disalbe Right click

Showing posts with label Cr.P.C. Show all posts
Showing posts with label Cr.P.C. Show all posts

Friday, March 13, 2020

குற்ற விசாரணை முறைச் சட்டம்-1973, பிரிவு - 190

குற்ற விசாரணை முறைச் சட்டம்-1973, பிரிவு - 190
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
குற்றங்களை நடுவர்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுதல்
Cr.P.C. என்று சுருக்கமாக சொல்லப்படுகின்ற குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் 1973, அத்தியாயம் 14ல் பிரிவு 190 முதல் பிரிவு 199 வரை  குற்றங்களை நடுவர்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது பற்றிய விளக்கங்கள்  சொல்லப்பட்டுள்ளது. 
குற்ற விசாரணை முறைச் சட்டம்-1973, பிரிவு - 190 (1)
அத்தியாயம் 14ல் குறிப்பிடப்பட்டுள்ள வகைமுறைகளுக்கு உட்பட்டு முதல் வகுப்பு நடுவர் எவரும், 
  • எந்த சங்கதிகள் ஒருங்கே சேர்ந்தால் ஒரு குற்றம் ஆகுமோ, அவற்றை குறித்து ஒருவரிடம் இருந்து முறையீடு புகார்  பெறப்பட்டிருந்தால், அல்லது
  • அந்த  குற்றம் பற்றிய சங்கதிகள் குறித்து காவல்துறை அறிக்கை  பெறப்பட்டிருந்தால் அல்லது
  • அத்தகைய  குற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று காவல்துறை அலுவலர் அல்லாத வேறு யாராவது ஒருவரிடம் இருந்து தகவல் பெறப்பட்டிருந்தால் அல்லது
  • அல்லது அத்தகைய  குற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று நடுவருக்கே  தெரிய வந்திருந்தால், 
அந்த குற்றத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
குற்ற விசாரணை முறைச் சட்டம்-1973, பிரிவு - 190 (2)
அத்தியாயம் 14ல் குறிப்பிடப்பட்டுள்ள வகைமுறைகளுக்கு உட்பட்டு, தலைமை நீதித்துறை நடுவர் அவர்களால் சிறப்பாக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள இரண்டாம் வகுப்பு நடுவரும் மேற்கண்ட குற்றம் எதையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
சாமானியர்கள் வழக்கு தொடுக்க....
மேற்கண்ட பிரிவின் கீழ் சாமானியர்கள் வழக்கு தொடுக்கலாம். அதற்குரிய மாதிரி விண்ணப்பம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.






நீதிமன்ற முறையீடு மாதிரி படிவம் அளித்தமைக்கு திரு A Govindaraj Tirupur அவர்களுக்கு நன்றி.

*********************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 13.03.2020

Monday, June 24, 2019

பொதுத்தொல்லைகள் - என்ன செய்ய வேண்டும்?

பொதுத்தொல்லைகள் - என்ன செய்ய வேண்டும்?
இன்றைய சூழ்நிலையில் நாம் ரோட்டில் நடந்து செல்லும்போதோ அல்லது வாகனங்களில் செல்லும்போதோ பலவித தொல்லைகளை அனுபவித்துக் கொண்டேதான் செல்ல வேண்டியதிருக்கிறது.  ஆனால், இதைப் பற்றி புலம்பிக் கொண்டே செல்கிறோமே தவிர இதற்கு யார் பொறுப்பு? இதற்கு பொதுமக்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? யாரிடம் புகார் அளிக்க வேண்டும்? என்பது குறித்து பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு இல்லை. அதனை தீர்க்கவே இதனை எழுதுகின்றேன்.
நாள்தோறும் என்னென்ன பொதுத் தொல்லைகளை அனுபவிக்கிறோம்?
⧭ சாலையின் நடுவே தோண்டப்பட்டு சரியாக மூடாமல் இருக்கும் குழிகள்
⧭ ரோட்டில் கொட்டப்பட்டுள்ள கட்டிடக்கழிவுகள்
⧭ ரோட்டை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கட்டிட பொருட்கள்
⧭ திருவிழாக் காலங்களில் ஒலிபெருக்கிகளை சத்தமாக வைப்பது
⧭ வீட்டில் வளர்க்கப்படும் மரங்கள் ரோட்டில் செல்வோருக்கு இடைஞ்சல் தருவது
⧭ சரக்கு வாகனங்களை நிறுத்தி வைத்து போக்குவரத்து நெரிசல் உண்டாக்குவது
⧭ தங்கள் வாகனங்களை ரோட்டில் ஓரத்தில் நிரந்தரமாக நிறுத்தி வைப்பது.
⧭ சாலை ஓரங்களிலேயே மல, ஜலம் கழிப்பது
⧭ சாலைகளில் சாக்கடைத் தண்ணீர் தேங்கி கிடப்பது 
⧭ சாலை ஓரங்களிலேயே குப்பைகளை கொட்டுவது
⧭ பொது இடங்களில் புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவது
⧭ சாலை ஓரங்களில் கழிவுகளை எரிப்பது
⧭ சாலைகளில் கால்நடைகளை விட்டு வைப்பது 
அருகிலுள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வரும் கழிவுகள், சப்தங்கள் 
யார் யார் புகார் அளிக்கலாம்?
மேற்கண்ட தொல்லைகளை  ஆங்கிலத்தில் Public Nuisance என்று குறிப்பிடுகிறார்கள். இவற்றை தடுக்க சிவில் நடைமுறைச் சட்டம் பிரிவு 91ன் கீழும், இந்திய தண்டணைச் சட்டம்  268 முதல்  294 வரையில் உள்ள பிரிவுகள் கீழும், குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 133ன் கீழும் யார் வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கலாம்.
சிவில் நடைமுறைச் சட்டம் பிரிவு 91
சிவில் நடைமுறைச் சட்டம் பிரிவு 91ன்படி மேற்கண்ட குற்றங்களுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், மேலும் சிலரை நம்முடன் சேர்த்துக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அதனை நடத்தி நாம் சந்திக்கின்ற தொல்லைகளை தடுக்க தடை உத்தரவு வாங்கலாம். இது கொஞ்சம் சிரமமானது மட்டுமல்ல, காஸ்ட்லியானதும் கூட. இதனை தவிர்க்க என்ன செய்யலாம்?
குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 133
மேற்கண்ட குற்றங்களை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குற்ற விசாரணை முறைச் சட்டத்தினை (பிரிவு 133) பயன்படுத்தினால் நமக்கு அலைச்சலில்லை, செலவு அதிகமில்லை. மிக எளிதானது. 
என்ன செய்ய வேண்டும்?
நாம் பொது இடங்களில் சந்திக்கின்ற இடையூறுகளைப் பற்றி ஒரு புகாராக எழுதி, நாம் குடியிருக்கும் பகுதிக்குரிய  வருவாய் கோட்ட அலுவலர்  (Revenue Divisional Officer) அவர்களுக்கு பதிவுத்தபாலில் அனுப்பவேண்டும். அல்லது சப் கலெக்டர் எனப்படும் கோட்டாட்சியர் அவர்களுக்கும் அந்தப் புகாரை அனுப்பலாம். புகாரின் தலைப்பிலேயே, குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 133ன் கீழ் புகார்மனு என்று எழுதிவிட்டு அதற்குப் பிறகு அனுப்புனர் என்பதை எழுதுங்கள். 
புகார் அனுப்பியதும் என்ன நடக்கும்?
உங்கள் புகார் கிடைக்கப் பெற்றதும் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி, புகாரில் உண்மை இருந்தால்  அந்த தொந்தரவுகளை அகற்ற உடனே உத்தரவுகளை பிறப்பிப்பார்கள். இந்த உத்தரவுகளில் சிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்பது விசேஷச் செய்தி ஆகும். இந்த உத்தரவின் கீழ் அந்த தொந்தரவு தருபவர்கள் அதனை அகற்ற அல்லது நிறுத்த மறுத்தால் இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 188ன் கீழ் தண்டணைக்குள்ளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
என்ன தண்டணை கிடைக்கும்?
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 133ன் கீழ்  நடவடிக்கை எடுக்கப்பட்டு பிறப்பிக்கப் படுகின்ற உத்தரவின்படி பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற இடையூறுகளை சரிசெய்ய மறுத்தால், அந்த குற்றத்தின் தன்மைக்கேற்ப ஒரு மாதம் சிறைத் தண்டணை மற்றும் ரூபாய் 200/- அபராதமும் அல்லது ஆறு மாதம் சிறைத் தண்டணை மற்றும் ரூபாய் 1000/- அபராதமும் விதிக்கப்படும் 
காவல் துறையில் புகார் அளிக்கலாமா?
பொதுத் தொல்லைகளால் பாதிக்கப்படுகின்ற பொதுமக்கள் இந்திய தண்டணைச் சட்டம்  268  முதல் 294 வரையில் உள்ள பிரிவுகள் கீழ் தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம்.
************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 25.06.2019 

Thursday, May 31, 2018

குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 204

குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 204 
குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு - 156(3) மற்றும் 200-ன் கீழ் நீதிமன்றத்தில் தனி நபர் ஒருவரால் அளிக்கப்படுகின்ற புகாரின் மீது (Private Complaint) புலன்விசாரணை செய்து ஓர் அறிக்கையை சமர்ப்பிக்கும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டு,அனுப்பி வைத்த புகாரில்(எதிர்மனுதாரர் மீது குற்றமில்லை என்று) எதிர்மறையான ஓர் அறிக்கையை (Negative Report) காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் போது, குற்றவியல் நடுவர் அவர்கள் அந்த அறிக்கையை, “தவறான அறிக்கை” என்று நினைத்தால்,  காவல்துறை தாக்கல் செய்த அந்த அறிக்கையை கருத்தில் கொள்ளாமல் ஒதுக்கிவிட்டு, அந்த புகாரில் சம்பந்தப்பட்ட எதிரிக்கு குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு - 204 -ன் கீழ் அழைப்பாணை அனுப்ப வேண்டும்
சரியானது என்று நினைத்தால்....?
அதே நேரத்தில், (எதிர்மனுதாரர் மீது குற்றமில்லை என்று) காவல்துறை தாக்கல் செய்த அறிக்கை சரியானது என்று குற்றவியல் நடுவர் முடிவு செய்தால், அது குறித்து புகார்தாரருக்கு ஒரு அறிவிப்பினை அனுப்ப வேண்டும்
புகார்தாரர் காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையினை நீதிமன்றத்தில் இருந்து முறைப்படி பெற்று, அந்த அறிக்கைக்கு ஒரு பதிலுறை அல்லது ஆட்சேபனை தெரிவித்து மனு தாக்கல் செய்யலாம். அவ்வாறு மனுதாரரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனுவை குற்றவியல்  நடுவர் அவர்கள் தனிநபர் புகாராக கருத வேண்டும்
இந்த சூழ்நிலையில் எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்துள்ள புகார்தாரர் மற்றும் அவர் தரப்பு சாட்சிகளையும், ஆவணங்களையும் குற்றவியல்  நடுவர் அவர்கள் பரிசீலித்து, புகாரில் குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிய வந்தால் அந்த புகாரை நீதிமன்ற கோப்பிற்க்கு ஏற்றுக்கொண்டு குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு - 204 ன் கீழ் எதிரிக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும்
குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இல்லை என்றால்?
முகாந்திரம் இல்லை என்றால், அதற்கான காரணத்தை குறிப்பிட்டு குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு - 203ன் கீழ் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும்
இந்த நடைமுறையை குற்றவியல் நடுவர் பின்பற்ற வேண்டும்!
இந்த நடைமுறையை பின்பற்றாமல் காவல்துறை தாக்கல் செய்த இறுதி அறிக்கையை ஏற்றுக் கொண்டு குற்றவியல் நடுவர் வெறுமனே புகாரை தள்ளுபடி செய்யக்கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது
Antony Manuvel Raj Vs Inspector of police, 
Theni police station 
CRL. RC. NO - 293/2016, 
DATE - 1.6.2016,
(2016-2-TLNJ-CRL-22)
நன்றி : நண்பரும் வழக்கறிஞருமான  நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர்

****************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 31.05.2018 

Friday, August 25, 2017

பிடியாணை (Warrant) பற்றிய விளக்கம்

பிடியாணை (Warrant) பற்றிய விளக்கம்
குற்றம் செய்த ஒருவரை அல்லது குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படுகின்ற ஒருவரை எங்கு பார்த்தாலும் கைது செய்து தன் முன்னால் ஆஜர் படுத்துவதற்கு காவல்துறைக்கு  நீதிமன்றம் இடுகின்ற ஆணை பிடியாணை  (Warrant) ஆகும்.  
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-70
ஒரு பிடியாணை என்பது எழுத்து வடிவத்தில் எழுதப்பட்டு, நீதிமன்றத்தில் தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற அலுவலரால் கையெழுத்து போடப்பட்டு, அந்த நீதிமன்றத்தின்  முத்திரையைக் கொண்டிருக்க  வேண்டும். இந்த பிடியாணை அதனை பிறப்பித்த நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படுகின்ற வரையிலோ அல்லது உரிய காவல்துறை அதிகாரியால் நிறைவேற்றப்படுகின்ற வரையிலோ அமுலில் இருக்கும்.
பிடியாணைகள் ஜாமீனில் விடக்கூடிய பிடியாணை, ஜாமீனில் விடமுடியாத பிடியாணை என்று இரண்டு  வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஜாமீனில் விடக்கூடிய பிடியாணை (Cr.P.C:71 - Bailable Warrant)
ஒருவர் பிடியாணையின் மூலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டால் அவரிடமிருந்து தக்க பிணையத்தை (Surity) பெற்றுக்கொண்டு அவரை காவல்துறை பாதுகாப்பில் இருந்து விடுவிக்கலாம் என்று அந்தப் பிடியாணையில் குறிப்பிடப்பட்டிருந்தால் அது ஜாமீனில் விடக்கூடிய பிடியாணை ஆகும். 
ஜாமீனில் விட முடியாத பிடியாணை (Non-Bailable Warrant)
ஒருவர் பிடியாணையின் மூலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டால்,  அவரை பிணையில் விடுவிக்க அந்த பிடியாணையில் காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என்றால்  அது ஜாமீனில் விடமுடியாத  பிடியாணை ஆகும்.  இருந்த போதிலும், கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சமயத்தில், அவருக்கு அந்த நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கலாம்.
வாரண்ட் இருக்கா?
சில திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். காவல்துறையினர் யாராவது ஒருவரை கைது செய்ய முற்படும் சமயத்தில், அவர் அவர்களிடம் “வாரண்ட் இருக்கா?” என்று கேட்பார்.   காவல்துறை அதிகாரி வாரண்டை எடுத்து காண்பிப்பார்.
பிடியாணையின் சாராம்சம்  (Cr.P.C:75)
பிடியாணையினை நிறைவேற்றுகின்ற காவல்துறை அலுவலர் அல்லது வேறு நபர் அதில் கூறப்பட்டுள்ள சாராம்சத்தை கைது செய்யப்பட வேண்டிய நபருக்கு அறிவிக்க வேண்டும். அவர் பிடியாணையை பார்க்க வேண்டும் என்று கேட்டால் அதனை அவருக்கு காண்பிக்க வேண்டும்.
24 மணி நேரத்திற்குள் ...  (Cr.P.C:76)
பிடியாணையின்படி கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடாத பட்சத்தில் அவரை 24 மணி நேரத்திற்குள் காவல்துறை அலுவலர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும்.
பிடியாணையை நிறைவேற்றும் இடம் (Cr.P.C:77)
நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட ஒரு பிடியாணையை இந்தியாவின் எந்த ஒரு இடத்திலும் நிறைவேற்றலாம்.
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-78
ஒருவரை அல்லது பலரை கைது செய்யுமாறு ஒரு பிடியாணையை பிறப்பிக்கும் நீதிமன்றம், அதன் அதிகார வரம்பிற்கு வெளியே அந்த பிடியாணையானது நிறைவேற்றப்பட வேண்டியதிருக்கும்போது, அந்த மாவட்ட நீதித்துறை நடுவர் அல்லது காவல் ஆணையர் அல்லது மாவட்ட கண்காணிப்பாளர்  ஆகியவர்களில் ஒருவருக்கு தபால் மூலமாகவோ, அதனை அனுப்பி அதனை நிறைவேற்றச் செய்யவேண்டும்.
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-79
ஒருவரை அல்லது பலரை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையானது, அதனை பிறப்பித்துள்ள நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு வெளியே நிறைவேற்றப்பட வேண்டியதிருந்தால்,  அந்தப் பகுதிக்குரிய நீதிமன்ற நடுவரிடமோ, தகுதி வாய்ந்த காவல்துறை அதிகாரியிடமோ ஒப்புதல் கையொப்பம் பெறுவதற்கு அந்த பிடியாணை கடிதம் காவல்துறை அலுவலர் ஒருவரால் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.  அப்பிடியாணையில் மேற்கண்ட அதிகாரிகளால் ஒப்புதல் செய்யப்பட்டால் அந்த காவல்துறை அலுவலர் அந்த பிடியாணையை நிரைவேற்றும் அதிகாரத்தை பெற்றவர் ஆவார்.
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-80
சரி, பிடியாணையின்படி  அதனை பிறப்பித்துள்ள நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு வெளியே நியமிக்கப்பட்ட காவல்துறை அலுவலர் ஒருவரை கைது செய்து விட்டார்.  அதன் பிறகு என்ன செய்ய வேண்டும்?
பிடியாணையை பிறப்பித்த நீதிமன்றமானது (பிடியாணை கைதி)  கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திற்குள் இல்லை என்றால், அந்த வட்டார எல்லைக்குள் அதிகாரமுடைய காவல்துறை அதிகாரி முன்னால் கைதியை ஆஜர் படுத்த வேண்டும். 
கைது செய்யப்பட்ட நபர் பிடியாணையில் குறிப்பிட்டுள்ளவர்தான் என்று தங்களுக்கு தோன்றினால், நீதித்துறை நடுவர் அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது காவல் ஆணையர் அந்த கைதியை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட வேண்டும். பிணையம் கொடுக்கக்கூடிய குற்றம் என்றால் பிணையம் கொடுக்கலாம். அந்த பிணைய பத்திரத்தை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.  
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-81
பிணையில் விட முடியாத குற்றமாக இருந்தால், எந்த மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதோ அந்த மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் அல்லது செஷன்ஸ் கோர்ட் நீதிபதியோ தக்க பரிசீலணை செய்து அந்த கைதியை பிணையில் விட  உத்தரவிடலாம்.
****************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Sunday, August 20, 2017

காவல்துறை அலுவலர் புலனாய்வு செய்வதற்கான நடைமுறை

காவல்துறை அலுவலர் புலனாய்வு செய்வதற்கான நடைமுறை

ஒரு குற்றம் நடைபெற்றுள்ளது என்று உரிய ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்தால், அந்தப் புகாரினை ஏற்றுக்கொண்டு முதலில் அவருக்கு காவல்துறை அலுவலர் CSR (Community Service Register) எனப்ப்டுகின்ற “மனு ஏற்புச் சான்றிதழ்” அளிக்க வேண்டும்.  

கைது செய்யப்படக் கூடிய குற்றமாக இருந்தால்...

அந்தப் புகாரின்படி கைது செய்யப்படக்கூடிய குற்றம் நடந்திருக்கிறது என்று தெரிய வந்தாலோ அல்லது ஒரு காவல் அலுவலர்க்கு தானாகவே தெரிய வந்தாலோ குற்ற விசாரணை முறைச் சட்டம்,  (Cr.P.C) 1973 - பிரிவு 154ன்படி, அவர் முதலில்  முதல் தகவல் அறிக்கை தயார் செய்ய வேண்டும். 

அந்தப் புகாரின்படி ஒன்றுக்கு மேற்பட்ட குற்றங்கள் நடந்திருப்பது தெரிய வந்து, அவற்றுள் ஏதேனும் ஒன்று கைது செய்யப்படக்கூடிய குற்றம் என்றால், அந்த வழக்கை கைது செய்யப்படக்கூடிய குற்ற வழக்காக குற்ற விசாரணை முறைச் சட்டம்,  (Cr.P.C) 1973 - பிரிவு 155(4)ன்படி,   காவல்துறை அலுவலர்  எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீதிமன்ற  உத்தரவு தேவையில்லை

கைது செய்யப்படக்கூடிய குற்றம் என்றால், நீதிமன்ற நடுவரின் உத்தரவு இல்லாமலேயே, குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 156(1)ன்படி, காவல்துறை அலுவலர், அந்த வழக்கை புலனாய்வு செய்யலாம். 

அவசியம் ஏற்பட்டால், நடுவரின் அனுமதியின்றி குற்றவாளிகளை கைது செய்யவும் விசாரணை அதிகாரிக்கு அதிகாரம் உண்டு. 

புலனாய்வு  செய்வதற்கு  அதிகாரம்  அளிக்கப்படாத  ஒரு  காவல் அலுவலர் இந்த வழக்கை புலனாய்வு செய்துள்ளார். எனவே அதனை ஏற்கக்கூடாது!  என்று அந்தக் காவலர் எடுத்த எந்த ஒரு நடவடிக்கையையும் குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 156(2)ன்படி  யாரும் ஆட்சேபிக்க முடியாது.

நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும்

கொடுக்கப்பட்ட புகாரின் மூலமாகவோ அல்லது விசாரணையில் கிடைத்த தகவல் மூலமாகவோ கைது செய்யப்பட வேண்டிய குற்றம் ஒன்று நடைபெற்று உள்ளது என்று அந்த வழக்கை புலனாய்வு செய்கின்ற அலுவலருக்கு சந்தேகிக்க காரணம் இருந்தால், குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 157(1)ன்படி அதற்குரிய நீதிமன்ற நடுவருக்கு உடனடியாக அவர் அது பற்றிய அறிக்கையினை அனுப்ப வேண்டும்.

அந்த அறிக்கையினை அவர்  தனக்கு மேலுள்ள அதிகாரியின் மூலம்  குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 158(1)ன்படி நடுவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலதிகாரி அந்த வழக்கு சம்பந்தமாக சில அறிவுரைகளை விசாரணை அதிகாரிக்கு வழங்கலாம். அந்த அறிவுறுத்தல்களை குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 158(2)  அறிக்கையில் குறிப்பிட வேண்டும். 

சாட்சிகளை விசாரிக்க....

அந்த வழக்கு சம்பந்தமாக யாரையேனும் விசாரிக்க வேண்டியது இருந்தால், அந்த விசாரணை அலுவலர் குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 160ன்படி சம்மன் அனுப்பி காவல்நிலையத்தில் ஆஜராக உத்தரவிடலாம். சம்மன் பெற்றவர் அந்த உத்தரவுக்கு கட்டுப்பட்டு காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும்.

சாட்சிகளில் பெண்கள் இருந்தாலோ அல்லது 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களாக இருந்தாலோ அவர்களை காவல்நிலையத்திற்கு அழைக்காமல், அவர்கள் குடி இருக்கும் இடத்திற்கே சென்று விசாரிக்க வேண்டும்.

கையெழுத்து போட தேவையில்லை

சாட்சிகளை விசாரிக்கும் அலுவலர் வழக்கு சம்பந்தமான விசாரணையில் சாட்சிகள் ஒவ்வொருவரும் கூறிக்கொள்வதை குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 161ன்படி  எழுதிக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு எழுதிக் கொள்ளும் அறிக்கையில் குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 162ன்படி சாட்சிகள் கையெழுத்து  போடக்கூடாது.

புலனாய்வு செய்யத் தேவையில்லை என்றால்...

வழக்கு சம்பந்தமாக காவல் அலுவலர் ஒருவர் புலன் விசாரணை செய்ததில், குற்றம் நடைபெற்றதற்கான போதுமான காரணங்கள் இல்லையென்பது தெரிய வந்தால், குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 157(2)ன்படி, புகார் அளித்தவருக்கு அதனை எழுத்து மூலமாக அவர் தெரிவிக்க வேண்டும்.

காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்...

மேற்கண்டவாறு காவல்துறையினர் கைது செய்யப்படக்கூடிய புகார் ஒன்றில் நடவடிக்கை எதுவும் எடுக்காத பட்சத்தில், மனுதாரர் குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 156(3)ன் கீழ், நீதிமன்றத்தில் புகார் அளிக்கலாம்.

கோர்ட் டைரக்‌ஷன்

அந்த குற்ற வழக்கினைப் பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிமன்றமானது குற்ற விசாரணை முறைச் சட்டம்,  (Cr.P.C) 1973 - பிரிவு 190-ன்படி, உத்தரவிட முடியும். 

புலன் விசாரணையை முடித்த பிறகு 

புலனாய்வை முடித்த பிறகு நீதிமன்ற நடுவருக்கு விசாரணை அதிகாரி குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 173(2)ன் கீழ், விரிவான அறிக்கை அனுப்ப வேண்டும்.

************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Friday, July 28, 2017

பிழை வழக்கு (மிஸ்டேக் ஆப் பேக்ட்)

பிழை வழக்கு (மிஸ்டேக் ஆப் பேக்ட்)
ஒரு குற்றம் நடைபெற்றுள்ளது என்று உரிய ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்தால், அந்தப் புகாரினை ஏற்றுக்கொண்டு முதலில் அவருக்கு காவல்துறை அலுவலர் CSR (Community Service Register) எனப்படுகின்ற “மனு ஏற்புச் சான்றிதழ்” அளிக்க வேண்டும்.
  • அந்தப் புகாரின்படி விசாரணை செய்து, கைது செய்யப்படக்கூடிய குற்றம் நடந்திருக்கிறது என்று தெரிய வந்தால், முதல் தகவல் அறிக்கை தயார் செய்து, குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 154ன்படி குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.  
  •  புகார் அளித்த நபருக்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று இலவசமாக வழங்க வேண்டும். 
  • ஒரு வேளை கைது செய்ய முடியாத குற்றம் ஒன்று நடந்திருக்கிறது என்று தெரிய வந்தால், , குற்ற விசாரணை முறைச் சட்டம், 1973 - (Cr.P.C) பிரிவு -155ன்படி புகாரையும், புகார் தந்தவரையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.  
  • மேற்கண்டவாறு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மனுதாரர் குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 156(3)ன் கீழ், நீதிமன்றத்தில் புகார் அளிக்கலாம். 
  • அந்த குற்ற வழக்கினைப் பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிமன்றமானது உத்தரவிட முடியும். இதனையே நாம் கோர்ட் டைரக்‌ஷன் என்கிறோம்.  
  • நீதிமன்ற உததரவுக்குப் பின், குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 157ன் கீழ் அந்த வழக்கை காவல்துறை அதிகாரி புலனாய்வு செய்து நீதிமன்ற நடுவருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.  
  • இது போன்ற புலனாய்வு வழக்குகளில் இரண்டுக்கு மேலான குற்றங்கள் செய்யப்பட்டிருந்து, அவற்றில் ஏதேனும் ஒரு குற்றம் கைது செய்யப்படக்கூடிய குற்றமாக இருந்தால், அந்த வழக்கானது குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 155(4)ன் கீழ் கைது செய்யப்படக்கூடிய வழக்காக (புலனாய்வு செய்யும் காவல்துறை அதிகாரி/அலுவலர்) எடுத்துக் கொள்ள வேண்டும்.  
  • அவசியம் ஏற்பட்டால், நடுவரின் அனுமதியின்றி குற்றவாளிகளை கைது செய்யவும் விசாரணை அதிகாரிக்கு அதிகாரம் உண்டு.  
  • ஒருவேளை புலனாய்வு செய்வதற்கு போதுமான காரணங்கள் இல்லை என்று விசாரணை அதிகாரிக்கு தோன்றினால், குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 157(1)ஆ-ன் கீழ் அந்த வழக்கை அவர் புலனாய்வு செய்யக் கூடாது. இதனையே ”பிழை வழக்கு” (Mistake of Fact) என்கிறார்கள்.  
  • அதே நேரத்தில் ஒரு வழக்கை புலனாய்வு செய்வதாக இல்லை என்பதை குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 157(2)ன் கீழ், புகார் அளித்தவர்க்கு விசாரணை அதிகாரி உடனடியாக அறிவிக்க வேண்டும். 
  • காவல் நிலை ஆணை (POLICE STANDING ORDER) 660ன்படி ”பிழை வழக்கு” (Mistake of Fact) என்று முடிவு செய்யப்பட்ட பின், விசாரணை அதிகாரியானவர், புகார் அளித்தவர்க்கு (காவலர் படிவம் எண்:90ல்) வழக்கு பற்றிய அறிவிப்பு ஒன்றை செய்ய வேண்டும். 
  • புலனாய்வை முடித்த பிறகு நீதிமன்ற நடுவருக்கு விசாரணை அதிகாரி குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 173(2)ன் கீழ், அறிக்கை அனுப்ப வேண்டும். 
  • அதன் பிறகு நீங்கள் தாக்கல் செய்த வழக்கு விசாரணை அதிகாரியால் பிழை வழக்கு (Mistake of Fact) என்று முடிவு செய்யப்பட்டுள்ளது, 
  • இது பற்றி ஏதேனும் கூற விரும்பினால். நீதிமன்றத்தில் குறிப்பிட்ட நாளில் நீங்கள் முறையிடலாம்! என்று புகார் தந்தவர்க்கு நீதிமன்ற நடுவர் சம்மன் அனுப்புவார். 
  • உங்கள் வழக்கைப் பற்றி பொய்யான சாட்சியினை காவல்துறை அதிகாரி/அலுவலர் புனைந்தால், அது பற்றிய ஆதாரங்களோடு இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு-193ன்படி அந்த காவல்துறை அதிகாரி/அலுவலர் மீது நீதிமன்றத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். 
  • புகார் நிரூபிக்கப்பட்டால், அந்த காவல்துறை அதிகாரி/அலுவலர்க்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டணை வழங்கப்படும். 
  • உங்கள் வழக்கின் விசாரணை அறிக்கையில் எந்தக்கட்டத்திலும் அறிக்கை, கட்டளை, தீர்ப்பு அல்லது சட்டத்திற்கு முரணான எதையும் செய்திருந்தால், இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு-219ன்படி அந்த காவல்துறை அதிகாரி/அலுவலர் மீது நீதிமன்றத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம்.
  • புகார் நிரூபிக்கப்பட்டால், அந்த காவல்துறை அதிகாரி/அலுவலர்க்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டணை வழங்கப்படும்.

*******************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி