ஏமாற்றும் நிறுவனங்கள்கிட்ட இருந்து மக்களைக் காப்பாத்தலாம். முயல் உற்பத்தியையும் அதிகரிக்கலாம்'' என்று அருமையான தகவல்களைத் தந்த ராஜேந்திரன்,
''முயல் வளர்ப்பு பத்தின ஆலோசனைகளுக்கு, எங்கள் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்'' என்றும் அழைப்பு வைத்தார்!
தொடர்புக்கு,
முரளிதரன், செல்போன்: 94431-82960,
செம்மறி ஆடுகள் மற்றும்
ரோம ஆராய்ச்சி மையம்,
கொடைக்கானல்,
தொலைபேசி: 04542-276414.
வேளாண் அறிவியல் நிலையம்,  காட்டுப்பாக்கம்.
தொலைபேசி: 044-27452371.

நன்றி : பசுமை விகடன் - 10.06.2012

பல வருடங்களுக்கு முன் வந்த செய்தியாயிற்றே, இப்போதும் தொடர்பில் இருக்கின்றாரா? என்று அறிய  திரு முரளிதரன் அவர்களிடம் தொடர்பு கொண்டேன். மற்றவர்களுக்கு உதவ இப்போதும் தயாராக இருப்பதாக அவரது மற்றொரு செல்போன் (9443182960) எண் வழியாக உறுதிபடக் கூறினார். 

வாய்ப்புள்ளவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும். நன்றி!

                                                                                                   அன்புடன் செல்வம்பழனிச்சாமி