disalbe Right click

Saturday, September 30, 2017

ஜி.எஸ்.டி விதிமீறல்… எவ்வளவு அபராதம்?

ஜி.எஸ்.டி விதிமீறல்எவ்வளவு அபராதம்?
ஜி.எஸ்.டி வரிச் சட்டப்பிரிவு 122-ன்படி, 21 விதமான விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப் படுகிறது. குறைந்தபட்ச அபராதமாக 10,000 ரூபாயும், அதிகபட்ச அபராதமாக எவ்வளவு வரி இருக் கிறதோ அல்லது வரி ஏய்க்கப்பட்டிருக்கிறதோ, அது அதிகபட்ச வரியாக வசூலிக்கப்படும். இந்த அபராதம் சி.ஜி.எஸ்.டி மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி சட்டத்திலும் தனித்தனியாக வசூலிக்கப்படும்.
பொதுவாக, ஆரம்பக்காலத்தில் ஜி.எஸ்.டி-யில் அபராதமோ, தண்டனையோ பெரிதாக வழங்கப்பட வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், ஜி.எஸ்.டி சட்டப் பிரிவு 122-ன்படி, 22 வகையான விதிமீறல்களுக்கு அபராதத்தை விதிக்கும் அதிகாரத்தை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தரும்வகையில், சட்டம் வழி செய்து தந்திருக்கிறது
அவற்றில் முக்கியமானவை பின்வருமாறு
1. வரிதாரர், வரிக்கான இன்வாய்ஸ் (Tax Invoice) இல்லாமல், தவறான அல்லது உண்மைக்கு மாறான இன்வாய்ஸைத் தயாரித்திருத்தல்,
2. ஜி.எஸ்.டி சட்டப் பிரிவுகளுக்குப் புறம்பாக பொருளுக்கோ அல்லது சேவைக்கோ இன்வாய்ஸ் வழங்குதல்,
3. ஜி.எஸ்.டி வரியை வசூல் செய்து, அதனை அரசாங்கத்திடம் மூன்று மாத காலத்துக்குள் செலுத்தத் தவறுதல்,
4. ஜி.எஸ்.டி சட்டத்துக்குப் புறம்பாக வரி வசூல் செய்தல்,
5. பொருளையோ அல்லது சேவையையோ பெறாமல் உள்ளீட்டு வரியை எடுத்துக்கொள்ளுதல்.
6. அரசை ஏமாற்றுகிற முறையில் நடவடிக்கை இருத்தல்,
7. உள்ளீட்டு வரியை வரம்புக்கு மீறி எடுத்துக்கொள்ளுதல்,
8. கணக்குகளைத் திருத்துவது மற்றும் தவறான நிதிக் கணக்குகளை உள்சேர்த்தல்,
9. ஜி.எஸ்.டி வரி விதிப்பில் பதிவு செய்யாமல் இருத்தல்,
10. விற்பனையைக் குறைத்து கணக்கில் காண்பித்தல்,
11. கணக்குகளைச் சரியான முறையில் பராமரிக்காமல் இருத்தல்.
மேற்கண்ட செயல்களுக்கு ஜி.எஸ்.டி சட்டப் பிரிவின்படி, அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, வர்த்தகர்கள் இந்தப் பதினொரு விஷயங்களில் எந்தத் தவறும் செய்யாமல் இருப்பது நல்லது!
நன்றி : நாணயம் விகடன் - 01.10.2017

Friday, September 29, 2017

போலி ஆவணம் வாயிலாக பெயர் மாற்றம் ரூ.50 ஆயிரம் அபராதம்!

போலி ஆவணம் வாயிலாக பெயர் மாற்றம் ரூ.50 ஆயிரம் அபராதம்! 
சென்னை, மின் இணைப்பு பெயர் மாற்ற, 'போலி' ஆவணங்களை தாக்கல் செய்தவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது; கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்து உள்ளது
வேலுார் மாவட்டம், அரக்கோணம் தாலுகாவைச் சேர்ந்த, ஜெயராமன் தாக்கல் செய்த மனு:
அரக்கோணம் தாலுகா, நெடும்புலி கிராமத்தில், காசிம் சாகிப் மற்றும் அவரது மகன்களிடம் இருந்து, ஒரு பகுதி நிலம் வாங்கினேன்அதில், கிணறு, 'பம்ப் செட்' உள்ளது. நிலத்தின் மற்றொரு பகுதியை, என் தந்தை மற்றும் சகோதரர் வாங்கினார். நிலத்துக்கான மின் இணைப்பை, என் பெயருக்கு மாற்றினேன். தொடர்ந்து, மின் கட்டணம் செலுத்தினேன்.
இந்நிலையில், நிலம், பம்ப் செட் இருந்த நிலத்தை, தயாளன் என்பவருக்கு, காசிம் சாகிப் விற்றுள்ளார். அதனால், மின் இணைப்புக்கான ஆவணத்தில், என் பெயரை நீக்கி, தயாளன் பெயரை சேர்த்து விட்டனர். இந்த பெயர் மாற்றத்தை, ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி, எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் தாக்கல் செய்த, அசல் விற்பனை பத்திரத்தில், ஆறு பக்கங்கள் உள்ளன. அதை, பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள ஆவணங்களுடன் ஒப்பிட்ட போது, அசல் பத்திரத்தில் உள்ள நான்காவது பக்கம், பத்திரப்பதிவு ஆவணங்களில் இல்லை.
அசல் விற்பனை பத்திரத்தில் உள்ள, நான்காவது பக்கம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நான்காவது பக்கத்தை, இடைச்செருகல் செய்திருக்க வேண்டும்பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள ஆவணங்களின்படி, விற்பனை பத்திரத்தின் முத்திரைத்தாள் மதிப்பு, 2,150 ரூபாய்; மனுதாரர் தாக்கல் செய்த, அசல் விற்பனை பத்திரத்தின் முத்திரைத்தாள் மதிப்பு, 2,200 ரூபாய். அதாவது, 50 ரூபாய் மதிப்புள்ள முத்திரைத்தாளை, நான்காவது பக்கமாக இணைத்திருப்பதன் வாயிலாக , இந்த மதிப்பு வருகிறது.
அசல் விற்பனை பத்திரத்தில், ஒரு பக்கத்தை இணைத்து, மனுதாரர் மோசடி செய்திருப்பது தெரிகிறது. எனவே, மின் வாரியத்தின் உத்தரவில் குறுக்கிட முடியாது; மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு, 50 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு தொகை விதிக்கப்படுகிறது.
அந்த தொகையை, சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள, பால குருகுலத்துக்கு அளிக்க வேண்டும். விற்பனை பத்திரத்தில் மோசடி செய்ததற்காக, மனுதாரர் மீது, கிரிமினல் புகார் கொடுத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 29.09.2017 

திருமண பதிவுக்கு ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்

திருமண பதிவுக்கு ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்
சென்னை: திருமண பதிவுக்கு ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
மணமக்கள், பெற்றோர் மற்றும் சாட்சிகளின் அடையாள ஆதார ஆவணமாக ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்களுடன் தற்போது ஆதார் அட்டையையும் ஒரு அடையாள ஆவணமாக ஏற்று திருமண பதிவு மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் அதை குடியுரிமை ஆதாரமாகவோ அல்லது இருப்பிட ஆதாரமாகவோ ஏற்க இயலாது.
மணமக்களின் பெற்றோரின் பெயர்கள் மற்றும் முகவரியை சரிபார்க்கும் போது, அவர்கள் தாக்கல் செய்யும் ஆதார ஆவணங்களில் உள்ள பெயர் மற்றும் முதல் எழுத்தும் (இனிஷியல்), விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்பட்ட பெயர் மற்றும் முதல் எழுத்தும், முகவரியும் ஒத்துள்ளதா என்பதை பதிவு அலுவலர்கள் நன்றாக பரிசீலித்த பின்னரே பதிவை மேற்கொள்ள வேண்டும்.
மணமக்களின் பெற்றோர் யாராவது இறந்துவிட்டதாக விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இறந்தவரின் அசல் இறப்பு சான்றை சரிபார்த்து அதன் நகல் பெறப்பட்டு சேர்க்கப்பட வேண்டும். மணமக்களில் யாராவது ஒருவர், கணவர் அல்லது மனைவியை இழந்தவர் என விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருந்தால், இறந்தவரது இறப்புச் சான்றின் அசலை சரிபார்த்து அதன் நகலை கண்டிப்பாகப் பெற்று சேர்த்த பின்னரே பதிவை மேற்கொள்ளவேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 29.09.2017 
சுற்றறிக்கையின் நகல் இணைக்கப்பட்டுள்ளது.
Image may contain: text
Image may contain: text
நன்றி : முகநூல் நண்பர் திரு Arul Kumar அவர்கள்