disalbe Right click

Showing posts with label மாற்று முறை ஆவணச் சட்டம். Show all posts
Showing posts with label மாற்று முறை ஆவணச் சட்டம். Show all posts

Saturday, March 24, 2018

புரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா?

கடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா?
வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க!
என்னுடைய பெயர் ராமலிங்கம். என்னிடத்தில் சக்ரவர்த்தி என்பவர் கடந்த 01.10.2011 அன்று அவரது குடும்பச் செலவுகளுக்காக கடனாக ரூ.  50,000/- பெற்றுக் கொண்டு அதற்கு வட்டியாக ரூ.100/-க்கு ரூ.1/- வீதம் வட்டி தருவதாகவும், ஒப்புக் கொண்டு, நான் கேட்கும்போது என்னிடமோ, அல்லது எனது ஆணை பெற்றவரிடமோ கடனை செலுத்திவிடுவதாகவும் கூறி ஒரு புரோ நோட்டு எழுதிக் கொடுத்துள்ளார். 
ஆனால், கடனை பெற்றுக் கொண்ட பிறகு, பலமுறை நான் நேரில் கேட்ட பிறகும் ஒரு முறைகூட எனக்கு வட்டிப்பணம் செலுத்தவில்லை, அசலையும் தரவில்லை. அதனால், 06.02.2012 அன்று அவருக்கு வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பினேன். அதனை 10.02.2012 அன்று பெற்றுக் கொண்ட அவர் எனக்கு பதில் ஏதும் அனுப்பவில்லை. கடனையும் பைசல் செய்யவில்லை.
இந்நிலையில், 16.11.2012 அன்று ஷை சக்ரவர்த்தி இறந்துவிட்டார். அதனால், என்னிடம் சக்ரவர்த்தி வாங்கிய கடனை, அவரது வாரிசுகளான அவரது மனைவி திருமதி உஷா சக்ரவர்த்தி மற்றும் அவரது மகள் உமா மகேஸ்வரி (வயது 17), அவரது மகன் செல்வ கணபதி (வயது 15) ஆகியோரை அணுகி கேட்டபோது அவர்கள் எனது கடனை பைசல் செய்யவில்லை. 
அதனால், சக்ரவர்த்தியின் மனைவியான திருமதி உஷா சக்ரவர்த்தி அவர்களுக்கு கடந்த 29.09.2014 அன்று வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பினேன். குடும்பச் செலவிற்காக சக்ரவர்த்தி வாங்கிய கடனானது அவரது குடும்ப உறுப்பினர்களை கட்டுப்படுத்தும். 
ஆகவே, எனது கடனை வட்டியுடன் செலுத்த மேற்கண்ட பிரதிவாதிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
பிரதிவாதிகள் தரப்புல என்ன சொல்றாங்கன்னு கேப்போம் வாங்க!
இந்த வழக்கில் சக்ரவர்த்தியின் மனைவி தோன்றாதரப்பினர் ஆகிவிட்டதாலும், அவரது குழந்தைகள் மைனர்கள் என்பதாலும், நீதிமன்ற காப்பாளராக வழக்கறிஞர் செல்வி ஜெய அருணி அவர்கள் தாக்கல் செய்துள்ள எதிருரையில்,
வாதி கூறுவது அனைத்தும் தவறு. சக்ரவர்த்தி கடன் வாங்கவில்லை. அப்படியே வாங்கி இருந்தாலும், அது அவரது மைனர் குழந்தைகளுக்குத் தெரியாது. எனவே அது அவர்களை கட்டுப்படுத்தாது என்று கூறியுள்ளார். ஆகவே இந்த வழக்கு செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
******************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 24.03.2018 
வழங்கப்பட்ட தீர்ப்பு 

மாவட்டஉரிமையியல் நீதிமன்றம்¸ பண்ருட்டி
முன்னிலைதிருமதி..உமாமகேஸ்வரி பி.எஸ்ஸிபி.எல்
மாவட்ட உரிமையியல் நீதிபதி¸ பண்ருட்டி
திருவள்ளுவராண்டு 2046¸ ஜய ஆண்டு¸ பங்குனித்திங்கள் 30ஆம் நாள்
2015 ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13 ஆம் நாள் திங்கட்கிழமை
அசல் வழக்கு எண்.238/2014
ராமலிங்கம்                                                                                        … வாதி

/எதிர்/

1. உஷா சகக்ரவர்த்தி
2. மைனர் உமாமகேஸ்வரி(வயது சுமார் 17)
3. மைனர் செல்வகணபதி (வயது சுமார் 15) (மைனர் பிரதிவாதிகளுக்காக நீதிமன்ற காப்பாளர் வழக்கறிஞர் செல்வி.எஸ்.ஜெயஅருணி)                                              …பிரதிவாதிகள்

வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:
 மேற்படி வழக்குரை மற்றும் எதிர்வழக்குரை ஆகியவற்றை பரிசீலனை செய்தபின்னர் 17.03.2015 ஆம் தேதி கீழ்கண்ட எழுவினாக்கள் வனையப்பட்டுள்ளன.
1) தாவா கடனுறுதிச்சீட்டு உண்மையானதா¸ செல்லத்தக்கதா¸ தகுந்த மறுபயன் கொண்டதா?
2) தாவா கடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா?
3) வாதி வழக்குரையில் கோரியுள்ள தொகை மற்றும் அதற்கான பின்வட்டி அவருக்கு கிடைக்கத்தக்கதா?
4) வாதிக்கு கிடைக்கக்கூடிய இதர பரிகாரங்கள் என்ன
தீர்ப்புரை:
கடனுறுதிச்சீட்டு வழக்குகளைப் பொறுத்தவரை கடனுறுதிச்சீட்டு உண்மையானது¸  செல்லத்தக்கது¸ சரியான மறுபயனுக்காக எழுதிக்கொடுக்கப்பட்டது என்பது வாதியால் நிரூபிக்கப்படும்பட்சத்தில் அந்த நிரூபணமானது பிரதிவாதியால் பொய்ப்பிக்கப்படும்வரை மெய்ப்பிக்கப்பட்டதாகவே கருதப்படும்அந்த வகையில் இந்த வழக்கை நிரூபிக்கும் வகையில் வாதி¸ தன்னை வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார்ஆனால் அதில் சாட்சி கையெழுத்து போட்ட சண்முகம் என்பவர் வா.சா.2 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார்இதிலிருந்து தாவா கடனுறுதிச்சீட்டு உண்மையானது¸ செல்லத்தக்கது¸ தகுந்த மறுபயனுக்காக எழுதிக்கொடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது
ஆனால் பிரதிவாதி தரப்பில் எவ்வித சாட்சிகளும் விசாரிக்கப்படவில்லைமேலும்¸ கடனுறுதிச்சீட்டு வழக்குகளைப் பொறுத்தவரை ஒருவர் தாவா கடனுறுதிச்சீட்டில் பணம் பெற்றுக்கொண்டு கையெழுத்து போட்டாலே தாவா கடனுறுதிச்சீட்டு உண்மையானதாக கருதப்படும். மேற்கொண்டு விசாரிக்கப்படும் சாட்சிகள் அனைத்துமே அதனை வலுப்படுத்தும் சாட்சிகளாகும். எனவே கடனுறுதிச்சீட்டு உண்மையானது என்பதை வாதி தனது தரப்பு சாட்சிகள் மற்றும் சான்றாவணங்கள் வாதியின் கட்சியை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளதுஇதனை மறுத்துரைக்கும் பிரதிவாதிகள்தான் அவரால் சொல்லப்படும் சூழ்நிலைகளை நிரூபிக்கக் கடமைப்பட்டவர்
ஆகவே நிரூபிக்கும் சுமையானது வாதியிடமிருந்து பிரதிவாதிக்கு மாற்றம் செய்யப்படுகிறது.ஆனால் பிரதிவாதிதரப்பில் எவ்வித சாட்சிகள் கொண்டோ¸ சான்றாவணங்கள் கொண்டோ தங்களது தரப்பை நிரூபிக்கவில்லை
எனவே மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 118 ன்படியும்¸ வாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வா.சா..1 முதல் வா.சா..5 வரையிலான சான்றாவணங்கள் மூலமும்¸ வா.சா.1 மற்றும் வா.சா.2சாட்சிகளின் சாட்சியங்களின் மூலமும் தாவா கடனுறுதிச்சீட்டு எழுதிக்கொடுக்கப்பட்டது உண்மையானது¸ அது செல்லத்தக்கது¸ அது தகுந்த மறுபயனுக்காக எழுதிக்கொடுக்கப்பட்டது என்று முடிவுசெய்து எழுவினா எண்.1-க்கும்¸ அதன் அடிப்படையில் வாதி தாவாவில் கோரியவாறு தொகையை வட்டியுடன் பெற அருகதையுடையவர் என எழுவினா எண்.2-க்கும் இந்நீதிமன்றம் முடிவு செய்து மேற்கண்ட வகையில் எழுவினாக்களுக்கு தீர்வு காணப்பட்டு வாதிக்கு ஆதரவாக தீர்மானிக்கப்படுகிறது.”
நன்றி :  http://www.tamiljudgements.org 

Wednesday, March 21, 2018

புரோ நோட் சம்பந்தமான வழக்கு

கடனுறுதிச் சீட்டை திரும்பப்பெற உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்!
மொதல்ல்ல வாதி என்ன சொல்றாருன்னு பார்க்கலாம், வாங்க!
என்னுடைய பெயர் மாதவன். சீர்காழி நகரத்தில் வசித்து வருகிறேன். பிரதிவாதி சௌந்திரராஜன் அவர்களும் சீர்காழி நகரத்தில் வசித்து வந்தார். அங்குள்ள நகராட்சி அலுவலகத்தில் சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 10.10.2010ம் ஆண்டில் தன்னுடைய குடும்ப செலவுகளுக்காக மாதவன் என்ற என்னிடம் 80,000/- ரூபாய் கடனாக பெற்றார். மாதம் ஒன்றுக்கு 100/-ரூபாய்க்கு 1/-ரூபாய் வட்டி வீதம் செலுத்திவருவதாகவும், அசலையும் வட்டியையும் சேர்த்து நான் கேட்கும்போது என்னிடத்திலோ அல்லது நான் அதிகாரம் வழங்கியவரிடத்திலோ கொடுப்பதாக அவர் என்னிடம் ஒப்புக் கொண்டார். அதற்கு ஆதாரமாக ஒரு புரோ நோட்டிலும் அதனை எழுதித் தந்தார். ஆனால், வட்டியையோ, முதலையோ அவர் எனக்கு செலுத்தவில்லை. இந்த சூழ்நிலையில் அவர் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்திற்கு வேலை மாறுதல் செய்யப்பட்டார். என்னுடைய வழக்கறிஞர் மூலமாக ஒரு அறிவிப்பை அவரது புதுக்கோட்டை முகவரிக்கு நான் கடந்த 08.10.2011 அன்று அனுப்பி வைத்தேன். ஆனால், அவர் அதனை பெற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பிவிட்டார். அவருக்கு சொந்தமாக மூன்று லட்சம் ரூபாய் பெறுமான வீடு உள்ளது. அவரது வருமானம் வருடத்திற்கு இரண்டு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. ஆகவே கடன் நிவாரணச் சட்டப் பலன்கள் அவருக்கு கிடைக்கக் கூடியதல்ல. எனவே, பிரதிவாதி சௌந்திரராஜன் அவர்களிடமிருந்து தாவாத் தொகை 92,666/- ரூபாயை பின்வட்டி மற்றும் வழக்கு செலவுத்தொகையுடன் பெற்றுத்தர இந்த வழக்கை நான் தாக்கல் செய்துள்ளேன்.
பிரதிவாதி என்ன சொல்றாருன்னு பார்க்கலாம், வாங்க!
என்னுடைய பெயர் சௌந்திரராஜன். சீர்காழி நகரத்தில் வசித்து வந்தேன். . அங்குள்ள நகராட்சி அலுவலகத்தில் சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தேன். அந்த ஊரில் உள்ள மாதவன் என்பவரிடம் கடந்த 2007ம் வருடத்தில் 80,000/- ரூபாய் கடனாக பெற்றிருந்தேன். அதனை தவணை முறையில் 5,000/- ரூபாய் மற்றும் 10,000/- ரூபாய்களாக கொடுத்து அடைத்து விடுவதாகத்தான் கூறி அந்தக் கடனை பெற்றிருந்தேன். அந்தத் தொகையை அவரிடமிருந்து பெறும்பொழுது அவரிடம் ஏதும் நிரப்பப்படாத 2 புரோ நோட்டில் கையெழுத்துப் போட்டு கொடுத்திருந்தேன். அதில் சாட்சிக் கையெழுத்து யாரும் போடவில்லை. அந்த புரோ நோட்டில் இப்போது தேதி, தொகை மற்றும் சாட்சிகள் கையெழுத்துகளை நிரப்பி மோசடியாக இந்த வழக்கை மாதவன் தாக்கல் செய்துள்ளார் . அவரது உறவினர் துரைப்பாண்டி என்பவரிடம் எனது கையெழுத்து உள்ள மற்றோரு புரோ நோட்டைக் கொடுத்து அவர் மூலமாகவும் இது போன்ற ஒரு வழக்கை தொடுத்துள்ளார். வழக்கறிஞர் அறிவிப்பு எனக்கு வரவே இல்லை. நான் அலுவலகத்திலேயே இருந்து பணிபுரிபவன் அல்ல. நகராட்சியின் பல இடங்களுக்குச் சென்று மேற்பார்வை இடும் பணி செய்து வருகிறேன். சொசைட்டியில் லோன் போட்டு  கடந்த 06.10.2010 அன்று மாதவனிடம் 60,000/- ரூபாய் செலுத்தி அசலில் கழித்துவிட்டேன். அதனை வரவு வைத்து தருமாறு மாதவனிடம் கேட்டதற்கு புரோ நோட்டை வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டேன், பிறகு வரவு வைத்து விடுகிறேன் என்று மாதவன் கூறியதை நம்பி பேசாமல் இருந்துவிட்டேன். இன்னும் நான் 20,000/- ரூபாய்தான் அசலில் தரவேண்டும்..வாங்கிய கடனுக்குக்காக வட்டியாக 4% வீதம் ஏற்கனவே  45,000/- ரூபாய் செலுத்தியுள்ளேன். நான் 2007ல் வாங்கிய கடன் இது. ஆகையால் காலாவதி ஆகிவிட்டது. இதனை தள்ளுபடி செய்ய வேண்டும். 
பிரதிவாதி செய்த தவறுகள்
பணம் திருப்பிக் கொடுத்ததற்கான ஆதாரம் ஏற்படுத்தவில்லை.
தான் கொடுத்த பணத்தை புரோ நோட்டில் மாதவன் வரவு வைக்கவில்லை என்பது தெரிந்திருந்தும், அதனை வரவு வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஆதாரங்களை நீதிமன்றத்தில் அளிக்க முடியாததால் தீர்ப்பு பிரதிவாதிக்கு எதிரானது. 
*********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 21.03.2018 
மாவட்ட உரிமையியல் நீதிமன்றம். சீர்காழி
முன்னிலை : திரு . செல்வராஜ்.¸ B.C.A., B.L.,
மாவட்ட உரிமையியல் நீதிபதி. சீர்காழி
2017-ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 4-ம் நாள் புதன்கிழமை திருவள்ளுவராண்டு 2047. துர்முகி வருடம் மார்கழித்திங்கள் 20-ம்நாள்
அசல் வழக்கு எண். 38/2012
மாதவன் வாதி
.....எதிராக.....
சௌந்திரராஜன் பிரதிவாதி
வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:
'வாதியிடம் 2007-ம் ஆண்டில்தான் பிரதிவாதி கடன் பெற்றார் என்பதையும். அந்தக்கடனை 2010-ம் ஆண்டில் வாதிக்கு பிரதிவாதி திருப்பிச் செலுத்திவிட்டார் என்பதையும் நிரூபணம் செய்ய வேண்டிய பொறுப்பு பிரதிவாதியையே சார்ந்தது ஆனால் பிரதிவாதி அவ்வாறு எவ்வித சாட்சியங்களையும். ஆவணங்களையும் தாக்கல் செய்து நிரூபணம் செய்யவில்லை. வாதியிடம் பெற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்தியபின் கடனுறுதிச்சீட்டை திருப்பிக் கொடுக்கும்படி வாதியிடம் கேட்டும் அதனை வாதி திருப்பிக்கொடுக்கவில்லை என்று கூறும் பிரதிவாதி வாதியிடம் உள்ள கடனுறுதிச் சீட்டை திரும்பப்பெற உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வெறுமனே வாதியிடம் பெற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்திவிட்டதாக பிரதிவாதி கூறுவது ஏற்கத்தக்கதாக இல்லை. வாதிதரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முன்தீர்ப்பு நெறியில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் பின்வருமாறு கூறியுள்ளது:-
“ CDJ - 2011 - MHC - 5091 , Siva Mohan -Vs- Jayabalan “
“ 5............... Further, it is highly unbelievable that the promissory note executed in the year 1992 was misused in the year 2001 as alleged by the appellant and no notice was issued by the appellant to the respondent calling upon the respondent to return the promissory note executed by him in the year 1992 after discharging the promissory note amount ...@
மேற்கண்ட முன்தீர்ப்பு நெறியின்படி வாதியிடம் பிரதிவாதி 2007-ம் ஆண்டில் கடன் பெற்றுக்கொண்டு கடனுறுதிசீட்டு எழுதிக்கொடுத்திருந்தால் 2010-ம் ஆண்டில் கடன் தொகையை திருப்பிச் செலுத்தியதாக கூறப்படும் தேதிக்கு பின் உடனடியாக பிரதிவாதி வாதிக்கு அறிவிப்பு அனுப்பி கடனுறுதிச்சீடடை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டிருக்க வெண்டும். அவ்வாறு பிரதிவாதி அறிவிப்பு அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் தாக்கல் செய்யவில்லை. வாதியிடம் பிரதிவாதி 10.10.2010 அன்று பெற்ற கடன் தொகையான ரூ.80.000/-த்தை பிரதிவாதி திருப்பிச் செலுத்தாததால் அத்தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்தும்படி அறிவிப்பு அனுப்பியுள்ளதை வாதி வா.சா..2 ஆவணம் மூலம் நிரூபணம் செய்துள்ளார். வாதியிடம் பெற்ற கடன் தொகையை பிரதிவாதி திருப்பிச் செலுத்தவிலலை என்பதை உரிய ஆவண வாய்மொழி சாட்சியங்கள்மூலம் நிரூபணம் செய்துள்ள வாதி தாவா தொகையை பிரதிவாதியிடமிருந்து பெறுவதற்கு உரிமை உடையவர் என்று இந்நீதிமன்றம் முடிவு செய்து எழுவினா-2-க்கு தீர்வு காண்கிறது.
நன்றி : http://www.tamiljudgements.org