disalbe Right click

Showing posts with label விஷம். Show all posts
Showing posts with label விஷம். Show all posts

Thursday, April 27, 2017

பாம்பு கடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

பாம்பு கடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

பாம்புகள் என்றாலே பலருக்கும் அலர்ஜி அல்லது பயம் தான். அதனாலே எவை விஷப்பாம்பு எவை விஷமற்றவை என்பதை கூட தெரிந்துகொள்ள முயல்வதில்லை. ஒருவேளை பாம்புக் கடித்துவிட்டால் என்ன செய்வது? கடித்தது விஷப்பாம்பா என்பதை எப்படி அறிவது? சில டிப்ஸ் இதோ.
என்ன செய்ய வேண்டும்?
1) சினிமாவில் பார்த்திருப்போம். கடித்த இடத்தின் அருகில் இறுக்கி கட்டுப் போட வேண்டும். ஆனால், ரொம்ப இறுக்கினால் விஷம் ஓரிடத்திலே தங்கி அந்த இடம் அழுகிப்போகும். எனவே லேசாக கட்டினால் போதும்.
2) கடிப்பட்டவர் பதற்றமடையக் கூடாது. அப்படி ஆனால், ரத்த ஓட்டம் அதிகரித்து விஷம் வேகமாக ஏறும். கொஞ்சம் சிரமமான விஷயம் தான். ஆனால், அதுதான் தேவை
3) கடிபட்டவரை நடக்க விடக்கூடாது. அவர் உடல் குலுங்கும்படி தூக்கிக்கொண்டு ஓடவும் கூடாது. இலகுவாகத்தான் கையாள வேண்டும்.
4) ரத்தம் வெளியே வந்தால் வர விடுங்கள். விஷம் ஏறிய ரத்தம் தான் முதலில் வெளிவரும். கடிப்பட்ட இடத்தை ஓடும் நீரில், சோப்பு கொண்டு கழுவுங்கள்.
5) மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது படுக்க வைத்து அழைத்துச் செல்லவும்
6) பாம்புக் கடிக்கு அரசு மருத்துவமனையே சிறந்தது. தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக இருந்தால், முன்கூட்டியே அழைத்துப் பேசி விடவும். இல்லையேல், அங்கு போன பிறகு உதவ மருத்துவர்கள் இல்லை என தட்டிக்கழிப்பார்கள்.
7) கடித்தது எந்தப் பாம்பு எனத் தெரிந்தால் மருந்து தருவது எளிது. எனவே நோயாளி நினைவுடன் இருக்கும்போது இது பற்றிய தகவல்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம். பாம்பின் நீளம், நிறம், தடிமன் ஆகியவை வைத்துக் கூட அது என்னப் பாம்பு என்பதை அறியலாம். பெயர் தெரியாவிட்டாலும் இது போன்ற தகவல்களை நோயாளியிடம் கேட்டுப் பார்க்கலாம்.
8) கடிப்பட்ட இடத்தில் வரிசையாக பல பற்களின் தடம் தெரிந்தால் அது விஷப்பாம்பாக இருக்கும் வாய்ப்பு இல்லை. ஒன்றோ அல்லது இரண்டு மட்டும் இருந்தால் அது விஷப்பாம்பாக இருக்கும் வாய்ப்பு அதிகம். ஒரு பல் மட்டும் பதிந்திருந்தால் அது தோலை மட்டுமே தீண்டியிருக்கும். விஷம் அதிகம் ஏறியிருக்கும் வாய்ப்புக் குறைவு. எதுவாக இருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது அவசியம்
9) எல்லா சமயங்களிலும் மருத்துவமனைக்கு கொண்டு வருவது சாத்தியம் ஆகாது. அப்படிப்பட்ட நேரத்தில் கிராமங்களில் பின்பற்றப்படும் வைத்தியங்களை செய்து பார்க்கலாம். நோயாளிக்கு வாழைச் சாற்றை கொடுப்பது நமது கிராமங்களில் உண்டு. அது விஷ முறிவுக்கு நல்ல மருந்து என்கிறார்கள் அனுபவ வைத்தியர்கள். அல்லது மஞ்சளை தீயில் காட்டி எரிந்துகொண்டிருக்கும் மஞ்சளை பாம்பு கடித்த இடத்தில் வைத்து அழுத்துவார்கள். அப்படி செய்தாலும் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோதித்து பார்ப்பது நல்லது.
10) நல்ல பாம்பு கடித்தால் ரத்தம் வேகமாக உறையும். கண் இமை சுருங்கும். பேச்சு குழறும். கட்டு விரியன் கடித்தால் இதனுடம் வயிறும் சேர்ந்து வலிக்கும். கண்ணாடி விரியன் கடித்தால் வலி அதிகமாக இருக்கும்.
என்ன செய்யக்கூடாது?
1) வாயால் ரத்தத்தை எடுக்க முயலாதீர்கள். அது விஷத்தை இன்னொருவருக்கும் கடத்தும். மேலும், பாக்டீரியாக்களை கடிபட்ட இடத்தில் அதிகரிக்க செய்து, விஷத்தின் வீரியத்தை மேலும் தீவிரமாக்கும்
2) காயத்தை மேலும் பெரிதாக்காதீர்கள். சிலர் காயத்தை வெட்டி பெரியதாக்கி, அதன் பின் வாயால் ரத்தத்தை எடுப்பார்கள்.
3) ஐஸ் பேக்குகள் அல்லது குளிர்ந்த பொருட்களை காயத்தின் மேல் வைக்காதீர்கள்.
கார்க்கிபவா

நன்றி : விகடன் செய்திகள் - 27.04.2017

Friday, January 27, 2017

விலங்குகள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?


விலங்குகள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

னிதன் சமூகமாக வாழத் தொடங்கியது முதலே, வன விலங்குகளை வீட்டு விலங்குக ளாகவும், செல்லப் பிராணிகளாகவும், வளர்க்கத் தொடங்கினான். நாடோடியாக இருந்தபோது, துணையாக நாய் வளர்த்தவன், விவசாய சமூகமாக மாறியபோது பசு, ஆடு உள்ளிட்ட விலங்குகளை வளர்க்க ஆரம்பித்தான்.நாகரிகம் வளர வளர பூனை, கிளி, லவ்பேர்ட்ஸ், மீன், முயல் என வளர்ப்புப் பிராணிகளின் பட்டியலும் நீண்டுகொண்டே செல்கிறது. வெளிநாட்டில், பாம்பு முதல் ஆமை வரை பல விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கின்றனர்.
செல்லப் பிராணிகளை வளர்க்க ஆர்வம் இருக்கும் நமக்கு அவற்றைப் பராமரிப்பது எப்படி, கடித்துவிட்டால், நகத்தால் பிராண்டினால் என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் தெரிவதில்லை.
செல்லப்பிராணிகள் கடித்தவுடன் செய்யவேண்டியவை
வீட்டில் வளர்க்கும் நாய், பூனை கடித்தாலும், பறவைகள் கொத்தினாலும், முதலில், குழாயைத் திறந்துவிட்டு வேகமாக வரும் தண்ணீரின் அடியில் கடித்த பகுதியை வைத்து, சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். குறைந்தது 5 – 10 நிமிடங்கள் வரை தண்ணீரில் கழுவுவது நல்லது.
காயத்தின் மீது சோப் அல்லது கிருமிநாசினி போட்டு அந்த இடத்தை நன்றாகக் கழுவிவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
எந்த ஒரு விலங்கு கடித்தாலும் முதலில், டி.டி (Tetanus vaccine) தடுப்பூசி போட வேண்டும். நாய்க்கடியாக இருந்தால், பிறகு, ஆன்டி-ரேபிஸ் ஊசியின் வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். ஒருமுறை தரப்படும் ஊசிமருந்தின் அளவு ஒரு மி.லி. இது, புஜத்தில் போடப்படும். முதல் நாளே ஊசி போடப்படும். அதில் இருந்து 3, 7, 14, 28ம் நாள் என மொத்தம் ஐந்து ஊசிகள் போட வேண்டும். 
நாய்க்கடி போலவே பூனைக்கடி, குரங்குக்கடி, வெளவால் கடி போன்றவற்றுக்கும் ரேபிஸ் தொற்று ஏற்படும். எனவே, இந்த விலங்குகள் கடித்தாலும் டாக்டர் பரிந்துரைத்தால், தடுப்பூசி போட வேண்டியது அவசியம். ஏனெனில், உயிர்க்கொல்லியான ரேபிஸ் நோய்க்கு மருந்து இல்லை. தடுக்க மட்டுமே முடியும்.
எலி கடித்தால், எலியின் கழிவுகளை மிதித்தால் லெப்டோஸ்பைரோசிஸ் (Leptospirosis) என்னும்  எலிக் காய்ச்சல் வரும். இதைத் தடுக்க, தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நாம் வீட்டில் வளர்க்கக்கூடிய பறவைகளின் இறகு, எச்சம், கழிவு மூலமாக நிமோனியா நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவற்றால், இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
செய்யக்கூடாதவை!
விலங்குகள் கடித்த இடத்துக்கு மேலும் கீழும் கயிறு அல்லது துணியை இறுக்கமாகக் கட்டி ரத்த ஓட்டத்தைத் தடுக்கக் கூடாது. இவ்வாறு செய்வது நரம்பு மண்டலத்தைப் பாதித்து, சிகிச்சையில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
கடித்தால் மட்டும்தான் பிரச்னையா?
செல்லப் பிராணிகள் கடிப்பதால் மட்டும் நோய் வருவது இல்லை. அவற்றின் உடலில் உள்ள வெட்டுக் காயம் மூலமாகவும் உண்ணிகள் மூலமாகவும் நமக்கு நோய்கள் வரலாம். சொறி, சிரங்கு, லைம் (Lyme) போன்ற தொற்றுநோய்கள் ஏற்படும். இதைத் தடுக்க, வருடத்துக்கு ஒருமுறை வளர்ப்புப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுவது அவசியம்.
மருத்துவரின் அறிவுரைப்படி, பிராணிகளின் எடைக்கு ஏற்றபடி, மூன்று மாதத்துக்கு ஒருமுறை குடல் புழு மருந்து (De-worming) கொடுக்க வேண்டும். மருத்துவர் குறிப்பிட்ட, கால இடைவெளியில் தடுப்பூசியைத் தவறாமல் போட வேண்டும். 
உண்ணிகள், பேன்கள் போன்றவை வராமல் இருக்க மருந்துகள் போட்டு, சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். இது போன்ற வழிமுறைகளைப் பின்பற்றினால், நோய்களில் இருந்து நம்மையும் நம் செல்லப்பிராணிகளையும் காக்கலாம்.


கவனிக்க
* எந்தப் பிராணியாக இருந்தாலும், அதைத் தூக்கிக் கொஞ்சினாலும், விளையாடினாலும் உடனடியாக கண்டிப்பாகக் கைகளை சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.
* அலர்ஜி பிரச்னை இருப்பவர்களுக்கு நாய், பூனை ரோமம் உதிர்வால், உடல் உபாதைகள் ஏற்படலாம். எனவே, மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது.
* எல்லா விலங்குகளுக்கும் தடுப்பூசிகள், புழு அழிப்பு மாத்திரைகள் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாடாப்புழு வரும். அதனால், செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்க்கும் உடலில் பிரச்னைகள் ஏற்படும்.
* விலங்குகளுக்கு இறைச்சியைச் சமைக்காமல் கொடுக்கக் கூடாது. செல்லப் பிராணிகளின் கூண்டு, தங்கும் இடம் ஆகியவை விசாலமாக இருக்க வேண்டும். அவற்றை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.
சுந்தரராமன், பொது மருத்துவர்

நன்றி : டாக்டர் விகடன் – 01.02.2017

Tuesday, October 11, 2016

நாய்க்கடி


நாய்க்கடி - என்ன செய்ய வேண்டும்?

கேள்வி : 

நாய் கடித்தால் தொப்புளைச் சுற்றி ஊசி போடுவார்கள் என்று பயமுறுத்துகிறார்களே, உண்மையா?

பதில் : 

நாய்க்கடி என்பது மிகவும் ஆபத்தானது... அதனால் வரும் விளைவுகள் பயங்கரமானவை.. சரியான முதலுதவியும் சிகிச்சையும் செய்துகொண்டால் அச்சப்படத் தேவையில்லை.

வீட்டில் நீங்கள் செல்லமாக வளர்க்கும் நாய் கடித்தால், தொற்றுத் தடுப்பு (டி.டி.) ஊசி போட்டாலே போதுமானது.

அது கிருமிகள் பரவுவதைத் தடுத்து விடும்.

ஆனால், தெரு நாயோ அல்லது வெறி நாயோ கடித்துவிட்டால், கடிபட்ட இடத்தை உடனே சோப்பால் கழுவ வேண்டும். பிறகு டெட்டால் போன்ற கிருமிநாசினியால் நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். நாய்க்கடி பட்ட 48 மணி நேரத்துக்குள் தடுப்பூசி போட்டாக வேண்டும். இல்லையென்றால் ஆபத்துதான்.

அதுவும் வெறிநாய்கள் (சில நாய்கள் பார்ப்பதற்கே பயங்கரமாகவும், எப்போதும் நாக்கைத் தொங்கப்பட்டுக்கொண்டு, நாக்கில் இருந்து நீர் வழிந்துகொண்டு, இரைத்துக் கொண்டும் பயங்கரமாக முழித்துக் கொண்டும் இருக்கும்) கடித்துத்தான் ஆக வேண்டும் என்றில்லை. தனது நாக்கினால் நக்கினாலே போதும். அந்த இடத்தில் புண்ணோ, சிராய்ப்போ இருந்தால், அந்த வழியாக "ரேபிஸ் வைரஸ்' (கிருமிகள்) உடம்பின் உள்ளே புகுந்து விடும்.

கடிபட்ட இடத்திலிருந்து, நரம்பு வழியே இந்தக் கிருமி, ஸ்லோ மோஷனில் மூளையை நோக்கிப் பயணிக்கும். அதுவும் மூளைக்கு அருகில் தலையிலோ கழுத்திலோ நாய் கடித்திருந்தால் மேட்டர் ரொம்பவும் சீரியஸ். உடனடியாக டாக்டரைப் பார்க்க வேண்டும்.

தொப்புளைச் சுற்றி, ஊசி போட்டு, நல்லா இருந்த வயிற்றைச் சல்லடையாக்கி, பொத்தல் போட்டு விடுவார்களோ என்று பயப்பட வேண்டாம். கையிலேயே போடும் ஊசி வந்து விட்டது.
------------------------------------------------------------------------------------------------------- ரொசிட்டா

நன்றி : தினமணி - சிறுவர் மணி - 11.10.2016

Sunday, April 19, 2015

வெறிநாய்க்கடி


வெறிநாய்க்கடி
விலங்குகள் மூலம் நமக்குப் பரவும் நோய்களில் மிக முக்கியமானது ‘ரேபீஸ்’ (Rabies). தெருக்களில் அலையும் வெறிநாய்கள் கடிப்பதால்தான் 95 சதவிகிதம் இந்த நோய் ஏற்படுகிறது என்பதால், இதனை ‘வெறிநாய்க்கடி நோய்’ என்கிறோம். ரேபீஸ் எனும் வைரஸ் கிருமி, நாய், பூனை, நரி, கீரி, ஓநாய், குரங்கு, குதிரை போன்ற விலங்குகளைத் தாக்கி, அவற்றுக்கு நோயை உண்டாக்கும். இந்த வைரஸ் தாக்கப்பட்ட விலங்குகள், மனிதர்களைக் கடிக்கும்போது மனிதர்களுக்கும் ரேபீஸ் நோய் ஏற்படும்.
நோய் வரும் வழி:
ரேபீஸ் நோய் உள்ள நாயின் உமிழ்நீரில் இருந்து ரேபீஸ் கிருமி வெளியேறும். இந்த நாய், மனிதர்களைக் கடிக்கும்போது, அந்தக் காயத்தின் வழியாக, இந்தக் கிருமி உடலுக்குள் புகுந்துகொள்ளும். பிறகு, நரம்புகள் வழியாகவும், முதுகுத் தண்டுவடத்தின் வழியாகவும் மூளையை அடைந்து, அங்குள்ள திசுக்களை அழித்து ரேபீஸ் நோயை உண்டாக்கும். சிறிய அளவில் வெறிநாய் பிறாண்டினாலும், நம் காயங்களில் வெறிநாய், தன்  நாக்கினால் தீண்டினாலும் இந்த நோய் வரலாம்.

அறிகுறிகள்:
வெறிநாய் கடித்த ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஆறு வருடங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் அறிகுறிகள் தொடங்கலாம். நாய் கடித்த இடத்தில் வலி ஏற்படும். காய்ச்சல், வாந்தி வரும். உணவு சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ முடியாது. தண்ணீரைப் பார்த்தாலே, தொண்டைத் தசைகள் இறுக்கமடைந்து சுவாசம் நிற்கின்ற உணர்வு ஏற்படும்.  ‘எங்கே உயிர் போய்விடுமோ’ என்று பயம் உண்டாகும்.  இவர்கள் தண்ணீரைக்  குடிக்க மாட்டார்கள். அதிக வெளிச்சம் அல்லது காற்று பட்டால் உடல் நடுங்கும். மனம் எந்த நேரமும் அமைதி இன்றி இருக்கும். எதையாவது பார்த்து ஓடப் பார்ப்பதும், மற்றவர்களைத் துரத்திக் கடிக்க வருவதுமாகவும் இருப்பார்கள். நோயின் இறுதிக் கட்டத்தில் வலிப்பு வந்து, சுவாசம் நின்று உயிரிழக்க நேரிடும்.
ரேபீஸ் தடுப்பூசிகள்:
தற்போது, ரேபீஸ் நோயைத் தடுக்க நான்கு வகை தடுப்பூசிகள் நடைமுறையில் உள்ளன. அவை, சுத்தப்படுத்தப்பட்ட கோழிக்கரு உயிரணுத் தடுப்பூசி (Purified Chick Embryo Cell Vaccine), மனித இரட்டை உயிரணுத் தடுப்பூசி (Human Diploid Cell Vaccine), சுத்தப்படுத்தப்பட்ட குரங்குச் சிறுநீரக உயிரணுத் தடுப்பூசி (Purified Vero Cell Vaccine), சுத்தப் படுத்தப்பட்ட வாத்துக் கரு உயிரணுத் தடுப்பூசி (Purified Duck Embryo Cell Vaccine). இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தி ரேபீஸ் நோயைத் தடுக்கலாம். ஒருமுறை தரப்படும் ஊசிமருந்தின் அளவு 1 மி.லி. இதைப் புஜத்தில் தசை ஊசியாகச் செலுத்த வேண்டும்.
ரேபீஸ் தடுப்புப் புரதம்:
ரேபீஸ் நோயைத் தடுக்க, ‘ரேபீஸ் தடுப்புப் புரதம்’ (Human Rabies immunoglobulin) ஒன்றும் உள்ளது. இது, ரேபீஸ் கிருமிகள் காயத்தில் இருந்து உடலுக்குள் நுழைவதற்கு முன்பே, அவற்றை அழித்துவிடும் தன்மை உடையது. நாய் கடித்தவுடன், கடிபட்ட காயத்திலும், அதைச் சுற்றிலும் இது செலுத்தப்பட வேண்டும். நாய் கடித்த 7 நாட்களுக்குள் இதனைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும் பாதிக்கப்பட்ட வரின் ஒரு கிலோ உடல் எடைக்கு 20 யூனிட் என்ற அளவில் இதைச் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், ரேபீஸ் தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள வேண்டும்.
நாய் கடித்தவுடன் செய்ய வேண்டியவை:
குறைந்தது 10 நிமிடங்களுக்கு காயம்பட்ட இடத்தில், சோப்பு போட்டு, வேகமாக விழுகின்ற குழாய்த் தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். காயத்தின் மீது பொவிடின் அயோடின், ஸ்பிரிட், டெட்டால், சாவ்லான் போன்ற ஏதாவது ஒரு ‘ஆன்டிசெப்டிக்’ மருந்தைத் தடவலாம். முடிந்தவரை, காயத்துக்குக் கட்டுப் போடுவதையும், தையல் போடுவதையும் தவிர்க்க வேண்டும். தையல் போடும் அளவுக்குக் காயம் மிகப் பெரிதாக இருந்தால், காயத்திலும் காயத்தைச் சுற்றிலும் தடுப்புப் புரதம் போட்ட பிறகே தையல் போடப்பட வேண்டும். இதைத் தொடர்ந்து ரேபீஸ் தடுப்பூசி போட  வேண்டும். எந்த ஒரு காயத்துக்கும் ‘டெட்டனஸ் டாக்சாய்டு’ (Tetanus Toxoid) தடுப்பூசி அவசியம். கூடவே, காயம் குணமாக, தகுந்த ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளையும் சாப்பிட வேண்டும்.
தடுப்பூசி போடப்படும் முறை:
நாய் கடித்த நபருக்கு, நாய் கடித்த நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள், 14-வது நாள்,     28-வது நாள் என ஐந்து தவணைகள் (0, 3, 7, 14, 28) ரேபீஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும். காயம் கடுமையாக ஏற்பட்டவர்கள் 6-வது ஊசியை 90-வது நாளில் போட்டுக்கொள்ள வேண்டும்.கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என்று எவரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. வீட்டு நாய் கடித்துவிட்டால், என்ன செய்வது?
வீட்டு நாய்க்கு முறைப்படி ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தால்கூட, அந்த நாயால் கடிபட்டவரும் ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் அந்த நாயை 10 நாட்களுக்குக் கண்காணிக்க வேண்டும். நாயின் குணத்தில் எந்தவித மாறுதலும் தெரியவில்லை எனில், முதல் மூன்று தடுப்பூசிகளுடன் (0, 3, 7-வது நாள்) நிறுத்திக்  கொள்ளலாம். நாயிடம் மாறுதல்கள் தெரிந்தால், மீதம் உள்ள தடுப்பூசிகளையும் (14,   28-வது நாள்) போட்டுக் கொள்ள வேண்டும்.
வெறிநாய் என்பதை  எப்படித் தெரிந்துகொள்வது?
ரேபீஸ் கிருமி தாக்கிய நாய் காரணமின்றிக் குரைக்கும். ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும். பார்ப்போர் அனைவரையும் துரத்தும்; தூண்டுதல் இல்லாமல் கடிக்க வரும். நாக்கு வெளித்தள்ளி இருக்கும். எந்தநேரமும் எச்சில் ஒழுகிக்கொண்டிருக்கும். பொதுவாக, ரேபீஸ் நோய் வந்த நாய், 10 நாட்களுக்குள் இறந்துவிடும்.
முன்னெச்சரிக்கை தடுப்பூசி தேவைப்படுபவர்கள்:
சிலருக்கு நாய் கடிப்பதற்கான வாய்ப்புகள் அல்லது நாயிடமிருந்து ரேபீஸ் கிருமிகள் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும், இப்படிப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கையாக ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.
பெரும்பாலும், இந்தியக் குழந்தைகள்தான் பெற்றோர் துணையின்றி  தெருக்களில் விளையாடுகிறார்கள். நாய் பிறாண்டினாலோ, நாக்கினால் தீண்டினாலோ அதன் ஆபத்துகளை அறியாமல், பெற்றோரிடம் கூறாமல் விட்டுவிடுவார்கள்.
அடுத்ததாக, கால்நடை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள், நாய் வளர்ப்போர், நாய் பிடிப்போர், நாயைப் பழக்குவோர், தபால், காவல் துறைப் பணியாளர்கள், ரத்தப் பரிசோதனைக்கூடப் பணியா
ளர்கள், ரேபீஸ் நோய் ஆராய்ச்சியாளர்கள், ரேபீஸ் நோய்க்குச் சிகிச்சை தரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், விலங்குகளைப் பதப்படுத்துவோர், வன இலாகாவினர், மிருகக்காட்சி சாலையில் பணிபுரிவோர், தெருநாய்கள் கட்டுப்பாடின்றி அலையும் தெருக்களில் வசிப்போர் மற்றும் அதுபோன்ற ஊர்களுக்கு அடிக்கடி பயணம் செய்வோர், முன்னெச்சரிக்கையாக ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது அவசியம்.
முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி தவணை முறைகள்:
ரேபீஸ் தடுப்பூசியின் முதல் ஊசியை ஆரம்ப நாளில் போட்டுக்கொண்டு, இரண்டாவது ஊசியை ஏழாம் நாளிலும், மூன்றாவது ஊசியை 28-வது நாளிலும் போட்டுக்கொள்ள வேண்டும். அடுத்து, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘ஊக்குவிப்பு ஊசி’யாக (Booster dose) இந்தத் தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக்கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை வெறி நாய் கடித்துவிட்டால், நாய்க்கடி காயத்தை நன்றாகச் சுத்தப்படுத்திவிட்டு, நாய் கடித்த நாளில் ஒரு தடுப்பூசியும், மூன்றாவது நாளில் ஒரு தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும். இந்தக் காயத்தில் ரேபீஸ் தடுப்புப் புரதம் போட்டுக்
கொள்ளத் தேவை இல்லை.

நாய்க்கடி ஓலம்!
உலக அளவில், ஆண்டுக்கு சுமார் 55,000 பேர் ரேபீஸ் நோயால் இறக்கின்றனர். இவர்களில் 40 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்கிறது, உலக சுகாதார நிறுவனம். இன்றைய நிலவரப்படி இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 20 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் ரேபீஸ் நோயால் இறக்கின்றனர். இவர்களில் 35 சதவிகிதத்தினர் 15 வயதுக்குட்பட்டவர்கள்.  தமிழ்நாட்டில், 2011-ம் ஆண்டில், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 17,848 பேர் நாய்க்கடிக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளனர் என்றால், இதன் கொடூரமான தாக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

வீட்டு நாய்க்கு ரேபீஸ் வராமல் காத்துக் கொள்வது எப்படி?
வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் நாய்க்குட்டிக்கு மூன்று மாதம் முடிந்ததும், ஒன்பது மாதம் முடிந்ததும் என  இரண்டு தவணைகள் ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுவிட வேண்டும். அடுத்து, ஆண்டுக்கு ஒருமுறை ரேபீஸ் தடுப்பூசியைக் கட்டாயம் போட வேண்டும். தெரு நாய்களுடன் வீட்டு நாய்கள் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டு நாய் சோர்ந்திருந்தால், சாப்பிடாமல் இருந்தால் அல்லது எல்லோரையும் கடித்துக் கொண்டிருந்தால், நாயைக் கட்டிப்போட வேண்டும். அந்த நாயைக் கால்நடை மருத்துவரிடம் காண்பித்து, சிகிச்சை அளிக்க வேண்டும்.

Thanks : vayal 16.03.2015